பதிவு செய்த நாள்
29
செப்
2022
07:09
மதுரை மீனாட்சி அம்மன் ஊஞ்சல் அலங்காரத்தில் காட்சி அளிப்பாள். மஹாலட்சுமியாக அலங்கரிக்க வேண்டும். பரந்தாமனின் பாதத்தை தொழுதபடி இருக்கும் மஹாலட்சுமி கொடுக்க ஆரம்பித்தால் குறையேதும் இருக்காது. அன்னையின் கருணைக் கடாட்சத்தை மட்டும் தான் நாம் பெற்றிட முடியும்.
அலங்காரம் காரணம்: அருளாளரான குமரகுருபரர் மீனாட்சி அம்மன் சன்னதியில், மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் எனும் நுாலை அரங்கேற்றம் செய்தார். இதில், அம்பிகையின் குழந்தைப் பருவத்தில் இருந்து 9 வயது வரையுள்ள பால பருவ விளையாட்டு பாடல்கள் உள்ளன. அக்காலத்தில் 5 வயது பெண் குழந்தைகளை, ஊஞ்சலில் அமர வைத்து, ஆட்டி மகிழ்வர் பெற்றோர்; இதை ஊஞ்சல் பருவம் என்பர். அதுபோல நவராத்திரியின் நான்காம் நாளான இன்று, மீனாட்சியை ஊஞ்சலில் வைத்து ஆட்டுகின்றனர். நம்மைப் பெற்ற தாயான அம்பிகை, சேயாக மாறி ஊஞ்சலில் ஆடுவதை, காண கண் கோடி வேண்டும். அந்த செல்வத்திற்கு அதிபதியான மஹாலட்சுமியை நான்காவது நாளில் பூஜிக்க வேண்டும். பாசக்காரியான மஹாலட்சுமி, என்னை பூஜிப்பவர்களை கைவிட மாட்டேன்... என்று சொல்வதாய் புராணங்கள் கூறுகிறது. நியமத்தோடு இருந்து நவராத்திரி பூஜை செய்ய முடியாதவர்கள், அஷ்டமி அன்று மட்டுமாவது பூஜை செய்ய வேண்டும்.
வழிபாடு முறை
அம்பாள்: வைஷ்ணவி
வாகனம்: கருடன்
நைவேத்யம்: புளியோதரை, பானகம், சர்க்கரைப் பொங்கல், பட்டாணி, சுண்டல்.மலர்கள் செந்தாமரை,ரோஜாதாம்பூலம்: 9 அல்லது 11 வகை கொடுக்கப்பட வேண்டும்.
ராகம்: காம்போதி
வணங்க வேண்டியவர்கள்: பூசம், அனுஷம், உத்திரட்டாதி.
திசை புத்தி நடப்பவர்கள்: செவ்வாய் திசை அல்லது புத்தி.
சிறப்பு: நம் வீட்டில் எந்த விதமான தடங்கலும் இன்றி, மங்கள காரியங்கள் நடைபெற நான்காம் நாளான இன்று விரதம் இருத்தல் நலம்.
பிரசாதம்: நான்காம் நாளான இன்று அட்சதையால் படிக்கட்டு வடிவ கோலமிட சிறப்பு பெறும்.பிரசாதமாக காலையில் சர்க்கரைப் பொங்கலும், மாலையில் பட்டாணி, சுண்டலும் வைக்க வேண்டும். எந்த தேவி எல்லா உயிர்களிடத்தும் அனைத்து செல்வங்களின் வடிவாக இருக்கிறாளோ, அந்த தேவியை வணங்குகிறேன் என, இந்த வார்த்தைகளை
மந்திரமாய் சொன்னால் போதும், எல்லா நன்மைகளும் வந்து சேரும்.
பாடல்
ஆடுக ஊஞ்சல் ஆடுகவே
அம்மா மீனாட்சி ஆடுகவே
நவராத்திரி ஊஞ்சல் உன் ஊஞ்சல்
நலந்தரும் ஊஞ்சல் பொன் ஊஞ்சல்
ஆழிப்படுக்கை கொண்டவனின்அருமைத் தங்கை ஆடுகவே
உத்தமி பைரவி ஆடுகவே
வழிபடும் எங்கள் வாழ்வினிலே வழித்துணையாய் வந்து ஆடுகவே!
மூல மந்திரம்: ஓம்- ஹரீம்- யம் -வம் -வைஷ்ணவ்யை
- நமகாயத்ரி: ஓம் ச்யாம வர்ணாயை வித்மஹே சக்ர ஹஸ்தாயை தீமஹி
த்ன்னோ வைஷ்ணவீ ப்ரசோத்யாத்
நவராத்தியில் அம்பிகைக்கு உகந்த ஸ்ரீ சண்டி ஹோமம் செய்வதால் கிடைக்கும் பலன்கள்:
ஏழ்மை வராது
அன்பு கிடைக்கும்
எதிரி மற்றும் இயற்கையால் ஆபத்து உண்டாகாது
சுவாசினி, பசு, ரிஷி,
குரு,தேவதைகளால்
உண்டான சாபம் நீங்கும்
விவசாயிகளுக்கு நற்பலன்
கிட்டும்
கல்வி ஞானம் பெருகும்
உத்யோக உயர்வு,
திருமணமாகாதவருக்கும் விரைவில் நல்ல இல்லறம் அமையும்
மன அமைதியும், தேக ஆரோக்கியமும் கிடைக்கும்.
அன்பு மட்டுமே கிடைக்க வைஷ்ணவி தேவி வழிபாடு: நவ எனும் சொல், மிக சிறப்பு வாய்ந்தது. இதற்கு இரண்டு பொருள் உள்ளன. ஒன்று ஒன்பது; மற்றொன்று புதியது. ஆக, இந்த நவராத்திரியை ஒன்பது ராத்திரிகள் என்று பொருள் கொள்வதைவிட, புதிய ராத்திரிகள் என்று பொருள் கொண்டு பார்க்க வேண்டும். சிருஷ்டி, ஸ்திதி, சம்ஹாரம் என்ற வரிசைப்படி பார்த்தால், முதலில் பிரம்மா பிறகு விஷ்ணு முடிவில் சிவன் இம்மூவரின் துணைவியர் முறையே சரஸ்வதி, லட்சுமி, துர்க்கை என்று தான் வர வேண்டும். ஆனால், நவராத்திரியின் போது இந்த வரிசை மாற்றமடைந்து துர்கா,லட்சுமி, சரஸ்வதி என்றானது.மலைமகளான துர்க்கையே முதல் மகளாக இருப்பதால், நவராத்திரியின் முதல் மூன்று நாட்களும், துர்க்கை இடம் பெற்று, நம் துயர் துடைக்கின்றாள். ஆன்மாவை இறைவன்பால் வழிப்படுத்த திருவருள் தான், துணை நிற்கின்றது. இந்த திருவருட் சக்தி தான் சித் சக்தி, பராசக்தி, ஆதிபராசக்தி எனப்படுகிறது. இதில் ஆதிபராசக்தி தான் துர்கை.
முதல் மூன்று ராத்திரிகளிலும். அந்த துர்கையை வழிபட்டு, மங்கலத்தையும், அருளையும், ஞானத்தையும் பெற்ற நாம், நான்காம் நாளான இன்று முதல், மூன்று நாட்களுக்கு மஹாலட்சுமியை வழிபட ஆயத்தமாகிறோம். வைஷ்ணவி தேவிசக்தி தாயை இன்று வைஷ்ணவி தேவியாக வழிபட வேண்டும். சங்கு, சக்கரம், கதை, வில் ஆகியவற்றை கொண்டிருப்பாள்; தீயவற்றை சம்ஹரிப்பவள். இவளின் வாகனம் கருடன். கூஷ்மாண்டா வடிவத்தை எடுப்பாள். புராணங்களின்படி, தன் ஏளன சிரிப்பின் மூலம் இந்த ஒட்டுமொத்த அண்டத்தையும் கூஷ்மாண்டா உருவாக்கினாள் என, கூறப்படுகிறது. அம்பிகையின் வெற்றித் திருக்கோலம் அதனால் அண்டத்தை உருவாக்கிய வளாக அவள் வழிபடப்படுகிறாள். 16 வயதுள்ள சுமங்கலி - ஷாடசாகூரீ எனப் போற்றப்படுகிறாள்.