பதிவு செய்த நாள்
07
ஏப்
2026
10:04
கர்நாடகாவின் பல கிராமங்களில் அவ்வப்போது கல்வெட்டுகள், கோவில்கள் உட்பட புராதன பொருட்கள் கண்டுபிடிக்கப்படுகின்றன. அதே போன்று நிலம் ஒன்றில், கண்டெடுக்கப்பட்ட விக்ரகம் பூஜிக்கப்படுகிறது.
பல நுாறு ஆண்டுகளுக்கு முன், சாம்ராஜ்நகர் மாவட்டம், எளந்துார் தாலுகாவின், எடயூர் கிராமத்தில், விவசாயி ஒருவர் நிலத்தை உழுது கொண்டிருந்தார்.
அப்போது அவருக்கு லட்சுமி வராஹசுவாமியின் சிலை கிடைத்தது. அன்றைய காலத்தில் மைசூரு மஹாராஜாவின் ஆட்சியில், பூர்ணய்யா என்பவர் திவானாக இருந்தார். அவரிடம் சிலையை விவசாயி ஒப்படைத்தார்.
சிலை கிடைத்த இடத்திலேயே, கோவில் கட்ட வேண்டும் என, பூர்ணய்யா முடிவு செய்தார். அதன்படி, கோவிலும் கட்டினார். அன்று முதல் லட்சுமி வராஹசுவாமி கோவிலில் பூஜைகள் நடக்கின்றன. இந்த கோவிலில் சென்ன கேசவர், லட்சுமி தேவி, வராஹசுவாமி, ஆஞ்சநேயர் சிலைகள் உள்ளன.
லட்சுமி வராஹசுவாமி கோவில், மாறுபட்ட வடிவில் அமைந்துள்ளது. மூலஸ்தான கோபுரம், கோவிலின் உட்புற கோபுரம் சமமான அளவில் உள்ளன.
தரையில் இருந்து கீழ்புறத்தில் கோவில் உள்ளது. வீடு கட்டும் விருப்பம் உள்ளவர்கள், சொத்து வழக்கு, நில விவகாரம் உள்ளவர்கள் இங்கு வந்து பூஜித்தால், வழக்கு சாதகமாக முடியும் என்பது, பக்தர்களின் நம்பிக்கை. பயிர்களை பாதுகாப்பதிலும், லட்சுமி வராஹசுவாமி கைதேர்ந்தவர்.
ஆண்டுதோறும் கோவிலில் கோலாகலமாக திருவிழா நடக்கிறது. பவுர்ணமி நாளில் சிறப்பு பூஜைகள் நடக்கின்றன. வெளி மாவட்டங்கள், மாநிலங்களில் இருந்தும் பெருமளவில் பக்தர்கள் வருகின்றனர். வாரந்தோறும் சனிக்கிழமைகளில் பக்தர்கள் எண்ணிக்கை அதிகமாக இருக்கும்.
எப்படி செல்வது?
மாநிலத்தின் முக்கிய நகரங்களில் இருந்து, எளந்துாருக்கு கே.எஸ்.ஆர்.டி.சி., பஸ்கள், ரயில்கள் இயக்கப்படுகின்றன. தனியார் வாகன வசதியும் உள்ளது. எளந்துாரில் இறங்கி, வாடகை வாகனத்தில் கோவிலுக்கு செல்லலாம்.
தரிசன நேரம்: காலை 6:30 முதல் மதியம் 12:00 மணி வரை; மாலை 4:00 முதல் இரவு 8:30 மணி வரை.