உத்தர கன்னடா மாவட்டம் சர்சி தாலுகாவின் பிசலகொப்பா கிராமத்தில் அமைந்துள்ளது ஸ்ரீ சூரியநாராயணா கோவில்.
புராணங்களின்படி, பல நுாற்றாண்டுகளுக்கு முன், பிசலகொப்பா அருகேயுள்ள வனப்பகுதியில், ஞானம், ஆரோக்கியம், ஆன்மிக சக்தியை நாடி, சூரிய பகவானை நோக்கி, முனிவர்கள் கடுமையான தவம் செய்தனர். இவர்களின் தவத்தால் மகிழ்ச்சி அடைந்த சூரிய பகவான், பிரகாசமான வடிவத்தில் அவர்கள் முன் தோன்றி ஆசிர்வதித்தார். ‘தன்னுடைய சூரிய கதிர்கள் தன் விக்ரஹம் மீது விழும் வகையில், தனக்கு நிரந்தர சன்னதி நிறுவுமாறும், அந்த இடம் புனிதமாக இருக்கும்’ என்றும் உறுதியளித்தாராம்.
இதையடுத்து, ஸ்ரீசூரியநாராயணா கோவிலை முனிவர்கள் கட்டினர். அவர்களுக்கு பின்னால் வந்த மன்னர்கள், கிராமத்தினர் என காலத்துக்கு ஏற்ப மாற்றி கட்டி உள்ளனர். இக்கோவிலை, பல தலைமுறையாக உள்ளூர் கிராமத்தினர் வழிபட்டு வருகின்றனர். இங்கு மகர சங்கராந்தி சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
இங்கு வழிபட்டால் ஆரோக்கியம், ஆற்றல், சூரிய தோஷத்தில் இருந்து நிவாரணம், ஒட்டுமொத்த செழிப்பும் உருவாவதாக நம்பப்படுகிறது. சுவாமி தரிசனம் செய்வதற்கு முன், கோவில் அருகேயுள்ள நீரோடையில் குளிப்பதால், உடல், ஆன்மா இரண்டும் துாய்மையாகும் என்று கூறப்படுகிறது.
கட்டட கலை
இக்கோவில் கர்நாடகாவின் பாரம்பரிய கோவில் பாணியில் கட்டப்பட்டு உள்ளது. கருவறையில் வீற்றிருக்கும் சூரிய பகவானின் விக்ரஹம் கண்கொள்ளா காட்சியாக இருக்கும். தினமும் சூரிய ஒளி, சூரிய நாராயணரின் மீது விழுவதை பார்க்கலாம். இவரை மனமுறுகி வேண்டினால், நீண்டகால நோய்கள், கண் பிரச்னைகள், தோல் நோய்கள், கிரக தோஷங்கள் மற்றும் சூரிய தோஷம் தீருமாம்.
இங்கு பொங்கல் திருவிழா மிகவும் விமரிசையாக கொண்டாடப்படுகிறது. அப்போது சூரிய பகவான், வடக்கு நோக்கி பயணத்தை (உத்தராயணம்) தொடங்குகிறார். இந்த நாளில் சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரங்கள், பிரார்த்தனைகள் செய்யப்படுகின்றன. பக்தர்கள் கரும்பு, எள், வெல்லம், பாரம்பரிய உணவுகளை வழங்குகின்றனர். ரத சப்தமி, ஞாயிற்றுகிழமைகள், சூரிய ஜெயந்தி போன்ற பிற நிகழ்வுகளின் போதும், சிறப்பு பூஜைகள் நடக்கின்றன.