அன்னூர்; ஒட்டர்பாளையம், செல்வகணபதி கோவில், கும்பாபிஷேகம் இன்று நடந்தது. ஒட்டர்பாளையம், ஸ்ரீ நகரில், புதிதாக செல்வ கணபதி கோவில் கட்டப்பட்டுள்ளது. இதே வளாகத்தில் வலம்புரி விநாயகர், ராகு, கேது சிலைகள் நிறுவப்பட்டுள்ளன. கும்பாபிஷேக விழா கடந்த 30ம் தேதி காலை முளைப்பாரி இடுதலுடன் துவங்கியது. மாலையில், சுவாமி சிலைகள் தானியத்தில் வைக்கப்பட்டன. நேற்று மாலை கோமாதா பூஜையும், தீர்த்த குடங்களை அழகாபுரியில் இருந்து கோவிலுக்கு கொண்டு வரும் நிகழ்ச்சியும், காப்பு கட்டுதலும், வேள்வி பூஜையும் நடந்தது. இன்று அதிகாலையில், இரண்டாம் கால வேள்வி பூஜை நடந்தது. காலை 6:30 மணிக்கு செல்வ கணபதி, வலம்புரி விநாயகர், மற்றும் ராகு, கேதுவுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. இதையடுத்து அலங்கார பூஜை, தீபாராதனை நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. எம்.எல்.ஏ., அமுல் கந்தசாமி உட்பட திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.