பதிவு செய்த நாள்
04
அக்
2024
11:10
மதுரை மீனாட்சி அம்மன் இன்று கோலாட்ட அலங்காரத்தில் காட்சியளிக்கிறாள். ஒருமுறை பந்தாசுரனுக்கும், தேவர்களுக்கும் போர் மூண்டது. தேவர்கள் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக பார்வதி தவத்தில் ஆழ்ந்தாள். தவக்கனல் அதிகரித்ததால் பார்வதியின் முகம் பொலிவை இழந்து கருமையாக மாறியது. வருந்திய பார்வதியின் தோழிகள் நந்தீஸ்வரரைச் சரணடைந்து அவர் முன்னிலையில் கோலாட்டம் ஆடினர். அப்போது பார்வதியின் முகத்தில் படர்ந்திருந்த கருமை மாறி அழகாக மாறியது. இதன் பின்னர் பூலோகத்தில் கோலாட்டம் ஆடும் வழக்கம் ஏற்பட்டது. வண்ணம் தீட்டப்பட்ட இரண்டு கழி(குச்சி)களைக் கொண்டு தாளத்துக்கும், இசைக்கும் ஏற்ப ஒன்றுடன் ஒன்று தட்டியபடி ஆடும் ஆட்டம் இது. கன்னிப் பெண்கள் ஏதேனும் கதை அல்லது வரலாறை பாடிய படி வட்டமாக நின்று ஆடுவர். மதுரைக்கு அரசியான மீனாட்சியும் சாதாரணமான பெண் போல கோலாட்டம் ஆடுகிறாள். இதை தரிசித்தால் மனதில் மகிழ்ச்சி நிலைக்கும்.
பாட வேண்டிய பாடல்
ஆளுகைக்கு உன்றன் அடித்தாமரைகள் உண்டு அந்தகன்பால்
மீளுகைக்கு உன்றன் விழியின் கடையுண்டு மேல் இவற்றின்
மூளுகைக்கு என்குறை நின்குறையே அன்று முப்புரங்கள்
மாளுகைக்கு அம்பு தொடுத்த வில்லான் பங்கில் வாள்நுதலே.