பதிவு செய்த நாள்
06
நவ
2015
02:11
தீப ஒளி தான், தீபாவளி எனப்படுகிறது. தீப ஒளி போன்று நம் மனமும் பிரகாசமாக, சந்தோஷமாக, பிறருக்கு பயன்படும் வண்ணம் இருக்க வேண்டும் என்பதே இதன் பொருள். பொதுவாக, நரகாசுரனை, ஸ்ரீகிருஷ்ணன் வதம் செய்த நாளே தீபாவளியாக கொண்டாடப்படுகிறது. ஆனால், தீபாவளி பற்றி பல்வேறு கதைகள் கூறப்படுகின்றன. பகவான் விஷ்ணுவுக்கும், லட்சுமி தேவிக்கும் நடந்த திருமணத்தை கொண்டாடுவதே தீபாவளி என்று சிலரும், ஸ்ரீராமன், ராவணனைக் கொன்று, அயோத்திக்கு திரும்பிய நாளே, தீபாவளி என்றும் கூறுகின்றனர். வங்காள தேசத்திலோ, காளி மாதாவை வழிபடும் நாளாக தீபாவளியைக் கொண்டாடுகின்றனர். பழையன கழிதலும், புதியன புகுதலும் என்பது போல், அதுவரை சந்தித்த கஷ்டங்களை, பிரச்னைகளை தலைமுழுகி, உதிக்கும் சூரியன் போல, மீண்டும் புதிய ஒளிர்வுடன், உத்வேகத்துடன், எதிர்கால வாழ்வை எதிர் கொள்ள வேண்டும் என்பதற்காகத் தான், அதிகாலையில் நீராடி, புத்தாடை அணிந்து, புத்துணர்ச்சியுடன் உலா வருகிறோம்.