கர்நாடகாவில் உள்ள பழமையான நகரங்களில் பாகல்கோட் மாவட்டத்தில் உள்ள பாதாமியும் ஒன்று. இங்கு ஏராளமான கோவில்கள் இருக்கின்றன. அவற்றில் ஒன்று, ஸ்ரீ நாட்டதாவி நாகநாதா கோவில். இது, ஒரு சிவன் கோவிலாகும். சாளுக்கியர்களால், 7ம் நுாற்றாண்டில் கட்டப்பட்டது. கோவிலின் முன் கட்டப்பட்டுள்ள நுழைவு வாயில் பக்தர்களை அன்புடன் வரவேற்கிறது. கோவிலின் கட்டடம், இன்றும் உறுதியாக இருக்கிறது. இது, பார்ப்பதற்கு பிரமிப்பை ஏற்படுத்துகிறது.
இந்த கோவிலை சுற்றி மலைகள் உள்ளன. மரங்களுக்கு நடுவே பசுமையான சூழலில் கோவில் அமைந்து உள்ளது. காலை, 6:00 முதல் மாலை 6:00 மணி வரை கோவில் திறந்திருக்கும். மூலவராக நாகநாதர் சிவலிங்க வடிவத்தில் காட்சி அளிக்கிறார். கருவறைக்கு முன் சிறிய அளவிலான நந்தி சிலை உள்ளது. கோவிலின் மேற்சுவற்றில் சிற்பங்கள் பொறிக்கப்பட்டு உள்ளன.
இக்கோவிலில் அமைதியான சூழல் இருப்பதால், பக்தர்கள் தியானம் செய்வதற்கு ஏற்றதாக உள்ளது.கோவிலில் வீடியோ, படங்கள் எடுப்பதற்கு அனுமதி உண்டு. இருப்பினும், சகபக்தர்களுக்கு தொந்தரவு இல்லாமல் வீடியோ எடுக்க வேண்டும்.முன்னொரு காலத்தில், கோவில் இருந்த பகுதியில் பாம்பு தொல்லை அதிகமாக இருந்ததாகவும், அதனாலே, கோவில் அமைக்கப்பட்டு நாகநாதாவை வழிபடுவதாகவும் பக்தர்கள் நம்புகின்றனர். கோவிலின் சுற்றுப்பகுதியில் கண்டெடுக்கப்பட்ட பல்வெறு கல்வெட்டுகளை தொல்லியல் துறை அதிகாரிகள் ஆராய்ச்சி செய்து வருகின்றனர். இக்கோவிலின் வெளிப்புறம் பார்ப்பதற்கு சாதாரணமாக தோன்றினாலும், உட்புறத்தில் கலைநயம் மிக்க சிற்பங்கள் இடம் பெற்றுள்ளன.
இந்த கோவில் அமைந்துள்ள பகுதி மலைப்பகுதியாக இருப்பதால், பக்தர்கள் தங்களுக்கு வேண்டிய பொருட்களை நகர் பகுதியிலே வாங்கி செல்வது சிறப்பு.