பகவதியம்மன் கோயில் சித்திரை திருவிழா கொண்டாட்டம்; முளைப்பாரி ஊர்வலம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17ஏப் 2025 04:04
உத்தமபாளையம்; உத்தமபாளையம் பகவதியம்மன் கோயில் சித்திரை திருவிழாவையொட்டி நேற்று நள்ளிரவில் சக்தி கரகம் முல்லைப் பெரியாற்றில் கரைக்கப்பட்டது.
உத்தமபாளையம் வடக்குத் தெருவில் பகவதியம்மன் கோயில் உள்ளது. ஆண்டுதோறும் பங்குனி இறுதியில் விழா துவங்கி சித்திரையில் சக்தி கரகம் எடுக்கப்படும். பிற கோயில்களில் சக்தி கரகம் அதீத சக்தி கொண்டது என்ற நம்பிக்கை உள்ளது. கடந்த ஏப். 8 ல் இருந்து தினமும் ஒரு சமூகத்தினர் மண்டகப்படி நடத்தினர். ஏப்.15 ல் காளாத்தீஸ்வரர் கோயில் முன்பாக முல்லைப்பெரியாற்றில் நள்ளிரவு 12 மணியளவில் சக்தி கரகம் எடுக்கப்பட்டு ஊரின் முக்கிய வீதிகள் வழியாக வந்து கோயிலை அடைந்தது. விடிய விடிய ஆயிரக்கணக்கில் பெண்கள் காத்திருந்து சக்தி கரகத்தை தரிசித்தனர். முன்னதாக அக்னி சட்டி எடுத்தல், பொங்கல் வைத்தல், மாவிளக்கு எடுத்தல் உள்ளிட்ட நேர்த்திகடன்கள் நிறைவேற்றப்பட்டது. நேற்று இரவு சக்தி கரகம் கோயிலில் இருந்து புறப்பட்டு நகர்வலம் வந்தது. எட்டு இடங்களில் காவு கொடுக்கும் நிகழ்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டது. நள்ளிரவு 2 மணியளவில் சக்தி கரகம் முல்லைப்பெரியாற்றில் கரைக்கப்பட்டது. முன்னதாக நூற்றுக்கணக்கில் பெண்கள் பங்கேற்ற முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது.