பதிவு செய்த நாள்
22
மார்
2023
10:03
மேட்டுப்பாளையம்: குண்டத்து காளியாதேவி கோவிலில், அமாவாசை பூஜை நடந்தது. நேற்று பூச்சாட்டுடன் குண்டம் விழா துவங்கியது.
மேட்டுப்பாளையம் அடுத்த ஊமப்பாளையத்தில் குண்டத்து காளியாதேவி கோவில் உள்ளது. நேற்று பங்குனி மாத அமாவாசையை முன்னிட்டு, காலை, 5:30 மணிக்கு கோவில் நடை திறந்து, சிறப்பு பூஜை செய்யப்பட்டது. அதன் பின் மதியம் உச்சி கால பூஜை நடந்தது. முன்னதாக பவானி ஆற்றின் கரையோரத்தில் உள்ள ராஜகணபதி, மாதேஸ்வரர், காசி விஸ்வநாதர், கங்கை அம்மன், முருகர், கால பைரவர், விஷ்ணு, துர்க்கை ஆகிய சுவாமிகளுக்கு முதலில் பூஜைகள் செய்யப்பட்டன. தைத் தொடர்ந்து குண்டத்து காளியாதேவி அம்மனுக்கு பால், தயிர், நெய், தேன் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்து, பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டன. அதைத் தொடர்ந்து தலைமை பூசாரி பழனிசாமி, அருள் வாக்கு பூசாரி காளியம்மாள் ஆகிய இருவரும் இணைந்து, பூஜைகள் செய்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். பூஜை முடிவில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நேற்று இரவு, 7:00 மணிக்கு கோவிலின், 35ம் ஆண்டு குண்டம் விழா, பூச்சாட்டுடன் துவங்கியது. ஏப். 3ம் தேதி அம்மன் அழைப்பும், 4ம் தேதி இரவு குண்டம் திறந்து தீ வளர்த்தலும், 5ம் தேதி காலை, 6:00 மணிக்கு குண்டம் இறங்குதலும், அதைத் தொடர்ந்து அக்னி அபிஷேகம், அன்னதானம், பொங்கல் வைத்தல், மஞ்சள் நீராடல் ஆகியவை நடைபெற உள்ளன.