பதிவு செய்த நாள்
09
ஏப்
2026
11:04
உடுமலை: உடுமலை மாரியம்மன் தேர்த்திருவிழாவின் போது மாவிளக்கு, பூவோடு எடுத்து, உருவாரங்கள் வைத்து, வேண்டுதலை பக்தர்கள் நிறைவேற்றுகின்றனர்.
உடுமலையின் காவல் தெய்வமாக போற்றப்படும் மாரியம்மனுக்கு ஆண்டுதோறும், நோன்பு சாட்டியதும், பக்தர்கள் பல்வேறு வழிகளில், தங்கள் வேண்டுதலை நிறைவேற்றுகின்றனர்.
நோய்களில் இருந்து தன்னை காத்தருளிய அம்மனுக்கு, பச்சரிசியில் மாவிட்டு, விளக்கேற்றி, மனமுருக வேண்டி மாவிளக்கு படைக்கின்றனர். இதே போல், நெருப்பில், அம்மன் வெளிவந்தவள் என்பதை நினைவூட்டும் விதமாக, பூவோடு எடுக்கின்றனர்.
விவசாய பூமியில், செழிப்புக்கு காரணமான இறைவனுக்கு, அத்தகைய பசுமை செழிப்பையே அர்ப்பணிப்பது போல, அம்மன் திருவடிகளில், சமர்ப்பிக்கும் வகையில், முளைப்பாலிகையிட்டு ஊர்வலமாக எடுத்து வருகின்றனர்.
திருவிழாவின் போது, உப்பிடுவது எதிலிருந்து தோன்றியதோ, அதிலேயே கரைவது என்பதை வலியுறுத்தும் தத்துவமேயாகும்.
வேண்டுதலுக்கு ஏற்ப உருவார மண் பொம்மைகளை அர்ப்பணித்து, வேண்டிய வரம் கிடைக்கவும், வேண்டுதல் நிறைவேறியதற்காகவும், மனதார வழிபாடு செய்கின்றனர்.
மாரியம்மனுக்கு தங்க கவசம் சாத்துபடி
உடுமலையின் காவல் தெய்வமாக போற்றப்படும் மாரியம்மனுக்கு, தங்க கவசம் சாத்தி, சிறப்பு பூஜைகள் செய்யலாம்.
மாதேவி, மகாதேவி, பூதேவி, புகழ்தேவி, உடுமலை தேவி என பக்தர்களால் போற்றப்படும் மாரியம்மனுக்கு, தங்க கவசம் சாத்துதல் செய்ய, 1,000 ரூபாய் கட்டணமாக, கோவில் நிர்வாகத்தினரால், நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பதிவு செய்யும் நபர்களுக்கு, அவர்கள் விரும்பும் நாளில், தங்ககவசம் சாத்தி, விசேஷ பூஜைகள் நடத்தி, பிரசாதம் வழங்கப்படும்.
திருமண வரம் அருளும் அம்மன் பிரார்த்தனை செய்யும் பக்தர்கள்
உடுமலை மாரியம்மன் கோவிலில், ஏராளமான பெண் பக்தர்கள் வாழ்வில் அற்புதங்கள் நடைபெற்றுள்ளது.
மணமாகாத கன்னிப்பெண்கள் பலர் இங்கு அம்மன் கோயிலில் வந்து அம்மனை தரிசனம் செய்து வாழ்க்கையில் துணையை அமைத்துக் கொண்ட சம்பவங்கள் நடந்துள்ளது.
பல இடங்களில் வரன் தேடி அலைந்து கிடைக்காது வருந்திய நேரத்தில் அம்மனை முறையாக தொடர்ந்து வழிபட்ட நேரத்தில் அம்மன், வாழ்க்கையை அமைத்துக் கொடுத்துள்ளாள். செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் திருமணமாகாத பெண்கள் வழிபாடு செய்வது நலம்.
வெள்ளிக்கிழமை காலை நீராடிவிட்டு, ஈரம் காயாத நிலையில் பெண்கள் வழிபாடு நடத்துவார்கள். அம்மனை மனதில் வேண்டி எண்ணியதை பெற்று கட்டளையை நிறைவேற்றினால் அம்மன் அருள் எப்போதும் கிடைக்கும் என்பது ஐதீகம்.
வரங்கள் பல வழங்கிய வாழ்வுயர வைக்கும் நிறமுடைய திருவாகத் திகழும் இறைவியின் கடைக்கண் பார்வையினால் தம் கண்நோய் நீங்கப்பெறுவர்கள் பலர்.
பெரியம்மை சிறிய அம்மை போன்ற நோய்களுக்கு, அன்னையின் அருட்தீர்த்தமே மாமருந்தாக அமைந்து நலம் தருகிறது. திருமணம் நல்ல முறையில் நடக்க வேண்டி ஏழை, எளிய பொதுமக்கள் அம்மனை தரிசித்து பிரார்த்தனை செய்கிறார்கள். இது போல் கோவில் பல்வேறு சிறப்புகளை கொண்டுள்ளது.
கோவிலில் எழுந்தருளியுள்ள சுவாமிகளுக்கு நித்திய பூஜை
உடுமலை மாரியம்மன் கோவிலில், எழுந்தருளியுள்ள மூர்த்திகளுக்கு, நாள்தோறும் இரண்டு கால பூஜைகள் நடைபெற்று வருகிறது. காமிக ஆகமப்படி இப்பூஜைகள் நடத்தப்படுகிறது.
காலை, 6:00 மணிக்கு, திருவனந்தல், காலை, 7:30 மணிக்கு, கால சந்தி, முற்பகல், 11:00 மணிக்கு உச்சி கால பூஜை, மாலை, 5:00 மணிக்கு, சாய ரட்சை, இரவு, 7:00 மணிக்கு, அர்த்தசாம பூஜைகளும் நடைபெற்று வருகிறது.
நாள்தோறும் அம்மனுக்கு, இரண்டு கால அபிேஷக பூஜைகள் நடத்தப்பட்டு அலங்காரம் செய்யப்படுகிறது.
அதே போல், சித்திரை மாத பிறப்பு, வைகாசி விசாகம், ஆடி மாத செவ்வாய், வெள்ளி, ஆடிப்பூரம், நாகசதுர்த்தி, தீபாவளி, கந்தசஷ்டி, திருக்கார்த்திகை, தனுர் மாதம், தைப்பொங்கல், தைப்பூசம், பங்குனி உத்திரம் ஆகிய விசேஷ நாட்களில், சிறப்பு பூஜைகள் நடக்கிறது.
ஒவ்வொரு மாதாந்திர பவுர்ணமியின் போதும், 9 விதமான இனிப்பு, காரம் படையல் வைத்து சிறப்பு பூஜைகள் நடக்கிறது.