திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், கந்தசஷ்டி மற்றும் வார விடுமுறை என்பதால், ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டதால், பொது வழியில் இரண்டரை மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்தனர். திருத்தணி முருகன் கோவிலில் நடந்து வரும் கந்தசஷ்டி விழா மற்றும் வாரவிடுமுறை என்பதால், மூலவரை தரிசிக்க ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டனர். சில பக்தர்கள் மொட்டை அடித்து, காவடிகள் எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
பொது வழியில் தரிசனத்திற்கு சென்ற பக்தர்கள் நீண்ட வரிசையில், இரண்டரை மணி நேரம் காத்திருந்து மூலவரை தரிசனம் செய்தனர். 100 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட் பெற்ற பக்தர்கள், ஒன்றரை மணி நேரம் காத்திருந்து தரிசித்தனர். முன்னதாக, மூலவருக்கு அதிகாலை 5:00 மணிக்கு சிறப்பு அபிஷேகம், தங்ககிரீடம், தங்கவேல் மற்றும் வை ர ஆபரணங்கள் அணிவித்து, சிறப்பு தீபாராதனை நடந்தது. இரவு 7:00 மணிக்கு உற்சவர் முருகர், வள்ளி, தெய்வானையுடன், தங்கத்தேரில் வீதியுலா வந்தார். கந்தசஷ்டி விழாவை ஒட்டி, நேற்று காலை 8:00 – இரவு 8:00 மணி வரை காவடி மண்டபத்தில் உற்சவர் சண்முகப்பெருமான், வள்ளி, தெய்வானைக்கு லட்சார்ச்சனை நடந்தது. 30க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.