திருப்புல்லாணி ஆதி ஜெகநாதப் பெருமாள் கோயிலில் பிரம்மோற்ஸவ பெரிய தேரோட்டம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05ஏப் 2023 07:04
திருப்புல்லாணி: திருப்புல்லாணி ஆதி ஜெகநாதப் பெருமாள் கோயில் வைணவ திவ்ய தேசங்களில் 44 ஆவதாக திகழ்கிறது. இங்கு மார்ச் 28 அன்று கோயில் சன்னதி முன்புறமுள்ள கொடி மரத்தில் கொடி பட்டம் ஏற்றும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து பத்து நாட்களும் காலை மற்றும் இரவு நேரங்களில் பல்லாக்கு, சிம்மம், அனுமார், கருட சேவை, சேஷ வாகனம், சொர்ண அம்ச வாகனம், குதிரை வாகனங்களில் நான்கு ரத வீதிகளிலும் புறப்பாடு நடந்து வருகிறது. முன்னதாக ஸ்ரீதேவி பூதேவி சமேத கல்யாண ஜெகநாத பெருமாளுக்கு விசேஷ திருமஞ்சனமும் சாற்று முறை கோஷ்டி பாராயணம் நடந்தது. இன்று காலை 9:30 மணியளவில் 50 அடி உயரம் உள்ள பெரிய தேரில் நடுப்புற பீடத்தில் உற்ஸவ மூர்த்திகள் மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி தந்தனர். இரும்பு வட கம்பியை பிடித்து பக்தர்கள் கோவிந்தா கோஷம் முழங்க இழுத்து வந்தனர். திருப்புல்லாணியில் நான்கு ரத வீதிகளிலும் வந்த பெரிய தேர் தனது இருப்பு நிலையை காலை 11: 00 மணியளவில் வந்தடைந்தது. நிலைக்கு வந்த பின்னர் தேரடி மண்டபத்தில் இருந்து பக்தர்கள் மீது காய்கள் கனிகள் வீசப்பட்டு புனித நீர் தெளிக்கப்பட்டது. பக்தர்களுக்கு பிரசாதம் விநியோகிக்கப்பட்டது. பல்வேறு இடங்களில் பக்தர்களுக்கு நீர் மோர், பானக்கம் உள்ளிட்டவைகளும், வீரத்தளவாய் வெள்ளையன் அகமுடையார் மண்டபடி சத்திரத்தில் அன்னதானமும் வழங்கப்பட்டது. நாளை காலை 9:00 மணியளவில் ஆதி ஜெகநாதபெருமாள், பட்டாபிஷேக ராமர், அனுமார் மற்றும் கருட வாகனத்தில் எழுந்தருளி சேதுக்கரை கடலில் தீர்த்தவாரி உற்ஸவத்தில் பங்கேற்கின்றனர். இரவில் சந்திர பிரபை வாகனத்தில் வீதி உலா புறப்பாடு நடக்கிறது. ஏப்.,8 ல் பிரமோற்சவ விழா நிறைவு பெறுகிறது. ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தான தேவஸ்தான நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.