கள்ளிக்குடி அருகே முனியாண்டி கோயிலில் பிரியாணி திருவிழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22பிப் 2026 11:02
திருமங்கலம்: பல்வேறு இடங்களில் முனியாண்டி விலாஸ் என்ற பெயரில் ஓட்டல் நடத்தி வருபவர்களின் குலதெய்வமாக கள்ளிக்குடி அருகே வடக்கம்பட்டி முனியாண்டி சுவாமி உள்ளார். இக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் தை மாதம் 2வது வெள்ளிக்கிழமை ஒரு சமுதாயத்தை சேர்ந்தவர்களும், மாசி முதல் வெள்ளிக்கிழமை மற்றொரு சமுதாயத்தை சேர்ந்தவர்களும் திருவிழா நடத்தி பிரியாணி பிரசாதம் வழங்குவது வழக்கம்.
மாசி மாதம் ஒரு சமுதாயத்தினர் நடத்திய 90வது ஆண்டு திருவிழாவில் ஒரு வாரத்திற்கு முன்பு பக்தர்கள் காப்பு கட்டி விரதம் இருந்தனர். வெள்ளிக்கிழமை காலை விரதம் மேற்கொண்ட அவர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்து சுவாமிக்கு அபிஷேகம் செய்து பூஜை செய்தனர்.
பின்னர் மாலையில் நடந்த விழாவில் நிலை மாலையுடன் கிராம மக்கள், பெண்கள் தேங்காய் பூ பழம் தட்டுகளை ஏந்தியபடி ஊர்வலமாக வந்து சுவாமிக்கு படைத்தனர். காணிக்கையாக வழங்கிய 150 ஆடுகள், 300க்கும் மேற்பட்ட கோழிகள் பலியிடப்பட்டு 2500 கிலோ அரிசியில் பிரியாணி தயாரிக்கப்பட்டது.
பின்னர் சுவாமிக்கு படையலிடப்பட்ட பின் பக்தர்களுக்கு பிரியாணி பிரசாதம் வழங்கப்பட்டது.