தீவினைகளை அழிக்கும் ஜுவாலாமுகி திரிபுர சுந்தரி
பதிவு செய்த நாள்
03
பிப் 2026 02:02
மைசூரு என்றவுடன் சாமுண்டி மலை மற்றும் அங்குள்ள சாமுண்டீஸ்வரி கோவிலும், நம் கண் முன்னே தோன்றும். இந்த மலையில் இருந்து, கூப்பிடு துாரத்தில் சிறிய மலை உள்ளது. இங்கு சாமுண்டீஸ்வரியின் சகோதரி ஜுவாலாமுகி திரிபுர சுந்தரி குடி கொண்டிருக்கிறார். மைசூரு சாமுண்டி மலை அருகிலேயே உள்ள சிறிய மலையில், ஜுவாலாமுகி திரிபுர சுந்தரி கோவில் அமைந்துள்ளது. ஜுவாலாமுகி திரிபுர சுந்தரி கோவில் என்றால், பலருக்கு தெரியாது. ஆனால் உத்தனள்ளி மாரம்மா என்றால், அனைவருக்கும் தெரியும். உத்தனள்ளி கிராமத்தை ஒட்டியுள்ள மலையில், இக்கோவில் கட்டப்பட்டுள்ளது. இங்கு தினமும் பெருமளவில் பக்தர்கள் வருகின்றனர். உயரமான மலையில் அமர்ந்துள்ள ஜுவாலாமுகி திரிபுர சுந்தரி என்ற உத்தனள்ளி மாரம்மா, தன்னை நாடி வரும் பக்தர்களின் குறைகளை போக்குகிறார். விருப்பங்களை நிறைவேற்றுகிறார். வாரத்தின் அனைத்து நாட்களிலும், சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள் நடக்கிறது. செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரிக்கிறது. கோவிலுக்கு பெரிய கோபுரமோ, ஆடம்பரமோ கிடையாது. கிராமத்தில் இருக்கும் சாதாரணமான கோவிலை போன்றே, மலையில் எளிமையாக கட்டப்பட்டுள்ளது. உத்தனள்ளி கிராமத்தில் இருப்பதால், உத்தனள்ளி மாரம்மா என்றே அழைக்கின்றனர். கோவிலுக்கு இரண்டு இடங்களில் நுழைவாயில் உள்ளது. உட்புறம் மாரம்மாவின் வலது புறம் சிவன் சன்னிதி உள்ளது. கோவிலை ஒட்டி பைரவேஸ்வரா, சித்தேஸ்வரா சன்னிதிகள் உள்ளன. தீய சக்திகளை சம்ஹாரம் செய்ய, அவதாரம் எடுத்தவர் சாமுண்டீஸ்வரி. இவரது வியர்வையில் இருந்து உருவானவர் ஜுவாலாமுகி திரிபுர சுந்தரி. மஹிஷாசுரனை வதம் செய்த போது, ஜுவாலாமுகி திரிபுர சுந்தரி, சாமுண்டீஸ்வரிக்கு உதவியாக இருந்ததாக, புராணங்கள் கூறுகின்றன. முனிவர்கள், தேவர்களுக்கு தொல்லை கொடுத்த மஹிஷாசுரனை வதம் செய்ய, சாமுண்டீஸ்வரி அவதரிக்கிறார். இவருக்கும், அசுரனுக்கும் கடுமையான யுத்தம் நடக்கிறது. மகிஷாசுரனின் ஒரு துளி ரத்தம் கீழே சிந்தினால், ஆயிரக்கணக்கான அசுரர்கள் உருவாகின்றனர். இதை கண்ட சாமுண்டீஸ்வரி சிந்தனையில் ஆழ்கிறார். இவ்வேளையில் அவரது முகத்தில் இருந்து வியர்வை சிந்துகிறது. இதை கையால் வழித்து கீழே வீசுகிறார். அதில் இருந்து ஜுவாலாமுகி திரிபுர சுந்தரி உருவாகிறார். ஆச்சரியமடைந்த சாமுண்டீஸ்வரி, ‘யார் நீ’ என கேள்வி எழுப்புகிறார். இதற்கு ஜுவாலாமுகி திரிபுரசுந்தரி, ‘நான் உன் சகோதரி. உனக்கு உதவ வந்திருக்கிறேன்’ என பதிலளித்து, யுத்தத்தை தொடரும்படி கூறுகிறார். சாமுண்டீஸ்வரியும் மஹிஷாசுரனை, வதம் செய்ய தன் சூலாயுதத்தால் குத்துகிறார். அவரது உடலில் இருந்து வெளியேறும் ரத்தத்தை, ஜுவாலாமுகி திரிபுர சுந்தரி தன் நாக்கை நீட்டி உறிஞ்சுகிறார். அசுரனும் வதம் செய்யப்படுகிறார். அதன்பின் சாமுண்டி மலையில் நிலை நிற்கும் சாமுண்டீஸ்வரி, சகோதரியான திரிபுர சுந்தரியை, தன் அருகிலேயே இருக்கும்படி கூறுகிறார். ஆனால் இதற்கு சம்மதிக்காத திரிபுர சுந்தரி, அங்கிருந்து ஐந்து கற்களை எடுத்து கொண்டு செல்லும் போது, இடறி விழுகிறார். அங்கிருந்து எழுந்து மலையடிவாரத்துக்கு வரும் திரிபுர சுந்தரி, அங்கேயே உத்தலம்மனாக நிலை நின்றதாக ஐதீகம். நாளடைவில் உத்தனள்ளியானது. திரிபுர சுந்தரி மாரம்மாவாக பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். வாழ்க்கையில் பிரச்னை, கடன் தொல்லை, நோய் பாதிப்பு உட்பட, எந்த பிரச்னையாக இருந்தாலும், உத்தனள்ளி மாரம்மாவிடம் பக்தியுடன் முறையிட்டால், சரியாகும் என்பது ஐதீகம். பெங்களூரில் இருந்து, 140 கி.மீ., துமகூரில் இருந்து, 166 கி.மீ., மாண்டியாவில் இருந்து, 43 கி.மீ., ராமநகரில் இருந்து, 93 கி.மீ., தொலைவில் மைசூரு உள்ளது. மைசூரு நகரில் இருந்து, 13 கி.மீ., தொலைவில் உத்தனள்ளி உள்ளது. கர்நாடகாவின் அனைத்து நகரங்களில் இருந்தும், மைசூருக்கு கே.எஸ்.ஆர்.டி.சி., பஸ்கள், ரயில்கள் இயக்கப்படுகின்றன. தனியார் வாகன வசதியும் உள்ளது. விமானத்தில் வருவோர் மைசூரு மண்டகள்ளி விமான நிலையத்தில் இறங்கி, வாடகை வாகனத்தில் கோவிலுக்கு செல்லலாம். தரிசன நேரம்: காலை 7:30 மணி முதல், மதியம் 2:00 மணி வரை, மாலை 3:30 மணி முதல், இரவு 8:30 மணி வரை. தொடர்பு எண்: 94484 34170.
|