பதிவு செய்த நாள்
27
செப்
2022
06:09
இன்று அம்பிகையை மயில் வாகனம், சேவல் கொடியுடன் அலங்கரிக்க வேண்டும். கவுமாரி, குமார கண நாதம்பா என்றும் அழைக்கப்படும் இவள், பக்தர்களின் பாவங்களைப் போக்கி, தைரியத்தை அருள்பவள். அசுரர்களை சம்ஹாரம் செய்த இவளை அபயம், வரத ஹஸ்தம் கொண்டவளாகவும், பாச அங்குசம் ஏந்தியவளாகவும் அமைத்து வழிபட வேண்டும்.
அலங்கார காரணம்: முருகனுக்குரிய அடையாளமாகத் திகழும் வெற்றிவேலை, அன்னை மீனாட்சி வழங்குவதைக் கண்டால், வாழ்வில் வெற்றி வந்து சேரும். இன்று, மதுரை மீனாட்சியம்மன் கருங்குருவிக்கு உபதேசம் செய்த லீலையில் காட்சி தருகிறாள். மதுரையை ஆட்சி செய்த சுகுணபாண்டியன், மறுபிறவியில் கருங்குருவியாய்ப் பிறந்தான். மற்ற பறவைகள் துன்புறுத்தியதால், காட்டிற்கு பறந்த அக்குருவி ஒரு மரத்தில் தங்கியது. அங்கு வந்த சிவபக்தர் ஒருவர், சிவநாமத்தை ஜெபிக்க கேட்ட குருவி ஞானம் அடைந்தது. குருவியும் மதுரை கோவிலுக்கு வந்து, குளத்தில் நீராடி ஈசனை வழிபட்டது. சிவனும் குருவிக்கு மந்திர உபதேசம் செய்தருளி, குருவியினத்தில் வலிமை மிக்க வலியன் குருவியாக இருக்க வரமளித்தார். இக்கோலத்தை இன்று தரிசிப்பது மன வலிமையை உண்டாக்கும்
முக்கியத்துவம்: கல்வி, வீரம், செல்வம், கலை, தொழில் என்பவற்றில் இறையுணர்வைப் பிரதிபலிக்கின்ற ஒரு விழா நவராத்திரி விழா. இதனால் தான், சிவராத்திரிக்கு இல்லாத முக்கியத்துவமும், பிரபல்யமும் சக்தி விழாவாகிய நவராத்திரிக்கு உண்டு. சிவபெருமான் நவராத்திரி விரதத்தை கடைப்பிடித்தே, திரிபுர தகனம் செய்தார் என்று புராணங்களில் செய்தி உண்டு.
செல்வம் சேர ஜெய் சண்டிகாதேவி: இரண்டாம் நாளில் அன்னையை, வராஹி தேவியாக கருதி வழிபட வேண்டும். மகிஷாசுரனின் சேனைகளை வதம் செய்ய புறப்பட்ட ராஜ ராஜேஸ்வரியாக, துர்கையின் வடிவத்தை அலங்கரித்துப் பூஜிக்க வேண்டும். பன்றி முகமும், தெத்து பற்களும் உடையவள்; சூலமும், உலக்கையும் ஆயுதங்களாய் கொண்டவள். பெரிய சக்கரத்தை தாங்கி இருப்பவள், தன் தெத்து பற்களால் பூமியை துாக்கியிருப்பவள். இவளுக்கு, மங்கள் மய, நாராயணி, தண்டினி, பகளாமுகி போன்ற திருநாமங்களும் உண்டு.
இரண்டாம் நாளான இன்று துர்கை அம்மன், பிரம்மச்சாரினி வடிவத்தை எடுப்பார். பிரம்மா என்ற வார்த்தையில் இருந்து இப்பெயர் வந்தது; அதற்கு தவம் அல்லது தபஸ் என அர்த்தம்.
பிரம்மச்சாரினி என்பது, பார்வதி தேவியின் பல வடிவங்களில் ஒன்று.9 வயதுள்ள குமாரிகை என்றநவாகூரீ ஸ்வரூபிணியாகவும், அம்பாள் விளங்கி வருகிறாள் என்பதும் ஐதீகம்.
வழிபாடு:
அம்பாள்: வராஹ தேவி
நைவேத்யம்: கொண்டைக் கடலை சுண்டல்,புளியோதரை,தயிர் சாதம்
மலர்: முல்லை, துளசி மாலை,
ராகம்: கல்யாணி
கோதுமை மாவு கொண்டு கட்டம் கோலமிட வேண்டும்
பாட வேண்டிய பாடல்
இல்லாமை சொல்லி ஒருவர் தம் பால்சென்று இழிவுபட்டு நில்லாமை நெஞ்சில் நினைகுவிரேல் நித்தம் நீடுதவம் கல்லாமை கற்ற கயவர் தம் பால் ஒரு காலத்திலும் செல்லாமை வைத்த திரிபுரை பாதங்கள் சேர்மின்களே!!!
இரண்டாவது நாளான இன்று, அன்னை பராசக்தியை பல பெயர்களில் சொல்லி வழிப்படுவது சிறப்பு. நம் முன்னோர், வெறும் சடங்காய் இதை வைக்காமல், ஒவ்வொரு பெயருக்கும், ஒவ்வொரு ஸ்லோகத்திற்கும் அர்த்தம் வைத்து, அதன் பலன்களையும் வரையறுத்து வைத்து
உள்ளனர்.
ஜெய் காளி... என்று உச்சரிக்க உச்சரிக்க எதிரிகளின் ஆதிக்கம் ஒழியும்
ஜெய் சண்டிகாதேவி - செல்வம் சேரும்
ஜெய் சாம்பவி - அரசு சார்ந்த செயல்பாடுகளில் வெற்றி கிட்டும்
ஜெய் துர்கா- - ஏழ்மை அகலும், துன்பம் விலகும்; போரில் வெற்றி கிடைக்கும்; மறுபிறவியிலும் நல்லதே நடக்கும்.
ஜெய் சுபத்ரா - விருப்பங்கள் நிறைவேறும்
ஜெய் ரோகிணி - நோய் தீரும்
நவராத்திரியின் முதல் மூன்று நாட்கள், முதல் மூன்று மந்திரங்களையும், அடுத்த நான்கு நாட்கள் ஜெய் துர்கா என்ற மந்திரத்தையும் சொல்ல வேண்டும். கடைசி இரண்டு நாட்களில் ஜெய் சுபத்ரா,ஜெய் ரோகிணி ஆகிய மந்திரங்களைச் சொல்லவும் வேண்டும். நவராத்திரி பெண்கள் பண்டிகை என்பது போலவும், பெண்கள் மட்டும் விரதத்தை அனுஷ்டிக்க வேண்டும் என்பது போலவும் சொல்லப்படுகிறது. நிஜத்தில் ஆண்களும் அனுஷ்டிக்க வேண்டிய விரதமே இந்த நவராத்திரி விழா. எல்லா சக்திகளும் ஆண் தெய்வங்களின் பெண் சக்தியாகவே கருதப்படுகின்றன.
விவேகானந்தரின் சொற்பொழிவு: சென்னையில் விவேகானந்தர் தங்கி சொற்பொழிவாற்றிய ஒன்பது நாட்களை கொண்டாடும் விதமாக, ஆண்டுதோறும் ஒன்பது நாட்கள் நவராத்திரி விழாவாக கொண்டாடப்படுகிறது. அவர் தங்கியிருந்த அந்த இடம் தான், இப்போது விவேகானந்தர் இல்லம் என அழைக்கப்படுகிறது. அங்கு நடக்கும் சென்னையில் விவேகானந்தர் விழாவில், ஆன்மிக புத்தகங்களின் கண்காட்சியும் நடைபெறுகிறது. இந்த ஒன்பது நாட்களும் உபன்யாசம், நிவேதிதா நாடகம், இசை நிகழ்ச்சி, பொம்மலாட்டம், நாட்டிய நாடகம் போன்ற சிறப்பு நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது.