பெட்டி கடை நடத்தி வரும் பெண் கோயிலுக்கு ரூ. 7 லட்சம் நன்கொடை!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25பிப் 2016 10:02
ராமேஸ்வரம்: கோவையில் பெட்டி கடை நடத்தி வரும் பெண், ராமேஸ்வரம் கோயிலுக்கு ரூ. 7 லட்சம் நன்கொடை வழங்கியுள்ளார். கோவை அன்னுாரைச் சேர்ந்தவர் குருசாமி மனைவி சரோஜினி,65. இவருக்கு மூன்று மகன்கள். அன்னுார் அரசு பள்ளி அருகே பெட்டி கடை வைத்துள்ளார். கணவர் இறந்த பின் சரோஜினி மகன் நாகராஜ் ஆதரவுடன் கடை நடத்திவந்தார். இந்நிலையில் 2012ல் சாலை விபத்தில் நாகராஜ் உயிரிழந்தார். இதையடுத்து கடையை கவனிக்க ஆளின்றி சரோஜினி பரிதவித் தார்.மகனுக்கு விபத்து காப்பீடு கோரி சரோஜினி தொடர்ந்த வழக்கில் அவருக்கு ரூ.4 லட்சம் கிடைத்தது. இந்த தொகையை வியாபாரத்துக்கும், குடும்ப செலவுக்கும் பயன்படுத்த விரும்பாத சரோஜினி, மகன் திருவேங்கடசாமி ஆகியோர் அந்த பணத்தை கோயிலுக்கு தானம் கொடுக்க முன்வந்தனர். இத்துடன் கடந்த 4 ஆண்டுகளாக வங்கி யில் சேமித்த ரூ.3 லட்சம் சேர்த்து ரூ.7லட்சத்திற்கான காசோலையை நேற்று ராமேஸ்வரம் திருக்கோயில் அதிகாரி செல்வராஜிடம் கொடுத்தனர். இதில் ரூ.2 லட்சம் அன்னதான திட்டத்திற்கும், ரூ.5 லட்சம் தமிழக கோயில்களில் சிறப்பு தரிசனம் செய்ய தங்க அட்டை திட்டத்திற்கும் ஒதுக்கியுள்ளனர். சரோஜினி குடும்பத்தினரின் நல்லெண்ணத்தை கோயில் அதிகாரிகள் பாராட்டினர்.
சரோஜினி கூறியதாவது: குடும்பத்தை கவனித்த மகன் நாகராஜ் இறந்த பிறகு, அமைதியை இழந்தேன். 3 ஆண்டுகளுக்கு பின் நீதிமன்ற உத்தரவு மூலம் கிடைத்த தொகையை அன்னதான திட்டத்துக்காக கோயிலுக்கு வழங்கியது மனதுக்கு அமைதியளிக்கிறது. இதன் மூலம் என் மகன் ஆன்மா சாந்தியடையும் என, நம்புவதாக உருக்கத்துடன் தெரிவித்தார்.