புலன்களின் இயக்கத்தை ஒடுக்கி தியானத்தில் அமர்வதே நிஷ்டை. “ஷட்” என்ற வேர்ச் சொல்லில் இருந்து வருவதே இந்தச் சொல். “ஷ்ட கதி நிவ் ருத்தென” என்பது இலக்கணம். அதாவது ‘இயக்கத்தை நிறுத்திக் கொள்வது’ என்று பொருள். கண், காது, மூக்கு, வாய் உடல் ஆகியன இய ங்குவதற்கு தகுந்தாற் போல் நம் மனமும் செயல்படுகிறது. கண் பார்ப்பதை காது கேட்பதை, மூக்கு நுகர்வதை, வாய் சுவைப்பதை உடல் இய ங்குவதைப் பின்பற்றியே மனமும் செல்கிறது. இவற்றின் இயக்கம் அதிகமாகும் போது, மனம் நிலையில்லாமல் அலை பாய்கிறது. அமைதி குறைகிறது. மன அழுத்தம் கூடுகிறது. இந்நிலையில் மனதில் இறைவனை நிலை நிறுத்தி அமர்வது சாத்தியமில்லை. எனவே தான் முனிவர்கள் நிஷ்டை எனும் அரிய வழியைக் கையாண்டார்கள். கண்களை மூடி மனதில் இறைவனை நிலை நிறுத்தி மற்றைய புலன்களில் இயக்கத்தையும் நிறுத்திப் பழகி விட்டால் ‘ஏகாக்ர சித்தம்’ என்னும் ஒருநிலைப்பட்ட மன அமைதி ஏற்பட்டு விடும்.