பதிவு செய்த நாள்
07
ஏப்
2026
10:04
கர்நாடகா –- ஆந்திரா மாநில எல்லையில் உள்ளது துமகூரு மாவட்டத்தின் பாவகடா. இங்கு, 500 ஆண்டுகள் பழமையான, சனி மகாத்மா கோவில் உள்ளது. சனி பகவானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட இக்கோவிலில், ஒரே கல்லில் செதுக்கப்பட்ட, 12 அடி உயர சனி பகவான் சிலை உள்ளது. சனி பகவான் சிலை அருகே சீத்தலா தேவியும் எழுந்தருளியிருப்பது இங்கு சிறப்பம்சம்.
வாழ்க்கையில் சனியின் பிடியால் பாதிக்கப்பட்டுள்ள பக்தர்கள் இங்கு வந்து, சனி பகவானை தரிசித்தால் நல்லது நடக்கும் என்றும், கர்ம வினைகள் நீங்கும் என்றும் நம்பப்படுகிறது. எல்லை பகுதியில் இருப்பதால், ஆந்திராவின் ஹிந்துபூர், தர்மாவரம், புட்டபர்த்தி, மடகசிரா, பெனுகொண்டா உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த, பக்தர்கள் ஏராளமாக வருகின்றனர்.
குறிப்பாக சனி பகவானுக்கு உகந்த நாளான சனிக்கிழமை, கோவிலில் கூட்டம் அலைமோதுகிறது. கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை விவேகானந்தா ஒருங்கிணைந்த ஊரக சுகாதார மையம், ஸ்ரீ சாய் துவாரகாமயி அறக்கட்டளை, ஸ்ரீ நரேந்திரா அறக்கட்டளை உள்ளிட்ட தொண்ட நிறுவனங்கள் செய்து வருகின்றன.
இந்த கோவிலில், கணபதி, ஆஞ்சநேய சுவாமி, கனிவே நரசிம்ம சுவாமி, சுப்ரமணியேஸ்வர சுவாமி ஆகிய சன்னதிகளும் உள்ளன. கோவிலுக்குள் பக்தர்கள் நுழைந்ததும் இடது புறம் உள்ள, கணபதி சிலையையும், சீதாள அம்மன் சிலையையும் வழிபடுவர். பின், சனீஸ்வரர் மற்றும் பிற தெய்வங்களை தரிசிப்பர்.
கடந்த, 400 ஆண்டுகளுக்கு முன் பாவகடாவில் கடும் வறட்சி ஏற்பட்ட போது, இங்கு வசித்த மக்கள் காட்டில் இருந்த சித்தர்கள், முனிவர்களிடம் சென்று தங்கள் கஷ்டத்தை கூறினர். அவர்கள் கொடுத்த கல்லை எடுத்து வந்து சீத்தால தேவி யந்திரத்தை எழுதி பிரதிஷ்டை செய்து வழிபட ஆரம்பித்தனர். சில நாட்களில் நல்ல மழை பெய்து, மக்கள் பயன் அடைந்தனர் என, வரலாறுகள் கூறுகின்றன.
குழந்தை இல்லாதவர்கள் சீத்தால அம்மனை தரிசித்து வளையல் அணிவித்தால், புத்திர பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். அவர்கள் தங்குவதற்கு வசதியாக அறைகள் கட்டப்பட்டு உள்ளன. இந்த கோவிலின் நடை தினமும் காலை, 8:00 முதல் இரவு, 8:00 மணி வரை திறந்திருக்கும்.