பதிவு செய்த நாள்
06
பிப்
2013
12:02
உடுமலை: உடுமலை அருகே பழமை வாய்ந்த கோவிலை பொதுமக்கள் புனரமைக்க திட்டமிட்டு பணிகள் மேற்கொள்ள உள்ளனர். இதற்காக வரும் 16ம் தேதி சிறப்பு பூஜைகளும் நடைபெறுகிறது.உடுமலை அருகே கரட்டுமடத்தில், பல நூற்றாண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட சஞ்சீவராய பெருமாள் கோவில் உள்ளது. சுண்ணாம்பு காரையால், கட்டப்பட்ட சஞ்சீவராயர், ஆஞ்சநேயர் சன்னதி மற்றும் மரத்தலான கருட கம்பம் ஆகியவை கோவிலின் சிறப்பம்சமாகும். ஆஞ்சநேய பெருமான் கருடரை தோளில் தாங்கியபடி அழகிய கலையுடன் சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது.
தளி பாளையக்காரர்கள் காலத்தில் கட்டப்பட்டதை குறிப்பிடும் வகையில் கோவிலில் பாளையக்காரர்கள் சிலை உள்ளது. சுற்றுப்பகுதிகளிலுள்ள 50க்கும் அதிகமான கிராமங்களிலிருந்து பார்த்தால் தெரியும் வகையில் மலையில் இடம் தேர்வு செய்யப்பட்டு கோவில் அக்காலத்தில் கட்டப்பட்டுள்ளது.இவ்வாறு, பல சிறப்பம்சங்களையும், பல கிராம மக்களின் வழிபாட்டு நம்பிக்கையையும் இக்கோவிலில் தொடர்ந்து நடந்து வரும் சினிமா ஷூட்டிங்குகள் பாழ்படுத்தப்பட்டது. இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் இந்த கோவில் பல ஆண்டுகளாக பராமரிக்கப்படவில்லை.இதனால், கோவில் பொலிவிழந்து காணப்பட்டது. நூற்றாண்டை சுமக்கும் கோவில்களை புனரமைக்க எவ்வித நடவடிக்கையுமில்லாததால், பொதுமக்களே கோவிலை புனரைமக்க திட்டமிட்டுள்ளனர். இதற்காக, கோவில் பிரசன்னம் பார்க்கப்பட்டு, கும்பாபிஷேகம் நடத்த அனுமதி கிடைத்துள்ளதாக கூறும் இப்பகுதி மக்கள் முதற்கட்டமாக கோவில் வளாகத்தை சமப்படுத்தும் பணியை மேற்கொண்டுள்ளனர். பொதுமக்கள் கூறுகையில்," மலைமீது வீற்றிருக்கும் சஞ்சீவராய பெருமாள், அனுமந்தராய பெருமாள் கோவிலின் கோபுரங்கள் சிதிலமடைந்து காணப்படுகிறது. இக்கோவிலை புனரமைத்து திருப்பணிகள் தொடங்கப்பட உள்ளன.தற்போது, கோவிலின் இடத்தை சுத்தம் செய்தல், புனரமைப்பு பணிகள் மேற்கொள்ள ஊர் பொதுக்கள் அனைவரும் ஒன்று கூடி முடிவெடுக்கப்பட்டது. அதன்படி, வரும் 16ம் தேதி காலை 6:00 மணிக்கு கணபதி ஹோமம் நடத்தப்பட்டு, இருப்பிடம் சுத்தம் செய்யும் பூஜையும், மாலை 5:00 மணிக்கு திருவிளக்கு பூஜையும் நடைபெறுகிறது. இதனைத்தொடர்ந்து, கோவில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும். இந்துசமய அறநிலையத்துறை அதிகாரிகளிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது, என்றனர்.