பிள்ளையார் பற்றிய பழ மொழிகளைத் தமிழர்கள் தம் அன்றாட வாழ்க்கையில் கையாண்டுள்ளனர். அவற்றுள் சில..
‘பிள்ளையார் சுழி போட்டாயிற்று!’
ஒரு செயலைத் தொடங்கிவிட்டோம். என்பதைக் குறிக்க அச்செயலுக்குப் பிள்ளையார் சுழி போட்டாயிற்று என்பர். இதையே பிள்ளையார் குட்டுக் குட்டியாயிற்று என்றும் கூறுவதுண்டு.
‘பிள்ளையாருக்கு எப்போது கல்யாணம்?
நெடுங்காலம் திருமணமாகாமல் ஒற்றை ஆளாக பிரம்மசாரியாக இருப்பவனை நோக்கி, பிள்ளையாருக்குக் கல்யாணம் எப்போது என்று நகைச்சுவையாகக் கேட்பது வழக்கம்.
‘பிள்ளையார் பிடிக்கப்போய் குரங்காய் முடிந்தது’
ஒரு செயலைத் தொடங்கப் போய் அது வேறொரு செயலாக மாறிப்போய்விட்டது என்பதை உணர்த்த சொல்லப்படும் பழமொழி இது. ஆனால் பஜனைப் பாடல்களைக் தொடங்குவோர் முதலில் பிள்ளையார் துதியில் தொடங்கி, இறுதியில் அனுமார் துதியில் முடிப்பார்கள். அதைக் குறித்தே இப்பழமொழி எழுந்தது என்பதே உண்மை.!
‘எள்ள வெல்லப் பிள்ளையாரா?’
கணபதியை வழிபடும்போது, சில சமயம் வெல்லக்கட்டியையே பிள்ளையாராகப் பிடித்துவைத்து வழிபடுவதுண்டு. அப்போது அவர் வழி பாட்டுக்கு நிவேதனமாக அவ்வெல்லத்திலேயே கொஞ்சம் கிள்ளி வைத்தலைக் குறிக்கும் பழமொழி இது.
பிள்ளையாரைப் பிடித்த சனியன் அரசமரத்தையும் சேர்த்துப் பிடித்தது போல’
ஒருவருக்கு விளையும் தொல்லை அவரைச் சார்ந்தோர்க்கும் பீடிப்பது உண்டு. அதையே இப்பழமொழி காட்டுகிறது. கணபதியைப் பிடிக்க வந்த சனிபகவான் அவரைப் பிடிக்க முடியாமல் போனதால், அவர் வீற்றிருந்த அரசமரத்தைப் பிடித்ததாக ஒரு கதை உண்டு.
‘கடைத்தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைத்ததுபோல’
ஒரு பொருளை மற்றவரிடமிருந்து இலவசமாகப் பெற்று, அதையே பிறருக்குக் கொடுப்பதைக் குறிக்கும் பழமொழி இது.
‘கம்’ மென்றிரு, எல்லாம் நடைபெறும்’
‘ஓம் கம் கணபதயே நமஹ’ என்பது கணபதி மந்திரம். இதில் கம் என்பது பீஜ மந்திரம். இம் மந்திரத்தை உச்சரித்தால் அனைத்துக் காரியங்களும் தடையின்றி நடைபெறும். என்பதே ‘கம்’ என்றிரு; எல்லாம் தானே நடைபெறும் என்பதன் பொருள்.