ஷிவமொக்கா மாவட்டம் ஹொசநகர் தாலுகா குப்பிகா கிராமத்தில், குலிகுலி சங்கரர் கோவில் உள்ளது. சிவனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட இக்கோவிலுக்கு பல வரலாறுகள் உண்டு.
திரேதா யுகத்திற்கு முன், சிவனும், பார்வதியும், இந்தக் கோவில் அமைந்துள்ள இடத்திற்கு ஓய்வெடுக்க வந்தததாகவும், பார்வதி தாகம் எடுத்து சிவனிடம் தண்ணீர் கேட்ட போது, அவர் கங்கை நதியை அழைத்தார். சிவன் தலைக்கு மேல் ஊற்று போல பொங்கி, கங்கை நீரை பொழிந்ததாகவும், இதனால் மகிழ்ச்சி அடைந்த சிவன், கங்கையை இங்கேயே தங்க சொல்லியதாகவும், கங்கை அதற்கு உடன்படாததால் கோபம் அடைந்த சிவன், தனது முடியின் ஜடையில் கங்கையை கட்டியதாகவும், நீங்கள் என்னுடன் இங்கேயே இருந்தால், நானும் இங்கு இருப்பேன் என்று கங்கை நிபந்தனை விதித்ததாகவும், அதற்கு உடன்பட்டு சிவனும் இங்கேயே இருந்ததாகவும் வரலாறு உள்ளது.
வில்வ இலை
கோவில் வளாகத்தில் உள்ள குளத்தில் ஆண்டின், 365 நாட்களும் தண்ணீர் இருக்கும். இந்த குளத்தின் தண்ணீரில், ‘ஓம் நமசிவாய’ என்று உச்சரித்து, வில்வ இலையை போட்டால் அந்த இலை மாயமாகி விடும். அது, குளத்திற்குள் உள்ள சிவன் சிலைக்கு சென்று விடும் என்று பக்தர்கள் நம்புகின்றனர்.
வேறு இலையை போட்டால், அது மூழ்காமல் மிதக்கும். மாயமாகும் வில்வ இலை, 20 நிமிடம் கழித்து மேலே வந்தால், அந்த இலை சிவன் சிலையை தொட்டு வந்ததாகவும், பக்தர்கள் மனதில் நினைத்தது நடக்கும் என்பதும் ஐதீகம். இந்த அதிசய குளம் ஜடதீர்த்தம், கவுரிகொல்லா, சங்கர கொல்லா, குலிகுலி கொல்லா உட்பட பல பெயர்களால் அழைக்கப்படுகிறது.
குளத்திற்கு வரும் தண்ணீரின் ஆதாரம் எங்கே என்பது இன்று வரை தெரியவில்லை. காசியில் இருந்து இங்கு தண்ணீர் வருகிறது என்ற பேச்சும் உள்ளது. பாசி படிந்த நிலையில் குளம் காணப்பட்டாலும், குளத்தின் தண்ணீர் சுத்தமானதாக உள்ளது. இந்நீரை குடிப்பதன் மூலம் தோல் நோய் உட்பட பல நோய்கள் குணமாகும் என்பது பக்தர்கள் நம்பிக்கை. கோவிலின் நடை தினமும் காலை 7:00 முதல் இரவு 7:00 மணி வரை திறந்து இருக்கும்.
400 கி.மீ., துாரம்
* பெங்களூரில் இருந்து குப்பிகா கிராமம் 400 கி.மீ., துாரத்திலும், ஹொசநகரில் இருந்து 20 கி.மீ., துாரத்திலும் உள்ளது.
* பெங்களூரு மெஜஸ்டிக்கில் இருந்து ஹொசநகருக்கு, கே.எஸ்.ஆர்.டி.சி., பஸ்களில் சென்று ஹொசநகரில் இருந்து குப்பிகாவுக்கு ஆட்டோவில் செல்லலாம்.
* பெங்களூரில் இருந்து ரயிலில் செல்வோர் தாளகுப்பா செல்லும் ரயிலில் சென்று, அனந்தபுரம் அல்லது சாகர் ரயில் நிலையத்தில் இறங்கி, அங்கிருந்து குப்பிகா செல்ல முடியும்.