பதிவு செய்த நாள்
14
ஏப்
2026
08:04
ஒவ்வொரு கோவிலுக்கும், ஒவ்வொரு விதமான சக்திகள் இருக்கும்; ஐதீகங்கள் இருக்கும். காவிரி ஆற்றங்கரையில் குடி கொண்டிருக்கும் அர்க்கேஸ்வர சுவாமியும், மக்களின் குறைகளை போக்குவதுடன், நோய்களை அகற்றி ஆரோக்கியத்தை அளிக்கிறார்.
மைசூரு மாவட்டம், கே.ஆர்.நகர் தாலுகாவின், எடதொரே என்ற இடத்தில், காவிரி ஆற்றங்கரையில் அர்க்கேஸ்வர சுவாமி கோவில் அமைந்துள்ளது. இது, ஆயிரக்கணக்கான ஆண்டுகள் வரலாறு கொண்டதாகும். கோவிலின் பின்னணியில் சுவாரஸ்யமான புராதன கதை உள்ளது.
ஒரு முறை சூரிய தேவன், சாபம் காரணமாக கடுமையான தொழு நோயால் பாதிக்கப்படுகிறார். எவ்வளவு முயற்சித்தும் சாப விமோசனம் கிடைக்கவில்லை. மஹாவிஷ்ணுவை சந்தித்து வழி கேட்கிறார். அவரது ஆலோசனைப்படி, எடதொரேவில் உள்ள காவிரி ஆற்றங்கரைக்கு, சூரிய தேவன் வருகிறார். இங்கு மண்ணினால் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து, கடுமையான தவம் புரிகிறார்.
சூரியனின் பக்தியால் ஈர்க்கப்பட்ட பரமசிவன், நேரில் காட்சியளித்து, சூரியனின் தொழு நோயை நொடிப்பொழுதில் குணமாக்குகிறார். ‘அர்கா’ என்றால் சூரியன் என, அர்த்தமாகும். சூரியனுக்கு அருள் புரிந்ததால், இங்கு குடிகொண்டுள்ள சிவபெருமானை, அர்க்கேஸ்வரா என்று அழைக்கின்றனர்.
அர்க்கேஸ்வரா கோவில், சோழர்கள் காலத்து கட்டடக்கலையில் கட்டப்பட்டுள்ளது. அதற்கான அடையாளங்களை காணலாம். அவர்கள் கட்டிய கோவிலை, ஹொய்சாளர்கள், மைசூரு மஹாராஜாக்கள் மேம்படுத்தினர். மும்முடி கிருஷ்ணராஜ உடையார், 19ம் நுாற்றாண்டில் கோவிலை புதிதாக கட்டி மெருகூட்டினார். கோவிலுக்கு தினமும் நுாற்றுக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர்.
சூரியனின் தொழு நோயை அகற்றிய அர்க்கேஸ்வரரை தரிசித்தால், தீராத நோய்கள் குணமாகும் என்பது ஐதீகம். கோவிலுக்கு வந்து காவிரியில் புனித நீராடி, அர்க்கேஸ்வரரை தரிசித்தால், சரும நோய்கள், மன அழுத்தம், குடும்ப பிரச்னைகள் சரியாகின்றன.
எனவே வெளி மாவட்டங்கள், மாநிலங்களில் இருந்து பக்தர்கள் வருகின்றனர். இது மைசூரின் முக்கியமான திருத்தலங்களில் ஒன்றாகும். பல அதிசயங்களை நிகழ்த்துகிறது. இதுவரை அர்க்கேஸ்வரர் கோவிலுக்கு, நீங்கள் சென்றது இல்லையென்றால், உடனடியாக சென்று தரிசனம் செய்யுங்கள். வாழ்க்கையில் அனைத்து கஷ்டங்களும் விலகும். நோய்கள் குணமாகும். வளமான வாழ்வு கிடைக்கும்.