பதிவு செய்த நாள்
18
மார்
2013
10:03
கம்பம்: இன்று (மார்ச் 18) திங்கள் கிழமை காலை 10 மணிக்கு கம்பம் கவுமாரியம்மன் கோயில் மகாகும்பாபி ஷேகம் நடைபெறுகிறது. 20 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறும் இந்த கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கம்பம் நகரம் விழாக்கோலம் பூண்டுள்ளது. தேனி மாவட்டத்தில் பிரசித்திபெற்ற மாரியம்மன் கோயில்களில் வீரபாண்டி, கம்பம் கோயில்கள் முக்கிய இடம் பிடிக்கிறது. இந்த இரண்டு கோயில்களிலும் அம்மன் சுயம்புவாக காட்சியளித்தது என்பது சிறப்பம்சமாகும். ஆண்டுதோறும் சித்திரை மாதம் இந்த கோயில்களில் நடைபெறும் திருவிழாவில் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் பங்கேற்பர். கம்பம் மாரியம்மன் கோயிலில் சித்திரை மாதம், 22 நாள் திருவிழா கொண்டாடப்படும். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சமூகத்தினரின் மண்டகப்படி நடைபெறும். அம்மன் விதவிதமாக அலங்கரிக்கப்பட்டு, பல்வேறு வாகனங்களில் தினந்தோறும் வீதி உலா நடைபெறும். இந்த திருவிழாவின் போது,அக்னிசட்டி எடுப்பது பிரசித்தி பெற்றதாகும். ஒரே நாளில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் அக்னிசட்டி எடுத்து தங்களின் நேர்த்திக் கடனை செலுத்துவார்கள்.கடந்த 1993ல் முன்னாள் அறங்காவலர் ராமசாமி, இந்த கோயில் கும்பாபிஷேகத்தை நடத்தினார். அதற்கு பிறகு 20 ஆண்டுகள் கழித்து இப்போது தான் இந்த கோயில் புனரமைக்கப்பட்டு, கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. கோயிலில் காம்பவுண்ட் சுவர், நடைபாதை ஆகிய பணிகளை கம்பம் ராமலிங்கம் பிள்ளை டிரஸ்ட் மேலாண்மை இயக்குநர் பாஸ்கர், நவக்கிரகம் மற்றும் விநாயகர்சன்னதிகளை 27 வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் வாசு, கோபுர வர்ணம், மணி மண்டப தரை தளம் அமைப்பு போன்ற பணிகளை மொட்டையாண்டி ஆகியோர் செய்து கொடுத்தனர். மொத்தத்தில் 30 லட்சம் ரூபாய் செலவில் கோயில் புதுப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை முதல், யாக பூஜைகள் துவங்கி, தொடர்ந்து மூன்று õட்களாக நடைபெற்று வருகிறது. இன்று (மார்ச் 11) காலை 10 மணிக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.கும்பத்தில் ஊற்றுவதற்காக கங்கை, யமுனை, ராமேஸ்வரம் உள்ளிட்ட பல புண்ணிய ஸ்தலங்களில் இருந்து புனித நீர் கொண்டு வரப் பட்டுள்ளது. கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாடுகளை திருப்பணிக்குழுவினர் செய்துள்ளனர். கும்பாபிஷேகம் முடிந்ததும், கம்பராயப் பெருமாள் கோயில் வளாகத்தில், ராமலிங்கம் பிள்ளை டிரஸ்ட் சார்பில் பக்தர்களுக்கு பிரசாதமும், அன்னதானமும் வழங்கப்படுகிறது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, கம்பம் நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. தெருவிற்கு தெரு வண்ண விளக்குகளும், ஒலி பெருக்கிகளும் கட்டப்பட்டு, அம்மன் புகழ்பாடும் பாடல்கள் ஒலிக்கிறது. பெண்கள் காப்பு கட்டி விரதமிருந்து வருகின்றனர். ஆயிரக்கணக்கில் பக்தர்கள் வருகையையொட்டி, பஸ் ஸ்டாண்ட், வ.உ.சி., திடலுக்கு தற்காலிகமாக மாற்றப்பட்டுள்ளது.
*யாக பூஜையை வரவேற்ற சாரல் மழையாக பூஜைகள் கடந்த வெள்ளிக்கிழமையன்று துவங்கியது. யாகபூஜைகள் துவங்குவதற்கு முன், கோயிலில் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தி, யாகசாலைக்கு அழைத்து வருவது வழக்கம். அவ்வாறு யாக பூஜைகள் துவங்குவதற்கு முன் அம்மனை, யாக சாலைக்கு அழைத்து வரும் போது, கம்பம் பகுதியில் சுமார் 45 நிமிடங் களுக்கு சாரல் மழை பெய்தது. இந்த சாரல் யாக பூஜைகளை, அம்மன் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டதற்கு அறிகுறி என்று கும்பாபிஷேகத்தை நடத்தும் போடி கணேசன் தெரிவித்தார்.