பதிவு செய்த நாள்
09
ஏப்
2026
11:04
உடுமலை: உடுமலை மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழாவில், சிறப்பு அம்சமாக, திருவிழா நடக்கும் நாட்களில், கோவில் வளாகம் மற்றும் குட்டை திடலில், ஆன்மிக சொற்பொழிவு, கலை நிகழ்ச்சிகள் என களைகட்டும்.
அதே போல், தேர்த்திருவிழாவிற்கு சிறப்பு சேர்க்கும் வகையில், குட்டைத்திடலில், பிரமாண்ட ராட்டினங்கள், பொழுது போக்கு அம்சங்கள், பெரியவர்கள் முதல் சிறுவர்கள் வரையிலான விளையாட்டு அம்சங்கள் மற்றும் நுாற்றுக்கணக்கான திருவிழா கடைகள் என, உடுமலை நகரமே களை கட்டும் விழாவாகவும், அனைத்து மதத்தினரும் மகிழ்ச்சியுடன் கொண்டாடும் விழாவாக, இந்த தேர்த்திருவிழா உள்ளது.
கத்தி போடுதல் வழிபாடு
திருவிழாவில், கத்தி போடுதல் நிகழ்ச்சி பாரம்பரியமாக நடந்து வருகிறது.
மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழாவில், பக்தர்கள் தங்கள் உடலில், கத்தியை வைத்து, வாத்தியங்கள் முழங்க, நடனம் ஆடியபடி, கோவிலுக்கு வந்து நேர்த்திக்கடன் செலுத்தி வருவது, சிறப்பானதாகும்.
பிரதான வீதிகளில், அம்மனுக்கு தங்கள் உடலை வருத்தி, நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர்.
யானை தள்ளும் சிறப்பு கொண்ட தேர் கேரளாவிலிருந்து ‘மணிகண்டன்’ வருகை
பக்தர்கள் முன்னே தேரின் வடம் பிடித்து இழுக்க, பின்னாலிருந்து திருத்தேரை யானை தள்ளும் சிறப்பு வாய்ந்த நிகழ்ச்சி உடுமலையில் நடக்கிறது.
உடுமலை மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழாவில், தேரோட்டத்தின் போது, யானை பயன்படுத்துவது, இக்கோவிலின் சிறப்பாக உள்ளது. ‘ஊர் கூடி தேர் இழுக்கும்’ நிகழ்ச்சியாக, பல லட்சம் பக்தர்கள் பங்கேற்கும் தேரோட்டத்தின் போது, பக்தர்கள் முன்னால் தேர் வடம் பிடித்து இழுத்துச்செல்கின்றனர்.
பின்னால், யானை தேரை தள்ளி பக்தர்களுக்கு உதவும் காட்சி கண்கொள்ளாக்காட்சியாகவும், தமிழகத்தில் தேரோட்டத்தின்போது, யானை பயன்படுத்தும் கோவில் என்ற சிறப்பும் உள்ளது. தேர் திரும்பும் தளி ரோடு சந்திப்பு, குட்டை வீதி, சதாசிவம் வீதி, தலைகொண்டம்மன் கோவில் திருப்பம், பொள்ளாச்சி ரோடு திருப்பம் உள்ளிட்ட தேர் திரும்பும் பகுதிகளில், யானையின் பங்கு பிரதானமாக உள்ளது.
நடப்பு ஆண்டு, கேரளா மாநிலம், செர்புலசேரியிலிருந்து,மணிகண்டன் என்ற ஆண் யானை, தேரோட்டத்திற்காக வரவழைக்கப்பட்டுள்ளது.