ஒரே இடத்தில் 100 கிடா, ஆயிரம் கோழிகள் பலியிட்டு ஆடிப் பொங்கல் விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05ஆக 2025 04:08
சிங்கம்புணரி; சிங்கம்புணரி அருகே அ.காளாப்பூரில் ஆடிப் பொங்கல் விழாவையொட்டி ஒரே இடத்தில் 100 கிடா, ஆயிரம் கோழிகள் பலியிட்டு வழிபாடு நடத்தப்பட்டது.
இங்குள்ள பழமையான வடக்குவாசல் செல்வி அம்மன் கோயிலில் ஆடி மாத செவ்வாய்க்கிழமை அன்று பொங்கல் விழா கொண்டாடப்படுவது வழக்கம். இன்று இவ்விழா கிராம மக்களால் கொண்டாடப்பட்டது. இதையொட்டி காலை 6:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை கிராமத்தினர் கோயில் முன்பாக ஆடு, கோழிகளை அம்மனுக்கு நேர்த்திக்கடனாக பலியிட்டனர். பின்னர் அந்த இடத்திலேயே பொங்கல் வைத்து அம்மனுக்கு படைத்து வழிபட்டனர். இதில் 100-க்கும் மேற்பட்ட ஆடுகளும், ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோழிகளும் பலியிடப்பட்டன. விழாவையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது. விழாவில் அ.காளாப்பூர் கல்லம்பட்டி, கரடிப்பட்டி, மூவன்பட்டி, முறையூர், சூரக்குடி உள்ளிட்ட பல்வேறு கிராம மக்கள் பங்கேற்று பொங்கல் வைத்து அம்மனை வழிபட்டனர். ஆடிப் பொங்கலையொட்டி இப்பகுதியில் உள்ள பெரும்பாலான வீடுகளில் இன்று கறி விருந்து நடந்தது.