சிரகசன் என்னும் வேடனுக்கு தன்னையே நரபலி கொடுப்பதாக ஆதிசங்கரர் வாக்களித்தார். அதன்படி அவனுடன் புறப்பட்டார். கொடுத்த வாக்கை காப்பாற்றியதால் நட்சத்திர அந்தஸ்து பெற்ற மானின் கதையை வேடனுக்கு கூறினார். ""காட்டில் ஆண் மான் ஒன்று வாழ்ந்தது. வேடன் ஒருவனிடம் சிக்கிக் கொண்ட அது, தன் மனைவியை பார்த்து விட்டு வரும் வரை காத்திருக்குமாறு வேண்டியது. வேடனும் அரை மனதோடு சம்மதித்தான். புறப்பட்ட ஆண்மான் மாலை நேரத்தில் மீண்டும் வேடனிடம் வந்தது. இணையைப் பிரிய விரும்பாத பெண் மானும், அதன் இரண்டு குட்டிகளும் உடன் வந்தன. தங்களின் உயிரையும் ஏற்குமாறு வேடனிடம் வேண்டின. மான்களின் நேர்மை, அன்பு, வாக்கு தவறாமையைக் கண்ட வேடன் மனம் வருந்தினான். அப்போது வானில் சிவபெருமான் காட்சியளித்து அந்த மான்களுக்கு நட்சத்திர அந்தஸ்து அளித்தார். அவையே மிருகசீரிடம் என்னும் பெயரில் ஜொலிக்கின்றன. மிருகசீரிடம் என்பது நான்கு நட்சத்திரங்களின் தொகுதியாகும்.