பதிவு செய்த நாள்
12
நவ
2019
10:11
லக்னோ : உத்தர பிரதேச மாநிலம், அயோத்தியில், ஹிந்து கடவுளான ராமருக்கு கோவில் கட்டும் பணி, அடுத்தாண்டு, ஏப்., 2ல், ராமரின் பிறந்த நாளான, ராமநவமியில் துவங்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. உத்தர பிரதேசத்தில், முதல்வர் யோகி ஆதித்ய நாத் தலைமையிலான, பா.ஜ., அரசு அமைந்து உள்ளது. அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு, சமீபத்தில் தீர்ப்பு அளித்தது. சர்ச்சைக்குரிய, 2.77 ஏக்கர் நிலத்தில் ராமர் கோவில் கட்டலாம்; அந்த இடத்தை நிர்வகிக்க, ஒரு அறக்கட்டளையை மத்திய அரசு நியமிக்க வேண்டும் என, தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. அறக்கட்டளையை, மூன்று மாதங்களுக்குள் அமைக்க வேண்டும் என, தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
அறக்கட்டளை: இதையடுத்து, அறக்கட்டளையை உருவாக்குவது தொடர்பான நடவடிக்கைகளில், மத்திய உள்துறை அமைச்சகம் ஈடுபட்டுள்ளது. இந்நிலையில், அடுத்த ஆண்டு, ஏப்., 2ல், ராமரின் பிறந்த நாளான, ராமநவமி வருகிறது. அன்று கோவில் கட்டுமானப் பணிகள் துவங்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பாக, மாநில அரசின் மூத்த அதிகாரிகள் கூறியதாவது: உச்ச நீதிமன்ற உத்தர வின்படி, 2.77 ஏக்கர் நிலம், புதிதாக அமைக்கப்பட உள்ள அறக்கட்டளையிடம் ஒப்படைக்கப்பட உள்ளது. இதைத் தவிர, அங்கு மத்திய அரசு கையகப்படுத்தியுள்ள, 62.23 ஏக்கர் நிலமும், அறக்கட்டளையிடம் ஒப்படைக்கப்படும்.
இதில், ராம் ஜன்மபூமி நியாஸ் அமைப்பு மட்டும், 43 ஏக்கர் நிலத்தை வைத்திருந்தது. அதைத் தவிர பல்வேறு அமைப்புகள், 20 ஏக்கர் நிலத்தை வைத்திருந்தன. இந்த நிலங்களை மத்திய அரசு கையகப்படுத்தியுள்ளது. இந்த நிலத்துக்காக, இழப்பீடு எதையும், ராம் ஜன்மபூமி நியாஸ் கோரவில்லை. இந்த நிலங்களை, அதன் உரிமையாளர்களிடமே ஒப்படைக்க அனுமதி கோரி, மத்திய அரசு, உச்ச நீதிமன்றத்தில், ஏற்கனவே வழக்கு தொடர்ந்திருந்தது.
தற்போது, ராம் ஜன்ம பூமி நியாஸ் உட்பட அனைத்து அமைப்புகளும், தங்களிடம் உள்ள நிலத்தை, மத்திய அரசு அமைக்க உள்ள அறக்கட்டளைக்கு ஒப்படைக்கத் தயாராக உள்ளன. அதேபோல், கோவிலுக்காக ஏற்கனவே தயார் செய்துள்ள, 1.80 லட்சம் கல் துாண்களையும் ஒப்படைக்க, நியாஸ் தயாராக உள்ளது. அடுத்தாண்டு, ஏப்., 2ல் இருந்து பணிகள் துவங்கும். அது கோவிலுக்கான அடிக்கல் நாட்டு விழாவா அல்லது சிலை அமைப்பு விழாவா என்பது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.
எதிர்பார்ப்பு: அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் கோவிலை கட்டி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. புதிதாக அமைய உள்ள அறக்கட்டளையில், மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் இடம்பெற மாட்டார். அமைச்சர்கள் யாரையாவது அவர் நியமிப்பார் என, எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, சன்னி வக்ப் வாரியத்துக்கு அளிப்பதற்காக, 5 ஏக்கர் நிலத்தை அடையாளம் காணும் பணி நடக்கிறது. இவ்வாறு, அவர்கள் கூறினர்.
மசூதிக்கு யார் பெயர்?: ஹிந்து மதத் தலைவரான, மஹந்த் பரம்ஹன்ஸ் தாஸ் கூறியதாவது: சன்னி வக்ப் வாரியத்துக்கு வழங்கப்பட உள்ள, 5 ஏக்கர் நிலத்தில் கட்டப்படும் மசூதிக்கு, முஸ்லிம் தேசியவாத தலைவர்கள் அல்லது இஸ்லாம் நிறுவனரான முகமது சாஹப் பெயரை வைக்க வேண்டும். உச்ச நீதிமன்றத் தீர்ப்பால், முஸ்லிம் தலைவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சர்ச்சைக்குரிய நிலப் பகுதியில் மசூதி கட்ட முடியாது என்பதே அவர்களுக்கு மகிழ்ச்சி. இஸ்லாத்தின்படி, சர்ச்சைக்குரிய இடங்களில், மற்ற மதத்தினரின் வழிபாடு இருந்த இடத்தில் மசூதி கட்டக் கூடாது. அதனால், இந்தத் தீர்ப்பால், ஹிந்துக்களைவிட, முஸ்லிம்களே மிகவும் மகிழ்ச்சியாக உள்ளனர். மேலும், பெருந்தன்மையாக, 5 ஏக்கர் நிலம் வேண்டாம் என்று அவர்கள் கூறுவார்கள் என, நம்புகிறேன்.இவ்வாறு, அவர் கூறினார்.
அயோத்தி வழக்கில் சீராய்வு மனு தாக்கலா?: அயோத்தி வழக்கில், உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்வதா, இல்லையா என்பது குறித்து, வரும், 17ல், முஸ்லிம் சட்ட வாரியத்துடன் ஆலோசித்த பின் முடிவு செய்யப்படும், என, மூத்த வழக்கறிஞர் ஜாபர்யப் ஜிலானி தெரிவித்துள்ளார். உத்தர பிரதேச மாநிலம், அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய, 2.77 ஏக்கர் நிலத்தில், ராமர் கோவில் கட்டலாம்; முஸ்லிம்கள் மசூதி கட்டுவதற்கு, வேறு ஒரு இடத்தை, அந்த மாநில அரசு வழங்க வேண்டும் என, உச்ச நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு தீர்ப்பளித்தது.
இந்த தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்யப் போவது இல்லை என, உ.பி., மாநில, சன்னி வக்ப் வாரியம் ஏற்கனவே அறிவித்தது. இந்நிலையில், சன்னி வக்ப் வாரியத்துக்காக, உச்ச நீதிமன்றத்தில் ஆஜராகி வாதாடிய, மூத்த வழக்கறிஞர் ஜாபர்யப் ஜிலானி, நேற்று கூறியதாவது: உச்ச நீதிமன்ற தீர்ப்பு குறித்து, முஸ்லிம் சட்ட வாரியத்தின் உறுப்பினர்களுடன், வரும், 14ல் ஆலோசனை நடத்தவுள்ளோம். அப்போது, உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்வதா, இல்லையா என்பது குறித்து முடிவு எடுக்கப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.
போனில் மிரட்டல்: உத்தரகண்ட் மாநிலம், வாரணாசியில் உள்ள, ஹர் கி பைரி காட் எனப்படும், கங்கை நதிக் கரையில் அமைந்துள்ள படித்துறையை வெடிகுண்டு வைத்து தகர்க்கப் போவதாக, மர்ம நபர் மிரட்டல் விடுத்துள்ளார். பா.ஜ.,வைச் சேர்ந்த மாநில முதல்வர் திரிவேந்திர சிங் ராவத்தின் செல்போனில் அழைத்து, இந்த மிரட்டல் விடுக்கப்பட்டது. இது தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர். இந்த நிலையில், படித்துறை பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
27 ஆண்டு சபதம் முடிவுக்கு வந்தது!: மத்திய பிரதேச மாநிலம், ஜபல்பூரை சேர்ந்தவர், ஊர்மிளா சதுர்வேதி, 81. இவர், சமஸ்கிருத ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். அயோத்தி விவகாரம் முடிவுக்கு வரும் வரை, பால் மற்றும் பழங்கள் தவிர, வேறு துவும் உண்ண மாட்டேன் என, 1992ல் சபதம் மேற்கொண்டார். 27 ஆண்டுகளாக, தன் சபதத்தை கட்டிக் காத்து வருகிறார். இந்நிலையில், அயோத்தி விவகாரத்தில், இறுதி தீர்ப்பு வழங்கப்பட்டதை அடுத்து, தன் சபதத்தை முடித்துக் கொள்வதாக, ஊர்மிளா சதுர்வேதி அறிவித்துள்ளார். மேலும், நுாற்றாண்டுகளாக முடிவுக்கு வராமல் இழுத்தடித்து வந்த வழக்கில், தீர்ப்பு வழங்கிய, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய்க்கு நன்றி தெரிவித்து, அவர் கடிதம் எழுத போவதாக, அறிவித்து உள்ளார்.