பதிவு செய்த நாள்
03
அக்
2024
04:10
களியக்காவிளை; திருவனந்தபுரத்தில் நடக்கும் நவராத்திரி விழாவில் பங்கேற்க எழுந்தருளிய குமரி சுவாமி விக்ரகங்களுக்கு தமிழக –-கேரளா எல்லை பகுதியான களியக்காவிளையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில், நாகலாந்து கவர்னர் இலகணேசன் பங்கேற்றார்.
திருவனந்தபுரத்தில் நடக்கும் நவராத்திரி விழாவில் பங்கேற்பதற்காக, சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன், பத்மநாபபுரம் சரஸ்வதி தேவி, வேளிமலை முருகன் உள்ளிட்ட சுவாமி விக்ரகங்கள் நேற்று முன்தினம் இரவு குழித்துறை வந்தன. மகாதேவர் கோவில் வளாகத்தில் விக்ரகங்கள் இறக்கி வைக்கப்பட்டன. இதையடுத்து நேற்று குழித்துறை ஸ்ரீமகாதேவர் கோவிலில் இருந்து பாறசாலை ஸ்ரீமகாதேவர் கோவில் வரை விளக்குகெட்டு, பூக்காவடி, மைலாட்டம், தெய்யம், சிங்காரி மேளம், தாலப்பொலி, புலிக்களி, தெய்வ ரூபங்கள், அலங்கார தோரணங்கள், வாத்திய முளக்கங்களுடன் பி.பி.எம்சந்திப்பில் இருந்து மலர் தூவி, 101 தட்டு பூஜைகள், மஹா நிவேத்தியமாக பக்தர்கள் வரவேற்றனர். தமிழக - கேரள எல்லை பகுதியான களியக்காவிளையில், சுவாமி விக்ரகங்களுக்கு கேரள மாநில அரசு சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. நாகலாந்து கவர்னர் இந்நிகழ்ச்சியில், நாகலாந்து கவர்னர் இல கணேசன், கேரளா எதிர்க்கட்சி தலைவர் சதீஷன், கேரளா மாநில தேவசம்போர்டு தலைவர் பிரசாந்த், தமிழக எம்.எல்.ஏ.,க்கள் தாரகை கத்பர்ட், ராஜே ஷ்குமார், குமரி மாவட்ட எஸ்.பி., சுந்தரவதனம், குமரி மாவட்ட அறங்காவலர் குழுதலைவர் பிரபாஜி. ராமகிருஷ்ணன், அறங்காவலர் குழு உறுப்பினர் துளசிதரன், குமரி மாவட்ட அறநிலையத்துறை இணை ஆணையாளர் பழனிகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். தொ டர்ந் து சுவாமி விக்ரகங்களுக்கு கேரள போலீசார் அணிவகுப்பு மரியாதை செலுத்தினர். அதனை தொடர்ந்து, வாத்திய குழுவினர் இசையொலி முழங்க சுவாமி விக்ரகங்கள் பாறசாலை, உதியன்குளம்கரை வழியாக இரவு நெய்யாற்றின் கரை கிருஷ்ணசுவாமி கோவில் சென்றடைந்து அங்கு தங்கின.
இன்று புறப்பாடு: இன்று, காலை சுவாமி விக்ரகங்கள் அங்கிருந்து புறப்பட்டு க ரமனை சென்றடையும். பின்னர் வேளிமலை முருகன் குதிரை வாகனத்தில் புறப்பட்டு ஆரிய சாலையிலும், முன்னுதித்த நங்கை அம்மன் செந்திட்டை யிலும், சரஸ்வதி அம்மன் விக்ரகம் நவராத்திரி கொலுமண்டபத்திலும் வைத்து பூஜைகள் நடக்கும். நவராத்திரி பூஜைகளுக்கு பின் ஒரு நாள் நல்லிருப்பை தொர்ந்து அங்கிருந்தது 3 சுவாமி விக்ரகங்களும் புறப்பட்டு குமரி மாவட்டம் வந்தடையும்.
பாதுகாப்பு; குமரி மாவட்ட எஸ்.பி., சுந்தரவதனம் தலைமையில் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்திருந்தனர். நவராத்திரி ஊர்வலத்தை சிறப்பிக்கும் விதமாக களியக்காவிளை சந்திப்பில் அமைக்கப்பட்டு இருந்த விழா மேடையில், காலை ஓட்டன்துள்ளல், பஜனை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன. ஏராளமான பக்தர்கள் மழையில் நனைந்தபடி ஊர்வலத்தில் பங்கேற்று சுவாமி விக்ரகங்களை தரிசனம் செய்தனர்.