கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி பத்ரகாளியம்மன் கோவிலில் வைகாசி அமாவாசை முன்னிட்டு நிகும்பலா யாகம் மற்றும் ஊஞ்சல் உற்சவம் நடந்தது. கோவிலில் அமாவாசையொட்டி நேற்று இரவு 7:00 மணிக்கு பத்ரகாளியம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளச் செய்து, சுவாமிக்கு தாலாட்டு பாடல்களுடன் ஊஞ்சல் உற்சவம் நடத்தப்பட்டது. மேலும் கோவிலில் பெரியாண்டச்சி அம்மன், நாகாத்தம்மன், சக்தி அம்மன், காட்டேரி அம்மன் சுவாமிகளுக்கு மகா தீபாராதனை நடந்தது. தொடர்ந்து பத்ரகாளி கவசம் பாடி, ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மிளகாய் வற்றலை யாக தீயில் சேர்த்து நிகும்பலா யாகம் நடந்தது. பக்தர்கள் தோஷ நிவர்த்தி பூஜையில் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கோவில் நிர்வாகி சிவக்குமார் செய்திருந்தார்.