பதிவு செய்த நாள்
14
ஏப்
2026
08:04
தவத்தில் இருக்கும் முனிவர்களுக்கு தொல்லை கொடுக்கும் தீய சக்திகளிடம் இருந்து அவர்களை காப்பாற்ற, சூரியநாராயணர் அவதரித்த தலம் கலபுரகி மாவட்டம் சித்தாபூர் தாலுகா, கலகி கிராமத்தில் அமைந்துள்ளது.
புராணங்களின்படி, முன்னொரு காலத்தில் இப்பகுதி ரிஷிகள் மற்றும் முனிவர்கள் தவம் செய்து வாழ்ந்து வந்தனர். திடீரென இப்பகுதியில் இருள் சூழ்ந்ததுடன், வறட்சி மற்றும் உடல்நல பாதிப்பு என, பல இன்னல்களுக்கு ஆளாகினர்.
அந்த துன்பங்களில் இருந்து தங்களை விடுவிக்க, சூரிய பகவானை நோக்கி தவம் செய்தனர். இவர்களின் தவத்தால் மகிழ்ந்த சூரிய பகவான், அவர்கள் முன் தோன்றி, இனி இப்பகுதியில் சூரிய ஒளி, வளம், ஆரோக்கியம் உருவாகும் என, அருளினார்.
சூரிய பகவான், தன் கதிர்களை நேரடியாக இந்த நிலத்தையும், அதன் மக்களையும் ஆசீர்வதிக்கும் வகையில், சூரியன் உதிக்கும் திசையை பார்த்தபடி, தன் சிலையை நிறுவும்படி அறிவுறுத்தியதாக நம்பப்படுகிறது.
சூரியனின் தெய்வீக சக்தி பூமியை தொட்ட இடம் புனிதமானது. அங்கு சூரியநாராயணர் கோவில் கட்டப்பட்டது. இங்கு வழிபட்டால், கண் பிரச்னை, தோல் நோய்கள், நாள்பட்ட நோய்கள் குணமாவதாகவும், வாழ்க்கை தீர்மானங்களில் தெளிவையும் தரும் என்று நம்புகின்றனர்.
நவக்கிரஹங்களில் அதிபரான சூரிய பகவான், ஆன்ம சக்தி, ஆரோக்கியம், ஒழுக்கத்தின் அடையாளமாக திகழ்கிறார். சூரிய நாராயணரை வழிபட்டால், சூரிய தோஷம் குறைந்து, தன்னம்பிக்கையை வலுப்படுத்தி, தொழில், தலைமைத்துவம் தொடர்பான விஷயங்களில் நிலைத்தன்மையை கொண்டு வரும் என்று பக்தர்கள் நம்புகின்றனர்.
தென்மாநிலங்களில் சூரிய கோவில்கள் அரிதாக இருப்பதால், கலகி சூரிய நாராயணர் கோவில் அதன் தற்போதைய நிலையிலும், ஆன்மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக விளங்குகிறது. கடந்த, 11 – 12ம் நுாற்றாண்டுகளில், கல்யாண சாளுக்கியர்களின் ஆட்சி காலத்தில், திராவிட மாடல் கட்டட கலையில் கோவில் பெரியளவில் கட்டப்பட்டது. கருங்கற்களால் கட்டப்பட்ட இக்கோவிலில், கருவறை, சபை மண்டபம், முக மண்டபம் போன்றவை உள்ளன. தற்போது சிதிலமடைந்திருந்தாலும், எஞ்சியிருக்கும் துாண்கள், சுவர் சிற்ப வேலைப்பாடுகள் சாளுக்கிய கோவில் கட்டட கலைக்கே உரிய நேர்த்தியான முறையில் உள்ளன.
இன்று இக்கோவில் சுவர்களில் சில பகுதிகள் இடிந்து விழுந்தும், கட்டமைப்பு சிதைந்தும், பாழடைந்த நிலையில் காணப்படுகின்றன. புறக்கணிப்பு மற்றும் இயற்கை சீற்றங்களால் பல சிற்பங்கள் அரித்து போயுள்ளன. நல்ல கட்டடக்கலை, சமய முக்கியத்துவம் இருந்த போதும், இக்கோவில் முறையான பாதுகாப்பு, புனரமைப்புக்காக காத்திருக்கிறது.
உள்ளூர் மக்கள் இங்கு வந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.