பதிவு செய்த நாள்
04
ஏப்
2025
12:04
புதுச்சேரி; இரும்பை பாலாதிரிபுர சுந்தரி அம்பாள் கோவில் கும்பாபிஷேகத்திற்கான யாக சாலை பூஜை இன்று துவங்கியது.
புதுச்சேரி – திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலை, இரும்பை, குபேரன் நகரில் பாலா திரிபுர சுந்தரி அம்பாள் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் புதுப்பிக்கப்பட்டதை தொடர்ந்து வரும் 7ம் தேதி மகா கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது. இதற்கான பூர்வாங்க பூஜை கடந்த 31ம் தேதி கணபதி பூஜையுடன் துவங்கியது. மறுநாள் யாகசாலை பிரவேச பலி நடந்தது. நேற்று முன்தினம் நவக்கிரக ஹோமம், அஸ்வ பூஜை, வாஸ்து சாந்தி, வாஸ்து ஹோமம், பூர்ணாஹூதி நடந்தது. இன்று சாந்தி ஹோமம், திசா ஹோமம், மிருத்சங்கராஹணம், அங்குரார்ப் பணம் ரக்ஷபந்தனம், கவுதுக யாகம் நடந்தது. இன்று காலை 9:00 மணிக்கு மூர்த்தி ஹோமம், பிரசன்னாபிஷேகம், தீர்த்தசங்ரஹணம், அக்னி சங்க்ரஹணம் நடைபெற்றது. மாலை 4:00 மணிக்கு விக்னேஸ்வர பூஜையுடன் முதல் கால யாகசாலை பூஜை துவங்குகிறது. நாளை 5ம் தேதி இரண்டு மற்றும் மூன்றாம் கால யாக பூஜை, 6ம் தேதி நான்கு மற்றும் 5ம் கால யாக பூஜை நடக்கிறது. வரும் 7ம் தேதி காலை 5.00 மணிக்கு விசேஷ சாந்தி விக்னேஸ்வர பூஜை, அங்குர பூஜை, 6ம் கால யாக பூஜை, மகா பூர்ணாஹூதி, யாத்ரா தானம், யாத்ரா ஹோமத்தை தொடர்ந்து கலசம் புறப்பாடாகிறது. காலை 9:20 மணிக்கு ராஜகோபுரம் மற்றும் பரிவார விமானங்களுக்கும், 9:40 மணிக்கு பாலா திரிபுர சுந்தரி அம்பாளுக்கும், 9:50 மணிக்கு ஸ்ரீராஜ மாதங்கி அம்பாளுக்கும், 10:00மணிக்கு ஸ்ரீ வாராஹி அம்பாளுக்கும், 10:05 மணிக்கு பால பைரவருக்கும் மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. மாலை 5:00 மணிக்கு மூலவர் மற்றும் உற்சவ மூர்த்திகளுக்கு அலங்காரம், உபசாரத்தை தொடர்ந்து கன்யா பூஜை, தருணி பூஜை, சுவாஷினி பூஜை, வடுக பூஜை, தீபாராதனை மற்றும் உற்சவ மூர்த்திகள் உள்புறப்பாடு நடக்கிறது.