பதிவு செய்த நாள்
30
ஏப்
2024
07:04
சென்னை : சிதம்பரம் நடராஜர் கோவிலில் உள்ள கோவிந்தராஜ பெருமாள் சன்னிதிக்கு, பிரம்மோற்சவம் நடத்துவதால், பொது தீட்சிதருக்கு என்ன பாதிப்பு என, சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.
சென்னை மயிலாப்பூரை சேர்ந்த, டி.ஆர்.ரமேஷ் என்பவர் தாக்கல் செய்த மனு: தமிழகத்தில் நுாற்றுக்கணக்கில் சிவன் கோவில்கள் உள்ளன. அங்கு, விஷ்ணு சன்னிதியும் உள்ளது. சிதம்பரத்தில், கோவிந்தராஜ சன்னிதிக்கு என, கோவிலில் சிறிது இடம் உள்ளது.
ஆலோசனை கூட்டம்
கோவிந்தராஜ பெருமாளுக்கான விழாக்கள், சடங்குகள் குறித்த பட்டியல், 1920ல் நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பில் இடம் பெற்றுள்ளது. கடந்த பிப்ரவரி 18ல், அறநிலையத்துறை இணை ஆணையர் பிறப்பித்த உத்தரவில், கோவிந்தராஜ பெருமாள் கோவிலில், மே 20 முதல் 29 வரை பிரம்மோற்சவம் நடத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம், மார்ச் 13ல் நடக்க உள்ளது. அதில், நிர்வாக அறங்காவலர்கள், பொது தீட்சிதர்கள், செயலர் உள்ளிட்டோர் ஆஜராகவும், தவறினால் ஆட்சேபனை இல்லை என கருதி, தகுதி அடிப்படையில் பிரம்மோற்சவம் நடத்துவது குறித்து உத்தரவு பிறப்பிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. இணை ஆணையரின் இந்த உத்தரவு, கோவில் சடங்குகள், வழிபாட்டு முறையில் குறுக்கிடுவது போலாகும். எனவே, அதை ரத்து செய்ய வேண்டும். நடைமுறையில் இல்லாத ஒரு விழாவை கொண்டாட உத்தரவிடுவதற்கு, இணை ஆணையருக்கு அதிகாரம் இல்லை. எனவே, இணை ஆணையரின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
மனு, தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா, நீதிபதி சத்தியநாராயண பிரசாத் அடங்கிய, முதல் பெஞ்ச் முன், நேற்று விசாரணைக்கு வந்தது.
மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் எம்.ஆர்.வெங்கடேஷ், நடராஜர் கோவிலில், கோவிந்தராஜ பெருமாள் சன்னிதி உள்ளது. 400 ஆண்டுகளுக்கும் மேலாக பிரம்மோற்சவம் நடக்கவில்லை. இதுவரை இல்லாத புதிய நடைமுறையை செயல்படுத்துகின்றனர், என்றார். அறநிலையத்துறை சார்பில் சிறப்பு பிளீடர் அருண் நடராஜன் ஆஜராகி, பக்தர்கள் விருப்பம் காரணமாக, பிரம்மோற்சவம் நடத்தப்படுகிறது, என்றார். பொது தீட்சிதர்கள் சார்பில், வழக்கறிஞர் ஹரிசங்கர் ஆஜராகி, பிரம்மோற்சவம் நடத்த எதிர்ப்பு தெரிவித்தார். அப்போது குறுக்கிட்ட முதல் பெஞ்ச், பிரம்மோற்சவம் நடத்துவதால், உங்களுக்கு என்ன பாதிப்பு என்று கேள்வி எழுப்பியது.
விசாரணை
அதற்கு, வழக்கறிஞர் ஹரிசங்கர், சிதம்பரம் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், கோவிந்தராஜ பெருமாளுக்கு மேற்கொள்ளப்படும் விழாக்கள், சடங்குகளில், பிரம்மோற்சவம் இடம் பெறவில்லை, என்றார். பிரம்மோற்சவம் நடத்தக்கோரி, தாங்கள் வழக்கு தொடர்ந்திருப்பதாக, ராதாகிருஷ்ணன் என்பவர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கனகராஜ் தெரிவித்தார். அதைத்தொடர்ந்து, இந்த வழக்கை, கோவில்கள் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தின் விசாரணைக்கு, முதல் பெஞ்ச் மாற்றியது.