பட்டிவீரன்பட்டி; அய்யம்பாளையம் கோயில்களில் கொள்ளை சம்பந்தமாக சி.சி.டிவி., ஆதாரங்களுடன் புகார் அளித்தும் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என பொதுமக்கள் குறை கூறுகின்றனர்.
பட்டிவீரன்பட்டி, அய்யம்பாளையம் பகுதிகளில் கடந்த மாதத்தில் தொடர்ந்து ஏழு கோவில்களில் ஒரே நாளில் கொள்ளை போனது. அந்த வழக்கிலும் போலீசார் விசாரணையை முடிக்காமல் காலம் தாழ்த்தி வந்தனர். இந்நிலையில் மார்ச் 21-ல் அய்யம்பாளையம் முருகன் கோயில் உண்டியல் உடைக்கப்பட்டு பணம் திருடு போனது. மார்ச் 22-ல் அதன் அருகில் உள்ள விநாயகர் கோவிலிலும் உண்டியல் திருட்டு முயற்சி நடந்தது. இது சம்பந்தமாக கோயில் பொறுப்பாளர்கள் புகார் அளிக்கும் சிசிடிவி கேமரா பதிவுகள் கொடுத்தும் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை. சிசிடிவி காட்சியில் கையில் ஆயுதங்களுடன் திருட்டில் ஈடுபட்டதால் பொதுமக்களும், கோயில் பாதுகாவலர்களும் அச்சத்தில் உள்ளனர். போலீசார் நடவடிக்கை தாமதமாவதால் போராட்டத்தில் ஈடுபட இப் பகுதியினர் முடிவு செய்துள்ளனர்.