பதிவு செய்த நாள்
26
மே
2015
11:05
திருத்தணி: திரவுபதியம்மன் கோவிலில், நடந்து வரும் தீமிதி திருவிழாவில், நேற்று, அர்ச்சுனன் தபசு நடந்தது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். திருத்தணி ஒன்றியம், குடிகுண்டா கிராமத்தில் உள்ள திரவுபதியம்மன் கோவிலில், கடந்த, 14ம் தேதி, இந்தாண்டிற்கான தீமிதி திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. தினசரி காலையில் மூலவருக்கு சந்தனக் காப்பு மற்றும் சிறப்பு பூஜைகள் நடந்து வருகிறது. மதியம், 2:00 மணி முதல், மாலை, 5:00 மணி வரை, மகாபாரத சொற்பொழிவும், இரவு, 10:00 மணிக்கு, மகாபாரத நாடகமும் நடந்து வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளான திரவுபதியம்மன் திருக்கல்யாணம், கடந்த, 22ம் தேதியும், நேற்று அர்ச்சுனன் தபசு நிகழ்ச்சி நடந்தது. காலை, 10:30 மணிக்கு துவங்கிய அர்ச்சுனன் தபசு, மதியம், 12:00 மணி வரை நடந்தது. அப்போது, 30க்கும் மேற்பட்ட பெண்கள் தங்களது பிரார்த்தனை நிறைவேற்ற, தபசு மரத்திற்கு சிறப்பு பூஜைகள் நடத்தி வழிபட்டனர். தொடர்ந்து, மூலவருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. இந்நிகழ்ச்சியில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். வரும், 31ம் தேதி காலை, துரியோதனன் படுகளம் நிகழ்ச்சியும், மாலை, 6:00 மணிக்கு தீமிதி திருவிழாவும் நடைபெறுகிறது.