பதிவு செய்த நாள்
08
ஜூலை
2024
11:07
தேனி; தேனி கண்ணாத்தாள் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, கர்ப்ப கிரஹத்தில் அம்மன் திருவுருவ சிலை, பிரகார தெய்வ திருவுருவ சிலைகள் ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு, 16 நாள் ஜலவாச பூஜை துவங்கியது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று அம்மன் தரிசனம் பெற்றனர். இக்கோயிலில் நிர்வாகிகள் 6 மாதங்களுக்கு முன் அம்மன் சிலை புதிதாக செய்து பிரதிஷ்டை செய்ய பூக்கட்டி உத்தரவு பெற்றனர். அதன் பின் புனரமைக்கும் திருப்பணிகள் துவங்கின. ஆக., 23ல் கர்ப்ப கிரஹத்தில் அம்மன் சிலையும், கோயில் வளாகத்தில் பரிவார சக்தி சிலைகளும், சிம்ம வாகனம், பலிபீடம். சரஸ்வதி, சக்தி விநாயகர் சிலைகளும் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளன. கும்பாபிஷேகமும் நடக்க உள்ளது. இதனை முன்னிட்டு ஸ்ரீவில்லிபுத்துார் அருகே உள்ள மல்லி கிராமத்தில் உள்ள ஸ்ரீநிவாச ஸ்தபதி மூலம் முக்கால் அடி உயரத்தில் கண்ணாத்தாள் திருவுருவ சிலை, பிற பரிவார சுவாமி சிலைகள் தயாரிக்கப்பட்டன. அவை விருதுநகர் மாவட்டத்தில் இருந்து நடராஜர் சிவாச்சாரியார் பூஜை செய்து தேனி நகரில் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு, பின் அம்மன் சிலை உட்பட அனைத்து சிலைகளும் முதல் 16 நாட்களுக்கு ஜலவாசம், அடுத்த 16 நாட்கள் தான்யாவாசம் பூஜைகள் முடிந்து, அதற்கடுத்த 16 நாட்கள் தர்ப்பப்பைவாசம் பூஜைகள் முடிந்தவுடன் பிரதிஷ்டை, கும்பாபிஷேகம் நடக்க உள்ளது. ஏற்பாடுகளை கண்ணாத்தாள் கோயில் திருப்பணிக் குழுவின் தலைவர் கோபாலகிருஷ்ணன், பொருளாளர் தர்மகிருஷ்ணராஜா, செயல் தலைவர் மலைச்சாமி, செயலாளர் ஈஸ்வரன், திருப்பணி ஆலோசகர் ஸ்தபதி ஜெயச்சந்திரன், ஆலோசகர் சிங்காரவேலு ஆகியோர் செய்து வருகின்றனர்.