ஹொய்சாள மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்ட ஹிரேநல்லுார் மல்லிகார்ஜுனா கோவில்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14ஏப் 2026 08:04
சிக்கமகளூரு மாவட்டத்தின் கடூர் தாலுகாவில் உள்ளது ஹிரேநல்லுார் கிராமம். இங்கு ஹொய்சாளா மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்ட மல்லிகார்ஜுனா கோவில் சிவனுக்கு அர்ப்பணிக்கப்பட்டு உள்ளது. கட்டட கலைக்கு எடுத்துக்காட்டாக உள்ள, இக்கோவிலில் உள்ள சிற்பங்கள் பக்தர்களை வெகுவாக கவர்கின்றன.
கட்டட கலையின் நேர்த்தியான சிற்பங்கள், நுணுக்கமான வடிவமைப்புகள், பக்தர்களை மெய்சிலிக்க வைக்கின்றன. கோவிலின் வெளிப்புற சுவர்கள், ஹிந்து புராண காட்சிகளை சித்திகரிக்கும் அழகான சிற்பங்களால் அலங்கரிக்கப்பட்டு உள்ளன.
கோவிலின் பிரதான கருவறையில், கருங்கல்லால் செதுக்கப்பட்ட மல்லிகார்ஜுனா சுவாமி சிலை அமைந்துள்ளது. கோவிலின் மேற்கூரை பகுதியில் தெய்வங்கள், விலங்குகள், வடிவியல் கோலங்களில் நுணுக்கமான சிற்ப கலைகள் உள்ளன.
அமைதிக்கு ஏற்ற இடமாக உள்ள இந்த கோவிலில், மஹா சிவராத்திரி, உகாதி பண்டிகை வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகிறது.
உள்ளூர் மரபுகள், சடங்குகளை பாதுகாப்பதிலும், மேம்படுத்துவதிலும் கோவில் முக்கிய பங்காற்றுகிறது.
இன்றைய இளம் தலைமுறையினர் மத பாரம்பரியத்தை அறிந்து கொள்ள உதவும், கல்வி தளமாகவும் விளங்குகிறது. பழமையான கோவில் என்பதால், இந்திய தொல்லியல் ஆய்வு துறையினர் பராமரித்து வருகின்றனர். தர்மஸ்தலா மஞ்சுநாதேஸ்வரா கோவில் டிரஸ்ட் சார்பில், கோவில் புனரமைப்பு பணிகளும் நடக்கின்றன. கோவில் நடை தினமும் காலை 8:00 முதல் காலை 11:00 மணி வரையும்; மாலை 6:00 முதல் இரவு 10:00 மணி வரையும் திறந்து இருக்கும்.