மாவீரன் நெப்போலியனிடம் ஓடிவந்தான் அந்த வீரன். அரசே! தங்களுக்கு மகிழ்ச்சிதரத்தக்க செய்தி ஒன்றைக் கொண்டு வந்துள்ளேன். சொல்லட்டுமா? என்றான். நெப்போலியன் சிரித்தான். வீரனே! நான் துன்பப்படும்படியாக ஏதேனும் செய்தி இருந்தால் முதலில் அதைச் சொல், மகிழ்ச்சிதரும் செய்தியை அடுத்ததாக கேட்கிறேன், என்றான். அப்போது, ஒரு வீரன் பணிவுடன், தாங்கள் இப்படி சொல்வதன் காரணத்தை தெரிந்து கொள்ளலாமா? என்று கேட்டான். வீரர்களே! வாழ்க்கை என்ற போர்க்களத்தில் நாம் இருக்கிறோம். இன்பத்தை தரும் செய்திகள் தற்காலிக சுகத்தைத் தான் கொடுக்கும். துன்பப்படும்படியான செய்திகள் தான் நமக்கு பல அனுபவங்களைக் கற்றுத்தரும். எதிர்நீச்சல் போட வைக்கும். மோசமான எதிரிகளை எதிர்கொள்ளச் செய்யும். இன்பமான செய்திகளால் நமது திறமையை எடைபோடும் விதத்தில் எதுவும் நடக்க வாய்ப்பில்லை, என்றான். தங்கள் தலைவனின் விளக்கம் கேட்டு, வீரர்கள் அசந்து போனார்கள். நெப்போலியனின் மாபெரும் வெற்றிக்கு காரணம் அவனது வித்தியாசமான சிந்தனைகளே! வாழ்க்கை போராட்டத்தில் நாமும் வித்தியாசமாக சிந்தித்து முன்னேறுவோம்.