பதிவு செய்த நாள்
07
ஏப்
2026
10:04
கர்நாடகாவின் சர்க்கரை கிண்ணம் என்று அழைக்கப்படும் மாண்டியாவில், ஏராளமான கரும்பு தோட்டங்கள் உள்ளன. தமிழக – கர்நாடக விவசாயிகளின் வாழ்வாதாரமாக உள்ள கே.ஆர்.எஸ்., அணையும் இங்கு உள்ளது. இன்னும் பல சிறப்புகளைக் கொண்ட மாண்டியாவில், மேலும் ஒரு சிறப்பாக அம்மனை திட்டினால், குழந்தை பாக்கியம் தரும் அதிசய கோவிலும் உள்ளது.
பொதுவாக அம்மனிடம் சென்றால், நமக்கு வேண்டியதை மனம் உருகி வேண்டி பெறுவது தான் வழக்கம். ஆனால், இந்த கோவிலில் மட்டும் ஏன் அம்மனை திட்டுகின்றனர் என்று நினைக்க தோன்றலாம். அந்த கோவில் எங்கு உள்ளது. அதன் வரலாற்றை பார்க்கலாம்.
புராண கதை மாண்டியாவின் கே.ஆர்.பேட் தாலுகாவில் உள்ளது கிக்கேரி கிராமம். இந்த கிராமத்தில், 100 ஆண்டுகள் பழமையான கிக்கேரம்மா கோவில் உள்ளது. இங்கு ஆண்டிற்கு ஒரு முறை ஏழு நாட்கள் நடக்கும் திருவிழா, மிகவும் சிறப்பு வாய்ந்தது.
மாண்டியா, ஹாசன், துமகூரு மாவட்டங்களில் இருந்து, இந்தக் கோவிலுக்கு பக்தர்கள் அதிகளவில் வருகை தருகின்றனர். திருவிழாவின் போது, ஆணுறுப்பு போன்று இருக்கும், மர சிற்பத்தை ஏந்தியபடி, கோவில் அர்ச்சகர் முக்கிய வீதிகளில் வலம் வருவார்.
ஆச்சரியப்படும் விதமாக கிக்கேரம்மாவை புகழ்வதற்கு பதிலாக, ஆபாச வார்த்தைகள் பயன்படுத்தி பக்தர்கள் நிந்திக்கின்றனர்.
இந்த சடங்கிற்கு பின் உள்ள ஆழமான நம்பிக்கை என்ன வென்றால், திருமணம் முடிந்து பல ஆண்டுகள் ஆகியும், குழந்தை இல்லாமல் இருக்கும் தம்பதியர், அம்மனை திட்டினால், குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது. புராண கதைகளின்படி, கிக்கேரம்மா வேறு யாரும் இல்லை. லட்சுமி தேவி தான்.
ஒரு முறை லட்சுமி தேவி தன் கணவர் நரசிம்ம சுவாமியுடன் சண்டையிட்டு, தாய் வீட்டிற்கு வந்தவர், கணவர் வீட்டிற்கு செல்ல மறுத்துள்ளார். கிராம மக்கள் ஒன்று சேர்ந்து அவரை அனுப்ப முயன்றனர். லட்சுமி தேவி மறுத்த போது, அவரை அவமதிக்கும் நோக்கில், தகாத வார்த்தைகளால் திட்ட துவங்கினர்.
இதற்கு அஞ்சி, லட்சுமி தேவி தன் கணவருடன் சேர்ந்தார் என்பது வரலாறு. தெய்வத்தை திட்டுகிறார்களே என்று தோன்றினாலும், இது புனித சடங்காகவே பார்க்கப்படுகிறது. கோவில் நடை காலை, 6:00 முதல் இரவு, 8:00 மணி வரை திறந்திருக்கும்.
மாண்டியாவிலிருந்து 50 கி.மீ., துாரம்
* பெங்களூரில் இருந்து கே.ஆர்.பேட், 160 கி.மீ., துாரத்தில் உள்ளது.
* மாண்டியாவில் இருந்து 50 கி.மீ., துாரம்
* பெங்களூரு சாட்டிலைட் பஸ் நிலையத்தில் இருந்து, கே.ஆர்.பேட்டிற்கு கே.எஸ்.ஆர்.டி.சி., பஸ்கள் உள்ளன.
* ரயிலில் சென்றால் மாண்டியா சென்று அங்கிருந்து, கே.ஆர்.பேட்டிற்கு லோக்கல் பஸ்சில் செல்லலாம்.