Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news 11ம் திருமுறையில் பாடிய பாடல் பகுதி-1 | ...
முதல் பக்கம் » பதினொன்றாம் திருமறை
11ம் திருமுறையில் பாடிய பாடல் பகுதி-2 | திருமுறுகாற்றுப்படை
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

14 செப்
2011
03:09

26. கோயில் நான்மணிமாலை (பட்டினத்துப் பிள்ளையார் அருளிச் செய்தது)

கோயில் நான்மணி மாலை முதலிய நூல்களைப் பாடிய திருவெண்காட்டு அடிகள், கடல்துறைப் பட்டினமாகிய காவிரிப் பூம்பட்டினத்தில் பிறந்தமையால் பட்டினத்துப் பிள்ளையார் எனவும் கூறப் பெறுவர். இவருக்கு இளமையில் இடப் பெற்ற பிள்ளைப் பெயர் திருவெண்காடர் என்பது. துறவியாகிய பிறகு அடிகள் என்னும் சொல்லும் சேர்ந்து திருவெண்காட்டு அடிகள் என மாறியது. இவருடைய வரலாறு இவர் பாடிய நூல்களின் முகப்பில் விரிவாக அச்சிடப் பட்டிருப்பதன்றிப் புராணமாகவும் பாடப்பட்டுள்ளது. இப் பெயர் உடையவர்கள் இருவேறு காலங்களில் இருவர் இருந்திருத்தல் கூடுமென ஆராய்ச்சியாளர்கள் எண்ணுகின்றனர். இதற்குக் காரணம், பாடல்கள் இருவகையான போக்குகளில் அமைந்திருத்தலேயாம்.

இறைவன் எழுந்தருளியிருக்குமிடம் கோயில் எனப் பெறும். சிவநேசச் செல்வர்களால் கோயில் எனச் சிறப்பித்துப் போற்றப் பெறுவது திருத்தில்லையின்கண் கூத்தப்பிரான் திருக்கூததியற்றும் சிதம்பரக் கோயிலேயாம். திருவெண்காட்டு அடிகள் தில்லைத் திருச்சிற்றம்பலத்தைப் பாடிப் பரவ வேண்டும் என்னும் நோக்கத்துடன் இக் கோயில் நான்மணி மாலையை இயற்றி யருளினார். பாடல்கள் பிரானின் சிறப்பை இனிது விளக்குகின்றன. ஆழ்ந்து பயில்வார்க்கு இம் மாலை பேரின்பத்தை அளிக்கும் என்பது திண்ணம்.

திருச்சிற்றம்பலம்

வெண்பா

826. பூமேல் அயன்அறியா மோலிப் புறத்ததே
நாமே புகழ்ந்தளவை நாட்டுவோம் - பாமேவும்
ஏத்துகந்தான் தில்லை இடத்துகந்தான் அம்பலத்தே
கூத்துகந்தான் கொற்றக் குடை.

தெளிவுரை : தாமரை மலரில் வீற்றிருக்கின்ற பிரமதேவன் அறியாத திருமுடியான் மேலது அவனது கொற்றக்குடை. அதை நாம் புகழ்ந்து ஏத்துவோம். புகழை விரும்பியவனும் பாட்டுக்களை ஏற்றுக் கொள்பவனும் சிதம்பரத்தில் எழுந்தருளியிருப்பவனும் பொன்னம்பலத்தில் நடனமாடுகின்றவனுமாகிய நடராஜப் பெருமானுடைய வெற்றிக் குடையை நாம் புகழ்ந்து பேசுவோம்.

கட்டளைக் கலித்துறை

827. குடைகொண்டிவ் வையம் எலாங்குளிர்
வித்தெரி பொற்றிகிரிப்
படைகொண் டிகல்தெறும் பார்த்திவர்
ஆவதிற் பைம்பொற்கொன்றைத்
தொடைகொண்ட வார்சடை அம்பலத்
தான்தொண்டர்க்(கு) ஏவல்செய்து
கடைகொண்ட பிச்சைகொண்(டு) உண்டிங்கு
வாழ்தல் களிப்புடைத்தே.

தெளிவுரை : வெற்றிக் குடையைக் கொண்டு இவ்வுலகை எல்லாம் குளிர்வித்து, தீ வளர்த்து, சக்கராயுதத்தைக் கொண்டு ஆட்சி செய்து பகைவர்களை வெல்லும் அரசர் ஆவதைவிட, பொன்னிறம் போன்ற கொன்றை மாலை அணிந்த நீண்ட சடையை உடைய தில்லை நடராஜப் பெருமானது தொண்டர்களுக்குப் பணி செய்து கீழ்மையுடைய பிச்சை ஏற்று இங்கு வாழ்வது இன்பமானதாகும்.

ஆசிரிய விருத்தம்

828. களிவந்(து) அமுதூறிக் கல்மனத்தை எல்லாம்
கசியும் படிசெய்து கண்டறிவார் இல்லா
வெளிவந்(து) அடியேன் மனம்புகுந்த(து) என்றால்
விரிசடையும் வெண்ணீறும் செவ்வானம் என்ன
ஒளிவந்த பொன்னிறமும் தொல்நடமும் காட்டும்
உடையான் உயர்தில்லை அமபலம்ஒன் றல்லால்
எளிவந்(து) இனிப்பிறர்பால் சென்றவர்க்குப் பொய்கொண்(டு)
இடைமிடைந்த புன்மொழியால் இச்சையுரை யோமே.

தெளிவுரை : களிப்பைச் செய்கின்ற அமுதம் ஊறி, கல்மனத்தை உடையோரையெல்லாம் கசியும்படி செய்து, அறிந்துணர்வார் இல்லாத வெளியில் வந்து அடியேனுடைய மனம் புகுந்தது என்றால், விரிந்த சடையும் திருநீறும் செவ்வானத்தைப் போன்ற பிரகாசமான பொன்னிறமும் பழைமையான திருக்கூத்தையும் காட்டும் பெருமானது தில்லையம்பதியில் அல்லாமல் தாழ்வாகிப் பிறர்பால் சென்றவர்க்குப் பொய்மையான புகழ்ச்சிச் சொற்கள் அமைந்த மொழிகளால் புகழ்ந்து பாட மாட்டோம்.

நேரிசை ஆசிரியப்பா

829. உரையின் வரையும் பொருளின் அளவும்
இருவகைப் பட்ட எல்லையும் கடந்து
தம்மை மறந்து நின்னை நினைப்பவர்
செம்மை மனத்தினும் தில்லைமன் றினும்நடம்
ஆடும் அம்பல வாண நீடு

தெளிவுரை : சொல்லின் எல்லையும், பொருளும் அளவும் இருவகைப்பட்ட எல்லையும் கடந்து, தம்மை மறந்து, உம்மை நினைப்பவரது செம்மையான மனத்திலும், தில்லைச் சிற்றம் பலத்திலும் நடனமாடும் அம்பலவாண!

குன்றக் கோமான் தன்திருப் பாவையை
நீல மேனி மால்திருத் தங்கையைத்
திருமணம் புணர்ந்த ஞான்று பெருமநின்
தாதவிழ் கொன்றைத் தாரும் ஏதமில்
வீர வெள்விடைக் கொடியும் போரில்

தெளிவுரை : உயர்ந்த மலையரசன் மகளாகிய உமாதேவியை - திருமாலின் தங்கையைத் திருமணம் கொண்டபோது ஐயனே ! உன்னுடைய கொன்றை மாலையும் இடபக் கொடியும் ஒலி செய்யும் உடுக்கையும், ஓசை மிகுந்த கங்கை ஆறும்

தழங்கும் தமருகப் பறையும் முழங்கொலித்
தெய்வக் கங்கை ஆறும் பொய்தீர்
விரையாக் கலியெனும் ஆணையும் நிரைநிரை
ஆயிரம் வகுத்த மாயிரு மருப்பின்
வெண்ணிறச் செங்கண் வேழமும் பண்ணியல்

தெளிவுரை : பொய்யில்லாத நீக்க முடியாத மறையென்னும் ஆணையும் வரிசையாக ஆயிரம் கொண்ட, பெரிய தந்தங்களையுடைய வெள்ளானையும், பண்ணோடு ஓதப்பெறும் நான்மறை என்னும் குதிரையும்

வைதிகப் புரவியும் வான நாடும்
மையறு கனக மேருமால் வரையும்
செய்வயல் தில்லை யாகிய தொல்பெரும் பதியுமென்று
ஒருபதி னாயிரம் திருநெடு நாமமும்
உரிமையிற் பாடித் திருமணப் பந்தருள்

தெளிவுரை : விண்ணுலகமும் களங்கமற்ற மேரு மலையும் விளை நிலங்களை உடைய திருத்தில்லையாகிய பழைமையான தலமும் என்று ஒரு பதினாயிரம் திருப்பெயர்களும் உரிமையாகப்பாடி, திருமணப்பந்தருள்

அமரர்  முன்புகுந்(து) அறுகு சாத்திநின்
தமர்பெயர் எழுதிய வரிநெடும் புத்தகத்து
என்னையும் எழுத வேண்டுவன் நின்னருள்
ஆணை வைப்பிற் காணொணா அணுவும்
வானுற நிமிர்ந்து காட்டும்
கானில்வால் நுளம்பும் கருடன்ஆ தலினே.

தெளிவுரை : தேவர்கள் முதலில் வந்து அறுகம்புல்லைச் சாத்தி உன்னுடைய அடியார்களுடைய பெயர்கள் எழுதப்பட்ட பெரிய புத்தகத்தில் என் பெயரையும் எழுதும்படி வேண்டுவேன். உன்னுடைய அருள் உலகத்தில் கண்ணுக்குத் தெரியாத அணுவும் ஆகாயம் வரை உயர்ந்து காட்டும். அது எங்ஙனமெனின், சிறிய கொசுவும் கருடனாகி விடும் என்ற விதியின்படி என்க.

வெண்பா

830. ஆதரித்த மாலும் அறிந்திலன்என்(று) அஃதறிந்தே
காதலித்த நாயேற்கும் காட்டுமே - போதகத்தோல்
கம்பலத்தான் நீள்நாக கங்கணத்தான் தென்புலியூர்
அம்பலத்தான் செம்பொன் அடி.

தெளிவுரை : உன்னை விரும்பிய திருமாலும் அறிய முடியவில்லையென்று அறிந்து, உன்மீது அன்பு கொண்ட எனக்காவது காட்டுவாயாக. யானைத் தோலைப் போர்வையாகக் கொண்டவன், நீண்ட பாம்பைக் கங்கணமாகக் கட்டியவன், சிதம்பரத்தில் கோயில் கொண்டிருப்பவனுமாகிய உன் செம்பொற் பாதங்களைக் காட்டுவாயாக என்பதாம்.

கட்டளைக் கலித்துறை

831. அடியொன்று பாதலம் ஏழிற்கும்
அப்புறம் பட்டதிப்பால்
முடியொன்றிவ் அண்டங்கள் எல்லாம்
கடந்தது முற்றும்வெள்ளைப்
பொடியொன்று தோள்எட்டுத் திக்கின்
புறத்தன பூங்கரும்பின்
செடியொன்று தில்லைச்சிற் றம்பலத்
தான்தன் திருநடமே.

தெளிவுரை : திருவடி ஒன்றுமே பாதாளம் ஏழிற்கும் கீழ் உள்ளது. தேவரீருடைய திருமுடி ஒன்று அண்டங்கள் எல்லாம் கடந்தது. திருநீறு நிறைந்த எட்டுத் தோள்களும் எட்டுக் திக்குகளையும் கடந்துள்ளன. பூங்கரும்பின் செடி பொருந்தப்பெற்ற தில்லைச் சிற்றம்பலத்தான் திருநடமே நடனக் காட்சியின் திறம் பேசுகிறது.

திருநடம், பட்டது; கடந்தது; புறத்தன என இயைக்க.

ஆசிரிய விருத்தம்

832. நடமாடி ஏழுலகம் உய்யக் கொண்ட
நாயகரே ! நான்மறையோர் தங்க ளோடும்
திடமாட மதில்தில்லைக் கோயில் கொண்ட
செல்வரே ! உமதருமை தேரா விட்டீர்
இடமாடி இருந்தவளும் விலக்கா விட்டால்
என்போல்வார்க்(கு) உடன்நிற்க இயல்வ தன்று
தடமாலை முடிசாய்த்துப் பணிந்த வானோர்
தஞ்சுண்டா யங்கருதி நஞ்சுண் டீரே.

தெளிவுரை : திருக்கூத்து இயற்றி ஏழு உலகங்களையும் காப்பாற்றுகின்ற நாயகரே ! நான்கு வேதங்களைப் பயின்றவர்களோடும் திண்ணிய திருமாளிகைகளையும் மதிலையும் உடைய தில்லையில் கோயில் கொண்ட செல்வரே ! தேராவிட்டீர். இடப் பாகத்திலிருந்த உமா தேவியாரும் தடுத்திராவிட்டால் என்னைப் போன்றவர்க்கு உடன் நிற்க இயலாமல் போயிருக்கும். பெரிய மாலை அணிந்த முடியைச் சாய்த்துப் பணிந்த வானோர்க்குத் தஞ்சம் அளிப்பவராய்த் தீய நஞ்சை உண்டீர் என்பதாம்.

நேரிசை ஆசிரியப்பா

833. நஞ்சுமிழ் பகுவாய் வெஞ்சின மாசுணம்
தன்முதல் முருக்க தென்முதற் சூழ்ந்த
நீர்ச்சிறு பாம்புதன் வாய்க்கெதிர் வந்த
தேரையை வவ்வி யாங்கு யான்முன்
கருவிடை வந்த ஒருநாள் தொடங்கி
மறவா மறலி முறைபிறழ் பேழ்வாய்
அயில்தலை அன்ன எயிற்றிடைக் கிடந்தாங்கு
அருள்நனி இன்றி ஒருவயி(று) ஓம்பற்குப்

தெளிவுரை : நஞ்சை உமிழ்கின்ற கொடிய பெரிய பாம்பு தன் அடிப்பாகத்தைப் பறித்துத் துன்புறுத்த, தென்முதல் சூழ்ந்த நீர்ச் சிறுபாம்பு தன் வாய்க்கு எதிர் வந்த தேரையைக் கௌவியதைப் போல, யான் முன்பு கருவிடை வந்த நாள் முதலாக, மறதியில்லாத நமன் முறை பிறழ் பெரிய வாய் வேலின் நுனி போல எயிற்றிடைக் கிடந்தது போன்று, அருள் சிறிதும் இல்லாமல் இந்த வயிற்றைப் பாதுகாப்பதற்கு,

பல்லுயிர் செகுத்து வல்லிதின் அருந்தி
அயர்த்தனம் இருந்தும் போலும் பெயர்ந்துநின்று
எண்தோள் வீசிக் கண்டோர் உருகத்
தொல்லெயில் உடுத்த தில்லை மூதூர்
ஆடும் அம்பலக் கூத்தனைப்
பாடுதல் பரவுதல் பணிதலோ இலமே.

தெளிவுரை : பல உயிர்களைக் கொன்று, வலிமையாக அருந்திச் சோர்வடைந்தனன். அப்படி இருந்தும் மறுபடியும் எட்டுத் தோள்களையும் வீசி, கண்டோர் உருகுமாறு பழைமையான மதில் சூழ்ந்த தில்லையம்பலத்தில் ஆடும் அம்பலக் கூத்தனைப் பாடுதல், பரவுதல், பணிதல் ஆகிய எதையும் செய்யவில்லையே !

வெண்பா

834. இலவிதழ்வாய் வீழ்வார் இகழ்வார் அவர்தம்
கலவி கடைக்கணித்தும் காணேன் - இலகுமொளி
ஆடகஞ்சேர் அம்பலத்தே ஆளுடையார் நின்றாடும்
நாடகங்கண்(டு) இன்பான நான்.

தெளிவுரை : இலவ மலர் போன்ற இதழ்களை உடைய மங்கையரை விரும்பிச் செல்பவர்கள் என்னை இகழ்வார்கள். அம் மாதரை நான் விரும்பிச் செல்லமாட்டேன். ஒளி வீசுகின்ற பொன்னம்பலத்தில், என்னை அடிமையாகக் கொண்டவர் சூடுகின்ற திருக்கூத்தைக் கண்டு இன்புறுவேன்.

கட்டளைக் கலித்துறை

835. நானே பிறந்த பயன்படைத்
தேன்அயன் நாரணன்எம்
கோனே எனத்தில்லை அம்பலத்
தேநின்று கூத்துகந்த
தேனே திருவுள்ள மாகியென்
தீமையெல் லாம்மறுத்துத்
தானே புகுந்தடி யேன்மனத்
தேவந்து சந்திக்கவே.

தெளிவுரை : பிரமதேவனும் திருமாலும் எம் தலைவனே என்று தில்லை அம்பலத்தே நின்று, கூத்துகந்த தேனே என்று அவர்கள் வேண்டி நிற்கிறார்கள். அதையும் பொருட்படுத்தாமல், என்மீது நீயே திருவுளங் கொண்டு, என் தீமையெல்லாம் அறுத்து என் மனத்தே வந்து எதிர்ப்பட்டுத் தோன்றுகின்றாய். இப்போதுதான் நான் பிறந்த பயனை அடைந்தேன்.

ஆசிரியச் சந்த விருத்தம்

836. சந்து புனைய வெதும்பி மலரணை
தங்க வெருவி இலங்கு கலையொடு
சங்கு கழல நிறைந்த அயலவர்
தஞ்சொல் நலிய மெலிந்து கிளியொடு
பந்து கழல்கள் மறந்து தளிர்புரை
பண்டை நிறமும் இழந்து நிறையொடு
பண்பு தவிர அனங்கன் அவனொடு
நண்பு பெருக விளைந்த இனையன
நந்தி முழவு தழங்க மலைபெறு
நங்கை மகிழ அணிந்த அரவுகள்
நஞ்சு பிழிய முரன்று முயலகன்
நைந்து நரல அலைந்த பகிரதி
அந்தி மதியொ(டு) அணிந்து திலைநகர்
அம்பொன் அணியும் அரங்கின் நடநவில்
அங்கண் அரசை அடைந்து தொழுதிவள்
அன்று முதலெ திரின்று வரையுமே.

தெளிவுரை : தலைவியின் நிலையைத் தோழி உரைத்தல்: காம நோயின் தன்மை கூறியவாறு: சந்தனம் பூசியதால் உடல் வெப்பமடைந்து, மலரணையில் படுக்க அஞ்சி ஆடையோடு சங்கு வளையல்களும் கழல, ஊரார் தூற்றும் பழிச் சொல் அதிகரிக்க மெலிவடைந்து கிளியோடு பந்தையும் கழற்றிக் காயையும் மறந்து தளிர் போன்ற முன்னிருந்த நிறத்தையும் இழந்து, நிறையொடு பண்பு தவிர, மன்மதன் தன்னோடு அன்பு கொண்டதன் விளைவாக, நந்தி மத்தளம் வாசிக்க உமாதேவியார் மகிழ இறைவன் உடலில் அணிந்திருந்த பாம்புகள், விடத்தைக் கக்கச் சீறி, இறைவன் பாதத்தின் அடியிலுள்ள முயலகன் வருந்தியலற அலையுண்ட கங்கையை
மாலை நேர சந்திரனோடு அணிந்து சிதம்பரத்தில் பொன்னம்பலத்தில் நடனம் செய்கின்ற அழகிய பெருமானை அடைந்து, தொழுது, இவள் அன்று முதல் எதிரில் நின்றாள். அதனால் நிகழ்ந்த நிகழ்ச்சிகள் இவை.

நிலைமண்டில ஆசிரியப்பா

837. வரையொன்று நிறுவி அரவொன்று பிணித்து
கடல்தட வாக மிடலொடும் வாங்கித்
திண்தோள் ஆண்ட தண்டா அமரர்க்(கு)
அமிர்துணா அளித்த முதுபெருங் கடவுள்

தெளிவுரை : மந்திர மலையை மத்தாகவும், வாசுகி என்னும் பாம்பைக் கயிறாகவும் கொண்டு கடலைக் கடைந்து, வலிமையான தோள்களையுடைய மன அமைதியில்லாத தேவர்களுக்கு அமுதை உண்ணும்படியாகக் கொடுத்த முதுபெருங்கடவுள்,

கடையுகஞ் சென்ற காலத்து நெடுநிலம்
ஆழிப் பரப்பில் ஆழ்வது பொறாஅது
அஞ்சேல் என்று செஞ்சேல் ஆகித்தன்
தெய்வ உதரத்துச் சிறுசெலுப் புரையில்
பௌவம் ஏழே பட்டது பௌவத்தோ(டு)
உலகு குழைத்தொரு நாள் உண்டதும்

தெளிவுரை : கடையுகம் சென்ற காலத்து (ஊழிக்காலம்) இந்தப் பெரிய நிலம் கடலில் மூழ்கிப் போகாவண்ணம் பாதுகாத்து, அஞ்சாதீர்கள் என்று செம்மை நிறமுடைய சேல்மீன் ஆகி, தன் தெய்வ வயிற்றின் செதிள் ஒன்றில் ஏழு கடல்களையும் உள்ளடக்கி உலகங்களையும் சேர்த்து ஒருநாள் உண்டதும்,

உலக மூன்றும் அளந்துழி ஆங்கவன்
ஈரடி நிரம்பிற்றும் இலவே தேரில்
உரைப்போர்க்(கு) அல்ல(து) அவன்குறை வின்றே
இனைய னாகிய தனிமுதல் வானவன்
கேழல் திருவுரு ஆகி ஆழத்து

தெளிவுரை : மூன்று உலகங்களையும் திருமால் அளந்தபோது அவனுடைய இரண்டு பாதங்களும் நிரம்பவில்லை. நேரில் உரைப்போர்க்கு அல்லது அவன் குறை அன்று. இத்தகைய சிறந்த தேவனாகிய திருமால் பன்றி உருவம் தாங்கி,

அடுக்கிய ஏழும் எடுத்தனன் எடுத்தெடுத்து
ஊழி ஊழி கீழுறக் கிளைத்தும்
காண்பதற்(கு) அரியநின் கழலும் வேண்டுபு
நிகில லோகமும் நெடுமறைத் தொகுதியும்
அகில சராசரம் அனைத்தும் உதவிய
பொன்னிறக் கடவுள் அன்ன மாகிக்
கண்டி லாதநின் கதிர்நெடு முடியும்
ஈங்கிவை கொண்டு நீங்காது விரும்பிச்
சிறிய பொதுவின் மறுவின்றி விளங்கி
ஏவருங் காண ஆடுதி அதுவெனக்(கு)

தெளிவுரை : ஏழு உலகங்களையும் தோண்டிப் பார்த்தார். அவ்வாறு பல ஊழிகள் தோண்டியும், காண்பதற்கு அரிய உன் கழலும் வேண்டி எல்லா உலகங்களையும் வேதங்களையும் அகில சராசரங்களையும் படைத்த பிரமதேவன் அன்ன உருவம்கொண்டு பார்க்க முடியாத உன் பிரகாசமான நெடுமுடியும் ஈங்கு கொண்டு நீங்காது விரும்பி, தில்லைச்சிற்றம்பலத்தில் மறுவின்றி விளங்கி அனைவரும் காணுமாறு நடனம் ஆடுகின்றாய்.

அதிசயம் விளைக்கும் அன்றே அதிசயம்
விளையாது மொழிந்த(து) எந்தை வளையாது
கல்லினும் வலிதது நல்லிதிற் செல்லாது
தான்சிறி தாயினும் உள்ளிடை நிரம்ப
வான்பொய் அச்சம் மாயா ஆசை
மிடைந்தன கிடப்ப இடம்பெறல் அருமையில்

தெளிவுரை : அது எனக்கு அதிசயமாக உள்ளது. அதிசயம் விளையாமல் எந்தையாகிய நீ மொழிந்து வளையாது, கல்லைக் காட்டிலும் வலிமையானது. நல்லிதற் செல்லாது, அது சிறிதாக இருந்த போதிலும் உள்ளிடம் நிரம்புமாறு பொய், அச்சம், மாயா ஆசை இவை ஒன்று சேர்ந்து, இடம் பெற முடியாமல்,

ஐவர் கள்வர் வல்லிதிற் புகுந்து
மண்மகன் திகிரியில் எண்மடங்கு சுழற்ற
ஆடுபு கிடந்த பீடில் நெஞ்சத்து
நுழைந்தனை புகுந்து தழைந்தநின் சடையும்

தெளிவுரை : ஐம்புல ஆசை மிகுந்து, உள்ளே நுழைந்து குயவனது சக்கரத்தை போல், எட்டு மடங்கு சுழற்ற ஆடிக் கொண்டிருக்கும் என் பாழ் நெஞ்சத்தில் நீயாக வந்து நுழைந்தனை.

செய்ய வாயும் மையமர் கண்டமும்
நெற்றியில் நிகழ்ந்த ஒற்றை நாட்டமும்
எடுத்த பாதமும் தடுத்தசெங் கையும்
புள்ளி ஆடையும் ஒள்ளிநின் விளங்க
நாடகம் ஆடுதி நம்ப கூடும்

தெளிவுரை : உன்னுடைய நீண்ட சடையும் சிவந்த வாயும், கருமை நிறமுடைய கழுத்தும், நெற்றிக் கண்ணும், தூக்கிய பாதமும், அபயம் காட்டும் கையும் (அஞ்சற்க எனத் தடுத்த கை) புலித்தோல் ஆடையும் பிரகாசமாக விளங்க நடனம் ஆடுகின்றாய்.

வேதம் நான்கும் விழுப்பெரு முனிவரும்
ஆதி நின்திறம் ஆதலின் மொழிவது
பெரியதிற் பெரியை என்றும் அன்றே
சிறியதிற் சிறியை என்றும் அன்றே
நிறைபொருள் மறைகள் நான்கும்நின் அறைகழல்
இரண்டொடும் அறிவினில் ஆர்த்து வைத்த
மறையவர் தில்லை மன்றுகிழ வோனே !

தெளிவுரை : சிவபெருமானே ! நான்கு வேதங்களும் முனிவர்களும் போற்றும் ஆதி தெய்வமே ! இது நின் திறம் ஆதலின், இதை எடுத்துரைப்பது மிகவும் சிரமம். நீ பெரியதில் பெரியை, சிறியதில் சிறியை, மறையையும் கழலையும் அறிவிலே கட்டி வைத்தவனும் எல்லாவற்றிற்கும் முதற் காரணனுமாகிய நீ மறையவர் வாழும் தில்லை மன்றிற்கு உரியவனாவாய்.

வெண்பா

838. கிழவருமாய் நோய்மூப்புக் கீழ்ப்பட்டுக் காமத்(து)
உழவரும்போய் ஓயுமா கண்டோம் - மொழிதெரிய
வாயினால் இப்போதே மன்றில் நடமாடும்
நாயனார் என்றுரைப்போம் நாம்.

தெளிவுரை : நோய் மூப்பு இவைகளுக்கு ஆளாகித் துன்புற்று, அதிகமாகச் சிற்றின்ப நெறியில் ஈடுபட்டவர் ஓய்ந்து போவதைக் கண்டோம். ஓதும் மொழி நன்றாக விளங்க வாயினால் இப்போது மன்றில் நடமாடும் இறைவனே என்று நாம் வாழ்த்துவோமாக.

கட்டளைக் கலித்துறை

839. நாமத்தி னால்என்தன் நாத்திருத்
தேன்நறை மாமலர்சேர்
தாமத்தி னால்உன் சரண்பணி
யேன்சார்வ தென்கொடுநான்
வாமத்தி லேயொரு மானை
தரித்தொரு மானைவைத்தாய்
சேமத்தி னாலுன் திருத்தில்லை
சேர்வதோர் செந்நெறியே.

தெளிவுரை : திருஐந்தெழுத்தினால் என் நாக்கு திருந்தவில்லை, மணமுள்ள மலர் மாலைகளைச் சாத்தி உன் பாதங்களைப் பணிந்தறியேன். நான் எந்த உரிமையைக் கொண்டு உன்னை அடைவது? (மான் என்றது மான் மறியையும் உமாதேவியையும் குறிக்கும்) இடப் பாகத்தில் உமா தேவியையும் கையில் மான் மரியையும் வைத்துள்ளாய். என் வைப்பிடமாக உன் திருத்தில்லையை அடைவதுதான் நல்ல நெறியெனக் கொண்டேன் என்பதாம்.

ஆசிரியச் சந்த விருத்தம்

840. நெறிதரு குழலை அறலென்பர்கள்
நிழலெழு மதியம் நுதலென்பர்கள்
நிலவினும் வெளிது நகையென்பர்கள்
நிறம்வரு கலசம் முலையென்பர்கள்
அறிகுவ தரிதிவ் விடையென்பர்கள்
அடியிணை கமல மலரென்பர்கள்
அவயவம் இனைய மடமங்கையர்
அழகியர் அமையும் அவரென்செய
மறிமழு வுடைய கரனென்கிலர்
மறலியை முனியும் அரனென்கிலர்
மதிபொதி சடில தரனென்கிலர்
மலைமகள் மருவு புயனென்கிலர்
செறிபொழில் நிலவு நிலையென்கிலர்
திருநடம் நவிலும் இறையென்கிலர்
சிவகதி அருளும் அரசென்கிலர்
சிலர்நர குறுவர் அறிவின்றியே.

தெளிவுரை : ஒழுங்காக வகிர் எடுத்து முடிக்கப்பட்ட கூந்தலைக் கருமணல் ஒழுங்கு என்பார்கள். ஒளியோடு கூடிய சந்திரனை நெற்றி என்பார்கள். நிலவைக் காட்டிலும் வெண்மையானது பல் என்பார்கள். நிறமிக்க கலசத்தை முலை என்பார்கள்.

அறிகுவது அரிது இடுப்பு என்பார்கள். இரண்டு பாதங்களையும் தாமரை மலர்கள் என்பார்கள். இத்தகைய உடல் உறுப்புக்களையுடைய இள மங்கையர் அழகியர் போதும் என்று திருப்தி கொண்டவர்கள் இறைவனை வணங்குவார்களோ ?

சிவபெருமான் மானையும் மழுவையும் ஏந்திய கைகளை உடையவன் என்றும், காலனைக் கோபிக்கும் அரன் என்றும், சந்திரனைச் சடையில் சூடியவன் என்றும், உமாதேவியை இடப்பாகத்தில் கொண்டவன் என்றும், நிலவு பொழிகின்ற தில்லை நகர் என்றும், அங்கு இறைவன் திருநடனம் செய்கின்றான் என்றும், அவன் மக்களுக்குச் சிவகதியை அருளுகின்றவன் என்றும் துதித்து வழிபடாதவர்கள் அறிவில்லாதவர் ஆவர். எனவே சிவகதி பெற வேண்டுவோர் அவனை வணங்குங்கள் என்பதாம்.

நேரிசை ஆசிரியப்பா

 841. அறிவில் ஒழுக்கமும் பிறிதுபடு பொய்யும்
கடும்பிணித் தொகையும் இடும்பை ஈட்டமும்
இனையன பலசரக் கேற்றி, வினையெனும்
தொல்மீ காமன் உய்ப்ப அந்நிலைக்

தெளிவுரை : உடம்பைக் கப்பலாக உருவகம் செய்கிறார். அறிவில்லாத ஒழுக்கமும், வேறுபடுத்தும் பொய்யும் கடுமையான நோய்களின் தொகையும் துன்பத் தொகுதியும் இத்தகைய பல சரக்குகளை ஏற்றி, ஊழ் என்ற பழமையான கப்பலோட்டி செலுத்த,

கருவெனும் நெடுநகர் ஒருதுறை நீத்தத்துப்
புலனெனும் கோண்மீன் அலமந்து தொடரப்
பிறப்பெனும் பெருங்கடல் உறப்புகுந்(து) அலைக்கும்
துயர்த்திரை உவட்டில் பெயர்ப்பிடம் அயர்த்துக்
குடும்பம் என்னும் நெடுங்கல் வீழ்த்து
நிறையெனும் கூம்பு முரிந்து குறையா

தெளிவுரை : அந்த நிலை கருவெனும் நெடுநகர் (கருப்பம் தரித்தல் - பிறவி எடுத்தல்) ஒரு துறையில் வெள்ளம் புலன் என்னும் கிரகம் வருந்தித் தொடர, பிறப்பெனும் பெருங்கடலில் பொருந்தப் புகுந்து அலையச் செய்யும். துயர்த் திரையாகிய நீர்ப் பெருக்கில் பெயர்ப்பிடம் மறந்து குடும்பம் என்னும் மலை தடுத்து, மனத்தை அடக்கி ஆளும் பாய் மரம் முரிந்து குறையாத,

உணர்வெனும் நெடும்பாய் கீறிப் புணரும்
மாயப் பெயர்ப்படு காயச் சிறைக்கலம்
கலங்குபு கவிழா முன்னம் அலங்கல்
மதியுடன் அணிந்த பொதியவிழ் சடிலத்துப்
பையர(வு) அணிந்த தெய்வ நாயக
தொல்லெயில் உடுத்த தில்லை காவல
வம்பலர் தும்பை அம்பல வாணநின்
அருளெனும் நலத்தார் பூட்டித்
திருவடி நெடுங்கரை சேர்த்துமா செய்யே.

தெளிவுரை : உணர்வெனும் நெடும்பாய் கிழிந்து, தேகமாகிய சிறைக் கப்பல் கலங்கித் கவிழ்ந்து விடுவதற்குமுன், தலை மாலையையும் பிறைச் சந்திரனையும் அணிந்த சடையில் பாம்பை அணிந்துள்ள தெய்வ நாயகனே ! மதில் சூழ்ந்த சிதம்பரத்தின் காவலனே ! தும்பை அணிந்த அம்பல வாணனே ! உன்னுடைய அருள் என்னும் வடம் பூட்டி திருவடியாகிய நெடுங்கரையில் கொண்டு வந்து சேர்ப்பாயாக !

வெண்பா

842. செய்ய திருமேனிச் சிற்றம் பலவருக்கென்
தையல் வளைகொடுத்தல் சாலுமே - ஐயன்தேர்
சேயே வருமளவில் சிந்தாத மாத்திரமே
தாயே நமதுகையில் சங்கு.

இது செவிலிக் கூற்று.

தெளிவுரை : சிவந்த திருமேனியை உடைய சிற்றம்பல நாதருக்கு என் மகள் கை வளைகளைக் கொடுக்க அமையும் (நேரும்). ஐயனுடைய தேர் தூரத்தில் வரும்போதே நமது கையில் உள்ள சங்கு வளைகள் கழன்று விழாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதாம்.

கட்டளைக் கலித்துறை

843. சங்கிடத் தானிடத் தான்தன
தாகச் சமைந்தொருத்தி
அங்கிடத் தாள்தில்லை அம்பலக்
கூத்தற்(கு) அவிர்சடைமேல்
கொங்கிடத் தார்மலர்க் கொன்றையென்
றாயெங்கை நீயுமொரு
பங்கிடத் தான்வல்லை யேல்இல்லை
யேல்உன் பசப்பொழியே.

தெளிவுரை : சங்கை இடப்பக்கத்திலுடைய திருமாலின் இடமாகிய இடப்பாகத்தில் உமையாளைக் கொண்ட தில்லை அம்பலக் கூத்தன், பிரகாசமான சடையின் மேல் கொன்ற மலர் உள்ளது என்றாய். அங்கு கங்கையையும் வைத்துள்ளாய் அல்லவா? உன் பசப்பு மொழிகளை விட்டுவிடு.

எழுசீர் ஆசிரிய விருத்தம்

844. ஒழிந்த(து) எங்களுற(வு) என்கொ லோஎரியில்
ஒன்ன லார்கள்புரம் முன்னொர்நாள்
விழுந்தெ ரிந்துதுக ளாக வென்றிசெய்த
வில்லி தில்லைநகர் போலியார்
சுழிந்த உந்தியில் அழுந்தி மேகலை
தொடக்க நின்றவர் நடக்கநொந்(து)
அழிந்த சிந்தையினும் வந்த தாகிலுமொர்
சிந்தை யாயொழிவ(து) அல்லவே.

தெளிவுரை : எங்கள் உறவு இன்றோடு ஒழிந்தது என்று சொல்லலாமோ? நெருப்பில் பகைவர்களது திரிபுரங்கள் எரிந்து சாம்பலாயின. அத்தகைய வெற்றியைப் பெற்ற வில்லியினது தில்லை நகர் போன்றவர்கள் சுழித்த உந்தியில் (தொப்புளில்) அழுந்தி மேகலையை விரும்பிச் சென்றவர் நடக்க முடியாத நிலையிலும் வந்தால் உன்னுடைய அருள் பார்வை அவர்களுக்குக் கிடைக்குமல்லவா ?

நேரிசை ஆசிரியப்பா

845. அல்லல் வாழ்க்கை வல்லிதிற் செலுத்தற்குக்
கைத்தேர் உழந்து கார்வரும் என்று
வித்து விதைத்தும் விண்பார்த்(து) இருந்தும்
கிளையுடன் தவிரப் பொருளுடன் கொண்டு
முளைமுதிர் பருவத்துப் பதியென வழங்கியும்

தெளிவுரை : துன்பம் தரும் வாழ்க்கையை முயன்று நடத்துதற்கு ஏரைச் செலுத்தித் தொழில் செய்து, மழை பெய்யுமென்று விதையை விதைத்து வானத்தைப் பார்த்திருந்தும் கிளையுடன் தவிரப் பொருளுடன் கொண்டு, முளைக்கும் காலத்தில் பதியென வழங்கியும்,

அருளா வயவர் அம்பிடை நடந்தும்
இருளுறு பவ்வத்(து) எந்திரங் கடாஅய்த்
துன்றுதிரைப் பரப்பிற் குன்றுபார்த்(து) இயங்கியும்
ஆற்றல் வேந்தர்க்குச் சோற்றுக்கடன் பூண்டும்
தாளுழந்(து) ஓடியும் வாளுழந்(து) உண்டும்

தெளிவுரை : இரக்கமற்ற போர் வீரர் போர் மேல் சென்றும், இருள் நிறைந்த கடலின்கண் கப்பலாகிய இயந்திரத்தைச் செலுத்தி திரைப் பரப்பில் குன்று பார்த்து இயங்கியும், வல்லமை பொருந்திய பெரிய அரசர்க்கு பெற்று உண்ட உணவுக்குக் கைம்மாறாகச் செய்வதற்குரிய கடமையைச் செய்ய முயற்சி செய்து போர் செய்தும்,

அறியா ஒருவனைச் செறிவந்து தெருட்டியும்
சொற்பல புனைந்தும் கற்றன கழறியும்
குடும்பப் பாசம் நெடுந்தொடர்ப் பூட்டி
ஐவர் ஐந்திடத்(து) ஈர்ப்ப நொய்தில்
பிறந்தாங்(கு) இறந்தும் இறந்தாங்கு பிறந்தும்

தெளிவுரை : முன்பின் தெரியாதவனைத் தெளிவித்தும் சொற்களைப் புனைந்துரைத்தும், படித்தவற்றைக் கூறியும், குடும்பப் பாசமாகிய நீண்ட சங்கிலியைப் பூட்டி, ஐம்பொறிகள் இழுத்த வழியில் சென்று எளிதில் பிறந்தது போலவே இறந்தும் இறந்தது போலவே மறுபடியும் பிறந்தும்,

கணத்திடைத் தோன்றிக் கணத்திடைக் கரக்கும்
கொப்புட் செய்கை ஒப்பின் மின்போல்
உலப்பில் யோனிக் கலக்கத்து மயங்கியும்
நெய்யெரி வளர்த்துப் பெய்முகிற் பெயல்தரும்
தெய்வ வேதியர் தில்லை மூதூர்

தெளிவுரை : கண்ணிமைப் பொழுதுக்குள் தோன்றியும் அதே போல் விரைந்து மறைந்தும் நீர்க்குமிழி போன்றும் மின்னல் போன்றும் அளவில்லாத பிறப்புக்களை எடுத்து அந்தக் கலக்கத்தில் மயங்கியும் வேள்வித்தழல் வளர்த்து அதனால் மழையை உண்டாக்கும் அந்தணர் வாழும் தில்லைமூதூர்.

ஆடகப் பொதுவில் நாடகம் நவிற்றும்
கடவுட் கண்ணுதல் நடம்முயன் றெடுத்த
பாதப் போதும் பாய்புலிப் பட்டும்
மீதியாத்(து) அசைத்த வெள்ளெயிற்(று) அரவும்
சேயுயர் அகலத்து ஆயிரம் குடுமி
மணிகிடந்(து) இமைக்கும் ஒருபேர் ஆரமும்

தெளிவுரை : பொன்னம்பலத்தில் நடன மாடுகின்ற பெருமானின் தூக்கிய பாதமும், புலித்தோல் ஆடையும் மேலே அணிந்துள்ள வெள்ளிய பற்களையுடைய பாம்பும் உயர்ந்த ஆயிரம் தலைகளில் மாணிக்கம் விளங்குகின்ற ஆதிசேடனாகிய மாலையும்,

அருள்பொதிந்(து) அலர்ந்த திருவாய் மலரும்
நெற்றியில் திகழ்ந்த ஒற்றை நாட்டமும்
கங்கை வழங்கும் திங்கள் வேணியும்
கண்ணிடைப் பொறித்து மனத்திடை அழுத்தியாங்கு
உள்மகிழ்ந்(து) உரைக்க உறுதவம் செய்தனள்
நான்முகன் பதத்தின் மேல்நிகழ் பதந்தான்
உறுதற்(கு) அரியதும் உண்டோ
பெறுதற்(கு) அரியதோர் பேறுபெற் றேற்கே.

தெளிவுரை : அருள் வழங்கும் உன் திருவாய் மலரும், நெற்றிக் கண்ணும் கங்கையும் பிறைச் சந்திரனும் சடை முடியும் கருதுதல் பொறித்து மனத்திடைப் பொருத்தியாங்கு மனம் களித்து உரைக்க நான் மிகுந்த தவத்தைச் செய்துள்ளேன். பிரம பதத்தைவிட மேலான பதம் இதுவல்லவா. பெறுதற்கரிய பேறு பெற்றேன் என்பதாம்.

வெண்பா

846. பெற்றோர் பிடிக்கப் பிழைத்துச் செவிலியர்கள்
சுற்றோட ஓடித் தொழாநிற்கும் - ஒற்றைக்கைம்
மாமறுகச் சீறியசிற் றம்பலத்தான் மான்தேர்போம்
கோமறுகிற் பேதை குழாம்.

தெளிவுரை : பேதைக் குழாம் (அறியாமை நிறைந்த பெண் பிள்ளைகளின் கூட்டம்) தமது பெற்றோர்கள் தடுத்து நிறுத்தியதையும் விலக்கி, செவிலித்தாயர்கள் அவர்களைச் சூழ்ந்து ஓடி வரச் சென்று தொழுகின்றார்கள். யானை மயங்கி வருந்தச் சீறிய சிற்றம்பலத்தான் குதிரை கட்டிய தேரில் போகின்ற அரச வீதியில் சென்று தொழுதார்கள் என முடிக்க.

கட்டளைக் கலித்துறை

847. பேதையெங் கேயினித் தேறியுய்
வாள்பிர மன்தனக்குத்
தாதைதன் தாதையென் றேத்தும்
பிரான்தண் புலிசைப்பிரான்
கோதையந் தாமத்தண் கொன்றை
கொடான்இன்று கொல்லஎண்ணி
ஊதையும் காரும் துளியொடும்
கூடி உலாவியே.

தெளிவுரை : கார்ப் பருவம் வந்தது கண்டு தோழி கவன்று உரைத்தல். பேதைப் பெண்ணாகிய இவள் எங்கே இனித் தேறி உய்வாள்? பிரமன் தந்தையாகிய திருமால், என் தந்தையே என்று ஏத்தும் பிரான். பெரும்பற்றப் புலியூராகிய சிதம்பரத்தில் கோயில் கொண்டிருப்பவன் கொன்றை மாலையைத் தரமாட்டான். இன்று அவளைக் கொல்ல எண்ணி வாடைக் காற்றும் மேகமும் மழையோடு கூடி வருகின்றன. ஆகையால் இவள் எப்படி மனந்தேறி இருப்பாள் என்க.

ஆசிரியச் சந்த விருத்தம்

848. உலதி சலதி வாழ்விடம்
அமரர் தொழவு ணாவென
நுகரும் ஒருவர் ஊழியின்
இறுதி ஒருவர் ஆழிய
புலவு கமழ்க ரோடிகை
உடைய புனிதர் பூசுரர்
புலிசை யலர்செய் போதணி
பொழிலின் நிழலின் வாழ்வதோர்
கலவ மயில னார்சுருள்
கரிய குழலி னார்குயில்
கருது மொழியி னார்கடை
நெடிய விழியி னார்இதழ்
இலவில் அழகி யாரிடை
கொடியின் வடிவி னார்வடி
எழுதும் அருமை யாரென(து)
இதய முழுதும் ஆள்வரே.

தெளிவுரை : தலைவன் தலைவியின் இயல்பைப் பாங்கனுக்கு உரைத்தல்.

அலைகளையுடைய கடல் வாழ்விடம், தேவர்கள் தொழ உணவென்று நுகரும் ஒப்பற்றவர். ஊழிக் காலத்தின் முடிவாகிய ஒருவர், ஆழமான புலால் நாற்றம் வீசுகின்ற தலை மாலையை உடைய புனிதர், அந்தணர்கள் புலிசையில் மலர்தலைச் செய்கின்ற போதணி நிழலின் வாழ்வதோர் தோகையை உடைய மயில் போன்றவர்கள். சுருண்ட கரிய கூந்தலை உடையவர்கள். குயில் போன்ற சொல்லை உடையவர்கள். நீண்ட கண்களை உடையவர்கள். இலவம் பூப் போன்ற இடையினை உடையவர்களைப் படமாக எழுதும் அருமையானவர் எவரோ, அவரே என் இதயம் முழுதும் ஆள்பவர் ஆவர். அவர்தாம் என் காதலின் உருவை எழுத வல்லவர் என்றபடி.

இணைக்குறள் ஆசிரியப்பா

849. ஆளெனப் புதிதின்வந்(து) அடைந்திலம் அத்தநின்
தாளின் ஏவல் தலையின் இயற்றி
வழிவழி வந்த மரபினம் மொழிவதுன்
ஐந்தெழுத்(து) அவைஎம் சிந்தையிற் கிடத்தி
நனவே போல நாடொறும் பழகிக்

தெளிவுரை : புதிதாக அடிமையென்று வந்தேம் இலம். முதல்வ; தந்தையே! உன் பாதங்களின் ஏவல் வழி நின்று கால் வழியாக வந்தவர்கள். உச்சரிப்பதோ உன் ஐந்தெழுத்து. அவை எம் சிந்தையில் கிடத்தி விழிப்பே போல நாள்தோறும் பழகி,

கனவிலும் நவிற்றும் காதலேம் வினைகெடக்
கேட்பது நின்பெருங் கீர்த்தி மீட்பது
நின்னெறி அல்லாப் புன்னெறி படர்ந்த
மதியில் நெஞ்சத்தை வரைந்து நிதியென
அருத்திசெய் திடுவது உருத்திர சாதனம்

தெளிவுரை : கனவு நிலையிலும் சொல்லுகின்ற பிரியம் உடையோம். இருவினை கெடக் கேட்பது உன்னுடைய பெருங் கீர்த்தியாகும். மீட்பது யாதோ எனில், உன்னுடைய சைவ நெறி அல்லாத புன்னெறி படர்ந்த என் மதியில்லாத நெஞ்சத்தை வரைந்து நிதியென வேட்கை உண்டாக்குவது உருத்திர சாதனமாகிய உருத்திராட்சத்தை.

காலையும் மாலையும் கால்பெயர்த் திடுவதுன்
ஆலயம் வலம்வரு தற்கே சால்பினில்
கைகொடு குயிற்றுவ(து) ஐய நின்னது
கோயில் பல்பிணி குறித்தே ஓயாது

தெளிவுரை : காலையும் மாலையும் நான் நடந்து செல்வது உன் ஆலயத்தை வலம் வருவதற்கே. நிறைவோடு நான் கைகளைக் கொண்டு செய்வது, ஐய, உன் கோயில் திருப்பணிகள் குறித்தேயாகும்.

உருகி நின்னினைந்(து) அருவி சோரக்
கண்ணிற் காண்பதெவ் வுலகினும் காண்பனவெல்லாம்
நீயேயாகி நின்றதோர் நிலையே நாயேன்
தலைகொடு சார்வதுன் சரண்வழி அல்லால்
அலைகடல் பிறழினும் அடாதே அதனால்
பொய்த்தவ வேடர் கைத்தகப் படுத்தற்கு

தெளிவுரை : ஓயாமல் உருகி உன்னை நினைந்து அருவிசோரக் கண்ணிற் காண்பது எல்லா இடங்களிலும் காண்பன எல்லாம் நீயேயாகி நின்றதோர் நிலையே. நாய் போன்றவனாகிய நான் தலையைக் கொண்டு சார்வது உன் பாதங்களை அல்லாமல் அலைகடல் பிறழ்ந்தாலும் வேறு எதன் மீதும் பொருந்தாது. அதனால் பொய்த்தவ வேடர் கைத்து அகப்படுத்தற்கு

வஞ்சச் சொல்லின் வார்வலை போக்கிச்
சமயப் படுகுழி சமைத்தாங்(கு) அமைவயின்
மானுட மாக்களை வலியப் புகுத்தும்
ஆனா விரதத்(து) அகப்படுத்(து) ஆழ்ந்து
வளைவுணர்(வு) எனக்கு வருமோ உளர்தரு
நுரையும் திரையும் நொப்புறு கொட்பும்
வரையில் சீகர வாரியும் குரைகுடல்
பெருத்தும் சிறுத்தும் பிறங்குவ தோன்றி
எண்ணில வாகி இருங்கடல் அடங்கும்
தன்மை போலச் சராசரம் அனைத்தும்
நின்னிடைத் தோன்றி நின்னிடை அடங்கும்நீ

தெளிவுரை : வஞ்சகம் பேசிய சமய வாதிகளின் போக்கில் அகப்பட்டேன் என்கிறார். இவர்கள் சூழ்ச்சியினால் வெளியேற முடியாமல் தவித்தேன். நுரை, திரை, தடைச் சுழற்சி, துளிகளின் வரவு, ஒலியுடைய குடல் பெருத்தும், விளங்கித் தோன்றி, இவ்வாறு இயங்கும் தன்மைபோல சராசரம் அனைத்தும் உன்னிடத்தில் தோன்றி உன்னிடத்திலேயே அடங்கும்.

ஒன்றினும் தோன்றாய் ஒன்றினும் அடங்காய்
வானோர்க்(கு) அரியாய் மறைகளுக்(கு) எட்டாய்
நான்மறை யாளர் நடுவுபுக்(கு) அடங்கிச்
செம்பொன் தில்லை மூதூர்
அம்பலத்(து) ஆடும் உம்பர் நாயகனே.

தெளிவுரை : என்றாலும் நீ ஒன்றிலும் தோன்றாய், ஒன்றிலும் அடங்காய். வானவர்களாலும் அறியப் படாதவன் நீ, மறைகளும் தேடிக் கண்டில. வேதியர்களின் நடுவில் புகுந்து, செம்பொன் தில்லை மூதூர் அம்பலத்துள் ஆடுகின்றவன் நீயே. நீ தேவர் நாயகன் !

வெண்பா

850. நாயனைய என்னைப் பொருட்படுத்தி நன்களித்துத்
தாயனைய னாய்அருளும் தம்பிரான் - தூயவரை
மென்துழாய் மாலொடயன் தேட வியன்தில்லை
மன்றுளே ஆடும் மணி.

தெளிவுரை : நாய் போல் கீழ்ப்பட்ட என்னை ஒரு பொருளாகக் கருதி நன்கு ஆதரித்து, தாய்போல் காப்பாற்றும் கடவுள், பரிசுத்தமான மணமுள்ள துழாய் மாலை அணிந்த திருமாலும் பிரமனும் தேட, பெருமை பொருந்திய தில்லை மன்றுள் மணி போன்றவன் நடனமாடுகின்றான்.

கட்டளைக் கலித்துறை

851. மணிவாய் முகிழ்ப்பத் திருமுகம்
வேர்ப்பஅம் மன்றுக்கெல்லாம்
அணியாய் அருள்நடம் ஆடும்
பிரானை அடைந்துருகிப்
பணியாய் புலன்வழி போம்நெஞ்ச
மேயினிப் பையப்பையப்
பிணியாய்க் கடைவழி சாதியெல்
லோரும் பிணம்என்னவே.

தெளிவுரை : அழகிய வாய் குவிய, திருமுகம் வேர்ப்ப அந்த அம்பலத்துக்கு எல்லாம் ஆபரணமாய் அருள் நடம் புரிகின்ற எம் பெருமானைப் போய்ச் சேர்ந்து உருகிப் பணியாமல் புலன்கள் வழியாகச் செல்கின்ற நெஞ்சமே ! இனி மெல்ல மெல்ல நோய் வாய்ப்பட்டு கடைசியில் சாவாய். பின்னர் ஊரார் உனக்குப் பிணம் என்னும் பெயர் வைப்பார்கள்.

ஆகவே உயிர் உள்ள போதே இறைவனை வழிபட்டு நற்கதி பெறுவாயாக என்பதாம்.

ஆசிரிய விருத்தம்

852. என்னாம் இனிமட வரலாய் செய்குவ(து)
இனமாய் வண்டுகள் மலர்கிண்டித்
தென்னா எனமுரல் பொழில்சூழ் தில்லையுள்
அரனார் திருமுடி அணிதாமம்
தன்னால் அல்லது தீரா(து) என்னிடர்
தகையா(து) உயிர்கரு முகிலேறி
மின்னா நின்றது துளிவா டையும்வர
வீசா நின்றது பேசாயே.

தெளிவுரை : கார்ப் பருவம் கண்டு கலங்கிய தலைவிக்குச் சொல்லியது.

இளம்பெண்ணே ! இனி எப்படி முடியும்? என்ன செய்வது? கூட்டமாக வண்டுகள் மலர்களைத் திறந்து தென்னாட்டவனே ! என ஒலிக்கின்ற சோலைகள் சூழ்ந்த சிதம்பரத்தில் சிவபெருமானுடைய திருமுடியிலுள்ள அழகிய மாலையால் அல்லது என் இடர் தீராது என்னுயிர் நிலைத்திராது கரிய மேகங்கள் மேலேறி மின்னுகின்றன. மழையும் வரப் போகிறது. பேசாமல் இருக்கிறாயே !

இணைக்குறள் ஆசிரியப்பா

853. பேசு வாழி பேசு வாழி
ஆசையொடு மயங்கி மாசுறு மனமே
பேசு வாழி பேசு வாழி
கண்டன மறையும் உண்டன மலமாம்
பூசின மாசாம் புணர்ந்தன பிரியும்

தெளிவுரை : பேசுவாயாக ! பேசுவாயாக ! ஆசையோடு மயங்கி மாசுபடும் மனமே ! பேசுவாயாக. கண்டன மறையும். உண்ட உணவு பின்னர் மலமாகிவிடும. பூசிய மணப் பொருள்கள் மாசுபட்டுப் போகும். ஒன்று சேர்ந்திருந்தவை பிரிந்து போகும்.

நிறைந்தன குறையும் உயர்ந்தன பணியும்
பிறந்தன இறக்கும் பெரியன சிறுக்கும்
ஒன்றொன்(று) ஒருவழி நில்லா அன்றியும்
செல்வமொடு பிறந்தோர் தேசொடு திகழ்ந்தோர்
கல்வியிற் சிறந்தோர் கடுந்திறல் மிகுந்தோர்

தெளிவுரை : நிறைந்திருந்தவை குறைந்து போகும். உயர்ந்திருந்தவை தாழ்ந்து போகும். பிறந்தவை அனைத்தும் இறந்து போகும். பெரியவை சிறியவையாகும். எதுவும் நிலைத்திரா. அதன்றியும் செல்வத்தில் பிறந்தவரும் பெருமையோடு வாழ்ந்தவரும் கல்வியிற் சிறந்தவர்களும் திறமை மிக்கவர்களும்

கொடையிற் பொலிந்தோர் படையிற் பயின்றோர்
குலத்தின் உயர்ந்தோர் நலத்தினின் வந்தோர்
எனையர்எங் குலத்தினர் இறந்தோர் ஏனையவர்
பேரும் நின்றில போலும் தேரின்
நீயும்அஃ(து) அறிதி யன்றே மாயப்

தெளிவுரை : கொடையாளிகளும், போர் வீரர்களும், உயர் குடியில் பிறந்தோரும் நலமிக்கவர்களும் எத்தன்மையராய் இருந்தாலும் எந்தக் குலத்தில் பிறந்தோராயினும் இறந்தோரே. ஏனையவர் பேரும் நின்றில போலும். ஆராயுமிடத்து நீயும் அதை அறிவாயாக. இதுதான் உண்மை நிலை.

பேய்த்தேர் போன்றும் நீப்பரும் உறக்கத்துக்
கனவே போன்றும் நனவுப்பெயர் பெற்ற
மாய வாழ்க்கையை மதித்துக் காயத்தைக்
கல்லினும் வலிதாக் கருதிப் பொல்லாத்
தன்மையர் இழிவு சார்ந்தனை நீயும்

தெளிவுரை : மாயக் கானல் நீர் போலவும், தூக்கத்தின்கண் தோன்றும் கனவு போலவும் நனவு என்று சொல்லப்படும் மாய வாழ்க்கையைப் பெரிதாக நம்பி, இந்த உடம்பைக் கல்லைக் காட்டிலும் வலிமை உடையதென்று கருதும் பொல்லாத் தன்மையர் இழிவை நீயும் சார்ந்தாய்.

நன்மையில் திரிந்த புன்மையை யாதலின்
அழுக்குடைப் புலன்வழி இழுக்கத்தின் ஒழுகி
வளைவாய்த் தூண்டிலின் உள்ளிரை விழுங்கும்
பன்மீன் போலவும்
மின்னுபு விளக்கத்து விட்டில் போலவும்

தெளிவுரை : நன்மையில் திரிந்த புன்மையை ஆதலின் அழுக்குடை புலன்வழி இழுக்கத்தின் ஒழுகி, வளைந்த வாயினையுடைய தூண்டிலில் கோக்கப்பட்ட இரையை விழுங்கும் சுவையால் கெடும் பல மீன்களைப் போலவும், மின்னுகின்ற வெளிச்சத்தைக் கண்டு காட்சியால் கெடும் விட்டிலைப் போலவும்

ஆசையாம் பரிசத் தியானை போலவும்
ஓசையின் விளிந்த புள்ளுப் போலவும்
வீசிய மணத்தின் வண்டு போலவும்
உறுவ(து) உணராச் செறுவுழிச் சேர்ந்தனை

தெளிவுரை : பரிசத்தாற் கெடும் யானையைப் போலவும், ஓசையாகிய கேள்வியாற் கெடும் அசுணத்தைப் போலவும், மோத்தலால் கெடும் (வீசிய மணம்) வண்டைப் போலவும் ஐம்பொறிகளின் வசப்பட்டுத் துன்புற்றாய்.

நுண்ணூல் நூற்றுத் தன்னகப் படுக்கும்
அறிவில் கீடத்து நுந்துழி போல
ஆசைச் சங்கிலிப் பாசத் தொடர்ப்பட்டு
இடர்கெழு மனத்தினோ(டு) இயற்றுவ(து) அறியாது
குடர்கெழு சிறையறைக் குறங்குபு கிடத்தி

தெளிவுரை : மெல்லிய நூலை நூற்று அதனுள் அகப்பட்டுக் கொள்ளும் அறிவில்லாத சிலந்தி வருந்துவது போல ஆசைச் சங்கிலிப் பாசத்தில் சிக்கி, இடர் நிறைந்த மனத்தோடு செய்வது அறியாது குடலோடு பொருந்திய சிறையின் அறைபோன்ற உடம்பினுள் வளைந்து கிடக்கிறாய்.

கறவை நினைத்த கன்றென இரங்கி
மறவா மனத்து மாசறும் அடியார்க்(கு)
அருள்சுரந்(து) அளிக்கும் அற்புதக் கூத்தனை
மறையவர் தில்லை மன்றுள் ஆடும்
இறையவன் என்கிலை என்நினைந் தனையே.

தெளிவுரை : பசு நினைந்த கன்றென இரங்கி, மறவா மனத்து மாசறு அடியார்க்கு, அருள் சுரந்து அளிக்கும் நடராஜப் பெருமானை, வேதியர் தில்லை மன்றுள் ஆடும் இறைவனைத் துதிக்கவில்லையே. மனமே, என்ன நினைத்தாய்.

வெண்பா

854. நினையார் மெலியார் நிறையழியார் வாளாப்
புனைவார்க்குக் கொன்றை பொதுவோ - அனைவீரும்
மெச்சியே காண வியன்தில்லை யான்அருளென்
பிச்சியே நாளைப் பெறும்.

தெளிவுரை : இறைவனை நினையாதவர்களும், அவனை நினைந்து மெலியாதவர்களுக்கும், நிறையழியாத வருக்கும், வீணாக அணிந்து கொள்ள விரும்புவார்களுக்கும் கொன்றை மாலை கிடைக்குமோ? எல்லாரும் புகழ்ந்து காண, பெருமையுடைய தில்லையான் அருளை நாளைய தினம் பிச்சியே பெறுவாள்.

கட்டளைக் கலித்துறை

855. பெறுகின்ற எண்ணிலி தாயரும்
பேறுறும் யானுமென்னை
உறுகின்ற துன்பங்கள் ஆயிர
கோடியும் ஓய்வொடுஞ்சென்(று)
இறுகின்ற நாள்களும் ஆகிக்
கிடந்த இடுக்கணெல்லாம்
அறுகின் றனதில்லை யாளுடை
யான்செம்பொன் அம்பலத்தே.

தெளிவுரை : பெறுகின்ற எண்ணற்ற தாய்மாரும், பிறவி தோறும் அத் தாய்மார்களால் பெறுதலையுடைய அடியேனும் அடைகின்ற துன்பங்கள் ஆயிரம் கோடியும் ஓய்வொடும் சென்று முடிகின்ற நாள்களும் ஆகி, எஞ்சியிருந்த இடையூறுகளும் ஒழிகின்றன. எங்கு எனில், தில்லையாளுடையான் செம்பொன் அம்பலத்தில் என்றபடி.

எண்சீர் ஆசிரிய விருத்தம்

856. அம்பலவர் அங்கணர் அடைந்தவர் தமக்கே
அன்புடையர் என்னுமிதென் ஆனையை யுரித்துக்
கம்பலமு வந்தருளு வீர்மதனன் வேவக்
கண்டருளு வீர்பெரிய காதலறி யாதே
வம்பலர் நிறைந்துவசை பேசவொரு மாடே
வாடையுயிர் ஈரமணி மாமையும் இழந்தென்
கொம்பல மருந்தகைமை கண்டுதக வின்றிக்
கொன்றையரு ளீர்கொடியீர் என்றருளு வீரே.

இது செவிலி கூற்று.

தெளிவுரை : பொன்னம்பலத்தில் கோயில் கொண்டிருப்பவர்; அழகிய கண்களையுடையவர்; தம்மை அடைக்கலமாக வந்து சேர்ந்தவர்களுக்கே அன்புடையவர்; தன்னைக் கொல்ல வந்த யானையை உரித்து அதன் தோலைப் போர்வையாகப் போர்த்துக் கொண்டவர். அதை உவந்து அளித்திடுவீர். மன்மதன் அழியக் கண்டருளுவீர். பெரிய காதலை அறியாமல் ஊரார் பழி தூற்ற வசை பேச ஒரு பக்கம் வாடைக் காற்று உயிரை அறுக்க, அழகிய நிறத்தை இழந்து என் மகள் கலங்குகின்ற தன்மையைக் கண்டு தகவின்றி கொன்றை அருளீர் ! கொடியீர் என்று அருளுவீரே.

இணைக்குறள் ஆசிரியப்பா

857. அருளு வாழி அருளு வாழி
புரிசடைக் கடவுள் அருளு வாழி
தோன்றுழித் தோன்றி நிலைதவக் கறங்கும்
புற்புதச் செவ்வியின் மக்கள் யாக்கைக்கு
நினைப்பினுங் கடிதே இளமை நீக்கம்

தெளிவுரை : அருளுவாயாக ! அருளுவாயாக ! முறுக்கிய சடையையுடைய கடவுளே ! அருளுவாயாக. தோன்றி அழியும் நீர்க்குமிழியின் இயல்பைப்போல மக்கள் யாக்கைக்கு இளமை நீக்கம் நினைப்பதைவிட வேகமாகச் செல்வது.

அதனினுங் கடிதே மூப்பின் தொடர்ச்சி
அதனினுங் கடிதே கதுமென மரணம்
வாணாள் பருகி உடம்பை வறிதாக்கி
நாணாள் பயின்ற நல்காக் கூற்றம்
இனைய தன்மைய(து) இதுவே இதனை

தெளிவுரை : மூப்பின் தொடர்ச்சி அதைவிட வேகமாகச் செல்லக்கூடியது. மரணம் அதைவிட வேகமாகச் செல்வது. வாழ்நாளைக் குடித்து, உடம்பைப் பயனின்மையாக்கி பல நாள் பயின்ற அருள் செய்யாத யமனின் தன்மை இதுவாகும்.

எனதெனக் கருதி இதற்கென்று தொடங்கிச்
செய்தன சிலவே செய்வன சிலவே
செய்யா நிற்பன சிலவே அவற்றிடை
நன்றென்ப சிலவே தீதென்ப சிலவே
ஒன்றினும் படாதன சிலவே யென்றிவை

தெளிவுரை : இவ்வுடலை எனதெனக் கருதி, இதற்கென்று தொடங்கிச் செய்தன சிலவே. செய்வன சிலவே. செய்கின்றனவும் சிலவே. அவற்றுள் நல்லன சில; தீயன சில; இவை இரண்டிலும் சேராதன சில.

கணத்திடை நினைந்து களிப்பவும் கலுழ்பவும்
கணக்கில் கோடித் தொகுதி அவைதாம்
ஒன்றொன்(று) உணர்வுழி வருமோ அனைத்தும்
ஒன்றா உணர்வுழி வருமோ அனைத்தும்
தெளிவுழித் தேறல் செல்லேம் அளிய

தெளிவுரை : என்று இவை ஒரு கணம் நினைந்து மகிழ்தலும் அழுதலும் எல்லையற்றன. அவைதாம் ஒவ்வொன்று உணர்வுழி வருமோ, அனைத்தும் சேர்த்துப் பார்க்கும்போது வருமோ என்பதை அறுதியிட்டுச் சொல்ல இயலவில்லை.

மனத்தின் செய்கை மற்றிதுவே நீயே
அரியை சாலவெம் பெரும தெரிவுறில்
உண்டாய்த் தோன்றுவ யாவையும் நீயே
கண்டனை அவைநினைக் காணா அதுதான்
நின்வயின் மறைத்தோ யல்லை யுன்னை

தெளிவுரை : மனத்தின் செய்கை இவ்வளவு தான், நீயே மிகவும் அருமையுடையவன். எம் பெருமானே ! ஆராயுமிடத்து உலகில் தோன்றியவை அனைத்தும் நீயே. அவற்றை நீ கண்டனை. ஆனால் அனை உன்னைக் காணவில்லை. அவை உன்னிடத்தில் மறைந்தனவோ.

மாயாய் மன்னினை நீயே வாழி
மன்னியும் சிறுமையிற் கரந்தோய் அல்லை
பெருமையிற் பெரியோய் பெயர்த்தும் நீயே
பெருகியும் சேணிடை நின்றோய் அல்லை
தேர்வோர்க்குத் தம்மினும் அணியை நீயே

தெளிவுரை : நீ மாயமாய் நிலைத்திருக்கின்றாய். நீ வாழ்வாயாக. நிலை பெற்றிருந்தாலும் சிறுமையில் மறையவில்லை. பெருமையில் பெரியோய் மறுபடியும் நீயேதான். பெருகினாலும் நீ தூரத்தில் இல்லை. என்றாலும் தெளிந்தவர்களுக்கு நீ அருகில் உள்ளாய்.

நண்ணியும் இடையொன்றின் மறைந்தோ யல்லை
இடையிட்டு நின்னை மறைப்பதும் இல்லை
மறைப்பினும் அதுவும்
நீயே யாகி நின்றதோர் நிலையே அஃதான்று
நினைப்புருங் காட்சி எம்நிலை யிதுவே

தெளிவுரை : நெருங்கியிருந்தும் இடையில் மறைந்திருக்கவில்லை. இடையில் உன்னை மறைத்துக் கொள்வதும் இல்லை. அப்படி மறைந்தாலும் உனக்கென்று ஒரு நிலையுள்ளது. அதுவல்லாமல் உன்னை நினைப்பதற்கு உனக்கென்று தனி நிலை உள்ளது.

நினைப்புறுங் காட்சி எம்நிலை யதுவே
இனிநனி இரப்பதொன்(று) உடையம் மனமருண்டு
புன்மையின் நினைத்துப் புலன்வழி படரினும்
நின்வயின் நினைந்தேம் ஆகுதல் நின்வயின்
நினைக்குமா நினைக்கப் பெறுதல் அனைத்தொன்றும்
நீயே அருளல் வேண்டும் வேய்முதிர்

தெளிவுரை : ஆராயுங்கால், எம் நிலை இதுவே. இனி உன்னிடத்தில் யாசிப்பது ஒன்று உளது. அது யாதெனின், மனம் மருட்சியடைந்து அற்பமானதை நினைத்துப் புலன்கள் வழி மனம் சென்றால் அதைத் தடுத்து நிறுத்தி நின்வழி நினைக்குமாறு அருளல் வேண்டும்.

கயிலை புல்லென எறிவிசும்பு வறிதாக
இம்பர் உய்ய அம்பலம் பொலியத்
திருவளர் தில்லை மூதூர்
அருநடங் குயிற்றும் ஆதிவா னவனே.

தெளிவுரை : மூங்கில் முற்றிய கயிலை புல்லென, எறிவிசும்பு வறிதாக இவ்வுலக மக்கள் நற்கதி பெறுமாறு பொன்னம்பலம் விளக்கம் உற, திருவளர் தில்லை மூதூரில் அருமையான திருநடனம் செய்கின்ற ஆதிவானவனே.

வெண்பா

858. வானோர் பணிய மணியா சனத்திருக்கும்
ஆனாத செல்வத்(து) அரசன்றே - மால்நாகம்
பந்திப்பார் நின்றாடும் பைம்பொன்னின் அம்பலத்தே
வந்திப்பார் வேண்டாத வாழ்வு.

தெளிவுரை : இந்திர பதவியையும் சிவனடியார் வேண்டார் என்றபடி.

தேவர்கள் பணிய, உயர்ந்த ஆசனத்திலிருக்கும் குறைபாடு இல்லாத செல்வத்து அரசை, பெரிய நாகப் பாம்பை ஆபரணமாகக் கட்டிக் கொண்டவர் நின்று ஆடுகின்ற பொன்னம்பலத்தை வழிபடுகின்றவர் (மேற் சொன்ன இந்திர பதவியை) விரும்ப மாட்டார்கள் என்பதாம்.

கட்டளைக் கலித்துறை

859. வாழ்வாக வும்தங்கள் வைப்பாக
வும்மறை யோர்வணங்க
ஆள்வாய் திருத்தில்லை அம்பலத்
தாய்உன்னை அன்றியொன்றைத்
தாழ்வார் அறியாச் சடுலநஞ்
சுண்டிலை யாகிலன்றே
மாள்வார் சிலரையன் றோதெய்வ
மாக வணங்குவதே.

தெளிவுரை : வாழ்வாகவும் தங்கள் சேம நிதியாகவும் தில்லைவாழ் அந்தணர்கள் வணங்க, ஆட்சி செய்யும் திருத்தில்லை அம்பலத்தாய் ! உன்னை அல்லாமல் வேறொருவரை வணங்குபவர்கள், நடுக்கத்தைத் தரும் ஆலகால விடத்தை இவர் உண்ணாதிருந்தால் அன்றே மாண்டிருப்பர். அத்தகைய சிறு தெய்வங்களையா வணங்கப் போகிறீர்கள்?

ஆசிரிய விருத்தம்

860. வணங்குமிடை யீர்வறிது வல்லியிடை யாள்மேல்
மாரசர மாரிபொழி யப்பெறு மனத்தோ(டு)
உணங்கியிவள் தானுமெலி யப்பெறும் இடர்க்கே
ஊதையெரி தூவியுல வப்பெறு மடுத்தே
பிணங்கியர வோடுசடை ஆடநட மாடும்
பித்தரென வும்இதயம் இத்தனையும் ஓரீர்
அணங்குவெறி யாடுமறி யாடுமது வீரும்
மையலையும் அல்லலையும் அல்லதறி யீரே.

தெளிவுரை : துவளும் இடையினை உடையீர் ! வீணாகக் கொடியைப் போன்ற தலைவியின்மேல் காமன் அம்பு மாரி பொழியவும் மனத்தோடு வருந்தி இவள் மெலிகின்றாள். அதுவும் அன்றிக் குளிர் காற்று தீயைப் போல் துன்புறுத்துகிறது. இது சடை முடியோடு ஆட நடமாடும் பித்தர் பொருட்டு என்பதை நீங்கள் அறியாமல் தெய்வத்தை நினைத்து வெறியாடுவதையும் ஆட்டை வெட்டுவதையும் செய்கின்றீர்கள். உண்மை நிலையை நீங்கள் அறியவில்லையே என்பதாம். இடையீர் என்பது நற்றாய் முதலியோரை.

நேரிசை ஆசிரியப்பா

861. ஈரவே ரித்தார் வழங்கு சடிலத்துக்
குதிகொள் கங்கை மதியின்மீ(து) அசைய
வண்டியங்கு வரைப்பின் எண்தோள் செல்வ
ஒருபால் தோடும் ஒருபால் குழையும்
இருபாற் பட்ட மேனி எந்தை

தெளிவுரை : தேன் நிறைந்த மாலை சூடிய சடைமுடியுள் குடிக் கொண்டிருக்கும் கங்கை சந்திரன் மீது அசைய, வண்டு மொய்க்கின்ற எல்லையின் எட்டுத் தோள்களை உடைய செல்வனே ! ஒரு காதில் தோடும் மற்றொரு காதில் குழையும் என்று இருபாற்பட்ட திருமேனி கொண்ட எந்தை.

ஒல்லொலிப் பழனத் தில்லை மூதூர்
ஆடகப் பொதுவில் நாடகம் நவிற்றும்
இமையா நாட்டத்(து) ஒருபெருங் கடவுள்
வானவர் வணங்கும் தாதை யானே
மதுமழை பொழியும் புதுமந் தாரத்துத்

தெளிவுரை : ஒலியுள்ள வயல்களை உடைய சிதம்பரம் என்ற பழைமையான ஊரில் உள்ள பொன்னம்பலத்தில் நடனமாடும் இமைக்காத கண்ணை உடைய ஒப்பற்ற கடவுள், தேவர்கள் வணங்கும் தந்தை போன்றவனே. தேன் மழை பொழியும் மந்தார மரத்து,

தேனியங்(கு) ஒருசிறைக் கானகத்(து) இயற்றிய
தெய்வ மண்டபத்(து) ஐவகை அமளிச்
சிங்கம் சுமப்ப ஏறி மங்கையர்
இமையா நாட்டத்(து) அமையா நோக்கத்
தம்மார்பு பருகச் செம்மாந் திருக்கும்

தெளிவுரை : வண்டுகள் மொய்க்கின்ற கானகத்தில் அமைந்த தெய்வ மண்டபத்தில் ஐவகை ஆசனத்தைச் சிங்கம் தாங்க ஏறி, மங்கையரது மார்பைத் தேவர்கள் கண்டு களிக்க அமர்ந்திருக்கும்.

ஆனாச் செல்வத்து வானோர் இன்பம்
அதுவே எய்தினும் எய்துக கதுமெனத்
தெறுசொ லாளர் உறுசினந் திருகி
எற்றியும் ஈர்த்தும் குற்றம் கொளீஇ
ஈர்ந்தும் போழ்ந்தும் எற்றுபு குடைந்தும்

தெளிவுரை : குறையாத செல்வம் படைத்த தேவர்கள் அனுபவிக்கும் இன்பம் அவ்வளவே. என்றாலும் அவர்கள் அனுபவிக்க இருக்கும் துன்பங்கள் அளவில. துன்பந்தருபவர் கோபங் கொண்டு தாக்கியும், இழுத்தும், குற்றங்களைக் கூறிப் போர் தொடுத்தும்,

வார்ந்தும் குறைந்தும் மதநாய்க்(கு) ஈந்தும்
செக்குரல் பெய்தும் தீநீர் வாக்கியும்
புழுக்குடை அழுவத்து அழுக்கியல் சேற்றுப்
பன்னெடுங் காலம் அழுத்தி இன்னா
வரையில் தண்டத்து மாறாக் கடுந்துயர்

தெளிவுரை : இவ்வாறு பல துன்பங்களைச் செய்தும் அதாவது (மத நாய்க்கு ஈந்தும், செக்கில் இட்டு ஆட்டியும், வெந்நீரில் போட்டும், நரகத்தில் சேர்த்தும், சேற்றில் அழுத்தியும் என்று பல திறத்தன) தண்டித்து, மாறாக் கடுந்துயர் விளைவிப்பர்.

நிரயஞ் சேரினும் சேர்க உரையிடை
ஏனோர் என்னை ஆனாது விரும்பி
நல்லன் எனினும் என்க அவரே
அல்லன் எனினும் என்க நில்லாத்
திருவொடு திளைத்துப் பெருவளஞ் சிதையாது

தெளிவுரை : இவ்வாறு பல துன்பங்களை அடைந்தாலும் அடைக. சொல்லளவில் என்னை மிகவும் விரும்பி நல்லவன் என்று சொன்னாலும் சொல்லட்டும்; அவரே என்னை நல்லவன் அல்லன் என்று சொன்னாலும் சொல்லட்டும். நான் என் கொள்கையிலிருந்து மாறாமல் இருப்பேன்.

இன்பத்(து) அழுந்தினும் அழுந்துக அல்லாத்
துன்பந் துதையினும் துதைக முன்பில்
இளைமையொடு பழகிக் கழிமூப்புக் குறுகாது
என்றும் இருக்கினும் இருக்க அன்றி
இன்றே இறக்கினும் இறக்க ஒன்றினும்
வேண்டலும் இலனே வெறுத்தலும் இலனே

தெளிவுரை : அதனால் நான் இன்பத்தைப் பெற்றாலும் துன்பத்தில் அழுந்தினாலும் ஒன்றே. முன்பு போல இளமை, மூப்பு அடையாமல் இருப்பினும் இருக்கட்டும் அல்லது இன்றே உயிர் போனாலும் போகட்டும்.

ஆண்டகைக் குரிசில்நின் அடியரொடும் குழுமித்
தெய்வக் கூத்துநின் செய்ய பாதமும்
அடையவும் அணுகவும் பெற்ற
கிடையாச் செல்வம் கிடைத்த லானே.

தெளிவுரை : இனிமேல் நான் எதையும் உன்னிடம் விரும்பிக் கேட்கப் போவதில்லை; வெறுக்கப் போவதும் இல்லை. உன்னுடைய அடியாரொடும் குழுமி, தெய்வக் கூத்தாடும் உன்னுடைய செம்மையான பாதங்களை அடையவும் அணுகவும் பெற்ற இணையற்ற செல்வம் எனக்குக் கிடைத்துவிட்டது.

வெண்பா

862. ஆனேறே போந்தால் அழிவுண்டே அன்புடைய
நானேதான் வாழ்ந்திடினும் நன்றன்றே - வானோங்கு
வாமாண் பொழில்தில்லை மன்றைப் பொலிவித்த
கோமானை இத்தெருவே கொண்டு.

தெளிவுரை : கோமானை இந்தத் தெரு வழியே கொண்டு வந்தால் ஏதாவது கஷ்டம் உண்டோ?

வானளவு புகழ் படைத்த பொன்னம்பலத்தில் எழுந்தருளியிருக்கும் கோமானை இத் தெரு வழியே கொண்டு வந்தால் காளையே! உனக்கு ஏதாவது கஷ்டம் உண்டோ? அன்புடைய நான் அவனைக் கண்டு நல்வாழ்வு பெற்றால் உனக்கும் நல்லதுதானே !

கட்டளைக் கலித்துறை

863. கொண்டல்வண் ணத்தவன் நான்முகன்
இந்திரன் கோமகுடத்
தண்டர்மிண் டித்தொழும் அம்பலக்
கூத்தனுக்(கு) அன்புசெய்யா
மிண்டர்மிண் டித்திரி வாரெனக்(கு)
என்னினி நானவன்தன்
தொண்டர்தொண் டர்க்குத் தொழும்பாய்த்
திரியத் தொடங்கினனே.

தெளிவுரை : இறைவனுக்கு அன்பு செய்யாதவர்கள் துன்புறுவார்கள். அவனுடைய தொண்டருக்குத் தொண்டனாக உள்ள எனக்கு என்ன பயம்?

நீலமேக சாமள வண்ணனாகிய திருமாலும் நான்முகனும், மிகுந்த செல்வமுள்ள இந்திரனும், முடி சூடிய தேவர்களும் நெருங்கி வந்து தொழுகின்ற அம்பலக் கூத்தனுக்கு அன்பு செய்யாத செருக்குக் கொண்டவர்கள் செருக்கோடு திரிவார்கள். ஆனால் நான் இனி செய்யப் போவது யாதெனில், அடியாரின் அடியார்களுக்கு அடிமைத் தொண்டு புரிபவனாகத் திரியத் தொடங்கிவிட்டேன்.

ஆசிரியச் சந்த விருத்தம்

864. தொடர நரைத்தங்க முன்புள வாயின
தொழில்கள் மறுத்தொன்றும் ஒன்றி யிடாதொரு
சுளிவு தலைக்கொண்டு புன்புலை வாரிகள்
துளையொழு கக்கண்டு சிந்தனை ஓய்வொடு
நடைகெட முற்கொண்ட பெண்டிர் பொறாவொரு
நடலை நமக்கென்று வந்தன பேசிட
நலியிரு மற்(கு)அஞ்சி உண்டி வேறாவிழு
நரக உடற்கன்பு கொண்டலை வேன்இனி
மிடலொடி யப்பண்டி லங்கையர் கோனொரு
விரலின் அமுக்குண்டு பண்பல பாடிய
விரகு செவிக்கொண்டு முன்புள தாகிய
வெகுளி தவிர்த்தன்று பொன்றி யிடாவகை
திடமருள் வைக்குஞ் செழுஞ்சுடர் ஊறிய
தெளியமு தத்தின் கொழுஞ்சுவை நீடிய
திலைநக ரிற்செம்பொன் அம்பல மேவிய
சிவனை நினைக்குந் தவஞ்சது ராவதே.

தெளிவுரை : அங்கங்கள் எல்லாம் முன்பு உள்ளபடி இயங்காமல் இருக்கும் நிலையை விவரிக்கிறார். தொடர்ந்து நரை தோன்றலாயிற்று. முன்பு போல அங்கங்கள் வேலை செய்ய முடியாமல் தளர்ந்து விட்டன. ஐம்புலன்களின் வழியாக அழுக்குத் தாரைகள் இழிந்தன. சிந்தனை சரியாக இல்லை. நடை தளர்ந்தமையால் மனைவியரும் மனதுக்க வந்தவாறு ஏளனமாகப் பேசுகின்றனர். துன்புறுத்துகின்ற இருமல் வந்து, கஞ்சி உணவை உண்டு, நரகமாகிய இவ்வுடலுக்கு அன்பு கொண்டு அலைந்தேன். இனிமேல் செய்யப்போவது யாதெனில், வலிகெடுமாறு முன்பு இராவணன் இறைவனது கால் விரலினால் அழுத்தப் பெற்று, சாமவேதம் பாடினான். இறைவன் மனம் இளகி, முன்பு இருந்த கோபத்தைத் தவிர்த்து, அவனுக்கு அருள் செய்தார். அத்தகைய பெருமானின் அமுத மயமாகிய தில்லை நகரில் செம்பொன் அம்பலத்தில் மேவிய சிவனை நினைக்கும் தவமே மேம்பாட்டைக் கொடுப்பது என்பதாம்.

நேரிசை ஆசிரியப்பா

865. சதுர்முகன் தந்தைக்குக் கதிர்விடு கடவுள்
ஆழி கொடுத்த பேரருள் போற்றி
முயற்சியொடு பணிந்த இயக்கர்கோ னுக்கு
மாநிதி இரண்டும் ஆனாப் பெருவளத்(து)
அளகை ஒன்றும் தளர்வின்றி நிறுவிய
செல்வங் கொடுத்த செல்வம் போற்றி

தெளிவுரை : பிரமனுடைய தந்தையாகிய திருமாலுக்கு ஒளிவிடுகின்ற தெய்வத்தன்மை பொருந்திய சக்கரத்தை அருளிய உன் திருவருளுக்கு வணக்கம். முயற்சியோடு பணிந்த இயக்கர் கோனாகிய குபேரனுக்குச் சங்கநிதி, பதுமநிதி ஆகிய இரண்டு நிதிகளையும் குறையாத பெருவனத்தை உடைய அளகாபுரியையும் எல்லையற்ற செல்வத்தையும் அளித்த செல்வனே உனக்கு வணக்கம்.

தாள்நிழல் அடைந்த மாணிக் காக
நாண்முறை பிறழாது கோண்முறை வலித்துப்
பதைத்துவருங் கூற்றைப் படிமிசைத் தெறிக்க
உதைத்துயிர் அளித்த உதவி போற்றி

தெளிவுரை : உன்னுடைய பாதாரவிந்தகளைச் சரணமாக அடைந்த பிரமசாரியாகிய மார்க்கண்டேயனுக்காக நாள் தவறாமல் தன் பணியைச் செய்துவரும் இயமன் வந்தபோது அவனை உதைத்து, மார்க்கண்டேயனுக்கு நீண்ட ஆயுளை அளித்த உன் உதவிக்கு வணக்கம்.

குலைகுலை குலைந்த நிலையாத் தேவர்
படுபேர் அவலம் இடையின்றி விலக்கிக்
கடல்விடம் அருந்தின கருணை போற்றி
தவிராச் சீற்றத்(து) அவுணர் மூவெயில்
ஒல்லனல் கொளுவி ஒருநொடிப் பொடிபட
வில்லொன்று வளைத்த வீரம் போற்றி

தெளிவுரை : மிகுந்த நடுக்கத்தினை அடைந்த தேவர்களின் துன்பத்தைத் தாளாமல் விலக்கி கடலிலிருந்து எழுந்த ஆலகால விடத்தைப் பருகின உன் கருணைக்கு வணக்கம். திரிபுராதிகளின் மூன்று கோட்டைகளைத் தீயிட்டுக் கொளுத்தி ஒரு நொடியில் சாம்பலாகுமாறு மேருமலையை வில்லாக வளைத்த உன் வீரத்திற்கு வணக்கம்.

பூமென் கரும்பொடு பொடிபட நிலத்துக்
காமனைப் பார்த்த கண்ணுதல் போற்றி
தெய்வ யாளி கைமுயன்று கிழித்தெனக்
கரியொன்று உரித்த பெருவிறல் போற்றி

தெளிவுரை : கரும்பு வில்லோடு சாம்பலாகுமாறு மன்மதனை எரித்த உன் நெற்றிக் கண்ணுக்கு வணக்கம். தாருகாவனத்து முனிவர்கள் ஏவிய யானையைக் கிழித்து அதன் தோலைப் போர்த்திய உன் பெரு வெற்றிக்கு வணக்கம்.

பண்டு பெரும்போர்ப் பார்த்தவனுக்(கு) ஆகக்
கொண்டு நடந்த கோலம் போற்றி
விரற்பதம் ஒன்றில் வெள்ளிமலை எடுத்த
அரக்கனை நெரித்த ஆண்மை போற்றி

தெளிவுரை : முன்பு பெருவீரனாகிய அருச்சுனனுக்காக நீ எடுத்த வேட்டுவக் கோலத்திற்கு வணக்கம். வெள்ளி மலையை எடுத்த இராவணனை, கால் விரல் ஒன்றினால் நெரித்த உன் ஆண்மைக்கு வணக்கம்.

விலங்கல் விண்டு விழுந்தென முன்னாள்
சலந்தரன் தடிந்த தண்டம் போற்றி
தாதையை எறிந்த வேதியச் சிறுவற்குப்
பரிகலங் கொடுத்த திருவுளம் போற்றி
நின்முதல் வழிபடத் தன்மகன் தடிந்த
தொண்டர் மனையில் உண்டல் போற்றி

தெளிவுரை : மலை பிளவுபட்டு விழுந்தது போன்று சலந்தரனை அழித்த உன் ஆற்றலுக்கு வணக்கம். தன் தந்தையின் கால்களை வெட்டி சண்டீசருக்கு உண்கலம் கொடுத்த உன் திரு உள்ளத்துக்கு வணக்கம் (உண்கலம் - தாம் ஏற்ற நிவேதனம்). உன்னை உபசரிக்க தன் மகனாகிய சீராள தேவனை அரிந்த சிறுத்தொண்ட நாயனாருடைய வீட்டில் நீ உண்டமைக்கு வணக்கம்.

வெண்ணெய் உண்ண எண்ணுபு வந்து
நந்தா விளக்கை நுந்துபு பெயர்த்த
தாவுபுல் எலிக்கு மூவுல காள
நொய்தினில் அளித்த கைவளம் போற்றி

தெளிவுரை : வெண்ணெய் உண்பதற்காக எண்ணி வந்து நந்தா விளக்கைத் தூண்டிய எலிக்கு மூவுலகு ஆள விரைந்து அருள் செய்த உன் கை வண்ணத்திற்கு வணக்கம். (இதில் குறிக்கப்பட்டது கோச்செங்கட் சோழர் வரலாறு ஆகும்.)

பொங்குளை அழல்வாய்ப் புகைவிழி ஒருதனிச்
சிங்கங் கொன்ற சேவகம் போற்றி
வரிமிடற்(று) எறுழ்வலி மணியுகு பகுவாய்
உரகம் பூண்ட ஒப்பனை போற்றி
கங்கையும் கடுக்கையும் கலந்துழி ஒருபால்
திங்கள் சூடிய செஞ்சடை போற்றி

தெளிவுரை : பொங்கும் பிடரியையும் அழல் போன்ற வாயையும் உடைய புகை விழியையும் உடைய சிங்கத்தைக் கொன்ற உன் ஒப்பனைக்கு வணக்கம். கொடிய பாம்பை அணிந்துள்ள உன் ஒப்பனைக்கு வணக்கம். கங்கையும் கொன்றையும் கலந்து ஒரு பக்கத்திலும் திங்களை மறு பக்கத்திலும் சூடிய உன் செஞ்சடைக்கு வணக்கம்.

கடவுள் இருவர் அடியும் முடியும்
காண்டல் வேண்டக் கனற்பிழம்பாகி
நீண்டு நின்ற நீளம் போற்றி
ஆலம் பில்குநின் சூலம் போற்றி
கூறுதற்(கு) அரியநின் ஏறு போற்றி

தெளிவுரை : திருமாலும் பிரமனும் முறையே உன் அடியையும் முடியையும் காண்பதற்காக முயன்ற போது நீ கனற் பிழம்பாகி நீண்டு நின்ற உன் நீளத்திற்கு வணக்கம். விஷம் கக்கும் உன் சூலத்திற்கு வணக்கம். சொல்வதற்கு அரிய நின் வாகனத்திற்கு வணக்கம்.

ஏகல் வெற்பன் மகிழும் மகட்(கு) இடப்
பாகங் கொடுத்த பண்பு போற்றி
தில்லை மாநகர் போற்றி தில்லையுட்
செம்பொன் அம்பலம் போற்றி அம்பலத்(து)
ஆடும் நாடகம் போற்றி என்றாங்(கு)

தெளிவுரை : ஒப்பற்ற மலையரசன் மகிழும் மகளாகிய உமாதேவியாருக்கு இடப்பாகம் கொடுத்த உண் பண்பிற்கு வணக்கம். தில்லை மாநகர்க்கு வணக்கம். தில்லையுள் செம்பொன் அம்பலத்திற்கு வணக்கம். அம்பலத்தாடும் உன் நாடகத்திற்கு வணக்கம்.

என்றும் போற்றினும் என்தனக்(கு) இறைவ
ஆற்றல் இல்லை ஆயினும்
போற்றி போற்றிநின் பொலம்பூ அடிக்கே.

தெளிவுரை : எனக்கு இறைவனே ! உன் திருவடிகளை எப்போதும் போற்றும் ஆற்றல் எனக்கு இல்லை. என்றாலும் எனக்கு அருள் செய்வாயாக என்பதாம்.

திருச்சிற்றம்பலம்

27. திருக்கழுமல மும்மணிக்கோவை (பட்டினத்துப் பிள்ளையார் அருளிச் செய்தது)

கழுமலம் என்பது சீகாழிக்குரிய பன்னிரண்டு திருப்பெயர்களுள் ஒன்று. அப் பதியில் எழுந்தருளிய சிவபெருமானை அகவல், வெண்பா, கலித்துறை என்னும் மூவகைப் பாக்களால் புகழ்ந்து பாடப் பெற்றமையின் இந்நூல் திருக்கழுமல மும்மணிக் கோவை என்று பெயர் பெற்றது. இந் நூலில் சீகாழிச் சிவபெருமான் திருஞானசம்பந்தர்க்கு அருள் செய்த திறம், சிவபெருமானுடைய தன்மைகள், பிறவி இயல்பைக் கூறிப் பெருமானை வேண்டுதல் முதலிய செய்திகள் கூறப்பெறுகின்றன. இந் நூலில் பன்னிரண்டு பாடல்களே பட்டினத்துப் பிள்ளையார் வாக்கெனவும் 13 முதல் 30 வரையுள்ள பாடல்கள் மறைந்து போக வேறு எவராலோ பாடிச் சேர்க்கப்பட்டன என்றும் கூறுகின்றனர்.

திருச்சிற்றம்பலம்

இணைக்குறள் ஆசிரியப்பா

866. திருவளர் பவளப் பெருவரை மணந்த
மரகத வல்லி போல ஒருகூ(று)
இமையச் செல்வி பிரியாது விளங்கப்
பாய்திரைப் பரவை மீமிசை முகிழ்த்த
அலைகதிர்ப் பரிதி ஆயிரந் தொகுத்த
வரன்முறை திரியாது மலர்மிசை இருந்தெனக்

தெளிவுரை : பெருமைமிக்க பவளப்பெரு மலை மீது மரகதக் கொடி படர்ந்தது போன்று, இடது பாகத்தில் உமாதேவியார் பிரியாமல் விளங்க, அலைகளையுடைய கடல்மீது உதித்த கதிர்களையுடைய சூரியன் ஆயிரம் ஒன்றுகூடி, திரியாமல் மலர்மிசை இருந்ததைப் போல,

கதிர்விடு நின்முகங் காண்தொறும் காண்தொறும்
முதிரா இளமுலை முற்றாக் கொழுந்தின்
திருமுகத் தாமரை செவ்வியின் மலரநின்
தையல் வாணுதல் தெய்வச் சிறுபிறை
இளநிலாக் காண்தொறும் ஒளியொடும் புணர்ந்தநின்
செவ்வாய்க் குமுதம் செவ்வி செய்யநின்
செங்கைக் கமலம் மங்கை வனமுலை
அமிர்த கலசம் அமைவின் ஏந்த
மலைமகள் தனாது நயனக் குவளைநின்
பொலிவினொடு மலர மறையோர்

தெளிவுரை : பிரகாசிக்கின்ற உன் முகத்தைக் காணும்தோறும், காணும்தோறும் முதிரா இளமுலை முற்றாக் கொழுந்தின் (அம்மையின்) திருமுகமாகிய தாமரை மலரின் அழகு மலர உன் உமாதேவியின் ஒளி பொருந்திய நெற்றி தெய்வச் சிறு பிறையாகிய இளநிலவைக் காணும்தோறும், ஒளியோடு புணர்ந்த நின் சிவந்த வாயும் உன் செம்மையான கையாகிய கமலம், அம்மையின் வன முலையாகிய அமிர்த கலசத்தைப் பொருத்தமாக ஏந்த, உமாதேவியின் நயனமாகிய குவளைமலர் நின் அழகோடு மலர,

கழுமல நெறிநின்று பொலிய
நாகர் நாடு மீமிசை மிதந்து
மீமிசை உலகங் கீழ்முதல் தாழ்ந்திங்(கு)
ஒன்றா வந்த குன்றா வெள்ளத்(து)
உலகம்மூன் றுக்கும் களைகண் ஆகி
முதலில் காலம் இனிதுவீற் றிருந்துழித்
தாதையொடு வந்த வேதியச் சிறுவன்

தெளிவுரை : வேதியர்கள் சீகாழியின் நெறி நின்று விளங்க, நாகர்களுடைய உலகமாகிய பாதலம் மேலே எழுந்து, தேவலோகம் கீழே இறங்கி வந்தது போல, இங்குக் குறையாத மூன்று உலகங்களுக்கும் பற்றுக் கோடாகி ஆதிக் காலத்திலிருந்து இனிது வீற்றிருந்தபோது, தந்தையாகிய சிவபாத இருதய ரோடு வந்த திருஞான சம்பந்தர்,

தளர்நடைப் பருவத்து வளர்பசி வருத்த
அன்னா யோஎன்(று) அழைப்பமுன் னின்று
ஞான போனகத்(து) அருள்அட்டிக் குழைத்த
ஆனாத் திரளை அவன்வயின் அருள
அந்தணன் முனிந்து தந்தார் யாரென

தெளிவுரை : தளர்நடைப் பருவத்தில் மிகுந்த பசி வருத்த அம்மா ! என்று அழைக்க முன் தோன்றி ஞானப்பாலை அருள் சேர்த்துக் குழைத்து அவன் வயின் கொடுக்க, தந்தையாகிய சிவபாத இருதயர் கோபித்து, இதைக் கொடுத்தவர் யார் எனக் கேட்க,

அவனைக் காட்டுவன் அப்ப வானார்
தோஒ டுடைய செவியன் என்றும்
பீஇ டுடைய பெம்மான் என்றும்
கையில் சுட்டிக் காட்ட
ஐயநீ வெளிப்பட்(டு) அருளினை ஆங்கே.

தெளிவுரை : அவனைக் காட்டுகிறேன் என்று சொல்லும்போது வானத்தில் தோடுடைய செவியன் என்றும் பீடுடைய பெம்மான் என்றும் கையில் சுட்டிக் காட்ட, ஐயனே ! நீ அங்கே வெளிப்பட்டு அருளினை,

வெண்பா

867. அருளின் கடலடியேன் அன்பென்னும் ஆறு
பொருளின் திரள்புகலி நாதன் - இருள்புகுதும்
கண்டத்தான் என்பாரைக் காதலித்துக் கைதொழுவார்
அண்டத்தார் நாமார் அதற்கு.

தெளிவுரை : சீகாழியில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமான் அருளாகிய கடல் போன்றவன்; அன்பாகிய ஆறு போன்றவன். அவனுக்கு நான் அடியேன். அவன் நீலகண்டன் என்று வணங்கும் அடியார்களை விரும்பி கை தொழுபவர்கள் இவ்வுலகத்தினரும் தேவ லோகத்தினரும் என்றால் அந்தச் சிறப்பை அளவிட நாம் தகுதியுடையவரா ? என்றபடி.

கட்டளைக் கலித்துறை

868. ஆரணம் நான்கிற்கும் அப்பால்
அவனறி யத்துணிந்த
நாரணன் நான்முக னுக்(கு)அரி
யான்நடு வாய்நிறைந்த
பூரணன் எந்தை புகலிப்
பிரான்பொழில் அத்தனைக்கும்
காரணன் அந்தக் கரணங்
கடந்த கருப்பொருளே.

தெளிவுரை : சிவபெருமான் வேதங்கள் நான்கிற்கும் அப்பால் இருப்பவன். அவனை அறியும் பொருட்டுத் துணிந்த திருமாலும் பிரமனும் முயன்றும் அறிய முடியாதவன். எல்லா உலகங்களுக்கும் நடுவாய் நிறைந்த பூரணன். எந்தை (என் தந்தை) சீகாழியில் எழுந்தருளியிருப்பவன். உலகம் அத்தனைக்கும் ஆதியாக உள்ள காரணன். மனம், புத்தி, சித்தம், அகங்காரம் என்னும் அந்தக்கரணங்கள் நான்கையும் கடந்த கருப்பொருள் அவன்.

இணைக்குறள் ஆசிரியப்பா

869. கருமுதல் தொடங்கிப் பெருநாள் எல்லாம்
காமம் வெகுளி கழிபெரும் பொய்யெனும்
தூய்மையில் குப்பை தொலைவின்றிக் கிடந்ததை
அரிதின் இகழ்ந்து போக்கிப் பொருதிறன்
மையிருள் திறத்து மதனுடை அடுசினத்(து)
ஐவகைக் கடாவும் யாப்பவிழ்த்(து) அகற்றி

தெளிவுரை : கருவுற்ற நாள் முதலாக, வாழ்நாள் முழுவதும் காமம், வெகுளி, கழிபெரும் பொய்யெனும் தூய்மையில்லாத குப்பை இடைவிடாமல் கிடந்ததை அரிதின் இகழ்ந்து போக்கி, பொரு திறனுடைய மிகுந்த இருளும் வலிமையும் உடைய மிகுந்த கோபமுடைய ஐம்பொறிகளாகிய கடாக்களையும் கட்டு அவிழ்த்து அகற்றி,

அன்புகொடு மெழுகி அருள்விளக் கேற்றித்
துன்ப இருளைத் துரந்து முன்புறம்
மெய்யெனும் விதானம் விரித்து நொய்ய
கீழ்மையில் தொடர்ந்து கிடந்தஎன் சிந்தைப்
பாழறை உனக்குப் பள்ளியறை யாக்கிச்

தெளிவுரை : அன்பு கொண்டு மெழுகி, அருள் என்னும் விளக்கை ஏற்றி, துன்ப இருளை விட்டு நீங்கி, முன் பக்கத்தில் மெய் என்னும் மேற்கட்டியை விரித்து, மென்மையான கீழ்மையில் தொடர்ந்து கிடந்த என்னுடைய சிந்தையாகிய பாழறையை உனக்குப் பள்ளியறையாக்கி,

சிந்தைத் தாமரைச் செழுமலர்ப் பூந்தவி(சு)
எந்தைநீ இருக்க இட்டனன் இந்த
நெடுநில வளாகமும் அடுகதிர் வானமும்
அடையப் பரந்த ஆதிவெள் ளத்து
நுரையெனச் சிதறி இருசுடர் மிதப்ப

தெளிவுரை : என் சிந்தையாகிய தாமரைச் செழுமலர் பூந்தவிசில் என் தந்தையாகிய நீ இருக்க வைத்தேன். இந்த நிலவுலகப் பரப்பும் பிரகாசமான வானமும் அடையப் பரந்த ஆதியாகிய பெரு வெள்ளத்து நுரை என்று சொல்லுமாறு சிதறிச் சூரிய சந்திரர்களாகிய இருசுடர்களும் மிதக்க,

வரைபறித்(து) இயங்கும் மாருதம் கடுப்ப
மாலும் பிரமனும் முதலிய வானவர்
காலம் இதுவெனக் கலங்கா நின்றுழி
மற்றவர் உய்யப் பற்றிய புணையாய்

தெளிவுரை : மலைகளைப் பிடுங்கி, வீசுகின்ற சண்டமாருதம் என்னும்படி திருமால், பிரமன் முதலிய தேவர்கள் இது ஊழிக் காலமோ என்று கலங்கி இருந்த போது, அவர்கள் பிழைத்து இருக்கப் பற்றிய தோணியாக,

மிகநனி மிதந்த புகலி நாயக
அருள்நனி சுரக்கும் பிரளய விடங்கநின்
செல்வச் சிலம்பு மெல்லென மிழற்ற
அமையாக் காட்சி இமையக்
கொழுந்தையும் உடனே கொண்டிங்கு
எழுந்தரு ளத்தகும் எம்பெரு மானே.

தெளிவுரை : மிகவும் சிறப்பாக மிதந்த சீகாழி நாயகனே  ! அருள் மிகுதியாகச் சுரக்கும் பிரளய விடங்கனே ! நின் செல்வச் சிலம்பு மென்மையால் ஒலிக்க கண்கொள்ளாக் காட்சி, உமா தேவியாரையும் உடனே கொண்டு இங்கு எழுந்தருளத் தகும் எம் பெருமானே !

வெண்பா

870. மானும் மழுவும் திருமிடற்றில் வாழுமிருள்
தானும் பிறையும் தரித்திருக்கும் - வானவர்க்கு
வெள்ளத்தே தோன்றிக் கழுமலத்தே வீற்றிருந்தென்
உள்ளத்தே நின்ற ஒளி.

தெளிவுரை : தேவர்களுக்கு வெள்ளத்தில் காட்சி கொடுத்து, சீகாழியில் வீற்றிருந்து என் உள்ளத்தில் நின்ற ஒளியானது மான், மழு, கழுத்தில் கருநிறம், பிறைச் சந்திரன் ஆகியவற்றைக் தரித்திருக்கும் என்பதாம்.

கட்டளைக் கலித்துறை

871. ஒளிவந்த வாபொய் மனத்திருள்
நீங்கஎன் உள்ளவெள்ளத்(து)
எளிவந்த வாவந்து தித்தித்த
வாசித்தி யாததொரு
களிவந்த வாஅன்பு கைவந்த
வாகடை சாரமையத்(து)
எளிவந்த வாநங் கழுமல
வாணர்தம் இன்னருளே.

தெளிவுரை : நம் சீகாழிப் பதியில் கோயில் கொண்டிருக்கும் சிவ பெருமானின் இன்னருள், ஒளி வந்தவாறு என்ன வியப்பு? பொய் மனத்து இருள் நீங்க, என் உள்ள வெள்ளம் எளிவந்தவாறு என்ன வியப்பு ! வந்து தித்தித்தவாறும், சிந்தியாது ஒரு களி வந்தவாறும், அன்பு கை வந்தவாறும், இறுதிவரை மையத்து எளி வந்தவாறும் என்ன வியப்பு !

இறைவனின் எளிவந்த தன்மையை வியந்து போற்றுகின்றார் என்பதாம்.

இணைக்குறள் ஆசிரியப்பா

872. அருள்பழுத் தளித்த கருணை வான்கனி
ஆரா இன்பத் தீராக் காதல்
அடியவர்க்(கு) அமிர்த வாரி நெடுநிலை
மாட கோபுரத்(து) ஆடகக் குடுமி
மழைவயிறு கிழிக்கும் கழுமல வாணநின்

தெளிவுரை : அருள் பழுத்தளித்த கருணை வான்கனி, தெவிட்டாத இன்பம். தீராத காதல், அடியவர்க்கு அமுதக்கடல் உயர்ந்த மாடங்களை உடைய கோபுரத்துப் பொன் சிகரங்கள் முகிலின் வயிற்றைக் கிழிக்கும் சீகாழிப் பதியில் எழுந்தருளியிருக்கும் இறைவனே ! உன்னுடைய,

வழுவாக் காட்சி முதிரா இளமுலைப்
பாவையுடன் இருந்த பரம யோகி
யானொன்(று) உணர்த்துவன் எந்தை மேனாள்
அகில லோகமும் அனந்த யோனியும்
நிகிலமும் தோன்றநீ நினைந்தநாள் தொடங்கி

தெளிவுரை : தவறாத காட்சி முதிர்ச்சியடையாத இளமுலைப் பாவையாகிய உமாதேவியுடன் இருந்த பரமயோகி யென்று உணர்த்துவேன். எந்தையே! முன்னாட்களில் எல்லா உலகங்களும் எல்லாப் பிறவிகளும் மற்றெல்லாப் பொருட்களும் தோன்ற நீ நினைந்த நாள் தொடங்கி,

எனைப்பல யோனியும் நினைப்பரும் பேதத்(து)
யாரும் யாவையும் எனக்குத் தனித்தனித்
தாய ராகியும் தந்தைய ராகியும்
வந்தி லாதவர் இல்லை யானவர்

தெளிவுரை : பல பிறவிகளும் நினைப்பதற்கு அருமையான பேதங்களுடன் யாரும் யாவையும் எனக்கு தனித்தனி தாயார் ஆகியும், தந்தையர் ஆகியும் வந்தவர்களே யாவர்.

தந்தையர் ஆகியும் தாயர் ஆகியும்
வந்தி ராததும் இல்லை முந்து
பிறவா நிலனும் இல்லை அவ்வயின்
இறவா நிலனும் இல்லை பிறிதில்
என்னைத் தின்னா உயிர்களும் இல்லை யான்அவை
தம்மைத் தின்னா(து) ஒழிந்ததும் இல்லை அனைத்தே

தெளிவுரை : யான் அவர்களுக்குத் தந்தையராகியும் தாயராகியும் வந்துள்ளேன். முன்பு பிறவா நிலனும் இல்லை. அதேபோல் இறவா நிலனும் இல்லை. பிறவற்றில் என்னை எல்லா உயிர்களும் தின்றன. அதுபோல் யானும் அவற்றைத் தின்றுள்ளேன்.

காலமும் சென்றது யான்இதன் மேலினி
இளைக்குமா றிலனே நாயேன்
நந்தாச் சோதிநின் அஞ்செழுத்து நவிலும்
தந்திரம் பயின்றதும் இலனே தந்திரம்
பயின்றவர்ப் பயின்றதும் இலனே ஆயினும்

தெளிவுரை : இவ்வாறே காலமும் சென்றது. இனிமேல் நான் இவ்வாறு பிறந்து இறந்து இளைக்கும் சக்தியையும் பெற்றிருக்கவில்லை. நான் நாய்போன்ற இழிகுணம் உள்ளவன். அணையாத சோதியே ! உன் ஐந்தெழுத்தைச் சொல்லும் தந்திரமும் பயிலவில்லை. அந்தத் தந்திரம் பயின்ற குருமார்களையும் போய்க் கேட்கவில்லை.

இயன்றதோர் பொழுதின் இட்டது மலராச்
சொன்னனது மந்திர மாக என்னையும்
இடர்ப்பிறப்(பு) இறப்பெனும் இரண்டின்
கடற்ப டாவகை காத்தல் நின்கடனே.

தெளிவுரை : ஆயினும் இயன்றதோர் பொழுதில் இட்டது மலராச் சொன்னது மந்திரமாகக் கொண்டு என்னையும் துன்பமாகிய பிறப்பு இறப்பு என்னும் இரண்டு கடல்களையும் அடையா வகை காத்தல் உன் கடனாகும்.

வெண்பா

873. கடலான காமத்தே கால்தாழ்வர் துன்பம்
அடலாம் உபாயம் அறியார் - உடலாம்
முழுமலத்தை ஓர்கிலார் முக்கட் பெருமான்
கழுமலத்தைக் கைதொழா தார்.

தெளிவுரை : மூன்று கண்களையுடைய பெருமான் கோயில் கொண்டிருக்கும் கழுமலமாகிய சீகாழியைக் கை தொழாதவர்கள் கடல்போன்ற காமத்தில் மிகுதியாக மூழ்குவார்கள். துன்பத்தை வெல்லக்கூடிய உபாயத்தை அறியமாட்டார்கள். உடலாகிய முழு மலத்தை ஆராய்ந்தறியமாட்டார்கள். எனவே சீகாழிப் பெருமானைக் கைதொழுது நற்கதி பெறுமாறு அறிவுறுத்துகின்றது.

கட்டளைக் கலித்துறை

874. தொழுவாள் இவள்வளை தோற்பாள்
இவளிடர்க் கேயலர்கொண்(டு)
எழுவாள் எழுகின்ற தென்செய
வோஎன் மனத்திருந்தும்
கழுவா மணியைக் கழுமல
வாணனைக் கையிற்கொண்ட
மழுவா ளனைக்கண்டு வந்ததென்
றால்ஓர் வசையில்லையே.

தெளிவுரை : இவள் காமநோயால் துன்புற்று அவனை நோக்கித் தொழுவாள். கையிலுள்ள வளைகள் தாமாகவே கழன்று போகும். இவள் துன்புறுவதைக் கொண்டு ஊரார் பழி தூற்றுவார்கள். எழுவாள், எழுந்து என்ன செய்யப் போகிறாள். என் மனத்திலிருந்து சாணைப் பிடிக்காத மணியாகிய கழுமல நாதனை, கையிற் கொண்ட மழுவாளனைக் கொண்டு வந்தால்தான் இவள் துன்பம் நீங்கும் என்க.

நேரிசை ஆசிரியப்பா

875. வசையில் காட்சி இசைநனி விளங்க
முன்னாள் நிகழ்ந்த பன்னீ ருகந்து
வேறுவேறு பெயரின் ஊறின்(று) இயன்ற
மையறு சிறப்பின் தெய்வத் தன்மைப்
புகலி நாயக இகல்விடைப் பாக

தெளிவுரை : குற்றமற்ற காட்சி, புகழ் மிகவும் விளங்க முன்பு நடந்த பன்னிரண்டு யுகங்களில் வேறு வேறு பெயர்களில் இயன்ற சீகாழிப் பதியின் குற்றமற்ற சிறப்பினை யுடைய புகலி நாயக ! வலிமையுள்ள காளையை வாகனமாக உடையவனே !

அமைநாண் மென்தோள் உமையாள் கொழுந
குன்று குனிவித்து வன்தோள் அவுணர்
மூவெயில் எரித்த சேவகத் தேவ
இளநிலா முகிழ்க்கும் வளர்சடைக் கடவுள்நின்

தெளிவுரை : மூங்கிலும் நாணும்படியான மென்மையான தோள்களையுடைய உமையாளுடைய கொழுநனே ! மேரு மலையை வளைத்து, வலிய தோள்களையுடைய அவுணர்களின் திரிபுரங்களை எரித்த வீரத் தன்மையுள்ள தேவனே ! பிறைச் சந்திரன் தங்கிய சடையை உடைய கடவுளே ! உன்னுடைய,

நெற்றியில் சிறந்த ஒற்றை நாட்டத்துக்
காமனை விழித்த மாமுது தலைவ
வானவர் அறியா ஆதி யானே
கல்லா மனத்துப் புல்லறிவு தொடர
மறந்து நோக்கும் வெறுந்தண் நாட்டத்துக்
காண்தொறும் காண்தொறும் எல்லாம் யாண்டை
ஆயினும் பிறவும் என்னதும் பிறரதும்
ஆவன பலவும் அழிவன பலவும்

தெளிவுரை : நெற்றியில் உள்ள சிறந்த ஒப்பற்ற கண்ணால் மன்மதனை எரித்த பெரிய பழைமையான தலைவனே ! தேவர்கள் அறியாத ஆதியானே ! படிக்காத மனத்து அற்ப அறிவு தொடர மறந்து பார்க்கும் வெறுமையான கண்களால் பார்க்கின்ற ஒவ்வொரு சமயத்திலும் ஆவதும் அழிவதுமான எல்லாப் பொருள்களும்,

போனதும் வருவதும் நிகழ்வதும் ஆகித்
தெண்ணீர் ஞாலத்துத் திரண்ட மணலினும்
எண்ணில் கோடி எனைப்பல வாகி
இல்லன உளவாய் உள்ளன காணாப்
பன்னாள் இருள்வயின் பட்டேன் அன்னதும்

தெளிவுரை : போவதும் வருவதும் நிகழ்வதுமாகிக் கடலால் சூழப்பட்ட இவ்வுலகத்தில் திரண்ட மணலைக் காட்டிலும் எண்ணில்லாத கோடி எனப் பலவாகி, இல்லாதன இருப்பனவாகவும், இருப்பவை காணாதவையாகவும் பன்னாள் இருளில் இருந்து வருந்தினேன்.

அன்ன(து) ஆதலின் அடுக்கும் அதென்னெனின்
கட்புலன் தெரியாது கொட்புறும் ஒருவற்குக்
குழிவழி யாகி வழிகுழி யாகி
ஒழிவின்(று) ஒன்றின் ஒன்றுதடு மாற
வந்தாற் போல வந்த(து) எந்தைநின்

தெளிவுரை : அத்தகையதும் மேற்சொன்னவாறு துன்புறும். அஃது எங்ஙனமெனின் கண் பார்வை தெரியாமல் அலையும் ஒருவற்குக் குழியானது வழியாகியும், வழியானது குழியாகியும் ஒன்று மற்றொன்றாகத் தடுமாற, வந்தாற்போல வந்த என் தந்தையே ! உன்னுடைய

திருவருள் நாட்டம் கருணையின் பெறலும்
யாவையும் எனக்குப் பொய்யெனத் தோன்றி
மேவரும் நீயே மெய்யெனத் தோன்றினை

தெளிவுரை : திருவருள் பார்வை கருணையின் பெறலும் யாவையும் எனக்குப் பொய்யெனத் தோன்றியது. பொருந்திய நீ மட்டும் மெய்யாகத் தோன்றினை.

ஓவியப் புலவன் சாயல்பெற எழுதிய
சிற்ப விகற்பம் எல்லாம் ஒன்றித்
தவிராது தடவினர் தமக்குச்
சுவராய்த் தோன்றுங் துணிவுபோன் றெனவே.

தெளிவுரை : ஓவியப் புலவன் (சித்திரம் எழுதுபவன்) உன்னைப் போலவே எழுதிய சிற்ப விகற்பம் எல்லாம் ஒன்றி, எஞ்சாமல், தடவினர் தமக்குச் சுவராய்த் தோன்றும் துணிவு போன்றனவே. நீதான் உண்மைப் பொருள் என்பதாம்.

வெண்பா

876. எனவே எழுந்திருந்தாள் என்செய்வாள் இன்னம்
சினவேறு காட்டுதிரேல் தீரும் - இனவேகப்
பாம்புகலி யால்நிமிரும் பன்னாச் சடைமுடிநம்
பூம்புகலி யான்இதழிப் போது.

தெளிவுரை : கூட்டமான பாம்புகள் ஒலித்து நிமிர்தற்கு இடமான சடை முடியை யுடைய சீகாழிப் பெருமான் கொன்றை மாலை என்று சொன்ன மாத்திரத்தில் மயக்கம் தீர்ந்து எழுந்திருந்தாள். இன்னும் சிவனின் வாகனமாகிய இடபத்தைக் காட்டுதிரேல் அவள் நோய் முழுதும் தீரும் என்க.

கட்டளைக் கலித்துறை

877. போதும் பெறாவிடில் பச்சிலை
உண்டு புனலுண்டெங்கும்
ஏதும் பெறாவிடில் நெஞ்சுண்டன்
றேயிணை யாகச்செப்பும்
சூதும் பெறாமுலை பங்கர்தென்
தோணி புரேசர்வண்டின்
தாதும் பெறாத அடித்தா
மரைசென்று சார்வதற்கே.

தெளிவுரை : மலரைப் பெறாமற் போயினும் பச்சிலை உண்டு, நீர் எங்கும் உண்டு. இவை ஏதும் பெறாவிடில், மனம் இருக்கிறதல்லவா? கிண்ணமும், சொக்கட்டான் காயும்போல இருக்கும் முலைகளையுடைய உமையை இடப்பாகத்தில் கொண்டதென் தோணி புரேசர் வண்டின் தாதும் பெறாத அடித்தாமரை சேர்வதற்கு மனம் போதும் என்க.

திருச்சிற்றம்பலம்

28. திருவிடைமருதூர் மும்மணிக்கோவை (பட்டினத்துப் பிள்ளையார் அருளிச் செய்தது)

திருவிடைமருதூர் என்னும் சிவப்பதியில் திருக்கோயில் கொண்டெழுந்தருளிய சிவபெருமான் மீது அகவல், வெண்பா, கட்டளைக் கலித்துறை ஆகிய மூன்று வகைப் பாடல்களால் இயற்றப்பட்ட நூலாதலின் இது திருவிடை மருதூர் மும்மணிக் கோவை என்று பெயர் பெற்றது. உயிர்த்தொகைகளின் நிலையைக் கருதி இறைவன் தன்னுடைய அருள் இன்ப வாழ்வை எல்லா உயிர்களுக்கும் உரியதாக அமைத்து வைத்துள்ளான். ஆகவே அவன்பால் ஒரு சிறிதும் குற்றம் இல்லை. அவ் இறைவனை எண்ணிப் போற்றி அவன் அருளால் துன்பங்களை நீக்கிக் கூற்றுவனுடைய ஆற்றலைத் தொலைத்துப் பிறப்பையும் இறப்பையும் போக்கிக் கொள்ளாத குற்றம் உயிர்த் தொகைகள் உடையதேயாகும் என்பன போன்ற நல்லறிவுரைகள் இக் கோவையில் இன்பம் பயக்கும் வகையில் அமைந்துள்ளன.

திருச்சிற்றம்பலம்

இணைக்குறள் ஆசிரியப்பா

878. தெய்வத் தாமரைச் செவ்வியின் மலர்ந்து
வாடாப் புதுமலர்த் தோடெனச் சிவந்து
சிலம்பும் கழலும் அலம்பப் புனைந்து
கூற்றின் ஆற்றல் மாற்றிப் போற்றாது
வலம்புரி நெடுமால் ஏனமாகி நிலம்புக்(கு)
ஆற்றலின் அகழத் தோற்றாது நிமிர்ந்து
பத்தி அடியவர் பச்சிலை இடினும்
முத்தி கொடுத்து முன்னின்(று) அருளித்
நிகழ்ந்துள(து) ஒருபால் திருவடி அகஞ்சேந்து

தெளிவுரை : அர்த்த நாரீசுவரத் திருக்கோலத்தில் இறைவன் பாகமாகிய வலப்பால் திருவடியைப் பற்றிக் கூறுகிறார்.

தெய்வத் தாமரையின் அழகை யொத்து மலர்ந்து, வாடாத புதுமலர்த் தொகுதி போன்று சிவந்து, சிலம்பும் வீரக் கழலும் ஒலி செய்ய அணிந்து, காலனின் வல்லமையை அழித்த அந்தத் திருவடிகளைப் போற்றாமல் வலம்புரிச் சங்கை ஏந்திய திருமால் பன்றி உருவெடுத்துப் பூமியைத் தோண்டியும் காணாமல் போனார். அடியவர்கள் பச்சிலையை இட்டு வழிபட்டாலும் அவர்களுக்கு முத்தி கொடுத்து முன்னின்று அருளித் திகழ்கின்றது ஒரு பக்கம் (வலப்பக்கம்) ஐயனின் திருவடி.

மறுவில் கற்பகத் துறுதளிர் வாங்கி
நெய்யில் தோய்த்த செவ்வித் தாகி
நூபுரம் கிடப்பினும் நொந்து தேவர்
மடவரல் மகளிர் வணங்குபு வீழ்த்த
சின்னப் பன்மலர் தீண்டிடச் சிவந்து
பஞ்சியும் அனிச்சமும் எஞ்ச எஞ்சாத்
திருவொடும் பொலியும் ஒருபால் திருவடி

தெளிவுரை : அம்பிகையின் பாகமாகிய இடப்பால் திருவடியின் இயல்பு கூறுகின்றார்.

உட்புறம் சிவந்து, குற்றமற்ற கற்பகத் தருவின் உறுதளிர் வாங்கி, நெய்யில் தோய்த்த அழகுடையதாகி, சிலம்பு இருந்த போதிலும் வருந்தித் தேவர் மகளிர் வணங்கும்போது வீழ்ந்த சின்னப் பன்மலர் தொடும்போது சிவந்து, பஞ்சியும் அனிச்ச மலரும் தோற்குமாறு அழகோடு விளங்குவது இடப்பக்கத் திருவடி (அம்மையின் திருவடி).

நீலப் புள்ளி வாளுகிர் வேங்கைத்
தோலின் கலிங்கம் மேல்விரித்(து) அசைத்து
நச்செயிற்(று) அரவக் கச்சையாப் புறுத்துப்
பொலிந்துள(து) ஒருபால் திருவிடை இலங்கொளி
அரத்த ஆடை விரித்து மீதுறீஇ
இரங்குமணி மேகலை ஒருங்குடன் சாத்திய
மருங்கிற் றாகும் ஒருபால் திருவிடை

தெளிவுரை : நீலப் புள்ளிகளையும் கூரிய நகங்களையும் உடைய வேங்கையின் தோலை ஆடையாகக் கட்டி, விஷப்பற்களை உடைய பாம்பைக் கச்சையாகக் கட்டி விளங்குகின்றது வலப்பக்கம். அழகிய இடையில் விளங்குவது சிவந்த ஆடையை விரித்து மேலே போர்த்து ஒலி செய்கின்ற மேகலை, ஒருங்குடன் சாத்திய மருங்கில் இடப்பக்கம் உள்ளது.

செங்கண் அரவும் பைங்கண் ஆமையும்
கேழற் கோடும் வீழ்திரள் அக்கும்
நுடங்கு நூலும் இடங்கொண்டு புனைந்து
தவளநீ(று) அணிந்ததோர் பவளவெற் பென்ன
ஒளியுடன் திகழும் ஒருபால் ஆகம்

தெளிவுரை : சிவந்த கண்களையுடைய அரவும், பசிய கண்களை உடைய ஆமை ஓடும். பன்றியின் கொம்பும், தொங்குகின்ற நீண்ட எலும்பு மாலையும், அசைகின்ற முப்புர நூலும் அணிந்து வெண்மையான திருநீறும் கொண்ட பவள மலை என்று சொல்லுமாறு ஒலியுடன் திகழ்வது வலப்புறம்.

வாரும் வடமும் ஏர்பெறப் புனைந்து
செஞ்சாந்(து) அணிந்து குங்குமம் எழுதிப்
பொற்றா மரையின் முற்றா முகிழென
உலகேழ் ஈன்றும் நிலையில் தளரா
முலையுடன் பொலியும் ஒருபால் ஆகம்

தெளிவுரை : உடல் வாரும் வடமும் அழகுற அணிந்து, செஞ்சாந்து அணிந்து, குங்குமம் எழுதி, பொற்றாமரையின் முற்றா முகிழென, ஏழு உலகங்களையும் பெற்ற பிறகும் சாயாத முலைகளுடன் பொலிவது இடப்பாகம்.

அயில்வாய் அரவம் வயின்வயின் அணிந்து
மூவிலை வேலும் பூவாய் மழுவும்
தமருகப் பறையும் அமர்தரத் தாங்கிச்
சிறந்துள(து) ஒருபால் திருக்கரம் செறிந்த

தெளிவுரை : கூரிய வாயினையுடைய பாம்புகளை ஆங்காங்கே அணிந்து, முத்தலைச் சூலமும் பூவாய் மழுவும், உடுக்கையும், தேவர்கள் தரத் தாங்கிச் சிறந்துள்ளது வலப்பாகம்.

சூடகம் விளங்கிய ஆடகக் கழங்குடன்
நொம்மென் பந்தும் அம்மென் கிள்ளையும்
தரித்தே திகழும் ஒருபால் திருக்கரம்

தெளிவுரை : திருக்கரம் செறிந்த கைவளையும் பொன்னாலாகிய கழற்சிக் காய்களும், பந்தும், கிளியும், கொண்டு விளங்குவது இடப்பக்கம்.

இரவியும் எரியும் விரவிய வெம்மையின்
ஒருபால் விளங்கும் திருநெடு நாட்டம்
நவ்வி மானின் செவ்வித் தாகிப்
பாலிற் கிடந்த நீலம் போன்று
குண்டுநீர்க் குவளையிற் குளிர்ந்து நிறம்பயின்(று)
எம்மனோர்க்(கு) அடுத்த வெம்மைநோய்க்(கு) இரங்கி
உலகேழ் புரக்கும் ஒருபால் நாட்டம்

தெளிவுரை : திருக்கரத்தில் சூரியனும் தீயும் கலந்த கொடுமை வலப்பக்கத்தில் விளங்கும். அழகிய நீண்ட கண்ணும் மான்கன்றும் அழகுடையதாய் பாலிற் கிடந்த நீலம்போல குண்டுநீர்க் குவளை போன்று குளிர்ந்து நிறம் விளங்கி எம்மனோர்க்கு அடுத்த வெம்மை நோய்க்கு இரங்கி உலகம் ஏழையும் காப்பாற்றுவது இடப்பாகம்.

நொச்சிப் பூவும் பச்சை மத்தமும்
கொன்றைப் போதும் மென்றுணர்த் தும்பையும்
கங்கை யாறும் பைங்கண் தலையும்
அரவும் மதியமும் விரவித் தொடுத்துச்
சூடா மாலை சூடிப் பீடுகெழு
நெருப்பில் திரித்தனைய உருக்கிளர் சடிலமொடு
நான்முகம் கரந்த பால்நிற அன்னம்
காணா வண்ணம் கருத்தையும் கடந்து
சேண்இகந்(து) உளதே ஒருபால் திருமுடி பேணிய

தெளிவுரை : நொச்சிப்பூவும் பச்சை ஊமத்தமும், கொன்றை மலரும் தும்பை மலர்க் கொத்தும், கங்கையாறும் பைங்கண் தலையும் பாம்பும், பிறைச் சந்திரனும் கலந்து தொடுத்த (எவரும் அணியாத) எலும்பு மாலையைச் சூடி பெருமையுள்ள நெருப்பில் திரித்தது போன்ற ஒளியுள்ள சடையோடு நான்கு முகங்களை மறைத்த, பால்நிற அன்னமாகிய பிரமனும் காணாவண்ணம் கருத்தையும் கடந்து அருகில் உள்ளது வலப்பக்கம்.

கடவுட் கற்பின் மடவரல் மகளிர்
கற்பக வனத்துப் பொற்பூ வாங்கிக்
கைவைத்துப் புனைந்த தெய்வ மாலை
நீலக் குழல்மிசை வளைஇமேல் நிவந்து
வண்டுந் தேனுங் கிண்டுபு திளைப்பத்
திருவொடு பொலியும் ஒருபால் திருமுடி

தெளிவுரை : பேணிய கடவுட் கற்பின் மடவரல் மகளிர் கற்பகவனத்திலுள்ள அழகிய மலர்களைக் கொண்டு வந்து மாலையாகத் தொடுத்து அணிந்த தெய்வ மாலையுடன், கருநிறக் கூந்தல்மீது உயர்ந்து வண்டும் தேனும் கிண்டித் திளைப்ப, திருவோடு பொலிவது இடப்பக்கம்.

இனையவண் ணத்து நினைவருங் காட்சி
இருவயின் உருவும் ஒருவயிற் றாகி
வலப்பால் நாட்டம் இடப்பால் நோக்க
வாணுதல் பாகம் நாணுதல் செய்ய
வலப்பால் திருக்கரம் இடப்பால் வனமுலை
தைவந்து வருட மெய்ம்மயிர் பொடித்தாங்(கு)

தெளிவுரை : இந்த அழகிய கோலத்தோடு, இரண்டு பக்கத்து உருவும் ஒன்றாகி வலக்கண் இடக்கண்ணைப் பார்க்கப் பெண் பாகம் நாணமுற்று, வலப்பக்கத்துக் கை இடப்பக்கத்து முலையைத் தடவிக் கொடுக்க, மயிர்க் கூச்செறிந்து

உலகம் ஏழும் பன்முறை ஈன்று
மருதிடம் கொண்ட ஒருதனிக் கடவுள்நின்
திருவடி பரவுதும் யாமே நெடுநாள்
இறந்தும் பிறந்தும் இளைத்தனம் மறந்தும்
சிறைக்கருப் பாசயம் சேரா
மறித்தும் புகாஅ வாழ்வுபெறற் பொருட்டே.

தெளிவுரை : ஏழு உலகங்களையும் பலமுறை ஈன்று மருது இடம் கொண்ட ஒப்பற்ற கடவுளே ! உன்னுடைய திருவடிகளை வணங்குகின்றோம். யாங்கள் நெடுநாட்களாக இறந்தும் பிறந்தும் இளைத்தோம். மறந்துங்கூட சிறைபோன்ற கருப்பப் பையில் மீண்டும் புகா வாழ்வு பெறுதற் பொருட்டே வணங்குகின்றோம் என்க.

வெண்பா

879. பொருளும் குலனும் புகழும் திறனும்
அருளும் அறிவும் அனைத்தும் - ஒருவர்
கருதாஎன் பார்க்கும் கறைமிடற்றாய் தொல்லை
மருதாஎன் பார்க்கு வரும்.

தெளிவுரை : வேறு ஒருவரும் அணிதற்கு உரியது என்று கருதாத என்பை மாலையாகக் கட்டி அணிந்த நீல கண்டனே ! பழங்காலத்து இடைமருதா என்று துதிப்பார்க்கு, பொருளும் நற்சார்பும் புகழும், திறனும் அருளும் அனைத்தும் வரும் என்பதாம்.

கட்டளைக் கலித்துறை

880. வருந்தேன் இறந்தும் பிறந்தும்
மயக்கும் புலன்வழிபோய்ப்
பொருந்தேன் நரகிற் புகுகின்றி
லேன்புகழ் மாமருதிற்
பெருந்தேன் முகந்துகொண் டுண்டு
பிறிதொன்றில் ஆசையின்றி
இருந்தேன் இனிச்சென்(று) இரவேன்
ஒருவரை யாதொன்றுமே.

தெளிவுரை : இனிமேல் பிறந்தும் இறந்தும் வருந்தமாட்டேன். என்னை மயக்கும் பொறிகளின் வழிச்சென்று பொருந்த மாட்டேன். நரகத்தில் விழ மாட்டேன். புகழ் பெற்ற திருவிடைமருதூரில் கோயில் கொண்டிருக்கும் இறைவனாகிய தேனை முகந்து உண்டு பிறிதொன்றில் ஆசையில்லாமல் இருந்தேன். இனி யாரிடமும் சென்று யாசிக்க மாட்டேன். இனி எனக்கு எதுவும் தேவையில்லை என்பதாம்.

நேரிசை ஆசிரியப்பா

881. ஒன்றினோ(டு) ஒன்று சென்றுமுகில் தடவி
ஆடுகொடி நுடங்கும் பீடுகெழு மாளிகை
தெய்வக் கம்மியர் கைம்முயன்று வகுத்த
ஓவநூற் செம்மைப் பூவியல் வீதிக்
குயிலென மொழியும் மயிலியல் ஆயத்து
மான்மாற விழிக்கும் ஆனாச் செல்வத்(து)
இடைமரு(து) இடங்கொண்(டு) இருந்த எந்தை

தெளிவுரை : திருவிடைமருதூரில் உள்ள உயர்ந்த மாளிகைகளை விவரிக்கிறார். ஒன்றோடொன்று உயர்வில் போட்டியிட்டுச் சென்று மேகத்தைத் தடவும் கொடிகள் ஆடுகின்ற பெருமை மிக்க மாளிகைகள் நிறைந்த தெய்வப் பொற் கொல்லர்களால் கைமுயன்று வகுத்த, ஓவநூல் செம்மைப் பூவியல் வீதியில் குயிலென மொழியும் மயிலியல் சாயலும் மான்போன்ற விழிகளும் கொண்ட மாதர்கள் செல்வத்தோடு வாழ்கின்ற திருவிடைமருதூரில் கோயில் கொண்டிருக்கும் எந்தையே !

சுடர்மழு வலங்கொண் டிருந்த தோன்றல்
ஆரணந் தொடராப் பூரண புராண
நாரணன் அறியாக் காரணக் கடவுள்
சோதிச் சுடரொளி ஆதித் தனிப்பொருள்
ஏக நாயக யோக நாயக

தெளிவுரை : சுடர்மழு வலங்கொண்டிருந்த தோன்றலே ! வேதங்கள் தொடர்கின்ற பூரணனே ! புராணங்களில் சிறப்பிக்கப் படுகின்றவனே! திருமால் முயன்றும் காணாத காரணக் கடவுளே ! சோதிச் சுடரொளியே ! ஆதித் தனிப்பொருளே ! ஏக நாயகனே ! (இது திருவிடைமருதூரில் எழுந்தருளிய இறைவர் பெயர்களுள் ஒன்று) யோக நாயகனே !

யானொன்(று) உணர்த்துவ(து) உளதே யான்முன்
நனந்தலை உலகத்(து) அனந்த யோனியில்
பிறந்துழிப் பிறவாது கறங்கெனச் சுழன்றுழித்
தோற்றும் பொழுதின் ஈற்றுத் துன்பத்(து)
யாயுறு துயரமும் யானுறு துயரமும்
இறக்கும் பொழுதின் அறப்பெருந் துன்பமும்
நீயல(து) அறிகுநர் யாரே அதனால்

தெளிவுரை : யான் ஒன்று சொல்ல வேண்டி இருக்கிறது. விரிந்த இடத்தையுடைய இவ்வுலகில் யான் முன் பல பிறவிகள் எடுத்து காற்றாடி போலச் சுழன்று அதனால் நான் பெற்ற துன்பங்கள் பல. இதை நீதான் அறிவாய். அதனால்,

யான்இனிப் பிறத்தல் ஆற்றேன் அஃதான்(று)
உறப்பவம் துடைத்தல் நிற்பிடித் தல்லது
பிறிதொரு நெறியின் இல்லைஅந் நெறிக்கு
வேண்டலும் வெறுத்தலுமாண் டொன்றிற் படரா
உள்ளமொன்(று) உடைமை வேண்டும்அஃ தன்றி

தெளிவுரை : இனி நான் பிறவி எடுக்க மாட்டேன். அதுதான் பிறவியை அறுத்தல். உன்னைப் பற்றுக்கோடாக அடைந்தால்தான் இது முடியும். வேறு வழியில்லை. இது ஓர் ஆண்டில் முடியாது. இதற்கு உள்ள உறுதியும் வேண்டும்.

ஐம்புலன் ஏவல் ஆணைவழி நின்று
தானல(து) ஒன்றைத் தானென நினையும்
இதுஎன(து) உள்ளம் ஆதலின் இதுகொடு
நின்னை நினைப்ப(து) எங்ஙனம் முன்னம்

தெளிவுரை : அஃது அல்லாமல் ஐம்புல ஏவலின் வழிநின்று, தான் அல்லாத ஒன்றைத் தான் என்று நினையும் குணமுடையது என் உள்ளம். ஆதலால் இவைகளை வைத்துக்கொண்டு உன்னை வழிபடுவது இயலாது.

கற்புணை யாகக் கடல்நீர் நீந்தினர்
எற்பிறர் உளரோ இறைவ கற்பம்
கடத்தல்யான் பிறவும் வேண்டும் கடத்தற்கு
நினைத்தல்யான் பெறவும் வேண்டும் நினைத்தற்கு
நெஞ்சுநெறி நிற்கவும் வேண்டும் நஞ்சுபொதி
உரைஎயிற்(று) உரகம் பூண்ட
கறைகெழு மிடற்றெங் கண்ணுத லோயே.

தெளிவுரை : முன்பு கல்லையே தெப்பமாகக் கொண்டு கடல் நீரை நீந்தினர். (நீந்தியவர் திருநாவுக்கரசர்.) இறைவா ! நான் எப்படி இந்தக் கரையை ஏறுவேன்? கடந்துதான் ஆக வேண்டும். நான் நினைத்ததைப் பெறவும் வேண்டும். நினைத்தற்கு நெஞ்சின் வழி நிற்கவும் வேண்டும். விஷப் பாம்பை அணிந்துள்ள நீலகண்டனே ! இதற்கு அருள் செய்வாயாக என்பதாம்.

வெண்பா

882. கண்ணென்றும் நந்தமக்கோர் காப்பென்றும் கற்றிருக்கும்
எண்ணென்றும் மூல எழுத்தென்றும் - மொண்ணை
மருதவப்பா என்றும்உனை வாழ்த்திலரேல் மற்றும்
கருதஅப்பால் உண்டோ கதி.

தெளிவுரை : கண் எப்போதும் நமக்குப் பாதுகாவல் என்றும், நாம் கற்றிருக்கும் அளவை மூல எழுத்து என்றும் நினைந்து, ஒற்றை திருவிடைமருதூரில் கோயில் கொண்டிருக்கும் உன்னை எப்போதும் வாழ்த்தாரேல் மறுபடியும் பிறவியில் வீழாதிருக்க முடியுமோ? நீதான் கதி என்று வழிபடுவாராக.

கட்டளைக் கலித்துறை

883. கதியா வதுபிறி(து) யாதொன்றும்
இல்லை களேவரத்தின்
பொதியா வதுசுமந் தால்விழப்
போமிது போனபின்னர்
விதியாம் எனச்சிலர் நோவதல்
லால்இதை வேண்டுநர்யார்
மதியா வதுமரு தன்கழ
லேசென்று வாழ்த்துவதே.

தெளிவுரை : மாறாத புகலிடம் என்பது வேறு யாதொன்றும் இல்லை. உடல் ஒரு சுமையாகும். சுமந்தால் இறப்போடு முடியும் என்று சொல்வதற்கில்லை. அதன் பின்னர் மற்றொரு பிறவி வரும். இதை நாம் அனுபவிக்கத்தான் வேண்டும் என்று நோவதைத் தவிர உன்னை வேண்டுபவர் யார்? ஆகவே அறிவு என்ன சொல்கிறது என்றால், இடைமருதனாகிய உன் கழலைச் சென்று வாழ்த்துவதுதான். இது தவிர வேறு வழியில்லை என்பதாம்.

நேரிசை ஆசிரியப்பா

884. வாழ்ந்தனம் என்று தாழ்ந்தவர்க்(கு) உதவாது
தன்னுயிர்க்(கு) இரங்கி மன்னுயிர்க்(கு) இரங்கா(து)
உண்டிப் பொருட்டால் கண்டன வெஃகி
அவியடு நர்க்குச் சுவைபகர்ந்(து) ஏவி
ஆரா உண்டி அயின்றன ராகித்
தூராக் குழியைத் தூர்த்துப் பாரா

தெளிவுரை : வணங்குவோருக்கு உதவாமல் வாழ்ந்தோம் என்று, மன்னுயிர்க்கு இரங்காமல் தன்னுயிர்க்கு மட்டும் இரங்கி, உணவின் பொருட்டு கண்டவற்றை எல்லாம் விரும்பி, சமையல் செய்பவருக்கு ஒன்று தராமல் சுவையாக இருந்தது என்று சொல்லி அனுப்பிவிட்டு, தெவிட்டாத உண்டியைத் தான்மட்டும் உண்டு. தூர்க்க முடியாத குழியைத் தூர்த்து,

விழுப்பமும் குலனும் ஒழுக்கமும் கல்வியும்
தன்னிற் சிறந்த நன்மூ தாளரைக்
கூஉய்முன் னின்றுதன் ஏவல் கேட்கும்
சிறாஅர்த் தொகுதியின் உறாஅப் பேசியும்
பொய்யோடு புன்மைதன் புல்லர்க்குப் புகன்றும்

தெளிவுரை : விழுப்பமும் குலனும் ஒழுக்கமும் கல்வியும் பாராமல் தன்னைக் காட்டிலும் சிறந்த வயதில் மூத்த பெரியோர்களை அழைத்து முன்னின்று தன் ஏவல் கேட்கும் சிறுவர் கூட்டத்தைப் போல பொருந்தாதவற்றைக் கூறியும், பொய், புன்மை ஆகியவற்றைத் தகாதவர்களுக்குக் கூறியும்,

மெய்யும் மானமும் மேன்மையும் ஒரீஇத்
தன்னைத் தேறி முன்னையோர் கொடுத்த
தன்மனைக் கிழத்தி யாகிய அந்நிலைச்
சாவுழிச் சாஅந் தகைமையன் ஆயினும்
மேவுழி மேவல் செல்லாது காவலொடு
கொண்டோள் ஒருத்தி உண்டிவேட் டிருப்ப
எள்ளுக்(கு) எண்ணெய் போலத் தள்ளாது
பொருளின் அளவைக்குப் போகம்விற் றுண்ணும்
அருளில் மடந்தையர் ஆகந் தோய்ந்தும்

தெளிவுரை : மெய்யும் மானமும் மேன்மையும் நீங்கி, தன்னை அறிந்து பெரியோர்கள் கொடுத்த நல்ல மனைவியைப் பற்றிக் கவனியாமல், வேறொருத்தி உண்டி வேட்டிருப்ப எள்ளுக்கு எண்ணெய் போலத் தள்ளாமல், ஆடவர் தரும் பொருளுக்கு ஏற்றவாறு இன்பம் தருகின்ற விலைமகளிரிடம் இன்பம் அனுபவித்தும்,

ஆற்றல்செல் லாது வேற்றோர் மனைவயின்
கற்புடை மடந்தையர் பொற்புநனி கேட்டுப்
பிழைவழி பாராது நுழைவழி நோக்கியும்
நச்சி வந்த நல்கூர் மாந்தர்தம்
விச்சையிற் படைத்த வெவ்வேறு காட்சியின்

தெளிவுரை : ஆற்றல் செல்லாமல் வேற்றோர் வீட்டில் சென்று கற்புடை மனைவியரது இன்பத்தை விரும்பியும் நன்னெறியைக் கைவிட்டு, தீ நெறியில் சென்றும், விரும்பி வந்த வறுமை மாந்தரிடம் உள்ள கல்வித் திறனைக் கண்டு களித்து,

அகமலர்ந்(து) ஈவார் போல முகமலர்ந்(து)
இனிது மொழிந்தாங்(கு) உதவுதல் இன்றி
நாளும் நாளும் நாள்பல குறித்தவர்
தாளின் ஆற்றலும் தவிர்த்துக் கேள்இகழ்ந்(து)
இகமும் பரமும் இல்லை என்று
பயமின்(று) ஒழுகிப் பட்டிமை பயிற்றி
மின்னின் அனையதன் செல்வத்தை விரும்பித்

தெளிவுரை : அவர்களது திறமைக்கு ஏற்றவாறு மனமலர்ந்து கொடுப்பார் போல முகமலர்ந்து இனிது மொழிந்தாங்கு உதவாமல் நாளைக் கடத்தியவர், முயற்சியும் இல்லாமல் சுற்றத்தாரால் இகழப்பட்டு இம்மையும் மறுமையும் இல்லாமல் பயமில்லாமல் காலம் கடத்திப் பொய்யை வளர்த்து, மின்னலைப் போலத் தோன்றி மறையும் செல்வத்தை விரும்பி,

தன்னையும் ஒருவ ராக உன்னும்
ஏனையோர் வாழும் வாழ்க்கையும் நனைமலர்ந்(து)
யோசனை கமழும் உற்பல வாவியிற்
பாசடைப் பரப்பிற் பால்நிற அன்னம்
பார்ப்புடன் வெருவப் பகுவாய் வாளைகள்
போர்த்தொழில் புரியும் பொருகா விரியும்

தெளிவுரை : தன்னையும் ஒரு மேலோனாக எண்ணும் மற்றவர்கள் வாழும் வாழ்க்கையும், அரும்பு மலர்ந்து வெகு தூரம் வரை வாசனை வீசும் நீலோற்பலம் (குவளை) உள்ள குளத்தில் பச்சை இலைகளுக்கு மத்தியில் பால்போன்ற வெண்மை நிறமுள்ள அன்னம் தன் குஞ்சுகளுடன் பயப்பட, பிளந்த வாயை உடைய வாளை மீன்கள் போர்த்தொழில் புரியும் வண்ணம் விரைந்து வரும் காவிரியும்,

மருதமும் சூழ்ந்த மருத வாண
சுருதியும் தொடராச் சுருதி நாயக
பத்தருக்(கு) எய்ப்பினில் வைப்பென உதவும்
முத்தித் தாள மூவா முதல்வநின்
திருவடி பிடித்து வெருவரல் விட்டு
மக்களும் மனைவியும் ஒக்கலும் திருவும்
பொருளென நினையா(து) உன்அரு ளினைநினைந்(து)

தெளிவுரை : விளை நிலங்களும் சூழ்ந்த மருதவாண ! சுருதி தொடராத சுருதி நாயக ! பக்தர்களுக்கு உதவும் சேமிப்பு நிதி போல முத்தியைத் தரும் திருவடிகளை உடையவனே ! அழிவில்லாத முதல்வனே ! உன்னுடைய திருவடியைப் பிடித்துப் பயப்படாமல் மனைவி மக்களும், உறவினரும், இலக்குமியும் செல்வமாகக் கருதாமல், உன் அருளையே நினைந்து,

இந்திரச் செல்வமும் எட்டுச் சித்தியும்
வந்துழி வந்துழி மறுத்தனர் ஒதுங்கிச்
சின்னச் சீரை துன்னல் கோவணம்
அறுதற் கீளொடு பெறுவது புனைந்து
சிதவ லோடுஒன்று உதவுழி எடுத்தாங்(கு)
இடுவோர் உளரெனின் நிலையினின்(று) அயின்று
படுதிரைப் பாயலிற் பள்ளி மேவி

தெளிவுரை : இந்திரச் செல்வமும் அஷ்டமா சித்திகளும் வந்தபோது வேண்டாமென்று மறுத்தவர் ஒதுங்கி சின்னச் சீரையாகிய தைத்த கோவணத்தையும் கிழிந்த அரைத் துண்டையும் பெறுவது புனைந்து, கந்தைத் துணியையும் உதவும்போது எடுத்தாங்கு இடுவோர் இருந்தால், நின்றபடியே உணவை உட்கொண்டு, தரையாகிய படுக்கையிலே படுத்து,

ஓவாத் தகவெனும் அரிவையைத் தழீஇ
மகவெனப் பல்லுயிர் அனைத்தையும் ஒக்கப்
பார்க்கும்நின்
செல்வக் கடவுள் தொண்டர் வாழ்வும்
பற்றிப் பார்க்கின் உற்ற நாயேற்குக்
குளப்படி நீரும் அளப்பருந் தன்மைப்
பிரளய சலதியும் இருவகைப் பொருளும்
ஒப்பினும் ஒவ்வாத் துப்பிற்(று) ஆதலின்

தெளிவுரை : ஒழியாத பெருமை என்னும் அரிவையைத் (25 வயதுடைய பெண்) தழுவி, பிள்ளையாகப் பல உயிர்களையும் சமமாகக் கருதும் நின் அடியார் வாழ்வும் பற்றிப் பார்க்கின் பொருந்திய நாய் போன்ற எனக்கு, குளம் மறையும் அளவுள்ள நீரும் அளவிடுதற்கு அரிய சலதியும் இருவகைப் பொருளும் தொண்டர் வாழ்வுக்கு ஒப்பாகும்.

நின்சீர் அடியார் தஞ்சீர் அடியார்க்(கு)
அடிமை பூண்டு நெடுநாட் பழகி
முடலை யாக்கையொடு புடைபட்(டு) ஒழுகியவர்
காற்றலை ஏவலென் நாய்த்தலை ஏற்றுக்
கண்டது காணின் அல்லதொன்(று)
உண்டோ மற்றெனக்(கு) உள்ளது பிறிதே.

தெளிவுரை : என்றாலும் மன உறுதியுள்ள அடியார்க்கு அடிமை பூண்டு, நெடுநாள் பழகி, துர்நாற்றம் வீசும் இந்த உடம்போடு சேர்ந்து வாழ்ந்தவர் காலால் இடும் வேலையைத் தலையால் செய்யும் பணியை ஏற்று கண்டது காணின் அல்லது வேறு ஒன்று உண்டோ? இதுதான் என் பணி. மற்றவை எல்லாம் எனக்கு வேறானதே என்பதாம்.

வெண்பா

885. பிறிந்தேன் நரகம் பிறவாத வண்ணம்
அறிந்தேன் அநங்கவேள் அம்பிற் - செறிந்த
பொருதவட்ட வில்பிழைத்துப் போந்தேன் புராணன்
மருதவட்டந் தன்னுளே வந்து.

தெளிவுரை : பழைமையானவனும் இடைமருது வட்டம் என்னும் இவனுடைய எல்லையில் வந்து நான் பெற்ற பேறுகள் யாவையெனின், தீவினையின் பயனை நுகரும் இடமாகிய நரகத்தைவிட்டுப் பிரிந்தேன். உருவில்லாதவனாகிய காமனுடைய அம்பில் பொருத, வட்டமாகிய வில்லுக்குப் பிழைத்து விட்டேன் என்பதாம்.

கட்டளைக் கலித்துறை

886. வந்திகண் டாய்அடி யாரைக்கண்
டால்மற வாதுநெஞ்சே
சிந்திகண் டாய்அரன் செம்பொற்
கழல்திரு மாமருதைச்
சந்திகண் டாயில்லை யாயின்
நமன்தமர் தாங்கொடுபோய்
உந்திகண் டாய்நிர யத்துன்னை
வீழ்த்தி உழக்குவரே.

தெளிவுரை : நெஞ்சமே ! அடியாரைக் கண்டால் வணங்குவாயாக. அரன் செம்பொற்கழல் கண்டால் எண்ணுவாயாக. திருமாமருதைச் சேர முயற்சிப்பாயாக. இல்லையேல் எமதூதர்கள் வந்து உன்னைக் கொண்டுபோய் நரகத்தில் தள்ளிவிடுவர். துன்பப்படுத்துவர் என்பதாம்.

நேரிசை ஆசிரியப்பா

887. உழப்பின் வாரா உறுதிகள் உளவோ
கழப்பின் வாராக் கையற வுளவோ அதனால்
நெஞ்சப் புனத்து வஞ்சக் கட்டையை
வேரற அகழ்ந்து போக்கித் தூர்வைசெய்(து)
அன்பென் பாத்தி கோலி முன்புற
மெய்யெனும் எருவை விரித்தாங்(கு) ஐயமில்
பத்தித் தனிவித் திட்டு நித்தலும்
ஆர்வத் தெண்ணீர் பாய்ச்சி நேர்நின்று
தடுக்குநர்க்(கு) அடங்கா(து) இடுக்கண் செய்யும்
பட்டி அஞ்சினுக்(கு) அஞ்சியுட் சென்று

தெளிவுரை : முயற்சியினால் வராத உறுதிப் பொருட்கள் உண்டோ? சோம்பலினால் வராத துன்பங்கள் உண்டோ? நெஞ்சமாகிய புனத்திலுள்ள வஞ்சக் கட்டையை வேரொடு தோண்டி எடுத்து, செம்மைப்படுத்தி, அன்பு என்னும் பாத்தியை அமைத்து, முன்னதாக மெய்யென்னும் எருவைப் போட்டு, ஐயமில்லாமல் பக்தியாகிய ஒப்பற்ற விதையை விதைத்து, நாள்தோறும் ஆர்வமாகிய தெளிந்த நீரைப் பாய்ச்சி, நேர்நின்று, தடுப்பவர்களுக்கு அஞ்சாமல் துன்பம் செய்யும் முரட்டு மாடுகளைப் போன்ற ஐந்து பொறிகளுக்கு,

சாந்த வேலி கோலி வாய்ந்தபின்
ஞானப் பெருமுளை நந்தாது முளைத்துக்
கருணை இளந்தளிர் காட்ட அருகாக்
காமக் குரோதக் களையறக் களைந்து
சேமப் படுத்துழிச் செம்மையின் ஓங்கி

தெளிவுரை : அஞ்சி உள்ளே சென்று, காந்தமாகிய வேலி அமைத்து, எல்லாம் சரியான பிறகு, ஞானமாகிய பெருமுளை கெடாமல் முளைத்து, கருணையாகிய இளந்தளிர் காட்ட, குறையாத காமம் குரோதம் என்னும் களைகளைக் களைந்து, பாதுகாக்கும் செழுமையாக வளர்ந்து,

மெய்ம்மயிர்ப் புளகம் முகிழ்த்திட்(டு) அம்மெனக்
கண்ணீர் அரும்பிக் கடிமலர் மலர்ந்து புண்ணிய
அஞ்செழுத்(து) அருங்காய் தோன்றி நஞ்சுபொதி
காள கண்டமும் கண்ணொரு மூன்றும்
தோளொரு நான்கும் சுடர்முகம் ஐந்தும்
பவளநிறம் பெற்றுத் தவளநீறு பூசி
அறுசுவை அதனினும் உறுசுவை உடைத்தாய்க்

தெளிவுரை : மயிர் சிலிர்த்து , கண்ணீர் அரும்பி, கடிமலர் மலர்த்து, புண்ணிய ஐந்தெழுத்து என்னும் அருமையான காய் தோன்றி, கறுத்த கழுத்தும், நெற்றிக் கண்ணும் நான்கு தோள்களும், பிரகாசமான ஐந்து முகங்களும், பவள நிறம் பெற்று, வெண்ணீறு பூசி, அறுசுவையைக் காட்டிலும் மிகுந்த சுவையுடையதாய்,

காணினும் கேட்பினும் கருதினுங் களிதரும்
சேணுயர் மருத மாணிக்கத் தீங்கனி
பையப் பையப் பழுத்துக் கைவர
எம்ம னோர்கள் இனிதின் அருந்திச்
செம்மாந் திருப்பச் சிலர்இதின் வாராது

தெளிவுரை : பார்த்தாலும், கேட்டாலும், கருதினாலும் இன்பம் தரும் உயரத்திலுள்ள மருத மாணிக்கமாகிய தீங்கனி மெல்ல மெல்லப் பழுத்து, கையில் வந்து சேர, எம்மனோர்கள் இனிதிருந்து அருந்தி, யாதொரு கவலையும் இன்றி இருப்ப,

மனமெனும் புனத்தை வறும்பா ழாக்கிக்
காமக் காடு மூடித் தீமைசெய்
ஐம்புல வேடர் ஆறலைத்(து) ஒழுக
இன்பப் பேய்த்தேர் எட்டா(து) ஓடக்
கல்லா உணர்வெனும் புல்வாய் அலமர
இச்சைவித்(து) உகுத்துழி யானெனப் பெயரிய
நச்சு மாமரம் நனிமிக முளைத்துப்

தெளிவுரை : சிலர் இதில் சேராமல், மனமெனும் புனத்தைத் திருத்தம் செய்யாமல், காமமாகிய காடு மூடி, தீமை செய்கின்ற ஐம்புலன்களாகிய வேடுவர் வழிபறித்து ஒழுக. சிற்றின்பமாகிய கானல் எனக்கு எட்டாமல் ஓட, படிக்காத உணர்வு என்னும் மான் தடுமாற, இச்சையாகிய வித்து உகுத்துழி யான் எனது என்னும் நச்சுமாமரம் நன்றாக முளைத்து,

பொய்யென் கவடுகள் போக்கிச் செய்யும்
பாவப் பஃறழை பரப்பிப் பூவெனக்
கொடுமை அரும்பிக் கடுமை மலர்ந்து
துன்பப் பல்காய் தூக்கிப் பின்பு
மரணம் பழுத்து நரகிடை வீழ்ந்து
தமக்கும் பிறர்க்கும் உதவா(து)
இமைப்பிற் கழியும் இயற்கையோர் உடைத்தே.

தெளிவுரை : பொய்யென்னும் கவடுகள் விட்டு, செய்கின்ற பாவமாகிய பல தழைகளைப் பரப்பி, பூ என்ற கொடுமை அரும்பி கடுமை மலர்ந்து, துன்பமாகிய பல காய்களைக் காய்த்து, பின்பு மரணம் பழுத்து, நரகில் விழுந்து, தமக்கும் பிறர்க்கும் பயன்படாமல் இமைப் பொழுதில் கழியும் இயற்கையும் உடைத்து.

வெண்பா

888. உடைமணியின் ஓசைக்(கு) ஒதுங்கி அரவம்
படம்ஒடுங்கப் பையவே சென்றங்(கு) - உடைமருதர்
ஐயம் புகுவ(து) அணியிழையார் மேல் அநங்கன்
கையம் புகவேண்டிக் காண்.

தெளிவுரை : உடையிலுள்ள சதங்கையின் ஓசைக்கு அஞ்சி பாம்பு படத்தைச் சுருக்கிக் கொள்ள, மெதுவாகச் சென்று இடைமருதர் பிச்சை ஏற்பது, அழகிய ஆபரணங்களை அணிந்த மாதர்கள்மேல் மன்மதன் கையிலுள்ள அம்பு தைப்பதற்காகத்தான் என்றபடி.

கட்டளைக் கலித்துறை

889. காணீர் கதியொன்றும் கல்லீர்
எழுத்தஞ்சும் வல்லவண்ணம்
பேணீர் திருப்பணி பேசீர்
அவன்புகழ் ஆசைப்பட்டுப்
பூணீர் உருத்திர சாதனம்
நீறெங்கும் பூசுகிலீர்
வீணீர் எளிதோ மருதப்
பிரான்கழல் மேவுதற்கே.

தெளிவுரை : நீங்கள் மருதவாணரது கழல்களை அடைவதற்குரிய வழியைக் காணமாட்டீர்கள். ஐந்தெழுத்தைக் கற்க மாட்டீர்கள். கோயில் திருப்பணிகளை நல்ல வழியில் செய்ய மாட்டீர்கள். அவன் புகழை விரும்பிப் பேசமாட்டீர்கள். உருத்திராட்சத்தை அணிய மாட்டீர்கள். திருநீற்றைப் பூச மாட்டீர்கள். வீணாகக் காலத்தைக் கழிக்கிறீர்களே ! அவனை அடைய முயலுங்கள் என்பதாம்.

நேரிசை ஆசிரியப்பா

890. மேவிய புன்மயிர்த் தொகையோ அம்மயிர்
பாவிய தோலின் பரப்போ தோலிடைப்
புகவிட்டுப் பொதிந்த புண்ணோ புண்ணிடை
ஊறும் உதிரப் புனலோ கூறுசெய்(து)
இடையிடை நிற்கும் எலும்போ எலும்பிடை

தெளிவுரை : பொருந்திய தாழ்ந்த மயிர்த் தொகையோ, அம்மயிர் பரவிய தோலின் பரப்போ, தோலிடைப் புகவிட்டுப் பொதிந்த புண்ணோ, புண்ணிடை ஊறும் இரத்தப் பெருக்கோ, பகுத்துப் பிரித்து இடையிடை நிற்கும் எலும்போ,

முடைகெழு மூளை விழுதோ வழுவழுத்(து)
உள்ளிடை ஒழுகும் வழும்போ மெள்ளநின்(று)
ஊரும் புழுவின் ஒழுங்கோ நீரிடை
வைத்த மலத்தின் குவையோ வைத்துக்
கட்டிய நரம்பின் கயிறோ உடம்பிற்குள்

தெளிவுரை : எலும்பின் இடையில் துர்நாற்றம் வீசுகின்ற மூளையின் நிணமோ, வழுவழுப்போடு கூடிய உள்ளே ஒழுகுகின்ற மச்சையோ, மெள்ள நின்று ஊறுகின்ற புழுவின் வரிசையோ, நீரிடை வைத்த மலத்தின் குவியலோ, வைத்துக் கட்டிய நரம்பின் கயிறோ, உடம்பிற்குள்,

பிரியா(து) ஒறுக்கும் பிணியோ தெரியாது
இன்னது யானென்(று) அறியேன் என்னை
எங்கும் தேடினன் யாதிலும் காணேன் முன்னம்
வரைத்தனி வில்லாற் புரத்தைஅழல் ஊட்டிக்
கண்படை யாகக் காமனை ஒருநாள்

தெளிவுரை : பிரியாமல் துன்புறுத்தும் நோயோ, அது இன்னது என்று எனக்குத் தெரியவில்லை. என் உடல் முழுதும் தேடினேன். அதைக் காணவில்லை. முன்பு மேருமலையை வில்லாகக் கொண்டு திரிபுரங்களைத் தீ வைத்துக் கொளுத்தி, நெற்றிக் கண்ணை ஆயுதமாகக் கொண்டு மன்மதனை அன்றொரு நாள்,

நுண்பொடி யாக நோக்கி அண்டத்து
வீயா அமரர் வீயவந்(து) எழுந்த
தீவாய் நஞ்சைத் திருவமு தாக்கி
இருவர் தேடி வெருவர நிமிர்ந்து
பாலனுக் காகக் காலனைக் காய்ந்து

தெளிவுரை : சாம்பலாகும்படி நோக்கி, வானத்திலுள்ள சாகா வரம் பெற்ற தேவர்கள் அழியுமாறு வந்தெழுந்த தீப் போன்ற வாயினையுடைய ஆலகால விடத்தை, திருஅமுதாக்கி திருமாலும் பிரமனும் தேடி, அவர்கள் அஞ்சுமாறு நிமிர்ந்து, மார்க்கண்டேயனுக்காகக் காலனை உதைத்து,

சந்தன சரள சண்பக வகுள
நந்தன வனத்திடை ஞாயிறு வழங்காது
நவமணி முகிழ்த்த புதுவெயில் எறிப்ப
எண்ணருங் கோடி இருடிகணங் கட்குப்
புண்ணியம் புரக்கும் பொன்னி சூழ்ந்த

தெளிவுரை : சந்தனம், சரளம், சண்பகம், மகிழ் ஆகிய மரங்கள் நிறைந்த நந்தன வனத்திடை சூரிய ஒளி உள்ளே புக முடியாதபடி அடர்ந்து, நவமணிகள் ஒளி வீச, எண்ணற்ற முனிவர்களுக்குப் புண்ணியம் அளிக்கும் காவிரி ஆறு சூழ்ந்த,

திருவிடை மருத பொருவிடைப் பாக
மங்கை பங்க கங்கை நாயகநின்
தெய்வத் திருவருள் கைவந்து கிடைத்தலின்
மாயப் படலம் கீறித் தூய
ஞான நாட்டம் பெற்றபின் யானும்

தெளிவுரை : திருவிடைமருதூர் என்னும் தலத்தில் கோயில் கொண்டிருக்கும் இறைவனே ! கொல்லேற்றுப் பாகனே ! உமாதேவியை இடப்பாகத்தில் கொண்டவனே ! கங்கையின் நாயகனே ! உன் தெய்வத்திருவருள் கைகூடி இருப்பதால் மாய வாழ்க்கையைக் கிழித்து, தூய ஞானக்கண் பெற்றபின்,

நின்பெருந் தன்மையும் கண்டேன் காண்டலும்
என்னையும் கண்டேன் பிறரையுங் கண்டேன்
நின்னிலை அனைத்தையும் கண்டேன் என்னே
நின்னைக் காணா மாந்தர்
தன்னையும் காணாத் தன்மை யோரே.

தெளிவுரை : யானும் நின் பெருந்தன்மையைக் கண்டேன். காணவும் என்னையும் கண்டேன். பிறரையும் கண்டேன். நின்னிலை அனைத்தையும் கண்டேன். உன்னைக் காணாத மாந்தர் தன்னை அறியாதவர் ஆவர்.

வெண்பா

891. ஓராதே அஞ்செழுத்தும் உன்னாதே பச்சிலையும்
நேராதே நீரும் நிரப்பாதே - யாராயோ
எண்ணுவார் உள்ளத்(து) இடைமருதர் பொற்பாதம்
நண்ணுவாம் என்னுமது நாம்.

தெளிவுரை : ஐந்தெழுத்தைத் தியானிக்காமலும், பச்சிலையை நினைக்காமலும், மஞ்சன நீரைக் கொண்டுவந்து நிரப்பாமலும் இருந்துவிட்டால் இறைவன் அருள் கிடைக்குமோ? யார் ஒருவர் திருவிடைமருதர் பொற்பாதத்தை நண்ணுவார்களோ அவர்களே பதம் பெறுவர் என்பதாம். வேறு தெய்வங்களை எண்ணிப் பயனில்லை.

கட்டளைக் கலித்துறை

892. நாமே இடையுள்ள வாறறி
வாம்இனி நாங்கள்சொல்ல
லாமே மருதன் மருத
வனத்தன்னம் அன்னவரைப்
பூமேல் அணிந்து பிழைக்கச்செய்
தார்ஒரு பொட்டுமிட்டார்
தாமே தளர்பவ ரைப்பாரம்
ஏற்றுதல் தக்கதன்றே.

தெளிவுரை : திருவிடை மருத வனத்தில் உள்ள அன்னம் போன்ற தலைவியைப் பூ மேல் அணிந்து, பிழைக்கச் செய்தவர். ஒரு பொட்டும் இட்டார். தாமே தளர்பவரைப் பாரம் ஏற்றுதல் தக்கதன்று. நாமே இடையுள்ளவாறு அறிவோம். இனி நாங்கள் சொல்ல வேண்டா.

நேரிசை ஆசிரியப்பா

893. அன்றினர் புரங்கள் அழலிடை அவியக்
குன்றுவளைத்(து) எய்த குன்றாக் கொற்றத்து
நுண்பொடி அணிந்த எண்தோள் செல்வ
கயிலைநடந் தனைய உயர்நிலை நோன்தாள்
பிறைசெறிந் தன்ன இருகோட்(டு) ஒருதிமில்

தெளிவுரை : பகைவர்களது திரிபுரங்கள் தீயில் அழிய, மேரு மலையை வளைத்து எய்த, குன்றாத வெற்றியையும் திருநீறு அணிந்த எண் தோள்களையும் உடைய செல்வ ! கயிலை மலை நடந்தது போல உயர்நிலை வலிமையையும் பிறை பதித்தது போன்ற இரு கொம்புகளும் ஒரு திமிலும்,

பால்நிறச் செங்கண் மால்விடைப் பாக
சிமையச் செங்கோட்(டு) இமையச் செல்வன்
மணியெனப் பெற்ற அணியியல் அன்னம்
வெள்ளைச் சிறுநகைக் கிள்ளைப் பிள்ளை
குயிலெனப் பேசும் மயிலிளம் பேடை

தெளிவுரை : பால் நிறமும் செங்கண்ணும் உள்ள காளையை ஊர்தியாக உடையவனே ! உயர்ந்த சிகரங்களையுடைய இமயச் செல்வன் (பர்வத ராஜன்) பெற்ற பார்வதி தேவி. அவள் வெள்ளைச் சிறுநகைக் கிள்ளைப் பிள்ளை. குயில் எனப் பேசும் மயிலிளம் பேடை.

கதிரொளி நீலம் கமலத்து மலர்ந்தன
மதரரி நெடுங்கண் மானின் கன்று
வருமுலை தாங்கும் திருமார்பு வல்லி
வையம் ஏழும் பன்முறை ஈன்ற
ஐய திருவயிற்(று) அம்மைப் பிராட்டி

தெளிவுரை : கதிரொளி நீலம் கமலத்து மலர்ந்தன மதரரி நெடுங்கண்கள். மான் கன்று போன்றவள். வருமுலை தாங்கும் திருமார்பு வல்லி. (வல்லி-கொடி போன்றவள்.) ஏழு உலகங்களையும் பலமுறை பெற்ற திருவயிற்றை உடைய பிராட்டி.

மறப்பரும் செய்கை அறப்பெருஞ் செல்வி
எமையா ளுடைய உமையாள் நங்கை
கடவுட் கற்பின் மடவரல் கொழுந
பவள மால்வரைப் பணைக்கைபோந் தனைய
தழைசெவி எண்தோள் தலைவன் தந்தை

தெளிவுரை : மறப்பதற்கரிய செய்கைகளைச் செய்த அறப்பெருஞ் செல்வி. எம்மை ஆளுடைய உமையாள் என்னும் நங்கை. அத்தகைய கடவுள் கற்பின் மடவரலின் கொழுநனே ! பவளம் போன்ற மால்வரை; பனைக்கை போன்ற துதிக்கையையும் தழைந்த செவிகளையும் எண் தோள்களையும் உடைய விநாயகக் கடவுளது தந்தையே !

பூவலர் குடுமிச் சேவலம் பதாகை
மலைதுளை படுத்த கொலைகெழு கூர்வேல்
அமரர்த் தாங்கும் குமரன் தாதை
பொருதிடங் கொண்ட பொன்னி புரக்கும்
மருதிடங் கொண்ட மருத வாண

தெளிவுரை : பூப்போன்ற உச்சிக் கொண்டையை உடைய சேவற் கொடியையும் கொலை வேலையும் உடைய அமரர் தாங்கும் முருகப் பெருமானின் தந்தையே ! காவிரி சூழ்ந்த மருது இடம் கொண்ட மருதவாண !

நின்னது குற்றம் உளதோ நின்னினைந்(து)
எண்ணரும் கோடி இடர்ப்பகை கடந்து
கண்ணுறு சீற்றத்துக் காலனை வதையா
இறப்பையும் பிறப்பையும் இகந்து சிறப்பொடு
தேவர் ஆவின் கன்றெனத் திரியாப்

தெளிவுரை : குற்றம் உன்னுடையதோ? உன்னை நினைந்து பல கோடி துன்பங்களைக் களைந்து, மிகுந்த கோபம்கொண்ட காலனை வதைத்து, இறப்பையும் பிறப்பையும் நீக்கி, சிறப்போடு காமதேனுவின் கன்றெனத் திரிந்து,

பாவிகள் தமதே பாவம் யாதெனின்
முறியாப் புழுக்கல் முப்பழங் கலந்த
அறுசுவை அடிசில் அட்டினி(து) இருப்பப்
புசியா தொருவன் பசியால் வருந்துதல்
அயினியின் குற்றம் அன்று வெயிலின்வைத்(து)

தெளிவுரை : பாவிகள் உடையதே பாவம். எப்படியென்றால் உடையாத சோறும் மா, பலா, வாழை என்ற மூன்று பழங்களும் கலந்த அறுசுவை சமையல் சமைத்து இனிது இருப்ப, அவைகளைப் புசியாமல் ஒருவன் பசியால் வருந்துதல் உணவின் குற்றம் அல்ல. அதேபோல வெயிலில் வைத்து,

ஆற்றிய தெண்ணீர் நாற்றமிட் டிருப்ப
மடாஅ ஒருவன் விடாஅ வேட்கை
தெண்ணீர்க் குற்றம் அன்று கண்ணகன்று
சேந்துளி சிதறிப் பூந்துணர் துறுமி
வாலுகங் கிடந்த சோலை கிடப்ப
வெள்ளிடை வெயிலிற் புள்ளிவெயர் பொடிப்ப
அடிபெயர்த்(து) இடுவான் ஒருவன்
நெடிது வருந்துதல் நிழல்தீங்(கு) அன்றே.

தெளிவுரை : ஆற்றிய தெண்ணீர் நறுமணம் ஊட்டப்பட்டிருக்க, அதைக் குடிக்காமல் ஒருவன் நீர் வேட்கையோடு இருந்தால் அது தெண்ணீர்க் குற்றம் அல்ல. கண் அகன்று தேன் துளி சிதறிப் பூந்துணர் சேர்ந்து மணற்குவியலோடு சோலை இருப்ப, வெளியே வெய்யிலில் வியர்த்துப் போகுமாறு அடிபெயர்ந்து ஒருவன் நீண்ட நேரம் வருந்துதல் நிழலின் தீங்கன்று. அதாவது இறைவனது அருள் தேங்கி இருக்கும்போது அதை மக்கள் பயன்படுத்திக் கொள்ளவில்லையே என்று ஆசிரியர் தனது ஆற்றாமையை வெளிப்படுத்துகின்றார்.

வெண்பா

894. அன்றென்றும் ஆமென்றும் ஆறு சமயங்கள்
ஒன்றொன்றோ(டு) ஒவ்வா(து) உரைத்தாலும் - என்றும்
ஒருதனையே நோக்குவார் உள்ளத் திருக்கும்
மருதனையே நோக்கி வரும்.

தெளிவுரை : (ஆறு சமயங்களாவன: சைவம், வைணவம், சாக்தம், காணாபத்தியம், கௌமாரம், சௌரம் என்பன. ஆறு சமயங்களும் முடிவில் மருதனையே நோக்கி வந்து முடியும் என்கிறார்.) அன்று என்றும், ஆம் என்றும் ஆறு சமயங்களும் ஒன்றோடு ஒன்று மாறுபட்டு உரைத்தாலும் ஒருமைப்பாட்டை நோக்குகின்றவர்கள் உள்ளத்தில் இருக்கும் மருதனையே நோக்கி வரும். அதாவது ஆறு சமயங்களும் சைவத்தில் அடங்கும் என்பதாம்.

கட்டளைக் கலித்துறை

895. நோக்கிற்றுக் காமன் உடல்பொடி
யாக நுதிவிரலால்
தாக்கிற்(று) அரக்கன் தலைகீழ்ப்
படத்தன் சுடர்வடிவாள்
ஓக்கிற்றுத் தக்கன் தலைஉருண்
டோடச் சலந்தரனைப்
போக்கிற்(று) உயர்பொன்னி சூழ்மரு
தாளுடைப் புண்ணியமே.

தெளிவுரை : புண்ணிய உருவானவனாகிய இறைவனுடைய நெற்றிக்கண் மன்மதனுடைய உடல் சாம்பலாகுமாறு செய்தது. கால் விரல் நுனி இராவணனது தலை கீழ்ப்படத் தாக்கிற்று. சுடர் வடிவாள் தக்கன் தலை உருண்டோடச் செய்தது. உயர் பொன்னி சூழ் மருது ஆளுடைப் புண்ணியம் சலந்தரனை அழித்தது என்பதாம்.

நேரிசை ஆசிரியப்பா

896. புண்ணிய புராதன புதுப்பூங் கொன்றைக்
கண்ணி வேய்ந்த கைலை நாயக
காள கண்ட கந்தனைப் பயந்த
வாளரி நெடுங்கண் மலையாள் கொழுந
பூத நாத பொருவிடைப் பாக

தெளிவுரை : புண்ணியம் நிறைந்த பழைமையானவனே. கொன்றையைத் தலை மாலையாகக் கொண்டவனே ! கயிலைக்கு நாயகனே ! விடத்தைக் கழுத்தில் வைத்துள்ளவனே ! கந்தனைப் பயந்த வாளரி நெடுங்கண் உமாதேவியின் கொழுநனே ! பூத கணங்களுக்கு நாதனே ! கொல்லேற்று வாகனனே !

வேத கீத விண்ணோர் தலைவ
முத்தி நாயக மூவா முதல்வ
பத்தி யாகிப் பணைத்தமெய் யன்பொடு
நொச்சி யாயினும் கரந்தை யாயினும்
பச்சிலை யிட்டுப் பரவுந் தொண்டர்

தெளிவுரை : வேத கீதனே ! தேவர்களுக்குத் தலைவனே ! முத்திக்கு நாயகனே ! மூவா முதல்வ ! பக்தி கொண்டு பணைத்த மெய்யன்பொடு நொச்சி, கரந்தை ஆகிய பச்சிலை கொண்டு அருச்சிக்கும் தொண்டர்கள்,

கருவிடைப் புகாமல் காத்தருள் புரியும்
திருவிடை மருத திரிபு ராந்தக
மலர்தலை உலகத்துப் பலபல மாக்கள்
மக்களை மனைவியை ஒக்கலை ஓரீஇ
மனையும் பிறவுந் துறந்து நினைவரும்

தெளிவுரை : மறுபடியும் பிறவி எடுக்காமல் காத்து அருள் புரியும் திருவிடை மருத ! திரிபுராந்தக ! பரந்த இவ்வுலகில் பலபல மாக்கள் மக்களையும் மனைவியையும் சுற்றத்தாரையும் விட்டு நீங்கி, வீடு வாசல்களைத் துறந்து,

காடும் மலையும் புக்குக் கோடையிற்
கைம்மேல் நிமிர்த்துக் காலொன்று முடக்கி
ஐவகை நெருப்பின் அழுவத்து நின்று
மாரி நாளிலும் வார்பனி நாளிலும்
நீரிடை மூழ்கி நெடிது கிடந்தும்

தெளிவுரை : காடும் மலையும் புகுந்து, கோடையில் கையைத் தலைக்கு மேலே உயர்த்தி, ஒரு காலை முடக்கி, ஐந்து வகையான நெருப்பின் மத்தியில் நின்று, மழைக் காலத்திலும், பனிக் காலத்திலும் நீரில் மூழ்கி அதிக நேரம் கிடந்தும்,

சடையைப் புனைந்தும் தலையைப் பறித்தும்
உடையைத் துறந்தும் உண்ணா(து) உழன்றும்
காயும் கிழங்கும் காற்றுதிர் சருகும்
வாயுவும் நீரும் வந்தன அருத்தியும்
களரிலும் கல்லிலும் கண்படை கொண்டும்

தெளிவுரை : சடையைப் புனைந்தும், தலையை மொட்டை அடித்தும், ஆடையைத் துறந்தும் பட்டினி கிடந்தும், காயும் கிழங்கும் காற்றில் உதிர்ந்த சருகும் காற்றையும் நீரையும் எது கிடைக்கிறதோ அதை அருந்தியும், களரிலும் கல்லிலும் தூங்கி,

தளர்வுறும் யாக்கையைத் தளர்வித்து ஆங்கவர்
அம்மை முத்தி அடைவதற் காகத்
தம்மைத் தாமே சாலவும் ஒறுப்பர்
ஈங்கிவை செய்யாது யாங்கள் எல்லாம்
பழுதின்(று) உயர்ந்த எழுநிலை மாடத்தும்

தெளிவுரை : தளர்ச்சியடையும் உடம்பைத் தளர்வித்து ஆங்கு அவர் வீடுபேறு ஆகிய முத்தியை அடைவதற்காகத் தம்மைத் தாமே மிகவும் தண்டிப்பர். இங்கு இவ்வாறு செய்யாமல், யாங்கள் எல்லாம் குறைவில்லாமல் உயர்ந்த எழுநிலை மாடத்தில்,

செழுந்தா(து) உதிர்ந்த நந்தன வனத்தும்
தென்றல் இயங்கும் முன்றில் அகத்தும்
தண்டாச் சித்திர மண்டப மருங்கிலும்
பூவிரி தரங்க வாரிக் கரையிலும்
மயிற்பெடை ஆலக் குயிற்றிய குன்றிலும்

தெளிவுரை : செழுமையாக மகரந்தம் உதிர்ந்த நந்தவனத்தில், தென்றல் வீசுகின்ற முன்றிலின் இடத்தில் குறைதல் இல்லாத சித்திர மண்டப மருங்கிலும் அலை வீசுகின்ற குளக்கரையிலும் பெண் மயில் ஆடச் செய்த குன்றிலும்,

வேண்டுழி வேண்டுழி ஆண்டாண்(டு) இட்ட
மருப்பின் இயன்ற வாளரி சுமந்த
விருப்புறு கட்டில் மீமிசைப் படுத்த
ஐவகை அமளி அணைமேல் பொங்கத்
தண்மலர் கமழும் வெண்மடி விரித்துப்

தெளிவுரை : தேவைப்பட்ட பொழுதெல்லாம் ஆங்காங்கு தந்தத்தால் செய்யப்பட்ட சிங்காதனத்தின் மீது படுத்த ஐந்து வகையான படுக்கை அணைமேல் பொங்க, குளிர்ந்த மலர்கள் கமழும் வெண்மையான ஆடையை விரித்து,

பட்டினுட் பெய்த பதநுண் பஞ்சின்
நெட்டணை யருகாக் கொட்டைகள் பரப்பிப்
பாயல் மீது பரிபுரம் மிழற்றச்
சாயல்அன் னத்தின் தளர்நடை பயிற்றிப்
பொன்தோ ரணத்தைச் சுற்றிய துகிலென

தெளிவுரை : பட்டினுள் திணித்த பத நுண் பஞ்சின் நெட்டணை அருகா தலையணைகளைப் பரப்பி, பாயலின் மீது சிலம்பு ஒலி செய்ய, சாயல் அன்னத்தின் தளர் நடை பயிற்றிப் பொன்னாலாகிய தோரணத்தின் மீது சுற்றிய ஆடை போல,

அம்மென் குறங்கின் நொம்மென் கலிங்கம்
கண்ணும் மனமும் கவற்றப் பண்வர
இரங்குமணி மேகலை மருங்கிற் கிடப்ப
ஆடர(வு) அல்குல் அரும்பெறல் நுசுப்பு
வாட வீங்கிய வனமுலை கதிர்ப்ப

தெளிவுரை : அழகிய தொடையின் மீதுள்ள மிகவும் மெல்லிய ஆடை கண்ணும் மனமும் கவரும்படி பண்வர இரங்கும் மணிமேகலை இடுப்பில் கட்டியிருக்க, பாம்புப் படத்தைப் போன்ற அல்குலும் அரும்பெறல் இடையும் வாட, பூரித்த வன முலைகள் இறுமாந்திருக்க,

அணியியல் கமுகை அலங்கரித் ததுபோல்
மணியியல் ஆரங் கதிர்விரித்(து) ஒளிர்தர
மணிவளை தாங்கிய அணிகெழு மென்தோள்
வரித்த சாந்தின்மிசை விரித்துமீ(து) இட்ட
உத்தரீ யப்பட்(டு) ஒருபால் ஒளிர்தர

தெளிவுரை : அணியாக அமைந்த பாக்கு மரத்தை அலங்கரித்ததுபோல மணியோடு கூடிய மாலை ஒளி வீச, மணிவளைகளைத் தாங்குகின்ற அலங்கரிக்கப்பட்ட மென்தோள் சாந்தின்மீது விரித்து இடப்பட்ட மேலாடை ஒரு பக்கம் பிரகாசிக்க,

வள்ளை வாட்டிய ஒள்ளிரு காதொடு
பவளத் தருகாத் தரளம் நிரைத்தாங்(கு)
ஒழுகி நீண்ட குமிழொன்று பதித்துக்
காலன் வேலும் காம பாணமும்
ஆல காலமும் அனைத்தும்இட்(டு) அமைத்த

தெளிவுரை : சங்குகள் பூட்டிய இரு காதுகளோடு பவளத்திற்கு அருகில் முத்துக்களை நிரைத்ததைப் போன்று தாழ்ந்து நீண்ட நாசியொன்று பதித்து, காலனுடைய சூலமும் மன்மதனது மலர் அம்புகளும் ஆலகால விடமும் இவை அனைத்தும் ஒன்று சேர்ந்து பொருந்திய,

இரண்டு நாட்டமும் புரண்டுகடை மிளிர்தர
மதியென மாசறு வதனம் விளங்கப்
புதுவிரை அலங்கல் குழன்மிசைப் பொலியும்
அஞ்சொல் மடந்தையர் ஆகந் தோய்ந்தும்
சின்னம் பரப்பிய பொன்னின் கலத்தில்

தெளிவுரை : இரண்டு கண்களும் புரண்டு கடைமிளிர்தர சந்திரன் போன்ற குற்றமற்ற முகம் விளங்க, புதிய மணமுள்ள மாலை கூந்தல்மீது விளங்கும் அழகிய சொல்லையுடைய பெண்களை அனுபவித்தும், சித்திர அன்னங்கள் பரிமாறப்பட்ட பொன் தட்டில் இருந்த,

அறுசுவை அடிசில் வறிதினி(து) அருந்தா(து)
ஆடினர்க்(கு) என்றும் பாடினர்க்(கு) என்றும்
வாடினர்க்(கு) என்றும் வரையாது கொடுத்தும்
பூசுவன பூசியும் புனைவன புனைந்தும்
தூசு நல்லன தொடையிற் சேர்த்தியும்

தெளிவுரை : அறுசுவை உணவை உண்ணாமல் ஆடியவர்களுக்கும் பாடியவர்களுக்கும் வாடினவர்களுக்கும் மிகுதியாகக் கொடுத்தும், பூசுவனவற்றைப் பூசியும், அலங்காரம் செய்தும், உயர்ந்த பட்டாடைகளைத் தொடையில் கட்டியும்,

ஐந்து புலன்களும் ஆர ஆர்த்தும்
மைந்தரும் ஒக்கலும் மகிழ மனமகிழ்ந்(து)
இவ்வகை இருந்தோம் ஆயினும் அவ்வகை
மந்திர எழுத்தைந்தும் வாயிடை மறவாது
சிந்தை நின்வழி செலுத்தலின் அந்த

தெளிவுரை : ஐம்புலன்களும் திருப்தியடையும் படி அனுபவித்தும், இளையோரும் சுற்றத்தாரும் மனமகிழ்ந்து ஓங்கி இவ்வாறு இருந்தோம் என்றாலும், அவ்வகை மந்திரமாகிய ஐந்தெழுத்தும் வாயில் மறவாமல் மனத்தை உன் போக்கில் செலுத்துவதால், அந்த

முத்தியும் இழந்திலம் முதல்வ அத்திறம்
நின்னது பெருமை அன்றோ என்னெனின்
வல்லான் ஒருவன் கைம்முயன்(று) எறியினும்
மாட்டா ஒருவன் வாளா எறியினும்
நிலத்தின் வழாஅக் கல்லேபோல்
நலத்தின் வழார்நின் நாமம்நவின் றோரே.

தெளிவுரை : வீடு பேற்றையும் இழக்கவில்லை. முதல்வனே ! அந்த வல்லமை உன்னுடைய பெருமையினால் அல்லவா வந்தது? எப்படியென்றால் வல்லான் ஒருவன் முயற்சி செய்து எறிந்தாலும் வல்லமை இல்லாத ஒருவன் சாதாரணமாக எறிந்தாலும் நிலத்திலே வந்து விழுவதினின்றும் தப்பாத கல்லைப்போல, நின் நாமம் நவில்வார் நலத்தினின்றும் வழுவ மாட்டார்கள் என்பதாம்.

வெண்பா

897. நாமம்நவிற் றாய்மனனே நாரியர்கள் தோள்தோய்ந்து
காமம் நவிற்றிக் கழிந்தொழியல் - ஆமோ
பொருதவனத் தானைஉரி போர்த்தருளும் எங்கள்
மருதவனத் தானை வளைந்து.

தெளிவுரை : எதிர்த்த காட்டு யானையின் தோலைப் போர்த்தருளும், எங்கள் திருவிடைமருதூரில் கோயில் கொண்டிருக்கும் இறைவனைப் பணிந்து, மனமே ! அவனது பெயரைச் சொல்லாமல் பெண்களின் தோளில் அழுந்திக் காமத்தைச் சொல்லியே காலங் கடத்துகின்றாயே, இது தகுமோ? அவன் நாமத்தை நவிற்று என்றும் வீண் காலம் கழிக்காதே என்றும் அறிவுறுத்துகின்றார்.

கட்டளைக் கலித்துறை

898. வளையார் பசியின் வருந்தார்
பிணியின் மதனன்அம்புக்
கிளையார் தனங்கண் டிரங்கிநில்
லார்இப் பிறப்பினில்வந்(து)
அளையார் நரகினுக்(கு) என்கட
வார்பொன் அலர்ந்தகொன்றைத்
தளையார் இடைமரு தன்னடி
யார்அடி சார்ந்தவரே.

தெளிவுரை : பொன்போல் மலர்ந்த கொன்றை மாலையை அணிந்த இடை மருதனின்  அடியார்களின் அடி சார்ந்தவர், பசியினால் வணங்குதல் செய்யார். பிணியினால் வருந்த மாட்டார்கள். மன்மதனுடைய அம்புக்கு இளைக்க மாட்டார்கள். செல்வத்தைக் கண்டு இரங்கி நில்லார். மறுபடியும் பிறவி எடுக்க மாட்டார்கள். நரகினுக்குப் போக மாட்டார்கள் என்பதாம்.

நேரிசை ஆசிரியப்பா

899. அடிசார்ந் தவர்க்கு முடியா இன்பம்
நிறையக் கொடுப்பினும் குறையாச் செல்வ
மூலமும் நடுவும் முடிவும் இகந்து
காலம் மூன்றையும் கடந்த கடவுள்
உளக்கணுக்(கு) அல்லா(து) ஊன்கணுக்(கு) ஒளித்துத்

தெளிவுரை : உன் அடியார்களுக்கு முடிவில்லாத இன்பமாகிய வீடு பேற்றை நிறைய கொடுத்த போதிலும் குறைவில்லாத செல்வனே ! ஆதியும், நடுவும், முடிவும் கடந்து மூன்று காலங்களையும் கடந்த கடவுளே ! உளக்கண்ணுக்கு அல்லாது ஊன் கண்ணுக்கு ஒளித்து,

துளக்கற நிமிர்ந்த சோதித் தனிச்சுடர்
எறுப்புத் துளையின் இருசெவிக்(கு) எட்டா(து)
உறுப்பினின்(று) எழுதரும் உள்ளத்(து) ஓசை
வைத்த நாவின் வழிமறுத்(து) அகத்தே
தித்தித்(து) ஊறும் தெய்வத் தேறல்

தெளிவுரை : நடுக்கமின்றி நிமிர்ந்த சோதித் தனிச்சுடரே ! எறும்பு வளைபோன்று அமைந்த இரண்டு காதுகளுக்கும் எட்டாமல் உறுப்பில் நின்று எழும் உள்ளத்து ஓசை வைத்த நாவின் வழி மறுத்து, அகத்தில் தித்திக்கின்ற தெய்வத்தன்மை பொருந்திய தேனே !

துண்டத் துளையிற் பண்டை வழியன்றி
அறிவில் நாறும் நறிய நாற்றம்
ஏனைய தன்மையும் எய்தா(து) எவற்றையும்
தானே யாகி நின்ற தற்பர
தோற்றுவ(து) எல்லாம் தன்னிடைத் தோற்றித்

தெளிவுரை : மூக்குத் துவாரத்தில் முன்பு இருந்த வழி இல்லாமல் அறிவின் மூலம் மணம் வீசுகின்ற நறுமணமே ! மற்ற தன்மைகளையும் அடையாமல் எல்லாவற்றிலும் தானே ஆகிநின்ற தத்துவ ! (உண்மைப் பொருளே!) தோன்றுகின்ற யாவும் உன்னிடமிருந்தே தோன்றி,

தோற்றம் பிறிதில் தோற்றாச் சுடர்முளை
விரிசடை மீமிசை வெண்மதி கிடப்பினும்
இருள்புரை கண்டத்(து) ஏக நாயக
சுருதியும் இருவரும் தொடர்ந்துநின்(று) அலமர
மருதிடம் கொண்ட மருதமா ணிக்க

தெளிவுரை : தோற்றம் வேறு ஒன்றிலும் தோற்றாத சுடர் முளையே ! விரிந்த சடையின்மேல் வெண்மையான பிறைச் சந்திரன் இருந்த போதிலும் இருண்ட கழுத்தை உடைய ஏக நாயகனே ! வேதமும் திருமால் பிரமன் ஆகிய இருவரும் தொடர்ந்து நின்று தடுமாற மருதிடம் கொண்ட மருத மாணிக்கமே!

உமையாள் கொழுந ஒருமூன் றாகிய
இமையா நாட்டத்(து) என்தனி நாயக
அடியேன் உறுகுறை முனியாது கேண்மதி
நின்னடி பணியாக் கல்மனக் கயவரொடு
நெடுநாள் பழகிய கொடுவினை ஈர்ப்பக்

தெளிவுரை : உமாதேவியின் கொழுநனே ! இமைக்காத மூன்று கண்களையுடைய என் தனி நாயகனே ! அடியேனுடைய குறையைக் கோபப்படாமல் கேட்பாயாக. உன்னுடைய பாதங்களைப் பணியாத கல்மனக் கயவரொடு நெடுநாள் பழகிய கொடுவினை ஈர்க்க,

கருப்பா சயமெனும் இருட்சிறை அறையில்
குடரென் சங்கிலி பூண்டு தொடர்ப்பட்டுக்
கூட்டுச்சிறைப் புழுவின் ஈட்டுமலத்(து) அழுந்தி
உடனே வருந்தி நெடுநாட் கிடந்து
பல்பிணிப் பெயர்பெற்(று) அல்லற் படுத்தும்

தெளிவுரை : கருப்பப் பை என்னும் இருட் சிறையாகிய அறையில் குடல் என்ற சங்கிலியால், கட்டுப்பட்டு கூட்டுச் சிறைப் புழுவைப் போல, முன்பு சேர்ந்துள்ள வினையாகிய மலத்து அழுந்தி, அங்கேயே வருந்தி, நெடுநாள் கிடந்து பல பிணிகளில் துன்பப் படுத்தும்,

தண்ட லாளர் மிண்டிவந்(து) அலைப்ப
உதர நெருப்பிற் பதைபதை பதைத்தும்
வாதமத் திகையின் மோதமொத் துண்டும்
கிடத்தல் நிற்றல் நடத்தல் செல்லா(து)
இடங்குறை வாயிலின் முடங்கி இருந்துழிப்

தெளிவுரை : தண்டனை செய்யும் ஏவலாளர் நெருங்கி வந்து வருத்த வயிறாகிய நெருப்பில் துடித்தும், வாயுவாகிய சவுக்கினால் அடிபட்டும், கிடந்தும், நின்றும், நடந்தும், செல்லாமல் குறுகிய வாயிலில் இருந்த சமயத்தில்,

பாவப் பகுதியில் இட்டுக் காவற்
கொடியோர் ஐவரை ஏவி நெடிய
ஆசைத் தளையில் என்னையும் உடலையும்
பாசப் படுத்திப் பையென விட்டபின்
யானும் போந்து தீதினுக்(கு) உழன்றும்

தெளிவுரை : பாவப் பகுதியில் கிடத்தி காவல் கொடியோராகிய ஐம் பொறிகளைத் தூண்டி, நீண்ட ஆசைத் தளையில் என்னையும் உடலையும் பிணித்து மெதுவாக விட்ட பிறகு யானும் வெளிப்பட்டு தீதினுக்கு உழன்றும்,

பெரியோர்ப் பிழைத்தும் பிறர்பொருள் வெளவியும்
பரியா(து) ஒழிந்தும் பல்லுயிர் செகுத்தும்
வேற்றோர் மனைவியர் தோற்றம் புகழ்ந்தும்
பொய்பல கூறியும் புல்லினம் புல்லியும்
ஐவரும் கடுப்ப அவாவது கூட்டி

தெளிவுரை : பெரியோர்களிடம் பிழை செய்தும் பிறர் பொருளைக் கவர்ந்தும் பிறர் துன்பம் கண்டு இரங்காமல் நீங்கியும் பல்லுயிர்களைக் கொன்றும் அயலார் மனைவியின் அழகைப் புகழ்ந்தும், பல பொய்களைச் சொல்லியும், அற்பர்களோடு சேர்ந்து பழகியும், ஐம்பொறிகளும் விரைய ஆசையைப் பெருக்கி,

ஈண்டின கொண்டும் மீண்டு வந்துழி
இட்டுழி இடாது பட்டுழிப் படாஅது
இந்நாள் இடுக்கண் எய்திப் பன்னாள்
வாடுபு கிடப்பேன் வீடுநெறி காணேன்
நின்னை அடைந்த அடியார் அடியார்க்(கு)

தெளிவுரை : அதுவரை சம்பாதித்ததைக் கொண்டு மறுபடி வந்தபோது, இட்ட இடத்தில் இடாமலும் பட்ட இடத்தில் படாமலும் இப்போது துன்பமடைந்து பலநாள் வாடிக் கிடப்பேன். முத்தி அடையும் வழியைக் காணேன். உன்னை வந்து அடைந்த அடியார்களின் அடியார்களுக்கு,

என்னையும் அடிமை யாகக் கொண்டே
இட்டபச் சிலைகொண்(டு) ஒட்டி அறிவித்(து)
இச்சிறை பிழைப்பித்(து) இனிச்சிறை புகாமல்
காத்தருள் செய்ய வேண்டும்
தீத்திரண் டன்ன செஞ்சடை யோனே.

தெளிவுரை : என்னையும் அடிமையாகக் கொண்டு இட்ட பச்சிலை கொண்டு ஒட்டி அறிவித்து இந்தச் சிறையிலிருந்து விடுவித்து, இனியும் இச்சிறையில் புகாமல் காத்தருள் செய்ய வேண்டும். தீப் பிழம்பு போன்ற செஞ்சடையை உடைய பெருமானே ! இதுவே என் வேண்டுகோள்.

வெண்பா

900. சடைமேல் ஒருத்தி சமைந்திருப்ப மேனிப்
புடைமேல் ஒருத்தி பொலிய - இடையேபோய்ச்
சங்கே கலையே மருதற்குத் தான்கொடுப்ப(து)
எங்கே இருக்க இவள்.

தெளிவுரை : எங்கே இருக்கலாம் என்ற எண்ணத்தால், இவள், இடைமருது ஈசர்மேல் காதல் கொண்டாள் !

சடைமேல் கங்காதேவி குடிகொண்டிருக்க இடப்பாகத்தில் உமாதேவி திகழ்ந்து கொண்டிருக்க இவள் இடைமருது ஈசன்மேல் காதல்கொண்டு சங்கு வளையல்களையும் ஆடையையும் இவள் எப்படிக் கொடுப்பாள். இவள் எங்கே இருப்பாள் ?

கட்டளைக் கலித்துறை

901. இருக்கும் மருதினுக்(கு) உள்ளிமை
யோர்களும் நான்மறையும்
நெருக்கு நெருக்கத்து நீளகத்
துச்சென்று மீளவொட்டாத்
திருக்கு மறுத்தைவர் தீமையும்
தீர்த்துச்செவ் வேமனத்தை
ஒருக்கும் ஒருக்கத்தின் உள்ளே
முளைக்கின்ற ஒண்சுடரே.

தெளிவுரை : திருவிடை மருதினுக்குள் இமையோர்களும் நான்கு வேதங்களும் நெருங்கி இருக்கும் நீண்ட இடத்தில் சென்று, மீள முடியாத என் கோணலையும் அறுத்து, ஐம்பொறிகளின் தீமையையும் தீர்த்து நல்ல நிலையில் என் மனத்தை ஒருமைப்படுத்தித் தியானிக்கும் நிலையில் வைப்பாயாக. மருதினுக்குள் இருக்கும் ஒண்சுடரே ! உன்னை வேண்டிக் கொள்கிறேன் என்பதாம்.

நேரிசை ஆசிரியப்பா

902. சுடர்விடு சூலப் படையினை என்றும்
விடைஉகந்(து) ஏறிய விமல என்றும்
உண்ணா நஞ்சம் உண்டனை என்றும்
கண்ணாற் காமனைக் காய்ந்தனை என்றும்
திரிபுரம் எரித்த சேவக என்றும்

தெளிவுரை : பிரகாசிக்கின்ற சூலாயுதத்தை உடையவன் என்றும், விடையை விரும்பி ஏறிய விமலன் என்றும், பிறரால் உண்ண முடியாத ஆலகால விஷத்தை உண்டாய் என்றும், நெற்றிக் கண்ணை விழித்துக் காமனை எரித்தாய் என்றும், திரிபுரங்களை எரித்த வீரன் என்றும்,

கரியுரி போர்த்த கடவுள் என்றும்
உரகம் பூண்ட உரவோய் என்றும்
சிரகஞ் செந்தழல் ஏந்தினை என்றும்
வலந்தரு காலனை வதைத்தனை என்றும்
சலந்தரன் உடலம் தடிந்தனை என்றும்

தெளிவுரை : யானைத் தோலைப் போர்த்த கடவுள் என்றும், பாம்பை அணிந்த வல்லவன் என்றும், கபாலத்தையும் செந்தழலையும் ஏந்தினை என்றும், வல்லமை படைத்த காலனை உதைத்தாய் என்றும், சலந்தரன் உடலை அழித்தாய் என்றும்,

அயன்சிரம் ஒருநாள் அரிந்தனை என்றும்
வியந்தவாள் அரக்கனை மிதித்தனை என்றும்
தக்கன் வேள்வி தகர்த்தனை என்றும்
உக்கிரப் புலியுரி உடுத்தனை என்றும்
ஏனமும் அன்னமும் எட்டா(து) இளைப்ப

தெளிவுரை : ஓர் ஊழிக் காலத்தில் பிரமன் தலையை அரிந்தனை என்றும், வாளேந்திய இராவணனைக் கால் கட்டை விரலால் மிதித்தனை என்றும், தக்கனது யாகத்தை அழித்தாய் என்றும், தாருகா வனத்து முனிவர்கள் ஏவிய கொடிய புலியைக் கிழித்து அதன் தோலை உடுத்திக் கொண்டாய் என்றும், பன்றியும் அன்னமும் (திருமாலும் பிரமனும்) பார்க்க முடியாமல் தடுமாற,

வானம் கீழ்ப்பட வளர்ந்தனை என்றும்
செழுநீர் ஞாலம் செகுத்துயிர் உண்ணும்
அழல்விழிக் குறளை அமுக்கினை என்றும்
இனையன இனையன எண்ணில் கோடி
நினைவருங் கீர்த்தி நின்வயின் புகழ்தல்

தெளிவுரை : தீப்பிழம்பாய் உயர்ந்தனை என்றும், செழுநீர் ஞாலம் செகுத்து உயிர் உண்ணும் தீப்போன்ற கண்ணையுடைய முயலகனைக் காலடியில் அழுத்தினாய் என்றும், இது போன்ற உன்னுடைய சிறப்பினை உன்னிடம் புகழ்தல்,

துளக்குறு சிந்தையேன் சொல்லள வாதலின்
அளப்பரும் பெருமைநின் அளவில(து) ஆயினும்
என்றன் வாயிற் புன்மொழி கொண்டு
நின்னை நோக்குவன் ஆதலின் என்னை
இடுக்கண் களையா அல்லற் படுத்தா

தெளிவுரை : என்னால் இயலாத ஒன்றாகும். உன்னுடைய பெருமை எல்லையற்றதாயினும் என் வாயினால் சொல்லப்படும் இந்த எளிய மொழியைக் கொண்டு உன்னை நோக்குவேன் ஆதலின், என் துன்பங்களைக் களைந்து, இனி துன்புறுத்தாமல்,

எழுநிலை மாடத்துச் செழுமுகில் உறங்க
அடித்துத் தட்டி எழுப்புவ போல
நுண்துகில் பதாகை கொண்டுகொண்(டு) உகைப்பத்
துயிலின் நீங்கிப் பயிலும் வீதித்
திருமரு(து) அமர்ந்த தெய்வச் செழுஞ்சுடர்

தெளிவுரை : எழுநிலை மாடத்து செழுமுகில் உறங்க அடித்துத் தட்டி எழுப்புவதுபோல உன்னுடைய பெருங் கொடியைக் கொண்டு துகைப்ப, தூக்கத்திலிருந்து எழுந்து பயிலுகின்ற வீதியை உடைய திருமருதத்து அமர்ந்த தெய்வச் செழுஞ்சுடரே !

அருள்சுரந்(து) அளிக்கும் அற்புதக் கூத்த
கல்லால் எறிந்த பொல்லாப் புத்தன்
நின்னினைந்(து) எறிந்த அதனால்
அன்னவன் தனக்கும் அருள்பிழைத் தின்றே.

தெளிவுரை : அருள் சுரந்து காப்பாற்றும் அற்புதக் கூத்தனே! மலர்களுக்குப் பதிலாக கல்லைக் கொண்டு அருச்சித்த சாக்கிய நாயனார் உன்னை நினைந்து எறிந்ததனால் அவருக்கும் அருள் தவறாமல் கிடைத்தது. அதுபோல் எனக்கும் கிடைக்க வேண்டுகிறேன் என்பதாம்.

வெண்பா

903. இன்றிருந்து நாளை இறக்கும் தொழிலுடைய
புன்தலைய மாக்கள் புகழ்வரோ - வென்றிமழு
வாளுடையான் தெய்வ மருதுடையான் நாயேனை
ஆளுடையான் செம்பொன் அடி.

தெளிவுரை : வெற்றி மழுவையும் வாளையும் உடையவனும் தெய்வத்தன்மை பொருந்திய மருதை உடையவனும் நாயேனாகிய என்னை ஆளுடையவனுமாகிய அப் பெருமானது செம்பொன் அடிகளை இன்றிருந்து நாளை மடியும் தொழிலுடைய சிற்றறிவினையுடைய மக்களாகப் பிறந்தும் மக்கட் பண்பில்லாதவர்கள் புகழ்வார்களோ? புகழ மாட்டார்கள் என்றபடி.

கட்டளைக் கலித்துறை

904. அடியா யிரம்தொழில் ஆயின
ஆயிரம் ஆயிரம்பேர்
முடியா யிரம்கண்கள் மூவா
யிரம்முற்றும் நீறணிந்த
தொடியா யிரங்கொண்ட தோள்இரண்
டாயிரம் என்றுநெஞ்சே
படியாய் இராப்பகல் தென்மரு
தாளியைப் பற்றிக்கொண்டே.

தெளிவுரை : நெஞ்சமே ! இரவும் பகலும் தென் மருதாளியைப் (திருவிடைமருதூரில் கோயில் கொண்டிருக்கும் இறைவனை) பற்றிக் கொண்டு, அடி (உன் திருவடி) ஆயிரந்தொழில் ஆயின என்றும் ஆயிரக் கணக்கானோரின் முடியும் கண்களும் நீறணிந்த தோள்களும் பற்றி ஓதுவாயாக. அதாவது, அவனது திருவுருவச் சிறப்பை இரவும் பகலும் துதி செய்வாயாக என்பதாம்.

நேரிசை ஆசிரியப்பா

905. கொண்டலின் இருண்ட கண்டத்(து) எண்தோள்
செவ்வான் உருவிற் பையர(வு) ஆர்த்த
சிறுபறை கிடந்த நெறிதரு புன்சடை
மூவா முதல்வ முக்கட் செல்வ
தேவ தேவ திருவிடை மருத

தெளிவுரை :  மேகத்தைப் போன்ற இருண்ட கண்டத்தையும் எட்டுத் தோள்களையும், செவ்வானத்தைப் போன்ற உருவத்தோடு, பாம்பை ஆபரணமாகக் கொண்டு, சிறு பிறை தவழும் நெறிந்த சடையினையும் உடைய அழிவில்லாத முதல்வனே ! மூன்று கண்களையுடைய செல்வனே ! தேவ தேவனே ! திருவிடை மருதனே !

மாசறு சிறப்பின் வானவர் ஆடும்
பூசத் தீர்த்தம் புரக்கும் பொன்னி
அயிரா வணத்துறை ஆடும் அப்ப
கயிலாய வாண கௌரி நாயக
நின்னை வணங்கிப் பொன்னடி புகழ்ந்து

தெளிவுரை :  மாசறு சிறப்பின் தேவர்கள் நீராடுகின்ற பூசத் தீர்த்தம் புரக்கும் காவிரியல் அயிராவணத் துறையில் நீராடும் அப்பனே ! கைலாய வாண ! கௌரி நாயக ! நின்னருள் சுரந்து பொன்னடி பணிந்து,

பெரும்பதம் பிழையா வரம்பல பெற்றோர்
இமையா நெடுங்கண் உமையாள் நங்கையும்
மழைக்கட் கடத்துப் புழைக்கைப் பிள்ளையும்
அமரர் தாங்கும் குமர வேளும்
சுரிசங்(கு) ஏந்திய திருநெடு மாலும்

தெளிவுரை : பெரும்பதம் பிழையா வரம்பல பெற்றோர் இமைக்காத கண்களை உடைய உமா தேவியாரும் மழைபோன்று மதம் பொழியும் துதிக்கையை உடைய விநாயகரும், தேவர்களுக்கு ஆதரவாக இருக்கும் குமரக் கடவுளும், சுழிவோடு கூடிய சங்கை ஏந்திய திருமாலும்,

வான்முறை படைத்த நான்முகத்(து) ஒருவனும்
தாருகற் செற்ற வீரக் கன்னியும்
பூவின் கிழத்தியும் நாவின் மடந்தையும்
பீடுயர் தோற்றத்துக் கோடி உருத்திரரும்
ஆனாப் பெருந்திறல் வானோர் தலைவனும்

தெளிவுரை : இந்த உலகைப் படைத்த பிரம தேவனும், தாருகனை அழித்த வீரம் பொருந்திய துர்க்கையும் சரஸ்வதி தேவியும், திருமகளும், பெருமை பொருந்திய கோடி உருத்திரரும், குறையாத பெருந் திறலுடைய இந்திரனும்,

செயிர்தீர் நாற்கோட்(டு) அயிரா வதமும்
வாம்பரி அருக்கர் தாம்பன் னிருவரும்
சந்திரன் ஒருவனும் செந்தீக் கடவுளும்
நிருதியும் எமனும் சுருதிகள் நான்கும்
வருணனும் வாயுவும் இருநிதிக் கிழவனும்

தெளிவுரை : குற்றமற்ற நான்கு தந்தங்களை உடைய ஐராவதமும், தாவும் பரிசுடைய அருக்கர் பன்னிருவரும், சந்திரனும் அக்கினி தேவனும், நிருதியும், இயமனும், வேதங்கள் நான்கும், வருணனும் வாயுவும், குபேரனுமாகிய அஷ்டத்திக்குப் பாலகர்களும்,

எட்டு நாகமும் அட்ட வசுக்களும்
மூன்று கோடி ஆன்ற முனிவரும்
வசிட்டனும் கபிலனும் அகத்தியன் தானும்
தும்புரு நாரதர் என்றிரு திறத்தரும்
வித்தகப் பாடல் முத்திறத்(து) அடியரும்

தெளிவுரை : எட்டுக் கிரிகளும், அஷ்ட வசுக்களும், முக்கோடி முனிவர்களும், வசிட்டனும், கபிலனும், அகத்தியரும், தும்புரு நாரதர் ஆகிய இருவரும், தேவாரப் பாடல்களைப் பாடிய திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரமூர்த்தி சுவாமிகள் ஆகிய மூவரும்,

திருந்திய அன்பிற் பெருந்துறைப் பிள்ளையும்
அத்தகு செல்வத்(து) அவமதித் தருளிய
சித்த மார்சிவ வாக்கிய தேவரும்
வெள்ளை நீறு மெய்யிற் கண்டு
கள்ளன் கையிற் கட்டவிழ்ப் பித்தும்

தெளிவுரை : பேரன்பு கொண்ட பெருந்துறைப் பிள்ளையாகிய மாணிக்கவாசகரும், பெருஞ் செல்வத்தைத் துறந்த சித்தமார் சிவவாக்கிய தேவரும், உடம்பில் திருநீறு பூசியிருந்ததைக் கண்டு கள்ளன் கையில் பிணித்திருந்த கட்டை அவிழ்த்தும், (வரகுண பாண்டியனது பெருமையைக் கூறுகின்றார்.)

ஓடும் பன்னரி ஊளைகேட்(டு) அரனைப்
பாடின என்று படாம்பல அளித்தும்
குவளைப் புனலில் தவளை அரற்ற
ஈசன் தன்னை ஏத்தின என்று
காசும் பொன்னும் கலந்து தூவியும்

தெளிவுரை : ஓடுகின்ற நரிகளின் ஊளையைக் கேட்டு சிவபெருமானைப் பாடின என்று அவைகளுக்குப் போர்வையளித்தும், குவளை பூத்திருந்த குளத்தில் தவளைகள் கத்த அவை ஈசனைத் துதிக்கின்றன என்று காசும் பொன்னும் கலந்து தூவியும் (இதைக் கொடை மடம் என்பர்)

வழிபடும் ஒருவன் மஞ்சனத்(து) இயற்றிய
செழுவிதை எள்ளைத் தின்னக் கண்டு
பிடித்தலும் அவனிப் பிறப்புக் கென்ன
இடித்துக் கொண்டவன் எச்சிலை நுகர்ந்தும்
மருத வட்டத்(து) ஒருதனிக் கிடந்த.

தெளிவுரை : அபிடேகத்திற்குரிய எண்ணெய்க்காக வைத்திருந்த எள்ளு விதையைத் தின்னக் கண்டு பிடித்தலும், அவனிப் பிறப்புக்கு என்று இடித்துக் கொண்டவன் எச்சிலை நுகர்ந்தும், மருத வட்டத்தின் ஒரு பக்கத்தில் இருந்த,

தலையைக் கண்டு தலையுற வணங்கி
உம்மைப் போல எம்இத் தலையும்
கிடக்கல் வேண்டுமென்(று) அடுத்தடுத்(து) இரந்தும்
கோயில் முற்றத்து மீமிசைக் கிடப்ப
வாய்த்த(து) என்றுநாய்க் கட்டம் எடுத்தும்

தெளிவுரை : தலையைக் கண்டு தலையுற வணங்கி, உம்மைப் போல எம் இத்தலையும் கிடக்க வேண்டுமென்று திரும்பத் திரும்ப யாசித்தும், கோயில் முற்றத்தின் மேலே கிடந்த நாய் மலத்தை அப்புறப் படுத்தியும்,

காம்பவிழ்த்(து) உதிர்ந்த கனியுருக் கண்டு
வேம்புகட்(கு) எல்லாம் விதானம் அமைத்தும்
விரும்பின கொடுக்கை பரம்பரற்(கு) என்று
புரிகுழல் தேவியைப் பரிவுடன் கொடுத்த
பெரிய அன்பின் வரகுண தேவரும்

தெளிவுரை : காம்பு அவிழ்ந்து உதிர்ந்த கனியுருக் கண்டு வேப்ப மரங்களுக்கு எல்லாம் விதானம் (மேற்கட்டி) அமைத்தும், விரும்பியவற்றைக் கொடுக்கும் சிவபெருமானுக்குப் புரிகுழல் தேவியை (மனைவியை) விரும்பிக் கொடுத்த பெரிய அன்பினை உடைய வரகுண தேவரும், (வரகுண பாண்டியன்)

இனைய தன்மையர் எண்ணிறந் தோரே
அனையவர் நிற்க யானும் ஒருவன்
பத்தி என்பதோர் பாடும் இன்றிச்
சுத்த னாயினும் தோன்றாக் கடையேன் நின்னை
இறைஞ்சிலன் ஆயினும் ஏத்திலன் ஆயினும்

தெளிவுரை : இத்தகைய தியாகசீலர்கள் பலர் இருந்துள்ளனர். அவர்கள் ஒரு புறம் இருக்க, யானும் ஒருவன் பக்தி என்று எதையும் செய்யாமல் போனாலும் பரிசுத்தன் ஆயினும், கடையேனாகிய யான் உன்னைத் துதிக்கவில்லையாகினும் வணங்க வில்லையாயினும்,

வருந்திலன் ஆயினும் வாழ்த்திலன் ஆயினும்
கருதி யிருப்பன் கண்டாய் பெரும
நின்னுல(கு) அனைத்தும் நன்மை தீமை
ஆனவை நின்செயல் ஆதலின்
நானே அமையும் நலமில் வழிக்கே.

தெளிவுரை : வருந்தவில்லை என்றாலும் வாழ்த்தவில்லை என்றாலும் உன்னையே நினைத்துக் கொண்டிருப்பேன். இதை நீ காண்பாயாக. பெருமானே ! உன்னுடைய உலகத்தில் நன்மை தீமை முதலானவை நின் செயலாதலின் நலமில் வழிக்கு யானே அமையும்.

எனவே என்னை ஏற்றுக் கொள்வாய் என்பதாம்.

வெண்பா

906. வழபிழைத்து நாமெல்லாம் வந்தவா செய்து
பழிபிழைத்த பாவங்கள் எல்லாம் - பொழில்சூழ்
மருதிடத்தான் என்றொருகால் வாய்கூப்ப வேண்டா
கருதிடத்தாம் நில்லா கரந்து.

தெளிவுரை : நடக்க வேண்டிய நெறிமுறைகளைத் தவறி, நாம் எல்லாம் நினைத்தபடியே தொழில் செய்து பழிபிழைத்த பாவங்கள் எல்லாம், சோலைகள் சூழ்ந்த திருவிடைமருதூரில் கோயில் கொண்டவன் என்று வாயினால் சொல்லக்கூட வேண்டா. நினைத்தாலே போதுமானது. அவனைத் தொழுதால் நற்கதி பெறலாம் என்றபடி.

கட்டளைக் கலித்துறை

907. கரத்தினில் மாலவன் கண்கொண்டு
நின்கழல் போற்றநல்ல
வரத்தினை ஈயும் மருதவப்
பாமதி ஒன்றும்இல்லேன்
சிரத்தினு மாயென்றன் சிந்தைபு
ளாகிவெண் காடனென்னும்
தரத்தினும் ஆயது நின்னடி
யாம்தெய்வத் தாமரையே.

தெளிவுரை :  (திருமால் சிவனை வழிபடும்போது ஆயிரம் மலர்களுள் ஒன்று குறைய அதை ஈடு செய்வான் வேண்டி,) தன் கண்களில் ஒன்றைப் பறித்து கையில் ஏந்திப் போற்ற நல்ல வரத்தினைத் தந்த திருவிடை மருதப்பனே. நான் அறிவற்றவன்; என்னை நீ ஆட்கொண்டு திருவெண்காடர் என்ற பெயருக்கேற்ப என் நிலையையும் உயர்த்தியுள்ளாய். ஆகவே, உன் திருவடியாகிய தெய்வத் தாமரையுள் நான் சரண் அடைந்தேன். நான் நற்கதி பெற அருள் செய்வாயாக.

திருச்சிற்றம்பலம்

29. திருஏகம்பமுடையார் திருவந்தாதி (பட்டினத்துப் பிள்ளையார் அருளிச் செய்தது)

அந்தாதித் தொடை பொருந்த நூறு பாடல்களைத் தன்னகத்தே கொண்டு விளங்கும் இந்நூல் காஞ்சி மாநகரில் உள்ள திருவேகம்பம் என்னும் திருக்கோயிலில் எழுந்தருளிய சிவ பெருமானைப் புகழ்ந்து பாடியது ஆதலின் திருவேகம்பமுடையார் திருவந்தாதி எனப் பெயர் பெற்றது.

திருவேகம்பத்தில் எழுந்தருளிய பெருமானே ! மெய்யறிவினால் நின்னை வழிபட்டொழுகும் மெய்யன்பர்கள் செல்லும் ஞானநெறி இதுவென உணர்ந்திலேன். சரியை கிரியை ஆகிய கைத் தொண்டு செய்து நின்னடி வணங்கும் அடியார்கள் தொண்டினை மகிழ்ந்து மேற்கொண்டேன் அல்லேன். உடல் வளர்க்கும் உணவினையே விரும்பிப் பொய்யாக உன்னைப் போற்றிப் புறமே திரியும் அடியவனாகிய எளியேனுடைய பணியையும் ஏற்றுக் கொள்வாயோ?

சிவபெருமானுக்குத் தொண்டு பூண்டதன் பயன் அவனடியார்களுக்குப் பணி செய்து ஒழுகுதலேயாகும். அடியார்களுடைய திருவடித் துகளைத் தலைமேற் கொள்வாருள்ளம் தெளிவு பெறும். ஆகையால் அவர்கள் சிவபிரான் அருள் பெறுதல் ஒருதலை. சிவபெருமானுடைய திருவடிகளை வணங்குவதற்கே தம் தலையினைப் பயன்படுத்தும் பெருவிருப்புடைய மெய்யடியார்களோடு இணங்கிப் பழகுவது அல்லாமல் பிறரோடு தாம் நெருங்கிப் பழகுவதில்லை.

பிற தெய்வங்களைக் கடவுளாக எண்ணிப் புலமை மிக்கோர் பாடும் செய்யுட் பொருட்கள் முடிவில் ஏகம்ப நாதராகிய முழுமுதற் பொருளைச் சென்று சாரும். போர் செய்து பகை வேந்தரை வெல்லும் பேரரசர்களாயினும் எவ்வுயிர்க்கும் இறைவராகிய ஏகம்பவாணருடைய திருவருள் வடிவாகத் திகழும் திருநீற்றினைத் தம்முடைய நெற்றியில் அணிந்து அப்பெருமானைப் போற்றாராயின் அவ் அரசருடைய அரசாட்சி முதலியன நிலை பெறல் இல்லை. பூதேவர் என்று போற்றப் பெறும் தலைமையைப் பிறப்பினால் அடைந்து மறைகளை மறவாது ஓதி, வேள்விகளை முறைப்படி செய்து வந்தாலும், திருவேகம்பரைத் தொண்டர்களோடும் கூடித் தொழும் திருவருள் நலம் அமையப் பெறாதவர்கள் காடுகளில் வேட்டையாடித் திரியும் வேடர்களோடு சேர்த்து எண்ணப் பெறும் தாழ்வுடையவராவர். சீலமின்றி அறிவின்றிக் கொலை களவு முதலிய தீமை புரிந்தொழுகும் கீழ்க்குல மக்களாயினும் ஏகம்பத்து இறைவனுடைய திருவடிக்கு அன்புடைய தொண்டராயின் அவர்களே சிறந்தவர்களாகப் போற்றத் தக்கவராவர் என்பன போன்ற பல செய்திகள் இவ் அந்தாதியில் அமைந்துள்ளன.

திருச்சிற்றம்பலம்

கட்டளைக் கலித்துறை

908. மெய்த்தொண்டர் செல்லும் நெறியறி
யேன்மிக நற்பணிசெய்
கைத்தொண்டர் தம்மிலும் நற்றொண்(டு)
உவந்திலன் உண்பதற்கே
பொய்த்தொண்டு பேசிப் புறம்பற
மேஉன்னைப் போற்றுகின்ற
இத்தொண்ட னேன்பணி கொள்ளுதி
யோகச்சி ஏகம்பனே.

தெளிவுரை : கச்சித் திருவேகம்பத்தில் கோயில் கொண்டிருக்கும் சிவபெருமானே ! உண்மையான அடியவர்கள் செல்லுகின்ற சிவநெறியை நான் அறிந்திலேன். நற்பணி செய்யும் ஒழுக்கமுள்ள தொண்டர்களைக் காட்டிலும் நற்றொண்டை விரும்பவில்லை. உண்டு உயிர் வாழ்வதற்காகப் பொய்த் தொண்டு பேசி, புறத்தில் மட்டுமே உன்னை வழிபடுகின்ற அடியேனுடைய தொண்டினைக் கொள்வாயாக.

909. ஏகம்ப னேஎன்னை ஆள்பவ
னேஇமை யோர்க்கிரங்கிப்
போகம்பன் னாளும் கொடுக்கின்ற
நாயக பொங்கும்ஐவாய்
நாகம்பொன் ஆரம் எனப்பொலி
வுற்றுநல் நீறணியும்
ஆகம்பொன் மாமலை ஒப்பவ
னேயென்பன் ஆதரித்தே.

தெளிவுரை :  கச்சி ஏகம்பத்தில் எழுந்தருளியிருப்பவனே ! என்னை ஆட்கொண்டவனே. தேவர்களுக்கு இரங்கி நுகர் பொருள்களை எப்போதும் கொடுக்கின்ற நாயகனே ! சீறி வருகின்ற ஐந்து தலைகளையுடைய பாம்பு பொன் ஆபரணத்தைப் போல் பொலிவுற, நல்ல திருநீறு அணியும் உடல் பொன்மா மலைபோல உள்ளவனே, என்னை ஆதரிக்குமாறு வேண்டுகிறேன்.

910. தரித்தேன் மனத்துன் திகழ்தரு
நாமம் தடம்பொழில்வாய்
வரித்தேன் முரல்கச்சி ஏகம்ப
னேயென்றன் வல்வினையை
அரித்தேன் உனைப்பணி யாதவர்
ஏழைமை கண்டவரைச்
சிரித்தேன் உனக்கடி யாரடி
பூணத் தெளிந்தனனே.

தெளிவுரை : உன்னுடைய சிறந்த திருப்பெயரை என் மனத்துள் பொருத்திக் கொண்டேன். பெரிய சோலையிடத்தில் கீற்றுக்களையுடைய வண்டுகள் ஒலி செய்கின்ற கச்சியம்பதியில் கோயில் கொண்டிருக்கும் ஏகம்பனே ! என் வல்வினைகளைப் போக்கினேன். உன்னை வணங்காதவர் ஏழைமை கண்டவர்கள் என எள்ளி நகையாடினேன். உன்னுடைய மெய்த் தொண்டர்களின் பாதங்களை அணியத் தெரிந்து கொண்டேன்.

911. தெளிதரு கின்றது சென்றென்
மனம்நின் திருவடிவம்
அளிதரு நின்னருட்(கு) ஐயம்
இனியில்லை அந்திச்செக்கர்
ஒளிதரு மேனிஎம் ஏகம்ப
னேஎன்(று) உகந்தவர்தாள்
தளிதரு தூளிஎன் றன்தலை
மேல்வைத்த தன்மைபெற்றே.

தெளிவுரை :  என் மனம் உன் திருவடிவத்தில் சென்று பதிந்தமையால் தெளிவடைகின்றது. அருள் பாலிக்கின்ற நின் கருணைக்கு இனி சந்தேகம் இல்லை. மாலையில் தோன்றும் செவ்வானம் போல் ஒளிதரும் மேனி ஏகம்பனே என்று மகிழ்ந்தவர்களின் பாதமாகிய திருக்கோயிலில் உள்ள புழுதி என் தலைமேல் வைத்த தன்மை பெற்று உய்ந்தேன்.

912. பெற்றுகந் தேன்என்றும் அர்ச்சனை
செய்யப் பெருகுநின்சீர்
கற்றுகந் தேன்என் கருத்தினி
தாக்கச்சி ஏகம்பத்தின்
பற்றுகந் தேறும் உகந்தவ
னேபட நாகக்கச்சின்
சுற்றுகந் தேர்விடை மேல்வரு
வாய்நின் துணையடியே.

தெளிவுரை : அர்ச்சனை செய்யப் பெருகும் நின்னுடைய சிறப்புக்களைக் கற்று மகிழ்ந்தேன். கச்சி ஏகம்பத்தின் விருப்பத்தை இனிதாகக் கொண்டு மகிழ்ந்து, காளையை ஊர்தியாக உடையவனே. படத்தையுடைய பாம்பைக் கச்சையாக விரும்புகின்றவனே. உன்னுடைய இரண்டு பாதங்களையே பற்றுக் கோடாக விரும்பி ஏற்றுக் கொண்டேன்.

913. அடிநின்ற சூழல் அகோசரம்
மாலுக்(கு) அயற்(கு) அலரின்
முடிநின்ற சூழ்முடி காண்பரி
தாயிற்றுக் கார்முகிலின்
இடிநின்ற சூழ்குரல் ஏறுடை
ஏகம்ப யாம்எங்ஙனே
வடிநின்ற சூலப் படையுடை
யாயை வணங்குவதே.

தெளிவுரை : உன்னுடைய திருவடி யிருந்த இடம் திருமாலுக்கு அறிய முடியாதது. நான்முகனுக்கு, கொன்றையலர் தாங்கிய உன் திருமுடி காண முடியாதாயிற்று. கருமேகத்தின் இடியைப் போல் ஒலிக்கும் குரலை யுடைய காளையை ஊர்தியாக உடைய ஏகம்பனே ! யாம் எவ்வாறு கூர்மை பொருந்திய சூலப் படையை உடைய உன்னை வணங்குவது?

914. வணக்கம் தலைநின் திருவடிக்
கேசெய்யும் மையல்கொண்டோர்
இணக்கன்றி மற்றோர் இணக்கறி
வோம்அல்லம் வல்லரவின்
குணக்குன்ற வில்லி குளிர்கச்சி
ஏகம்பம் பாடின்அல்லால்
கணக்கன்று மற்றொரு தேவரைப்
பாடும் கவிநலமே.

தெளிவுரை : வணக்கம் தலைநின் திருவடிக்கே செய்யும் பேரன்பு கொண்டவர், நட்பு இல்லாமல் வேறு வழியை அறிவோம் அல்லோம். வல்லரவை நாணாகவும் மேரு மலையை வில்லாகவும் கொண்ட குளிர் கச்சி ஏகம்பனைப் பாடுவதன்றி வேறு ஒரு தேவரைப் பாடும் கவி நலம் பொருட் படுத்தக் கூடியதன்று.

915. நலந்தர நான்ஒன்று சொல்லுவன்
கேண்மின்நல் லீர்கள்அன்பு
கலந்தர னார்கச்சி ஏகம்பம்
கண்டு கனல்திகிரி
சலந்தரன் ஆகம் ஒழிக்கவைத்
தாய்தக்கன் வேள்வியெல்லாம்
நிலந்தர மாகச்செய் தாயென்று
பூசித்து நின்மின்களே.

தெளிவுரை : நல்லவர்களே ! நன்மை பெற நான் ஒன்று சொல்கின்றேன் கேளுங்கள். அன்பு கலந்து அரனார் கச்சி ஏகம்பம் கண்டு, தீப்பிழம்பைக் கக்கும் உருளைப் படையைக் கொண்டு சலந்தரன் உடம்பை ஒழியும்படி செய்தாய், தட்சனது யாகத்தை அழியும்படி செய்தாய், என்று வழிபாடு செய்யுங்கள் என்றபடி.

916. மின்கள்என் றார்சடை கொண்டல்என்
றார்கண்டம் மேனிவண்ணம்
பொன்கள்என் றார்வெளிப் பாடுதம்
பொன்அடி பூண்டுகொண்ட
என்கள்என் றாலும் பிரிந்தறி
யார்கச்சி ஏகம்பத்தான்
தன்கள்என் றார்உல கெல்லாம்
நிலைபெற்ற தன்மைகளே.

தெளிவுரை : சடையை மின்னல்கள் என்றார்கள். கண்டத்தைக் கொண்டல்கள் என்றார்கள். மேனி வண்ணத்தைப் பொன்கள் என்றார்கள். அவருடைய பொன்னடியைச் சிரமேற்கொண்ட அடியார்கள். என்றாலும் பிரிந்தறியார். கச்சி ஏகம்பத்தான் தன்மைகளே உலகெல்லாம் நிலை பெற்றன என்பதாம்.

917. தன்மையிற் குன்றாத் தவத்தோர்
இமையவர் தாம்வணங்கும்
வன்மையிற் குன்றா மதிற்கச்சி
ஏகம்பர் வண்கயிலைப்
பொன்மயிற் சாயலும் சேயரிக்
கண்ணும் புரிகுழலும்
மென்மையிற் சாயும் மருங்குலும்
காதல் விளைத்தனவே.

தெளிவுரை : தலைவியைப் பற்றித் தலைவன் பாங்கனிடம் கூறுதல்.

தன்மையில் குன்றாத தவத்தை உடையவராகிய தேவர்கள் வணங்குகின்ற, வலிமை பொருந்திய மதில்களை உடைய கச்சி ஏகம்பரது வளப்பம் பொருந்திய கயிலை மலையில் தலைவியினது பொன்மயில் போன்ற சாயலும், சேயரிக்கண்ணும் புரிகுழலும் மென்மையில் சாயும் இடையும் எனக்குக் காதலை விளைத்தன.

918. தனமிட் டுமைதழு வத்தழும்
புற்றவர் தம்அடியார்
மனம்விட் டகலா மதிற்கச்சி
ஏகம்பர் வான்கயிலைச்
சினம்விட் டகலாக் களிறு
வினாவியோர் சேயனையார்
புனம்விட் டகலார் பகலாம்
பொழுதும்நம் பூங்கொடியே.

இது தலைவிக்குத் தோழி கூறியது.

தெளிவுரை : உமாதேவியார் நடுங்கி இறைவனைச் சேர்த்துத் தழுவிக் கொள்ள முலைத்தழும்பைப் பெற்ற ஏகம்பரது அடியார்களது மனத்தை விட்டு அகலாத மதில்களை உடைய கச்சி ஏகம்பரது வான் கயிலையில் சினம் விட்டு அகலாத ஆண் யானை இங்கு வந்ததா என்று கேட்டுக்கொண்டு முருக வேளைப் போன்றவர் பகல் முழுவதும் நம் புனத்தைவிட்டு அகலாமல் இருக்கிறார் என்று தலைவிக்குத் தோழி கூறினாள் என்க.

919. பூங்கொத் திருந்தழை யார்பொழில்
கச்சிஏ கம்பர்பொற்பார்
கோங்கத் திருந்த குடுமிக்
கயிலைஎம் பொன்னொருத்தி
பாங்கொத் திருந்தனை ஆரணங்
கேபடர் கல்லருவி
ஆங்கத் திருந்திழை ஆடிவந்
தாற்கண்(டு) அடிவருத்தே.

தெளிவுரை : திருமகளே ! பூங்கொத்துக்களையுடைய சோலைகள் சூழ்ந்திருக்கும் கச்சி ஏகம்பரது அழகமைந்த சிகரத்தை உடைய கயிலையில் எம் பொன்போன்ற தலைவியின் இயல்பை ஒத்திருந்தாய். படர்ந்த மலை யருவியில் அவள் ஆடி வந்தால் அவளைக் கண்டு பிறகு செல்வாயாக. இது நாண நாட்டம்.

920. வருத்தம் தருமெய்யும் கையில்
தழையும்வன் மாவினவும்
கருத்தந் தரிக்கு நடக்கவின்(று)
ஐய கழல்நினையத்
திருத்தந் தருளும் திகழ்கச்சி
ஏகம்பர் சீர்க்கயிலைத்
துருத்தந் திருப்பதன் றிப்புனங்
காக்கும் தொழில்எமக்கே.

பாங்கி எதிர்மொழி கொடுத்தல்.

தெளிவுரை : வருத்தத்தையுடைய உடம்பும், கையில் தழையும் கொண்டு வலிய யானை இங்கு வந்ததா என்று கேட்கும் வண்ணம் மாறுபாடு உடையதாகும். கழல் நினையத் திருத் தந்தருளும்படி திகழ்கின்ற கச்சி ஏகம்பரது சிறப்புடைய கயிலை ஆராய்வு தந்திருப்பதன்றி எங்களுடைய வேலை தினைப் புனத்தைக் காப்பதுதான்.

921. எம்மையும் எம்மைப் பணிகொள்ளும்
கம்பர் எழிற்கயிலை
உம்மையும் மானிடம் இப்புனத்
தேவிற்று வந்தமைந்தர்
தம்மையும் மானையும் சிந்தையை
நோக்கங் கவர்வஎன்றோ
அம்மையும் அம்மலர்க் கண்ணும்
பெரியீர் அருளுமினே.

இது கலைமான் வினாதல் என்னும் துறை.

தெளிவுரை : எம்மையும் எம்மைப் பணிகொள்ளும் திருவேகம் பத்து இறைவர் எழிற் கயிலையில் உங்களையும் மான் போன்ற பெண்ணையும் இப்புனத்தில் இருத்தி, இங்கு வரும் மைந்தரையும் மானையும் சிந்தையையும் கவர்வதற் கென்றே கண்ணிற்கு இடும் மையையும் மலரைப் போல விரிந்து பரந்த கண்களையும் பெரியீர் அருளுமின்.

922. அருளைத் தருகம்பர் அம்பொற்
கயிலையுள் எம்மையரம்
பிருளைக் கரிமறிக் கும்மிவர்
ஐயர் உறுத்தியெய்ய
வெருளக் கலைகணை தன்னொடும்
போயின வில்லிமைக்கு
மருளைத் தருசொல்லி எங்கோ
விளையுண்(டு)இவ் வையகத்தே.

தெளிவுரை : அருளைத் தருகின்ற திருவேகம்பத்து இறைவர் அழகிய பொன்போன்ற கயிலையுள் எம்மையர் யானையை நோக்கி வலிகொண்டு அம்புவிட, வெகுண்ட கலைமான் அந்த அம்போடு போயிற்று. வில்லின் வன்மை போன்ற மயக்கத்தைத் தரும் சொல்லிக்கு இவ் வையகத்துள் விலை எங்குள்ளது?

923. வையார் மழுப்படை ஏகம்பர்
ஈங்கோய் மலைப்புனத்துள்
ஐயார் வருகலை ஏனம்
கரிதொடர் வேட்டையெல்லாம்
பொய்யான ஐயர் மனத்தவெம்
பூங்கொடி கொங்கைபொறாப்
பையார் அரவிடை ஆயிற்று
வந்து பரிணமித்தே.

தெளிவுரை : இது தோழி கூற்று. கூர்மை பொருந்திய மழுப்படையை உடைய ஏகம்பர் கோயில் கொண்டிருக்கும் ஈங்கோய் மலைப் புனத்தில் அழகு பொருந்தி வருகின்ற மான், பன்றி, யானை இவைகளைத் தொடர்ந்து வேட்டையாடும் பொய்யான தலைவர் மனத்தின்கண் உள்ளது யாதெனில் பூங்கொடி போன்றவளது கொங்கையானது தோன்றி பாரத்தைத் தாங்காமல் இடை இல்லையாயிற்று என்பதாம்.

924. பருமுத் துதிர்த்திடும் சீர்மத்த
யானை நுதல்பகுந்திட்(டு)
உருமொத்த திண்குரல் சீயம்
திரிநெறி ஓங்குவைவாய்ப்
பொருமுத் தலைவேல் படைக்கம்பர்
பூங்கயி லைப்புனத்துள்
தருமுத் தனநகை தன்நசை
யால்வெற்ப சார்வரிதே.

தெளிவுரை : தோழி இரவு வரல் விலக்கல் : குறிஞ்சி நிலத் தலைவனே !

பெரிய முத்துக்கள் உதிர்த்திடும் சீர்மதம் மிக்க யானையின் நெற்றியைப் பிளந்து இடிபோன்ற குரலையுடைய சிங்கம் திரிகின்ற மாறுபாடான பாலை வழியில் ஓங்கிய கூரிய முத்தலை வேல் ஏந்திய ஏகம்பர் பூங்கயிலைப் புனத்துள், பல்வரிசை சிறந்த தலைவியின் விருப்பத்தால் இச்சுரத்திடை வரவேண்டாம். அது அடைதற்கு அரியது.

925. அரிதின் திருக்கண் இடநிரம்
பாயிரம் போதணிய
அரிதன் திருவடிக்(கு) அற்சித்த
கண்ணுக்(கு) அருளுகம்பர்
அரிதன் திருக்கங் குலியால்
அழிந்த கயிலையல்லிங்(கு)
அரிதென்(று) இருப்ப(து)எம் பால்வெற்ப
எம்ஐயர்க்(கு) அஞ்சுதுமே.

தெளிவுரை : இது தோழி கூற்று. மலை நாட்டுத் தலைவ ! ஆயிரம் மலர்களில் ஒன்று குறைய, திருமால் தன் கண்ணை இடந்து அர்ச்சிக்க அருள் பாலித்த கம்பர், பகைவனாக வந்த இராவணனது மயக்கம் தீர கால் விரலால் அழித்த கயிலையில் இரவு நேரத்தில் இங்கு இருப்பது ஆபத்தானது. உங்களுக்கா நாங்கள் அஞ்சுகிறோம் என்பதாம்.

926. அஞ்சரத் தான்பொடி யாய்விழத்
தீவிழித்(து) அன்புசெய்வோர்
நெஞ்சரத் தாழ்வுகந் தோர்கச்சி
ஏகம்பர் நீள்கயிலைக்
குஞ்சரத் தாழ்வரை வீழநுங்
கொம்புய்யக் கும்பமூழ்கும்
வெஞ்சரத் தாரன வோவல்ல
வோஇவ் வியன்முரசே.

மணமுரசின் சிறப்புக் கூறயவாறு.

தெளிவுரை : மன்மதன் எரிந்து சாம்பலாக நெற்றிக்கண்ணை விழித்து அன்பு செய்தவர். மெய்யடியார்கள் செய்யும் குற்றம் குறைகளை உயர்வாகவே கருதும் கச்சி ஏகம்பரது கயிலையின்கண் யானைகள் சஞ்சரிக்கும் தாழ்வரை வீழ, உங்களுடைய கொம்புய்யக் கும்ப மூழ்கும் வெஞ்சரத்தாரனவோ இந்தப் பெரிய மணமுரசு.

927. சேய்தந் தகைமை உமைகண
வன்திரு ஏகம்பத்தான்
தாய்தந்தை யாயுயிர் காப்போன்
கயிலைத் தயங்கிருள்வாய்
வேய்தந்த தோளிநம் ஊச
லொடும்விரை வேங்கைதன்னைப்
பாய்தந்து பூசலுண் டாங்கொண்ட(து)
ஓசைப் பகடுவந்தே.

தெளிவுரை : உயர்ந்த தகைமையுடைய உமாதேவியின் கணவன் திரு ஏகம்பத்தான், தாய் தந்தையாய் உயிர் காப்போன். அவனுடைய கயிலை மலையில் இருள் நிறைந்த நேரத்தில் மூங்கில் போன்ற தோள்களை யுடைய தலைவியின் ஊசலொடு யானை வேங்கை மரத்தைக் குத்தியதால் ஓசை உண்டாயிற்று.

928. வந்தும் மணம்பெறின் பொன்னனை
யீர்மன்னும் ஏகம்பர்தம்
முந்தும் அருவிக் கயிலை
மலையுயர் தேனிழிச்சித்
தந்தும் மலர்கொய்தும் தண்தினை
மேயுங் கிளிகடிந்தும்
சிந்தும் புகர்மலை கைச்சுமிச்
சாரல் திரிகுவனே.

இது தலைவன் கூற்று.

தெளிவுரை : திருமகளைப் போன்றவர்களே ! உம்மை மணம் பெறின், நிலைபெற்ற ஏகம்பருடைய முந்தும் அருவிக் கயிலை மலையில் தேன் எடுத்தும், மலர் கொய்தும் தினைப் புனத்தில் மேயும் கிளிகளை விரட்டியும், புள்ளிகளை உடைய யானையை ஓட்டியும் இச்சாரலில் இந்த ஏவல்களை யெல்லாம் செய்வேன்.

929. திரியப் புரமெய்த ஏகம்ப
னார்திக ழுங்கயிலைக்
கிரியக் குறவர் பருவத்
திடுதர ளம்வினையோம்
விரியச் சுருள்முத லானும்
அடைந்தோம் விரைவிரைந்து
பிரியக் கதிர்முத்தின் நீர்பெற்ற
தென்னங்குப் பேசுமினே.

தெளிவுரை : திரிபுரங்களை எரித்த ஏகம்பனார் திகழும் கயிலை மலைக் குறவர் பருவத்தில் முத்துக்களை எடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம். இறைவனது அருளையும் பெற்றோம். விரைந்து செய்யும் இப்பணியில் நீர் பெற்றது என்ன சொல்லுங்கள்?

930. பேசுக யாவரு மைக்கணி
யாரென்று பித்தரெங்கும்
பூசுகை யார்திரு நீற்றெழில்
ஏகம்பர் பொற்கயிலைத்
தேசுகை யார்சிலை வெற்பர்
பிரியும் பரிசிலர்அக்
கூசுகை யாதும்இல் லாக்குலை
வேங்கைப் பெயர்நும்மையே.

தெளிவுரை : பேசுக, யாவரும். வேங்கை மரம் என்று பித்தர் எங்கும் கூறுவர். திருநீறு பூசிய ஏகம்பரது பொற் கயிலையில் நும்மைப் பிரியும் பரிசிலர் பொன் பெற்றுச் செல்வர். யாதுமில்லாக் குலை வேங்கைப் பெயர் எதற்கு?

931. பெயரா நலத்தொழில் ஏகம்ப
னார்பிறை தோய்கயிலைப்
பெயரா திருக்கப் பெறுகிளி
காள்புன மேபிரிவின்
துயரால் வருந்தி மனமும்இங்(கு)
ஓடித் தொழுதுசென்ற(து)
அயரா துரையும்வெற் பற்(கு)அடி
யேற்கும் விடைதமினே.

இது தலைவி கூற்று. இது கிளிகளைப் பார்த்துக் கூறியது.

தெளிவுரை : பெயரா நலத்தொழில் ஏகம்பனார் பிறைதோய்கின்ற கயிலையை விட்டு நீங்காமல் இருக்கின்ற கிளிகளே ! நாங்கள் பிரிந்து செல்வதால் இந்தத் தினைப்புனம் துயரால் வருந்தியது. நீங்கள் மறவாமல் வெற்பற்கு (மலைநாட்டுத் தலைவருக்கு) சொல்லுங்கள். எங்களுக்கும் விடை தாருங்கள்.

932. தம்மைப் பிறவிக் கடல்கடப்
பிப்பவர் தாம்வணங்கும்
மும்மைத் திருக்கண் முகத்தெழில்
ஏகம்பர் மொய்கயிலை
அம்மைக் கருங்கண்ணி தன்னொ(டு)இன்
பம்தரும் தண்புனமே
எம்மைக் கவலை செயச்சொல்லி
யோவல்லி எய்தியதே.

தலைவன் வறும் புனம் கண்டு வருந்துதல்.

தெளிவுரை : நம்மைப் பிறவிக் கடலினின்றும் கரையேற்றுபவர். நாம் வணங்கும் அழகு செய்யும் மூன்று கண்களை உடைய ஏகம்பர் நெருக்கமான கயிலை மலையில் அம்மைக் கருங் கண்ணியோடு இன்பம் தரும் குளிர்ந்த தினைப் புனமே என்னைக் கவலையில் ஆழ்த்திவிட்டு வல்லிக்கொடி போன்றவள் சென்றுவிட்டாள்.

933. இயங்கும் திரிபுரம் எய்தஏ
கம்பர் எழிற்கயிலைத்
தயங்கு மலர்ப்பொழில் காள்தையல்
ஆடரு வித்தடங்காள்
முயங்கு மணியறை காள்மொழி
யீர்ஒழி யாதுநெஞ்சம்
மயங்கும் பரிசுபொன் னார்சென்ற
சூழல் வகுத்தெமக்கே.

தெளிவுரை : பறந்து செல்லும் மூன்று கோட்டைகளை அழித்த ஏகம்பரது எழிற் கயிலையில் விளங்கும் மலர்ச் சோலைகளே ! தலைவி நீராடும் அருவிகளே ! நெருங்குகின்ற பளிங்குப் பாறைகளே ! இடைவிடாமல் நெஞ்சம் மயங்கும் பரிசு பொன்னார் சென்ற சூழலை வகுத்தெமக்கு மொழியுங்கள்.

இது தலைவன் கூற்று.

934. வகுப்பார் இவர்போல் மணத்துக்கு
நாள்மணந் தன்னொடின்பம்
மிகுப்பார்கள் ஆருயிர் ஒன்றாம்
இருவரை விள்ளக்கள்வாய்
நெகுப்பால் மலர்கொண்டு நின்றார்
கிடக்க நிலாவுகம்பர்
தொகுப்பால் மணிசிந் தருவிக்
கயிலைஇச் சூழ்புனத்தே.

தெளிவுரை : தோழி வரையும் நாள் உணர்த்தல். இந்த வேங்கை மரம் பூத்தது. இது மணம் செய்யத்தக்க நாள் என்பது குறிப்பு. இவர் என்றது வேங்கையை. திருவேகம்பர் தொகுப்பால் மணியைச் சிந்துகின்ற அருவிகளை உடைய கயிலைச் சூழ்ந்த இத் தினைப் புனத்தில் வகுத்துக் கூறுபவர்போல இந்த வேங்கை மரம் மணத்துக்கு நாள் குறிப்பதைப் போல, தீப்போன்ற தன் மலர் கொண்டு பூத்திருக்கிறது. இனி தலைவி தலைவன் இவர்கள் மனம் ஒன்றுபட்டு இன்பம் நுகருவார்கள் என்பதாம்.

935. புனங்குழை யாதென்று மென்தினை
கொய்ததும் போகலுற்ற
கனங்குழை யாள்தற் பிரிய
நமக்குறும் கையறவால்
மனங்குழை யாவரும் கண்களி
பண்பல பாடுந்தொண்டர்
இனங்குழை யாத்தொழும் ஏகம்பர்
இக்கயி லாயத்துள்ளே.

தெளிவுரை : இது தலைவன் கூற்று. தினை கொய்தவுடன் தலைவியை இற் செறித்துவிட்டார்கள். தொண்டர்கள் அன்பின் மிகுதியால் தோத்திரப் பாடல்களைப் பாடும் ஏகம்பரது இக்கயிலாயத்துள்ளே புனங் குழையாதென்று மென் தினையைக் கொய்தவுடன் சென்றுவிட்ட தலைவியை இல்லிலேயே இருக்குமாறு செய்து விட்டார்கள். இதனால் யானுற்ற துன்பம் கொஞ்சமோ என்று தலைவன் வருந்தினான் என்க.

936. உள்ளம் பெரியரல் லாச்சிறு
மானுடர் உற்றசெல்வம்
கள்ளம் பெரிய சிறுமனத்
தார்க்கன்றிக் கங்கையென்னும்
வெள்ளம் பெரிய சடைத்திரு
ஏகம்பர் விண்ணரணம்
தள்ளம்(பு) எரிகொண் டமைத்தார்
அடியவர் சார்வதன்றே.

தெளிவுரை : கங்கை என்னும் பெரிய நீர்ப்பெருக்கினைச் சடையில் தாங்கிய ஏகம்பர் வானத்தில் அமைந்திருந்த மூன்று கோட்டைகளை ஓர் அம்பினால் எரித்துத் தன் அடியவர்களுக்கு வாழ்வளித்தார். விசாலமான மனம் படைத்திராத சிறு மானிடர்களிடம் உள்ள பெருஞ்செல்வம் கள்ளமுடைய சிறு மனத்தார்க்கே பயன்படும் என்பதாம்.

937. அன்றும் பகையடர்க் கும்பரி
மாவும் மதமருவிக்
குன்றும் பதாதியும் தேரும்
குலவிக் குடைநிழற்கீழ்
நின்றும் பொலியினும் கம்பர்நன்
னீறு நுதற்கிலரேல்
என்றும் அரசும் முரசும்
பொலியா இருநிலத்தே.

தெளிவுரை : இந்தப் பெரிய உலகத்தில் யானை, குதிரை, தேர், காலாள் என்னும் நால்வகைப் படையோடுகூடிக் குடை நிழற் கீழ் இருந்து ஆட்சி செய்த பெருமன்னரும் திருஏகம்பரது திருநீறு அவர்கள் நெற்றியில் இல்லையேல் அவர்களுடைய அரசும் பேரிகையும் பொலிந்து இரா, பகைவர்களும் வந்து வருத்துவார்கள்.

938. நிலத்திமை யோரில் தலையாய்ப்
பிறந்து மறையொ(டு)அங்கம்
வலத்திமை போதும் பிரியா
எரிவளர்த் தாலும்வெற்பன்
குலத்துமை யோர்பங்கர் கச்சியுள்
ஏகம்பம் கூடித்தொழும்
நலத்தமை யாதவர் வேட்டுவர்
தம்மின் நடுப்படையே.

தெளிவுரை : அந்தணர்கள் மேற்சாதியில் பிறந்து வேதங்களை முறையாக ஓதி, தீயை இடைவிடாது வளர்த்தாலும் உமாதேவியாரை இடப்பாகத்தில் கொண்ட காஞ்சி புரத்தில் கோயில் கொண்டிருக்கும் ஏகாம்பர நாதரைக் கூடித் தொழாதவர்கள் வேடுவர்களாகவே கருதப் படுவார்கள்.

939. படையால் உயிர்கொன்று நின்று
பசுக்களைப் போலச்செல்லும்
நடையால் அறிவின்றி நட்பிடைப்
பொய்த்துக் குலங்களினும்
கடையாய்ப் பிறக்கினும் கச்சியுள்
ஏகம்பத்(து) எங்களையாள்
உடையான் கழற்(கு)அன்ப ரேல்அவர்
யாவர்க்கும் உத்தமரே.

தெளிவுரை : ஆயுதங்களால் பிற உயிர்களைக் கொன்று, பசுக்களைப் போலச் சாதுவாக நடித்து, அறிவில்லாமல் நண்பர்கள் இடையே பொய்பேசி, கீழான சாதியில் கடைப்பட்டுப் பிறந்தாலும் காஞ்சி புரத்தில் ஏகம்பத்தில் எங்களை ஆட்கொண்ட பெருமானது திருவடிகளுக்கு அன்பராகில் அவர்கள் எல்லாரையும்விட உத்தமர்களே. (இதுபோல் திருநாவுக்கரசரும் பாடியுள்ளார்.)

940. உத்துங்க யானை உரியார்
விரலால் அரக்கன்சென்னி
பத்தும்கை யான இருபதும்
சோர்தர வைத்திலயம்
ஒத்துங்கை யாலவன் பாடக்
கயிலையின் ஊடுகைவாள்
எத்துங்கை யான்என்(று) உகந்தளித்
தார்கச்சி ஏகம்பரே.

தெளிவுரை : பெரிய யானையின் தோலைப் போர்த்தியுள்ள கயிலைநாதர் தன் கால்விரலால் இராவணனது தலைகள் பத்தும், கைகள் இருபதும் சோர்தர, வைத்து கைத் தாளத்தோடு ஒத்துப் பாட அவனுக்குக் கைவாளை உகந்தளித்தவர் கச்சி ஏகம்பரே.

941. அம்பரம் காலனல் நீர்நிலம்
திங்கள் அருக்கன்அணு
அம்பரம் கொள்வதோர் வேழத்
துரியவன் தன்னுருவாம்
எம்பரன் கச்சியுள் ஏகம்பத்
தானிடை யாதடைவான்
நம்பரன் தன்னடி யார்அறி
வார்கட்கு நற்றுணையே.

தெளிவுரை : ஆகாயம், காற்று, நெருப்பு, நீர், மண், சந்திரன், சூரியன், ஆத்மா என்னும் அஷ்டமூர்த்தியாய் உள்ளவனும் யானைத் தோலைப் போர்த்தவனுமாகிய எம் தலைவன் கச்சியுள் கோயில் கொண்டிருக்கும் ஏகம்பரநாதரைச் சரணாக அடைபவர்களுக்கு அவன் நல்ல துணையாவான்.

942. துணைத்தா மரையடி யும்பவ
ளத்திரள் நன்குறங்கும்
பணைத்தோள் அகலமும் கண்டத்து
நீலமும் அண்டத்துமின்
பிணைத்தா லனசடை யும்திரு
முக்கணும் பெண்ணொர்பக்கத்(து)
அணைத்தார் எழிற்கம்பர் எங்கள்
பிரானார்க்(கு) அழகியவே.

தெளிவுரை : இரண்டு பாதங்களும் தாமரை மலர்கள், பவளம் திரண்டது போன்ற தொடைகள். பணைத்த தோள்களும் மார்பும். கழுத்தில் நீலமும். வானத்தில் மின்னலை இணைத்தது போன்ற சடையும், மூன்று அழகிய கண்களும், இடப்பாகத்தில் உமையும் பொருந்திய அழகிய உருவம் உடையவர் ஏகம்பர். எங்கள் பிரானுக்கு இவை அழகு செய்கின்றன.

943. அழகறி விற்பெரி தாகிய
ஏகம்பர் அத்தர்கொற்றம்
பழகறி விற்பெரி யோர்தமைப்
பற்றலர் பற்றும்அன்பின்
குழகறி வேற்பினுள் ஒன்றறி
யார்அறி யாமைதெய்வம்
கிழகெறி யப்பட்(டு) உலந்தார்
உலகிற் கிடந்தனரே.

தெளிவுரை : அழகிலும் அறிவிலும் பெரிய ஏகாம்பரநாதர், தலைவர். கொற்றம் பழகு அறிவிற் பெரியோர் தமைப் பற்றாதவர் பற்றும் அன்பின் குழகறி வேற்பினுள் ஒன்றறியாதவர் அறியாமை தெய்வம் கீழே எறியப்பட்டு அழிந்தனர். உலகில் கேட்பாரற்றுக் கிடந்தனர். ஏகாம்பர நாதரை வணங்காதவர் சீரழிவர் என்றபடி.

944. கிடக்கும் ஒருபால் இரைக்கின்ற
பாம்பொரு பால்மதியம்
தொடக்குண்(டு) இலங்கும் மலங்கும்
திரைக்கங்கை சூடுங்கொன்றை
வடக்குண்டு கட்டத் தலைமாலை
வாளால் மலைந்தவெம்போர்
கடக்கும் விடைத்திரு ஏகம்பர்
கற்றைச் சடைமுடியே.

தெளிவுரை : சீறுகின்ற பாம்பு ஒருபால் கிடக்கும். வெள்ளைச் சந்திரன் மங்கலமாக விளங்கும். திரைகளையுடைய கங்கை ததும்பும். கொன்றை மாலை துவண்டு தலை மாலையுடைய வாளால் மலைந்த வெம்போரில் வெற்றி பெற்ற, விடையூறும் ஏகம்பர் கற்றைச் சடை முடி இந்த நிலையை அடைந்தென்க.

945. கற்றைப் பவளச் சடைவலம்
பூக்கமழ் கொன்றையந்தார்
முற்றுற் றிலாமதி யின்கொழுந்
தேகம்பர் மொய்குழலாம்
மற்றைத் திசையின் மணிப்பொற்
கொழுந்தத் தரங்கழுநீர்
தெற்றிப் பொலிகின்ற சூட்டழ
காகித் திகழ்தருமே.

தெளிவுரை : கற்றையாக, பவள நிறம் பொருந்திய சடையின் வலப்பக்கத்தில் உள்ளது பூக் கமழ்கின்ற கொன்றை மாலை. (முற்றாத) பிறைச் சந்திரனாகிய கொழுந்தே ! ஏகம்பரின் இடப்பாகத்திலுள்ள உமாதேவியின் மொய் குழலில் செங்கழுநீர் மலர் பொலிந்து விளங்குகிறது.

946. தரும்அருள் தன்மை வலப்பால்
கமலக்கண் நெற்றியின்மேல்
திருமலர்க் கண்பிள விற்றிக
ழுந்தழல் செல்வக்கம்பர்
கருமலர்க் கண்இடப் பாலது
நீலம் கனிமதத்து
வருநுதற் பொட்டணங் குக்குயர்ந்(து)
ஓங்கும் மலர்க்குழலே.

தெளிவுரை : தருகின்ற அருள் தன்மை யுடையது வலப் பக்கத்தில் உள்ள தாமரை மலர் போன்ற கண், நெற்றியின்மேல் உள்ளது திருமலர்க்கண். பிளவின் திகழும் தீயினையுடைய செல்வக் கம்பரின் இடப்பாலுள்ளது கருமலர்க்கண். நீலம் கனிமதத்து வருநுதல் பொட்டுடன் மலர்க்குழல் உயர்ந்து ஓங்கும். இடப்பாகம் உமையினுடையது. ஆதலின் பெண் தன்மையோடு உள்ளது.

947. மலர்ந்த படத்துச்சி ஐந்தினும்
செஞ்சுடர் மாமணிவிட்(டு)
அலர்ந்த மணிக்குண் டலம்வலக்
காதினில் ஆடிவரும்
நலந்திரு நீள்வயி ரம்வெயிற்
பாய நகுமணிகள்
கலந்தசெம் பொன்மக ரக்குழை
ஏகம்பர் காதிடமே.

தெளிவுரை : வலப்பாகம் ஆணாகவும் இடப்பாகம் பெண்ணாகவும் உள்ள கோலம் இதுவாகும். மலர்ந்த பாம்புப் படத்தின் உச்சி ஐந்திலும் செஞ்சுடர் மாமணி விட்டு அலர்ந்த மணிக் குண்டலம் வலக்காதில் உள்ளது. ஆடி வரும் நலந்திரு நீள்வயிரம் ஒளிவீச நகுமணிகள் கலந்த செம்பொன் மகரக் குழை ஏகம்பரின் இடப்பாகத்தில் உள்ளது.

948. காதலைக் கும்வலத் தோள்பவ
ளக்குன்றம் அங்குயர்ந்து
போதலைக் கும்பனிப் பொன்மலை
நீற்றின் பொலியகலம்
தாதலைக் கும்குழல் சேர்பணைத்
தோள்நறுஞ் சாந்தணிந்து
சூதலைக் கும்முலை மார்பிடம்
ஏகம்பர் சுந்தரமே.

தெளிவுரை : காது அலைக்கும் வலத்தோள் பவளக் குன்று. அங்கு உயர்ந்து போது அலைக்கும் பனி படர்ந்த பொன்மலை (மேருமலை). திருநீறு மார்பில் விளங்கித் தோன்றும். இடப்பக்கத்தில் தாது அலைக்கும் கூந்தல் சேர்ந்த பணைத்தோள். நறும் சாந்தணிந்து சூதாடும் கருவி போன்ற முலை மார்பிடம் ஏகம்பரது அழகிய திருமேனி என்பதாம்.

949. தரம்பொற் பழியும் உலகட்டி
எய்த்துத் தரந்தளரா
உரம்பொற் புடைய திருவயி
றாம்வலம் உம்பர்மும்மைப்
புரம்பொற் பழித்தகம் பர்க்குத்
தரத்திடு பூண்முலையும்
நிரம்பப் பொறாது தளரிள
வஞ்சியும் நேர்வுடைத்தே.

அர்த்தநாரீஸ்வர வருணனை தொடர்கிறது.

தெளிவுரை : வலப்பக்கம்: தரம் பொற்ப அழியும் உலகு அட்டி எய்த்து தரம் தளரா உரம் பொற்புடைய திருவயிறு. இது திரிபுரம் எரித்த கம்பர்க்கு உரியதாகும். இடப்பக்கம்: தரத்திடும் பூண்முலையும் நிரம்பப் பொறாது தளரிள வஞ்சியும் நேர்வுடைத்து.

950. உடைப்புலி ஆடையின் மேலுர
கக்கச்சு வீக்குமுஞ்சி
வடத்தொரு கோவணந் தோன்றும்
அரைவலம் மற்றையல்குல்
தொடக்குறு காஞ்சித் தொடுத்த
அரசிலை தூநுண்துகில்
அடம்பொலி ஏறுடை ஏகம்பம்
மேய அடிகளுக்கே.

தெளிவுரை : புலித்தோல் இடை ஆடை. மேலேயுள்ளது பாம்புக் கச்சு. தருப்பையால் அமைந்த அரை ஞாண். அதில் கோவணம் தோன்றும். இது வலப்பக்கம். இடப்பக்கத்தில் அல்குல், தொடக்குறுகாஞ்சி தொடுத்த அரசிலை தூநுண் துகில்.  கொல்லேற்றுப் பாகராகிய ஏகம்பம் மேய அடிகளின் திருவுருவமாகும்.

951. அடிவலப் பாலது செந்தா
மரையொத்(து) அதிர்கழல்சூழ்ந்(து)
இடிகுரல் கூற்றின் எருத்திற
வைத்த(து) இளந்தளிரின்
அடியிடப் பாலது பஞ்சுற
அஞ்சும் சிலம்பணிந்த
வடிவுடைத் தார்கச்சி ஏகம்பம்
மேய வரதருக்கே.

தெளிவுரை : வலப்பாகத்தது: பாதம் செந்தாமரை போன்றது. அதிர் கழல் சூழ்ந்து இடிகுரல் கூற்றின் எருத்து இறவைத்தது. இடப்பாகத்தது: இளந்தளிரின் அடி பஞ்சுற அஞ்சும் சிலம்பு அணிந்தது. வடிவுடைத்தார் கச்சி ஏகம்பத்தில் மேவிய வரதருக்கு என்பதாம்.

952. தருக்கவற் றான்மிக்க முப்புரம்
எய்தயன் தன்தலையை
நெருக்கவற் றோட மழுவாள்
விசைத்தது நெற்களென்றும்
பருக்கவற் றாங்கச்சி ஏகம்பர்
அத்தர்தம் பாம்புகளின்
திருக்கவற் றால்இட்(டு) அருளும்
கடகத் திருக்கரமே.

தெளிவுரை : கர்வம் கொண்ட திரிபுராதிகளின் கோட்டையை எரித்து அழித்தவன். பிரமன் தலையை அரிந்தவள். நெற்கள் என்றும் பருக்கவற்றாம் கச்சி ஏகம்பர்; தலைவர்; தம் பாம்புகளின் திருக்கவற்றால் இட்டு அருளும் கடகத் திருக்கரமே.

இறைவனின் திருக்கரதத்தின் பெருமை கூறியவாறு.

953. கரத்தத் தமருகத்(து) ஓசை
கடுத்தண்ட மீபிளப்ப
அரத்தத்த பாதம் நெரித்திட்(டு)
அவனி தலம்நெரியத்
தரத்தத் திசைகளுக்(கு) அப்புறம்
போர்ப்பச் சடைவிரித்து
வரத்தைத் தருகம்பர் ஆடுவர்
எல்லியும் மாநடமே.

ஊழிக் காலத்துப் பெருங் கூத்தை வியந்தவாறு:

தெளிவுரை : கையிலுள்ள உடுக்கையின் ஓசையைக் கேட்டு அண்டங்கள் எல்லாம் பிளவு படவும். அரத்தத்த பாதம் நெரித்ததனால் உலகம் நெரியவும், தரத்தத்த திசைகளுக்கு அப்புறம் மூடிக் கொள்ளவும் சடைவிரித்து வரத்தைத்தரும் ஏகாம்பர நாதர் இரவிலும் பெருங்கூத்தை ஆடுவார்.

954. நடனம் பிரான்உகந்(து) உய்யக்கொண்
டானென்று நான்மறையோர்
உடன்வந்து மூவா யிரவர்
இறைஞ்சி நிறைந்தஉண்மைக்
கடனன்றி மற்றறி யாத்தில்லை
அம்பலம் காளத்தியாம்
இடம்எம் பிரான்கச்சி ஏகம்பம்
மேயாற்(கு) இனியனவே.

தெளிவுரை : இறைவன் இந்த நடனத்தை விரும்பிச் செய்தான் என்று நான்மறையோர் உடன் வந்து தில்லை மூவாயிரவர் வணங்கி, நிறைந்த உண்மைக் கடன் அன்றி மற்று அறியாத தில்லை அம்பலம், காளத்தி முதலியனவும் கச்சி ஏகம்பம் விரும்பும் இடமாகும் என்று அறிந்தனர்.

955. இனியவர் இன்னார் அவரையொப்
பார்பிறர் என்னஒண்ணாத்
தனியவர் தையல் உடனாம்
உருவர் அறம்பணித்த
முனியவர் ஏறும் உகந்தமுக்
கண்ணவர் சண்டியன்புக்(கு)
இனியவர் காய்மழு வாட்படை
யார்கச்சி ஏகம்பரே.

தெளிவுரை : வேண்டியவர் என்றும், வேண்டாதவர் என்றும் அவருக்குச் சமமானவர் என்றும், பிறர் என்றும் என்ன ஒண்ணாத் தனியவர் அவர். உமாதேவியாரோடு இருப்பவர். காமம் வெகுளி மயக்கங்களை முனிந்தவர். திருநெறி ஒழுக்கத்தால் முன்னிற்பவர் எனினுமாம், காளை வாகனர். மூன்று கண்களை உடையவர்; சண்டிகேசுவரர் அன்புக்கு இனியவர்; கொல்லும் மழுவாட் படையினர். அவர் கச்சி ஏகம்பர்.

956. பரவித் தனைநினை யக்கச்சி
ஏகம்பர் பண்ணும்மையல்
வரவித் தனையுள்ள(து) எங்கறிந்
தேன்முன் அவர்மகனார்
புரவித் தனையடிக் கக்கொடி
தாய்விடி யாஇரவில்
அரவித் தனையும்கொண் டார்மட
வார்முன்றில் ஆட்டிடவே.

தெளிவுரை : துதித்து, தன்னை நினைக்குமாறு கச்சி ஏகம்பர் செய்கின்ற மையல் வரவித்தனை உள்ளது எங்கு அறிந்தேன். முன் அவர் மகனார் புரவித் தனையடிக்கக் கொடிதாய் விடியா இரவில் அரவு இத்தனையும் கொண்டார். மடவார் முன்றில் ஆட்டிடவே. தாருகா வனத்து முனிவர்கள் இறைவனை மதியாமல் வேத நெறியைக் கடைப்பிடித்தமையால் சிவபெருமான் பிட்சாடனராய் அங்குச் சென்ற செய்தி சொல்லப்படுகிறது.

957. இடவம் சுறுக்கெனப் பாயுமுஞ்
சென்னி நகுதலைகண்(டு)
இடஅஞ் சுவர்மட வார்இரி
கின்றனர் ஏகம்பத்தீர்
படம்அஞ்சு வாயது நாகம்
இரைக்கும் அதனுக்குமுற்
படஅஞ் சுவர்எங்ங னேபலி
வந்திடும் பாங்குகளே.

தெளிவுரை : தாருகாவனத்துக்கு இவர் பிச்சை ஏற்கச் சென்றதைப் பற்றிக் கூறுகின்றார். நீ ஏறிச் சென்ற காளை மாடு விரைந்து பாயும்; உன் கையிலுள்ள பிச்சைப் பாத்திரமாகிய மண்டையோடு சிரிப்பதைப் பார்த்து முனி பத்தினிகள் பிச்சையிட அஞ்சுவர். விரைந்து ஓடி விடுவர். ஏகம்பரே ! நீர் அணிந்துள்ள பாம்பின் படம் பயத்தை உண்டாக்கும். பாம்பு சீரும். அதன் அருகில் வர அஞ்சுவர். இப்படியிருக்க உனக்குப் பிச்சை எப்படிக் கிடைக்கும்?

958. பாங்குடை கோள்புலி யின்அதள்
கொண்டீர்நும் பாரிடங்கள்
தாங்குடை கொள்ளப் பலிகொள்ள
வந்தீர் தடங்கமலம்
பூங்குடை கொள்ளப் புனற்கச்சி
ஏகம்பம் கோயில்கொண்டீர்
ஈங்கிடை கொள்ளக் கலைகொள்ள
வந்தீர் இடைக்குமின்றே.

தெளிவுரை : பாங்காக, கொல்லும் புலியின் தோலை ஆடையாகக் கொண்டீர். உம்முடைய பூதங்கள் குடை பிடிக்கப் பிச்சை ஏற்க வந்தீர். தடம் கமலம் பூங்குடை கொள்ளப் புனற்கச்சி ஏகம்பர் கோயில் கொண்டீர். இவ்விடம் முனி பத்தினிகளின் ஆடைகளைக் கவர வந்தீர். இது கைகூடுமோ?

959. இடைக்குமின் தோற்கும் இணைமுலை
யாய்முதி யார்கள்தஞ்சொல்
கடைக்கண்நன் றாம்கச்சி ஏகம்பர்
ஐயங் கொளக்கடவும்
விடைக்குமுன் தோற்றநில் லேநின்
றினியிந்த மொய்குழலார்
கிடைக்குமுன் தோற்றநஞ்(சு) அங்கிது
வோதங் கிறித்துவமே.

தெளிவுரை : இடைக்கு மின் தோற்கும். (தோன்றி மறையும் தன்மையது, மிகச் சிறுத்தது என்றபடி). இணையாகவுள்ள முலைகளை யுடையாய். முதியோர்களுடைய சொல் அருள் நிறைந்தது. கச்சி ஏகம்பர் பிச்சை யேற்க ஏறிச் செல்லும் காளைக்குத் தோன்றும்படி முன்னால் நிற்பாயாக. நின்று இனி இந்த மொய்குழலார் கிடைக்குமுன் தோற்ற நஞ்சு அங்கு இதுவோ உம் தந்திரமோ அறியேன் என்றபடி.

960. கிறிபல பேசிச் சதிரால்
நடந்து விடங்குபடக்
குறிபல பாடிக் குளிர்கச்சி
ஏகம்பர் ஐயங்கொள்ள
நெறிபல வார்குழ லார்மெலி
வுற்ற நெடுந்தெருவில்
செறிபல வெள்வளை போயின
தாயர்கள் தேடுவரே.

தெளிவுரை : பல பொய்களைப் பேசி, நடனமாடியபடி நடந்து, காமக் குறிப்போடு பல பாடல்களைப் பாடி குளிர்வித்த கச்சி ஏகம்பர் பிச்சை யேற்க வழிகள் பல உள்ளன. வார்குழலார் மெலிவுற்ற பெரிய தெருவில் செறிந்த பலவாகிய வெள் வளைகள் கீழே விழுந்து விட்டன. தாய்மார்கள் தேடுவார்கள். (இது தாருகா வனத்தில் நடந்த நிகழ்ச்சி).

961. தேடுற் றிலகள்ள நோக்கம்
தெரிந்தில சொற்கள்முடி
கூடுற் றிலகுழல் கொங்கை
பொடித்தில கூறுமிவள்
மாடுற் றிலமணி யின்மட
அல்குலும் மற்றிவள்பால்
நாடுற் றிலஎழில் ஏகம்ப
னார்க்(கு)உள்ளம் நல்கிடத்தே.

தெளிவுரை : தோழி தலைவியின் இளமைத் தன்மையைக் கூறுதல். கள்ளப் பார்வை பார்ப்பதற்குப் பழகிக் கொள்ளவில்லை. சொற்கள் தெரிந்தில. கூந்தல் முடி இன்னும் கூடிற்றிலை. கொங்கைகள் இன்னும் தோன்றவில்லை. மணியின் மட அல்குலும் மாடுற்றில. எழில் இவள்பால் இன்னும் நாடுற்றில. ஏகம்பர்க்கு உள்ளம் நல்கிட இது சமயம் அன்று என்றபடி.

962. நல்கும் புகழ்க்கட வூர்தன்
மறையவன் உய்யநண்ணிக்
கொல்கின்ற கூற்றைக் குமைத்தவெங்
கூற்றம் குளிர்திரைகள்
மல்கும் திருமறைக் காட்டமிர்(து)
என்றும் மலைமகள்தான்
புல்கும் பொழிற்கச்சி ஏகம்பம்
மேவிய பொன்மலையே.

தெளிவுரை : புகழ் நல்கும் திருக்கடவூரில் மார்க்கண்டேயனது உயிரைக் கவர வந்த கூற்றுவனை அழித்த அமிர்த கடேசர் குளிர்ந்த திரைகளை வீசும் திருமறைக் காட்டில் (வேதாரண்யத்தில்) எழுந்தருளியிருக்கும் இறைவன் பார்வதி தேவியாரைத் தழுவும் பொழில்கள் சூழ்ந்த கச்சியில் ஏகம்பமாக மேவியுள்ளார். அவர் ஒப்பற்ற பொன் மலை.

கச்சியைப் புகழும்போது மற்ற தலங்களையும் சேர்த்துக் கொள்கின்றார். இது கவி மரபு.

963. மலையத்(து) அகத்தியன் அர்ச்சிக்க
மன்னி வடகயிலை
நிலையத்(து) அமரர் தொழஇருந்
தான்நெடு மேருஎன்னும்
சிலையத்தன் பைம்பொன் மதில்திரு
ஏகம்பத் தான்திகழ்நீர்
அலையத் தடம்பொன்னி சூழ்திரு
ஐயாற்(று) அருமணியே.

தெளிவுரை : பார்வதி திருக்கல்யாண நிகழ்ச்சி சொல்லப்படுகிறது. பார்வதி தேவியின் கல்யாணத்தின்போது வடபால் தாழ்ந்தமையால் அகத்தியர் தெற்கே அனுப்பப்பட்டார். திருக்கல்யாணக் காட்சிகளை அவரும் கண்டு களிக்கின்றார் என்க. பொதிய மலையில் அகத்தியர் அருச்சனை செய்ய, பொருந்தி வடகயிலையில் அமரர் தொழ இருந்த பெரிய மேருமலையை வில்லாகக் கொண்டவன் பொன் மதில்சூழ் திருஏகம்பத்தான் திகழ்வதை, காவிரி சூழ்ந்த திருவையாற்றில் கோயில் கொண்டிருந்ததைக் கண்டார் என்க.

964. மணியார் அருவித் தடம்இம
யங்குடக் கொல்லிகல்லின்
திணியார் அருவியின் ஆர்த்த
சிராமலை ஐவனங்கள்
அணியார் அருவி கவர்கிளி
ஓப்புமின் சாரல்விந்தம்
பணிவார் அருவினை தீர்க்குமே
கம்பர் பருப்பதமே.

தெளிவுரை : இமயம், கைலாசத்தைத் தன்பால் உடையது. கொல்லி மலை அறைப்பள்ளி என்னும் தலத்தை உடையது. அழகிய அருவிகளை உடையது இமயம். மேற்குத் திக்கில் உள்ள கொல்லி மலை திணியார் அருவிகளையுடையது. சிராமலை மலைநெல் உடையது. அருவிகளையுடைய அப்புனங்களில் கிளிகளை ஓட்டும் மின் சாரல் விந்திய மலை ஆகியவற்றைப் பணிபவர்களின் தீராத வினைகளைத் தீர்ப்பது ஏகம்பரின் மலையே. இறைவன் கோயில் கொண்டிருக்கும் மலைத் தலங்களைக் கூறியவாறு.

965. பருப்பதம் கார்தவழ் மந்தரம்
இந்திர நீலம்வெள்ளை
மருப்பதங் கார்கருங் குன்றியங்
கும்பரங் குன்றம்வில்லார்
நெருப்பதங் காகுதி நாறும்
மகேந்திரம் என்றிவற்றில்
இருப்பதங் காஉகந் தான்கச்சி
ஏகம்பத்(து) எம்இறையே.

தெளிவுரை : இறைவன் கோயில் கொண்டிருக்கும் மலைகளைக் கூறுகின்றார். பருப்பதம் என்பது ஸ்ரீசைலம் (மல்லிகார்ச்சுனம்) அர்ச்சுனம்-மருதமரம். மேகங்கள் வந்து படிகின்ற மந்தர மலை, இந்திர நீல மலை. வெள்ளைத் தந்தங்களையுடைய கரிய யானைகள் இயங்குகின்ற திருப்பரங்குன்றம். நெருப்பது அங்கு ஆகுதி நாறும் மகேந்திரமலை, இந்த மலைகளில் விரும்பிக் கோயில் கொண்டிருப்பவர் கச்சி ஏகம்பத்து எம் இறையாகும். வடமருது, இடமருது, தென்மருது என்ற மூன்றும் சிவத்தலங்கள்.

966. இறைத்தார் புரம்எய்த வில்லிமை
நல்லிம வான்மகட்கு
மறைத்தார் கருங்குன்றம் வெண்குன்றம்
செங்குன்ற மன்னற்குன்றம்
நிறைத்தார் நெடுங்குன்றம் நீள்கழுக்
குன்றம்என் தீவினைகள்
குறைத்தார் முதுகுன்றம் ஏகம்பர்
குன்றென்று கூறுமினே.

தெளிவுரை : முதன்மை கொண்ட கொடிப் படையை யுடைய முப்புரங்களை எரித்த வில்லியாகிய எம்பெருமான் இமவான் மகளாகிய பார்வதி தேவியாரோடு கருங்குன்றம் என்னும் அறையணி நல்லூர் வெண்குன்றம் செங்குன்றம் மன்னற்குன்றம் நிறைத்தார் நெடுங்குன்றம் நீள் திருக்கழுக்குன்றம் என் தீவினைகளைக் குறைத்த மதுகுன்றம் (விருத்தாசலம்) ஆகிய மலைகள் ஏகம்பர் கோயில் கொண்டிருக்கும் மலைகள் என்று கூறுங்கள்.

967. கூறுமின் தொண்டர்குற் றாலம்நெய்த்
தானம் துருத்தியம்பேர்
தேறுமின் வேள்விக் குடிதிருத்
தோணி புரம்பழனம்
ஆறுமின் போல்சடை வைத்தவன்
ஆரூர் இடைமருதென்(று)
ஏறுமின் நீரெம் பிரான்கச்சி
ஏகம்பம் முன்நினைந்தே.

தெளிவுரை : எம்பிரானாகிய கச்சி ஏகம்பனை முன் நினைந்து தொண்டர்களே அடியில்கண்ட தலங்களைத் துதிப்பீர்களாக. அவையாவன: குற்றாலம், நெய்த்தானம், திருத்துருத்தி. இத்தலங்களைத் தெளிந்து வழிபடுங்கள். வேள்விக்குடி திருத்தோணிபுரம் (சீகாழி) திருப்பழனம், திருவாரூர், திருவிடைமருதூர் என்று ஓதுங்கள் என்பதாம்.

968. நினைவார்க்(கு) அருளும் பிரான்திருச்
சோற்றுத் துறைநியமம்
புனைவார் சடையோன் புகலூர்
புறம்பயம் பூவணம்நீர்ப்
பனைவார் பொழில்திரு வெண்காடு
பாச்சில் அதிகையென்று
நினைவார் தருநெஞ்சி னீர்கச்சி
ஏகம்பம் நண்ணுமினே.

தெளிவுரை : இறைவன் கோயில் கொண்டிருக்கும் தலங்களை நினைவு கூர்கிறார். நினைவார்க்கு அருளும் சிவ பெருமான் திருச்சோற்றுத்துறை, நியமம், நீண்ட சடையை யுடையோன் மேவியுள்ள திருப்புகலூர், திருப்புறம்பயம், திருப்பூவணம், நீர்ப்புனை வார் பொழில் திருவெண்காடு, திருப்பாச்சிலார் சிராமம், திருவதிகை என்று நினைவார் தருநெஞ்சில் நீர் கச்சி ஏகம்பர் போய்ச் சேருங்கள் என்றபடி.

969. நண்ணிப் பரவும் திருவா
வடுதுறை நல்லம்நல்லூர்
மண்ணில் பொலிகடம் பூர்கடம்
பந்துறை மன்னுபுன்கூர்
எண்ணற் கரிய பராய்த்துறை
ஏர்கொள் எதிர்கொள்பாடி
கண்ணிப் பிறைச்சடை யோன்கச்சி
ஏகம்பம் காண்மின் சென்றே.

தெளிவுரை : போய்த் துதிக்கின்ற திருவாவடுதுறை, நல்லம், நல்லூர் நிலவுலகில் விளங்குகின்ற கடம்பூர், கடம்பந்துறை, நிலைபெற்ற திருப்புன்கூர், எண்ணற்கரிய திருப்பராய்த் துறை, அழகிய எதிர்கொள்பாடி, மாலையணிந்த பிறைச் சடையோன் கச்சி ஏகம்பன் எழுந்தருளியிருக்கின்ற தலங்களைச் சென்று தரிசியுங்கள்.

970. சென்றேறி விண்ணுறும் அண்ணா
மலைதிகழ் வல்லம்மென்பூ
வின்தேறல் பாய்திரு மாற்பேறு
பாசூர் எழில்அழுந்தூர்
வன்தே ரவன்திரு விற்பெரும்
பேறு மதில்ஒற்றியூர்
நின்றேர் தருகச்சி ஏகம்பம்
மேயார் நிலாவியவே.

தெளிவுரை : இறைவன் எழுந்தருளியிருக்கும் தொண்டை நாட்டுத் திருத்தலங்களைக் கூறுகின்றார். மேல் ஏறிச் சென்று ஆகாயத்தைத் தொட்டுக் கொண்டிருக்கும் திரு அண்ணாமலை. திகழ் வல்லம், மென்பூவின் தேறல் பாய்கின்ற திருமால்பேறு, பாசூர், எழில்மிகு அழுந்தூர் வன்தேரவன் திருவிற்பெரும்பேறு, மதில்சூழ்ந்த திருஒற்றியூர், நின்று ஏர்தரு கச்சி ஏகம்பம் கோயில் கொண்டிருக்கும் தலங்களாகும்.

971. நிலாவு புகழ்த்திரு வோத்தூர்
திருஆமாத் தூர்நிறைநீர்
சுலாவு சடையோன் புலிவலம்
வில்வலம் கொச்சைதொண்டர்
குலாவு திருப்பனங் காடுநன்
மாகறல் கூற்றம்வந்தால்
அலாயென்(று) அடியார்க்(கு) அருள்புரி
ஏகம்பர் ஆலயமே.

தெளிவுரை : புகழ் மிக்க திருவோத்தூர், திரு ஆமாத்தூர், நிறைநீர் சூழ்ந்த சடையோன் எழுந்தருளியிருக்கும் புலிவலம், வில்வலம், கொச்சை வயமென்னும் சீகாழி, தொண்டர் குலாவும் திருப்பனங்காடு, நன்மாகறல். கூற்றம் வந்தால் இங்கே வரத்தகாதவன் நீ என்று அடியார்க்கு அருள் புரிகின்ற ஏகம்பரின் ஆலயங்களே.

972. ஆலையங் கார்கரு காவைகச்
சூர்திருக் காரிகரை
வேலையங் கேறு திருவான்மி
யூர்திரு ஊறல்மிக்க
சோலையங் கார்திருப் போந்தைமுக்
கோணம் தொடர்கடுக்கை
மாலையன் வாழ்திரு ஆலங்கா(டு)
ஏகம்பம் வாழ்த்துமினே.

தெளிவுரை : கரும்பாலைகள் நிறைந்த திருக்கருகாவூர், கச்சூர் திருக்காரிக்கரை, கடல் அலைகள் வீசும் திருவான்மியூர் திருவூறல் மிக்க சோலைகள் சூழ்ந்த திருப்பனந்தாள், முக்கோணம் தொடர் கொன்றை மாலை யணிந்த பெருமான் எழுந்தருளியிருக்கும் திரு ஆலங்காடு ஆகிய இடங்களில் உள்ள ஏகாம்பர நாதரை வாழ்த்துங்கள். எல்லாத் தலங்களிலும் ஏகம்பனாகிய இறைவன் கோயில் கொண்டிருக்கிறான் என்கிறார்.

973. வாழப் பெரிதெமக்(கு) இன்னருள்
செய்யும் மலர்க்கழலோர்
தாழச் சடைத்திரு ஏகம்பர்
தம்மைத் தொழாதவர்போய்
வாழப் பரற்சுரம் ஆற்றா
தளிரடி பூங்குழல்எம்
ஏழைக்(கு) இடையிறுக் குங்குய
பாரம் இயக்குறினே.

தெளிவுரை : இது தலைவன் கூற்று. தொழாதவர் போய் வாழுகின்ற அப்பரலை யுடைய சுரம். சுரம்-பாலை நிலம். வாழப் பெரிது எமக்கு இன்னருள் செய்யும் மலர்க் கழலோர் தாழச் சடைத்திரு ஏகம்பர் தம்மைத் தொழாதவர் போய் வாழ்கின்ற, பரற்கற்களையுடைய பாலை நிலத்தில் செல்ல ஆற்றாது தளிர் போன்ற பாதங்களையும் பூங்குழலையும் உடைய எம் தலைவிக்கு, கொங்கையின் கனம் தாங்காது இடை முரியும் என்பதாம்.

974. உறுகின்ற வெவ்அழல் அக்கடம்
இக்கொடிக்(கு) உன்பின்வரப்
பெறுகின்ற வண்மையி னால்ஐய
பேரருள் ஏகம்பனார்
துறுகின்ற மென்மலர்த் தண்பொழில்
கச்சியைச் சூழ்ந்திளையோர்
குறுகின்ற பூங்குவ ளைக்குறுந்
தண்பணை என்றுகொளே.

தெளிவுரை : தோழி உடன்படச் செய்தல். அந்தப் பாலைவனம் உன் பின்னே வருவதனால் குளிர்ந்த வயல் போலிருக்கும். தீயைப்போல் வெப்பம் மிகுந்த அப் பாலை நிலம் இந்தத் தலைவிக்கு உன் பின்னால் வரப் போகின்ற ஆறுதலினால், ஐய ! பேரருள் செய்யும் ஏகம்பனார் நெருங்கிய மலர்ச் சோலைகளையுடைய கச்சியைச் சூழந்து இளம் பெண்கள் கொய்து தருகின்ற பூங்குவளைக் குறுந்தண் பணை என்று கொள்வாயாக.

975. கொள்ளுங் கடுங்கதி ரிற்கள்ளி
தீச்சில வேயுலறி
விள்ளும் வெடிபடும் பாலையென்
பாவை விடலைபின்னே
தெள்ளும் புனற்கச்சி யுள்திரு
ஏகம்பர் சேவடியை
உள்ளும் அதுமறந் தாரெனப்
போவ(து) உரைப்பரிதே.

தெளிவுரை : இது செவிலி கூற்று. சூரியனது கடும் வெப்பத்தினால் கள்ளியைத் தீயச் செய்து, ஈரம் காய்ந்து, மூங்கில் காய்ந்து பிளக்கும் பாலை நிலத்தின் வழியாக என் பாவை போன்றவள் இந்தத் தலைவன் பின்னே தெளிந்த நீர் வளமிக்க கச்சியுள் மேவும் திரு ஏகம்பர் சேவடியை மறந்தவர்போல போக எத்தனிப்பது சொல்லும் தரமரிதே.

976. பரிப்பருந் திண்மைப் படையது
கானர் எனிற்சிறகு
விரிப்பருந் துக்கிரை ஆக்கும்வெய்
யேன்அஞ்சல் செஞ்சடைமேல்
தரிப்பருந் திண்கங்கை யார்திரு
வேகம்பம் அன்னபொன்னே
வரிப்பருந் திண்சிலை யேயும
ராயின் மறைகுவனே.

தெளிவுரை : இது தலைவன் கூற்று. தாங்குதற்கரிய திண்மைக்குரியது பாலை நிலத்து வாழ்வார் வாழ்க்கை. சிறகை விரித்தலை யுடைய பருந்துக்கு இரையாக்கும் கொடுமையை உடையேன். நீ அஞ்சாதே. செஞ்சடை மேல் கங்கையை வைத்திருக்கும் திருவேகம்பம் போன்ற பொன் போன்றவளே ! வில்லேந்திய உன் சுற்றத்தார் தடுத்தாராயின் நான் மறைகுவன்.

977. வனவரித் திண்புலி யின்னதள்
ஏகம்ப மன்னருளே
எனவரு பொன்னணங் கென்னணங்
கிற்கென் எழிற்கழங்கும்
தனவரிப் பந்தும் கொடுத்தெனைப்
புல்லியும் இற்பிரிந்தே
இனவரிக் கல்லதர் செல்வதெங்
கேஒல்கும் ஏழைநெஞ்சே.

தெளிவுரை : இது செவிலி கூற்று. (திருமகளை அழகினால் வருத்தும் என் மகளுக்கு) வனத்தில் வாழும் வரிகளையுடைய வலிய புலியின் தோலை இடையில் கட்டிய ஏகம்ப மன்னனே ! திருமகள் போன்ற என் மகளுக்கு என் அழகிய கழற்சிக் காயையும் கோடுகளோடு கூடிய கைப்பந்தையும் கொடுத்து என்னைத் தழுவியும் வீட்டை விட்டுப் பிரிந்து, பரற்கற்களை உடைய பாலை நிலத்தில் செல்வது எப்படிப் பொருந்தும், என் ஏழை நெஞ்சே ! என்று செவிலி வருந்துகிறாள்.

978. நெஞ்சார் தரஇன்பம் செய்கழல்
ஏகம்பர் கச்சியன்னாள்
பஞ்சார் அடிவைத்த பாங்கிவை
ஆங்கவள் பெற்றெடுத்த
வெஞ்சார் வொழியத்தன் பின்செல
முன்செல் வெடுவெடென்ற
அஞ்சா அடுதிறல் காளைதன்
போக்கிவை அந்தத்திலே.

தெளிவுரை : செவிலி சுவடு கண்டு இரங்கல்: நெஞ்சு ஆறுதல் பெற இன்பம் செய்கின்ற கழல்களை உடைய ஏகம்பரின் கச்சியைப் போன்றவள். செம்பஞ்சு குழம்பு தோய்ந்த பாதத்தை உடையவள். அவள் நடந்து சென்ற தன்மை இதுவாகும். அவள் இவ் வழியில் துன்பப்பட்டுச் சென்றாள். அவளுக்கு முன்னால் சென்ற காளையின் சுவடுகள் இவை. அவன் எதற்கும் அஞ்சாத வீரன். ஆகவே இந்த வழி அவளுக்குத் துன்பமாகத் தெரியவில்லை.

979. இலவவெங் கானுனை யல்லால்
தொழுஞ்சரண் ஏகம்பனார்
நிலவும் சுடரொளி வெய்யவ
னேதண் மலர்மிதித்துச்
செலவும் பருக்கை குளிரத்
தளிரடி செல்சுரத்துன்
உலவும் கதிர்தணி வித்தருள்
செய்யுன் உறுதுணைக்கே.

தெளிவுரை : நற்றாய் சுரம் தணிவித்தல். அவர்கள் சென்றவழி இலவ மரங்கள் உள்ள வெப்பமான பாலை நிலமாகும். கதிரவனே உன்னை யல்லாமல் வேறு சரண் இல்லை. ஏகம்பனார் துணை செய்வாராக. இவளுடைய மென்மையான பாதங்கள் செல்லும் வழி பருக்கைக் கற்கள் நிறைந்தது. உன்னுடைய வெப்பமான கதிர்களைத் தணிவிப்பாயாக. சூரியனே இது உன் உதவியாக இருக்கட்டும்.

980. துணையொத்த கோவையும் போலெழில்
பேதையும் தோன்றலுமுன்
இணையொத்த கொங்கையொ(டு) ஏயொத்த
காதலொடு ஏகினரே
அணையத்தர் ஏறொத்த காளையைக்
கண்டனம் மற்றவரேல்
பிணையொத்த நோக்குடைப் பெண்ணிவள்
தன்னொடும் பேசுமினே.

தெளிவுரை : (கலந்துடன் வருவோர் செவிலியிடம் கூறுதல். மற்றவர் என்றது தலைவியை. இவள் என்றது தன் காதலியை.) உங்களைப் போன்று என் மகளும் அவள் காதலனும் முன்னே சென்றார்களே, அவர்களைப் பார்த்தீர்களா என்று செவிலி கேட்க, எதிரேவந்த காளை போன்றவன் செவிலியைப் பார்த்துக் கூறுகின்றான். அன்னையே ! ஏகம்பர் ஏறிச் செல்லும் காளையைப் போன்ற தலைவனைக் கண்டேன். தலைவியைப் பற்றிய விவரங்களை மான் போன்ற பார்வையினை உடைய இவளிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள் என்றான்.

981. மின்னலிக் கும்வணக் கத்திடை
யாளையும் மீளியையும்
நென்னலிப் பாக்கைவந் தெய்தின
ரேல்எம் மனையிற்கண்டீர்
பின்னரிப் போக்கருங் குன்று
கடந்தவர் இன்றுகம்பர்
மன்னரி தேர்ந்து தொழுங்கச்சி
நாட்டிடை வைகுவரே.

தெளிவுரை : இது கண்டோர் கூற்று: மின்னலைத் தோற்கச் செய்யும் சிறிய இடையினை உடையவளையும் அவள் காதலனையும் நேற்று இச்சிறிய ஊரில் வந்து தங்கியதைக் கண்டீர். பிறகு அவர்கள் செல்வதற்கு அரிய இந்தக் குன்றைக் கடந்து, இன்று ஏகம்பரது திருமால் வந்து தொழும் கச்சி நாட்டிடை வைகுவர். என்று கூறினர்.

982. உவரச்சொல் வேடுடைக் காடுகந்
தாடிய ஏகம்பனார்
அவரக்கன் போன விமானத்தை
ஆயிரம் உண்மைசுற்றும்
துவரச் சிகரச் சிவாலயம்
சூலம் துலங்குவிண்மேல்
கவரக் கொடிதிளைக் கும்கச்சி
காணினும் கார்மயிலே.

தெளிவுரை : இது தலைவன் கூற்று. வேடுவர் வாழ்கின்ற காட்டில் விரும்பி ஆடுகின்ற ஏகம்பனார். இராவணன் சென்ற விமானத்தை அழித்த உயர்ந்த மதில்களை உடைய சிவாலயம் சூலம் துலங்கு விண் வரை உயர்ந்த கொடிகள் ஆடுகின்ற கச்சியைக் காண்பாயாக என்று தலைவன் தன் காதலியிடம் கூறுகின்றான்.

983. கார்மிக்க கண்டத்(து) எழில்திரு
ஏகம்பர் கச்சியின்வாய்
ஏர்மிக்க சேற்றெழில் நெல்நடு
வோர்ஒலி பொன்மலைபோல்
போர்மிக்க செந்நெல் குவிப்போர்
ஒலிகருப் பாலையொலி
நீர்மிக்க மாக்கட லின்ஒலி
யேஒக்கும் நேரிழையே.

தெளிவுரை : கச்சிப் பதியின் நில வளத்தையும் நீர் வளத்தையும் புகழ்ந்து கூறுகின்றார். கருநிற கண்டத்தை உடைய அழகிய ஏகம்பர நாதரது காஞ்சிபுரத்தில் சேறு நிரம்பிய கழனிகளில் நெல் நாற்றுக்களை நடுவோர் பேசும் ஒலியும், பொன்மலை போல் நெற்கட்டுக் களைக் களத்து மேட்டில் கொண்டுவந்து போடுவோர் ஒலியும் கரும்பாலைகளின் ஒலியும், நீர்மிக்க மாக்கடலின் ஒலியைப் போல் இருக்கும் என்று தலைவன் தலைவிக்குக் கூறுகின்றான்.

984. நேர்த்தமை யாமை விறற்கொடு
வேடர் நெடுஞ்சுரத்தைப்
பார்த்தமை யால்இமை தீந்தகண்
பொன்னே பகட்டுரிவை
போர்த்தமை யாலுமை நோக்கரும்
கம்பர்கச் சிப்பொழிலுள்
சேர்த்தமை யால்இமைப் போதணி
சீதம் சிறந்தனவே.

தெளிவுரை : இது தலைவன் கூற்று. இமை தீந்த கண், சீதம் சிறந்தன என முடிக்க. பொன் போன்றவளே ! வேடர் வாழ்கின்ற பாலை நிலத்தைப் பார்த்து வெப்பமடைந்த உன் கண்கள், யானையின் தோலைப் போர்த்தமையால் உமை நோக்கரும் ஏகம்பரது கச்சிப் பொழிலுள் சேர்ந்தமையால் இமைப்போதணி சீதம் சிறந்தன என்று தலைவன் தலைவிக்கு ஆறுதல் கூறுகின்றான்.

முன்பு வெப்பத்தால் துன்புற்ற கண்கள் இப்போது குளிர்ந்து காணப்படும் என்பதாம்.

985. சிறைவண்டு பாடும் கமலம்
கிடங்கிவை செம்பழுக்காய்
நிறைகொண்ட பாளைக் கமுகின்
பொழிலிவை தீங்கனியின்
பொறைகொண்ட வாழைப் பொதும்புவை
புன்சடை ஏகம்பனார்
நறைகொண்ட பூங்கச்சி நாடெங்கும்
இவ்வண்ணம் நன்னுதலே.

தெளிவுரை : காஞ்சியின் வளத்தைத் தலைவன் புகழ்கின்றான். நன்னுதலே ! இறகுகளையுடைய வண்டுகள் பாடும் தாமரை மலர்கள் நிறைந்த அகழிகள் இவை. சிவந்த பழுக்காய்கள் நிறைந்த பாளைக் கமுகின் சோலைகள் இவை. தீங்கனியின் சுமை கொண்ட வாழைத் தோட்டங்கள் இவை. புல்லிய சடையினையுடைய ஏகம்பனாரின் மணமிக்க பூங்கச்சி நாடெங்கும் இவ்வண்ணத்தைக் கொண்டது.

986. நன்னுத லார்கருங் கண்ணும்செவ்
வாயும்இவ் வாறெனப்போய்
மன்னித ழார்திரு நீலமும்
ஆம்பலும் பூப்பவள்ளை
என்னவெ லாம்ஒப்புக் காதென்று
வீறிடும் ஏகம்பனார்
பொன்னுத லார்விழி யார்கச்சி
நாட்டுளிப் பொய்கையுளே.

தெளிவுரை : இது தலைவன் கூற்று: நல்ல நெற்றியை உடைய மாதர்களின் கருங்கண்ணும் செவ்வாயும் இவ்வாறெனப் போய் நிலை பெற்ற இதழ்களையுடைய குவளை மலரும் அல்லி மலரும் பூக்க வள்ளை என்னவெலாம் ஒப்புக்காதென்று பெருமை கொள்ளும் ஏகம்பனார் பொன்னுதலார் விழியார். கச்சி நாட்டுள் இப் பொய்கையுள்ளே.

987. உள்வார் குளிர நெருங்கிக்
கருங்கிடங் கிட்டநன்னீர்
வள்வா ளைகளொடு செங்கயல்
மேய்கின்ற எங்களையாட்
கொள்வார் பிறவி கொடாதஏ
கம்பர் குளிர்குவளை
கள்வார் தருகச்சி நாட்டெழில்
ஏரிக் களப்பரப்பே.

தெளிவுரை : எண்ணுபவர் குளிர நெருங்கி இருண்ட அகழியில் உள்ள நன்னீர். வள்வாளைகளோடு செங்கயல் மீன்களும் மேய்கின்ற இடம் எதுவென்றால் எங்களை ஆட்கொள்கிறவர் இனிமேல் பிறவி கொடாத ஏகம்பர் குளிர் குவளை தேன் நிறைந்த கச்சி நாட்டெழில் ஏரிக் களப் பரப்பே.

கச்சி நாட்டின் நீர்வளம் கூறியவாறு.

988. பரப்பார் விசும்பிற் படிந்த
கருமுகில் அன்னநன்னீர்
தரப்பா சிகள்மிகு பண்பொடு
சேம்படர் தண்பணைவாய்ச்
சுரப்பார் எருமை மலர்தின்னத்
துன்னுக ராஒருத்தல்
பொரப்பார் பொலிநுத லாய்செல்வக்
கம்பர்தம் பூங்கச்சியே.

தெளிவுரை : இது தலைவன் கூற்று. விசாலமான ஆகாயத்தில் படிந்த கருமேகம் போன்ற நன்னீர்தரப் பாசிகள் மிகுந்த பண்பொடு சேம்பு படர்ந்திருக்கும் வயலில் பால்சுரக்கும் எருமை மலரைத் தின்ன, அங்குள்ள ஆண்முதலை எதிர்ப் பதைப்பார் அழகிய நெற்றியை உடையவளே ! செல்வக் கம்பர்தம் பூங்கச்சி இவ்வளவு வளமுடையது.

989. கச்சார் முலைமலை மங்கைகண்
ணாரஎண் ணான்(கு)அறமும்
வைச்சார் மகிழ்திரு ஏகம்பர்
தேவி மகிழவிண்ணோர்
விச்சா தரர்தொழு கின்ற
விமானமும் தன்மமறா
அச்சா லையும்பரப் பாங்கணி
மாடங்கள் ஓங்கினவே.

தெளிவுரை : கச்சணிந்த பருத்த முலைகளையுடைய உமா தேவியார் விரும்பி முப்பத்திரண்டு அறங்களையும் வளர்ப்பதைக் கண்டு மகிழும் ஏகம்பர், தேவி மகிழ தேவர்களும் வித்தியாதரர்களும் தொழுகின்ற விமானமும் தர்மம் குறையாத அறச் சாலையும் பரப்பும் அழகிய மாடங்கள் உயர்ந்து நிற்கின்றன.

990. ஓங்கின ஊரகம் உள்ளகம்
உம்பர் உருகிடமாம்
பாங்கினில் நின்ற(து) அரியுறை
பாடகம் தெவ்வரிய
வாங்கின வாட்கண்ணி மற்றவர்
மைத்துனி வான்கவிகள்
தாங்கின நாட்டிருந் தாளது
தன்மனை ஆயிழையே.

தெளிவுரை : கச்சி, உயர்ந்த ஊரகத்தை உள்ளிடமாகக் கொண்டது. தேவர்கள் தங்குவதற்கு இடமாக உள்ளது. பாங்காக நின்றது. திருமால் உறைகின்ற பாடகம். பகைவர் ஓட வாங்கின வாள் போன்ற கண்களை உடையவள். மற்று அவர் மைத்துனி வான் கவிகள் தாங்கின நாட்டு இருந்தாள். அது தன்மனை. ஆயிழையே !

991. இழையார் அரவணி ஏகம்பர்
நெற்றி விழியின்வந்த
பிழையா அருள்நம் பிராட்டிய(து)
இன்ன பிறங்கலுன்னும்
நுழையா வருதிரி சூலத்தள்
நோக்கரும் பொன்கடுக்கைத்
தழையார் பொழிலிது பொன்னே
நமக்குத் தளர்வில்லையே.

தெளிவுரை : இது தலைவன் கூற்று. அணிகலனாகப் பாம்பை யணிந்த ஏகம்பர் நெற்றிக்கண்ணின் வழியாக வந்த பிழையாத அருள் நம் உமாதேவியது மலை, திரிசூலம் பொன்போன்ற கொன்றை நிறைந்த சோலை. இதுதான் பொன் போன்றவளே ! இனி தளர்வில்லை. இது குளிர்ந்த இடமாகும்.

992. தளரா மிகுவெள்ளம் கண்டுமை
ஓடித் தமைத்தழுவக்
கிளையார் வளைக்கை வடுப்படும்
ஈங்கோர் கிறிபடுத்தார்
வளமாப் பொழில்திரு ஏகம்பம்
மற்றிது வந்திறைஞ்சி
உளரா வதுபடைத் தோம்மட
வாய்இவ் வுலகத்துள்ளே.

தெளிவுரை : இது தலைவன் கூற்று. காஞ்சிபுரத்தில் பார்வதி தேவியார் லிங்கம் அமைத்து வழிபாடு செய்துவரும் போது கம்பா நதி பெருக்கெடுத்து வந்தது. அதைக் கண்டு தேவி பயந்து லிங்கத்தைச் சேர்த்துத் தழுவிக் கொண்டார். அம்மையாரது முலைத்தழும்பும் வளைத் தழும்பும் லிங்கத்தில் பதிந்தன. அத்தகைய சோலைகள் சூழ்ந்த திருஏகம்பம் இது. வந்து வழிபட்டு இவ்வுலகில் இனி ஆகவேண்டியதைப் படைத்தோம், மடவாய் !

993. உலவிய மின்வடம் வீசி
உருமதிர் வுள்முழங்கி
வலவிய மாமதம் பாய்முகில்
யானைகள் வானில்வந்தால்
சுலவிய வார்குழல் பின்னரென்
பாரிர் எனநினைந்து
நிலவிய ஏகம்பர் கோயிற்
கொடியன்ன நீர்மையனே.

தெளிவுரை : உலவிய மின்னலாகிய வடத்தை வீசி, இடியாகிய (அதிர்வு) பேரொலி செய்து வல்லிய மாமதமாகிய மிகுந்த மதம் பாய்கின்ற கரிய யானைகள் வானில் வந்தால் நீண்ட கூந்தல் பின்னல் என்பார் என நினைந்து நிலவிய ஏகம்பர் கோயில் கொடியன்ன நீர்மையனே.

994. நீரென்னி லும்அலுங் கண்முகில்
காள்நெஞ்சம் அஞ்சலையென்(று)
ஆரென்னி லும்தம ராயுரைப்
பார்அம ராவதிக்கு
நேரென்னி லும்தகும் கச்சியுள்
ஏகம்பர் நீள்மதில்வாய்ச்
சேரென்னி லும்தங்கும் வாட்கண்ணி
தான்அன்பர் தேர்வரவே.

தெளிவுரை : கார்காலம் கண்டு தலைவன் தேர்வரும் என்று கலங்கிய தலைவியின் நிலை கூறப்படுகிறது. தலைவியின் கண்கள் நீர் என்று சொன்னவுடன் அழ ஆரம்பிக்கும். முகில்களே ! நெஞ்சம் அஞ்சாதே என்று ஆர் என்னிலும் சுற்றத்தாரைப்போல் உரைப்பார். துறக்க வுலகத்திற்கே போய்விடுவாள் போலும். கச்சியுள் ஏகம்பரின் நீண்ட மதில்வாய் போய்ச்சேர் என்றாலும் தங்கும். அன்பர் தேர் வரவு நோக்கிய வாட் கண்ணியின் நிலை இது.

995. வரங்கொண்(டு) இமையோர் நலங்கொள்ளும்
ஏகம்பர் கச்சியன்னாய்
பரங்கொங்கை தூவன்மின் நீர்முத்தம்
அன்பர்தம் தேரின்முன்னே
தரங்கொண்டு பூக்கொண்டு கொன்றைபொன்
னாகத்தண் காந்தட்கொத்தின்
கரங்கொண்டு பொற்சுண்ணம் ஏந்தவும்
போந்தன கார்முகிலே.

தெளிவுரை : வரங்கொண்டு தேவர்களின் நலத்தைக் கொள்ளுகின்ற ஏகம்பரது கச்சி நகரைப் போன்றவளே ! பாரமான கொங்கைகளைத் தூவன்மின், நீர் முத்தம் அன்பர் தந்து தேரின் முன் நிறுத்தி பூக்கொண்டு, பொன்போன்ற கொன்றை மலரைத் தூவி காந்தட் கொத்தைக் கையிற்கொண்டு பொற்சுண்ணம் ஏந்த கார்முகில் போந்தன. கார்முகில் வந்தன எனில் கார்காலத்தில் வருவதாகச் சொன்ன தலைவரின் தேர்வரும் என்க.

996. கார்முகம் ஆரவண் கைக்கொண்ட
கம்பர் கழல்தொழுது
போர்முக மாப்பகை வெல்லச்சென்
றார்நினை யார்புணரி
நீர்முக மாக இருண்டு
சுரந்தது நேரிழைநாம்
ஆர்முக மாக வினைக்கடல்
நீந்தும் அயர்வுயிர்ப்பே.

தெளிவுரை : பினாகி என்னும் வில்லைக் கைக்கொண்ட ஏகம்பரது பாதங்களைத் தொழுவாயாக. போர் முகமாகப் பகைவெல்லச் சென்ற நம் தலைவர் நினையார். மேகம் கடல் நீரை முகந்து, கறுத்து, சுரந்தது. நேரிழையே ! நாம் ஆர்வமாக பிறவிக் கடலை நீந்தும் பெருமூச்சாகும் இது.

997. உயிரா யினஅன்பர் தேர்வரக்
கேட்டுமுன் வாட்டமுற்ற
பயிரார் புயல்பெற்ற தென்னநம்
பல்வளை ! பான்மைகளாம்
தயிரார்பால் நெய்யொடும் ஆடிய
ஏகம்பர் தம்மருள்போல்
கையிரா வளையழுந் தக்கச்(சு)
இறுத்தன கார்மயிலே.

தெளிவுரை : உயிர் போன்ற நம் தலைவர் தேர்வரும் மணியோசையைக் கேட்டு முன்வாட்ட முற்று வாடிய பயிர் மழையைப் பெற்றதுபோல் நம் தலைவியின் பான்மைகள் வருமாறு. தயிர், பால், நெய்யொடும் அபிடேகங் கொண்ட ஏகம்பர் தம் அருள்போல் வளைகள் கையில் இல்லாமல் கழன்றன. கச்சு இறுகின. கார் மயிலே என்பது தலைவியை விளித்தது.

998. கார்விடை வண்ணத்தன் அன்றேழ்
தழுவினும் இன்றுதனிப்
போர்விடை பெற்றெதிர் மாண்டார்
எனஅண்டர் போதவிட்டார்
தார்விடை ஏகம்பர் கச்சிப்
புறவிடைத் தம்பொன்நன்பூண்
மார்விடை வைகல் பெறுவார்
தழுவ மழவிடையே.

தெளிவுரை : திருமால் கண்ணனாக அவதரித்தபோது ஏழு காளைகளைத் தழுவி நப்பின்னை பிராட்டியாரை மணந்தார். இன்று தனிப்போர் விடை பெற்று, எதிர் மாண்டார் என இடையர் போதவிட்டார். தார்விடை ஏகம்பர் கச்சிப் புறவிடைத்து அம்பொன் நன்பூண்மார் விடை வைகல் பெறுவார் தழுவ மழவிடையே.

இது ஏறு தழுவுதல் பற்றிக் கூறப்படுகிறது.

999. விடைபாய் கொடுமையெண் ணாதுமே
லாங்கன்னி வேல்கருங்கண்
கடைபாய் மனத்திளங் காளையர்
புல்கொலி கம்பர்கச்சி
மடைபாய் வயலிள முல்லையின்
மான்கன்றொ(டு) ஆன்கன்றினம்
கடைபாய் தொறும்பதி மன்றில்
கடல்போல் கலந்தெழுமே.

தெளிவுரை : விடை தழுவுதலால் உண்டாகும் கொடுமைகளை எண்ணாமல், கன்னியைப் பெறுதல் மேல் என்று வேல் போன்ற கருங் கண்களையுடைய மாதர்களின் மேல் கொண்ட ஆர்வத்தால் காளையர் ஏறு தழுவுதலாகிய வீரத்தை மேற்கொண்ட ஏகம்பர் கச்சி மடைபாய் வயலில் உள்ள இளமுல்லையின் மான் கன்றொடு பசுங் கன்றினம் கடைபாய்தொறும் பதிமன்றில் கடல் ஓசைபோல் எழும் என்றவாறு. இதுவும் ஏறு தழுவும் வழக்கத்தைப் பற்றிக் கூறுகிறது.

1000. எழுமலர்த் தண்பொழில் ஏகம்பர்
கச்சி இருங்கடல்வாய்க்
கொழுமணப் புன்னைத் துணர்மணற்
குன்றில் பரதர்கொம்பே
செழுமலர்ச் சேலல்ல வாளல்ல
வேலல்ல நீலமல்ல
முழுமலர்க் கூர்அம்பின் ஓரிரண்
டாலும் முகத்தனவே.

தெளிவுரை : மலர்களோடு கூடிய குளிர்ந்த சோலைகள் சூழ்ந்த ஏகம்பரது கச்சி பெரிய கடற்கரையிலுள்ள கொழு மணப்புன்னைத் துணர் மணற்குன்றில் நெய்தல் நில மக்களின் கொம்பே செழுமலர் சேல்மீன் அல்ல, வாளல்ல, வேலல்ல, நீலமல்ல முழுமலர் கூர் அம்பின் ஓர் இரண்டாலும் முகத்தனவே. நெய்தல் நில பெண்ணின் கண்களை இவ்வாறு வர்ணிக்கின்றார்.

சேல்மீன் போல் பிரளும். வாள் போல் வெட்டும். வேல் போல் குத்தும். நீலமலர் போல் கருநிறமுடையது. கூர் அம்பு போன்றது.

1001. முகம்பாகம் பண்டமும் பாகமென்(று)
ஓதிய மூதுரையை
உகம்பார்த் திரேல்என் நலமுயர்
ஏகம்பர் கச்சிமுன்நீர்
அகம்பாக ஆர்வின் அளவில்லை
என்னின் பவளச்செவ்வாய்
நகம்பால் பொழில்பெற்ற நாமுற்ற
வர்கொள்க நன்மயலே.

தெளிவுரை : அருளும் செல்வமும் பாகம் என்று சொன்ன மூதுரையை ஊகித்துப் பார்த்தால் என்ன? நலம் உயர் ஏகம்பர் கச்சிமுன் நீர் இடம் பாக ஆர்வின் அளவில்லை. என்னின், பவளம் போன்ற சிவந்த வாயையும் மலையின்பால் சோலை பெற்ற நாமுற்றவர் கொள்க. நன்மயலே ! (நன்மயிலே எனவும் பாடம்.)

1002. மயக்கத்த நல்லிருள் கொல்லும்
சுறவோ(டு) எறிமகரம்
இயக்கத்(து) இடுசுழி ஓதம்
கழிகிளர் அக்கழித்தார்
துயக்கத் தவர்க்(கு)அரு ளாக்கம்பர்
கச்சிக் கடலர்பொன்னூல்
முயக்கத் தகல்வு பொறாள்கொண்க
நீர்வரும் ஊர்க்(கு)அஞ்சுமே.

தெளிவுரை : நல்லிருள் கொல்லும் மயக்கத்த, சுறா மீனோடு, எறி முதலைகளின் இயக்கத்தில் இடுகின்ற சுழியை உடைய கடற்கழி கிளர் அக்கழித்தார் பாசப் பிணிப்பு உடையவர்களுக்கு அருள் செய்யாத கம்பர் கச்சிக் கடலர் பொன்னூல் முயக்கத்து அகல்வு பொறாள் கொண்கனே ! நீர்வரும் ஊர்க்கு என்மகள் அஞ்சுவாள். உன்பால் அன்புடையவள் என்றாலும் உன் ஊரைக் கண்டு அஞ்சுகிறாள் என்பதாம்.

1003. மேயிரை வைகக் குருகுண
ராமது உண்டுபுன்னை
மீயிரை வண்டோ தமர்புக்
கடிய விரிகடல்வாய்ப்
பாயிரை நாகம்கொண் டோன்தொழும்
கம்பர்கச் சிப்பவ்வநீர்
தூயிரை கானல்மற்(று) ஆரறி
வார்நந் துறைவர்பொய்யே.

தெளிவுரை : மேயிரை வைகக் கொக்கு உணராமல் மதுவுண்டு புன்னை மீயிரை வண்டு தமர்புக்கடிய விரிகடல் வாய், இரைகின்ற நாகத்தைப் பாயாகக் கொண்ட திருமால் தொழுகின்ற கம்பர் கச்சிக்கடல்நீர் தூயிரை கானல் மற்று ஆரறிவார். நம் துறைவர் (நெய்தல் நிலத் தலைவர்) சொல்லும் பொய்யை யார் அறிவார் என்றபடி.

1004. பொய்வரு நெஞ்சினர் வஞ்சனை
யாரையும் போகவிடா
மெய்வரும் பேரருள் ஏகம்பர்
கச்சி விரையினவாய்க்
கைவரும் புள்ளொடு சங்கினம்
ஆர்ப்பநம் சேர்ப்பர்திண்தேர்
அவ்வரு தாமங் கள்இனம்வந்(து)
ஆர்ப்ப அணைகின்றதே.

தெளிவுரை : பொய் வரும் நெஞ்சினரது வஞ்சனை யாரையும் போகவிடாது. மெய்வரும் பேரருள் ஏகம்பர் கச்சி விரையனவாய்க் கைவரும் பறவையோடு சங்கினம் ஆர்ப்ப நம் நெய்தல் நிலத்தலைவரது தேர் யானைகள் இனம் வந்து ஆரவாரிக்க நெருங்கி வருகின்றது. தலைவர் கார் காலத்தில் திரும்பி வருவதாகச் சொன்னபடி வந்துவிட்டார் என்க.

1005. இன்றுசெய் வோம்இத னில்திரு
ஏகம்பர்க்(கு) எத்தனையும்
நன்றுசெய் வோம்பணி நாளையென்(று)
உள்ளிநெஞ் சேயுடலில்
சென்றுசெ யாரை விடும்துணை
நாளும் விடா(து)அடிமை
நின்றுசெய் வாரவர் தங்களின்
நீள்நெறி காட்டுவரே.

தெளிவுரை : இன்று செய்வோம் இதனில் திருஏகம்பர்க்கு, அனைத்தையும் நன்றாகவே செய்வோம். நெஞ்சமே ! பணி நாளையென்று நினைத்து உடலில் சென்று செய்யாரை விடும் துணை நாளும் விடாமல் நின்று அடிமை செய்வார். அவர் தங்களின் நீள் நெறி காட்டுவர் என்றபடி. ஒழுக்க நெறிகளைப் போதிக்கிறார்.

1006. காட்டிவைத் தார்தம்மை யாம்கடிப்
பூப்பெய்யக் காதல்வெள்ளம்
ஈட்டிவைத் தார்தொழும் ஏகம்பர்
ஏதும் இலாதஎம்மைப்
பூட்டிவைத் தார்தமக் கன்பது
பெற்றுப் பதிற்றுப்பத்துப்
பாட்டிவைத் தார்பர வித்தொழு
வாம்அவர் பாதங்களே.

தெளிவுரை : காட்டி வைத்தார் தம்மை யாம் மணமுள்ள பூப் பெய்யக் காதல் வெள்ளம் ஈட்டி வைத்தார் தொழும் ஏகம்பர் ஏதும் இல்லாத எம்மைப் பூட்டி வைத்தார் தமக்கென்பது பெற்றுப் பத்தாகிய பத்து அதாவது இந்த நூறு அந்தாதிப் பாடல்களைச் பாடச் செய்தார். அவர் பாதங்களைத் தொழுவோம். என்று தன்னை ஆட்கொண்ட கருணை வெள்ளத்தைப் பாடிப் பரவுகின்றார்.

1007. பாதம் பரவியோர் பித்துப்
பிதற்றினும் பல்பணியும்
ஏதம் புகுதா வகையருள்
ஏகம்பர் ஏத்தெனவே
போதம் பொருளால் பொலியாத
புன்சொல் பனுவல்களும்
வேதம் பொலியும் பொருளாம்
எனக்கொள்வர் மெய்த்தொண்டரே.

தெளிவுரை : இறைவனது பாதங்களைத் துதித்து, ஒப்பற்ற பேரன்போடு பிதற்றினாலும் பல்பணியும் குற்றம் புகா வகையில் அருளும் ஏகம்பரை ஏத்துவாயாக என்று அறிவுப் பொருள் நிரம்பாத அற்பச் சொற்களால் ஆகிய பாடல்களும், வேதம் நிறைந்த பொருளாக மெய்த் தொண்டர்கள் கொள்வார்கள்.

திருச்சிற்றம்பலம்

30. திருவொற்றியூர் ஒருபா ஒருபஃது (பட்டினத்துப் பிள்ளையார் அருளிச் செய்தது)

திருவொற்றியூரில் திருக்கோயில் கொண்டு எழுந்தருளியுள்ள சிவபெருமானது பொருள்சேர் புகழை விரித்துரைக்கும் ஆசிரியப்பாவாலாகிய பத்துப் பாடல்களால் அந்தாதித் தொடை அமையப் பாடப்பட்ட நூலாதலின், இது திருவொற்றியூர் ஒருபா ஒருபஃது என்னும் பெயருடையதாயிற்று.

இதன்கண் அமைந்துள்ள பாடல்கள் பத்தும் ஒற்றியூர் பரமனை முன்னிலைப் படுத்திப் போற்றும் இயல்பினவாய்ச் சைவசித்தாந்த உண்மைகளை நன்கு விளக்குவனவாக அமைந்துள்ளன. எல்லாப் பொருள்களிலும் இரண்டறக் கலந்து விளங்கும் இறைவனுக்கு உலகமே வடிவமாகலின் அப்பேருருவினை விட்டுவிலகி நிற்கும் பொருள்கள் உலகத்தில் இல்லை. உலகப் பொருள்கள் யாவும் இறைவன் திருவுருவத்தில் உறுப்புக்களாகவே கொள்ளத்தக்கன.

முப்புரம் எரியச் செய்தது; தக்கன் தலை அரிந்தது; இந்திரனைத் தோள் நெரித்தது; நான்முகன் தலைகளில் ஒன்றைக் கிள்ளியது; காமனை எரித்தது; இராவணனை விரலால் நெருக்கியது. நமனை உதைத்து முதலிய இறைவனுடைய வீரச் செயல்களெல்லாம் இறைவன் உலகத்தை இயக்குங்கால் அவன் அருளினை எதிரேற்றுக் கொள்ளாதார் செய்த வினை வயத்தால் நிகழ்ந்த நிகழ்ச்சிகளெனக் கொள்வதல்லாது இறைவன் தனக்குப் புகழ் உண்டாகுமாறு விரும்பிச் செய்த வீரச் செயல்களென மெய்யறிவாளர்கள் கொள்ள மாட்டார்கள் என்பன போன்ற செய்திகள் இதன்கண் காண்க.

திருச்சிற்றம்பலம்

அகவல்

1008. இருநில மடந்தை இயல்பினின் உடுத்த
பொருகடல் மேகலை முகமெனப் பொலிந்த
ஒற்றி மாநகர் உடையோய் உருவின்
பெற்றிஒன் றாகப் பெற்றோர் யாரே
மின்னின் பிறக்கம் துன்னும்நின் சடையே.

தெளிவுரை : பூமாதேவி இயல்பாக உடுத்த அலைளை உடைய கடல் மேகலையாகும். முகமாகப் பொலியும் ஒற்றிமாநகரை உடையோய். உருவின் தன்மையை முழுமையாகப் பெற்றோர் யாரே ! மின்னலின் ஒளியைப் போன்று விளங்குவது உன்னுடைய சடையாகும்.

மன்னிய அண்டம்நின் சென்னியின் வடிவே
பாவகன் பரிதி பனிமதி தன்னொடு
மூவகைச் சுடரும்நின் நுதல்நேர் நாட்டம்
தண்ணொளி ஆரந் தாரா கணமே
விண்ணவர் முதலா வேறோர் இடமாக்
கொண்டுறை விசும்பே கோலநின் ஆகம்

தெளிவுரை : நிலைபெற்ற இந்தப் பிரபஞ்சம் உன் தலையின் வடிவாகும். அக்கினி, சூரியன், சந்திரன் ஆகிய மூன்றும் உன் கண்களாகும். குளிர்ந்த முத்து மாலையாக விளங்குவது நட்சத்திரக் கூட்டம். தேவர் முதலானோர் வேறோர் இடமாகக் கொண்டு வாழும் விசும்பு உன் உடம்பாகும்.

எண்திசை திண்தோள் இருங்கடல் உடையே.
அணியுடை அல்குல் அவனிமண் டலமே.
மணிமுடிப் பாந்தள்நின் தாளிணை வழக்கே
ஒழியா(து) ஓடிய மாருதம் உயிர்ப்பே.

தெளிவுரை : எட்டுத் திசைகளும் உன்னுடைய திண்ணிய தோள்களாகும். பெரிய கடல் உடையாகும். அணியுடை வயிறு இந்த அவனி மண்டலமே. மணிமுடி பாந்தள்; நின் இரண்டு பாதங்கள் இயக்கம். இடைவிடாது ஓடும் காற்று உன்மூச்சு.

வழுவா ஓசை முழுதும்நின் வாய்மொழி
வானவர் முதலா மன்னுயிர் பரந்த
ஊனமில் ஞானத் தொகுதிநின் உணர்வே.
நெருங்கிய உலகினில் நீர்மையும் நிற்றலும்
சுருங்கலும் விரிதலும் தோற்றநின் தொழிலே.

தெளிவுரை : வழுவாத ஓசை முழுதும் நின் வாய்மொழி. தேவர்கள் முதலாக நிலைபெற்ற உயிர்கள் பரந்த ஊனமில் ஞானத்தொகுதி நின் உணர்வே. நெருங்கிய உலகில் நீர்மையும் நிற்றலும் சுருங்கலும் விரிதலும் தோற்றும் நின் தொழிலே ஆகும்.

அமைத்தலும் அழித்தலும் ஆங்கதன் பெயர்ச்சியும்
இமைத்தலும் விழித்தலும் ஆகும்நின் இயல்பே.
என்றிவை முதலாம் இயல்புடை வடிவினோ(டு)
ஒன்றிய துப்புரு இருவகை ஆகி
முத்திறக் குணத்து நால்வகைப் பிறவி

தெளிவுரை : அமைத்தலும் அழித்தலும் ஆங்கு அதன் பெயர்ச்சியும் கண் இமைத்தலும் விழித்தலும் நின் இயல்பாகும் என்று இவை முதலாக இயல்புடை வடிவினோடு ஒன்றிய பவழத்தின் உரு இருவகையாகி, சாத்துவிகம், இராசசம், தாமதம் என்னும் மூன்று குணங்களாகிய நால்வகைப் பிறவி.

அத்திறத்(து) ஐம்பொறி அறுவகைச் சமயமோ(டு)
ஏழுல காகி எண்வகை மூர்த்தியோ(டு)
ஊழியோ(டு) ஊழி எண்ணிறந் தோங்கி
எவ்வகை அளவினிற் கூடிநின்(று)
அவ்வகைப் பொருளும்நீ ஆகிய இடத்தே.

தெளிவுரை : அத்திறத்து ஐம்பொறி, அறுவகைச் சமயமோடு, ஏழ்உலகு ஆகி, எண்வகை மூர்த்தியோடு உலக முடிவு அளவிறந்து எவ்வகை அளவிற் கூடி நின்று அவ்வகைப் பொருளும் நீ ஆகிய இடத்து எல்லாம் நீயே என்று முடிக்கின்றார்.

1009. இடத்துறை மாதரோ(டு) ஈருடம்(பு) என்றும்
நடத்தினை நள்ளிருள் நவிற்றினை என்றும்
புலியதள் என்பொடு புனைந்தோய் என்றும்
பலிதிரி வாழ்க்கை பயின்றோய் என்றும்
அருவமும் உருவரும் ஆனாய் என்றும்

தெளிவுரை : இடப்பாகத்திலுள்ள உமாதேவி யாரோடு சேர்ந்து இரண்டு உடம்பென்றும், நள்ளிரவில் நடனத்தைப் புரிகின்றாய் என்றும், புலித் தோலையும் எலும்பு மாலையையும் அணிந்துள்ளாய் என்றும், பிச்சையெடுத்து வாழ்க்கை நடத்துகிறாய் என்றும் அருவமாகவும் உருவமாகவும் ஆனாய் என்றும்,

திருவமர் மாலொடு திசைமுகன் என்றும்
உளனே என்றும் இலனே என்றும்
தளரான் என்றும் தளர்வோன் என்றும்
ஆதி என்றும் அசோகினன் என்றும்
போதியிற் பொலிந்த புராணன் என்றும்

தெளிவுரை : திருமகளோடு கூடிய திருமால் என்றும், நான்முகன் என்றும், உள்ளவன் என்றும், இல்லவன் என்றும், தளரான் என்றும், தளர்வோன் என்றும், ஆதியாகிய முதல்வன் என்றும், அசோக மரத்தடியில் உள்ள அருகதேவன் என்றும், அரச மரத்தின் கீழ் உள்ள புத்த பெருமான் என்றும்,

இன்னவை முதலாத் தாமறி அளவையின்
மன்னிய நூலின் பன்மையுள் மயங்கிப்
பிணங்கு மாந்தர் பெற்றிமை நோக்கி
அணங்கிய அவ்அவர்க்(கு) அவ்வவை ஆகி அடையப்
பற்றிய பளிங்கு போலும்
ஒற்றி மாநகர் உடையோய் உருவே.

தெளிவுரை : இவ்வாறு கூறப்பட்டவை முதலாக எமக்குத் தெரிந்த அளவு பொருந்திய பல நூல்களில் மயங்கி, மாறுபாடு உடைய மாந்தர்களின் பெருமைகளை நோக்கித் துன்பம் செய்தவர்களுக்கு ஏற்றவாறு ஆகிக் கையிலுள்ள கண்ணாடிபோல உருவம் கொள்ளும் திருவொற்றியூரில் கோயில் கொண்டிருக்கும் இறைவனே ! வணக்கம்.

1010. உருவாம் உலகுக்(கு) ஒருவன் ஆகிய
பெரியோய் வடிவிற் பிறிதிங்(கு) இன்மையின்
எப்பொரு ளாயினும் இங்குள தாமெனின்
அப்பொருள் உனக்கே அவயவம் ஆதலின்
முன்னிய மூவெயில் முழங்கெரி ஊட்டித்

தெளிவுரை : உருவாம் உலகுக்கு ஒருவன் ஆகிய பெரியோய் ! வடிவில் வேறு பொருள் ஒன்றும் இன்மையின், எந்தப் பொருளாய் இருந்தாலும் இங்கு இருக்கிறதென்றால் அப்பொருள் உனக்கு அவயவம் ஆகும். ஆதலால் முன்பு திரிபுரங்களுக்கு எரி ஊட்டினாய் !

தொன்னீர் வையகம் துயர்கெடச் சூழ்ந்ததும்
வேள்வி மூர்த்திதன் தலையினை விடுத்ததும்
நீள்விசும் பாளிதன் தோளினை நெரித்ததும்
ஓங்கிய மறையோற்(கு) ஒருமுகம் ஒழித்ததும்
பூங்கணை வேளைப் பொடிபட விழித்ததும்

தெளிவுரை : தொன்னீர் (கடல்) உலகம் துன்பமடையச் சூழ்ந்ததும், வேள்வி மூர்த்தியாகிய தட்சனது தலையை வெட்டியதும் இந்திரனது தோள்களை நெரித்ததும், பிரமனது ஒரு தலையைக் கிள்ளி எரிந்ததும், மன்மதனைச் சாம்பலாக்கியதும்,

திறல்கெட அரக்கனைத் திருவிரல் உறுத்ததும்
குறைபடக் கூற்றினைக் குறிப்பினில் அடர்த்ததும்
என்றிவை முதலா ஆள்வினை எல்லாம்
நின்றுழிச் செறிந்த நின்செய லாதலின்
உலவாத் தொல்புகழ் ஒற்றி யூர

தெளிவுரை : வலிமை கெட இராவணனைத் தன் கால் கட்டை விரலால் அழுத்தியதும், மார்க் கண்டேயனது உயிரைக் கவர வந்த காலனைக் காலால் உதைத்ததும், என்று இவை முதலாகச் செய்த முயற்சிகள் எல்லாம், நின்றுழிச் செறிந்த உன்னுடைய வீரச் செயல்கள் ஆதலின் கெடாத பழைமையான புகழ்பெற்ற திருவொற்றியூரில் கோயில் கொண்ட இறைவனே !

பகர்வோர் நினக்குவே றின்மை கண்டவர்
நிகழ்ச்சியின் நிகழின் அல்லது
புகழ்ச்சியிற் படுப்பரோ பொருளுணர்ந் தோரே.

தெளிவுரை : சொல்லுகின்றவர் உனக்கு வேறுபட்டவர் அல்லர். கண்டவர் இவையாவும் இயல்பாக நீ செய்த செயல்களே யன்றிப் புகழுக்காகச் செய்தவையல்ல என்பதை அறிவர். இதுதான் பொருள் உணர்ந்தோரின் கருத்து என்பதாம்.

1011. பொருள்உணர்ந்(து) ஓங்கிய பூமகன் முதலா
இருள்துணை யாக்கையில் இயங்கு மன்னுயிர்
உருவினும் உணர்வினும் உயர்வினும் பணியினும்
திருவினும் திறலினும் செய்தொழில் வகையினும்
வெவ்வே றாகி வினையொடும் பிரியா(து)

தெளிவுரை : பொருள் உணர்ந்து ஓங்கிய பிரமன் முதலாக இருளை யொத்த உடலில் இயங்குகின்ற நிலை பெற்ற உயிர் உருவிலும், உணர்விலும், உயர்விலும், பணிவிலும், திருவிலும், திறலிலும், செய்தொழில் வகையிலும் வெவ்வேறாகி வினையிலிருந்து பிரியாமல்,

ஒவ்வாப் பன்மையுள் மற்றவர் ஒழுக்கம்
மன்னிய வேலையுள் வான்திரை போல
நின்னிடை எழுந்து நின்னிடை ஆகியும்
பெருகியும் சுருங்கியும் பெயர்ந்தும் தோன்றியும்
விரவியும் வேறாய் நின்றனை விளக்கம்

தெளிவுரை : பொருந்தாத பன்மையுள் மற்றவர்களுடைய ஒழுக்கம் நிலைபெற்ற கடலுள் அலை போல உன்னிடமிருந்து எழுந்து உன்னிடமே ஒடுங்கியும், அதிகமாகியும், குறைந்தும், அங்கிருந்து அகன்றும் பிறகு அங்கு வந்து தோன்றியும், கலந்தும், வேறாகியும், நின்றனை.

ஓவாத் தொல்புகழ் ஒற்றி யூர
மூவா மேனி முதல்வ நின்னருள்
பெற்றவர் அறியின் அல்லது
மற்றவர் அறிவரோ நின்னிடை மயக்கே.

தெளிவுரை : இடைவிடாத பழைமையான புகழையுடைய ஒற்றியூர ! மூத்தல் இல்லாத மேனியை யுடைய முதல்வனே ! உன்னுடைய அருள் பெற்றவர்கள் அறிவார்களோ அல்லது மற்றவர் அறிவார்களோ? அறிய மாட்டார்கள் ! (அவர்கள் உன்னைப் பற்றி, சரியாய் அறியவில்லை என்பதாம்.)

1012. மயக்கமில் சொல்நீ யாயினும் மற்றவை
துயக்க நின்திறம் அறியாச் சூழலும்
உறைவிடம் உள்ளம் ஆயினும் மற்றது
கறைபட ஆங்கே கரந்த கள்ளமும்
செய்வினை உலகினில் செய்வோய் எனினும்

தெளிவுரை : மயக்கம் இல்லாத சொல் நீ. ஆயினும் மற்றவை தளர்ச்சியுடையவை. நின்னுடைய ஆற்றல் அறியாத சூழலும், உறைவிடம் உள்ளம் ஆயினும் மற்றது குற்றம் உண்டாக ஆங்கே மறைந்த கள்ளமும் செய்வினை உலகில் செய்வோய். எனினும்,

அவ்வினைப் பயன்நீ அணுகா அணிமையும்
இனத்திடை இன்பம் வேண்டிநிற் பணிவோர்
மனத்திடை வாரி ஆகிய வனப்பும்
அன்பின் அடைந்தவர்க்(கு) அணிமையும் நாடொறும்
என்பினை உருக்கும் இயற்கைய ஆதலின்

தெளிவுரை : அவ்வினையின் பயன் நீ. நெருங்க முடியாத நெருக்கமும், இனத்திடை இன்பம் வேண்டி உன்னைப் பணிகின்றவர் மனத்தின்கண் கடல் ஆகிய அழகும், அன்போடு அடைந்தவர்களுக்கு அருகிலும், நாள்தோறும் எலும்பை உருக்கும் இயல்பினை உடையை ஆதலின்,

கண்டவர் தமக்கே ஊனுடல் அழிதல்
உண்டென உணர்ந்தனம் ஒற்றி யூர
மன்னிய பெரும்புகழ் மாதவத்
துன்னிய செஞ்சடைத் தூமதி யோயே.

தெளிவுரை : கண்டவர் தமக்கே இந்த உடம்பு அழிதல் உண்டென அறிந்தோம். திருவொற்றி யூரனே ! நிலைபெற்ற பெரும்புகழ் மாதவத் துன்னிய செஞ்சடையில் பரிசுத்தமான சந்திரனை அணிந்தவனே !

1013. தூமதி சடைமிசைச் சூடுதல் தூநெறி
ஆமதி யான்என அமைத்த வாறே
அறனுரு வாகிய ஆனே(று) ஏறுதல்
இறைவன் யானென இயற்று மாறே
அதவள் அவனென நின்றமை யார்க்கும்
பொதுநிலை யானென உணர்த்திய பொருளே

தெளிவுரை : இறைவனுடைய திருக்கோலத்தில் உள்ள பொருள்களுக்குக் கருத்து உரைக்கிறார்.

தூய்மையான சந்திரனைச் சடையின் மேல் சூடியிருப்பது தூய வழியை உடையவன் என அமைந்துள்ளது. தரும தேவதையின் உருவமாகிய ரிஷபத்தின் (காளை) மேல் ஏறுதல் இறைவன் யான் என்று காட்டுவதற்கே யாம். அது, அவன், அவள் என நின்றமை எல்லார்க்கும் பொது நிலையான் என்று உணர்த்திய பொருளே.

முக்கணன் என்பது முத்தீ வேள்வியில்
தொக்க(து) என்னிடை என்பதோர் சுருக்கே
வேத மான்மறி ஏந்துதல் மற்றதன்
நாதன் நான்என நவிற்று மாறே

தெளிவுரை : மூன்று கண்களை உடையவன் என்பது முத்தீ வேள்வியில் தொக்கது என்னிடை என்பதோர் சுருக்கே, மறைவடிவாகிய மான் கன்று ஏந்துதல், அதன் நாதன் நான் என்று சொல்லுவதற்கே.

மூவிலை ஒருதாள் சூலம் ஏந்துதல்
மூவரும் யான்என மொழிந்த வாறே
எண்வகை மூர்த்தி என்பதிவ் வுலகினில்
உண்மை யான்என உணர்த்திய வாறே

தெளிவுரை : மூன்று கிளைகளாகப் பிரிந்துள்ள ஒரு தாள் சூலம் ஏந்துதல் பிரமா, விஷ்ணு, சிவன் ஆகிய மூவரும் யான்எனத் தெரிவிப்பதற்காகவே. எண்வகை மூர்த்தி என்பது இவ்வுலகில் உண்மை யான் என உணர்த்துவதற்கேயாம்.

நிலம்நீர் தீவளி உயர்வான் என்றும்
உலவாத் தொல்புகழ் உடையோய் என்றும்
பொருளும் நற்பூதப் படையோய் என்றும்
தெருளநின்(று) உலகினில் தெருட்டு மாறே

தெளிவுரை : நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம் எக்காலத்திலும் கெடாத பழைமையான புகழினை உடையோய் என்றும் பொருளும் நல்ல பூதப் படையோய் என்றும் தெளிவாக நின்று உலகில் தெளிவிப்பதற்கேயாம்.

ஈங்கிவை முதலா வண்ணமும் வடிவும்
ஓங்குநின் பெருமை உணர்த்தவும் உணராத
தற்கொலி மாந்தர் தம்மிடைப் பிறந்த
சொற்பொருள் வன்மையிற் சுழலும் மாந்தர்க்(கு)
ஆதி யாகிய அறுதொழி லாளர்
ஓதல் ஓவா ஒற்றி யூர
சிறுவர்தம் செய்கையிற் படுத்து
முறுவலித்(து) இருத்திநீ முகப்படும் அளவே.

தெளிவுரை : இங்கு இவை முதலாக வண்ணமும் வடிவும் (நிறமும் உருவமும்) ஓங்குகின்ற உன் பெருமை உணர்த்தவும் உணராத தற்கொலை செய்து கொள்ளும் மனிதர்களிடமிருந்து பிறந்த சொற்பொருள் வன்மையில் சுழலும் மனிதர்க்கு ஆதியாகிய (அறு தொழிலாளர்) அந்தணர்கள் வேதம் ஓதுதல் நீங்காத ஒற்றியூர ! சிறுவர்களது செய்கையில் படிந்து புன்முறுவல் செய்து நீ அருள் செய்வாயாக.

1014. அளவினில் இறந்த பெருமையை ஆயினும்
எனதுளம் அகலா(து) ஒடுங்கிநின்(று) உளையே
மெய்யினை இறந்த மெய்யினை ஆயினும்
வையகம் முழுதும்நின் வடிவெனப் படுமே
கைவலத்(து) இலைநீ எனினும் காத்தல்
செய்வோர் வேண்டும் சிறப்பொழி யாயே

தெளிவுரை : அளவற்ற பெருமையை உடையை ஆயினும் என் உள்ளத்திலிருந்து நீங்காமல் ஒடுங்கி நின்று இருக்கின்றாய். பூத உடம்புகளைக் கடந்த சூட்சும உடம்பை உடையாய் ஆயினும் இந்தப் பிரபஞ்சம் முழுவதும் உன் உருவம்தான் என்று பொருள் படும். நீ உதவவில்லை என்றாலும் காப்பாற்ற வேண்டும் என்னும் பெருங்குணம் படைத்துள்ளாய்.

சொல்லிய வகையால் துணையலை யாயினும்
நல்லுயிர்க் கூட்ட நாயகன் நீயே
எங்கும் உள்ளோய் எனினும் வஞ்சனை
தங்கிய அவரைச் சாராய் நீயே அஃதான்று

தெளிவுரை : சொல்லிய வகையால் நீ துணையாக இல்லை யென்றாலும் உயிர்த் தொகுதிகளுக்கு நாயகன் நீயே. எல்லா இடங்களிலும் நீ நிறைந்துள்ளாய் எனினும் வஞ்சனை உடையவர்களை நீ சார்ந்திருக்க மாட்டாய். அதுவும் அல்லாமல்,

பிறவாப் பிறவியைப் பெருகாப் பெருமையைத்
துறவாத் துறவியைத் தொடராத் தொடர்ச்சியைத்
நுகரா நுகர்ச்சியை நுணுகா நுணுக்கினை
அகலா அகற்சியை அணுகா அணிமையை
செய்யாச் செய்கையை சிறவாச் சிறப்பினை

தெளிவுரை : பிறவாப் பிறவியை, பெருகாப் பெருமையை, துறவாத் துறவியை, தொடராத் தொடர்ச்சியை, நுகரா நுகர்ச்சியை, நுணுகா நுணுக்கினை, அகலா அகற்சியை அணுகா அணிமையை, செய்யாச் செய்கையை, சிறவாச் சிறப்பினை,

வெய்யை தணியை விழுமியை நொய்யை
செய்யை பசியை வெளியை கரியை
ஆக்குதி அழித்தி ஆன பல்பொருள்
நீக்குதி தொகுத்தி நீங்குதி அடைதி
ஏனைய வாகிய எண்ணில் பல்குணம்

தெளிவுரை : வெய்யை, தணியை, விழுமியை, நொய்யை, செய்யை, பசியை, வெளியை, கரியை, ஆக்குதி, அழித்தீ, ஆனபல் பொருள் நீக்குதி, தொகுத்தி, நீங்குதி, அடைதி ஏனையவாகிய எண்ணற்ற பல குணங்களை உடையாய்.

நினைதொறும் மயக்கும் நீர்மைய ஆதலின்
ஓங்குகடல் உடுத்த ஒற்றி யூர
ஈங்கிது மொழிவார் யாஅர் தாஅம்
சொன்னிலை சுருங்கின் அல்லது
நின்னியல் அறிவோர் யார்இரு நிலத்தே.

தெளிவுரை : இதை எண்ணிப் பார்க்கும் ஒவ்வொரு சமயத்திலும் மயக்கம் தருவதாய் உள்ளது. ஆதலின் கொந்தளிக்கும் கடலை ஆடையாக உடுத்த ஒற்றி யூரனே ! இதற்கு யார் பதில் சொல்ல முடியும்? சுருங்கச் சொல்வது அல்லது உன்னுடைய தன்மையை அறிவோர் இவ்வுலகில் யாரும் இல்லை என்பதாம்.

1015. நிலத்திடைப் பொறையாய் அவாவினில் நீண்டு
சொல்லத்தகு பெருமைத் தூரா ஆக்கை
மெய்வளி ஐயொடு பித்தொன் றாக
ஐவகை நெடுங்காற்(று) ஆங்குடன் அடிப்ப
நரையெனும் நுரையே நாடொறும் வெளுப்ப

தெளிவுரை : பூமியின்கண் பாரமாய் ஆசையில் அதிகரித்துச் சொல்லும் பெருமையுடைய உணவால் தூர்க்கப்படாத உலை மெய்யென்று நம்பி வாதம், கபம், பித்தம், ஒன்றாக, ஐந்து வகையான நெடுங்காற்று ஆங்குடன் அடிப்ப, நரை யென்னும் நுரை நாள் தோறும் வெளுப்ப,

திரையுடைத் தோலே செழுந்திரை யாகக்
கூடிய குருதி நீரினுள் நிறைந்து
மூடிய இருமல் ஓசையின் முழங்கிச்
சுடுபசி வெகுளிச் சுறவினம் எறியக்
குடரெனும் அரவக் கூட்டம்வந் தொலிப்ப

தெளிவுரை : சுருக்கத்தை உடைய தோல் கடலில் உள்ள பெரும் அலைகளாகக் கூடிய இரத்தமாகிய நீரினுள் நுழைந்து, மூடிய இருமல் ஓசையுடன் முழங்கி, வருத்தும் பசி என்னும் வெகுளிச் சுறாமீன் வீசி எறிய, குடர் என்னும் பாம்பின் கூட்டம் வந்து ஆரவாரம் செய்ய,

ஊன்தடி எலும்பின் உள்திடல் அடைந்து
தோன்றிய பல்பிணிப் பின்னகஞ் சுழலக்
கால்கையின் நரம்பே கண்ட மாக
மேதகு நிணமே மெய்ச்சா லாக
முழக்குடைத் துளையே முகங்க ளாக

தெளிவுரை : மாமிச பிண்டம் எலும்பின் உள் அடைந்து, தோன்றிய பல்பிணிப் பின்னகஞ் சுழல, கால் கை இவைகளின் நரம்பு திரையாக, மேன்மை பொருந்திய நிணம் மெய்ச்சாலாக முழக் குடைத் துளையே முகங்களாக,

வழுக்குடை மூக்கா(று) ஓதம்வந்(து) ஒலிப்ப
இப்பரி(சு) இயற்றிய உடலிருங் கடலுள்
துப்புர(வு) என்னும் சுழித்தலைப் பட்டுழி
ஆவா என்றுநின் அருளினைப் பெற்றவர்
நாவா யாகிய நாதநின் பாதம்
முந்திச் சென்று முறைமையின் வணங்கிச்
சிந்தைக் கூம்பினைச் செவ்விதின் நிறுத்தி

தெளிவுரை : வழுக்குடை மூக்காறு ஓதம் வந்து ஒலிப்ப, இப்பரிசு இயற்றிய உடல் இரும் கடலுள் துப்புரவு என்னும் சுழித்தலைப் பட்டுழி ஐயோ என்று உன் அருளைப் பெற்றவர் படகு ஆகிய நாதனே ! உன் பாதம் முன்னதாகச் சென்று முறைப்படி வணங்கி, சிந்தைக் கூம்பினைச் (பாய்மரம்) செம்மையாக நிறுத்தி,

உருகிய ஆர்வப் பாய்விரித்(து) ஆர்த்துப்
பெருகிய நிறையெனும் கயிற்றிடைப் பிணித்துத்
துன்னிய சுற்றத் தொடர்க்கயி(று) அறுத்து
மன்னிய ஒருமைப் பொறியினை முறுக்கிக்
காமப் பாரெனும் கடுவெளி அற்ற
தூமச் சோதிச் சுடர்குறி நிறுத்திச்

தெளிவுரை : உருகிய ஆர்வமாகிய பாய்விரித்து ஆரவாரம் செய்து, பெருகிய நிறையெனும் கயிற்றிடைப் பிணித்து, நெருங்கிய சுற்றமாகிய தொடர்க் கயிறு அறுத்து, நிலைபெற்ற ஒருமைப் பொறியினை முறுக்கி, காமப் பார் எனும் பெருங்காற்று அற்ற தூமச் சோதிச் சுடர்குறி நிறுத்தி,

சுருங்கா உணர்ச்சித் துடுப்பினைத் துழாவி
நெருங்கா அளவின் நீள்கரை ஏற்ற
வாங்க யாத்திரை போக்குதி போலும்
ஓங்குகடல் உடுத்த ஒற்றியூ ரோயே.

தெளிவுரை : சுருங்காத உணர்ச்சி யென்னும் துடுப்பினைத் துழாவி நெருங்கியபோது நீண்ட கரை ஏற்ற வாங்க யாத்திரை போக்குதி போலும். ஓங்கிய கடலை ஆடையாக உடுத்த ஒற்றியூரில் கோயில் கொண்டுள்ள பெருமானே ! (கரையேறும் வழி கூறியவாறு)

1016. ஒற்றி யூர உலவா நின்குணம்
பற்றி யாரப் பரவுதல் பொருட்டா
என்னிடைப் பிறந்த இன்னாப் புன்மொழி
நின்னிடை அணுகா நீர்மைய ஆதலின்
ஆவலித்(து) அழுதலின் அகன்ற அம்மனை
கேவலம் சேய்மையிற் கேளாள் ஆயினும்

தெளிவுரை : திருவொற்றியூரில் எழுந்தருளியிருக்கும் சிவ பெருமானே ! அழியாத உன் குணம் பற்றி நிரம்பப் போற்றுதல் பொருட்டு என்னிடம் பிறந்த துன்பந்தரும் அற்ப மொழி உன்னிடம் அணுகாத தன்மைய ஆதலின் பாய்விட்டு அழுதலின் அந்த விசாலமான இடத்திலிருந்து தாய் தூரத்திலிருந்து கேட்கமாட்டாள் என்றாலும்,

பிரித்தற்(கு) அரிய பெற்றிய தாகிக்
குறைவினில் ஆர்த்தும் குழவிய(து) இயல்பினை
அறியா(து) எண்ணில் ஊழி பிறவியின்
மயங்கிக் கண்ணிலர் கண்பெற் றாங்கே

தெளிவுரை : பிரித்தற்கு இயலாத தன்மை உடையதாகி குறைவாக அரற்றியும் குழந்தையினது இயல்பை அறியாது எண்ணில் ஊழிக் காலத்து பிறப்பைக் கண்டு மயங்கி, கண்ணில்லாதவர் கண்ணைப் பெற்றதைப்போல,

தாய்தலைப் படநின் தாளிணை வணக்கம்
வாய்தலை அறியா மயக்குறும் வினையேன்
மல்கிய இன்பத் தோடுடன் கூடிய
எல்லையில் அவாவினில் இயற்றிய வாகக்
கட்டிய நீயே அவிழ்க்கின் அல்ல(து)
எட்டனை யாயினும் யான்அவிழ்க் கறியேன்

தெளிவுரை : தாய் முன்வர நின் பாதங்களை வணங்கும் வழிமுறை அறியாத மயக்கத்தை அடையும் வினையை உடையேன். நிறைந்த இன்பத்தோடு உடன் கூடிய எல்லையில்லாத ஆசையினால் ஏற்பட்ட கட்டினை நீயே அவிழ்த்தால் அல்லது எள் அளவுகூட யான் அவிழ்க்க அறியேன்.

துன்னிடை இருளெனும் தூற்றிடை ஒதுங்கி
வெள்ளிடை காண விருப்புறு வினையேன்
தந்தையும் தாயும் சாதியும் அறிவும்நம்
சிந்தையும் திருவும் செல்கதித் திறனும்

தெளிவுரை : இடையில் உள்ள இருண்ட சிறு செடிகளில் ஒதுங்கி வெளியிடம் காண விரும்புகின்ற வினையேன் தந்தையும் தாயும் சாதியும் அறிவும் நம் சிந்தையும் திருவும் புகலிடத்தின் திறனும்,

துன்பமும் துறவும் தூய்மையும் அறிவும்
இன்பமும் புகழும் இவைபல பிறவும்
சுவையொளி ஊ(று)ஓசை நாற்றம் தோற்றம்
என்றிவை முதலா விளங்குவ எல்லாம்
ஒன்றநின் அடிக்கே ஒருங்குடன் வைத்து
நின்றனன் தமியேன் நின்னடி யல்லது

தெளிவுரை : துன்பமும் துறவும் தூய்மையும் அறிவும், இன்பமும் புகழும் இவை போன்ற வேறு பிறவும் சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் (புலன் ஐந்தும்) தோற்றம் என்று இவை முதலாக விளங்குகின்ற பொருள்கள் யாவும் ஒன்ற நின் அடிக்கே ஒருங்குடன் வைத்து, தமியேன் நின்றேன். நின்னடி அல்லது,

சார்வுமற்(று) இன்மையின் தளர்ந்தோர் காட்சிச்
சேர்விடம் அதனைத் திறப்பட நாடி
எய்துதற்(கு) அரியோய் யான்இனிச்
செய்வதும் அறிவனோ தெரியுங் காலே.

தெளிவுரை : வேறு சார்வு இல்லாமையின் தளர்ந்தோர் காட்சி சேர்விடம் அதனைத் திறப்பட நாடி எய்துதற்கு அரியோய் ! யான் இனிச் செய்வதும் அறியேன். யோசித்துப் பார்த்தும் வேறு வழி தெரிய வில்லையே !

1017. காலற் சீறிய கழலோய் போற்றி
மூலத் தொகுதி முதல்வா போற்றி
ஒற்றி மாநகர் உடையோய் போற்றி
முற்றும் ஆகிய முதல்வ போற்றி
அணைதொறும் சிறக்கும் அமிர்தே போற்றி

தெளிவுரை : காலனைக் கோபித்த பாதத்தோய் வணக்கம் ! ஆதியாகிய தொகுதி முதல்வா வணக்கம் ! திருவொற்றியூரில் மேவி யிருக்கும் பெரியோய் வணக்கம் ! எல்லாவற்றிற்கும் தலைமையாய் உள்ளவனே வணக்கம். உன்னை நெருங்கும் தோறும் சிறக்கும் அமிர்தமே வணக்கம் !

இணைபிறி தில்லா ஈச போற்றி
ஆர்வம் செய்பவர்க்(கு) அணியோய் போற்றி
தீர்வில் இன்சுவைத் தேனே போற்றி
வஞ்சனை மாந்தரை மறந்தோய் போற்றி
நஞ்சினை அமிர்தாய் நயந்தோய் போற்றி

தெளிவுரை : பிரிதில் இல்லாத ஈசனே வணக்கம். ஆவலாய்த் துதிப்போர்க்கு நெருங்கி யிருப்பவனே வணக்கம். முடிவில்லாத இன் சுவைத் தேனே வணக்கம். வஞ்ச மனம் கொண்டவரை மறந்தாய் வணக்கம் ! ஆலகால விடத்தை அமிர்தமாய் விரும்பினாய் வணக்கம்.

விரிகடல் வையக வித்தே போற்றி
புரிவுடை வனமாய்ப் புணர்ந்தோய் போற்றி
காண முன்பொருள் கருத்துறை செம்மைக்
காணி யாகிய அரனே போற்றி
வெம்மை தண்மையென்(று) இவைகுணம் உடைமையின்
பெண்ணோ(டு) ஆணெனும் பெயரோய் போற்றி

தெளிவுரை : விரிந்த கடலுக்கும் இவ்வுலகத்திற்கும் வித்து போன்றவனே வணக்கம் ! கட்டுதலை யுடைய வனமாகப் புணர்ந்தாய் வணக்கம் ! காண முன்பொருள் கருத்துறை செம்மைக்கு ஆணியாகிய அரனே ! வணக்கம். வெப்பமும் குளிர்ச்சியும் என்று இவைகளின் குணமாதலின் பெண்ணோடு ஆண் என்னும் பெயரோய் வணக்கம்.

மேவிய அவர்தமை வீட்டினிற் படுக்கும்
தீப மாகிய சிவனே போற்றி
மாலோய் போற்றி மறையோய் போற்றி
மேலோய் போற்றி வேதிய போற்றி
சந்திர போற்றி தழலோய் போற்றி
இந்திர போற்றி இறைவ போற்றி

தெளிவுரை : பொருந்தியவர்களுக்கு வீடு பேறு அளிக்கும் விளக்காகிய சிவனே வணக்கம். திருமால் என்றும் பிரமன் என்றும் மேலோன் என்றும் வேதியன் என்றும் சந்திரன் என்றும் சூரியன் என்றும் இந்திரன் என்றும் தோற்ற மளிக்கும் இறைவ, வணக்கம்.

அமரா போற்றி அழகா போற்றி
குமரா போற்றி கூத்தா போற்றி
பொருளே போற்றி போற்றி என்றுனை
நாத்தழும்(பு) இருக்க நவிற்றின் அல்ல(து)
ஏத்துதற்(கு) உரியோர் யார்இரு நிலத்தே.

தெளிவுரை : தேவனே வணக்கம். அழகானவனே வணக்கம். குமரனே வணக்கம். கூத்தனே வணக்கம் ! பொருளே வணக்கம், வணக்கம் என்று உன்னை நாத்தழும்பேறும் வரை போற்றினால் அல்லாமல் வணங்குதற்கு உரியவர் இந்நிலத்தில் வேறு யார் உளர்? வேறு எவரும் இலர் என்க.

திருச்சிற்றம்பலம்

31. திருநாரையூர் விநாயகர் திருஇரட்டை மணிமாலை (நம்பியாண்டார் நம்பி அருளிச் செய்தது)

பதினோராம் திருமுறை ஆசிரியர்களுள் நம்பியாண்டார் நம்பியும் ஒருவர். இவர் சோழ வள நாட்டில் திருநாரையூரில் ஆதி சைவர் மரபில் தோன்றியவர். இளமைப் பருவத்திலேயே திருநாரையூர் பொல்லாப் பிள்ளையாரால் ஆட் கொள்ளப் பெற்றவர். அப் பிள்ளையாரின் திருவருட் பெருக்கினால் செந்தமிழ்ப் புலமையும் செம்பொருள் துணிவும் நன்கு அமையப் பெற்றவர்.

தேவாரத் திருமுறைகள் மறைவிடத்தில் இருந்து வெளிவந்து உலாவுவதற்கு இவரே துணைக் காரணராவார். அறுபத்துமூன்று நாயன்மார்களுடைய வரலாற்றையும் திருத்தொண்டர் தொகையைக் கொண்டு வழிநூலாக விரித்து ஓதியவரும் இவரே. திருஞானசம்பந்தர் தேவாரம் முதல் பதினொரு திருமுறைகளையும் இவர் வகுத்தருளினார். சேக்கிழார் பாடிய திருத்தொண்டர் புராணம் பிறகு பன்னிரண்டாவது திருமுறையாகச் சேர்க்கப்பட்டது.

விநாயகர் திருஇரட்டை மணிமாலையாகிய இந்நூல் திருநாரையூரில் கோயில் கொண்டு அருளிய பொல்லாப் பிள்ளையாராகிய ஆனைமுகக் கடவுள் மீது வெண்பா, கட்டளைக் கலித்துறை என்னும் இருவகைப் பாக்களால் அந்தாதித் தொடை அமையப் பாடப்பெற்றதாதலின் திருநாரையூர் விநாயகர் திரு இரட்டை மணிமாலை என்று பெயர் பெற்றது. நம்பியாண்டார் நம்பி முதன் முதலாகப் பாடிய நூல் இதுவே என்று கூறுவர். மாங்கனியின் பொருட்டு இளைய பிள்ளையார் உலகை வலம்வர இவர் சிவபெருமானையே வலம் வந்து கனிபெற்ற செய்தி முதலியன இந்நூலில் கூறப்பெறும்.

திருச்சிற்றம்பலம்

வெண்பா
 
1018. என்னை நினைந்தடிமை கொண்டென் இடர்கெடுத்துத்
தன்னை நினையத் தருகின்றான் - புன்னை
விரசுமகிழ் சோலை வியன்நாரை யூர்முக்கண்
அரசுமகிழ் அத்திமுகத் தான்.

தெளிவுரை : புன்னை மரங்கள் கலந்த, மகிழ்ச்சியைத் தருகின்ற, சோலைகள் சூழ்ந்த வியக்கத்தக்க திருநாரையூரில் கோயில் கொண்டுள்ள முக்கண்களை யுடைய சிவபெருமான் கண்டு மகிழ்கின்ற யானை முகத்தான் என்னை நினைந்து என்னை அடிமையாகக் கொண்டு, என் துயர்களைக் களைந்து, அவனை நினைக்க அருள் செய்கின்றான் என்பதாம்.

கட்டளைக் கலித்துறை

1019. முகத்தாற் கரியன்என் றாலும்
தனையே முயன்றவர்க்கு
மிகத்தான் வெளியன்என் றேமெய்ம்மை
உன்னும் விரும்படியார்
அகத்தான் திகழ்திரு நாரையூர்
அம்மான் பயந்தஎம்மான்
உகத்தா னவன்தன் உடலம்
பிளந்த ஒருகொம்பனே.

தெளிவுரை : யானை முகத்தான் என்றாலும் அவனை அடைய முயல்கின்றவர்களுக்கு மிகவும் எளிமையானவன் என்று உண்மையை நினையும் விருப்பமுள்ளவர்கள் மனத்தில் இருப்பவன். திகழ்கின்ற திருநாரையூரில் எழுந்தருளியிருக்கும் சிவ பெருமான் பெற்ற எம்மான், கயமுகாசுரன் இறந்து விழ அவனுடைய உடம்பைப் பிளந்த ஒப்பற்றவனாகிய விநாயகப் பெருமான்.

வெண்பா

1020. கொம்பனைய வள்ளி கொழுநன் குறுகாமே
வம்பனைய மாங்கனியை நாரையூர் - நம்பனையே
தன்னவலம் செய்துகொளும் தாழ்தடக்கை யாய்என்நோய்
பின்னவலம் செய்வதெனோ பேசு.

தெளிவுரை : பூங்கொம்பைப் போன்ற வள்ளியின் நாயகனாகிய முருகன் அடையாதபடி பிரச்சினைக்குரிய மாம்பழத்தை, திருநாரையூரில் மேவிய நம்புவர்க்கருளும் சிவபெருமானை வலம் வந்து பெற்றுக் கொண்ட துதிக்கையை உடையாய் எனக்குத் துன்பம் செய்வது ஏன் என்பதைச் சொல்வாயாக.

கட்டளைக் கலித்துறை

1021. பேசத் தகாதெனப் பேயெரு
தும்பெருச் சாளியும்என்(று)
ஏசத் தரும்படி ஏறுவ
தேயிமை யாதமுக்கண்
கூசத் தகுந்தொழில் நுங்கையும்
நுந்தையும் நீயும்இந்தத்
தேசத் தவர்தொழு தாரைப்
பதியுள் சிவக்களிறே.

தெளிவுரை : பேசத் தகாதது என்னும்படி மூர்க்கமான எருதும் பெருச்சாளியும் என்று இகழுமாறு ஏறுவது ஏன்? உன் தந்தையும் தாயும் எருதை வாகனமாகக் கொண்டுள்ளனர். நீ பெருச்சாளி மீது ஏறிச் செல்கின்றாய். தேசத்தவர் தொழுகின்ற திருநாரையூரில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமானால் பெறப்பட்ட யானையே ! இது கேலிக் கூத்தாக உள்ளது என்றபடி.

வெண்பா

1022. களிறு முகத்தவனாய்க் காயம்செந் தீயின்
ஒளிறும் உருக்கொண்ட தென்னே - அளறுதொறும்
பின்நாரை யூர்ஆரல் ஆரும் பெரும்படுகர்
மன்நாரை யூரான் மகன்.

தெளிவுரை : சேறு நிரம்பிய இடங்களில் எல்லாம் நாரை என்ற பறவை ஆரல்மீனைத் தின்னும் பெரிய குளங்களை உடைய திருநாரையூரில் எழுந்தருளிய சிவ பெருமானது மகன் யானை முகத்துடனும் உடம்பு செந்தீயாகவும் விளங்குகின்ற காரணம் என்ன?

கட்டளைக் கலித்துறை

1023. மகத்தினில் வானவர் பல்கண்
சிரம்தோள் நெரித்தருளும்
சுகத்தினில் நீள்பொழில் நாரைப்
பதியுட் சுரன்மகற்கு
முகத்தது கையந்தக் கையது
மூக்கந்த மூக்கதனின்
அகத்தது வாய்அந்த வாயது
போலும் அடுமருப்பே.

தெளிவுரை : தக்கனது யாகத்தில் சூரியனது பல்லையும் பகனது கண்ணையும், தக்கனது தலையையும் இந்திரனது தோளையும் இறைவன் போக்கியருளினான். அந்த சுகத்தில் பெரிய சோலைகளை உடைய திருநாரையூரில் கோயில் கொண்டிருக்கும் இறைவனது மகனாகிய விநாயகருக்கு முகத்தில் கையும், அந்தத் துதிககையுள் மூக்கும் அந்த மூக்கினுள் வாயும், அந்த வாயினுள் கொலை செய்யக் கூடிய தந்தமும் உள்ளன. இது என்ன விந்தை !

வெண்பா

1024. மருப்பையொரு கைக்கொண்டு நாரையூர் மன்னும்
பொருப்பையடி போற்றத் துணிந்தால் - நெருப்பை
அருந்தஎண்ணு கின்றஎறும் பன்றே அவரை
வருந்தஎண்ணு கின்ற மலம்.

தெளிவுரை : நெருப்பினிடம் எறும்பு செல்லாததுபோல அடியாரிடம் ஆணவ மலர் சேராது என்பதாம்.

தந்தத்தைக் கையில் கொண்டு திருநாரையூரில் எழுந்தருளியிருக்கும் மலை போன்ற வடிவமுடைய விநாயகனை வணங்கும் அடியார்களிடம் ஆணவ மலம் நெருப்பினிடம் எறும்பு அணுகமுடியாதது போல தூர விலகிவிடும்.

கட்டளைக் கலித்துறை

1025. மலஞ்செய்த வல்வினை நோக்கி
உலகை வலம்வரும்அப்
புலஞ்செய்த காட்சிக் குமரற்கு
முன்னே புரிசடைமேல்
சலஞ்செய்த நாரைப் பதியரன்
தன்னைக் கனிதரவே
வலஞ்செய்து கொண்ட மதக்களி
றேயுன்னை வாழ்த்துவனே.

தெளிவுரை : உலகை வலம் வந்த முருகப் பெருமானுக்கு முன்னே, புரியாகச் செய்யப்பட்ட சடையில் கங்கையை வைத்துள்ள திருநாரையூர் பெருமானாகிய சிவபெருமான் தன்னை வலம் வந்து கனியைப் பெற்றுக் கொண்ட மதக்களிறே முன் வினைகள் என்னை அணுகா வண்ணம் உன்னை வாழ்த்துவேன்.

வெண்பா

1026. வனஞ்சாய வல்வினைநோய் நீக்கி வனசத்
தனஞ்சாய லைத்தருவான் அன்றோ - இனஞ்சாயத்
தேரையூர் நம்பர்மகன் திண்தோள் நெரித்தருளும்
நாரையூர் நம்பர்மக னாம்.

தெளிவுரை : சூரியன் மகனாகிய எமன் மார்க்கண்டேயனது உயிரைக் கவர வந்தபோது அவனது திண்தோள்களை நெரித்தவனாகிய சிவபெருமானது மகனாகிய விநாயகப் பெருமான் தனது சோலையை நெருங்க வல்வினை நோயை நீக்கி, தாமரை மலரில் வீற்றிருக்கும் திருமகளது அருளை நாம் பெறுமாறு செய்வான்.

கட்டளைக் கலித்துறை

1027. நாரணன் முன்பணிந்(து) ஏத்தநின்(று)
எல்லை நடாவியஅத்
தேரண வும்திரு நாரையூர்
மன்னு சிவன்மகனே
காரண னேஎம் கணபதி
யேநற் கரிவதனா
ஆரண நுண்பொரு ளேயென்
பவர்க்கில்லை அல்லல்களே.

தெளிவுரை : திருமால் முதலில் வந்து வணங்கவும் அதன் பின்னர் வந்த சூரியனது தேர் பொருந்தவும் உள்ள திரு நாரையூர் மேவிய சிவபெருமானது மகனே !காரணனே, எம் கணபதியே நல்ல யானை முகத்தை உடையவனே ! வேதத்தின் நுட்பப் பொருளே ! என்று துதிப்பவர்களுக்கு அல்லல்கள் இல்லை.

வெண்பா

1028. அல்லல் களைந்தான்தன் அம்பொன் உலகத்தின்
எல்லை புகுவிப்பான் ஈண்டுழவர் - நெல்லல்களை
செங்கழுநீர் கட்கும் திருநாரை யூர்ச்சிவன்சேய்
கொங்கெழுதார் ஐங்கரத்த கோ.

தெளிவுரை : துன்பங்களை நீக்கியவனது முக்தி உலகத்தின் எல்லையை அடையும் பொருட்டு இங்கு உழவர்கள் நெல் வயலில் உள்ள களைகளை எடுக்கும் செங்கழுநீர் நிரம்பிய திருநாரையூர் சிவபெருமானது மகனும், மலர் மாலை அணிந்த ஐந்து கரங்களை உடையவனுமாகிய விநாயகன் நம் துன்பங்களைக் களைவான் என்க.

கட்டளைக் கலித்துறை

1029. கோவிற் கொடிய நமன்தமர்
கூடா வகைவிடுவன்
காவில் திகழ்திரு நாரைப்
பதியிற் கரும்பனைக்கை
மேவற் கரிய இருமதத்(து)
ஒற்றை மருப்பின்முக்கண்
ஏவிற் புருவத்(து) இமையவள்
தான்பெற்ற யானையையே.

தெளிவுரை : சோலைகள் நிறைந்த திருநாரையூரில் எழுந்தருளியிருக்கும் கரிய துதிக்கையை உடையவனும் இரண்டு மதங்களையும் ஒற்றை தந்தத்தையும் மூன்று கண்களையும் உடையவனும் உமாதேவியார் பெற்றெடுத்த மகனுமாகிய விநாயகக் கடவுள் எம தூதர்கள் நம்மை நெருங்கா வகை செய்வான் என்பதாம்.

வெண்பா

1030. யானேத் தியவெண்பா என்னை நினைந்தடிமை
தானே சனார்த்தனற்கு நல்கினான் - தேனே
தொடுத்தபொழில் நாரையூர்ச் சூலம் வலனேந்தி
எடுத்த மதமுகத்த ஏறு.

தெளிவுரை : தேன் நிரம்பிய சோலைகளை உடைய திரு நாரையூரில் சூலத்தை வலமாக ஏந்திய சிவபெருமான் பெற்றெடுத்த விநாயகக் கடவுள் யான் அவர் பேரில் எழுதிய இந்த வெண்பாவை என்னை நினைந்து என்னை அடிமையாகத் திருமாலுக்குக் கொடுத்தான்.

கட்டளைக் கலித்துறை

1031. ஏறிய சீர்வீ ரணக்குடி
ஏந்திழைக் கும்இருந்தேன்
நாறிய பூந்தார்க் குமரற்கும்
முன்னினை நண்ணலரைச்
சீறிய வெம்பணைச் சிங்கத்தி
னுக்(கு)இளை யானைவிண்ணோர்
வேறியல் பால்தொழு நாரைப்
பதியுள் விநாயகனே.

தெளிவுரை : தேவர்கள் மணம் பொருந்திய மலர்களை இட்டுத் தொழுகின்ற திருநாரைப் பதியுள் எழுந்தருளியிருக்கும் விநாயகப் பெருமான் வேடுவர் குடியில் பிறந்த வள்ளி நாயகிக்கும் மலர்மாலை யணிந்த முருகப் பெருமானுக்கும் முன்னால் தோன்றியவன். எதிர்த்து வந்த பகைவர்களைச் சாடிய வெம்பணைச் சிங்கத்தினுக்கு இளையானை உடையவன் எனக் கூட்டுக.

வெண்பா

1032. கனமதில்சூழ் நாரையூர் மேவிக் கசிந்தார்
மனமருவி னான்பயந்த வாய்ந்த - சினமருவு
கூசாரம் பூண்டமுகக் குஞ்சரக்கன்(று) என்றார்க்கு
மாசார மோசொல்லு வான்.

தெளிவுரை : பெரிய மதில் சூழ்ந்த திருநாரையூரை மேவி அன்பால் உருகியவர்களின் மனத்தில் பொருந்திய சிவ பெருமானது மகனாகிய விநாயகப் பெருமான் கோபமிக்க கூசாரம் பூண்ட முக யானைக் கன்று என்றார்க்கு மாசாரமோ சொல்லுவான். கைவிட மாட்டான் என்றபடி.

கட்டளைக் கலித்துறை

1033. வானிற் பிறந்த மதிதவ
ழும்பொழில் மாட்டளிசூழ்
தேனிற் பிறந்த மலர்த்திரு
நாரைப் பதிதிகழும்
கோனிற் பிறந்த கணபதி
தன்னைக் குலமலையின்
மானிற் பிறந்த களிறென்(று)
உரைப்பர்இவ் வையகத்தே.

தெளிவுரை : ஆகாயத்தில் சஞ்சரிக்கின்ற மதியை எட்டும்படி உள்ள உயர்ந்த சோலையில் தேன் ஒழுகும் மலர்களை உடைய திருநாரையூரில் திகழும் சிவபெருமானின் மூத்த பிள்ளையாகிய கணபதியை, பார்வதி தேவியாரின் மகனாகிய யானையை இவ்வுலகத்தார் சிறந்த தெய்வமாகப் போற்றுவார்கள் என்றபடி.

வெண்பா

1034. வையகத்தோர் ஏத்த மதில்நாரை யூர்மகிழ்ந்து
பொய்யகத்தார் உள்ளம் புகலொழிந்து - கையகத்தோர்
மாங்கனிதன் கொம்பண்டம் பாசமழு மல்குவித்தான்
ஆங்கனகநஞ் சிந்தைஅமர் வான்.

தெளிவுரை : உலகில் உள்ளோர் துதிக்க, உயர்ந்த மதில்களை உடைய திருநாரையூரில் மகிழ்ந்து எழுந்தருளி பொய்ம்மை யுள்ளம் படைத்தவர்களின் மனத்தில் புகாமல், கையில் மாங்கனியை யேந்தி, பாசம் மழு இலைகளைக் கொண்டுள்ள விநாயகப் பெருமான் நம் சிந்தையில் வந்து அமர்வானாக.

கட்டளைக் கலித்துறை

1035. அமரா அமரர் தொழுஞ்சரண்
நாரைப் பதிஅமர்ந்த
குமரா குமரர்க்கு முன்னவ
னேகொடித் தேர்அவுணர்
தமரா(சு) அறுத்தவன் தன்னுழைத்
தோன்றின னேஎனநின்(று)
அமரா மனத்தவர் ஆழ்நர
கத்தில் அழுந்துவரே.

தெளிவுரை : அமரா ! என்று அமரர் தொழுது சரண் அடையும் திருநாரையூரில் அமர்ந்துள்ள குமரனே ! முருக வேளுக்குத் தமயனே ! கொடி கட்டிய தேர்களையுடைய அரக்கர்களது பற்றுக் கோடுகளை அறுத்தவனே ! தன்னுழைத் தோன்றினனே என விரும்பாத உள்ளத்தை உடையவர் ஆழ்நரகத்தில் அழுந்துவர்.

வெண்பா

1036. அவமதியா(து) உள்ளமே அல்லலற நல்ல
தவமதியால் ஏத்திச் சதுர்த்தோம் - நவமதியாம்
கொம்பன் விநாயகன்கொங் கார்பொழில்சூழ் நாரையூர்
நம்பன் சிறுவன்சீர் நாம்.

தெளிவுரை : அவமதியாமல் உள்ளமே ! துன்பங்கள் நீங்க நல்ல தவத்தினால் பெற்ற நல்லறிவால் வழிபட்டுச் சதுரப் பாட்டினை அடைந்தோம். பிறைச் சந்திரனைப் போன்ற தந்தத்தை உடைய விநாயகன் மகரந்தங்கள் நிறைந்த சோலைகள் சூழ்ந்த திருநாரையூரில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமானது சிறுவனை நாம் வணங்கி நற்கதி பெறுவோமாக.

கட்டளைக் கலித்துறை

1037. நாந்தன மாமனம் ஏத்துகண்
டாய்என்றும் நாண்மலரால்
தாந்தன மாக இருந்தனன்
நாரைப் பதிதன்னுளே
சேர்ந்தன னேஐந்து செங்கைய
னேநின் திரண்மருப்பை
ஏந்தின னேஎன்னை ஆண்டவ
னேஎனக்(கு) என்ஐயனே.

தெளிவுரை : மனமே ! நாம் பெற்ற செல்வமாக அவனை எப்போதும் வணங்குவாயாக. அன்றலர்ந்த மலர்களாக இருந்தனன். திருநாரையூர் என்னும் தலத்தில் வந்து அடைந்தேன். ஐந்து கைகளை உடையவனே ! வலிமையான தந்தத்தை ஏந்தியவனே ! என்னை ஆட்கொண்டவனே ! எனக்குத் தலைவனாக உள்ளவனே ! அருள்பாலிப்பாயாக.

திருச்சிற்றம்பலம்

32. கோயில் திருப்பண்ணியர் விருத்தம் (நம்பியாண்டார் நம்பி அருளிச் செய்தது)

சிவநேசச் செல்வர்களால் கோயில் எனச் சிறப்பித்துப் போற்றப் பெறும் பெரும்பற்றப் புலியூராகிய தில்லைத் திருச்சிற்றம்பலத்தில் எழுந்தருளிய கூத்தப் பெருமானைப் போற்றுங் கட்டளைக் கலித்துறையாகிய திருவிருத்தங்களால் செய்யப்பட்ட நூலாதலின் கோயில் திருப்பண்ணியர் விருத்தம் என்று பெயர் பெற்றது. திருநாரையூர் பொல்லாப் பிள்ளையார் உணர்த்தி யருளியபடி தில்லைச் திருக்கோயிலை அடைந்து, தேவாரத் திருமுறைகளைக் காண விரும்பிய நம்பியாண்டார் நம்பிகள் இந்நூலால் கூத்தப் பெருமானைப் பரவிப் போற்றினார் என்பது வரலாறு.

திருச்சிற்றம்பலம்

கட்டளைக் கலித்துறை

1038. நெஞ்சந் திருவடிக் கீழ்வைத்து
நீள்மலர்க் கண்பனிப்ப
வஞ்சம் கடிந்துன்னை வந்தித்தி
லேன்அன்று வானர்உய்ய
நஞ்சம் கருந்து பெருந்தகை
யேநல்ல தில்லைநின்ற
அஞ்செம் பவளவண் ணாஅருட்(கு)
யானினி யார்என்பரே.

தெளிவுரை : நெஞ்சத்தை உன் திருவடிக்கீழ் வைத்து நீண்ட மலர்போன்ற கண்களில் நீர் அரும்ப, வஞ்சத்தை வெறுத்து ஒதுக்கி உன்னை வழிபடவில்லை. முன்பு தேவர்கள் பிழைப்பதற்காக ஆலகால விடத்தைக் குடித்து அருளிய பெருந்தகையே ! நல்ல தில்லையில் நடனமாடுகின்ற அழகிய செம்பவள வண்ணா, உன் அருளை விட்டு இனி வேறு யார் அருளை எதிர் பார்ப்பேன் என்பதாம்.

1039. என்பும் தழுவிய ஊனும்
நெகஅக மேஎழுந்த
அன்பின் வழிவந்த ஆரமிர்
தேஅடி யேன்உரைத்த
வன்புன் மொழிகள் பொறுத்திகொ
லாம்வளர் தில்லைதன்னுள்
மின்புன் மிளிர்சடை வீசிநின்
றாடிய விண்ணவனே.

தெளிவுரை : எலும்பும் தழுவிய ஊனும் நெகிழ்ந்துருக அகத்திலிருந்து எழுந்த அன்பின் வழிவந்த நிறைந்த அமிர்தம் போன்றவனே ! அடியேன் உரைத்த வலிமை தங்கிய இழிந்த சொற்களைப் பொறுத்து அருள்வாயாக. மென்மேல் உயர்கின்ற தில்லைச் சிற்றம்பலத்துள் மின்சடை, புன்சடை, மிளிர்சடையை வீசி நின்று ஆடிய தேவதேவனே !

1040. அவநெறிக் கேவிழப் புக்கஇந்
நான்அழுந் தாமைவாங்கித்
தவநெறிக் கேஇட்ட தத்துவ
னேஅத் தவப்பயனாம்
சிவநெறிக் கேஎன்னை உய்ப்பவ
னேசென னந்தொறுஞ்செய்
பவமறுத் தாள்வதற் கோதில்லை
நட்டம் பயில்கின்றதே.

தெளிவுரை : வீணான நெறியில் விழ இருந்த என்னை அவ்வாறு விழுந்து விடாமல் காப்பாற்றித் தவநெறியில் செலுத்திய உண்மைப் பொருளே ! அந்தத் தவப் பயனாகிய சைவ நெறிக்கே என்னை நடத்திச் செல்பவனே ! பிறவிகள் தோறும் செய்கின்ற பாவங்களைப் போக்கியருள்வதற்கோ தில்லையில் நடனம் ஆடுகின்றாய்?

1041. பயில்கின் றிலேன்நின் திறத்திரு
நாமம் பனிமலர்த்தார்
முயல்கின் றிலேன்நின் திருவடிக்
கேஅப்ப முன்னுதில்லை
இயல்கின்ற நாடகச் சிற்றம்
பலத்துள்எந் தாய்இங்ஙனே
அயர்கின்ற நான்எங்ங னேபெறு
மாறுநின் ஆரருளே.

தெளிவுரை : உன்னுடைய திருநாமத்தைத் துதிக்க பயிற்சி செய்யவில்லை. குளிர்ந்த மலர்களை உன்னுடைய பாதங்களில் அருச்சிக்க முயற்சி செய்யவில்லை. கருதுகின்ற தில்லையில் நடனம் ஆடுகின்ற என் தந்தையே ! இவ்வாறு வீணில் காலங்கழிக்கின்ற நான் உன்னுடைய நிறைந்த அருளைப் பெறுவது எங்ஙனம் ? இதை நீ எனக்குத் தெரிவிப்பாயாக.

1042. அருதிக்கு விம்மி நிவந்ததோ
வெள்ளிக் குவடதஞ்சு
பருதிக் குழவி உமிழ்கின்ற
தேஒக்கும் பற்றுவிட்டோர்
கருதித் தொழுகழற் பாதமும்
கைத்தலம் நான்கும்மெய்த்த
சுருதிப் பதம்முழங் குந்தில்லை
மேய சுடரினுக்கே.

தெளிவுரை : திக்குகள் அழுது உயர்ந்தனவோ, வெள்ளி மலையாகிய கயிலாயத்திற்கு அஞ்சுகின்ற இளங் கதிரவன் உமிழ்கின்றதை ஒக்கும். பற்றுவிட்டவர்கள் கருதித் தொழுகின்ற கழலணிந்த திருவடிகளும், கைகள் நான்கும் உண்மையான மறை மொழிகளும் முழுங்குகின்ற தில்லையில் கோயில் கொண்டுள்ள பேரொளிக்கே. பேரொளியினால் இவ்வாறு நிகழ்கின்றனவோ என்கிறார்.

1043. சுடலைப் பொடியும் படுதலை
மாலையும் சூழ்ந்தஎன்பும்
மடலைப் பொலிமலர் மாலைமென்
தோள்மேல் மயிர்க்கயிறும்
அடலைப் பொலிஅயில் மூவிலை
வேலும் அணிகொள்தில்லை
விடலைக்கென் ஆனைக்(கு) அழகிது
வேத வினோதத்தையே.

தெளிவுரை : மயானச் சாம்பலும், இறந்தவர்களின் தலை மாலையும், அவர்களுடைய எலும்பும், மடலைப் பொலி மலர்மாலை மென்தோள் மேல் பஞ்சவடியும், வெற்றி பொருந்திய மூவிலைச் சூலமும் அழகு நிறைந்த தில்லை வீரனுக்கு இது என்ன அழகு? வேத வினோதமோ என்று வியக்கின்றார்.

1044. வேத முதல்வன் தலையும்
தலையாய வேள்விதன்னுள்
நாதன் அவன்எச்சன் நற்றலை
யும்தக்க னார்தலையும்
காதிய தில்லைச்சிற் றம்பலத்
தான்கழல் சூழ்ந்துநின்று
மாதவர் என்னோ மறைமொழி
யாலே வழுத்துவதே.

தெளிவுரை : நான்முகனது தலையும், சிறந்த வேள்வியுள் யாகத் தலைவனாகிய தக்கனது தலையும் விழுமாறு கொன்ற தில்லைச் சிற்றம்பலத்தான் கழல் சூழ்ந்து நின்று வேதம் பயின்றவர்கள் என்ன மந்திரங்களைச் சொல்லி போற்றுவது என்கிறார்.

1045. வழுத்திய சீர்த்திரு மால்உல(கு)
உண்டவன் பாம்புதன்னின்
கழுத்தரு கேதுயின் றானுக்(கு)அப்
பாந்தளைக் கங்கணமாச்
செழுத்திரள் நீர்த்திருச் சிற்றம்
பலத்தான் திருக்கையிட
அழுத்திய கல்லொத் தனன்ஆயன்
ஆகிய மாயவனே.

தெளிவுரை : உன்னை வணங்கிய திருமால் இந்த உலகத்தை விழுங்கி உண்டவன்; பாம்பு மீது துயின்றவன்; அந்தப் பாம்பை நீ கங்கணமாக அணிந்தாய். நீர் வளமிக்க திருச்சிற்றம்பலத்தான், அப்பாம்பைத் தன் திருக்கையில் அணிய, ஆயனாகிய மாயவன் அழுத்திய கல் ஒத்தனன். ஆதிசேடனை இறைவன் கையில் கங்கணமாக அணியத் திருமால் நீலமணியைப் போல அதில் தோன்றினான் என்கிறார்.

1046. மாயவன் முந்நீர்த் துயின்றவன்
அன்று மருதிடையே
போயவன் காணாத பூங்கழல்
நல்ல புலத்தினர்நெஞ்
சேயவன் சிற்றம் பலத்துள்நின்
றாடுங் கழல்எவர்க்கும்
தாயவன் தன்பொற் கழல்என்
தலைமறை நன்னிழலே.

தெளிவுரை : திருமால் திருப்பாற்கடலில் பள்ளி கொண்டவன். கண்ணனாக அவதரித்தபோது இரண்டு மருத மரங்களுக்கு இடையில் சென்றவன். அவன் காணாத பூங்கழல் நல்ல புலத்தினர் நெஞ்சில் அவன் சிற்றம்பலத்துள் நின்றாடும் கழல். அவன் எவர்க்கும் தாய் போன்றவன். அவனுடைய பொற்கழல் என் தலைமறை நன்னிழலே.

1047. நிழல்படு பூண்நெடு மால்அயன்
காணாமை நீண்டவரே
தழல்படு பொன்னகல் ஏந்தித்
தமருகந் தாடித்தமைத்
தெழில்பட வீசிக் கரமெறி
நீர்த்தில்லை அம்பலத்தே
குழல்படு சொல்வழி ஆடுவர்
யாவர்க்கும் கூத்தினையே.

தெளிவுரை : ஒளிமிக்க ஆபரணங்களையுடைய திருமாலும் பிரமனும் காண முடியாதபடி நீண்டவரே ? நெருப்பை உடைய பொன்னகல் ஏந்தி, உடுக்கை அடித்து, எழில்பட வீசிக் கரமெறி நீர்த்தில்லை அம்பலத்தே குழல்படு சொல்வழி ஆடுவர் யாவர்க்கும் கூத்தினையே. அடியார்கள் கண்டு மகிழுமாறு நடனம் ஆடுபவர் என்கிறார்.

1048. கூத்தனென் றுந்தில்லை வாணன்என்
றும்குழு மிட்டிமையோர்
ஏத்தனென் றுஞ்செவி மாட்டிசை
யாதே இடுசுணங்கை
மூத்தவன் பெண்டீர் குணலையிட்
டாலும் முகில்நிறத்த
சாத்தன்என் றாலும் வருமோ
இவளுக்குத் தண்எனவே.

தெளிவுரை : கூத்தன் என்றும் தில்லைவாணன் என்றும் கூட்டமாகத் தேவர்கள் வந்து தலைவன் என்றும் துதித்தாலும் செவிசாய்க்காமல் தேமலை இட்டுப் பயின்றவன் அவன். பெண்களே ! நீங்கள் சுற்றி வந்து ஆடினாலும் முகில் போன்ற நிறத்தினையுடைய வயிரவன் என்றாலும் வெப்பமடைந்துள்ள இவள் உடல் குளிர்ச்சி அடையுமோ?

1049. தண்ணார் புனல்தில்லைச் சிற்றம்
பலந்தன்னில் மன்னிநின்ற
விண்ணாள னைக்கண்ட நாள்விருப்
பாயென் உடல்முழுதும்
கண்ணாங் கிலோதொழக் கையாங்
கிலோதிரு நாமங்கள்கற்(று)
எண்ணாம் பரிசெங்கும் வாயாங்கி
லோஎனக்(கு) இப்பிறப்பே.

தெளிவுரை : நீர் வளமிக்க தில்லைச் சிற்றம்பலத்தில் நிலை பெற்றிருக்கின்ற அம்பலக் கூத்தனைப் பார்த்தது முதல் அவன்மேல் காதலாய் அவனைக் காண என் உடன் முழுவதும் கண் இல்லை. தொழுவதற்குக் கைகள் இல்லை. திருநாமங்கள் கற்று எண்ணும் பரிசு எங்கும் வாய் இல்லை. இப்பிறப்பில் இல்லை என்று ஏங்குகின்றாள்.

1050. பிறவியிற் பெற்ற பயனொன்று
கண்டிலம் பேரொலிநீர்
நறவியல் பூம்பொழில் தில்லையுள்
நாடகம் ஆடுகின்ற
துறவியல் சோதியைச் சுந்தரக்
கூத்தனைத் தொண்டர்தொண்டர்
உறவியல் வாற்கண்கள் கண்டுகண்(டு)
இன்பத்தை உண்டிடவே.

தெளிவுரை : இப் பிறப்பில் கண்ட பயன் ஒன்றும் இல்லை. ஒலி செய்கின்ற நீர் வளமிக்கதும் மணமுள்ளதுமான சோலைகள் சூழ்ந்த தில்லையுள் திருநடனம் செய்கின்ற பற்றற்ற சோதியை, அழகுமிக்க கூத்தனை, தொண்டர்களுக்குத் தொண்டரானவர்களின் உறவானவனை நீண்ட கண்கள் கண்டுகண்டு இன்புற வேண்டும்.

1051. உண்டேன் அவரருள் ஆரமிர்
தத்தினை உண்டலுமே
கண்டேன் எடுத்த கழலும்
கனலும் கவித்தகையும்
ஒண்டேன் மொழியினை நோக்கிய
நோக்கும் ஒளிநகையும்
வண்டேன் மலர்த்தில்லை அம்பலத்(து)
ஆடும் மணியினையே.

தெளிவுரை : வண்டுகள் தேன் உண்ணுகின்ற மலர் சோலைகளை உடைய தில்லை அம்பலத்து ஆடும் மணியினது அருள் உண்டேன். அருளாகிய அமுதத்தை உண்டவுடன் எடுத்த பொற்பாதத்தையும் அனலையும் கண்டேன். கவித்தகையும் ஒண் தேன் மொழியாகிய உமையவளைப் பார்த்த பார்வையையும், ஒளி நகையையும் கண்டேன்.

1052. மணியொப் பனதிரு மால்மகு
டத்து மலர்க்கமலத்(து)
அணியொப் பனஅவன் தன்முடி
மேல்அடி யேன்இடர்க்குத்
துணியச் சமைத்தநல் லீர்வாள்
அனையன சூழ்பொழில்கள்
திணியத் திகழ்தில்லை அம்பலத்
தான்தன் திருந்தடியே.

தெளிவுரை : சோலைகள் நிறைந்த தில்லை யம்பலத்தான் தன் திருந்தடிகள் திருமால் மகுடத்துக்கு மணியொப்பன. மலர்க் கமலத்து அணி யொப்பன, அவன்தன் முடி, அடியேன் துன்பங்களை அரியச் சமைந்த வாள்போல் ஆகும், அவன் தன் திருவடி. என் துன்பங்களைப் போக்க வல்லவன் அவன் ஒருவனே என்கிறார்.

1053. அடியிட்ட கண்ணினுக் கோஅவன்
அன்பினுக் கோஅவுணர்
செடியிட்ட வான்துயர் சேர்வதற்
கோதில்லை அம்பலத்து
முடியிட்ட கொன்றைநன் முக்கட்
பிரான்அன்று மூவுலகும்
அடியிட்ட கண்ணனுக்(கு) ஈந்தது
வாய்ந்த அரும்படையே.

தெளிவுரை : மூன்று உலகங்களையும் அடியினால் அளந்த கண்ணனுக்கு வாய்ந்த அரும்படையாகிய சக்கரத்தைக் கொடுத்தது திருவடிகளில் அருச்சித்த திருக்கண்ணின் பொருட்டோ, அவர்மீது கொண்ட அன்பினுக்கோ, அரக்கர்கள் செய்த துன்பங்களைப் போக்குவதற்கோ, தில்லை அம்பலத்து முடியிட்ட கொன்றையையும் மூன்று கண்களையும் உடைய சிவபெருமான் சக்கரத்தைக் கொடுத்தது எதன் பொருட்டு என்று கேட்கின்றார்.

1054. படைபடு கண்ணிதன் பங்கதென்
தில்லைப் பரம்பரவல்
விடைபடு கேதுக விண்ணப்பம்
கேள்என் விதிவசத்தால்
கடைபடு சாதி பிறக்கினும்
நீவைத்(து) அருளுகண்டாய்
புடைபடு கிங்கிணித் தாட்செய்ய
பாதம்என் னுள்புகவே.

தெளிவுரை : வில், அம்பு முதலிய படைக்கலங்களைப் போன்ற கண்களையுடைய உமாதேவியை இடப்பாகத்தில் கொண்டவனே ! தென் தில்லை இறைவனைத் துதித்தல் வருமாறு: இடபக் கொடியை உடையவனே ! என் விண்ணப்பத்தைக் கேட்பாயாக. விதி வசத்தால் கடைசி சாதியில் பிறக்கினும் நீ எனக்கு அருள் செய்யவேண்டும். புடைபடு கிங்கிணித்தாள் செய்ய பாதம் என்னுள் புகுமாறு செய்வாயாக என்பதாம்.

1055. புகவுகிர் வாளெயிற் றால்நிலம்
கீண்டு பொறிகலங்கி
மிகவுகு மாற்(கு)அரும் பாதத்த
னேல்வியன் தில்லைதன்னுள்
நகவு குலாமதிக் கண்ணியற்
கங்கணன் என்றல்நன்றும்
தகவு கொலாம்தக வன்று
கொலாம்என்று சங்கிப்பனே.

தெளிவுரை : நகங்களாலும் பற்களாலும் நிலத்தைத் தோண்டி பொறி கலங்கி மிகவும் வருந்திய திருமாலுக்குக் காண்டற்கு அரிய திருவடிகளை உடையவனே, வியன் தில்லை தன்னுள், சந்திரனைத் தலை மாலையாகக் கொண்டவன் என்று கூறுதல் தகுதியாகும் என்றும் தகுதி ஆகாது என்றும் ஐயுறுவேன்.

1056. சங்கோர் கரத்தன் மகன்தக்கன்
தானவர் நான்முகத்தோன்
செங்கோல இந்திரன் தோள்தலை
ஊர்வேள்வி சீர்உடலம்
அங்கோல வெவ்வழ லாயிட்(டு)
அழிந்தெரிந்(து) அற்றனவால்
எங்கோன் எழில்தில்லைக் கூத்தன்
கடைக்கண் சிவந்திடவே.

தெளிவுரை : எனது தலைவனும் அழகிய தில்லைக் கூத்தனுமாகிய சிவபெருமான் கடைக்கண் சிவந்ததனால் காமன் உடல் அழலாகி, தக்கன் வேள்வி அழிந்து, தானவர் ஊர் எரிந்து, நான்முகத்தோன் தலையும் இந்திரன் தோளும் அற்றன. இப்பாடலில் முதலில் எதிர் நிரல் நிறையும் பின்பு நேர் நிரல் நிறையும் வந்தன.

1057. ஏவுசெய் மேருத் தடக்கை
எழில்தில்லை அம்பலத்து
மேவுசெய் மேனிப் பிரான்அன்றி
அங்கணர் மிக்குளரே
காவுசெய் காளத்திக் கண்ணுதல்
வேண்டும் வரங்கொடுத்துத்
தேவுசெய் வான்வாய்ப் புனலாட்
டியதிறல் வேடுவனே.

தெளிவுரை : வில்லாகச் செய்த மேருவை உடைய விசாலமான கைகளை உடையவனும், எழில் தில்லை அம்பலத்து மேவி யிருக்கின்றவனுமாகிய பிரானை அன்றி மிக்கவர் யாருளர்? காவு செய் காளத்திக் கண்ணுதல், வாய்நீரால் திருமுழுக்குச் செய்த கண்ணப்ப நாயனாருக்கு வேண்டும் வரம்கொடுத்து, தெய்வமாக்கினார்.

1058. வேடன்என் றாள்வில் விசயற்கு
வெங்கணை அன்றளித்த
கோடன்என் றாள்குழைக் காதன்என்
றாள்இடக் காதில்இட்ட
தோடன்என் றாள்தொகு சீர்த்தில்லை
அம்பலத்(து) ஆடுகின்ற
சேடன்என் றாள்மங்கை அங்கைச்
சரிவளை சிந்தினவே.

தெளிவுரை : இது தோழி கூற்று: வேடன் என்று கூறிவந்து, ஆட்கொண்டருளி, அருச்சுனனுக்கு பாசுபத அத்திரத்தை அன்று அளித்த குறி சொல்பவன் என்றாள். காதில் குழையணிந்தவன் என்றாள். இடக்காதில் தோடு அணிந்தவன் என்றாள். தொகுசீர் தில்லை அம்பலத்து ஆடுகின்ற பெரியோன் என்றாள் என் மங்கை. அவளுடைய கைகளில் இருந்த வளைகள் சரிந்து விழுந்தன. காதல் வழிப்பட்டாள் என்பதாம்.

1059. சிந்திக் கவும்உரை யாடவும்
செம்மல ராற்கழல்கள்
வந்திக் கவும்மனம் வாய்கரம்
என்னும் வழிகள்பெற்றும்
சந்திக் கிலர்சிலர் தெண்ணர்தண்
ணார்தில்லை அம்பலத்துள்
அந்திக் கமர்திரு மேனிஎம்
மான்தன் அருள்பெறவே.

தெளிவுரை : சிந்திக்க மனமும், உரையாட வாயும், வந்திக்கக் கரமும் பெற்றிருந்தும் அன்பில்லாதவர் அவனைச் சந்திக்கிலர். நீர்வளமிக்க தில்லை அம்பலத்துள் அந்திவானம் போன்ற திருமேனியை உடைய எம்மான் தன் அருள் பெறவில்லையே என்று வருந்துகின்றார்.

1060. அருள்தரு சீர்த்தில்லை அம்பலத்
தான்தன் அருளின்அன்றிப்
பொருள்தரு வானத்(து) அரசாத
லின்புழு வாதல்நன்றாம்
சுருள்தரு செஞ்சடை யோன்அரு
ளேல்துற விக்குநன்றாம்
இருள்தரு கீழேழ் நரகத்து
வீழும் இருஞ்சிறையே.

தெளிவுரை : அருளைத் தருகின்ற சீர்தில்லை அம்பலத்தான் தன் அருள் அல்லாமல் பொருளைத் தருகின்ற தெய்வ லோக அரசைவிட புழுவாகப் பிறத்தல் நன்று. சுருளாகப் பொருந்திய சிவந்த சடையோன் அருளா விட்டால் துறவிக்கு நன்று ! இருளாகப் பொருந்தியுள்ள கீழ்ஏழ் நரகத்து வீழும் பெருஞ் சிறை !

இறைவன் அருளைத் தவிர வேறு எதையும் நான் விரும்பேன் என்கிறார்.

1061. சிறைப்புள வாம்புனல் சூழ்வயல்
தில்லைச் சிற்றம்பலத்துப்
பிறைப்பிள வார்சடை யோன்திரு
நாமங்க ளேபிதற்ற
மிறைப்புள வாகிவெண் ணீறணிந்(து)
ஓடேந்தும் வித்தகர்தம்
உறைப்புள வோஅயன் மாலினொ(டு)
உம்பர்தம் நாயகற்கே.

தெளிவுரை : கரைகளையுடைய நீர்வளமுள்ள வயல் சூழ்ந்த தில்லைச் சிற்றம்பலத்து, பிளவு பட்டாற் போன்ற பிறைத் திங்களை அணிந்த சடையோனது திருநாமங்களைத் துதிக்க வருத்தம் கொண்டு திருநீறு அணிந்து கையில் ஓடு ஏந்திய ஞானிகளது மனத்தின்மை உள்ளதோ? பிரமன் திருமாலொடு தேவர்களின் நாயகற்கே. இறைவனை அடைய மனத்தின்மை வேண்டும் என்கிறார்.

1062. அகழ்சூழ் மதில்தில்லை அம்பலக்
கூத்த அடியம்இட்ட
முகிழ்சூழ் இலையும் முகைகளும்
ஏயுங்கொல் கற்பகத்தின்
திகழ்சூழ் மலர்மாலை தூவித்
திறம்பயில் சிந்தையராய்ப்
புகழ்சூழ் இமையவர் போற்றித்
தொழும்நின் பூங்கழற்கே.

தெளிவுரை : அகழியால் சூழப்பட்ட மதில்களையுடைய தில்லை அம்பலக் கூத்தனே ! அடியார்களாகிய நாங்கள் இட்ட முகில்சூழ் இலையும் அரும்புகளும் பொருந்துமோ? கற்பகத்தின் திகழ்சூழ் மலர்மழை தூவித் திறம்பயில் மனமுடையவராய்ப் புகழ்சூழ் தேவர்கள் வணங்கித் தொழும் நின் திருவடிகளுக்கு, இவ்விரண்டில் எது விருப்பமாகும் என்று வினவுகிறார்.

1063. பூந்தண் பொழில்சூழ் புலியூர்ப்
பொலிசெம்பொன் அம்பலத்து
வேந்தன் தனக்கன்றி ஆட்செய்வ
தென்னே விரிதுணிமேல்
ஆந்தண் பழைய அவிழைஅன்
பாகிய பண்டைப்பறைச்
சேந்தன் கொடுக்க அதுவும்
திருஅமிர்(து) ஆகியதே.

தெளிவுரை : பூக்கள் நிறைந்த குளிர்ந்த சோலைகளையுடைய தில்லைச் சிற்றம்பலத்தில் மேவிய இறைவனையன்றி வேறு யாருக்கும் ஆட்செய்யமாட்டேன். விரித்த துணியின்மேல் குளிர்ந்த பழைய சோற்றை அன்பாகிய பண்டைப் பறைச்சேந்தன் கொடுக்க, அதுவும் உனக்கு அமிர்தமாகியது என்க.

1064. ஆகங் கனகனைக் கீறிய
கோளரிக்(கு) அஞ்சிவிண்ணோர்
பாகங் கனகுழை யாய்அரு
ளாயெனத் தில்லைப்பிரான்
வேகந் தருஞ்சிம்புள் விட்டரி
வெங்கதஞ் செற்றிலனேல்
மோங் கலந்தன்(று) உலந்ததன்
றோஇந்த மூவுலகே.

தெளிவுரை : இரணியனைச் சங்காரம் செய்த நரசிங்க மூர்த்திக்குப் பயந்து தேவர்கள், உமாதேவியை இடப் பாகத்தில் கொண்டவனே ! அருள் செய்வாயாக என வேண்ட, தில்லைப் பிரான் வேகந்தரும் சரப்பறவையாகச் சென்று அரியின் கோபத்தை அழித்திராவிட்டால், இந்த மூவுலகும் மோகம் கலந்து அழிந்து போயிருக்கும்.

1065. மூவுல கத்தவர் ஏத்தித்
தொழுதில்லை முக்கட்பிராற்(கு)
ஏவு தொழில்செய்யப் பெற்றவர்
யாரெனில் ஏர்விடையாய்த்
தாவு தொழிற்பட்(டு) எடுத்தனன்
மால்அயன் சாரதியா
மேவிர தத்தொடு பூண்டதொன்
மாமிக்க வேதங்களே.

தெளிவுரை : மூன்று உலகத்தவர்களும் ஏத்தித் தொழுகின்ற தில்லை முக்கட் பிராற்கு, தொண்டு செய்யப் பெற்றவர்கள் யார் என்றால் அழகிய காளையை உடையாய் ! வேதங்கள் குதிரைகளாகவும் பிரமன் சாரதியாகவும் திருமால் தொண்டு செய்யவும் திரிபுரங்களை அழிக்கச் சென்றபோது பங்கு கொண்டவர்கள் என்கிறார்.

1066. வேதகச் சிந்தை விரும்பிய
வன்தில்லை அம்பலத்து
மேதகக் கோயில்கொண் டோன்செய
வன்வீ ரணக்குடிவாய்ப்
போதகப் போர்வைப் பொறிவாள்
அரவரைப் பொங்குசினச்
சாதகப் பெண்பிளை தன்னயன்
தந்த தலைமகனே.

தெளிவுரை : வேதகச் சிந்தை விரும்பிய வன்தில்லை அம்பலத்துள் சிறப்புடன் கோயில் கொண்டிருக்கும் இறைவன், சேயவன் வீரணக்குடியில் யானையைக் கொன்று அதன் தோலைப் போர்த்திக் கொண்டவன்; புள்ளிகளையுடைய ஒளி தங்கிய பாம்பை அணிந்தவன்; பொங்கு சினச் சாதகர் பெண் பிளைதன் ஐயன் தந்த தலைமகனே.

1067. தலையவன் பின்னவன் தாய்தந்தை
இந்தத் தராதலத்து
நிலையவம் நீக்கு தொழில்புரிந்
தோன்நடு வாகிநின்ற
கொலையவன் சூலப் படையவன்
ஆலத்தெழு கொழுந்தின்
இலையவன் காண்டற்(கு) அருந்தில்லை
அம்பலத் துள்இறையே.

தெளிவுரை : தலையவன், பின்னவன், இந்தப் பூமிக்குத் தாய் தந்தையாக உள்ளவன். நிலையான துன்பங்களை நீக்கும் தொழிலைப் புரிந்தவன்; நடுவாகி நின்ற கொலைத் தொழிலையுடைய வலிய சூலப்படையை உடையவன். ஆலமரத்தின் கொழுந்து இலையில் பள்ளி கொண்ட திருமால் தேடியும் காண முடியாதவன்; தில்லையம்பலத்துள் கோயில் கொண்டிருக்கும் இறைவன்.

1068. இறையும் தெளிகிலர் கண்டும்
எழில்தில்லை அம்பலத்துள்
அறையும் புனற்சென்னி யோன்அரு
ளால்அன்(று) அடுகரிமேல்
நிறையும் புகழ்த்திரு வாரூ
ரனும்நிறை தார்பரிமேல்
நறையுங் கமழ்தொங்கல் வில்லவ
னும்புக்க நல்வழியே.

தெளிவுரை : சிறிதும் அறிகின்றிலர்; பார்த்திருந்தும் அழகிய தில்லை அம்பலத்துள் கங்கையை முடியில் சூடிய இறைவனது அருளால் அன்று வெள்ளானைமேல் நிறையும் புகழ் சுந்தரமூர்த்தி நாயனாரும், நிறைதார் குதிரையின்மேல் மணமுள்ள மலர் மாலையணிந்த சேரமான் பெருமாள் நாயனாரும் சென்ற நல்வழியே. (நல்வழியைச் சிறிதும் சிந்திக்கின்றிலர் என முடிக்க.)

1069. நல்வழி நின்றார் பகைநன்று
நொய்யர் உறவிலென்னும்
சொல்வழி கண்டனம் யாம்தொகு
சீர்த்தில்லை அம்பலத்து
வில்வழி தானவர் ஊர்எரித்
தோன்வியன் சாக்கியனார்
கல்வழி நேர்நின்(று) அளித்தனன்
காண்க சிவகதியே.

தெளிவுரை : நல்வழியில் நிற்பவரின் பகை நன்மையை உண்டாக்கும். இழிந்தோர் உறவில் துன்பமே தோன்றும் என்பதை யாம் சொல்வழி கண்டனம். தொகுசீர்த் தில்லை அம்பலத்து வில்வழி திரிபுரங்களை எரித்தோன் வியன் சாக்கிய நாயனார் கல்லெறிந்து வழிபட்ட வழி நன்மையாயிற்று என்பதைக் காண்க. சிவகதிக்கு உண்மை அன்பே தேவை என்க.

1070. கதியே அடியவர் எய்ப்பினில்
வைப்பாக் கருதிவைத்த
நிதியே நிமிர்புன் சடைஅமிர்
தேநின்னை என்னுள்வைத்த
மதியே வளர்தில்லை அம்பலத்
தாய்மகிழ் மாமலையாள்
பதியே பொறுத்தரு ளாய்கொடி
யேன்செய்த பல்பிழையே.

தெளிவுரை : அடியவர்களின் புகலிடமே ! வறுமைக் காலத்துக்கு ஏற்ற செல்வமே ! நிமிர்ந்த புன் சடை அமிர்தே ! உன்னை என்னுள் வைத்த மதியே ! வளர்தில்லை அம்பலத்தாய் ! மகிழ்கின்ற உமா தேவியின் கணவனே ! கொடியவனாகிய நான் இதுவரை செய்த பல பிழைகளைப் பொறுத்தருளாய்.

1071. பிழையா யினவே பெருக்கிநின்
பெய்கழற்(கு) அன்புதன்னில்
நுழையாத சிந்தையி னேனையும்
மந்தா கினித்துவலை
முழையார் தருதலை மாலை
முடித்த முழுமுதலே
புழையார் கரியுரித் தோய்தில்லை
நாத பொறுத்தருளே.

தெளிவுரை : தவறான காரியங்களையே மிகுதியாகச் செய்து உன்னுடைய திருவடிகளுக்கு அன்பு செய்யாத என்னையும் கங்கையின் நீர்த்திவலையையும் முழையார் தரு தலை மாலையையும் முடித்த முழுமுதலே ! துளை பொருந்திய துதிக்கையை உடைய யானையை உரித்தவனே ! தில்லை நாயகனே ! பொறுத்தருள்வாயாக !

1072. பொறுத்தில னேனும்பன் னஞ்சினைப்
பொங்கெரி வெங்கதத்தைச்
செறுத்தில னேனும்நந் தில்லைப்
பிரான்அத் திரிபுரங்கள்
கறுத்தில னேனுங் கமலத்
தயன்கதிர் மாமுடியை
அறுத்தில னேனும் அமரருக்(கு)
என்கொல் அடுப்பனவே.

தெளிவுரை : இவற்றை யெல்லாம் செய்யாவிட்டால் தேவர்களுக்கு என்ன அபாயங்கள் வந்திருக்குமோ என்று கேட்கின்றார்? நம் தில்லை பிரான் பொறுத்திரா விட்டாலும், ஆலகால விடத்தை பொங்கி தீப்போல் வெங்கதத்தைக் குடித்திராவிட்டாலும், திரிபுரங்களைச் சினந்து எரிக்காமல் இருந்தாலும், தாமரை மலரோனாகிய பிரமனது முடியை அறுத்திரா விட்டாலும் தேவர்களுக்கு என்ன தீங்கு நேர்திருக்கும்?

1073. அடுக்கிய சீலைய ராய்அகல்
ஏந்தித் தசைஎலும்பில்
ஒடுக்கிய மேனியோ(டு) ஊண்இரப்
பார்ஒள் இரணியனை
நடுக்கிய மாநர சிங்கனைச்
சிம்புள தாய்நரல
இடுக்கிய பாதன்தன் தில்லை
தொழாவிட்ட ஏழையரே.

தெளிவுரை : ஒளி பொருந்திய இரணியனை நடுங்கச் செய்த பெரிய நரசிங்கனை சரபப் பறவையாக வந்து கதறுமாறு நெருக்கிப் பிடித்தவனது தில்லையம் பதியைத் தொழாத அறிவில்லாதவர் அடுக்கிய சீலையராய், பிச்சை பாத்திரத்தை ஏந்தி, தசை எலும்பில் ஒடுக்கிய மேனியோடு பிச்சை யெடுத்துக் காலங்கழிப்பர் என்றபடி. (இறைவனை வழிபடாதவர் நிலை இது என்க)

1074. ஏழையென் புன்மை கருதா(து)
இடையறா அன்பெனக்கு
வாழிநின் பாத மலர்க்கே
மருவ அருளுகண்டாய்
மாழைமென் நோக்கிதன் பங்க
வளர்தில்லை அம்பலத்துப்
போழிளந் திங்கள் சடைமுடி
மேல்வைத்த புண்ணியனே.

தெளிவுரை : மாவடு போன்ற கண்களையுடைய உமாதேவியை இடப்பக்கத்தில் கொண்டவனே ! வளர் தில்லை அம்பலத்துள் பிறைச் சந்திரனைச் சடைமுடியில் வைத்த புண்ணியனே ! ஏழையேனது துன்பத்தைக் கருதாமல், இடையறாத அன்பு கொண்டு உன் பாத மலர்களை அடைய அருள் செய்வாயாக.

1075. புண்ணிய னேஎன்று போற்றி
செயாது புலன்வழியே
நண்ணிய னேற்(கு)இனி யாதுகொ
லாம்புகல் என்னுள்வந்திட்(டு)
அண்ணிய னேதில்லை அம்பல
வாஅலர் திங்கள் வைத்த
கண்ணிய னேசெய்ய காமன்
வெளுப்பக் கறுத்தவனே.

தெளிவுரை : புண்ணியனே என்று உன்னைப் போற்றாமல் புலன் வழியே பொருந்தியவனாகிய எனக்குப் புகலிடம் யாது? என்னுள் வந்து நெருங்கியவனே ! தில்லை அம்பலவா ! அலர் திங்களைத் தலை மாலையில் வைத்துள்ளவனே ! மன்மதன் வெந்து நீறாகச் சினந்தவனே.

என்னை நல்வழிப் படுத்துவது உன் பாரமாகும்.

1076. கறுத்தகண் டாஅண்ட வாணா
வருபுனற் கங்கைசடை
செறுத்தசிந் தாமணி யேதில்லை
யாய்என்னைத் தீவினைகள்
ஒறுத்தல்கண் டால்சிரி யாரோ
பிறர்என் உறுதுயரை
அறுத்தல்செய் யாவிடின் ஆர்க்கோ
வருஞ்சொல் அரும்பழியே.

தெளிவுரை : நீல கண்டனே ! தேவர்களுக்குத் தலைவனே ! வருபுனல் கங்கையச் சடையில் செறிய வைத்த சிந்தா மணியே? தில்லையில் எழுந்தருளியிருப்பவனே ! என்னைத் தீவினைகள் துன்புறுத்துவதைக் கண்டால் வெளியார் சிரிக்க மாட்டார்களா ? என்னை வருத்தும் துயரைப் போக்கி யொழித்தல் செய்யாவிடின் அரும்பழி உனக்கல்லவா? ஆகவே விரைந்து ஆவன செய்வாயாக.

1077. பழித்தக் கவும்இக ழான்தில்லை
யான்பண்டு வேட்டுவனும்
பழித்திட்(டு) இறைச்சி கலையன்
அளித்த விருக்குழங்கன்
மொழித்தக்க சீர்அதி பத்தன்
படுத்திட்ட மீன்முழுதும்
இழித்தக்க என்னா(து) அமிர்துசெய்
தான்என்(று) இயம்புவரே.

தெளிவுரை : தில்லையான் கேவலமானவற்றையும் குறைவாகக் கருதமாட்டான். முன்பு (வேடுவர்) கண்ணப்ப நாயனார் இறைச்சியை இலையில் கொண்டு வந்து படைத்தபோதும், அதி பத்த நாயனார் (செம்படவர்) தான் பிடித்த மீன் முழுவதையும், அவை இழிவானவை என்று கருதாமல் கொடுத்ததையும் மகிழ்ந்து உண்டாய் என்று சொல்கிறார்களே !

இறைவன் அன்பிற்குக் கட்டுப்பட்டவன் என்கிறார்.

1078. வரந்தரு மா(று)இதன் மேலும்உண்
டோவயல் தில்லைதன்னுள்
புரந்தரன் மால்தொழ நின்ற
பிரான்புலைப் பொய்ம்மையிலே
நிரந்தர மாய்நின்ற என்னையும்
மெய்மையின் தன்னடியார்
தரந்தரு வான்செல்வத் தாழ்த்தினன்
பேசருந் தன்மைஇதே.

தெளிவுரை : வரந்தருமாறு இதன் மேலும் உண்டோ? வயல்கள் சூழ்ந்த தில்லை தன்னுள் இந்திரன், திருமால் ஆகியோர் தொழ நின்ற பிரான் புலைப் பொய்ம்மையில் நிரந்தரமாய் நின்ற என்னையும் உண்மையாகவே தன்னுடைய அடியார்களின் மேன்மை உயருமாறு செல்வத்துள் ஆழ்த்தினான். இது சொல்லும் தரமுடியதோ.

இறைவன் சோதனையை வியக்கின்றார்.

1079. தன்தாள் தரித்தார் இயாவர்க்கும்
மீளா வழிதருவான்
குன்றா மதில்தில்லை மூதூர்க்
கொடிமேல் விடைஉடையோன்
மன்றாட வும்பின்னும் மற்றவன்
பாதம் வணங்கிஅங்கே
ஒன்றார் இரண்டில் விழுவர்அந்
தோசில ஊமர்களே.

தெளிவுரை : தன் பாதங்களைப் புகலிடமாகக் கொண்ட எல்லார்க்கும் இனி மீளாத வழி தரும் பொருட்டு, உயர்ந்த மதில்களை உடைய தில்லை மூதூர் கொடிமேல் காளையை எழுதியுள்ளவன் நடனமாட, அவன் பாதங்களை வணங்கி அங்கே நிலைத்திராதவர் பிறப்பு இறப்பு என்னும் இரண்டில் விழுவர். ஐயோ இது இந்த ஊர்மக்களுக்குத் தெரியவில்லையே என்று இரங்குகின்றார்.

1080. களைகண் இலாமையும் தன்பொற்
கழல்துணை யாம்தன்மையும்
துளைகள் நிலாம்முகக் கைக்கரிப்
போர்வைச் சுரம்நினையான்
தளைகள் நிலாமலர்க் கொன்றையன்
தண்புலி யூர(து)என்றேன்
வளைகள் நிலாமை வணங்கும்
அநங்கன் வரிசிலையே.

தெளிவுரை : இது தலைவி கூற்று: பற்றுக்கோடு இல்லாமையும், உன் பொற்கழல் துணையாம் தன்மையும் யானைப் போர்வையை உடையான் என்னைப் பற்றிச் சிந்திக்காமல் இருக்கின்றான். தளைகள் நிலா மலர்க் கொன்றையன் குளிர்ந்த தில்லையில் உள்ளது என்றேன். கைவளைகள் கையில் நிற்காதவாறு மன்மதன் தனது வில்லை வளைத்து அம்பு எய்கின்றான். இவளது காதல் நோயை இறைவன் கவனிக்கவில்லையே என்று வருந்துகின்றாள்.

1081. வரித்தடந் திண்சிலை மன்மதன்
ஆதலும் ஆழிவட்டம்
தரித்தவன் தன்மகன் என்பதோர்
பொற்பும் தவநெறிகள்
தெரித்தவன் தில்லையுள் சிற்றம்
பலவன் திருப்புருவம்
நெரித்தலும் கண்டது வெண்பொடி
யேயன்றி நின்றிலவே.

தெளிவுரை : வரிந்து கட்டப்பட்ட திண் சிலையை யுடைய மன்மதன் ஆதலும் சக்கரத்தை ஏந்திய திருமாலின் மகன் என்பதோர் அழகும் தவநெறிகள் தெரிந் தெடுத்தவன் தில்லையுள் சிற்றம்பலவன் திருப்புருவம் வளைதலும் கண்டது திருநீறேயன்றி நிலை பெற்றிருக்கவில்லை.

இவைகளினால் அழிவே நேரும் என்பதாம்.

1082. நின்றில வேவிச யன்னொடும்
சிந்தை களிப்புறநீள்
தென்தில்லை மாநடம் ஆடும்
பிரான்தன் திருமலைமேல்
தன்தலை யால்நடந் தேறிச்
சரங்கொண்(டு) இழிந்ததென்பர்
கன்றினை யேவிள மேலெறிந்(து)
ஆர்த்த கரியவனே.

தெளிவுரை : கிருஷ்ணாவதாரத்தில் தன்னைக் கொல்லவந்த கன்றினை விளாமரத்தின் மீது எறிந்து கொன்றான். அத்தகைய கண்ணன் அருச்சுனன் உடன் கைலைக்குச் சென்று பாசுபதக் கணையைப் பெற்றுக் கொண்டு வந்தான். அத்தகைய சிறப்பு கொண்ட சிவபெருமான் தென் தில்லையில் நடனமாடுகின்றான் என்கிறார்.

தலையால் நடந்தேறியதால் மழை தாழ்ந்தது என்பது புராணக்கதை.

1083. கருப்புரு வத்திரு வார்த்தைகள்
கேட்டலும் கண்பனியேன்
விருப்புரு வத்தினொ(டு) உள்ளம்
உருகேன் விதிர்விதிரேன்
இருப்புரு வச்சிந்தை என்னைவந்(து)
ஆண்டதும் எவ்வணமோ
பொருப்புரு வப்புரி சைத்தில்லை
ஆடல் புரிந்தவனே.

தெளிவுரை : மலை வடிவத்தைக் கொண்ட மதில்களை உடைய தில்லையில் நடனம் புரிந்தவன் கரும்பின் இனிமையை உடைய அழகிய சொற்களைக் கேட்டதும் கண்களில் நீர் வடியவில்லை. விருப்பத்தோடு உள்ளம் உருகேன். உடம்பு நடுங்கவில்லை. இரும்பின் வடிவம் கொண்ட சிந்தை என்னை வந்து ஆண்டதும் எப்படியோ, நான் அறியேன்.

1084. புரிந்தஅன் பின்றியும் பொய்ம்மையி
லேயும் திசைவழியே
விரிந்தகங் கைமலர் சென்னியில்
கூப்பில் வியநமனார்
பரிந்தவன் ஊர்புகல் இல்லை
பதிமூன்(று) எரியஅம்பு
தெரிந்தஎங் கோன்தன் திரையார்
புனல்வயல் சேண்தில்லையே.

தெளிவுரை : விரும்பிய அன்பு இல்லாமலும், பொய்மையோடும், திசை வழியே, கங்கை மலர் தலையில் முறையீடு இல்லாத யமனை, அழித்தவன் ஊர் எது வென்றால் திரிபுரங்கள் எரிய அம்பு எய்த எங்கள் தலைவன் இருக்கும் தண்ணீர் பொருந்திய வயல்களை உடைய தில்லையே என்பதாம்.

1085. சேண்தில்லை மாநகர்த் திப்பியக்
கூத்தனைக் கண்டும்அன்பு
பூண்டிலை நின்னை மறந்திலை
ஆங்கவன் பூங்கழற்கே
மாண்டிலை இன்னம் புலன்வழி
யேவந்து வாழ்ந்திடுவான்
மீண்டனை என்னைஎன் செய்திட
வோசிந்தை நீவிளம்பே.

தெளிவுரை : மனமே ! நீண்ட தில்லை மாநகர் தெய்வத் தன்மை பொருந்திய திருக்கூத்து ஆடுபவனைப் பார்த்த பிறகும் அன்பு கொள்ளவில்லை. உன்னை மறந்திலை. அங்கு அவனுடைய அழகிய திருவடிகளுக்கு ஐக்கியமாகவில்லை. இன்னமும் புலன் வழியே சென்று வாழ வேண்டுமென்று திரும்பிவிட்டாய். என்னை என்ன செய்யச் சொல்கிறாய்; சொல்வாயாக.

1086. விளவைத் தளர்வித்த விண்டுவும்
தாமரை மேல்அயனும்
அளவிற்(கு) அறியா வகைநின்ற
அன்றும் அடுக்கல்பெற்ற
தளர்விற் றிருநகை யாளும்நின்
பாகங்கொல் தண்புலியூர்க்
களவிற் கனிபுரை யுங்கண்ட
வார்சடைக் கங்கையனே.

தெளிவுரை : கண்ணனாக அவதரித்தபோது கன்றை விளாமரத்தின் மீது வீசிய திருமாலும், தாமரை மலரில் வீற்றிருக்கும் பிரமனும் அறிய முடியாத வகையில் நின்ற அப்போதும் உமா தேவியார் உன் இடப் பாகத்தில் இருந்தார் போலும். குளிர்ந்த தில்லையம் பதியில் களாப்பழம் போன்ற நிறமுடைய நீல கண்டனே ! நீண்ட சடையில் கங்கையை வைத்திருப்பவனே !

1087. கங்கை வலம்இடம் பூவலம்
குண்டலம் தோடிடப்பால்
தங்கும் கரம்வலம் வெம்மழு
வீயிடம் பாந்தள்வலம்
சங்கம் இடம்வலம் தோலிடம்
ஆடை வலம்அக்கிடம்
அங்கஞ் சரிஅம் பலவன்
வலங்காண் இடம்அணங்கே.

தெளிவுரை :  அர்த்த நாரீஸ்வர வடிவத்தைப் புகழ்கிறார். வலப்பக்கத்தில் கங்கை; இடப்பக்கத்தில் பூ; வலப்பக்கத்தில் குண்டலம்; இடப்பக்கம் தோடு; தங்கும் கரம் வலம்; வெம்மழு இடம்; பாந்தள்வலம்; சங்கம் இடம்; வலப்பக்கம் தோல்; இடம் ஆடை; வலம் எலும்புமாலை; இடம் அங்கம் அம்பலவன் வலம்; அணங்கு இடம்.

இறைவன் வலப்பாகம் ஆணாகவும் இடப்பாகம் பெண்ணாகவும் உள்ளான் என்கிறார்.

1088. அணங்கா டகக்குன்ற மாதற
வாட்டிய வாலமர்ந்தாட்(கு)
இணங்கா யவன்தில்லை எல்லை
மிதித்தலும் என்புருகா
வணங்கா வழுத்தா விழாவெழும்
பாவைத் தவாமதர்த்த
குணங்காண் இவள்என்ன என்றுகொ
லாம்வந்து கூடுவதே.

தெளிவுரை : வெறியாடுதல் போன்ற ஆதரவு காட்டியவளுக்கு இணங்கமாட்டாய். அவன் தில்லையை மிதித்தலும், என்புருகி, வணங்கி, வழுத்தி, விழுந்தெழும் பாவையின் காதற் குணங்களைக் காண். எப்பொழுது வந்து அவளைச் சேர்வது. அவள் உன் நினைவாகவே உள்ளாள் என்பதாம்.

அணங்கு ஆடு அகக்குன்றம் ஆதரவு ஆட்டிய ஆல் அமர்ந்தாட்கு இணங்காய் அவன் எனப் பிரிக்க.

1089. கூடுவ(து) அம்பலக் கூத்தன்
அடியார் குழுவுதொறும்
தேடுவ(து) ஆங்கவன் ஆக்கம்அச்
செவ்வழி அவ்வழியே
ஓடுவ(து) உள்ளத்(து) இருத்துவ(து)
ஒண்சுட ரைப்பிறவி
வீடுவ தாக நினையவல்
லோர்செய்யும் வித்தகமே.

தெளிவுரை : தில்லை அம்பலக் கூத்தனது அடியார்கள் குழுவு தொறும் கூடுவது. தேடுவது அவனது செல்வமாகிய வாழ்த்து. அவ்வாறு செல்வதே நல்வழி என்று ஓடுவது. உள்ளத்து இருத்துவது ஒண் சுடரை. பிறவித் துன்பத்தை ஒழிப்பதற்கு உன்னை யல்லாமல் வேறு யாரால் இந்த வித்தகத்தைச் செய்ய முடியும்?

1090. வித்தகச் செஞ்சடை வெண்மதிக்
கார்நிறக் கண்டத்தெண்தோள்
மத்தகக் கைம்மலைப் போர்வை
மதில்தில்லை மன்னனைத்தம்
சித்தகக் கோயில் இருத்தும்
திறத்தா கமிகர்க்கல்லால்
புத்தகப் பேய்களுக்(கு) எங்கித்த
தோஅரன் பொன்னடியே.

தெளிவுரை : புதுமையான செஞ்சடை, வெண்மதி, கறுத்த கழுத்து, எட்டுத் தோள்கள், மதங்கொண்ட யானையின் தோல் இவரது போர்வை. உயர்ந்த மதில்களை உடைய தில்லை வாணனது சித்தகக் கோயிலில் இருத்தும் திறம் உடையவர்கள் ஆகம நூல் உணர்வு உடையவர்கள். அரனுடைய பொன்னடி எங்கே உள்ளது என்பது புத்தகப் பேய்களுக்கு தெரியுமோ?

1091. பொன்னம் பலத்துறை புண்ணியன்
என்பர் புயல்மறந்த
கன்னம்மை தீரப் புனிற்றுக்
கலிக்காமற்(கு) அன்றுபுன்கூர்
மன்னு மழைபொழிந்(து) ஈரறு
வேலிகொண்(டு) ஆங்கவற்கே
பின்னும் மழைதவிர்த்(து) ஈரறு
வேலிகொள் பிஞ்ஞகனே.

தெளிவுரை : ஏயர்கோன் கலிக்காம நாயனார் வரலாறு இதில் கூறப்படுகிறது. பொன்னம்பலத்துறை புண்ணியன் மழை பெய்யாமல் பஞ்சம் நேர்ந்த சமயத்தில் நல்ல மழை பெய்வித்து, பன்னிரண்டு வேலி கொண்டு ஆங்கு அவற்கு உதவி, பின்னும் மழை பெய்யாமல் தவிர்ந்து அந்த நிலங்களைக் கொண்டு அந்த அடியாரைச் சோதித்தார் நம் சிவபெருமான்.

1092. நேசன்அல் லேன்நினை யேன்வினை
தீர்க்கும் திருவடிக்கீழ்
வாசநன் மாமல ரிட்(டு)இறைஞ்
சேன்என்தன் வாயதனால்
தேசன்என் னானைபொன் னார்திருச்
சிற்றம் பலம்நிலவும்
ஈசன்என் னேன்பிறப்(பு) என்னாய்க்
கழியுங்கொல் என்தனக்கே.

தெளிவுரை : உனக்கு நான் அன்பு உடையவனாக இருக்க வில்லையே ! ?உன்னை நினைக்கவில்லையே ! பிறவித் துன்பங்களைப் போக்கும் உன் திருவடிகளின்கீழ் மணமுள்ள மலர்களை அருச்சித்து வணங்க வில்லையே ! என் வாயினால் ஒளி மயமானவன் என்றும் பொன்னார் திருச்சிற்றம்பலத்தில் உள்ள ஈசன் என்றும் துதிக்கவில்லையே ! இந்தப் பிறவி எப்படிக் கழியுமோ தெரியவில்லையே என்று வருந்துகிறார்.

1093. தனந்தலை சக்கரம் வானத்
தலைமை குபேரன்தக்கன்
வனந்தலை ஏறடர்த் தோன்வா
சவன்உயிர் பல்லுடல்ஊர்
சினந்தலை காலன் பகல்காமன்
தானவர் தில்லைவிண்ணோர்
இனந்தலை வன்அரு ளால்முனி
வால்பெற்(று) இகந்தவரே.

தெளிவுரை : தனத்தைக் குபேரனும், தலையைத் தக்கனும், சக்கரத்தைத் திருமாலும், வானத் தலைமையை இந்திரனும் தில்லையான் அருளால் பெற்றார்கள். உயிரைக் காலனும், பல்லைக் கதிரவனும், உடலைக் காமனும், ஊரைத் தானவரும் தில்லையான் முனிவால் இழந்தனர்.

1094. அவமதித்(து) ஆழ்நர கத்தில்
இடப்படும் ஆதர்களும்
தவமதித்(து) ஒப்பிலா என்னவிண்
ஆளும் தகைமையரும்
நவநிதித் தில்லையுட் சிற்றம்
பலத்து நடம்பயிலும்
சிவநிதிக் கேநினை யாரும்
நினைந்திட்ட செல்வருமே.

தெளிவுரை : நவநிதித் தில்லையுள் சிற்றம்பலத்து நடம் பயிலும் சிவநிதிக்கே நினைக்காதவர் அவமதித்து ஆழ்நரகத்தில் இடப்படும் ஆதர்கள். தவமதித்து ஒப்பிலர் என்ன விண் ஆளும் தகைமையோர் அந்த இறைவனை நினைந்திட்ட செல்வர் எனக் கொள்க.

1095. வருவா சகத்தினில் முற்றுணர்ந்
தோனைவண் தில்லைமன்னைத்
திருவாத வூர்ச்சிவ பாத்தியன்
செய்திருச் சிற்றம்பலப்
பொருளார் தருதிருக் கோவைகண்
டேயுமற் றப்பொருளைத்
தெருளாத வுள்ளத் தவர்கவி
பாடிச் சிரிப்பிப்பரே.

தெளிவுரை : வருவாசகத்தினில் முற்றுணர்ந்தோனை, வண் தில்லை மன்னை, திருவாதவூர் அடிகளாகிய மாணிக்க வாசகர் செய்ய திருச்சிற்றம்பலக் கோவை என்னும் நூலைக் கண்ட பிறகும் அதன் பொருளைத் தெளிந்து கொள்ளாத மனமுடையவர்கள் கவிபாடி சிரிப்புக்கு ஆளாவார்கள். இகழப் படுவார்கள் என்பதாம்.

1096. சிரித்திட்ட செம்பவ ளத்தின்
திரளும் செழுஞ்சடைமேல்
விரித்திட்ட பைங்கதிர்த் திங்களும்
வெங்கதப் பாந்தளும்தீத்
தரித்திட்ட அங்கையும் சங்கச்
சுருளும்என் நெஞ்சினுள்ளே
தெரிந்திட்ட வாதில்லைச் சிற்றம்
பலத்துத் திருநடனே.

தெளிவுரை : ஒளி வீசுகின்ற செம்பவளத்தின் திரளும், செஞ்சடை மேல் விரித்திட்ட பசிய கதிர்களை உடைய திங்களும் சினத்தை உடைய பாம்பும் தீயை ஏந்தியுள்ள கையும் சங்கச் சுருளும் என் நெஞ்சில் தெளிய வைத்தவனே ! தில்லைச் சிற்றம்பலத்துத் திருநடனம் செய்யும் இறைவனே !

1097. நடஞ்செய்சிற் றம்பலத் தான்முனி(வு)
என்செயும் காமன்அன்று
கொடுஞ்சினத் தீவிழித் தாற்குக்
குளிர்ந்தனன் விற்கொடும்பூண்
விடுஞ்சினத் தானவர் வெந்திலர்
வெய்தென வெங்கதத்தை
ஒடுங்கிய காலன்அந் நாள்நின்(று)
உதையுணா வீட்டனனே.

தெளிவுரை : எதிர்மறையாகச் சொல்லினும் குறிப்பினால் காமன் எரிந்தனன் என்பது முதலாகக் கொள்க. உதையுணா-உதையுண்ணுதல். நடஞ்செய்கின்ற சிற்றம்பலத்தானது கோபம் என்செய்யும் என்றால் காமன், அன்று மிகுந்த கோபத்தினால், இறைவனது நெற்றிக் கண்ணால் எரிந்து சாம்பலாயினன். திரிபுராதிகளின் முப்புரங்கள் எரிந்தன. மிகுந்த கோபத்தையுடைய இயமன் உதையுண்டு அழிந்தான்.

1098. விட்டங்(கு) ஒளிமணிப் பூண்திகழ்
வன்மதன் மெய்யுரைக்கில்
இட்டங் கரியநல் லான்அல்லன்
அம்பலத்(து) எம்பரன்மேல்
கட்டங் கியகணை எய்தலும்
தன்னைப்பொன் னார்முடிமேல்
புட்டங்கி னான்மக னாமென்று
பார்க்கப் பொடிந்தனனே.

தெளிவுரை : ஒளிமயமான ஆபரணங்களை அணிந்த மன்மதன், உண்மையைச் சொல்வதென்றால், அவன் நல்லவன் அல்லன். அம்பலத்து எம் பெருமான் மீது கள் தங்கிய கணையாகிய மலரம்புகளை எய்தான். தன்னைக் கருடப் பறவைமேல் தங்கிய திருமாலின் மகன் என்றும் சொல்லிக் கொண்ட அவன் எரிந்து சாம்பலாயினான்.

1099. பொடியேர் தருமே னியனாகிப்
பூசல் புகவடிக்கே
கடிசேர் கணைகுளிப் பக்கண்டு
கோயிற் கருவியில்லா
வடியே படஅமை யுங்கணை
என்ற வரகுணன்தன்
முடியே தருகழல் அம்பலத்(து)
ஆடிதன் மொய்கழலே.

தெளிவுரை : திருநீறு பூசிய அழகைக் கொடுக்கின்ற உடலை உடையவன், போர் ஒடுங்குகின்ற பாதங்களுக்கு மிகுதியாகக் குவிந்துள்ள அம்புகளைக் கண்டு கோயிற் கருவியில்லா வடியே பட அமையும் கணை என்ற வரகுண பாண்டியன்தன் முடியேதரு கழல் அம்பலத்து ஆடிதன் மொய்கழலே. வரகுண பாண்டியனின் உண்மை அன்பு விளக்கப் படுகிறது. அவன் சிறந்த சிவபக்தன்.

1100. கழலும் பசுபாச ராம்இமை
யோர்தங் கழல்பணிந்திட்(டு)
அழலும் இருக்கும் தருக்குடை
யோரிடப் பால்வலப்பால்
தழலும் தமருக மும்பிடித்(து)
ஆடிசிற் றம்பலத்தைச்
சுழலும் ஒருகால் இருகால்
வரவல்ல தோன்றல்களே.

தெளிவுரை : இறைவனின் திருப்பாதங்களைப் பணியும் தேவர்களின் பாதங்களைப் பணிந்து அழுதலும் அதைக் கவனியாது செம்மாந்து இருக்கும் தருக்குடையார் இடப்பால், வலப்பாலில் தீயும், உடுக்கையும் பிடித்து ஆடிச் சிற்றம்பலத்தைச் சுழலும் ஒருகால். இருமுறை வரவல்ல தருக்குடையோர்கள் என்பதாம். இறைவனை வழிபடாமல் பிற தெய்வங்களை வணங்குவோர் துன்புறுவர் என்றபடி.

1101. தோன்றலை வெண்மதி தாங்கியைத்
துள்ளிய மாலயற்குத்
தான்தலை பாதங்கள் சாரெரி
யோன்தன்னைச் சார்ந்தவர்க்குத்
தேன்தலை யான்பால் அதுகலந்
தால்அன்ன சீரனைச்சீர்
வான்தலை நாதனைக் காண்பதென்
றோதில்லை மன்றிடையே.

தெளிவுரை : தலைவனை, வெண்மதி தாங்கியை, துள்ளிய திருமாலுக்கும் அயனுக்கும் அரிய மாட்டாதவனை (அதாவது திருமால் பாதத்தையும், பிரமன் முடியையும் காண்பதற் கியலாதவாறு பெரும் தீப்பிழம்பாய் ஆயினான்) தன்னைத் தலைவனாய் ஏற்றுக் கொண்டவர்களுக்குத் தேனும் பாலும் கலந்தது போன்ற சிறப்புடையவனை, கங்கையைத் தலையில் வைத்துள்ள நாதனைக் காண்பது எப்போது? அதாவது தில்லையில் தரிசிப்பது எப்போது என்கிறார்.

1102. மன்றங் கமர்திருச் சிற்றம்
பலவ வடவனத்து
மின்றங் கிடைந்குந்தி நாடக
மாடக்கொல் வெண்டரங்கம்
துன்றங் கிளர்கங்கை யாளைச்
சுடுசினத் தீயரவக்
கன்றங் கடைசடை மேலடை
யாவிட்ட கைதவமே.

தெளிவுரை : திருஆலங்காடு (இரத்தின சபை) நடனத்தைக் குறிக்கின்றார். தில்லையம்பலத்தில் நடனமாடும் பெருமானே ? திருஆலங்காட்டில் மின்னலைப் போன்ற இடையினை யுடைய துர்க்கை (காளிகா தேவி) யோடு நடனமாடியபோது கங்கையாளையும் பாம்பையும் வெளியேறவிட்டது கபடமாகும்.

1103. தவனைத் தவத்தவர்க்(கு) அன்பனைத்
தன்னடி யெற்குதவும்
சிவனைச் சிவக்கத் திரிபுரத்
தைச்சிவந் தானைச்செய்ய
அவனைத் தவளத் திருநீ
றனைப்பெரு நீர்கரந்த
பவனைப் பணியுமின் நும்பண்டை
வல்வினை பற்றறவே.

தெளிவுரை : தவத்தை உடையவனை, தவசிகளுக்கு அன்பனை, தன் அடியவர்க்கு உதவும் சிவனை, முப்புரங்களை எரித்தவனை, செந்நிறமுடையவனை, வெள்ளிய திருநீறு அணிந்தவனை, கங்கையைச் சடையில் மறைத்து வைத்திருக்கும் சிவனைப் பணியுங்கள். உங்களுடைய முன் வினைகள் எல்லாம் நீங்குமாறு பணியுங்கள் என்று அறவுரை கூறுகின்றார்.

1104. பற்றற முப்புரம் வெந்தது
பைம்பொழில் தில்லைதன்னுள்
செற்றரு மாமணிக் கோயிலின்
நின்றது தேவர்கணம்
சுற்றரு நின்புகழ் ஏத்தித்
திரிவது சூழ்சடையோய்
புற்றர(வு) ஆட்டித் திரியும்
அதுவொரு புல்லனவே.

தெளிவுரை : முப்புரங்கள் முழுவதும் வெந்து போனது, பசிய சோலைகள் சூழ்ந்த தில்லையில் பகையில்லாத பொன்னம்பலம் தன்னுள் நின்றது, தேவர் கூட்டம் சுற்றியிருந்து உன்னுடைய புகழை ஏந்தித் திரிவது சூழ்ந்த சடையை உடையோய் புற்றில் வாழும் தன்மையுள்ள பாம்பை ஆட்டித் திரிவது ஆகிய இவை யாவும் அற்பமானவை என்பதாம்.

1105. புல்லறி வின்மற்றைத் தேவரும்
பூம்புலி யூருள்நின்ற
அல்லெறி மாமதிக் கண்ணிய
னைப்போல் அருளுவரே
கல்லெறிந் தானும்தன் வாய்நீர்
கதிர்முடி மேலுகுத்த
நல்லறி வாளனும் மீளா
வழிசென்று நண்ணினரே.

தெளிவுரை : சிற்றறிவினால் மற்றைத் தேவரும் அழகிய சிதம்பரத்தில் நின்ற இருளைப் போக்கும் திங்களாகிய மாலையை அணிந்தவனைப்போல் அருளுவர். கல்லெறிந்த சாக்கிய நாயனாரும், தன்வாய் நீரை உன் தலைமீது உகுத்த நல்லறிவாளனாகிய கண்ணப்ப நாயனாரும் முத்தியை அடைந்து உயர்ந்தனர்.

1106. நண்ணிய தீவினை நாசஞ்
செலுத்தி நமனுலகத்(து)
எண்ணினை நீக்கி இமையோர்
உலகத்(து) இருக்கலுற்றீர்
பெண்ணினொர் பாகத்தன் சிற்றம்
பலத்துப் பெருநடனைக்
கண்ணினை யார்தரக் கண்டுகை
யாரத் தொழுமின்களே.

தெளிவுரை : வந்து சேர்ந்துள்ள தீவினைகளை நாசம் செய்து, நமன் உலகத்திற்குச் செல்வதைத் தடுத்து, தேவர்கள் உலகத்தில் இருப்பதற்கு எண்ணுகிறவர்களே ! உமா தேவியாரை இடப் பாகத்தில் வைத்திருப்பவன் சிற்றம் பலத்தில் பெரு நடனத்தைக் கண்கள் இரண்டும் நன்றாகப் பொருந்தத் தொழுவீர்களாக !

1107. கைச்செல்வம் எய்திட லாமென்று
பின்சென்று கண்குழித்தல்
பொய்ச்செல்வர் செய்திடும் புன்மைகட்
கேஎன்றும் பொன்றில்இல்லா
அச்செல்வம் எய்திட வேண்டுதி
யேல்தில்லை அம்பலத்துள்
இச்செல்வன் பாதம் கருதிரந்
தேன்உன்னை என்நெஞ்சமே.

தெளிவுரை : என் நெஞ்சமே ! உடனடியாகக் கையிலே கிடைக்கிற செல்வத்தை எய்திடலாமென்று, பொய்ச் செல்வர் செய்திடும் புன்மை கட்கு மாறாக, என்றும் அழிதல் இல்லாத அச்செல்வத்தை அடைவதற்கு விரும்பினால் தில்லையம்பலவாணன் பாதம் கருதி உன்னை யாசிக்கின்றேன்.

திருச்சிற்றம்பலம்

33. திருத்தொண்டர் திருவந்தாதி (நம்பியாண்டார் நம்பி அருளிச் செய்தது)

திருவாரூரில் திருக்கோயில் கொண்டருளிய சிவபெருமான், தில்லைவாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன் என்று அடியெடுத்துக் கொடுக்கச் சுந்தரர் திருத்தொண்டத் தொகையைப் பாடி அடியார்களைப் போற்றினார். திருநாரையூர்ப் பொல்லாப் பிள்ளையாரின் திருவருளைப் பெற்ற நம்பியாண்டார் நம்பி, மேற்படி பிள்ளையாரின் திருவருளால் திருத்தொண்டத் தொகையை விரித்து அத் தொகையை முதனூலாகக் கொண்டு இவ் அந்தாதியை வழிநூலாகப் பாடினார். சேக்கிழார் திருவாய் மலர்ந்தருளிய திருத்தொண்டர் புராணம் என்னும் பெரிய புராணத்திற்குப் பெரிதும் ஆதாரமாக விளங்குவது இவ் அந்தாதியே.

இத் திருவந்தாதியின்கண் தேவாரம் பாடிய மூவரும், தனியடியார் அறுபதின்மரும் ஒன்பது, திருக் கூட்டத்தாரும் ஆகிய திருத்தொண்டர்களுக்குரிய ஊர், நாடு, மரபு முதலியவைகளும் அவர்கள் மேற்கொண்டொழுகிய திருத்தொண்டின் நெறியும் அதனால் அவர்கள் பெற்ற பேறும் கூறப்பட்டுள்ளன. இவ் அந்தாதி எண்பத்தொன்பது கட்டளைக் கலித்துறைகளைக் கொண்டதாக விளங்குகிறது.

திருத் தொண்டத் தொகை திருப்பதிகத்திலுள்ள பதினொரு பாடல்களிலும் ஆரூரன் ஆரூரில் அம்மானுக்காளே என, நம்பியாரூரர் தம்மைத் தொண்டருக்குத் தொண்டராகக் குறிப்பிடுகின்றார். இப்பதினோரிடங்களிலும் சுந்தரர் வரலாற்று நிகழ்ச்சிகளைக் குறித்துப் போற்றும் பதினோரு பாடல்கள் இத் திருவந்தாதியில் முறையே அமைந்துள்ளன.

திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர், சேரமான் பெருமாள், கோச்செங்கட் சோழர் ஆகிய பெருமக்களின் வரலாறுகள் இரண்டிரண்டு பாடல்களிலும், ஏனையப் பெருமக்களின் வரலாறுகள் ஒவ்வொரு பாடலிலும் குறித்துப் போற்றப் பெற்றன. திருத்தொண்டத் தொகையில் போற்றப் பெறும் தனியடியார் தொகையடியார் இத்துணையர் என்பதை ஒரு பாடலிலும், அத் திருப்பதிகத்திலுள்ள பாடல்களின் முதற் குறிப்பினை ஒரு பாடலிலும், இத் திருவந்தாதியை ஓதுதலால் வரும் பயனை ஒரு பாடலிலும் கூறி நம்பியாண்டார் நம்பிகள் இத் திரு அந்தாதியினை நிறைவு செய்துள்ளார்.

திருச்சிற்றம்பலம்

1108. பொன்னி வடகரை சேர்நாரை
யூரில் புழைக்கைமுக
மன்னன் அறுபத்து மூவர்
பதிதேம் மரபுசெயல்
பன்னஅத் தொண்டத் தொகைவகை
பல்கும்அந் தாதிதனைச்
சொன்ன மறைக்குல நம்பிபொற்
பாதத்துணை துணையே.

தெளிவுரை : காவேரியின் வடகரையிலுள்ள திருநாரையூரில் கோயில் கொண்டிருக்கும் துளையுள்ள தும்பிக்கையையுள்ள பொல்லாப் பிள்ளையார் அறுபத்து மூன்று நாயன்மார்களது ஊரும், தேசமும், குலமும், செயல்களும் சொல்ல, அந்தத் திருத்தொண்டத் தொகையின் வகையாகப் பெருகும் இந்தத் திருத்தொண்டர் திரு அந்தாதியினைச் சொன்ன வேதியர் குல நம்பியாண்டார் நம்பிகளின் பொற்பாதங்கள் நமக்குத் துணையாக இருக்கும்.

தில்லைவாழந்தணர்

1109. செப்பத் தகுபுகழ்த் தில்லைப்
பதியிற் செழுமறையோர்
ஒப்பப் புவனங்கள் மூன்றினும்
உம்பரின் ஊர்எரித்த
அப்பர்க்(கு) அமுதத் திருநடர்க்(கு)
அந்திப் பிறையணிந்த
துப்பர்க்(கு) உரிமைத் தொழில்புரி
வோர்தமைச் சொல்லுதுமே.

தெளிவுரை : சிறப்பித்துச் சொல்லப்படுகின்ற சிதம்பரத்தில் வாழும் அந்தணர்களைப் போன்ற உலகங்கள் மூன்றினும் ஆகாயத்தில் திரிந்த திரிபுரங்களை எரித்த தந்தையாக விளங்குபவரும், திருநடனம் செய்பவரும், பிறையணிந்தவரும், பவழம் போன்ற நிறமுடையவருமான சிவபெருமானுக்கு உரிமைத் தொண்டு செய்து வருகின்ற தில்லைவாழ் அந்தணர் மூவாயிரவரைத் துதிப்போமாக.

திருநீலகண்ட நாயனார்

1110. சொல்லச் சிவன்திரு வாணைதன்
தூமொழி தோள்நசையை
ஒல்லைத் துறந்துரு மூத்ததற்
பின்உமை கோன்அருளால்
வில்லைப் புரைநுத லாளோ(டு)
இளமைபெற்(று) இன்பமிக்கான்
தில்லைத் திருநீல கண்டக்
குயவனாம் செய்தவனே.

தெளிவுரை : சிதம்பரத்தில் வாழ்ந்திருந்த திருநீலகண்டர் என்ற சிவனடியார், பரத்தையர்பால் இன்பத்துறையில் எளியர் ஆனார் என்பதை அறிந்த அவரது மனைவியார், எம்மைத் தீண்டாதீர், திருநீலகண்டத்து மீது ஆணை என்றார். அன்று முதல் அவர் பெண்ணாசை துறந்தார். ஆண்டுகள் பல சென்றன. இளமை நீங்கி மூப்பு வந்தது. பின்னர் இறைவன் திருவருளால் தானும் தன் மனைவியும் இளமை நலம் பெற்றனர். இவர் குயவர் மரபைச் சேர்ந்தவர்.

இயற்பகை நாயனார்

1111. செய்தவர் வேண்டிய(து) யாதும்
கொடுப்பச் சிவன்தவனாய்க்
கைதவம் பேசிநின் காதலி
யைத்தரு கென்றலுமே
மைதிகழ் கண்ணியை ஈந்தவன்
வாய்ந்த பெரும்புகழ்வந்(து)
எய்திய காவிரிப் பூம்பட்
டினத்துள் இயற்பகையே.

தெளிவுரை : காவிரிப் பூம்பட்டினத்தில் பெருவணிகராய் வாழ்ந்தவர் இயற்பகையார். அடியார்கள் கேட்பதை இல்லை என்னாது கொடுத்து வந்தார். ஒருநாள் சிவபெருமான் தூர்த்த வேதியர் உருவில் வந்து உன்னுடைய மனைவியை வேண்டி வந்தேன் என்றார். அவ்வாறே தம் மனைவியை ஈந்தார். இறைவர் மறைந்து, உமையொருபாகராய் விடைமேல் காட்சி கொடுத்து இருவர்க்கும் முக்தியளித்தார்.

இளையான்குடிமாற நாயனார்

1112. இயலா விடைச்சென்ற மாதவற்(கு)
இன்னமு தாவிதைத்த
வயலார் முளைவித்து வாரி
மனைஅலக் கால்வறுத்துச்
செயலார் பயிர்விழுத் தீங்கறி
ஆக்கும் அவன்செழுநீர்க்
கயலார் இளையான் குடியுடை
மாறன்எங் கற்பகமே.

தெளிவுரை : மாறன் என்பவர் இளையான்குடியில் வேளாளர் குலத்தில் பிறந்தவர். அவர் அடியவர்களுக்கு அமுதளித்து வறுமையுற்றார். அவரைச் சோதிக்க ஒருநாள் இரவு இறைவன் அடியவர் உருவில் வந்தார். வீட்டில் ஒன்றும் இல்லாத நிலை. வயலில் விதைத்த நெல் முளைகளை எடுத்து வந்து வீட்டுக் கூரையை எடுத்து, அதை வறுத்து, சோறு சமைத்து, கீரையைத் தீங்கறியாகச் செய்து உணவளிக்க முயன்றபோது இறைவன் தோன்றி அந்தத் தம்பதியரை ஆட்கொண்டார்.

மெய்ப்பொருள் நாயனார்

1113. கற்றநன் மெய்த்தவன் போல்ஒரு
பொய்த்தவன் காய்சினத்தால்
செற்றவன் தன்னை அவனைச்
செறப்புக லும்திருவாய்
மற்றவன் தத்தா நமரே
எனச்சொல்லி வான்உலகம்
பெற்றவன் சேதிபன் மெய்ப்பொரு
ளாம்என்று பேசுவரே.

தெளிவுரை : மெய்ப்பொருள் நாயனார் சேதி நாட்டு மன்னர். சிறந்த சிவபக்தர். அவரை நயவஞ்சகமாகக் கொல்ல நினைத்த முத்தநாதனைத் தடுத்து நிறுத்திய தன் ஏவலாளை, தத்தா நமர் எனக் கூறி வீழ்ந்தார். இறைவன் நாயனாரின் எதிரே தோன்றி காட்சி அளித்தார். சிவனடியாரைக் கொன்றான் என்று கூறாமல், தன் முன் நினைத்த அப்பரிசே செய்தான் என்று சேக்கிழார் கூறியுள்ளார்.

விறன்மிண்ட நாயனார்

1114. பேசும் பெருமையவ் ஆரூ
ரனையும் பிரானவனாம்
ஈசன் தனையும் புறகுதட்
டென்றவன் ஈசனுக்கே
நேசன் எனக்கும் பிரான்மனைக்
கேபுக நீடுதென்றல்
வீசும் பொழில்திருச் செங்குன்றம்
மேய விறன்மிண்டேனே.

தெளிவுரை : சேர நாட்டைச் சேர்ந்த செங்குன்றூரில் வேளாளர் குலத்தில் தோன்றியவர் விறன்மிண்டர். சிறந்த சிவனடியார். திருவாரூர் தேவாசிரிய மண்டபத்தில் இவர் தங்கியிருந்தபோது, சுந்தரர் அடியார்களை வெளிப்படையாக வணங்காமல் மனத்திலேயே எண்ணிக் கொண்டு சென்றார். அதுகண்டு விறன்மிண்டர் சினந்து, வன்தொண்டர் புறகு இறைவனும் புறகு என்றார். பின்னர் சுந்தரர் திருத்தொண்டத் தொகை பாடி அடியார்களைத் தொழுதணைந்தார்.

அமர்நீதி நாயனார்

1115. மிண்டும் பொழில்பழை யாறை
அமர்நீதி வெண்பொடியின்
முண்டம் தரித்த பிராற்குநல்
லூரின்முன் கோவணம்நேர்
கொண்டிங்(கு) அருளென்று தன்பெருஞ்
செல்வமும் தன்னையும்தன்
துண்ட மதிநுத லாளையும்
ஈந்த தொழிலினனே.

தெளிவுரை :  சோழநாட்டைச் சேர்ந்த பழையாறையில் வணிகர் குலத்தில் அமர்நீதியார் தோன்றினார். அவர் சிவனடியார்களுக்கு அமுதும் கோவணமும் அளித்து வந்தார். இறைவன் இவரைச் சோதிக்க வேண்டி இவரிடம் கொடுத்த கோவணம் காணாமற் போகவே, அதற்கு ஈடாக அவரும் அவரது மனைவியும் மைந்தரும் தராசுத் தட்டில் ஏறி ஈடு செய்தனர். அத் துலையோடு சிவலோகத்திற்கு வருமாறு சிவபெருமான் அருள்பாலித்தார்.

சுந்தரமூர்த்தி நாயனார்

1116. தொழுதும் வணங்கியும் மாலயன்
தேடரும் சோதிசென்றாங்(கு)
எழுதும் தமிழ்ப்பழ ஆவணம்
காட்டி எனக்குன்குடி
முழுதும் அடிமைவந்(து) ஆட்செய்
எனப்பெற்ற வன்முரல்தேன்
ஒழுகு மலரினற் றார்எம்பி
ரான்நம்பி யாரூரனே.

தெளிவுரை : திருத்தொண்டாத் தொகை பாடிய நம்பி ஆரூரனாகிய சுந்தரமூர்த்தி சுவாமிகளின் வாழ்க்கை வரலாறு பதினொரு பாடல்களில் கூறப்படுகிறது. அவற்றுள் முதல் பாடல் இது.

திருமாலும் பிரமனும் வழிபாடு செய்தும் காண்பதற்கரிய சிவபெருமான், சுந்தரரைத் தடுத்தாட் கொள்ள எண்ணினார். திருமணக் கோலத்தோடு நம்பி யாரூரர் புத்தூருக்குச் சென்றிருந்தார். அங்கு சிவபெருமான் கிழவேதியர் உருவில் சென்று மணப்பந்தரில் இந்த நம்பியாரூரன் குடி முழுதும் என் அடிமை என்று கூறி ஓர் ஓலையைக் காட்டினார். ஆரூரர் அவர் கையிலிருந்த ஓலையைப் பிடுங்கிக் கிழித் தெறிந்தார். அத்தகைய சிறப்பு வாய்ந்தவர் நம் நம்பியாரூரர்.

எறிபத்த நாயனார்

1117. ஊர்மதில் மூன்றட்ட வுத்தமற்கு
என்றோர் உயர்தவத்தோன்
தார்மலர் கொய்யா வருபவன்
தண்டின் மலர்பறித்த
ஊர்மலை மேற்கொள்ளும் பாகர்
உடல்துணி யாக்குமவன்
ஏர்மலி மாமதில் சூழ்கரு
வூரில் எறிபத்தனே.

தெளிவுரை : சோழ நாட்டில் கரூர் என்னும் பதியில் ஆனிலை என்னும் கோயிலில் எறிபத்தர் தொண்டு செய்து கொண்டிருந்தார். ஒருநாள் சிவகாமியாண்டார் என்னும் முனிவர் பூக்கொண்டு வந்தார். புகழ்ச் சோழனது மதங்கொண்ட பட்டத்து யானை பூக்கூடையைப் பறித்து சிந்திச் சென்றது. உடனே எறிபத்தர் ஓடி வந்து யானையையும் பாகனையும் வெட்டி வீழ்த்தினார். இறைவன் எழுந்தருளி யானையையும் பாகனையும் உயிர்பெறச் செய்தார். எறிபத்தர் சிவகணங்களுக்குத் தலைவராகும் நிலைமை பெற்றார்.

ஏனாதிநாத நாயனார்

1118. பத்தனை ஏனாதி நாதனைப்
பார்நீ(டு) எயினைதன்னுள்
அத்தனைத் தன்னோ(டு) அமர்மலைந்
தான்நெற்றி நீறுகண்டு
கைத்தனி வாள்வீ(டு) ஒழிந்தவன்
கண்டிப்ப நின்றருளும்
நித்தனை ஈழக் குலதீபன்
என்பர்இந் நீணிலத்தே.

தெளிவுரை : சோழநாட்டில் எயினனூரில் ஈழர் குலச் சான்றோர் மரபில் ஏனாதிநாத நாயனார் இருந்தார். அவர் சிவ வழிபாட்டிலும் திருநீற்று அன்பிலும் சிறந்து விளங்கினார். அவர்மீது பொறாமை கொண்டு அவரிடம் போரிட வந்த அதிசூரன் என்பவன் நெற்றியில் திருநீறு இருப்பதைக் கண்டு வாளைக் கீழே எறிந்தார். வந்தவன் தன் பகையைத் தீர்த்துக் கொண்டான். சிவபெருமான் உமாதேவியாரோடு காட்சி கொடுத்து நாயனார்க்கு அருள் செய்தார்.

கண்ணப்ப நாயனார்

1119. நிலத்தில் திகழ்திருக் காளத்தி
யார்திரு நெற்றியின்மேல்
நலத்தில் பொழிதரு கண்ணிற்
குருதிகண் டுள்நடுங்கி
வலத்தில் கடுங்கணை யால்தன்
மலர்க்கண் இடந்தப்பினான்
குலத்தில் கிராதன்நம் கண்ணப்ப
னாம்என்று கூறுவரே.

தெளிவுரை : பூமியில் சிறந்து விளங்கும் திருக்காளத்தி நாதரின் வலக் கண்ணில் குருதி பெருகுவதைக் கண்ட கண்ணப்பர் நடுநடுங்கி தன் வலக்கண்ணை அம்பால் தோண்டி எடுத்து இறைவனின் கண்ணில் அப்பினார். அவர் வேடர் குலத்தைச் சேர்ந்தவர். அவ்வாறே இடது கண்ணையும் தோண்டி எடுக்க முற்பட்டபோது திருக்காளத்தியப்பர் திண்ணனாரின் கையைத் தம் கையால் பிடித்துக் கொண்டு, நில்லு கண்ணப்ப, என் வலத்தில் மாறிலாய் நிற்க என்று அருள் புரிந்தார்.

குங்குலியக்கலய நாயனார்

1120. ஏய்ந்த கயிறுதன் கண்டத்திற்
பூட்டி எழிற்பனந்தாள்
சாய்ந்த சிவன்நிலைத் தான்என்பர்
காதலி தாலிகொடுத்(து)
ஆய்ந்தநற் குங்குலி யங்கொண்(டு)
அனற்புகை காலனைமுன்
காய்ந்த அரற்(கு)இட்ட தென்கட
வூரில் கலயனையே.

தெளிவுரை : சோழ நாட்டில் திருக்கடவூரில் அந்தணர் குலத்தில் கலயனார் தோன்றினார். சிவபெருமானுக்கு குங்குலியதூபம் போடும் பணியில் ஈடுபட்டார். திருப்பனந்தாளில் பெருமான் சாய்ந்திருக்க, இவர் தன் கழுத்தில் கயிறு கட்டி சிவலிங்கத்தை இழுத்து நிமிர்த்தினார். வீட்டுக்கு வேண்டிய சாமான் வாங்கிவரத் தன் மனைவியார் கொடுத்த தாலியைக் கொடுத்து குங்குலியம் வாங்கிக் கொண்டார். நீண்ட நாள் வாழ்ந்து இறைவன் திருவடி நீழலை அடைந்தார்.

மானக் கஞ்சாற நாயனார்

1121. கலச முலைக்கன்னி காதற்
புதல்வி கமழ்குழலை
நலசெய் தவத்தவன் பஞ்ச
வடிக்கிவை நல்கெனலும்
அலசும் எனக்கரு தாதவன்
கூந்தல் அரிந்தளித்தான்
மலைசெய் மதிற்கஞ்சை மானக்கஞ்
சாறன் எனும்வள்ளலே.

தெளிவுரை : கஞ்சாறூரில் வேளாளர் குலத்தில் தோன்றிய மானக்கஞ்சாறனார் சேனாதிபதியாக இருந்தார். தன் மகளின் திருமணத்தின்போது அகச்சமய சிவனடியார் உருவில் ஒருவர் வந்து மகளின் கூந்தலைப் பூணூலாக (பஞ்சவடியாக)ச் செய்து கொள்ளக் கேட்டார். சிறிதும் தாமதியாமல் நாயனார் தன் மகள் கூந்தலை அரித்து கொடுத்தார். அடியார் மறைந்தார். இறைவன் காட்சியளித்தார். மகளின் கூந்தல் முன்போல் வளர்ந்தது.

அரிவாட்டாய நாயனார்

1122. வள்ளற் பிராற்(கு)அமு தேந்தி
வருவோன் உகலும்இங்கே
வெள்ளச் சடையாய் அமுதுசெய்
யாவிடில் என்தலையைத்
தள்ளத் தகுமென்று வாட்பூட்
டியதடங் கையினன்காண்
அள்ளற் பழனக் கணமங்
கலத்(து)அரி வாட்டாயனே.

தெளிவுரை : சோழ நாட்டிலுள்ள கணமங்கலம் என்னும் திருப்பதியில் வேளாளர் குலத்தில் தோன்றியவர் தாய நாயனார். அவர் நாள்தோறும் இறைவனுக்கு அமுது படைத்து வந்தார். வழியில் மாதவர் விழுந்துவிட்டார். அவரை அணைக்கையில் எல்லாம் நிலவெடிப்பில் சிந்தி வீழ்ந்துவிட்டன. இறைவனுக்கு அமுதூட்ட இயலாமையை எண்ணித் தம்முடைய கழுத்தில் அரிவாளை வைத்து அரியலுற்றார். வெடிப்பிலிருந்து பெருமான் கை வெளி வந்து நாயனாரின் கையைப் பிடித்துக் கொண்டது.

ஆனாய நாயனார்

1123. தாயவன் யாவுக்கும் தாழ்சடை
மேல்தனித் திங்கள்வைத்த
தூயவன் பாதம் தொடர்ந்துதொல்
சீர்துளை யால்பரவும்
வேயவன் மேல்மழ நாட்டு
விரிபுனல் மங்கலக்கோன்
ஆயவன் ஆனாயன் என்னை
உவந்தாண்(டு) அருளினனே.

தெளிவுரை : மழநாட்டில் திருமங்கலம் என்னும் ஊரில் ஆயர் குலத்தில் ஆனாய நாயனார் தோன்றினார். திருநீற்று அன்புடன் சிவபெருமானை வணங்கியதோடு ஆனிரை மேய்த்தலைச் செய்து வந்தார். ஒருநாள் சிவ பெருமானை வேய்ங்குழலில் இசைத்தார். இறைவன் காட்சி கொடுத்தார்.

சுந்தரமூர்த்தி நாயனார்

1124. அருள்துறை அத்தற்(கு) அடிமைப்பட்
டேன்இனி அல்லன்என்னும்
பொருள்துறை யாவதென் னேஎன்ன
வல்லவன் பூங்குவளை
இருள்துறை நீர்வயல் நாவற்
பதிக்கும் பிரான்அடைந்தோர்
மருள்துறை நீக்கிநல் வான்வழி
காட்டிட வல்லவனே.

தெளிவுரை : மூல ஓலையின்படி சுந்தரர் அம் முதியவர்க்கு அடிமையாக ஏவல் செய்ய வேண்டுமென்று திருவெண்ணெய்நல்லூர் சபையினர் முடிவு செய்தனர். நீர் எவ்வூரினர்? என்று கேட்க, வேதியர் நம்பியாரூரரையும் பிறரையும் அழைத்துச் சென்று கோயிலுக்குள்ளே சென்று மறைந்தனர். சிவபெருமான் இடப வாகனத்தின்மேல் எழுந்தருளி ஆரூரருக்குக் காட்சி தந்து, நாமே உம்மைத் தடுத்தாட் கொண்டோம். நீ வன்தொண்டன் என்ற பெயருக்கு உரியாய் என்று அருளினார்.

மூர்த்தி நாயனார்

1125. அவந்திரி குண்(டு)அமண் ஆவதின்
மாள்வனென்(று) அன்றாலவாய்ச்
சிவன்திரு மேனிக்குச் செஞ்சந்
தனமாச் செழுமுழங்கை
உவந்தொளிர் பாறையில் தேய்த்துல(கு)
ஆண்டஒண் மூர்த்திதன்னூர்
நிவந்தபொன் மாட மதுரா
புரியென்னும் நீள்பதியே.

தெளிவுரை : மதுரையில் வணிகர் குலத்தில் மூர்த்தி நாயனார் தோன்றினார். சிவபெருமானுக்குச் சந்தனக் காப்பிடும் பணியைச் செய்து வந்தார். படையெடுத்து வந்த சமண மன்னன் சூழ்ச்சியால் சந்தனக் கட்டை கிடைக்கவில்லை. இவர் தன் கையையே கல்லில் தேய்த்தார். சிவனருளால் சமண மன்னன் மாண்டான். மூர்த்தியார் அரசு செலுத்தி பின்னர் இறைவன் திருவடி சேர்ந்தார்.

முருக நாயனார்

1126. பதிகம் திகழ்தரு பஞ்சாக்
கரம்பயில் நாவினன்சீர்
மதியம் சடையால் கலர்தொட்(டு)
அணிபவன் யான்மகிழ்ந்து
துதியம் கழற்சண்பை நாதற்குத்
தோழன்வன் தொண்டன்அம்பொன்
அதிகம் பெறும்புக லூர்முரு
கன்எனும் அந்தணனே.

தெளிவுரை : திருப்புகலூரில் முருக நாயனார் அந்தணர் குலத்தில் தோன்றினார். இறைவனுக்கு மலர் மாலைகள் கட்டித் தரும் பணியைச் செய்து வந்தார். திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் முதலியோர் அவருடன் தங்கியிருந்தனர். சம்பந்தர் திருமணத்தில் கலந்து கொண்டு சோதியில் கலந்துவிட்டார். வன்தொண்டன் பொன் அதிகம் பெறும் என்றது புகலூருக்கு விசேடம்.

உருத்திர பசுபதி நாயனார்

1127. அந்தாழ் புனல்தன்னில் அல்லும்
பகலும்நின்(று) ஆதரத்தால்
உந்தாத அன்பொ(டு) உருத்திரஞ்
சொல்லிக் கருத்தமைந்த
பைந்தார் உருத்திர பசுபதி
தன்னற் பதிவயற்கே
நந்தார் திருத்தலை யூர்என்(று)
உரைப்பர்இந் நானிலத்தே.

தெளிவுரை : திருத்தலையூரில் பசுபதி என்னும் அந்தணர் ஒருவர் இருந்தார். சிவபெருமானுக்குப் பரம பிரீதியான ருத்திர மந்திரத்தை தினமும் ஜபித்து வந்தார். நாள்தோறும் காலையிலிருந்து மாலை வரை குளத்தில் கழுத்தளவு நீரில் நின்று ஜபம் செய்வார். இறைவன் அவருக்குக் காட்சியளித்துத் தம்மிடத்துக்கு அழைத்துக் கொண்டார்.

திருநாளைப்போவார் நாயனார்

1128. நாவார் புகழ்த்தில்லை அம்பலத்
தான்அருள் பெற்றுநாளைப்
போவான் அவனாம் புறத்திருத்
தொண்டன்தன் புன்புலைபோய்
மூவா யிரவர்கை கூப்ப
முனியா அவன்பதிதான்
மாவார் பொழில்திகழ் ஆதனூர்
என்பர்இம் மண்டலத்தே.

தெளிவுரை : ஆதனூர் புலைச்சேரியில் நந்தனார் வாழ்ந்து வந்தார். சிவத்தொண்டு செய்து வந்தார். தில்லைக்குச் சென்று பொன்னம்பலவாணனைத் தரிசிக்க வேண்டுமென்று ஆவல் கொண்டார். நாளைக்குப் போவேன் என்று அடிக்கடி அவர் சொல்லி வந்ததால், அனைவரும் அவரைத் திருநாளைப் போவார் என்றே அழைத்தனர். தில்லை சென்று தீக்குழியில் இறங்கிக் கரை ஏறினார். தில்லை மூவாயிரவர் அவரைக் கைகூப்பி வணங்கினர். ஐயனின் ஆனந்தக் கூத்தில் நந்தனார் ஐக்கியமாகிவிட்டார்.

திருக்குறிப்புத்தொண்ட நாயனார்

1129. மண்டும் புனற்சடை யான்தமர்
தூசெற்றி வாட்டும்வகை
விண்டு மழைமுகில் வீடா
தொழியின்யான் வீவன்என்னா
முண்டம் படர்பாறை முட்டும்
எழிலார் திருக்குறிப்புத்
தொண்டன் குலங்கச்சி ஏகா
லியர்தங்கள் தொல்குலமே.

தெளிவுரை : சிறப்பு வாய்ந்த காஞ்சி மாநகரில் ஏகாலியர் குலத்தில் சிவபக்தர் ஒருவர் இருந்தார். அடியார்களின் ஆடைகளை நன்றாகக் துவைத்து உலர்த்திக் கொடுத்து வந்தார். அதனால் அவரைத் திருக்குறிப்புத் தொண்டர் என்றே எல்லாரும் அழைக்கலாயினர். இறைவன் அவரைச் சோதிக்க விரும்பி, ஒரு மழைநாளில் தன் ஆடையை அவரிடம் துவைக்கக் கொடுத்தார். குறித்த நேரத்தில் ஆடையைக் கொடுக்க முடியாமையால் துணி தோய்க்கும் பாறையில் தலையை மோதிக் கொண்டு உயிரை விட முயன்றார். இறைவன் காட்சி அளித்து அவருக்குக் கைலாய வாழ்வு அளித்தார்.

சண்டேசுர நாயனார்

1130. குலமே றியசேய்ஞ லூரில்
குரிசில் குரைகடல்சூழ்
தலமே றியவிறல் சண்டிகண்
டீர்தந்தை தாள்இரண்டும்
வலமே றியமழு வால்எறிந்(து)
ஈசன் மணிமுடிமேல்
நலமே றியபால் சொரிந்தலர்
சூட்டிய நன்னிதியே.

தெளிவுரை : சேய்ஞலூரில் (சேந்தனூரில்) வேதியர் குலத்தில் விசாரசர்மர் பிறந்தார். அவர் மாடு கன்றுகளை மேய்த்து வந்தார். அங்கிருந்த சிவலிங்கத்திற்குப் பாலை அபிஷேகம் செய்து வந்தார். இதைக் கண்டித்த தன் தந்தையின் இரண்டு கால்களையும் வெட்டிவிட்டார். எம்பெருமான் தோன்றி விசாரசர்மரை ஆட்கொண்டார். தந்தையின் வெட்டுண்ட கால்கள் முன்போல் வளர்ந்தன. இவ்வாறு விசார சர்மர் சண்டேசுவர நாயனாராகப் போற்றப் படுகிறார். சிவன் கோயில்களில் சுவாமிக்கு இடப் புறத்தில் இவருடைய சன்னதி இருக்கும்.

சுந்தரமூர்த்தி நாயனார்

1131. நிதியார் துருத்திதென் வேள்விக்
குடியாய் நினைமறந்த
மதியேற்(கு) அறிகுறி வைத்த
புகர்பின்னை மாற்றிடென்று
துதியா அருள்சொன்ன வாறறி
வாரிடைப் பெற்றவன்காண்
நதியார் புனல்வயல் நாவலர்
கோன்என்னும் நற்றவனே.

தெளிவுரை : சங்கிலியாரிடம் சொல்லாமல் திருவொற்றியூரிலிருந்து சுந்தரர்
புறப்பட்டு, திருவாரூரை நோக்கி நடந்தார். கண் பார்வையை இழந்து பல தொல்லைகளுக்கு ஆளானார். வழியில் திருத் துருத்தியை (குத்தாலத்தை) அடைந்தார். தம்மை வருத்தி வரும் பிணியைப் போக்கி அருள வேண்டும் எனக் கெஞ்சினார். ஆலயத்தின் வடபாலுள்ள தீர்த்தத்தில் நீராடுமாறு இறைவன் தம் சோழனுக்கு அனுக்கிரகித்தார். சுந்தரரும் அவ்வாறே திருக்குளத்தில் நீராடி எழுந்து இறைவனை வணங்கியபோது, அவர் உடலில் ஏற்பட்டிருந்த தளர்ச்சி நீங்கப் பெற்று புதிய பொலிவுடன் விளங்கலானார்.

திருநாவுக்கரசு நாயனார்

1132. நற்றவன் நல்லூர்ச் சிவன்திருப்
பாதம்தன் சென்னிவைக்கப்
பெற்றவன் மற்றிப் பிறப்பற
வீரட்டர் பெய்கழற்றாள்
உற்றவ னுற்ற விடம்அடை
யாரிட வொள்ளமுதாத்
துற்றவன் ஆமூரில் நாவுக்
கரசெனுந் தூமணியே.

தெளிவுரை : திருநாவுக்கரசர் திருமுனைப்பாடி நாட்டிலுள்ள திருவாரூரில் பிறந்தவர். இடையில் சமண சமயத்தில் சேர்ந்தார். பிறகு தமக்கையார் வேண்டிக் கொண்டபடி திருவதிகை வீரட்டனத்திற்கு வந்து இறைவனை வணங்கிச் சைவரானார். சமணர்கள் கொடுத்த விஷத்தை அமுதென உண்டார். சிவத் தலங்களைத் தரிசித்துக் கொண்டு திருநல்லூர் போய்ச் சேர்ந்தார். பகவான் தமது திருவடியை அப்பரின் தலை மேலே வைத்து அருளினார்.

1133. மணியினை மாமறைக் காட்டு
மருந்தினை வண்மொழியால்
திணியன நீள்கத வந்திறப்
பித்தன தெண்கடலிற்
பிணியன கன்மிதப் பித்தன
சைவப் பெருநெறிக்கே
அணியன நாவுக் கரையர்
பிரான்தன் அருந்தமிழே.

தெளிவுரை : திருநாவுக்கரசரும் ஞானசம்பந்தரும் திருமறைக் காட்டிற்குச் (வேதாரண்யம்) சென்றனர். வேதங்கள் பூசித்த காலத்திலிருந்து அடைபட்டிருக்கும் கதவை வாகீசர் பதிகம் பாடிப் திறந்தார். இருவரும் அவ்வாயில் வழியாகச் சென்று இறைவனை வணங்கிக் களிகூர்ந்தனர். மன்னன் ஆணைப்படி சமணர்கள் நாவுக்கரசரைப் பாறையுடன் பிணித்துக் கடலில் எறிந்தனர். சொற்றுணை வேதியன் என்னும் பதிகத்தைப் பாடினார். பாறை மிதக்கத் தொடங்கியது. அப்பர் கரை ஏறினார். அவருடைய தேவாரப் பாடல்கள் சைவ சமயத்திற்கு அணி எனத் திகழ்கின்றன.

குலச்சிறை நாயனார்

1134. அருந்தமிழ் ஆகரன் வாதில்
அமணைக் கழுநுதிமேல்
இருந்தமிழ் நாட்டிடை ஏற்றுவித்
தோன்எழிற் சங்கம்வைத்த
பெரும்தமிழ் மீனவன் தன்அதி
காரி பிரசம்மல்கு
குருந்தவிழ் சாரல் மணமேற்
குடிமன் குலச்சிறையே.

தெளிவுரை : மணமேற் குடியில் தோன்றியவர் குலச்சிறை நாயனார். பாண்டிய மன்னன் நெடுமாறனுக்கு அமைச்சர். பாண்டிய நாட்டில் சமண மதம் தலை தூக்கி நின்றது. திருஞானசம்பந்தரை இவர் அழைத்து வந்து, அவர்களை வாதில் வென்று கழுவேறச் செய்தார். பின்னர் சைவ சமயம் அங்கு தழைத்து வளர்ந்தது.

பெருமிழலைக் குறும்ப நாயனார்

1135. சிறைநன் புனல்திரு நாவலூர்
ஆளி செழுங்கயிலைக்(கு)
இறைநன் கழல்நாளை எய்தும்
இவனருள் போற்றஇன்றே
பிறைநன் முடிய அடியடை
வேன்என்(று) உடல்பிரிந்தான்
பிறைநன் மலர்த்தார் மிழலைக்
குறும்பன் எனும்நம்பியே.

தெளிவுரை : பெருமிழலை என்ற ஊரில் குறும்பர் என்னும் சிவபக்தர் வாழ்ந்துவந்தார். சுந்தரரை என்றும் பணிந்து போற்றி வந்தார். அதனால் சித்திகள் பலவும் கைவரப் பெற்றார். சுந்தரர் திருவஞ்சைக் களத்திலிருந்து கைலாயம் செல்ல இருப்பதைத் தமது யோக பலத்தால் அறிந்து, சமாதியில் அமர்ந்தார். சுந்தரருக்கு முன்பே இவர் கயிலை போய்ச் சேர்ந்தார்.

காரைக்கால் அம்மையார்

1136. நம்பன் திருமலை நான்மிதி
யேன்என்று தாள்இரண்டும்
உம்பர் மிசைத்தலை யால்நடந்(து)
ஏற உமைநகலும்
செம்பொன் உருவன்என் அம்மை
எனப்பெற் றவள்செழுந்தேன்
கொம்பின் உருகாரைக் காலினின்
மேய குலதனமே.

தெளிவுரை : காரைக்கால் அம்மையார் கருவிலே திருவுடையார். கனிந்த திருவருள் உடையார். நாவிலே தமிழுடையார். நற்றவத்தின் திறமுடையார். கயிலை மலையைக் காலால் மிதிக்கலாகாது என்று தலையால் நடந்து சென்றார். இதைக் கண்டு உமாதேவியார் நகைத்தார். அம்மையே என்றழைக்கும் பேறு பெறாத இறைவன் புனிதவதியாரை நோக்கி, அம்மையே வருக என்றனன். அவர் வேண்டிய வரங்களை உவந்து அளித்தனன்.

அப்பூதி அடிகள் நாயனார்

1137. தனமா வதுதிரு நாவுக்(கு)
அரசின் சரணம்என்னா
மனமார் புனற்பந்தர் வாழ்த்திவைத்(து)
ஆங்கவன் வண்தமிழ்க்கே
இனமாத் தனது பெயரிடப்
பெற்றவன் எங்கள்பிரான்
அன்னமார் வயல்திங்கள் ஊரினில்
வேதியன் அப்பூதியே.

தெளிவுரை : திங்களூரில் வேதியர் குலத்தில் பிறந்தவர் அப்பூதியடிகள். திருநாவுக்கரசரையே தன் வழிபடு தெய்வமாகக் கொண்டு அவர் பேரிலேயே தண்ணீர்ப் பந்தல் முதலியவற்றை வைத்து நடத்தினார். தனது பிள்ளைகளுக்கும் அவர் பெயரையே வைத்திருந்தார். அவரை வணங்கியே அப்பூதியபடிகள் நற்கதி பெற்றார்.

திருநீலநக்க நாயனார்

1138. பூதிப் புயத்தர் புயத்திற்
சிலந்தி புகலும் அஞ்சி
ஊதித் துமிந்த மனைவியை
நீப்பஉப் பாலவெல்லாம்
பேதித்து எழுந்தன காணென்று
பிஞ்ஞகன் காட்டுமவன்
நீதித் திகழ்சாத்தை நீலநக்
கன்எனும் வேதியனே.

தெளிவுரை : சோழ நாட்டில் சாத்தமங்கை என்னும் ஊரில் திருநீல நக்கர் என்ற வேதியர் வாழ்ந்து வந்தார். கோயிலுக்கு இவரும் இவரது மனைவியாரும் சென்று சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்யும்போது, சிவ லிங்கத்தின்மீது விழுந்த சிலந்தியை மனைவியார் ஊதி அப்புறப்படுத்தினார். அது பெரும் அபசாரம் என்று மனைவியைக் கோயிலேயே விட்டுவிட்டு வீடு திரும்பினார். பிறகு இவர் கனவில் இறைவன் தோன்றி சமாதானப் படுத்தினார்.

நமிநந்தியடிகள் நாயனார்

1139. வேத மறிக்கரத் தாரூர்
அரற்கு விளக்குநெய்யைத்
தீது செறிஅமண் கையர்அட்
டாவிடத்(து) எண்புனலால்
ஏத முறுக அருகரென்(று)
அன்று விளக்கெரித்தான்
நாதன் எழில்ஏமப் பேறூர்
அதிபன் நமிநந்தியே.

தெளிவுரை : சோழ நாட்டில் ஏமப்பேறு என்ற ஊரில் நமிநந்தி அடிகள் என்ற அந்தணர் வாழ்ந்து வந்தார். அவர் நாள்தோறும் திருவாரூருக்குச் சென்று இறைவனை வழிபட்டு வருவது வழக்கம். ஒரு நாள் விளக்கிற்கு எண்ணெய் தர சமணர் மறுத்துவிட நாயனார் குளத்து நீரை விட்டு விளக்கு எரித்தார். அத்தகைய சிறந்த சிவனடியாரை அப்பர் பெருமான் தம் பாடல் ஒன்றில் சிறப்பித்துள்ளார்.

சுந்தரமூர்த்தி நாயனார்

1140. நந்திக்கும் நம்பெரு மாற்குநல்
ஆரூரில் நாயகற்குப்
பந்திப் பரியன செந்தமிழ்
பாடிப் படர்புனலிற்
சிந்திப் பரியன சேவடி
பெற்றவன் சேவடியே
வந்திப் பவன்பெயர் வன்தொண்டன்
என்பர்இவ் வையகத்தே.

தெளிவுரை : சிவபெருமானைக் குறித்து செய்யுட் குற்றம் இல்லாத தேவாரப் பாடல்களைப் பாடி இறைவனை வழிபட்ட மெய் அன்பரை வன்தொண்டர் என்று வையத்தோர் கூறுகின்றனர். திருமுதுகுன்றத்தில் இறைவன் அளித்த பன்னீராயிரம் பொன்னை மணிமுத்தாற்றில் இட்டு, திருவாரூர் சென்று கமலாலயத்தில் மூழ்கி அப்பொன்னை எடுத்த மெய்த் தொண்டர் அல்லவா அவர்.

திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்

1141. வையம் மகிழயாம் வாழ
அமணர் வலிதொலைய
ஐயன் பிரம புரத்தரற்(கு)
அம்மென் குதலைச்செவ்வாய்
பைய மிழற்றும் பருவத்துப்
பாடப் பருப்பதத்தின்
தையல் அருள்பெற் றனன்என்பர்
ஞானசம் பந்தனையே.

தெளிவுரை : திருஞானசம்பந்தர் சிறு வயதிலேயே ஞானத்தின் திருவுருவாக வாழ்ந்தவர். தேவாரத்தில் முதல் மூன்று திருமுறைகளையும் பாடியவர். இவர் பிறந்த ஊர் சீர்காழி. மூன்று வயதில் உமாதேவியால் ஞானப்பால் ஊட்டப்பெற்றுத் தெய்வப் பாடல்களாகிய தேவாரத்தைப் பாடத் தொடங்கியவர். சமணர்களால் சிவநெறிக்கு ஏற்பட்ட இடரை அகற்றிச் சைவம் தழைக்க உதவியவர்.

1142. பந்தார் விரலியர் வேள்செங்கட்
சோழன் முருகன்நல்ல
சந்தார் அகலத்து நீலநக்
கன்பெயர் தான்மொழிந்து
கொந்தார் சடையர் பதிகத்தில்
இட்டடி யேன்கொடுத்த
அந்தாதி கொண்ட பிரான்அருட்
காழியர் கொற்றவனே.

தெளிவுரை : மங்கையர்க்கரசியார், குலச்சிறை நாயனார், கோச்செங்கட் சோழ நாயனார், முருக நாயனார், திருநீல நக்க நாயனார் இவர்கள் சம்பந்தரால் பாடப் பெறும் பேறு பெற்றவர்கள். திருத்தொண்டர் திருஅந்தாதியை ஏற்றுக்கொண்ட பிரான் சீர்காழியில் தோன்றிய திருஞானசம்பந்தரே ஆவார்.

ஏயர்கோன் கலிக்காம நாயனார்

1143. கொற்றத் திறல்எந்தை தந்தைதன்
தந்தைஎங் கூட்டமெல்லாம்
தெற்றச் சடையாய் நினதடி
யேம்திகழ் வன்றொண்டனே
மற்றிப் பிணிதவிர்ப் பான்என்(று)
உடைவாள் உருவிஅந்நோய்
செற்றுத் தவிர்கலிக் காமன்
குடிஏயர் சீர்க்குடியே.

தெளிவுரை : சுந்தரமூர்த்தி நாயனார் சிவபெருமானைப் பரவையாரிடம் தூது அனுப்பியதைத் தவறாகக் கொண்டு, கலிக்காமர் அவரிடம் சினம் கொண்டிருந்தார். ஆனால், சிவபெருமான் கலிக்காமரின் சூலை நோய் சுந்தரரால்தான் தீரும் என்றார். அதை விரும்பாத கலிக்காமர் உடை வாளால் தன் வயிற்றைக் கிழித்துக் கொண்டார். உயிர் போய்விட்டது. சுந்தரர் வந்து உடைவாளைப் பற்றினார். கலிக்காமர் உயிர் பெற்றெழுந்தார். இருவரும் நண்பராயினர். அவர் சோழ அரசனுக்குச் சேனாதிபதியாகப் பணிபுரியும் ஏயர்கோன் குடியைச் சேர்ந்தவர்.

திருமூல நாயனார்

1144. குடிமன்னு சாத்தனூர்க் கோக்குலம்
மேய்ப்போன் குரம்பைபுக்கு
முடிமன்னு கூனற் பிறையாளன்
தன்னை முழுத்தமிழின்
படிமன்னு வேதத்தின் சொற்படி
யேபர விட்டென்உச்சி
அடிமன்ன வைத்த பிரான்மூலன்
ஆகின்ற அங்கணனே.

தெளிவுரை : நந்திகேஸ்வரரின் அருள் பெற்ற யோகிகளுள் ஒருவர் தென்னாடு நோக்கி வந்தார். சாத்தனூரைச் சேர்ந்த மூலன் என்னும் இடையன் இறந்து கிடந்தான். அவன் உடலில் இவர் புகுந்து (பரகாயம் செய்து-கூடுவிட்டுக் கூடு பாய்தல்) சிவபெருமானைக் குறித்து 3000 பாடல்களைக் கொண்ட திருமந்திரத்தைப் பாடினார். இவர் யோகி, எம்பெருமானைப் பஞ்சாட்சரத்தால் துதித்தார்.

தண்டியடிகள் நாயனார்

1145. கண்ணார் மணிஒன்றும் இன்றிக்
கயிறு பிடித்தரற்குத்
தண்ணார் புனல்தடம் தொட்டலும்
தன்னை நகும்அமணர்
கண்ணாங்(கு) இழப்ப அமணர்
கலக்கங்கண்(டு) அம்மலர்க்கண்
விண்ணா யகனிடைப் பெற்றவன்
ஆரூர் விறல்தண்டியே.

தெளிவுரை : தண்டியடிகள் திருவாரூரில் பிறந்தவர். அவர் பிறவிக் குருடர். திருக்குளம் தூர்ந்து சிறியதாகியது. குளத்தின் நடுவில் ஒரு தறி நட்டு அதோடு ஒரு கயிற்றைக் கட்டி அதைப் பிடித்துக் கொண்டே மண்ணைத் தோண்டி எடுத்தார். இதைக் கேலி செய்த சமணர்களின் கண்கள் குருடாயின. இறைவன் அருளால் இவர் கண் பார்வை பெற்றார். பலநாள் வாழ்ந்து பின்னர் தியாகேசர் பாதார விந்தங்களை அடைந்தார்.

மூர்க்க நாயனார்

1146. தண்டலை சூழ்திரு வேற்காட்டூர்
மன்னன் தருகவற்றால்
கொண்டவல் லாயம்வன் சூதரை
வென்றுமுன் கொண்டபொருள்
முண்டநன் னீற்றன் அடியவர்க்(கு)
ஈபவன் மூர்க்கனென்பர்
நண்டலை நீரொண் குடந்தையில்
மேவுநற் சூதனையே.

தெளிவுரை : தொண்டை நாட்டில் திருவேற்காட்டில் வேளாளர் குலத்தில் மூர்க்க நாயனார் தோன்றினார். அடியார்களுக்கு அமுதளித்து வறுமையுற்றார். சூதின் மூலம் பொருள் தேட கும்பகோணம் சென்றார். சூதாட மறுத்தாரைச் சுரிகை உருவிக் குத்தி மூர்க்கர் என்னும் பெயர் பெற்றார். இறுதியில் சிவபெருமான் திருவடியில் சேர்ந்தார்.

சோமாசிமாற நாயனார்

1147. சூதப் பொழில் அம்பர் அந்தணன்
சோமாசி மாறன்என்பான்
வேதப் பொருள்அஞ் செழுத்தும்
விளம்பியல் லால்மொழியான்
நீதிப் பரன்மன்னு நித்த
நியமன் பரவையென்னும்
மாதுக்குக் காந்தன்வன் தொண்டன்
தனக்கு மகிழ்துணையே.

தெளிவுரை : சோழ நாட்டில் திருஅம்பர் என்ற ஊரில் அந்தணர் குலத்தில் சோமாசி மாறர் தோன்றினார். எத்தன்மையராயினும் ஈசனுக்கு அன்பர்தாம் தமக்கு உதவி செய்பவர் என்ற கொள்கையுடையவர். அவர் திருவாரூருக்குச் சென்று அங்கிருந்த சுந்தரமூர்த்தி சுவாமிகளுக்குத் தொண்டராக இருந்து சிவபெருமான் திருவடியை அடைந்தார். அவர் எந்த நேரமும் பஞ்சாட்சரத்தை ஓதுபவர்.

சுந்தரமூர்த்தி நாயனார்

1148. துணையும் அளவும்இல் லாதவன்
தன்னரு ளேதுணையாக்
கணையும் கதிர்நெடு வேலும்
கறுத்த கயலிணையும்
பிணையும் நிகர்த்த சங்கிலி
பேரமைத் தோள்இரண்டும்
அணையும் அவன்திரு ஆரூரன்
ஆகின்ற அற்புதனே.

தெளிவுரை : திருவொற்றியூரில் அநிந்திதையார், சங்கிலியார் என்னும் பெயருடன் அவதாரம் செய்திருந்தார். அழகும் நற்குணங்களும் பொருந்தியவராய் மணப்பருவம் எய்தியிருந்தார். சங்கிலியார் கன்னி மாடத்திலிருந்துகொண்டு இறைவனுக்கு மலர்த் தொண்டு செய்து வந்தார். சுந்தரர் திருவொற்றியூர் வந்தபோது சங்கிலியாரைக் கண்ணுற்றார். காதல் கொண்டார். இறையருளால் இருவருக்கும் திருமணம் நடைபெற்றது.

சாக்கிய நாயனார்

1149. தகடன ஆடையன் சாக்கியன்
மாக்கற் றடவரையன்
மகடனந் தாக்கக் குழைந்ததிண்
தோளர்வண் கம்பர்செம்பொன்
திகழ்தரு மேனியிற் செங்கல்
எறிந்து சிவபுரத்துப்
புகழ்தரப் புக்கவன் ஊர்சங்க
மங்கை புவனியிலே.

தெளிவுரை : தொண்டை நாட்டைச் சேர்ந்த திருச்சங்க மங்கை என்னும் ஊரில் சாக்கிய நாயனார் வேளாளர் குலத்தில் தோன்றினார். பௌத்த மதத்தில் ஞானம் பெற முயன்று பிறகு சிவநெறியே சிறந்ததெனக் கண்டார். காஞ்சிபுரத்தில் ஏகாம்பர நாதரைத் தொழுதார். தகடு போன்ற பௌத்தர்க்குரிய ஆடையை அணிந்தவர். அதை மாற்றிக் கொள்ளாமல் சிவபெருமானைக் கல்லால் எறிந்து வழிபட்டார். சைவ சமயத்தில் அவருக்கிருந்த பற்றின் காரணமாக இறைவனடி சேர்ந்தார்.

சிறப்புலி நாயனார்

1150. புவனியிற் பூதியும் சாதன
மும்பொலி வார்ந்துவந்த
தவநிய மற்குச் சிறப்புச்செய்
தத்துவ காரணனாம்
அவனியில் கீர்த்தித்தென் னாக்கூர்
அதிபன் அருமறையோன்
சிவனிய மந்தலை நின்றதொல்
சீர்நஞ் சிறப்புலியே.

தெளிவுரை : சோழ நாட்டில் வேதியர் குலத்தில் தோன்றியவர் சிறப்புலி நாயனார். அவர் பிறந்த ஊர் ஆக்கூர். அவர் சிவனடியார்களிடம் மிக்க அன்பு கொண்டிருந்தார். அவர்களை வரவேற்று அமுதளிப்பார். பஞ்சாட் சரத்தை நாள்தோறும் ஓதுவார். இவ்வாறு பன்னாள் தொண்டு செய்து, ஈசன் திருவடிகளைச் சேர்ந்தார்.

சிறுத்தொண்ட நாயனார்

1151. புலியின் அதளுடைப் புண்ணியற்(கு)
இன்னமு தாத்தனதோர்
ஒலியின் சதங்கைக் குதலைப்
புதல்வன் உடல்துணித்துக்
கலியின் வலிகெடுத்(து) ஓங்கும்
புகழ்ச்சிறுத் தொண்டன்கண்டீர்
மலியும் பொழில்ஒண்செங் காட்டம்
குடியவர் மன்னவனே.

தெளிவுரை : சோழவள நாட்டிலுள்ள திருச் செங்காட்டங்குடியில் சிறுத்தொண்டர் பிறந்தார். இவரது இயற்பெயர் பரஞ்சோதி. சிறுத்தொண்டர் சிவனடியார்களை உண்பிக்கும் தம் கொள்கையை நிறைவேற்றும் பொருட்டு, வயிரவர் பணித்தபடி, தன் அருமை மைந்தனையே வாளால் அரிந்து கறி சமைத்தார். வெற்றியும் கண்டார். இறைவன் இதைக் கண்டு அதிசயித்து மைந்தனை உயிர் பெற்றெழச் செய்ததோடு, குடும்பத்தோடு தன் திருவடி நீழலை அடையுமாறும் அருள் பாலித்தார்.

சேரமான்பெருமாள் நாயனார்

1152. மன்னர் பிரானெதிர் வண்ணா
னுடலுவ ரூறிநீறார்
தன்னர் பிரான்தமர் போல
வருதலுந் தான்வணங்க
என்னர் பிரானடி வண்ணா
னெனவடிச் சேரனென்னுந்
தென்னர் பிரான்கழ றிற்றறி
வானெனும் சேரலனே.

தெளிவுரை : இவரது இயற்பெயர் பெருமாக் கோதையார். சேரமன்னர், இறைவன் அருளால் பிறர் கழறும் சொற்களை அறியும் ஆற்றல் பெற்றிருந்தமையால் கழறிற்றறிவார் என்று இவரை அழைக்கலாயினர். சிவபெருமானிடம் பேரன்பு கொண்டவர். வண்ணான் ஒருவன் எதிரே வந்தான். மழையினால் கரைந்த உவர்மண் அவன் உடம்பில் வழிந்து வெளுத்திருந்தது. அதைத் திருநீறு என்று மன்னர் நினைத்து அவனைச் சிவனடியாராகப் பாவித்து வணங்கினார். அவன் நடுநடுங்கி, அரசே அடியேன் வண்ணான் அன்றோ! என்றான்.

1153. சேரற்குத் தென்னா வலர்பெரு
மாற்குச் சிவனளித்த
வீரக் கடகரி முன்புதன்
பந்தி யிவுளிவைத்த
வீரற்கு வென்றிக் கருப்புவில்
வீரனை வெற்றிகொண்ட
சூரற் கெனதுள்ளம் நன்றுசெய்
தாயின்று தொண்டுபட்டே.

தெளிவுரை : கயிலைக்கு வருமாறு சிவபெருமான் சுந்தரர்க்கு வெள்ளானையை அனுப்பி இருந்தார். அதை அறிந்த சேரமான் குதிரை மீதேறி, ஆகாயமார்க்கமாகச் சென்று. சுந்தரர்க்கு முன்னதாகக் கயிலாயத்தை அடைந்தார். அத்தகைய சிறந்த சிவனடியாராகிய சேரமான்பெருமாள் நாயனாரை என் உள்ளம் பிரார்த்திக்கிறது.

கணநாத நாயனார்

1154. தொண்டரை யாக்கி யவரவர்க்
கேற்ற தொழில்கள்செய்வித்
தண்டர்தங் கோனக் கணத்துக்கு
நாயகம் பெற்றவன்காண்
கொண்டல்கொண் டேறிய மின்னுக்குக்
கோல மடல்கள்தொறும்
கண்டல்வெண் சோறளிக் குங்கடல்
காழிக் கணநாதனே.

தெளிவுரை : சீர்காழியில் மறையவர் குலத்தில் தோன்றியவர் கணநாதர். சீர்காழிப் பெருமானுக்குத் தாம் திருத்தொண்டு செய்ததோடு அங்குச் சென்றவர்களுக்கும் அத் தொண்டுகளில் பயிற்சி கொடுத்து வந்தார். ஞானசம்பந்தப் பெருமானின் கழல்களையும் வழிபட்டுக் கயிலையில் கணநாதராகும் பேறு பெற்றார்.

கூற்றுவ நாயனார்

1155. நாதன் திருவடி யேமுடி
யாகக் கவித்துநல்ல
போதங் கருத்திற் பொறித்தமை
யாலது கைகொடுப்ப
ஒதந் தழுவிய ஞாலமெல்
லாமொரு கோலின்வைத்தான்
கோதை நெடுவேற் களப்பாள
னாகிய கூற்றுவனே.

தெளிவுரை : களந்தை என்னும் பதியில் குறுநில மன்னராக இருந்தவர் கூற்றுவ நாயனார். தில்லைவாழ் அந்தணர்களைத் தனக்கு முடிசூட்டக் கேட்டார். சோழர் குலத்து மன்னர்களைத் தவிர மற்றையோருக்கு நாங்கள் முடிசூட்ட மாட்டோம் என்று அறிவித்துவிட்டனர். ஒருநாள் கனவின்கண் அம்பலவாணர் தம் பாத மலரைத் தலையில் சூட்ட அதையே தாங்கினார். பல தலங்களுக்கும் சென்று தொண்டுகள் புரிந்து வந்தார். முடிவில் அவர் எம்பெருமான் திருவடிகளையே அடைந்தார்.

சுந்தரமூர்த்தி நாயனார்

1156. கூற்றுக் கெவனோ புகல்திரு
வாரூரன் பொன்முடிமேல்
ஏற்றுத் தொடையலு மின்னடைக்
காயு மிடுதருமக்
கோற்றொத்து கூனனுங் கூன்போய்க்
குருடனுங் கண்பெற்றமை
சாற்றித் திரியும் பழமொழி
யாமித் தரணியிலே.

தெளிவுரை : சிறந்த தேவாரப் பாடல்களைப் பாடிய சுந்தரர் அடியார்களிடமிருந்து மலர் மாலையும் தாம்பூலமும் பெற்று இன்புற்றிருந்தார். கோல் ஊன்றி நடந்த கூனன் கூன் நிமிர்ந்து சென்றது போலவும், குருடனும் கண் பார்வை பெற்று மகிழ்ந்தது போலவும் சுந்தரர் மகிழ்வோடு இவ்வுலகில் மகிழ்ச்சியுடன் இருந்தார்.

பொய்யடிமை இல்லாத புலவர்

1157. தரணியில் பொய்ம்மை இலாத்தமிழ்ச்
சங்கம் அதில்கபிலர்
பரணர்நக் கீரர் முதல்நாற்பத்
தொன்பது பல்புலவோர்
அருள்நமக் கீயுந் திருவால
வாயரன் சேவடிக்கே
பொருளமைத் தின்பக் கவிபல
பாடும் புலவர்களே.

தெளிவுரை : பூமியில் சிறந்த கடைச் சங்கப் புலவர் பெருமக்களுள் கபிலர், பரணர், நக்கீரர் முதலாகிய நாற்பத்தொன்பதின்மரும் உள்ளிட்ட திரு ஆலவாய் பெருமான் திருவடியையே சரண் எனக் கருதிப் பாடும் புலவர் பெருமக்களுக்கு என் வணக்கம் என்றும் உரியது என்று நம்பியாண்டார் நம்பிகள் பாடுகின்றார்.

புகழ்ச்சோழ நாயனார்

1158. புலமன் னியமன்னைச் சிங்கள
நாடு பொடுபடுத்த
குலமன் னியபுகழ்க் கோகன
நாதன் குலமுதலோன்
நலமன் னியபுகழ்ச் சோழன
தென்பர் நகுசுடர்வாள்
வலமன் னியவெறி பத்தனுக்
கீந்ததொர் வண்புகழே.

தெளிவுரை : சிங்கள மன்னனைப் புறமுதுகிட்டு ஓடச் செய்த புகழ் சோழ மன்னர் பொன்னம்பல நாதனின் சிறந்த சிவனடியார். கரூர் என்னும் பதியில் அரசாண்டு வந்தார். இவரது பட்டத்து யானை பூக்கூடையைப் பிடுங்கி எறிந்ததற்காக எறிபத்த நாயனார் யானையையும் பாகரையும் வாளால் வெட்டிவிட்டார். இத் தவறுக்கு யானே பொறுப்பு என்னை வெட்டுங்கள் என்று எறிபத்தருக்கு இவர் தன் வாளைக் கொடுத்தார்.

நரசிங்க முனையரைய நாயனார்

1159. புகழும் படியெம் பரமே
தவர்க்குநற் பொன்னிடுவோன்
இகழும் படியோர் தவன்மட
வார்புனை கோலமெங்கும்
நிகழும் படிகண் டவனுக்
கிரட்டிபொன் இட்டவன்நீள்
திகழு முடிநர சிங்க
முனையர சன்திறமே.

தெளிவுரை : திருமுனைப்பாடி நாட்டில் நரசிங்க முனையரையர் என்பவர் ஆட்சி புரிந்து வந்தார். சுந்தரரை மகன்மை கொண்டு வளர்த்தவர். திருவாதிரைதோறும் சிவபெருமானுக்கு வழிபாடு செய்பவர்களுக்கு பொன்கொடுத்து அமுதளிப்பார். ஒருநாள் காமக்குறி மலர்ந்த ஓரடியார் வந்தார். அவரே இவரைப் பார்த்து ஒதுங்கினார். நீறு பூசியிருந்த அந்த தூர்த்தரை இவர் வணங்கி, இரட்டிப்புப் பொன் கொடுத்தனுப்பினார். இவ்வாறு தொண்டாற்றிச் சிவபெருமான் திருவடி எய்தினார்.

அதிபத்த நாயனார்

1160. திறமமர் மீன்படுக் கும்பொழு
தாங்கொரு மீன்சிவற்கென்
றுறவமர் மாகடற் கேவிடு
வோனொரு நாட்கனக
நிறமமர் மீன்பட நின்மலற்
கென்றுவிட் டோன்கமலம்
புறமமர் நாகை யதிபத்த
னாகிய பொய்யிலியே.

தெளிவுரை : நாகப்பட்டினத்தில் செம்படவர் குடியில் பிறந்தவர் அதிபத்தர். நாள்தோறும் தான் பிடிக்கும் முதல் மீனைப் பெருமானுக்காக என்று கடலில் விட்டுவிடுவார். ஒருநாள் உலகையே விலை மதிக்கத் தக்க நவமணிகளாலான மீனொன்று கிடைத்தது. அதையும் எம்பெருமானுக்கே விட்டார். இறைவன் திருவருளால் அதிபத்தர் உலக பந்தத்திலிருந்து விடுபட்டுச் சிவலோகம் அடைந்தார்.

கலிக்கம்ப நாயனார்

1161. பொய்யைக் கடிந்துநம் புண்ணியர்க்
காட்பட்டுத் தன்னடியான்
சைவத் திருவுரு வாய்வரத்
தானவன் தாள்கழுவ
வையத் தவர்முன்பு வெள்கிநீர்
வாரா விடமனைவி
கையைத் தடிந்தவன் பெண்ணா
கடத்துக் கலிக்கம்பனே.

தெளிவுரை : சோழ நாட்டில் திருப்பெண்ணாகடத்தில் வணிகர் குலத்தில் தோன்றியவர் கலிக்கம்பர். இறை வழிபாடு செய்வதோடு அவர் அடியார் பாதங்களை விளக்கி அமுதளித்து வந்தார். ஒருநாள் மாறுவேடத்தில் வந்த இறைவன் பாதங்களில் நீர் வார்க்க மறுத்த மனைவியின் கையை வெட்டிவிட்டார். இவரது அடியார் பக்தியை மெச்சிய இறைவன், மனைவியின் கையை வளரச் செய்தார். முடிவில் அடியார் இறைவன் திருவடிகளை அடைந்தார்.

கலிய நாயனார்

1162. கம்பக் கரிக்குஞ் சிலந்திக்கும்
நல்கிய கண்ணுதலோன்
உம்பர்க்கு நாதற் கொளிவிளக்
கேற்றற் குடலிலனாய்க்
கும்பத் தயிலம்விற் றுஞ்செக்
குழன்றுங்கொள் கூலியினால்
நம்பற் கெரித்த கலியொற்றி
மாநகர்ச் சக்கிரியே.

தெளிவுரை : திருவொற்றியூரில் வாணியர் குலத்தில் கலியர் அவதரித்தார். ஆலயத்திற்குத் திருவிளக்கு ஏற்றி வைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். வறுமை வந்துற்றது. கூலி வேலை செய்து அப்பணியை விடாது செய்துவந்தார். இறைவன் அவருக்குக் காட்சியளித்து சிவலோக பதவி கொடுத்தருளினார்.

சத்தி நாயனார்

1163. கிரிவில் லவர்தம் மடியரைத்
தன்முன்பு கீழ்மைசொன்ன
திருவில் லவரையந் நாவரி
வோன்திருந் தாரைவெல்லும்
வரிவில் லவன்வயல் செங்கழு
நீரின் மருவுதென்றல்
தெருவில் விரைமக ழுந்தென்
வரிஞ்சைத் திகழ்சத்தியே.

தெளிவுரை : சோழ நாட்டிலுள்ள வரிஞ்சையூரில் வேளாளர் குலத்தில் சத்தியார் வாழ்ந்து வந்தார். சிவனடியார்களை யாராவது இகழ்ந்து பேசினால் அவர்களது நாவைத் துண்டித்து விடுவார். முடிவில் எம் பெருமான் மலரடிகளை அடைந்தார்.

ஐயடிகள் காடவர்கோன் நாயனார்

1164. சத்தித் தடக்கைக் குமரன்நற்
றாதைதன் தானமெல்லாம்
முத்திப் பதமொரொர் வெண்பா
மொழிந்து முடியரசா
மத்திற்கு மும்மைநன் தாளரற்
காயயம் ஏற்றலென்னும்
பத்திக் கடல் ஐயடிகளா
கின்றநம் பல்லவனே.

தெளிவுரை : காஞ்சிபுரத்தில் பல்லவர் குலத்தில் தோன்றியவர். ஐயடிகள் காடவர்கோன் சிறந்த சிவனடியார். ஆட்சியைத் தம் மைந்தனிடம் ஒப்படைத்துவிட்டு ÷க்ஷத்திராடனம் செய்யக் கிளம்பினார். முதலில் சிதம்பரத்திற்கும் பின்னர் பல தலங்களுக்கும் சென்று வெண்பா பாடினார். முடிவில் பரமன் திருவடிகளை அடைந்தார்.

சுந்தரமூர்த்தி நாயனார்

1165. பல்லவை செங்கதி ரோனைப்
பறித்தவன் பாதம்புகழ்
சொல்லவன் தென்புக லூரரன்
பால்துய்ய செம்பொன்கொள்ள
வல்லவன் நாட்டியத் தான்குடி
மாணிக்க வண்ணனுக்கு
நல்லவன் தன்பதி நாவலூ
ராகின்ற நன்னகரே.

தெளிவுரை : சுந்தரர் சிவபெருமானது புகழைப் பாடுபவர். தென்புகலூர் இறைவனைப் பாடி, பொன் பெற்றவர். நாட்டியத்தான் குடியில் மாணிக்க வண்ணருக்கு நண்பர். திருநாவலூர் புகழனாகிய சுந்தரர் என்று நம்பியாண்டார் நம்பிகள் பாடி மகிழ்ந்தார்.

கணம்புல்ல நாயனார்

1166. நன்னக ராய விருக்குவே
ளூர்தனில் நல்குரவாய்ப்
பொன்னக ராயநல் தில்லை
புகுந்து புலீச்சரத்து
மன்னவ ராய வரற்குநற்
புல்லால் விளக்கெரித்தான்
கன்னவில் தோளெந்தை தந்தை
பிரானெம் கணம்புல்லனே.

தெளிவுரை : இருக்குவேளூரில் குறுநில மன்னராய் விளங்கியவர் கணம்புல்லர். தில்லையில் திருப்புலீச்சரத்தில் விளக்கெரித்து வந்தார். பொருள் தீர்ந்த பிறகு கணம் புல்லை அரிந்து வந்து அதை விற்று எண்ணெய் வாங்கினார். அவருடைய ஆழ்ந்த பக்தியை மெச்சி இறைவன் அவருக்குத் தரிசனம் தந்து என்றும் தம் உலகில் இருக்கும் பேற்றை அளித்தார்.

காரி நாயனார்

1167. புல்லன வாகா வகையுல
கத்துப் புணர்ந்தனவும்
சொல்லின வுந்நய மாக்கிச்
சுடர்பொற் குவடுதனி
வில்லனை வாழ்த்தி விளங்கும்
கயிலைப்புக் கானென்பரால்
கல்லன மாமதில் சூழ்கட
வூரினில் காரியையே.

தெளிவுரை : திருக்கடவூரில் அந்தணர் குலத்தில் பிறந்தவர் காரியார். சிறந்த சிவபக்தர்; தமிழில் நல்ல பாண்டியத்யம் உடையவர். அவர் மூவேந்தர்களையும் பாடிப் பெறும் பரிசில் பொருள்களைக் கொண்டு திருக்கோயில் பணிகள் செய்து வந்தார். இறைவன் காரி யாருக்குத் தம் கீழ் என்றும் இருந்து வரும் பாக்கியம் அளித்தார்.

நெடுமாற நாயனார்

1168. கார்த்தண் முகிற்கைக் கடற்காழி
யர்பெரு மாற்கெதிராய்
ஆர்த்த வமண ரழிந்தது
கண்டுமற் றாங்கவரைக்
கூர்த்த கழுவின் நுதிவைத்த
பஞ்சவ னென்றுரைக்கும்
வார்த்தை யதுபண்டு நெல்வேலி
யில்வென்ற மாறனுக்கே.

தெளிவுரை : நின்றசீர் நெடுமாறன் சமண சமயத்தைச் சார்ந்திருந்தான். அரசமா தேவி மங்கையர்க்கரசியார் சம்பந்தரை அழைத்து வந்தார். சம்பந்தர் சமணர்களை வாதில் வென்றார். அவர்கள் கழுவேறினர். மன்னன் சைவன் ஆனான். அவனை எதிர்த்து வந்த வடபுலத்து மன்னர்களை இறைவன் திருவருளால் திருநெல்வேலியில் வென்று வாகை சூடினான்.

வாயிலார் நாயனார்

1169. மாறா வருளரன் தன்னை
மனவா லயத்திருத்தி
ஆறா வறிவா மொளி விளக்
கேற்றி யகமலர்வாம்
வீறா மலரளித் தன்பெனும்
மெய்யமிர் தங்கொடுத்தான்
வீறார் மயிலையுள் வாயிலா
னென்று விளம்புவரே.

தெளிவுரை : மயிலாப்பூரில் வேளாளர் குலத்தில் வாயிலார் பிறந்தார். அவர்தம் உள்ளமாகிய பெருங்கோயிலில் இறைவனை இருத்தி வழிபட்டார். ஞானமாகிய ஒளி விளக்கால் உள்ளக்கோயிலை விளங்கச் செய்தார். ஆனந்தமாகிய திருமஞ்சனமிட்டு இறைவனை நீராட்டினார். அடியார்களிடம் கொண்டுள்ள அன்பை அமுதமாக நிவேதிப்பார். அவர் முடிவில் இறைவன் திருப்பாதங்களைச் சேர்ந்தார்.

முனையடுவார் நாயனார்

1170. என்று விளம்புவர் நீடூ
ரதிபன் முனையடுவோன்
என்று மமரு ளழிந்தவர்க்
காக்கூலி யேற்றெறிந்து
வென்று பெருஞ்செல்வ மெல்லாங்
கனகநன் மேருவென்னுங்
குன்று வளைத்த சிலையான்
தமர்க்குக் கொடுத்தனனே.

தெளிவுரை : இவர் பொன்னி நாட்டில் திருநீடுரில் வேளாளர் குடியில் பிறந்து வாழ்ந்துவந்தார். யுத்தத்தில் தோற்றவர்களுக்கு உதவி செய்து, அவர்கள் வெற்றி பெறச் செய்வார். அவ்வாறு கிடைக்கும் பொருளை அவர் எம்பெருமான் அடியார்களுக்குக் கொடுத்து உதவினார். இவ்வாறு பன்னாள் வாழ்ந்து இறைவன் திருவடிகளை அடைந்தார்.

சுந்தரமூர்த்தி நாயனார்

1171. கொடுத்தான் முதலைகொள் பிள்ளைக்
குயிரன்று புக்கொளியூர்த்
தொடுத்தான் மதுர கவியவி
நாசியை வேடர்சுற்றம்
படுத்தான் திருமுரு கன்பூண்
டியினில் பராபரத்தேன்
மடுத்தா னவனென்பர் வன்றொண்ட
னாகின்ற மாதவனே.

தெளிவுரை : சுந்தரர் சேரநாடு செல்லும்போது திருபுக்கொளியூரில் (அவிநாசியில்) முதலையுண்ட பாலகனுக்கு உயிர் கொடுத்தார். சேரமானிடம் பொருள் பெற்றுத் திரும்பும்போது வழியில் வேடுவர் அப்பொருள்களைச் சூறையாடினர். திருமுருகன் பூண்டியில் வந்து சுந்தரர் இறைவனிடம் முறையிட்டார். இறைவன் அப்பொருள்களைத் திருப்பித் தந்தார். இது இறைவனுடைய திருவிளையாடல். திருடர்களாக வந்தவர்கள் சிவ கணங்களே.

கழற்சிங்க நாயனார்

1172. மாதவத் தோர்தங்கள் வைப்பினுக்
காரூர் மணிக்குவைத்த
போதினைத் தான்மோந்த தேவிதன்
மூக்கை யரியப்பொற்கை
காதிவைத் தன்றோ வரிவதென்
றாங்கவள் கைதடிந்தான்
நாதமொய்த் தார்வண்டு கிண்டுபைங்
கோதைக் கழற்சிங்கனே.

தெளிவுரை : கழற்சிங்கர் என்னும் பல்லவ மன்னர் ஒரு சிவனடியார். தம் மனைவியோடு தலயாத்திரை செய்து கொண்டு திருவாரூர் வந்து சேர்ந்தார். செருத்துணை நாயனார் அங்கு பூமாலை தொடுத்துக் கொண்டிருந்தார். கீழே விழுந்த மலர் ஒன்றை அரசியார் எடுத்து மோந்து பார்த்தார். செருத்துணையார் கோபங் கொண்டு அரசியின் மூக்கை அரிந்துவிட்டார். அது போதாது என்று கழற்சிங்கர் மலர் எடுத்த அரசியின் கையை வெட்டி விட்டார். இறைவன் தோன்றி பக்தியைப் பாராட்டினார். அரசியின் மூக்கும் கையும் முன்போல் ஆயின.

இடங்கழி நாயனார்

1173. சிங்கத் துருவனைச் செற்றவன்
சிற்றம் பலமுகடு
கொங்கிற் கனக மணிந்தவா
தித்தன் குலமுதலோன்
திங்கட் சடையர் தமரதென்
செல்வ மெனப்பறைபோக்
கெங்கட் கிறைவ னிருக்குவே
ளூர்மன் இடங்கழியே.

தெளிவுரை :கோனாட்டில் கொடும்பாளூர் என்ற நகரத்தை இடங்கழியார் என்னும் குறுநில மன்னர் ஆண்டு வந்தார். சிவன் அடியார்களுக்கு உணவளிக்க நெல்லைத் திருடிய ஒருவரை மன்னித்து மேலும் அவன் வேண்டிய அளவு கொடுத்தனுப்பினார். நெடுங்காலம் இறைவன் தொண்டில் ஈடுபட்டு நாட்டில் சைவம் விளங்க ஆட்சி புரிந்தார்.

செருத்துணை நாயனார்

1174. கழிநீள் கடல்நஞ் சயின்றார்க்
கிருந்த கடிமலரை
மொழிநீள் புகழ்க்கழற் சிங்கன்தன்
தேவிமுன் மோத்தலுமே
எழில்நீள் குமிழ்மலர் மூக்கரிந்
தானென் றியம்புவரால்
செழுநீர் மருகல்நன் னாட்டமர்
தஞ்சைச் செருத்துணையே.

தெளிவுரை : தஞ்சை நகரில் வேளாண் குடியில் பிறந்தவர் செருத்துணையார். எம் பெருமானிடம் இடையறாத பக்தி கொண்டவர். திருவாரூர் கோயிலில் மலர்த் தொண்டு செய்து வந்தார். அப்போது அங்கு தரிசனத்திற்கு வந்த கழற்சிங்க நாயனாரின் மனைவி, மலரை மோந்து பார்த்ததற்காக அவருடைய மூக்கை இவர் அரிந்து விட்டார். இறைவன் காட்சியளித்து அருள் பாலித்தார்.

புகழ்த்துணை நாயனார்

1175. செருவிலி புத்தூர்ப் புகழ்த்துணை
வையம் சிறுவிலைத்தா
வுருவலி கெட்டுண வின்றி
யுமைகோனை மஞ்சனஞ்செய்
தருவதோர் போதுகை சோர்ந்து
கலசம் விழத்தரியா
தருவரை வில்லி யருளும்
நிதியது பெற்றனனே.

தெளிவுரை : செருவில்லிபுத்தூரில் சிவமறையோர் குலத்தில் பிறந்தவர் புகழ்த்துணையார். சிவனை ஆறு காலங்களிலும் அபிஷேகம் செய்து அர்ச்சனை செய்வார். பஞ்ச காலத்தால் உடல் மெலிந்தார். திருமஞ்சனம் செய்யும்போது குடம் இறைவன் திருமுடிமேல் விழுந்தது. அடியார் மயங்கி விழுந்தார். அன்றுமுதல் இறைவன் அவருக்குப் படிக்காசு அளித்து வந்தார். பிறவாப் பேரின்பம் எய்தினார் அடியார்.

கோட்புலி நாயனார்

1176. பெற்ற முயர்த்தோன் விரையாக்
கலிபிழைத் தோர்தமது
சுற்ற மறுக்குந் தொழில்திரு
நாட்டியத் தான்குடிக்கோன்
குற்ற மறுக்கும்நங் கோட்புலி
நாவற் குரிசிலருள்
பெற்ற வருட்கட் லென்றுல
கேத்தும் பெருந்தகையே.

தெளிவுரை : சோழ நாட்டில் நாட்டியத்தான்குடி என்ற ஊரில் வேளாளர் மரபில் கோட்புலியார் பிறந்தார். சிறந்த சிவனடியார். அவர் யுத்தத்திற்குச் செல்லுமுன் அடியார்களுக்காகச் சேர்த்து வைத்திருந்த நெல்லைச் சுற்றத்தார் செலவழித்துவிட்டார்கள். கோபம் கொண்டு அவர்களை இவர் கொன்றுவிட்டார். அனைவரும் நற்கதி பெற்றனர். திருவிரையாக்கலி பிழைத்தோர் திருவிரையாக்கலி என்று கூறிய ஆணையை மீறியவர்கள். நாவற்குரிசில் சுந்தர மூர்த்தி நாயனார். அவருடைய அருள் பெற்றவர் இந்த நாயனார்.

சுந்தரமூர்த்தி நாயனார்

1177. தகுமகட் பேசினோன் வீயவே
நூல்போன சங்கிலிபால்
புகுமணக் காதலி னாலொற்றி
யூருறை புண்ணியன்தன்
மிகுமலர்ப் பாதம் பணிந்தரு
ளாலிவ் வியனுலகம்
நகும்வழக் கேநன்மை யாப்புணர்ந்
தான்நாவ லூரரசே.

தெளிவுரை : சங்கிலியாருக்குத் திருமணம் பேசிய மணமகன் இறந்துவிடவே, சங்கிலியார் திருவொற்றியூர் இறைவனுக்கு மலர்க் கைங்கரியம் செய்துகொண்டு கன்னிமாடத்தில் இருந்து வந்தார். ஒற்றியூருக்கு வந்த சுந்தரர் சங்கிலியாரைக் கண்டார். இறையருளால் இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. இது நகுதற்குரிய வழக்கு என்கிறார் இப்பாடல் ஆசிரியர்.

பத்தராய்ப் பணிவார்கள்

1178. அரசினை யாரூ ரமரர்
பிரானை அடிபணிந்திட்
டுரைசெய்த வாய்தடு மாறி
யுரோம புளகம்வந்து
கரசர ணாதி யவயவங்
கம்பித்துக் கண்ணருவி
சொரிதரு மங்கத்தி னோர்பத்த
ரென்று தொகுத்தவரே.

தெளிவுரை : திருநாவுக்கரசரையும் சுந்தரரையும் வணங்கி உரை தடுமாறி, மயிர்க் கூச்செறிந்து கைகால்கள் யாவும் விதிர்விதிர்த்துக் கண்ணீர் சொரிந்து வழிபடுகிறவர்கள், ஒப்பற்ற பக்தர்கள் என்று சொல்லப்படுவர்.

பரமனையே பாடுவார்

1179. தொகுத்த வடமொழி தென்மொழி
யாதொன்று தோன்றியதே
மிகுத்த வியலிசை வல்ல
வகையில்விண் தோயுநெற்றி
வகுத்த மதில்தில்லை யம்பலத்
தான்மலர்ப் பாதங்கள்மேல்
உகுத்த மனத்தொடும் பாடவல்
லோரென்ப ருத்தமரே.

தெளிவுரை : பழைமையான வடமொழி (சமஸ்கிருதம்), தென்மொழி (தமிழ்) இவைகளுள் யாதாம் ஒன்றில் சிறந்த இயல், இசைகளில் வல்ல வகையில் ஆகாயம் வரை உயர்ந்துள்ள மதில்களை உடைய சிதம்பரத்தில் கோயில் கொண்டிருக்கும் நடராஜப் பெருமானின் பாதார விந்தங்கள் மேல் கனிந்த மனத்தோடு பாட வல்லோர் உத்தமர் என்று சொல்லப்படுவார்கள்.

சித்தத்தைச் சிவன்பாலே வைத்தார்

1180. உத்தமத் தானத் தறம்பொரு
ளின்ப மொடியெறிந்து
வித்தகத் தானத் தொருவழிக்
கொண்டு விளங்கச்சென்னி
மத்தம்வைத் தான்திருப் பாத
கமல மலரிணைக்கீழ்ச்
சித்தம்வைத் தாரென்பர் வீடுபே
றெய்திய செல்வர்களே.

தெளிவுரை : உத்தம தானத்தில் இருக்கும் அறம், பொருள், இன்பம் என்ற மூன்றையும் அறவே துறந்து, மேலான வீடு பேற்றிற்குரிய ஒப்பற்ற வழியை மேற்கொண்டு, ஊமத்த மலரைச் சூடும் சிவபெருமானது திருப்பாதத் தாமரை மலரின் கீழ் மனத்தை வைத்தவர்களை வீடு பேறு எய்திய செல்வர்கள் என்று சொல்லுவார்கள்.

திருவாரூர்ப் பிறந்தார்கள்

1181. செல்வம் திகழ்திரு வாரூர்
மதில்வட்டத் துட்பிறந்தார்
செல்வன் திருக்கணத் துள்ளவ
ரேயத னால்திகழச்
செல்வம் பெருகுதென் னாரூர்ப்
பிறந்தவர் சேவடியே
செல்வ நெறியுறு வார்க்கணித்
தாய செழுநெறியே.

தெளிவுரை : செல்வச் செழிப்புடைய திருவாரூர் மதில் வட்டத்துள் பிறந்தவர்கள், சிவபெருமானது திருக்கணத்தைச் சேர்ந்தவர்களே. அதனால் செல்வம் மென்மேலும் பெருகும் தென் ஆரூரில் பிறந்தவர்களின் செம்மையான பாதங்களே செல்வ நெறியில் செல்பவர்கள் கணித்த செழுநெறியாகும்.

முப்பொழுதும் திருமேனி தீண்டுவார்

1182. நெறிவார் சடையரைத் தீண்டிமுப்
போதும்நீ டாகமத்தின்
அறிவால் வணங்கியர்ச் சிப்பவர்
நம்மையு மாண்டமரர்க்
கிறையாய்முக் கண்ணுமெண் தோளும்
தரித்தீறில் செல்வத்தொடும்
உறைவார் சிவபெரு மாற்குறை
வாய வுலகினிலே.

தெளிவுரை : அடர்ந்த நீண்ட சடையினை உடைய சிவ பெருமானது உருவத்தைத் தொட்டு மூன்று வேளைகளிலும் பெரிய ஆகமத்தின் பயிற்சியால் வழிபாடு செய்து அர்ச்சிப்பவர், நம்மையும் ஆண்டு, தேவர்களுக்கு அதிபதியாய், மூன்று கண்களும் எட்டுத் தோள்களும் பெற்று, முடிவில் செல்வத்தோடும் சிவ பெருமானுடைய இருப்பிடமாகிய உலகில் வாழ்வார்கள்.

முழுநீறு பூசிய முனிவர்

1183. உலகு கலங்கினும் மூழி
திரியினு முள்ளொருகால்
விலகுத லில்லா விதியது
பெற்றநல வித்தகர்காண்
அலகில் பெருங்குணத் தாரூ
ரமர்ந்த வரனடிக்கீழ்
இலகுவெண் ணீறுதம் மேனிக்
கணியு மிறைவர்களே.

தெளிவுரை : இந்த உலகு கலங்கினாலும், ஊழி திரிந்தாலும், உள்ளம் ஒருகாலும் விலகாத விதியைப் பெற்ற நல்ல ஞானத்தைப் பெற்றவர், அலகில் எல்லா நலன்களையும் பெற்ற திருவாரூரில் எழுந்தருளியுள்ள தியாகேசப் பெருமானுடைய திருவடியின்கீழ் விளங்குகின்ற வெண்ணீறு தம் மேனிக்கு அணியும் இறைவர்களே.

அப்பாலும் அடிச்சார்ந்தார்

1184. வருக்க மடைத்துநன் னாவலூர்
மன்னவன் வண்டமிழால்
பெருக்கு மதுரத் தொகையிற்
பிறைசூடி பெய்கழற்கே
ஒருக்கு மனத்தொடப் பாலடிச்
சார்ந்தவ ரென்றுலகில்
தெரிக்கு மவர்சிவன் பல்கணத்
தோர்நஞ் செழுந்தவரே.

தெளிவுரை : சுந்தரமூர்த்தி சுவாமிகள் வளப்பம் பொருந்திய தமிழ் மொழியால் சிவபெருமானது பாதங்களில் தேவாரப் பாடல்களைப் பாடினார். அத்தகைய பொற்பாதங்களை இடைவிடாது சிந்திப்பவர்கள் உண்மைத் தொண்டர்கள் ஆவர்.

சுந்தரமூர்த்தி நாயனார்

1185. செழுநீர் வயல்முது குன்றினில்
செந்தமிழ் பாடிவெய்ய
மழுநீள் தடக்கைய னீந்தபொன்
னாங்குக்கொள் ளாதுவந்தப்
பொழில்நீ டருதிரு வாரூரில்
வாசியும் பொன்னுங்கொண்டோன்
கெழுநீள் புகழ்த்திரு வாரூர
னென்றுநாம் கேட்பதுவே.

தெளிவுரை : சுந்தரர் திருமுதுகுன்றத்துக்குச் சென்று (விருத்தாசலம்) பழமலைநாதர் அருளால் பன்னீராயிரம் பொன் பெற்றார். அதனை மணி முத்தாற்றிலிட்டு. அப்பால் திருவாரூர் சென்று, அங்குள்ள கமலாலயத்திலிருந்து அப்பொன்னை எடுத்துப் பரவையாருக்கு வழங்கினார்.

பூசலார் நாயனார்

1106. பதுமநற் போதன்ன பாதத்
தரற்கொரு கோயிலையான்
கதுமெனச் செய்குவ தென்றுகொலா
லாமென்று கண்துயிலா
ததுமனத் தேயெல்லி தோறும்
நினைந்தருள் பெற்றதென்பர்
புதுமணத் தென்றல் உலாநின்ற
வூர்தனிற் பூசலையே.

தெளிவுரை : திருநின்றவூரில் (தின்னனூரில்) அந்தணர் குலத்தில் பூசலார் பிறந்தார். வேத சாஸ்திரங்களை நன்கு கற்றறிந்தார். சிறந்த சிவபக்தர். அவ்வூரில் சிவ பெருமானுக்கு ஒரு கோயில் எழுப்ப எண்ணினார். போதிய நிதியில்லாமையால், இரவில் தூங்காது மனத்திலேயே சிந்தித்து அதைக் கட்டி முடித்தார். பலகாலம் வாழ்ந்து இறைவன் திருவடி நீழலை அடைந்தார்.

மங்கையர்க்கு அரசியார்

1187. பூச லயில்தென்ன னார்க்கன
லாகப் பொறமையினால்
வாச மலர்க்குழல் பாண்டிமா
தேவியாம் மானிகண்டீர்
தேசம் விளங்கத் தமிழா
கரர்க்கறி வித்தவரால்
நாசம் விளைத்தா ளருகந்
தருக்குத்தென் னாட்டகத்தே.

தெளிவுரை : சோழர் குலத்தில் பிறப்த மங்கையர்க்கு அரசியார் பாண்டிய மன்னன் நெடுமாறனை மணந்து, பாண்டிய நாட்டு அரசியானார். மன்னன் சமண மதத்தைச் சார்ந்திருந்தான். இவர் திருஞான சம்பந்தரை அழைத்து வரச் செய்தார். அவர் சமணர்களை வாதில் வென்று நாட்டில் சைவம் தழைக்கச் செய்தார். இறுதியில் அரசியார் கணவனோடு இறைவன் திருவடிகளில் சேர்ந்தார்.

நேச நாயனார்

1188. நாட்டமிட்ட டன்ரி வந்திப்ப
வெல்படை நல்கினர்தந்
தாட்டரிக் கப்பெற் றவனென்பர்
சைவத் தவரரையில்
கூட்டுமக் கப்படம் கோவணம்
நெய்து கொடுத்துநன்மை
ஈட்டுமக் காம்பீலிச் சாலிய
நேசனை இம்மையிலே.

தெளிவுரை : கர்நாடகத்திலுள்ள காம்பிலி நகரத்தில் சாலியர் குலத்தில் நேசர் என்னும் சிவனடியார் ஒருவர் இருந்தார். சோழ நாட்டுக்கு வந்து கைத்தறி நெசவு செய்து அடியார்களுக்கு உடை, உள்ளாடை, கோவணம் இவைகளைக் கொடுத்து உதவினார். இறுதியில் இறைவனடி சேர்ந்தார். கண்ணை வைத்து அருச்சித்து, சக்ராயுதத்தைப் பெற்றவர் திருமால்.

கோச்செங்கட் சோழ நாயனார்

1189. மைவைத்த கண்டன் நெறியன்றி
மற்றோர் நெறிகருதாத்
தெய்வக் குடிச்சோழன் முன்பு
சிலந்தியாய்ப் பந்தர்செய்து
சைவத் துருவெய்தி வந்து
தரணிநீ டாலயங்கள்
செய்வித்த வந்திருக் கோச்செங்க
ணானென்னுஞ் செம்பியனே.
 
தெளிவுரை : திருவானைக்கா கோயிலில் சிவ வழிபாட்டில் ஈடுபட்டிருந்த யானையும் சிலந்தியும் தம்முள் மாறு கொண்டு இரண்டும் இறந்தன. யானை சிவலோகத்தை அடைந்தது. சிலந்தி சோழ அரசனின் குமாரனாகத் திரும்பவும் இவ்வுலகில் பிறவி எடுத்தது. அவனே கோச்செங்கண் சோழன். யானைகள் ஏறாவண்ணம் கட்டுமலை அமைத்து அவற்றின்மீது எம் பெருமானுக்கு மாடக் கோயில்கள் அமைத்தான். முதலில் கட்டியது திருவானைக்கா.

1190. செம்பொ னணிந்துசிற் றம்பலத்
தைச்சிவ லோகமெய்தி
நம்பன் கழற்கீ ழிருந்தோன்
குலமுத லென்பர்நல்ல
வம்பு மலர்த்தில்லை யீசனைச்
சூழ மறைவளர்த்தான்
நிம்ப நறுந்தொங்கல் கோச்செங்க
ணானென்னும் நித்தனையே.

தெளிவுரை :  தந்தையைப் போன்று கோச்செங்கணானும் தில்லை நடராஜனிடம் அளவில்லாத பக்தி கொண்டு சிதம்பரம் சென்று இறைவனைத் தரிசித்தான். அவ்வூரில் இறைவன் தொண்டில் ஈடுபட்டு வரும் அந்தணர்களுக்கு மாளிகைகளை அமைத்துக் கொடுத்தான். இறுதியில் எம்பெருமான் திருவடிகளைச் சேர்ந்தான். இவன் பாண்டி நாட்டையும் ஆண்டமையால் நிம்ப நறுந்தொங்கலும் அணிந்தான்.

திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனார்

1191. தனையொப் பருமெருக் கத்தம்
பூலியூர்த் தகும்புகழோன்
நினையொப் பருந்திரு நீலகண்
டப்பெரும் பாணனைநீள்
சினையொப் பலர்பொழில் சண்பையர்
கோன்செந் தமிழொடிசை
புனையப் பரனருள் பெற்றவ
னென்பரிப் பூதலத்தே.

தெளிவுரை : நடுநாட்டில் திருஎருக்கத்தம் புலியூரில் பாணர் மரபில் அவதரித்தவர் திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனார். அவரும் அவர் மனைவியர் மதங்க சூளாமணியாரும் யாழிசையில் வல்லவர்கள். திருஞானசம்பந்தரை அடைந்து இறுதிவரை அவருடன் பேரிசைத் தொண்டு புரிந்து சோதியுள் கலந்தார்கள்.

சடைய நாயனார்

1192. தலம்விளங் குந்திரு நாவலூர்
தன்னில் சடையனென்னுங்
குலம்விளங் கும்புக ழோனை
யுரைப்பர் குவலயத்தில்
நலம்விளங் கும்படி நாம்விளங்
கும்படி நற்றவத்தின்
பலம்விளங் கும்படி யாரூ
ரனைமுன் பயந்தமையே.

தெளிவுரை : தொகை அடியார்களைப் பாடிய சுந்தரர், தன் பெற்றோர்களுக்கும் வணக்கம் தெரிவிக்கிறார். இப் பாடலில் தன் தந்தையாராகிய சடையனாரை வணங்குகிறார். சிறந்த திருநாவலூரிலுள்ள சடையன் என்பவருடைய குலம் விளங்க புகழ் அமைந்தவராக அவதரித்தவர் சுந்தரர். அவ்வாறு சிறப்புடையவரைப் பயந்தவர் சடையனார் ஆகும்.

இசைஞானியார்

1193. பயந்தாள் கறுவுடைச் செங்கண்வெள்
ளைப்பொள்ளல் நீள்பனைக்கைக்
கயந்தா னுகைத்தநற் காளையை
யென்றுங் கபாலங்கைக்கொண்
டயந்தான் புகுமர னாரூர்ப்
புனிதன் அரன்திருத்தாள்
நயந்தாள் தனதுள்ளத் தென்று
முரைப்பது ஞானியையே.

தெளிவுரை : கறுவுதலையுடைய, துளையுடைய துதிக்கையை உடைய, செங்கண்களையுடைய, யானையைச் செலுத்திய காளை போன்ற சுந்தரர் எப்போதும் கபாலத்தைக் கையில் ஏந்திய பிச்சை ஏற்கும் திருவாரூரில் கோயில் கொண்டிருக்கும் சிவ பெருமானை வணங்குபவர். அவர் எப்போதும் மனத்தில் நினைந்து தியானிப்பது தனது தாயாகிய இசைஞானியையே.

சுந்தரமூர்த்தி நாயனார்

1194. ஞானவா ரூரரைச் சேரரை
யல்லது நாமறியோம்
மானவ வாக்கை யொடும்புக்
கவரை வளரொளிப்பூண்
வானவ ராலும் மருவற்
கரிய வடகயிலைக்
கோனவன் கோயில் பெருந்தவத்
தோர்தங்கள் கூட்டத்திலே.

தெளிவுரை : சிவஞானம் பெற்ற சுந்தரரும் சேரமான் பெருமாள் நாயனாரும் மனித உடலோடு, தேவர்களாலும் அடைய முடியாத கயிலாயத்திற்குச் சென்று இறைவனைத் தரிசித்தனர். பெருந்தவத்தோர் கூடியிருக்கும் அந்த அவையில் இறைவன் அவர்களுக்கு அருள் பாலித்தார். இது ஓர் அருஞ் செயலாகும்.

1195. கூட்டமொன் பானொ டறுபத்து
மூன்று தனிப்பெயரா
ஈட்டும் பெருந்தவத்தோரெழு
பத்திரண் டாம்வினையை
வாட்டுந் தவத்திருத் தொண்டத்
தொகைபதி னொன்றின்வகைப்
பாட்டுந் திகழ்திரு நாவலூ
ராளி பணித்தனனே.

தெளிவுரை : தொகை அடியார்கள் ஒன்பதின்மர், தனி யடியார்கள் அறுபத்துமூவர் என்று பெருந்தவத்தோர் மொத்தம் எழுபத்திரண்டு பேராவர். இவர்களுடைய வரலாறுகளைப் பதினொரு பாடல்களைக் கொண்ட திருத்தொண்டத் தொகையாகப் பாடியவர், திருநாவலூர் பெருமானாகிய சுந்தரரே என்பதாம்.

திருத்தொண்டத் தொகைப் பதிகங்களின் முதற்குறிப்பு

1196. பணித்தநல் தொண்டத் தொகைமுதல்
தில்லை யிலைமலிந்த
அணித்திகழ் மும்மை திருநின்ற
வம்பறா வார்கொண்டசீர்
இணைத்தநல் பொய்யடி மைகறைக்
கண்டன் கடல்சூழ்ந்தபின்
மணித்திகழ் சொற்பத்தர் மன்னிய
சீர்மறை நாவனொடே.

தெளிவுரை : சுந்தரர் பாடிய திருத்தொண்டத் தொகையில் உள்ள பதினொரு பாடல்களின் முதற்குறிப்பு வருமாறு:

1. தில்லைவாழ், 2. இலைமலிந்த, 3. மும்மையால், 4. திருநின்ற, 5. வம்பறா, 6. வார்கொண்ட, 7. பொய்யடிமை, 8. கறைக்கண்டன், 9. கடல்சூழ்ந்த, 10. பத்தராய்ப், 11. மன்னியசீர்.

நூற் பயன்

1197. ஓடிடும் பஞ்சேந் திரிய
மொடுக்கியென் னூழ்வினைகள்
வாடிடும் வண்ணம்நின் றெத்தவம்
செய்தனன் வானினுள்ளோர்
சூடிடுஞ் சீர்த்திருப் பாதத்தர்
தொண்டத் தொகையினுள்ள
சேடர்தஞ் செல்வப் பெரும்புக
ழந்தாதி செப்பிடவே.

தெளிவுரை : ஐம்புலன்களால் நுகரப்படும் உலக இன்பங்களைக் குறைத்து என் முன்வினைத் துன்பங்கள் செயல்படாமல் செய்யும். திருத்தொண்டத் தொகையில் குறிப்பிடப்பட்ட அடியார்களின் சீர்பாதங்களைச் சூடச் செய்யும். அப்பெரியோர்களின் பெரும் புகழைச் செப்பினால் இவை அனைத்தும் சித்திக்கும் என்கிறார். இத் திருவந்தாதியை ஓதினால் இப் பலன்களைப் பெறலாம் என்பது பொருள்.

திருச்சிற்றம்பலம்

34. ஆளுடைய பிள்ளையார் திருவந்தாதி (நம்பியாண்டார் நம்பிகள் அருளிச் செய்தது)

சிவபெருமானை அல்லாமல் மற்றெவரையும் போற்றாத மாண்பமைந்த திருஞானசம்பந்தப் பெருமானுடைய திருவடிகளைப் பணிந்து போற்றும் அடியார்கள், இறைவனுடைய திருவடிகளை எளிதிற் பெறுவார்கள் எனவும், திருஞானசம்பந்தரிடத்தில் அளவிலாப் பேரன்பு உடையவர் சிறுத்தொண்ட நாயனார் ஆதலின், அவரைப் போற்றுவோர் திருஞான சம்பந்தருடைய திருவடித்துணையை எளிதில் பெறுவர் எனவும்,

திருமாலும் நான்முகனும் தேடிக் காண்டற்கரிய சிவபிரானைத் தம்முடைய கண்களால் கண்டு தம் தந்தையார்க்கும் காட்டியருளிய சிவஞானச் செல்வராகிய ஆளுடைய பிள்ளையாரைச் செந்தமிழ்ப் பாடல்களால் போற்றிப் பரவுவதற்குத் தாம் எவ்வளவோ தவம் செய்திருத்தல் வேண்டுமெனவும்,

திருஞான சம்பந்தரை அன்றிப் பட்டத்து யானை மீது உலா வரும் பேரரசராயினும் பிறர் எவரையும் தாம் பாடுவதில்லை எனவும் இவ் அந்தாதியில் கூறுகின்றார். இவ் அந்தாதியில் திருஞான சம்பந்தர்க்குக் கவுணியர் தீபன், பரசமயக் கோளரி, அருகாணி, தமிழாகரன், தமிழ்விரகன், சைவ சிகாமணி முதலிய சிறப்புப் பெயர்கள் வழங்கப் பெறுகின்றன.

திருச்சிற்றம்பலம்

கட்டளைக் கலித்துறை

1198. பார்மண் டலத்தினிற் பன்னிரு
பேரொடு மன்னிநின்ற
நீர்மண் டலப்படப் பைப்பிர
மாபுரம் நீறணிந்த
கார்மண் டலக்கண்டத் தெண்தடந்
தோளான் கருணைபெற்ற
தார்மண் டலமணி சம்பந்தன்
மேவிய தண்பதியே.

தெளிவுரை : நிலவுலகில் பன்னிரண்டு பெயர்களோடு நிலை பெற்ற நீர் நிரம்பிய தோட்டமாக விளங்குவது பிரமாபுரம் ஆகிய சீகாழி. திருநீறு அணிந்த, கருமை பொருந்திய இடம் ஆகிய கழுத்தையும் எட்டுப் பெரிய தோள்களையும் உடைய சிவபெருமானது அருளைப் பெற்ற, தார் அணிந்த மணியாகிய திருஞானசம்பந்தப் பெருமான் பொருந்திய குளிர்ந்த தலமாகும்.

சம்பந்தர் பிறந்த தலம் சீகாழி என்கிறார்.

1199. பதிகப் பெருவழி காட்டிப்
பருப்பதக் கோன்பயந்த
மதியத் திருநுதல் பங்க
னருள்பெற வைத்தஎங்கள்
நிதியைப் பிரமா புரநகர்
மன்னனை யென்னுடைய
கதியைக் கருதவல் லோரம
ராவதி காவலரே.

தெளிவுரை : பதிகம் பாடிப் பணியும் அரிய நெறி காட்டிட இமாசல மன்னன் பயந்த பிறைத்திங்களைப் போன்ற அழகிய நெற்றியை உடைய உமையை இடப்பாகத்தில் கொண்டவன் அருள்பெற வைத்த எங்கள் செல்வத்தை, பிரமாபுர மன்னனை, என்னுடைய புகலிடத்தைக் கருத வல்லோர் இந்திரன் நகரத்தைக் காப்பவர் ஆவர்.

1200.காப்பயில் காழிக் கவுணியர்
தீபற்கென் காரணமா
மாப்பழி வாரா வகையிருப்
பேன்என்ன, மாரனென்னே!
பூப்பயில் வாளிக ளஞ்சுமென்
நெஞ்சுரங் கப்புகுந்த;
வேப்பயில் வார்சிலை கால்வளை
யாநிற்கும் மீண்டிரவே.

தெளிவுரை : தலைவி கூற்று: சோலைகள் சூழ்ந்த சீகாழி கவுணியர் தீபற்கு என் பொருட்டு, பெரிய பழிவாரா வகை இருப்பேன் என்ன, மன்மதன் பூங்கணைகளைக் கண்டு அஞ்சும் என் நெஞ்சு குலையப் புகுந்த அம்பு பொருந்திய நீண்ட வில் இரவு முழுதும் வளைந்து நிற்கும்.

1201. இரவும் பகலும்நின் பாதத்
தலரென் வழிமுழுதும்
பரவும் பரிசே யருளுகண்
டாயிந்தப் பாரகத்தே
விரவும் பரமத கோளரி
யே!குட வெள்வளைகள்
தரளஞ் சொரியுங் கடல்புடை
சூழ்ந்த தராய்மன்னனே.

தெளிவுரை : இரவும் பகலும் உன் பாதமாகிய மலர் என் வழி முழுதும் பரவும் பரிசே அருளு கண்டாய். இந்த உலகில் விரவும் பிற சமயங்களை அழித்து ஒழிப்பவனே ! வளைந்த வெள்ளிய சங்குகளையும் முத்துக்களையும் சொரியும் கடல் பக்கங்கள் சூழ்ந்த பூந்தராய் என்னும் சீகாழி மன்னனே !

1202. மன்னிய மோகச் சுவையொளி
யூறோசை நாற்றமென்றிப்
பன்னிய ஐந்தின் பதங்கடந்
தோர்க்குந் தொடர்வரிய
பொன்னியல் பாடகம் கிங்கிணிப்
பாத நிழல்புகுவோர்
துன்னிய காஅமர் சண்பையர்
நாதற்குத் தொண்டர்களே.

தெளிவுரை : நிலையற்ற மோகச் சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்று கூறப்பட்ட ஐந்து புலன்களின் பதங்கடந்தோர்க்குத் தொடர்வரிய பொன்னாலாகிய பாடகக் கிங்கிணி திருவடிப்பேற்றை அடைவோர் இருக்கின்ற சோலைகள் சூழ்ந்த சண்பையர் நாதனுக்குத் தொண்டர்கள்.

இவருடைய தொண்டர்கள் முத்திப் பேற்றை அடைவர் என்க.

1203. தொண்டினஞ் சூழச் சுரிகுழ
லார்தம் மனந்தொடர,
வண்டினஞ் சூழ வருமிவன்
போலும், மயிலுகுத்த
கண்டினஞ் சூழ்ந்த வளைபிரம்
போக்கழு வாவுடலம்
விண்டினஞ் சூழக் கழுவின
ஆக்கிய வித்தகனே.

தெளிவுரை : அடியார்கள் சூழ, மாதர்களின் மனம் தொடர, வண்டுக் கூட்டங்கள் சூழ வருகின்றவன் இவன் போலும். மயிற் பீலியோடு பிரம்பை ஏந்
திய சமணர்கள் குளிக்காத உடம்பை உடையவர்கள் இறந்துபடுமாறு கழுநிரைகளில் ஏறுமாறு செய்த வித்தகனே.

1204. வித்தகம் பேசி,நம் வேணுத்
தலைவனை வாள்நிகர்த்து
முத்தகங் காட்டும் முறுவல்நல்
லார்தம் மனம்அணைய,
உய்த்தகம் போந்திருந் துள்ளவும்
இல்லா தனவுமுறு
பொத்தகம் போலும்! முதுமுலைப்
பாணன் புணர்க்கின்றதே.

தெளிவுரை : இது தலைவி கூற்று. பாணனை இழித்துரைப்பது. ஞானம் பேசி நம் சீகாழித் தலைவராகிய திருஞானசம்பந்தர் வாளைப் போன்று முத்துக்களைத் தம்மிடத்தே காட்டுகின்ற முறுவல் செய்யும் மாதர்கள், தம் மனமார உய்த்து அகம் போந்து இருந்து உள்ளளவும் இல்லாதனவும் உறுபுத்தகம்போலும் வயது முதிர்ந்த இந்தப் புலையர் குலப் பாணன் புனைந்துரைக்கின்றான்.

1205. புணர்ந்தநன் மேகச் சிறுநுண்
துளியின் சிறகொதுக்கி
உணர்ந்தனர் போல விருந்தனை
யால்உல கம்பரசும்
குணந்திகழ் ஞானசம் பந்தன்
கொடிமதில் கொச்சையின்வாய்
மணந்தவர் போயின ரோசொல்லு,
வாழி! மடக்குருகே.

தெளிவுரை : இப்பாடல் காமம் மிக்க கழிபடர் கிளவி என்னும் துறை. மடக்குருகே, சொல்வாயாக என முடிக்க, கலந்த நன்மேகச் சிறுநுண் துளியில் சிறகை ஒதுக்கி, அறிந்தவர்கள்போல இருந்தனை. பெரியோர்கள் போற்றும் குணக்குன்றாக விளங்கும் திருஞான சம்பந்தன் வாழும் கொடி மதில் சீகாழியின் வாய் என்னைக் கூடியவர் சென்று விட்டாரா? குருகே ! சொல்வாயாக. தலைவனைப் பிரிந்த தலைவி மிகவும் வருந்துதல்.

1206. குருந்தலர் முல்லையங் கோவல
ரேற்றின் கொலைமருப்பால்
அருந்திற லாகத் துழுதசெஞ்
சேற்றரு காசனிதன்
பெருந்திற மாமதில் சண்பை
நகரன்ன பேரமைத்தோள்
திருந்திழை ஆர்வம்
. . . . . . . . . முரசே.

தெளிவுரை : குறுந்தின் மலர்கள் மலர்கின்ற முல்லை நிலத்துக் கோவலர் காளையின் கொல்லுகின்ற கொம்புகளை, வீரமிக்க மார்பில் செஞ்சேறு தருகின்ற திருஞான சம்பந்தரின் பெருந்திறலுடைய பெரிய மதில்களை உடைய சீகாழி நகரைப் போல, பெரிய மூங்கில் போன்ற தோள்களையும் திருந்தியஆபரணங்களையும் உடைய மாதர்களின் ஆர்வம் ...... முரசாகும். (ஈற்றில் சில சீர்கள் விடுபட்டுள்ளன.)

1207. முரசம் கரைய,முன் தோரணம்
நீட, முழுநிதியின்
பரிசங் கொணர்வா னமைகின்
றனர்பலர்; பார்த்தினிநீ
அரிசங் கணைதலென் னாமுன்
கருது, அரு காசனிதன்
சுரிசங் கணைவயல் தந்த
நகரன்ன தூமொழிக்கே.

தெளிவுரை : தோழி தலைவனுக்கு நொதுமலர் வரவு உணர்த்தல். முரசங்கள் ஒலிக்க, வீட்டின் முன்னால் தோரணங்கள் அசைய, பெருஞ்செல்வமாகிய பரிசம் கொண்டு வருவதை முன்னிட்டுப் பலர் நிற்கின்றனர். பார்த்தும் இனி நீ இங்கு வராதே என்று சொல்வதற்கு முன் திருஞானசம்பந்தரின் வளைவுகளை உடைய சங்குகள் நிறைந்த வயல்களை உடைய சீகாழியைப் போன்ற அழகுடைய தலைவியை விரும்பி வராதே. விரைவில் மணந்து கொள் என்பதாம்.

1208. மொழிவது, சைவ சிகாமணி
மூரித் தடவரைத்தோள்
தொழுவது, மற்றவன் தூமலர்ப்
பாதங்கள்; தாமங்கமழ்ந்
தெழுவது, கூந்தல் பூந்தா
மரையினி யாதுகொலோ!
மொழிவது, சேரி முப்புதை
மாதர் முறுவலித்தே.

தெளிவுரை : சொல்வது யாவும் சைவ சிகாமணியாகிய ஞான சம்பந்தரின் பெருமை பொருந்திய விசாலமான மலைபோன்ற தோள்களைப் பற்றித்தான்; தொழுவது அவனுடைய தூமலர் பாதங்களைத்தான். தாமம் கமழ்ந்து எழுவது ஞானசம்பந்தரது மாலையைத்தான். இனி சொல்ல என்ன இருக்கிறது. இவ்வாறு சொல்வது முறுவலித்து சேரி முரிப்பதை மாதர்கள்தாம்.

1209. வழிகெழு குண்டர்க்கு வைகைக்
கரையன்று வான்கொடுத்த
கலிகெழு திண்தோள் கவுணியர்
தீபன், கடலுடுத்த
ஒலிதரு நீர்வை யகத்தை
யுறையிட்ட தொத்துதிரு
மலிதரு வார்பனி யாம்மட
மாதினை வாட்டுவதே.

தெளிவுரை : இது தோழி பருவங்கண்டு இரங்குதல். வலிமை பொருந்திய சமணர்க்கு வைகைக்கரை அன்று விண்ணகம் ஏறச் செய்தது. மகிழ்ச்சி பொருந்திய வலிய தோள்களை உடைய கவுணியர் குலத்துக்கு விளக்குப் போன்ற திருஞானசம்பந்தர் கடலால் சூழப்பட்ட ஒலிமிக்க இந்த உலகத்தை உறையிட்டதைப்போல் உதிரும் மலிதருவார் பனிமடமாதினை வாட்டுகிறது என்பதாம். பனிக்காலத்தில் தலைவி தனித்திருந்து துன்பப்படுவதைக் கூறுகின்றாள் தோளி.

1210. வாட்டுவர் தத்தந் துயரை;வன்
கேழலின் பின்புசென்ற
வேட்டுவர் கோலத்து வேதத்
தலைவனை மெல்விரலால்,
தோட்டியல் காத னிவனென்று
தாதைக்குச் சூழ்விசும்பில்
காட்டிய கன்றின் கழல்திற
மானவை கற்றவரே.

தெளிவுரை : வலிய பன்றியின் பின்னால் வேட்டுவர் கோலத்தோடு சென்ற வேதத் தலைவனாகிய சிவ பெருமானைத் தனது மெல்லிய விரலால் தோடுடைய செவியன் இவன் என்று தன் தந்தைக்கு ஆகாயத்தில் காட்டிய ஞானசம்பந்தரின் பாதப் பெருமையைக் கற்றவர் தத்தம் துயரை வாட்டுவர் என இயைக்க. அர்ச்சுனன் தவம் செய்தபோது நிகழ்ந்த காட்சியைச் சுட்டுகின்றார்.

1211. அவர்சென் றணுகுவர்; மீள்வதிங்கு
அன்னை யருகர்தம்மைத்
தவர்கின்ற தண்டமிழ்ச் சைவ
சிகாமணி சண்பையென்னப்
பவர்கின்ற நீள்கொடிக் கோபுரம்
பல்கதி ரோன்பரியைக்
கவர்கின்ற சூலத் தொடுநின்று
தோன்றுங் கடிநகரே.

தெளிவுரை : (துறை) கண்டோர் செவிலிக்கு உணர்த்துதல். சமணர்களை வாதில் வென்ற தண்டமிழ்ச் சைவ சிகாமணியாகிய ஞானசம்பந்தரின் சீகாழியைப் போன்ற உயர்ந்த கொடிகள் கட்டப்பட்ட கோபுரங்களின் சூரியனுடைய குதிரையைக் கவர்கின்ற சூலத்தொடு நின்று தோன்றும் கடி நகரைத் தலைவனும் தலைவியும் சென்று சேர்ந்திருப்பர். ஆதலால் அன்னையே! நீ மீள்வாயாக என்றனர். இங்கு நகர் என்றது தலைவனது நகர்.

1212. நகரங் கெடப்பண்டு திண்தேர்
மிசைநின்று, நான்மறைகள்
பகரங் கழலவ னைப்பதி
னாறா யிரம்பதிகம்
மகரங் கிளர்கடல் வையம்
துயர்கெட வாய்மொழிந்த
நிகரங் கிலிகலிக் காழிப்
பிரானென்பர், நீணிலத்தே.

தெளிவுரை : திரிபுரங்கள் அழிய முன்பு வலிய தேர்மீது நின்று, நான்கு வேதங்களும் துதிக்கும் சிவபெருமானைப் பதினாறாயிரம் பதிகம், மகர மீன்கள் வாழ்கின்ற கடலால் சூழப்பட்ட  இந்த உலகத்தின் துன்பம் நீங்க, திருவாய் மலர்ந்தருளியவர் சீகாழிப் பெருமானாகிய ஞானசம்பந்தர் என்று நீண்ட உலகத்தார் கூறுவர். அழிந்தவை போக எஞ்சியுள்ளவை இப்போது வெளிவந்துள்ளன.

1213. நிலம் ஏறியமருப் பின்திரு
மாலும், நிலம்படைத்த
குலம் ஏறியமலர்க் கோகனை
தத்தய னுங்கொழிக்குஞ்
சலம் ஏறியமுடி தாள்கண்
டிலர்,தந்தை காணவன்று
நலம் ஏறியபுகழ்ச் சம்பந்தன்
காட்டிய நாதனையே.

தெளிவுரை : தந்தையாகிய சிவபாத இருதயர் காணுமாறு அன்று பெரும்புகழ் பெற்ற ஞானசம்பந்தர் காட்டிய சிவபெருமானை, வராக அவதாரத்தில் பூமியைத் தனது கொம்புகளால் எடுத்த திருமாலும், இவ்வுலகைப் படைத்த மலர்களில் சிறந்து விளங்குகிற தாமரையில் வாசம் செய்கின்ற பிரமதேவனும் நீர்ப் பெருக்கினையுடைய கங்கையைக் கொண்ட அந்த இறைவனது முடியையும் பாதங்களையும் காண முடியவில்லை. திருமால் சிவனது பாதத்தையும், பிரமன் அவனது முடியையும் காணாமல் திரும்பினர் என்பது புராணம்.

1214. நாதன் நனிபள்ளி சூழ்நகர்
கானக மாக்கிஃதே
போதின் மலிவய லாக்கிய
கோனமர் பொற்புகலி
மேதை நெடுங்கடல் வாருங்
கயலோ? விலைக்குளது
காதி னளவும் மிளிர்கய
லோ?சொல்லு; காரிகையே.

தெளிவுரை : இது தலைவன் கூற்று: காதளவோடிய கலக பாதகக் கண்களை உடையவளே ! சிவபெருமான் கோயில் கொண்டுள்ள நனிப்பள்ளி என்னும் தலத்தைச் சுற்றியுள்ள நகரைக் கானகமாக்கிப் பிறகு அதையே மலர்களையுடைய வயலாக்கிய ஞானசம்பந்தப் பெருமானின் சீர்காழிக் கடலில் பிடிக்கும் மீன் விலைக்கு வந்தது என்றான்.

1215. கைம்மையி னால்நின் கழல்பர
வாது,கண் டார்க்(கு)இவனோர்
வன்மைய னேயென்னும் வண்ணம்
நடித்து, விழுப்பொருளோ(டு)
இம்மையில் யானெய்து மின்பங்
கருதித் திரிதருமத்
தன்மையி னேற்கும் அருளுதி
யோ!சொல்லு சம்பந்தனே.

தெளிவுரை : இழி தகைமையினால் உன்னுடைய திருவடிகளை வணங்காமல், கண்டார்க்கு இவனோர் வன்மையனே என்னும் வண்ணம் நடித்து, மேலான பொருளோடு இப்பிறப்பில் யான் அடையும் இன்பத்தைப் பெரிதெனக் கருதித் திரிகின்ற அத் தன்மையுடைய எனக்கு அருளுவாயா? சம்பந்தனே சொல்வாயாக.

1216. பந்தார் அணிவிரற் பங்கயக்
கொங்கைப் பவளச்செவ்வாய்க்
கொந்தார் நறுங்குழல் கோமள
வல்லியைக் கூறருஞ்சீர்
நந்தா விளக்கினைக் கண்டது
நானெப்பொழுது முன்னுஞ்
சந்தார் அகலத் தருகா
சனிதன் தடவரையே.

தெளிவுரை : தலைவன் பாங்கனுக்குத் தலைவியின் இயல்பும் இடமும் உரைத்தல்: பந்துகளைப் பிடிக்கின்ற அழகிய கைவிரல், தாமரை போன்ற கொங்கை, பவளம் போன்ற செவ்வாய், கொந்தார் நறுங்குழலையுடைய அழகிய வல்லி போன்றவளை, நந்தா விளக்கினை நான் இதற்கு முன்பு கண்டது ஞானசம்பந்தரது தடவரையில்தான் என்றவாறு.

1217. வரைகொண்ட மாமதில் சண்பைத்
தலைவனை வாழ்த்தலர்போல்
நிரைகொண்டு வானோர் கடைந்ததின்
நஞ்ச நிகழக்கொலாம்,
நுரைகொண்டு மெய்ப்பரத் துள்ளஞ்
சுழலநொந் தோரிரவும்
திரைகொண் டலமரு மிவ்வகல்
ஞாலஞ் செறிகடலே.

தெளிவுரை : தலைவி கூற்று: மலையைப்போல் உயர்ந்து விளங்கும் மதில்களையுடைய சீகாழியின் தலைவனை வாழ்த்தாதவர்போல, வரிசையாக நின்று திருப்பாற் கடலைக் கடைந்தபோது ஆலகால விஷம் வெளிப்பட்டது போன்றும், நுரைதள்ளி உடம்பு வியர்த்து உள்ளம் சுழல வருந்தி ஓர் இரவு முழுவதும் அலைகளை வீசும் கடல் போலவும் இவள் வருந்துகின்றாள் என்பதாம்.

1218. கடலன்ன பொய்மைகள் செய்யினும்
வெய்ய கடுநரகத்
திடநம னேவுதற் கெவ்விடத்
தானிருஞ் செந்தமிழால்
திடமன்னு மாமதில் சண்பைத்
தலைவன்செந் தாமரையின்
வடமன்னு நீள்முடி யானடிப்
போதவை வாழ்த்தினமே.

தெளிவுரை : கடல் அளவு பொய்யான காரியங்களைச் செய்தாலும், வெய்ய கடு நரகத்தில் நமன் ஏவுதற்கு எவ்விடத்தான் இருஞ் செந்தமிழால் திடமான நிலைபெற்ற மதிலை உடைய சீகாழித் தலைவனாகிய ஞான சம்பந்தன் செந்தாமரையின் வட மன்னு நீள் முடியான் திருவடிகளைத் தினமும் வாழ்த்தினோம்.

1219. வாழ்த்துவ தெம்பர மேயாகும்,
அந்தத்து வையமுந்நீர்
ஆழ்த்திய காலத்து மாழா
தது,வரன் சேவடியே
ஏத்திய ஞானசம் பந்தற்
கிடமிசைத் தும்பிகொம்பர்க்
காத்திகழ் கேதகம், போதக
மீனுங் கழுமலமே.

தெளிவுரை : வாழ்த்துவது எம் பாரமாகும். ஊழிக் காலத்தில் கடல் ஆழ்த்தியபோது மயங்காமல் இருந்தது சிவபெருமானது பாதங்களே. சதமென்று நம்பித் துதித்த ஞானசம்பந்தருக்கு இடம் இசைத்து தும்பிக் கொம்பர் சோலைகளில் தாழைப் போது அகம் ஈனும் சீகாழியே.

ஊழிக் காலத்தில் சீகாழி எஞ்சி நின்றது என்பதாம்.

1220. மலர்பயில் வாட்கண்ணி, கேள்;கண்ணி
நீண்முடி வண்கமலப்
பலர்மயில் கீர்த்திக் கவுணியர்
தீபன் பகைவரென்னத்
தலைபயில் பூம்புனங் கொய்திடு
மே?கணி யார்புலம்ப
அலர்பயி லாமுன் பறித்தன
மாகில் அரும்பினையே.

தெளிவுரை : தோழி தலைவிக்கு உரைத்தல்: மலரைப் போலவும் வாளைப் போலவும் விளங்குகின்ற கண்களை உடையவளே ! நான் சொல்வதைக் கேள். கண்ணி நீண்முடி வண்கமலம்; பலர் பயில் கீர்த்தியை உடைய கவுணியர் குல விளக்காகிய ஞான சம்பந்தரின் பகைவர் என்னும்படி நாம் காவல் செய்யும் தினைபுனங் கொய்திடுவோம். வேங்கை மரம் ஊரார் பழிச்சொல் பூப்பதற்குமுன் அரும்பினைப் பறித்துவிட்டது என்றவாறு.

1221. அரும்பின அன்பில்லை; யர்ச்சனை
யில்லை; யரன்நெறியே
விரும்பின மாந்தர்க்கு மெய்ப்பணி
செய்கிலன்; பொய்க்கமைந்த
இரும்பன வுள்ளத்தி னேற்கெங்ங
னேவந்து நேர்பட்டதால்,
கரும்பன நீள்வயல் சூழ்காழி
நாதன் கழலடியே.

தெளிவுரை : அரும்பின அன்பு இல்லை. துதி செய்வதும் இல்லை. சிவனடியார்களுக்குத் தொண்டு செய்வதும் இல்லை. பொய்யோடு கூடிய இரும்பைப் போன்ற உள்ளத்தை உடையவனாகிய எனக்கு எப்படி வந்து வாய்த்தது, கரும்பு விளையும் நீண்ட வயல்கள் சூழ்ந்த சீகாழி நாதனாகிய ஞானசம்பந்தரது திருவடி?

அவரது திருவடி எப்படி எனக்கு நேர்பட்டது என வியக்கின்றார்.

1222. அடியால் அலர்மிதித் தாலரத்
தம்பில் கமிர்தமின்(று)இக்
கொடியா னொடும்பின் நடந்ததெவ்
வா(று)அலர் கோகனதக்
கடியார் நறுங்கண்ணி ஞானசம்
பந்தன் கருதலர்போல்
வெடியா விடுவெம் பரல்சுறு
நாறு வியன்கரத்தே.

தெளிவுரை : செவிலி இரங்குதல்: அடியால் அலர் மிதித்தால் குருதி வெளிப்படுகின்ற அமிர்தத்தை ஒத்த தலைவி இன்று இக் கொடியானொடும் பின் நடந்தது எவ்வாறு? மலர்ந்த தாமரை மலர் மணம் வீசுகின்ற தலைமாலையை உடைய ஞானசம்பந்தப் பெருமானது பகைவர்கள் சேர்கின்ற கொடிய பரற்கற்கள் நிரம்பிய தீய்ந்த நாற்றம் வீசுகின்ற இந்த பாலை வழியே எப்படிச் சென்றாளோ என்று செவிலி வருந்துகிறாள்.

1223. சுரபுரத் தார்தம் துயருக்
கிரங்கிச் சுரர்கள்தங்கள்
பரபுரத் தார்தந் துயர்கண்
டருளும் பரமன்மன்னும்
அரபுரத் தானடி எய்துவ
னென்ப, அவனடிசேர்
சிரபுரத் தானடி யாரடி
யேனென்றும் திண்ணனவே.

தெளிவுரை : தேவர்களுடைய துயரத்துக்கு இரங்கி, தேவர்களுக்குப் பகைவர்களாகிய திரிபுராதிகள் செய்யும் துன்பங்களைப் போக்கி அருளும் சிவபெருமானது திருவடிகளை அடைவேன் என்பது, அவனடி சேர்ந்த திருஞானசம்பந்தரது அடியார்க்கு அடியேன் என்னும் உறுதி உடையேன் ஆவேன்.

1224. திண்ணென வார்சென்ற நாட்டிடை
யில்லைகொல்! தீந்தமிழோர்
கண்ணென வோங்கும் கவுணியர்
தீபன்கை போல்பொழிந்து
விண்ணின வாய்முல்லை மெல்லரும்
பீன,மற் றியாம்மெலிய
எண்ணின நாள்வழு வா(து)இரைத்(து)
ஓடி எழுமுகிலே.

தெளிவுரை : இது தலைவி கூற்று: மனவுறுதியுடைய நம் தலைவர் சென்ற நாட்டில் தீந்தமிழோர் கண்ணென ஓங்கும் கவுணியர் குல விளக்காகிய திருஞான சம்பந்தர் கைபோல் பொழிந்து, முல்லை மெல்லரும்பு தோன்றவும், யாம் மெலியவும் எண்ணின நாள் தப்பாமல் ஒன்று சேர்ந்து முகிலே ஆகாயத்தில் எழுவாயாக என்று கூட்டுக. கார் காலம் வந்தால் தலைவர் திரும்பி வருவார் என்பதாம்.

1225. எழுவாள் மதியால் வெதுப்புண்(டு)
அலமந் தெழுந்துவிம்மித்
தொழுவாள், தனக்கின் றருளுங்
கொலாந்,தொழு நீரவைகைக்
குழுவா யெதிர்ந்த உறிகைப்
பறிதலைக் குண்டர்தங்கள்
கழுவா வுடலம் கழுவின
வாக்கிய கற்பகமே.

தெளிவுரை : தோழி இரங்குதல்: விண்ணகத் திங்களால் வேதனையடைந்து வருந்தி எழுந்து தேம்பியழுது வணங்குவாள். இன்று எனக்கு உன் அருள் கிடைக்குமோ! வைகைக் கரையில் ஒன்றுகூடி எதிர்த்த, கையில் உறியையும், பறித்த தலையையும் உடைய சமணர்களுடைய கழுவாத உடம்புகள் கழுவில் ஏறும்படி செய்த கற்பகம் போன்ற சம்பந்தரே என்று தலைவி ஏங்குகிறாள், என்க.

1226. கற்பா நறவம் மணிகொழித்
துந்தும் அலைச்சிலம்பா!
நற்பா மொழியெழில் ஞானசம்
பந்தன் புறவமன்ன
விற்பா நுதலிதன் மென்முலை
யின்னிளம் செவ்விகண்டிட்(டு)
இற்பா விடும்வண்ண மெண்ணுகின்
றாளம்ம! வெம்மனையே.

தெளிவுரை : தலைவியை இற்செறிப்பர் என்று தோழி தலைவனுக்குக் கூறுதல். கற்பா நறவ மணி கொழித்து உந்து மலை நாட்டுத் தலைவனே ! தேவாரப் பாடல்களை அருளிய எழில் ஞானசம்பந்தருடைய புறவம் என்னும் பெயருடைய சீகாழியைப் போன்ற வில் போன்ற நெற்றியை உடைய தலைவியின் இளம் முலைகளைப் பார்த்து, நற்றாய் இற்செறிக்குமாறு எண்ணுகின்றாள்.

1227. எம்மனை யா,எந்தை யாயென்னை
யாண்டென் துயர்தவிர்த்த
செம்மலர் நீள்முடி ஞானசம்
பந்தன் புறவமன்னீர்!
வெம்முனை வேலென்ன வென்னமிளிர்ந்து
வெளுத்(து) அரியேன்(று)
உம்மன வோவல்ல வோவந்தெ
னுள்ளத் தொளிர்வனவே.

தெளிவுரை : தலைவன் கூற்று: தலைவியின் கண்ணைப் புகழ்ந்தவாறு. எம் தாய் போன்றவனே ! எம் தந்தை போன்றவனே ! என் துயர் தவிர்த்த செம்மலர் நீள்முடியாய் என்று போற்றப்படும் ஞானசம்பந்தரது புறவம் என்னும் சீகாழியைப் போன்றவர்களே ! போரில் வேல் போன்று மிளிர்ந்து, வெளுத்து, செவ்வரி படர்ந்து உம் மனவோ அல்லவோ வந்து என் உள்ளத்து ஒளிர்கின்றன எனத் தலைவியின் கண்களைத் தலைவன் புகழ்கின்றான்.

1228. ஒளிறு மணிப்பணி நாட்டும்,
உலகத்தும் உம்பருள்ளும்
வெளிறு படச்சில நிற்பதுண்
டே?மிண்டி மீனுகளும்
அளறு பயற்சண்பை நாத
னமுதப் பதிகமென்னுங்
களிறு விடப்புகு மேல்தொண்டர்
பாடும் கவிதைகளே.

தெளிவுரை : ஒளி விடுகின்ற மணிகளையுடைய நாகர் உலகிலும் பூவுலகிலும், தேவலோகத்திலும் நாணத்தால் வெளுக்க சில நிற்பதுண்டே, நெருங்கி மீன் உகளும் சேறு நிரம்பிய சண்பை என்னும் சீகாழி நாதனாகிய ஞானசம்பந்தர் அமுதம் போன்ற பதிகக் களிறுவிட தொண்டர் பாடும் கவிதைகள்மேல் புகும்.

1229. கவிக்குத் தகுவன, கண்ணுக்
கினியன, கேட்கில்இன்பம்
செவிக்குத் தருவன, சிந்தைக்
குரியன பைந்தரளம்
நவிக்கண் சிறுமியர் முற்றில்
முகந்துதம் சிற்றில்தொறும்
குவிக்கத் திரைபரக் குங்கொச்சை
நாதன் குரைகழலே.

தெளிவுரை : (கொச்சை நாதன் குரை கழல்கள்) கவிக்குத் தகுவன; கண்ணுக்கு இனியன; கேட்கில் இன்பம் செவிக்குத் தகுவன; சிந்தைக்கு உரியன; பசுமையான முத்துக்களை மான்போன்ற கண்களை உடைய சிறுமியர் முற்றில் முகந்து தம் சிற்றில் தொறும் குவிக்க, அலை வீசுகின்ற சீகாழி நாதன் குரைகழல்கள் உதவும் என்க.

1230. கழல்கின்ற ஐங்கணை, யந்தியும்,
அன்றிலுங் கால்பரப்பிட்(டு)
அழல்கின்ற தென்றலும் வந்திங்
கடர்ப்ப,வன் றாயிழைக்காச்
சுழல்கின்ற நஞ்சந் தணித்தவன்
தன்னைத் தொடர்ந்துபின்போய்
உழல்கின்ற நெஞ்சமிங் கென்னோ,
இனிஇன் றுறுகின்றதே.

தெளிவுரை : இது தலைவி கூற்று: காமன் தன் ஐங்கணைகளையும் செலுத்துதற்குரிய மாலை நேரமும், அன்றில் பறவையும், கால் பரப்பி அழல்கின்ற தென்றல் காற்றும், இங்கு வந்து துன்புறுத்த, அன்று மணக்க விரும்பியவனைப் பாம்பு தீண்ட, அருகில் நின்று அழுது கொண்டிருந்த பெண்ணின் துயரை நீக்க விஷத்தை இறங்கச் செய்த ஞானசம்பந்தனைத் தொடர்ந்து போய் உழல்கின்ற நெஞ்சம், இங்கு எதற்காக என்னை வருத்துகின்றது?

1231. உறுகின்ற வன்பினோ(டு) ஒத்திய
தாளமு முள்ளுருகிப்
பெறுகின்ற வின்பும், பிறைநுதல்
முண்டமுங் கண்டவரைத்
தெறுகின்ற வாறென்ன செய்தவ
மோ!வந்தென் சிந்தையுள்ளே
துறுகின்ற பாதன் கழுமலம்
போலுந் துடியிடைக்கே.

தெளிவுரை : இது தலைவன் கூற்று: பொருந்திய அன்போடு ஒத்திய தாளமும் உள்ளுருகிப் பெறுகின்ற இன்பமும் பிறைச் சந்திரனைப் போன்ற நெற்றியும் கண்டவரை வருத்துகின்றவாறு என்னே! நான் செய்த தவத்தின் பயனோ வந்து என் சிந்தையுள்ளே பொருந்தி இருக்கின்ற பாதனுடைய (சம்பந்தர்) கழுமலம் (சீகாழி) போன்றும், உடுக்கை போன்றும் உள்ள இடையினை உடைய தலைவிக்கு.

1232. இடையு மெழுதா தொழியலும்
ஆம்;இன வண்டுகளின்
புடையு மெழுதினும் பூங்குழ
லொக்குமப் பொன்னனையாள்
நடையும் நகையுந் தமிழா
கரன்தன் புகலிநற்றேன்
அடையும் மொழியு மெழுதிடின்,
சால அதிசயமே.

தெளிவுரை : தோழி எழுதரிதென்ன ஏந்தலை விலக்குதல். நடை, நகை, மொழி என்பவற்றை எழுத இயலாது என்றபடி. இடையும் எழுதாது ஒழியலுமாம். இன வண்டுகளின் புடையும் எழுதிலும் பூங்குழல் ஒக்கும். அப் பொன் அனையாள் நடையும் நகையும் தமிழாகரன் ஆகிய ஞானசம்பந்தரின் சீகாழியின் நற்றேன் அடையும் மொழியும் எழுதினால் மிகவும் அதிசயமாகும்.

1233. மேனாட் டமரர் தொழவிருப்
பாரும், வினைப்பயன்கள்
தாநாட் டருநர கிற்றளர்
வாருந் தமிழர்தங்கள்
கோனாட்(டு) அருகர் குழாம்வென்ற
கொச்சையர் கோன்கமலப்
பூநாட்டு அடிபணிந் தாருமல்
லாத புலையருமே.

தெளிவுரை : பணிந்தார் அமரர் தொழ இருப்பார். புலையர் தளர்வர் என்றபடி. தமிழர் தங்கள் கோனாகிய பாண்டியனை நாடி இருந்த அருகர் குழாத்தை வென்ற கொச்சையர் (சீகாழி) கோனாகிய ஞானசம்பந்தரின் பாதங்களைப் பணிந்தவர், அமரர் தொழ இருப்பர். அவ்வாறு பணியாதவர் புலையர். அவர்கள் அரு நரகில் வீழ்ந்து தளர்வர்.

1234. புலையடித் தொண்டனைப் பூசுர
னாக்கிப் பொருகயற்கண்
மலைமடப் பாவைக்கு மாநட
மாடும் மணியையென்தன்
தலையிடைப் பாதனைக் கற்றாங்
குரைத்தசம் பந்தனென்னா,
முலையிடைப் பொன்கொண்டு, சங்கிழந்
தாளென்தன் மொய்குழலே.

தெளிவுரை : இது செவிலி கூற்று: திருநாளைப் போவார் நாயனார் சரிதம் கூறப்படுகிறது. நந்தனாரை அந்தணனாக்கி, உமாதேவியாருக்காக திருநடனம் செய்கின்ற இறைவனைப் பாடிய ஞானசம்பந்தனை நினைந்து முலையிடை பசலை பூத்து, கைவளைகளை இழந்தாள் என் மொய்குழலாள்.

1235. குழலியல் இன்கவி ஞானசம்
பந்தன் குரைகழல்போல்
கழலியல் பாதம் பணிந்தே
னுனையுங் கதிரவனே!
தழலியல் வெம்மை தணித்தருள்
நீ;தணி யாதவெம்மை
அழலியல் கான்நடந் தாள்வினை
யேன்பெற்ற வாரணங்கே.

தெளிவுரை : இது நற்றாய் சுரம் தணிவித்தல் என்னும் துறை. குழலைப் போன்ற இனிமையை உடைய கவிகளைப் பாடிய ஞானசம்பந்தரது கழலைப் போல், கதிரவனே ! உன் பாதங்களையும் பணிகின்றேன். தீப் போன்ற உன் வெம்மையைத் தணித்தருள்வாயாக. என் மகள் இந்த வெப்பம் நிறைந்த பாலை வழியே நடந்து சென்றாள்.

1236. அணங்கமர் யாழ்முரித்(து) ஆண்பனை
பெண்பனை யாக்கி,அமண்
கணங்கழு வேற்றிக் கடுவிடந்
தீர்த்துக் கதவடைத்துப்
பிணங்கலை நீரெதி ரோடஞ்
செலுத்தின, வெண்பிறையோ(டு)
இணங்கிய மாடச் சிரபுரத்
தான்தன் இருந்தமிழே.

தெளிவுரை : திருஞானசம்பந்தரது தேவாரப் பாடல்கள் மாதங்கி என்னும் தெய்வம் அமர் யாழ் முரித்து, ஆண் பனையைப் பெண் பனையாக்கி சமணர்களைக் கழுவேற்றி, கொடிய விஷத்தைத் தீர்த்து, திருமறைக் காட்டில் கதவை மூடி, பிணங்கு அலைநீர் எதிர் ஓடம் செலுத்தின பிறையோடு இணங்கிய மாடங்களை உடைய சீகாழி, ஞானசம்பந்தரது பாடல்கள் இந்த அற்புதங்களைச் செய்தன.

1237. இருந்தண் புகலி,கோ லக்கா,
வெழிலா வடுதுறை,சீர்
பொருந்தும் அரத்துறை போனகம்,
தாளம்,நன் பொன், சிவிகை
அருந்திட ஒற்ற,முத் தீச்செய
வேற வரனளித்த
பெருந்தகை சீரினை யெம்பர
மோ!நின்று பேசுவதே.

தெளிவுரை : ஞானசம்பந்தருக்குப் புகலியில் போனகத்தை அருந்திடவும், திருவோலக்காவில் தாளத்தை ஒத்தவும், திருவாவடுதுறையில் பொன்னை வேள்வி செய்யவும், திருநெல்வாயில் அரத்துறையில் சிவிகையை ஏறவும் சிவபெருமான் அளித்தார்.

மூன்று அடுக்கு நிரல் நிறைப் பொருள்களை இவ்வாறு பொருத்த வேண்டும். இத்தகைய பெருஞ் சிறப்பை என்னால் புகழ்ந்துரைக்க முடியுமோ என்கிறார்.

1238. பேசுந் தகையதன் றேயின்று
மன்றும் தமிழ்விரகன்
தேசம் முழுதும் மழைமறந்(து)
ஊண்கெடச் செந்தழற்கை
ஈசன் திருவரு ளாலெழில்
வீழி மிழலையின்வாய்க்
காசின் மழைபொழிந் தானென்றிஞ்
ஞாலம் கவின்பெறவே.

தெளிவுரை : இப் பாடலில் திருஞானசம்பந்தர் திருவீழி மிழலையில் பொன் காசு பெற்றமை குறிப்பிடப்பட்டது. சொல்ல முடியாத அளவு திருஞானசம்பந்தர் தேசம் முழுவதும் மழை பெய்யாமல் பஞ்சம் ஏற்பட்டு உண்ண உணவில்லாமல் வாடியபோது, தீயைக் கையிலேந்திய சிவபெருமான் திருவருளால் திருவீழி மிழலையில் காசு மழை பொழிந்து இஞ்ஞாலம் கவின் பெறச் செய்தார்.

1239. பெறுவது நிச்சயம் அஞ்சல்;நெஞ்
சேபிர மாபுரத்து
மறுவறு பொற்கழல் ஞானசம்
பந்தனை வாழ்த்துதலால்,
வெறியுறு கொன்றை மறியுறு
செங்கை விடையெடுத்த
பொறியுறு பொற்கொடி யெம்பெரு
மானவர் பொன்னுலகே.

தெளிவுரை : ஞானசம்பந்தனை வாழ்த்துவதால் பொன்னுலகு பெறுவது நிச்சயம் என்று கூட்டுக.

நெஞ்சமே ! அஞ்சாதே ! பிரமாபுரத்து (சீகாழி) மறுவது பொற்கழல் ஞானசம்பந்தரை வாழ்த்துவதால், மணம் பொருந்திய கொன்றை மாலையையும், கையில் மான் கன்றையும், விடைக் கொடியையும் உடைய சிவ பெருமானது பொன்னுலகைப் பெறுவது நிச்சயம் என்க.

1240. பொன்னார் மதில்சூழ் புகலிக்
கரசை, யருகர்தங்கள்
தென்னாட் டரணட்ட சிங்கத்
தினை,யெஞ் சிவனிவனென்(று)
அந்நாள் குதலைத் திருவாய்
மொழிக ளருளிச்செய்த
என்னானை யைப்பணி வார்க்கில்லை,
காண்க யமாலயமே.

தெளிவுரை : அழகிய மதில் சூழ்ந்த புகலிக்கு (சீகாழி) அரசை, சமணர்களது தென்னாட்டு மதிலை அழித்த சிங்கத்தினை, சிவன் இவன் என்று அந்நாள் குதலைத் திருவாய் மொழிகள் அருளிச் செய்த என்னானைப் பணிவார்க்கு, இயமன் திருக்கோயில் இல்லை. மரணமிலாப் பெருவாழ்வு பெறுவர் என்பதாம்.

1241. மாலையொப் பாகும் பிறைமுன்பு
நின்று, மணிகுறுக்கி
வேலையைப் பாடணைத்(து) ஆங்கெழில்
மன்மதன் வில்குனித்த
கோலையெப் போதும் பிடிப்பன்
வடுப்படு கொக்கினஞ்சூழ்
சோலையைக் காழித் தலைவன்
மலரின்று சூடிடினே.

தெளிவுரை : வடுவுண்டாகும் மாமரக் கூட்டம் சூழ்ந்த சோலைகளை உடைய சீகாழித் தலைவனாகிய ஞானசம்பந்தரது மலரை இன்று சூடிடின், மாலைக் காலத்தில் தோன்றும் பிறைச் சந்திரன் முன்பு நின்று மணி குறுக்கி, கடல் ஒலியைக் கேட்டு ஆங்கு எழில் மன்மதன் வளைத்த வில்லில் அம்பை எப்போதும் பிடிப்பன். காதல் வயப்பட்டு வருந்துவாள் என்பதாம்.

1242. சூடுநற் றார்த்தமி ழாகரன்
தன்பொற் சுடர்வரைத்தோள்
கூடுதற்(கு) ஏசற்ற கொம்பினை
நீயுங் கொடும்பகைநின்(று)
ஆடுதற் கேயத்த னைக்குனை
யே,நின்னை யாடரவம்
வாடிடக் காரும் மறுவும்
படுகின்ற வாண்மதியே.

தெளிவுரை : சூடுநல் தார்த்தமிழாகரனாகிய ஞானசம்பந்தர், தன்னுடைய அழகிய மலை போன்ற தோளைக் கூடுதற்கு ஏங்கிப்போன பெண்ணை நீயும் கொடுமைப் படுத்தி நின்று ஆடுகின்றாய். உன்னை ஆடு அரவம் வாடிட மேகமும் மறுவும் படுகின்ற வாண்மதியே ! இது உனக்குத் தகுமோ? இதைச் சந்திரோபாலம்பனம் என்பர்.

1243. மதிக்க தகுநுதல் மாதொடும்
எங்கள் மலையில்வைகித்
துதிக்கத் தகுசண்பை நாதன்
சுருதி கடந்துழவோர்
மிதிக்கக் கமலம் முகிழ்த்தண்
தேனுண்டு, மிண்டிவரால்
குதிக்கக் குருகிரி யுங்கொச்சை
நாடு குறுகுமினே.

தெளிவுரை : தலைவனைத் தோழி விருந்துண்டு செல்க எனக் கூறுதல். போற்றக்கூடிய நெற்றியை உடைய தலைவியோடும் எங்கள் மலையில் தங்கி துதிக்கத்தகும் ஞானசம்பந்தரது சுருதி கடந்து உழவோர் மிதிக்கக் கமலம் முகிழ்த்த தண் தேன் உண்டு, நெருங்கி வரால் குதிக்க, பறவைக் கூட்டங்கள் அஞ்சியோடும் சீகாழி நாட்டை அடையுங்கள்.

1244. குறுமனம் உள்கல வாத்தமி
ழாகரன் கொச்சையன்ன
நறுமலர் மென்குழ லாயஞ்ச
லெம்மூர் நகுமதிசென்(று)
உறுமனை யொண்சுவ ரோவியக்
கிள்ளைக்கு நும்பதியிற்
சிறுமிகள் சென்றிருந்(து) அங்கையை
நீட்டுவர்; சேயிழையே.

தெளிவுரை : தலைவன் தன் இடம் அணித்து என்றல்.

சேயிழையே ! குறுமன முள் கலவாத் தமிழாகரனாகிய ஞானசம்பந்தரது சீகாழியைப் போன்ற நறுமலர் மென்குழலாய் ! அஞ்சாதே. எம்மூர் அருகில்தான் உள்ளது. எங்கள் வீட்டின் ஒண் சுவர் ஓவியத்தில் எழுதப்பட்ட கிளிக்கு, உங்கள் ஊர்ச் சிறுமிகள் சென்றிருந்து அங்கையை நீட்டுவர்.

1245. இழைவள ராகத்து ஞான
சம்பந்த னிருஞ்சுருதிக்
கழைவளர் குன்று கடத்தலுங்
காண்பீர் கடைசியர்,நீள்
முழைவளர் நண்டு படத்தடஞ்
சாலிமுத் துக்கிளைக்கும்
மழைவளர் நீள்குடு மிப்பொழில்
சூழ்ந்த வளவளலே.

தெளிவுரை : இது கண்டோர் கூற்று: பூணூல் தங்கிய மார்பை உடைய ஞானசம்பந்தரது பெரிய தமிழ் வேதம் போல் மூங்கில் உயர்ந்து வளர்ந்துள்ள குன்றைக் கடந்ததும் வயலில் வேலை செய்யும் பெண்களைக் கண்டு நீண்ட வளைகளில் வாழும் நண்டுகள் ஓடியதால் ஆடிய நெல்பயிர் முத்துக்களை உதிர்க்கும் மேகம் படிகின்ற சோலைகள் சூழ்ந்த வள வயலைக் காண்பீர்கள்.

1246. வயலார் மருகல் பதிதன்னில்,
வாளர வாற்கடியுண்(டு)
அயலா விழுந்த அவனுக்
கிரங்கி யறிவழிந்த
கயலார் கருங்கண்ணி தன்துயர்
தீர்த்த கருணைவெள்ளப்
புயலார் தருகையி னைனென்னத்
தோன்றிடும் புண்ணியமே.

தெளிவுரை : வயல் சூழ்ந்த திருமருகல் என்னும் ஊரில், பாம்பினால் கடியுண்டு பக்கத்தில் விழுந்தவனுக்கு இரங்கி மூர்ச்சையுற்ற மீனைப் போன்ற கரிய கண்களை உடையவளது துன்பத்தைத் தீர்த்த கருணை வெள்ள புயலார் தரு கையினான் ஆகிய ஞானசம்பந்தர் என்று சொல்லத் தோன்றிடும் புண்ணியமே.

1247. புண்ணிய நாடு புகுவதற்
காகக் புலனடக்கி,
எண்ணிய செய்தொழில் நிற்ப(து)எல்
லாருமின் றியானெனக்கு
நண்ணிய செய்தொழில் ஞானசம்
பந்தனை நந்தமர்நீர்க்
கண்ணியன் மாடக் கழுமலத்
தானைக் கருதுவதே.

தெளிவுரை : புண்ணிய நாடாகிய முத்தியில் புக எல்லாரும் புலன் அடக்குதல் ஆகியன செய்வர். யானோ ஞான சம்பந்தனைக் கருதுவதே செய்வன் என்பது கருத்து. தேவருலகு (வீடு பேற்றிற்குரிய இடம்) புகுவதற்காக ஐம்புலன்களையும் அடக்கி, எண்ணிய செய்தொழில் நிற்பது எல்லாரும் இன்றி யான் எனக்கு நண்ணிய செய்தொழில் ஞானசம்பந்தனைக் கண்ணில் நீர் பெருகுமாறு வழிபடும் உயர்ந்த மாடங்களை உடைய சீகாழிப் பெருமானைக் கருதுவதுதான் என்க.

1248. கருதத் தவவருள் ஈந்தருள்
ஞானசம் பந்தன்சண்பை
இரதக் கிளிமொழி மாதே!
கலங்கல் இவருடலம்
பொருதக் கழுநிரை யாக்குவன்;
நுந்தமர் போர்ப்படையேல்
மருதச் சினையில் பொதும்பரு
ளேறி மறைகுவனே.

தெளிவுரை : இடைச் சுரத்துப் படை கண்டு தலைவன் கூறுதல்.

கருதத் தவ அருள் ஈந்தருள் ஞானசம்பந்தரது சீகாழியில், சுவையுள்ள கிளிப்பேச்சு மாதே ! கலங்காதே. இவர்களுடைய உடம்பை அழிப்பேன். உன்னுடைய அண்ணன்மார் படையாக இருந்தால், மருத மரக்கிளைகள் நெருங்கிய சோலையில் ஏறி மறைந்து கொள்வேன். உன் சுற்றத்தார் துன்பப்படக் கூடாதல்லவா?

1249. மறைமுழங் குங்குழ லார்கலி
காட்ட, வயற்கடைஞர்
பறைமுழங் கும்புக லித்தமி
ழாகரன் பற்றலர்போல
துறைமுழங் குங்கரி சீறி,
மடங்கள் சுடர்ப்பளிங்கின்
அறைமுழங் கும்வழி நீவரிற்
சால வரும்பழியே.

தெளிவுரை : தோழி தலைவனை இரவு வரல் விலக்கல்.

தமிழ் வேதம் முழங்கும் குழல் போன்ற கலி காட்ட வயலில் வேலை செய்யும் கடைஞர் பறை முழங்குகின்ற சீகாழித் தமிழாகரனாகிய திருஞான சம்பந்தரின் பகைவர் போல, நீ வரும் வழியில் முழங்குகின்ற ஆண் யானை சீறி சிங்கமானது பளிங்குப் பாறையினுள் முழங்கும் தன்மையது. நீ வருவது மிகவும் பெரும் பழிக்கு உரியது. ஆகவே, நீ இரவில் வரவேண்டா என்பதாம்.

1250. பழிக்கே தகுகின்றது இன்றுஇப்
பிறைபல் கதிர்விழுந்த
வழிக்கே திகழ்தரு செக்கரைக்
கொச்சை வயவரென்னும்
மொழிக்கே விரும்பி முளரிக்
கலமரு மோவியர்தம்
கிழிக்கே தருமுரு வத்திவள்
வாடிடக் கீள்கின்றதே.

தெளிவுரை : பிறை கண்டு கலங்கிய தலைவியின் நிலையைத் தோழி கூறுதல்.

பழிக்கே தகுகின்ற தின்றிப் பிறையானது பல்கதிர் விழுந்த வழிக்கே திகழ்தரு செவ்வானத்தை சீகாழி வீரராகிய ஞானசம்பந்தர் என்னும் மொழிக்கே விரும்பி, அவருடைய தாமரை மலர் மாலையைப் பெறுதற்கு இவள் மனம் சுழலும். சித்திரக்காரர் துணிப் படத்துக்குத் தரும் உருவத்திவள் வாடிட (பிறை) அறைத் துண்டமாகியது.

1251. கீளரிக் குன்றத் தரவ
முமிழ்ந்த கிளர்மணியின்
வாளரிக் கும்வைகை மாண்டன
ரென்பர் வயற்புகலித்
தாளரிக் கும்அரி யானருள்
பெற்ற பரசமய
கோளரிக் குந்நிக ராத்தமிழ்
நாட்டுள்ள குண்டர்களே.

தெளிவுரை : கீள் அரிக்குன்றத்து அரவம் உமிழ்ந்த விளங்குகின்ற ஒளியை உடைய மணியின் ஒளியையும் அரித்துச் செல்லும் வைகைக் கரையில் சமணரகள் மாண்டனர் என்று சொல்லும் வயல்களை உடைய சீகாழியின் அரிய தாளுடைய சிவபெருமானது அருள் பெற்ற பரசமயக் கோளரியாகிய ஞானசம்பந்தருக்குச் சமணர்கள் நிகராவரோ? ஆகார் என்றபடி.

1252. குண்டகழ் சூழ்தரு கொச்சைத்
தலைவன்றன் குன்றகஞ்சேர்
வண்டக மென்மலர் வல்லியன்
னீர்!வரி விற்புருவக்
கண்டக வாளி படப்புடை
வீழ்செங் கலங்கலொடும்
புண்தகக் கேழல் புகுந்ததுண்
டோ?நுங்கள் பூம்புனத்தே.

தெளிவுரை : இது பன்றி வினாதல் என்னும் துறை.

ஆழமுள்ள அகழி சூழ்ந்துள்ள சீகாழித் தலைவனாகிய ஞானசம்பந்தரது குன்றகம் சேர் வண்டுகள் மொய்க்கின்ற மென்மலர் வல்லியாகிய மன்மதன் வில்லைப் போன்ற மாதர்களே ! வில் போன்ற புருவத்தை உடைய முள்வாளிப் படப்புடை வீழ்கின்ற இரத்தத்தோடும் புண்ணை உடைய பன்றி இங்கு வந்ததுண்டோ ? உங்கள் பூம்புனத்தே வந்ததுண்டோ என்று தலைவன்  வினவினான்.

1253. புனத்தெழு கைம்மதக் குன்றம
தாயங்கொர் புன்கலையாய்,
வனத்தெழு சந்தனப் பைந்தழை
யாய்,வந்து வந்தடியேன்
மனத்தெழு பொற்கழல் ஞானசம்
பந்தன்வண் கொஞ்சையன்னாள்
கனத்தெழு கொங்கைக ளாயல்கு
லாய்த்திவர் கட்டுரையே.

தெளிவுரை : பாங்கி தலைவனை நகுதல்: புனத்தெழு யானைக் கூட்டத்துள் ஒரு சிறுமான், வனத்தெழு சந்தனப் பைந்தழையாய் வந்து அடியேன் மனத்தெழு பொற்கழல் ஞானசம்பந்தன் வண் கொச்சை (சீகாழி) யன்னாள் கனத்தெழு. கொங்கைகளாய் அல்குலாயிற்று இவர் கட்டுரை.

1254. கட்டது வேகொண்டு கள்ளுண்டு,
நுங்கைக ளாற்துணங்கை
இட்டது வேயன்றி, யெட்டனைத்
தானிவ ளுள்ளுறுநோய்
விட்டது வே?யன்றி வெங்குரு
நாதன்றன் பங்கயத்தின்
மட்டவிழ் தார்கொண்டு சூட்டுமின்,
பேதை மகிழ்வுறவே.

தெளிவுரை : தோழி அறத்தொடு நிற்றல்: (உள்ளத்தைச் சொல்லிவிடுதல்)

கட்டதுவே கண்டு கள்ளுண்டு நுங்கைகளாற் பசலை பூத்துவிட்டது. அதன்றியும் எள்ளளவும் இவள் கொண்டுள்ள காதல் நோய் விட்டதுவேயன்றி சீகாழி நாதனாகிய ஞானசம்பந்தரது தாமரையின் தேன் பொருந்திய மலர்மாலையை இவள் மகிழ்வதற்காகச் சூட்டுங்கள். அப்போதுதான் இவள் தெளிவாள் என்றபடி.

1255. உறவும், பொருளுமொண் போகமுங்
கல்வியுங் கல்வியுற்ற
துறவும், துறவிப் பயனு
மெனக்குச் சுழிந்தபுனல்
புறவும், பொழிலும் பொழில்சூழ்
பொதும்புந் ததும்பும்வண்டின்
நறவும், பொழிலெழிற் காழியர்
கோன்திரு நாமங்களே.

தெளிவுரை : உறவும் பொருளும் ஒண்போகமும் கல்வியும் கல்வியுற்ற துறவும் துறவிப்பயனும் எனக்குச் சுழிந்த புனல் முல்லை நிலமும் சோலையும் சூழ்ந்த பொதும்பும் ததும்பும் வண்டும் தேன் பொருந்திய பொழில் சூழ்ந்த சீகாழிக் கோனாகிய ஞானசம்பந்தரின் திருநாமங்களே.

1256. நாமுகந் தேத்திய ஞானசம்
பந்தனை நண்ணலர்போல்
ஏமுக வெஞ்சரஞ் சிந்திவல்
இஞ்சி யிடிபடுக்கத்
தீமுகந் தோன்றிகள் தோன்றத்
தளவம் முகையரும்பக்
காமுகம் பூமுகங் காட்டிநின்
ரார்த்தன காரினமே.

தெளிவுரை : இது கார்ப்பருவங்கண்டு தலைவி இரங்கல் என்னும் துறை.

நாம் மனமுவந்து போற்றிய ஞானசம்பந்தரின் பகைவரைப்போலக் கொடிய கணைகளைச் செலுத்தி வலிய மதில்கள் இடிபடுமாறு காக்கும் நெருப்பைப் போலச் செங்காந்தள் மலர்கள் தோன்ற முல்லை அரும்புகள் மலர, சோலைகளில் மலர்களின் முகத்தைக் காட்டி நின்று மேகக் கூட்டங்கள் ஆரவாரம் செய்தன. கார்ப்பருவத்தில் வருவதாகச் சொன்ன தலைவர் இன்னும் வரவில்லையே என்று தலைவி ஏங்குகின்றாள்.

1257. கார்அங்கு அணைபொழிற்
காழிக் கவுணியர் தீபன்,நல்லூர்ச்
சீர்அங்கு அணைநற் பெருமணந்
தன்னில் சிவபுரத்து,
வார்அங்கு அணைகொங்கை
மாதொடும் புக்குறும் போது,வந்தார்
ஆர்அங்(கு) ஒழிந்தனர், பெற்றதல்
லால்,அவ் அரும்பதமே.

தெளிவுரை : ஞானசம்பந்தர் திருமணத்தில் கலந்து கொண்டவர்கள் முத்தியடைந்த செய்தி சொல்லப்படுகிறது.

மேகங்கள் மழைபொழியும் வளமிக்க சீகாழிக் கவுணியர் தீபனாகிய ஞானசம்பந்தர் சிறப்புடன் செய்து கொண்ட பெருமணத்தில் சிவபுரத்துள் மனையாளுடன் புகுந்தபோது வீடு பேற்றை அடையாமல் எவர் எஞ்சியிருந்தார்? ஒருவருமில்லை. வந்தவர் அனைவரும் வீடுபேற்றை அடைந்தனர் என்க.

1258. அரும்பத மாக்கு மடயரொ(டு)
அஞ்சலித் தார்க்கரிய
பெரும்பத மெய்தலுற் றீர்!வந்
திறைஞ்சுமின், பேரரவம்
வரும்ப நான்மறைக் காழித்
தலைவன் மலர்க்கமலத்
தரும்பத ஞானசம் பந்தனென்
னானைதன் தாளிணையே.

தெளிவுரை : அரிய சொற்களைப் பேசும் அடியார்களோடு வணங்கியவர்களுக்குரிய பெரும்பதம் அடையப் போகிறவர்களே ! வந்து துதி செய்யுங்கள். பேரொலி யோடுவரும் நான் மறைக்காழித் தலைவன் மலர்க் கமலத்து அரும்பத ஞானசம்பந்தர் என்பவரின் பாதங்களைப் பணியுங்கள்.

1259. தாளின் சரணந் தருஞ்சண்பை
நாதன் தரியலர்போல்
கீளின் மலங்க விலங்கே
புகுந்திடும், கெண்டைகளும்,
வாளுந் தொலைய மதர்த்திரு
காதி னளவும்வந்து
மீளுங் கருங்கண்ணி மின்புரி
யாவைத்த மென்னகையே.

தெளிவுரை : இது முறுவற் குறிப்புணர்தல் என்னும் துறை.

தாளின் சரணம் தரும் சீகாழி நாதராகிய ஞான சம்பந்தரின் பகைவரைப் போலக் கிழிபட்டதனால் வருந்த, குறுக்கே புகுந்திடும் கெண்டை மீன்களும் வாளும் தோற்குமாறு மதர்த்து இரு காதுகள் வரைக்கும் நீண்டு மீளும் கரிய கண்களையுடைய தலைவியின் மின்னலைப்போல் தோன்றி மறையும் மென்னகை.

1260. நகுகின்ற முல்லைநண் ணாரெரி
கண்டத்(து) அவர்கவர்ந்த
மிகுகின்ற நன்னிதி காட்டின
கொன்றை; விரவலரூர்
புகுகின்ற தீயெனப் பூத்தன
தோன்றி; புறவமன்கைத்
தகுகின்ற கோடல்கள்; அன்பரின்
றெய்துவர் கார்மயிலே.

தெளிவுரை : பருவங்கண்டு, தலைவர் வருவாரென்று தோழி கூறியது.

கார்மயில் போன்ற தலைவியே ! அன்பர் இன்று எய்துவர் எனமுடிக்க. முல்லை நகுகின்றன. (மலர்ந்திருக்கின்றன.) கொன்றை மலர்கள் பொன்னைப் போல் விளங்கின. நீலகண்டர் திரிபுரங்களை எரித்தபோது உண்டான தீயைப் போல் செங்காந்தள்கள் பூத்தன. சீகாழி ஞானசம்பந்தரின் கை போன்று காந்தள்கள் மலர்ந்தன. இவை யாவும் கார்காலத்தின் அறிகுறிகள் என்பதாம்.

1261. மயிலேந் தியவள்ளல் தன்னை
யளிப்ப மதிபுணர்ந்த
எயிலேந் தியசண்பை நாத
னுலகத்(து) எதிர்பவர்யார்?
குயிலேந் தியபொழிற் கொங்கேந்
தியகொம்பி னம்புதழீஇ
அயிலேந் தியமலர் கண்டுள
னாய்வந்த அண்ணலுக்கே.

தெளிவுரை : பாங்கன் தலைவனை வியத்தல். மயிலேந்திய வள்ளல் தன்னை அளிப்ப, மதிபுணர்ந்த மதில்களை உடைய சீகாழி நாதனாகிய ஞானசம்பந்தருக்கு முன்னிற்பவர் யாருளர்? குயில்கள் பொருந்திய சோலையில் தலைவியின் வேலைப் போலும் கூரிய கண்களைக் கண்டு எப்படித் திரும்பினாய்? அவளைக் கண்டு மீண்டு வந்த வலிமையை உடைய தலைவனை ஒப்பவர் யார்?

1262. அண்ணல் மணிவளைத் தோளரு
காசனி சண்பையன்ன
பெண்ணி னமிர்தநல் லாள்குழல்
நாற்றம் பெடையொடுபூஞ்
சுண்ணந் துதைந்தவண் டே!கண்ட
துண்டுகொல்? தூங்கொலிநீர்த்
தண்ணம் பொழிலெழிற் காசினி
பூத்தமென் தாதுகளே.

தெளிவுரை : தலைவன் தலைவியைப் புகழ்தல்.

பெருமை பொருந்திய மணிவளைத் தோள்களை உடையவரும் சமணர்களை வென்றவருமான ஞான சம்பந்தரது சீகாழி என்று சொல்லுமாறு பெண்களில் அமிர்தம் போன்ற தலைவியின் கூந்தலில் உள்ள மணத்தை வேறு மலர்த் தாதுகளில் வண்டே நீ கண்டதுண்டோ? வண்டே ! நீ குளிர்ந்த பொழில்களை எல்லாம் சுற்றிப் பார்த்தாயே, இது போன்ற மணத்தைக் கண்டாயா என்று வியந்தவாறு.

1263. தாதுகல் தோய்த்தநஞ் சந்தாந்
யார்சட லம்படுத்துத்
தூதையிற் சிக்கங் கரஞ்சேர்த்து
வாளா துலுக்குகின்றீர்;
பேதியிற் புத்தர்கள்! வம்மின்;
புகலியர் கோனன்னநாட்
காதியிட் டேற்றும் கழுத்திறம்
பாடிக் களித்திடவே.

தெளிவுரை : காவிக் கல் தோய்த்த ஆடை யணிந்து சந்நியாசி வேடம் பூண்டு கமண்டலத்தை உறியில் வைத்து வீணாய் ஆடுகின்றீர். போதி மரத்தடியில் உள்ள புத்தர்களே ! சீகாழி சம்பந்தப் பெருமான் நாட்டியுள்ள கழுத்திறம் பாடிக் களித்திட வாருங்கள்.

1264. களியுறு தேன்தார்க் கவுணியர்
தீபன் கருதலர்போல்
வெளியுறு ஞாலம் பகலிழுந்
தால்,விரை யார்கமலத்(து)
அளியுறு மென்மலர்த் தாதளைந்(து)
ஆழி யழைப்பவரும்
துளியுறு வாடையி தாம்மட
மானைத் துவளவிப்பதே.

தெளிவுரை : தோழி தலைவியின் நிலைகண்டு இரங்குதல்.

தேன் பொருந்திய மாலையணிந்த கவுணியர் குல தீபனாகிய ஞானசம்பந்தரது பகைவர்களைப் போல் வெளியுறு ஞாலம் பகல் இழந்தால் விரையார் கமலத்து அளியுறு மென்மலர் தாது அளைந்து ஆழி அமைப்பவரும் மழைத்துளியுடன் வரும் வாடைக் காற்று மடமான் போன்ற தலைவியை வாடச் செய்கிறது.

1265. தேறும் புனல்தில்லைச் சிற்றம்
பலத்துச் சிறந்துவந்துள்
ஊறு மமிர்தைப் பருகிட்
டெழுவதொ ருட்களிப்புக்
கூறும் வழிமொழி தந்தெனை
வாழ்வித் தவன்கொழுந்தேன்
நாறும் அலங்கல் தமிழா
கரனென்னும் நன்னிதியே.

தெளிவுரை : தெளிந்த நீரால் சூழப்பட்ட திருத்தில்லைச் சிற்றம்பலத்துள் ஊறும் அமிர்தைப் பருகிட்டு எழுவதோர் உட்களிப்புக் கூறும் வழி மொழிந்து என்னை வாழ்வித்தவன் கொழுந்தேன் நாறும் மலர்மாலை அணிந்த தமிழாகரன் என்னும் ஞானசம்பந்த நன்னிதியே.

1266. நிதியுறு வாரற னின்பம்வீ
டெய்துவ ரென்னவேதம்
துதியுறு நீள்வயல் காழியர்
கோனைத் தொழாரினைய
நதியுறு நீர்தெளித்(து) அஞ்ச
லெனவண்ண லன்றோவெனா
மதியுறு வாணுதல் பாதம்
பணிந்தனள் மன்னனையே.

தெளிவுரை : தோழி அறத்தொடு நிற்றல்:

பொருள் பெற்றவர்கள் அறம், இன்பம், வீடு இவைகளைப் பெறுவர் என்று வேதம் துதியறு நீள் வயல் சீகாழிப் பெருமானைத் தொழாதவர்களைப் போல வருந்திக் கிடக்க, நதியுறு நீர் தெளித்து அஞ்சாதே என்று சொன்னவர் தலைவர் அல்லவா என்று சந்திரன்போன்று ஒளியுள்ள நெற்றியை உடையவளாகிய தலைவி மன்னன் பாதத்தைப் பணிந்தனள்.

1267. மன்னங் கனை!செந் தமிழா
கரன்வெற்பில் வந்தொருவர்
அன்னங்கள் அஞ்சன்மி னென்றடர்
வேழத் திடைவிலங்கிப்
பொன்னங் கலைசா வகையெடுத்
தாற்கிவள் பூணழுந்தி
இன்னந் தழும்புள வாம்பெரும்
பாலுமவ் வேந்தலுக்கே.

தெளிவுரை : களிறு தரு புணர்ச்சி கூறி அறத்தொடு நிற்றல்.

மன்னங்களை செந்தமிழ் ஆகரன் மலையில் ஒருவர் (தலைவர்) வந்து, அன்னம் போன்றவர்களே ! பயப்படாதீர்கள் என்று கூறித் தாக்கவந்த யானையைத் தடுத்து நிறுத்தி, பொன்னைப்போன்ற தலைவி கலங்காதபடி எடுத்தவருக்கு இவள் (தலைவி) மார்பகப் பூண் அழுந்தி இப்போதும் அந்த ஏந்தலுக்குப் பெரும் தழும்புள்ளது.

1268. ஏந்தும் உலகுறு வீரெழில்
நீலநக் கற்குமின்பப்
பூந்தண் புகலூர் முருகற்கும்
தோழனைப் போகமார்ப்பைக்
காந்துங் கனலிற் குளிர்படுத்
துக்கடற் கூடலின்வாய்
வேந்தின் துயர்தவிர்த் தானையெப்
போதும் விரும்புமினே.

தெளிவுரை : போகமார்ந்த என்ற திருப்பதிகத்தை எழுதிய ஏட்டைச் சம்பந்தப் பெருமான் எரியிலிட, ஏடு வேகாதிருந்தது.

ஏந்தும் உலகுறுவீர் ! எழில் நீல நக்கற்கும், இன்பப் பூந்தண் புகலூர் முருகற்கும் தோழனை, போக மார்ந்த என்று எழுதப்பட்ட ஏட்டைத் தீயில் போட்டபோது அதை எரியாமல் செய்தவனை, மதுரையில் கூன் பாண்டியனது வெப்பு நோயைத் தீர்த்தவனை, எப்போதும் விரும்புங்கள். இவ்விருவரும் ஞானசம்பந்தருடன் சோதியில் கலந்தவர்கள்.

1269. விரும்பும் புதல்வனை மெய்யரிந்
தாக்கிய வின்னமிர்தம்
அரும்பும் புனற்சடை யாய்உண்
டருளென் றடிபணிந்த
இரும்பின் சுடர்களிற் றான்சிறுத்
தொண்டனை யேத்துதிரேல்
சுரும்பின் மலர்த்தமி ழாகரன்
பாதம் தொடர்வெளிதே.

தெளிவுரை : சிறுத்தொண்ட நாயனார் சிவபெருமான் கோரியபடி தன் மகனாகிய சீராள தேவனை அரிந்து கறி சமைத்து அரும்பும் புனற் சடையாய் உண்டருள் வீராக என்று அடிபணிந்தார். அத்தகைய இரும்பின் சுடர்க்களிற்றானாகிய சிறுத்தொண்டனைப் போற்று வீராயின் வண்டு மொய்க்கும் மலர் மாலையணிந்த தமிழாகரனாகிய ஞானசம்பந்தரது திருவடியை அடைதல் எளிதாகும்.

1270. எளிவந்த வா!வெழில் பூவரை
ஞாண்,மணித் தார்தழங்கத்
துளிவந்த கண்பிசைந் தேங்கலு
மெங்க ளரன்துணையாங்
கிளிவந்த சொல்லி,பொற் கிண்ணத்தின்
ஞான வமிர்தளித்த
அளிவந்த பூங்குஞ்சி யின்சொற்
சிறுக்கன்ற னாரருளே.

தெளிவுரை : அருள் எளிவந்தவாறு வியப்பு.

எழிற் பூ அரைஞாண், மணித்தார் தழங்கத் துளிவந்த கண் பிசைந்து அழுதலும் எங்கள் சிவ பெருமானது துணைவியாகிய உமாதேவியார் பொற் கிண்ணத்தில் ஞான அமிர்து அளித்த, வண்டுகள் மொய்க்கும் தலைமயிரும் இன்சொல்லும் உடைய சிறு குழந்தைதன் ஆர் அருளே. ஞானசம்பந்தர் ஞானப்பாலுண்ட செய்தி கூறப்படுகிறது.

1271. அருளுந் தமிழா கர!நின்
னலங்கல்தந் தென்பெயரச்
சுருளுங் குழலியற் கீந்திலை
யேமுன்பு தூங்குகரத்(து)
உருளும் களிற்றினொ(டு) ஒட்டரு
வானை யருளியன்றே
மருளின் மொழிமட வாள்பெய
ரென்கண் வருவிப்பதே.

தெளிவுரை : அருளும் தமிழாகரனே ! நின் மாலையைத் தந்து என்பு அயர, சுருண்ட கூந்தலையுடைய இவளுக்குக் கொடுக்கவில்லையே ! முன்பு தொங்குகிற கையையுடைய உருளும் களிற்றினோடு ஓடியவனை அருளி அன்றே மருளின் மொழி மடவாள் பெயர் என்கண் வருவிப்பதே. முன்பு அருளியதுபோல் இப்போதும் அருள் செய்வாயாக.

1272. வருவார் உருவின் வழிவழி
வைத்த வனமருந்தும்
திருவார் இருந்த செழுநகரச்
செவ்வித் திருவடிக்காள்
தருவான் தமிழா கரகரம்
போற்சலம் வீசக்கண்டு
வெருவா வணங்கொண்டல் கள்மிண்டி வானத்து மின்னியவே.

தெளிவுரை : கார்காலத்தில் வருவதாகச் சொன்ன தலைவர் வரஇயலாதவாறு மேகம் மின்னலோடு வருவதைக் கண்டு தலைவி வருந்துகின்ற காட்சி இது. உருவின் வருவார். வழிவழி வைத்த வனம் அருந்தும் திருவார் இருந்த செழுநகர்ச் செவ்வித் திருவடிகட்கு ஆளாகச் செய்வான் தமிழாகரன் (ஞான சம்பந்தர்) கைகளைப் போல் சலம் வீசக்கண்டு அஞ்சாதவாறு மேகங்கள் நெருங்கி வானத்து மின்னின.

1273. மின்னார் குடுமி நெடுவெற்
பகங்கொங்கில் வீழ்பனிநோய்
தன்னார் வழிகெட் டழிந்தமை
சொல்லுவர் காணிறையே
மன்னார் பரிசனத் தார்மேல்
புகலு மெவர்க்குமிக்க
நன்னா வலர்பெரு மானரு
காசனி நல்கிடவே.

தெளிவுரை : மின்னலைப் பொருந்திய சிகரங்களை உடைய திருச்செங்கோடு என்னும் மலையினை உடைய கொங்கு நாட்டில் வீழ்பனிநோய் தன்னார் வழிகெட்டு அழிந்தமை பற்றிச் சொல்லுவார்கள், இறைவனே ! மன்னார் பரிவாரத்தார் மேற்புகலும் எவர்க்கும் மிக்க நன்னாவலர் பெருமானாகிய ஞானசம்பந்தர் அருகாசனி நல்கியதால் என்பர்.

1274. நல்கென் றடியி னிணைபணி
யார்;சண்பை நம்பெருமான்
பல்கும் பெரும்புகழ் பாடகில்
லார்சிலர் பாழ்க்கிறைத்திட்(டு)
ஒல்கு முடம்பின ராய்,வழி
தேடிட் டிடறிமுட்டிப்
பில்கு மிடமறி யார்கெடு
வாருறு பேய்த்தனமே.

தெளிவுரை : சீகாழிப் பெருமானாகிய ஞானசம்பந்தப் பெருமானைத் தருவாயாக என்று அவரது இணையடிகளைப் பணியார். அவருடைய மிகுதிப்படும் பெரும் புகழைப் பாடமுடியாதவர் சிலர் பாழ்க்கு இறைத்திட்டுத் தளரும் உடம்பினராய் வழிதேடிக் கொண்டு இடறி, முட்டி வெளிப்படும் இடம் அறியாதவர்கள் உறு பேய்த்தனமே கெடுவர்.

1275. தனமே தருபுகழ்ச் சைவ
சிகாமணி தன்னருள்போல்
மனமே புகுந்த மடக்கொடி
யே!மலர் மேலிருந்த
அனமே! யமிர்தக் குமுதச்செவ்
வாயுங்க ளாயமென்னும்
இனமே பொலியவண் டாடெழிற்
சோலையு ளெய்துகவே.

தெளிவுரை : தலைவன் தலைமகளை ஆயத்து உய்த்தல்.

தனமே தரும் புகழ்ச் சைவ சிகாமணியாகிய ஞானசம்பந்தருடைய அருள் போல் மனமே புகுந்த மடக்கொடியே ! (தலைவியே) மலர்மேல் இருந்த அன்னமே ! அமிர்தக் குமுதச் செவ்வாய் உங்கள் ஆயம் என்னம் இனமே பொலிய வண்டுகள் மொய்க்கின்ற சோலையுள் சென்று சேர்வாயாக.

1276. உகட்டித்து மோட்டு வராலினம்
மேதி முலையுரிஞ்ச
அகட்டிற் சொரிபால் தடம்நிறை
கொச்சை வயத்தரசைத்
தகட்டில் திகழ்மணிப் பூண்தமி
ழாகரன் தன்னையல்லால்,
பகட்டில் பொலியினும் வேண்டேன்,
ஒருவரைப் பாடுதலே.

தெளிவுரை : துள்ளி, பெருத்தவரால் மீனின் கூட்டங்கள் எருமையின் முலையை உரிஞ்ச வயிற்றில் சொரிகின்ற பால் குளத்தை நிறைக்கின்ற கொச்சை (சீகாழி) வயத்து அரசாகிய ஞானசம்பந்தரை, பொன்தகடு திகழ்கின்ற மணிப்பூண் தமிழாகரன் தன்னை, அல்லால் யானையின் மேல் விளங்குகின்ற தன்மையைப் பெற்றாலும் வேறு ஒருவரைப் பாடுவதை விரும்ப மாட்டேன். இவர்தான் என் தெய்வம் என்கிறார்.

1277. பாடிய செந்தமி ழாற்பழங்
காசு பரிசில் பெற்ற
நீடிய சீர்த்திரு ஞானசம்
பந்தன் நிறைபுகழான்
நாடிய பூந்திரு நாவுக் கரசோ
டெழில்மிழலைக்
கூடிய கூட்டத்தி னாலுள
தாய்த்திக் குவலயமே.

தெளிவுரை : பாடிய செந்தமிழால் பழங்காசு பரிசில் பெற்ற நீடிய சீர்த்திரு ஞானசம்பந்தன் நிறைந்த புகழால் நேடிய பூந்திரு நாவுக்கரசோடு எழில் திருவீழிமிழலை என்னும் தலத்தில் கூடிய கூட்டத்தினால் இக்குவலயம் உய்தி பெற்றது. இல்லையேல் பஞ்சத்தால் துன்புற்றிருக்கும் என்க.

1278. வலையத் திணிதோள் மிசைமழ
வேற்றி, மனைப்புறத்து
நிலையெத் தனைபொழு தோகண்ட(து)
ஊரனை நீதிகெட்டார்
குலையக் கழுவின் குழுக்கண்ட
வன்திகழ் கொச்சையன்ன
சிலையொத்த வாள்நுதல்! முன்போல்
மலர்க திருக்கண்களே.

தெளிவுரை : தோழி வாயிலாகப் புகுந்து கூறுதல்.

தோள் வளைகளையுடைய வலிய தோள் மிசை குழந்தையைத் தூக்கிக்கொண்டு மனை புறத்து நிலை எத்தனை பொழுதோ கண்டது. அறநெறி மார்க்கங்கெட்டுத் திரிந்த சமணர்கள் குலையக் கழுவேற்றிய ஞானசம்பந்தர் திகழும் சீகாழி போன்ற தலைவி முன் போல் திருக்கண்கள் மலர வழிசெய்வாயாக என்று தோழி தலைவனிடம் தூது சென்று உரைத்தாள்.

1279. கண்ணார் திருநுத லோன்கோலக்
காவில் கரநொடியால்
பண்ணார் தரப்பாடு சண்பையர்
கோன்பாணி நொந்திடுமென்(று)
எண்ணா வெழுத்தஞ்சு மிட்டபொன்
தாளங்க ளீயக்கண்டும்
மண்ணார் சிலர்சண்பை நாதனை
யேத்தார் வருந்துவதே.

தெளிவுரை : நெற்றிக் கண்ணையுடைய சிவபெருமான் எழுந்தருளியுள்ள திருக்கோலக்கா என்னும் பதியில் கைத்தாளத்தால் பண்ணோடு பாடிய ஞானசம்பந்தர் கை வருந்துமென்று பஞ்சாட்சரம் பொறிக்கப்பட்ட பொன் தாளங்கள் கொடுக்கக் கண்டும், இவ்வுலகத்தவருள் சிலர் சண்பை நாதனை ஏத்தாவிடில் வருந்துவார்கள்.

1280. வருந்துங் கொலாங்கழல், மண்மிசை
யேகிடில் என்றுமென்றார்த்
திருந்தும் புகழ்ச்சண்பை ஞானசம்
பந்தற்குச் சீர்மணிகள்
பொருந்துஞ் சிவிகை கொடுத்தனன்
காண்;புண ரித்திகழ்நஞ்(சு)
அருந்தும் பிரான்நம் மரத்துறை
மேய வரும்பொருளே.

தெளிவுரை : மண்ணில் நடந்து சென்றால், கழல் அணிந்த பாதங்கள் வருந்தும் என்று மென்தார்த் திருந்தும் புகழ்ச் சண்பை ஞானசம்பந்தர்க்குச் சீர்மணிகள் பொருந்தும் சிவிகை (பல்லக்கு)யை, புணரித் திகழ் நஞ்சருந்தும் பிரானும் (நீலகண்டன்) நம் திரு அரத்துறை என்னும் தலத்தில் எழுந்தருளியிருக்கும் அரும்பொருளுமாகிய இறைவன் கொடுத்தனன்.

1281. பொருளென வென்னைத்தன் பொற்கழல்
காட்டிப் புகுந்தெனக்கிங்(கு)
அருளிய சீர்த்திரு ஞானசம்
பந்த னருளிலர்போல்
வெருளின மானின்மென் நோக்கியை
விட்டு விழுநிதியின்
திரளினை யாதரித் தால்நன்று
சாலவென் சிந்தனைக்கே.

தெளிவுரை : பொருள் வயின் பிரிய எண்ணிய நெஞ்சிற்குத் தலைவன் கூறியது.

என்னை, ஒரு பொருளாக மதித்து, தன் பொற்கழலைக் காட்டி, புகுந்தெனக்கு இங்கு அருளிய சீர்த்திரு ஞானசம்பந்தப் பெருமான் பகைவர்போல அஞ்சிய மானின் மென்நோக்கியை (தலைவியை) விட்டுச் சிறந்த நிதியின் திரளினை ஆதரித்துச் செல்ல நினைத்தது சரியல்ல என்று தலைவன் நெஞ்சிற்குக் கூறுகின்றான்.

1282. சிந்தையைத் தேனைத் திருவா
வடுதுறை யுள்திகழும்
எந்தையைப் பாட லிசைத்துத்
தொலையா நிதியமெய்தித்
தந்தையைத் தீத்தொழில் மூட்டிய
கோன்சரண் சார்விலரேல்
நிந்தையைப் பெற்(று)ஒழி யாதிரந்
தேகரம் நீட்டுவரே.

தெளிவுரை : சிந்தையைத் தேனைத் திருவாவடுதுறையுள் திகழும் எந்தையைப் பாடல்களால் துதித்து, குறையாத செல்வத்தைப் பெற்று, தந்தையை வேள்வி செய்யுமாறு ஏவிய ஞானசம்பந்தரது பாதங்களில் அன்பு கொள்ளாதவர் நிந்தையைப் பெற்று, எப்போதும் பிச்சை யெடுக்க கையை நீட்டுவர் !

1283. நீட்டுவ ரோதத்தொ டேறிய
சங்கம் நெகுமுளரித்
தோடுவெண் முத்தம் சொரிசண்பை
நாதன் தொழாதவரின்
வேட்டுவர் வேட்டதண் ணீரினுக்(கு)
உண்ணீ ருணக்குழித்த
காட்டுவ ரூறல் பருகும்
கொலாமெம் கனங்குழையே.

தெளிவுரை : செவிலி வருந்துதல்: சங்குகள் நெகு முளரித் தோட்டு வெண்முத்தம் சொரியும் சீகாழி நாதனைத் தொழாதவர்போல வேட்டுவர், விரும்பும் தண்ணீருக்கு உப்பாகிய கடல் நீரோடு பாலைவனத்தில் உவர்ப்புச் சுவையோடு ஊறிய நீரை உண்ணக் கொடுப்பர். எம் கணங் குழை இந்த நீரையா குடிக்க வேண்டும் என்று செவிலி வருந்துகிறாள்.

1284. குழைக்கின்ற கொன்றைபொன் போல
மலரநுங் கூட்டமெல்லாம்
அழைக்கின்ற கொண்ட லியம்புஒன்
றிலையகன் றார்வரவு
பிழைக்கின் றதுகொலென் றஞ்சியொண்
சண்பைப் பிரான்புறவத்(து)
இழைக்கின்ற கூடல் முடயஎண்
ணாத இளங்கொடிக்கே.

தெளிவுரை : தளிர்களை உடைய கொன்றை மரம் பொன் போல மலர, உங்கள் கூட்ட மெல்லாம் அழைக்கின்ற மேகம், உங்களை விட்டுப் பிரிந்துள்ள தலைவர் வருவது தடைபடுகிறது என்று கூறுகிறது என்று அஞ்சி ஒண் சண்பைப் பிரான் சீகாழியில் இழைக்கின்ற கூடல் இளங்கொடிக்கு (தலைவிக்கு) முடியவில்லை போலும். கூடல் இழைத்தல் பண்டைய வழக்கு. வட்டம் கூடினால் காரியம் கைகூடும் என்பதாம்.

1285. கொடித்தே ரவுணர் குழாமன
லூட்டிய குன்றவில்லி
அடித்தேர் கருத்தி னருகா
சனியை யணியிழையார்
முடித்தேர் கமலர் கவர்வான்,
முரிபுரு வச்சிலையால்
வடித்தேர் நயனக் கணையிணை
கோத்து வளைத்தனரே.

தெளிவுரை : திரிபுராதிகளைத் தீயிட்டுக் கொளுத்திய குன்ற வில்லியாகிய சிவபெருமானது அடியைத் தேருகின்ற கருத்தினை உடைய அருகாசனியாகிய ஞானசம் பந்தரை அணியிழையார் (மாதர்கள்) முடித்தேர் கமலம் கவரும் பொருட்டு, வளைந்த புருவ வில்லை வடித்தேர் கண்களாகிய அம்புகளைக் கோத்து வளைத்தனர்.

1286. வளைபடு தண்கடற் கொச்சை
வயவன் மலர்க்கழற்கே
வளைபடு நீண்முடி வார்புன
லூரன்தன் நீரில்அம்கு
வளைபடு கண்ணியர் தம்பொதுத்
தம்பலம் நாறுமிந்த
வளைபடு கிங்கிணிக் கால்மைந்தன்
வாயின் மணிமுத்தமே.

தெளிவுரை : தலைவி காமக் கிழத்தியைப் பழித்தல். தன் மகனைக் காமக்கிழத்தி முத்தமிட்டாள் என்று கூறுகிறாள். சங்குகள் உண்டாகின்ற குளிர்ந்த கடல் சூழ்ந்த சீகாழிப் பெருமான் மலர்க்கழற்கு வணங்குகின்ற உயர்ந்த தலை வார்புனல் ஊரன் (தலைவன்) தன் நீரில் அங்கு வளைபடு கண்ணியர் (பரத்தையர்) தம் பொதுத் தம்பலம் நாறும் வாயினால் இந்தக் கால் சிலம்பு ஒலிக்கின்ற என் மகனை முத்தமிட்டாள்.

1287. முத்தன வெண்ணகை யார்மயல்
மாற்றி, முறைவழுவா(து)
எத்தனை காலம்நின்று ஏத்து
மவரினு மென்பணிந்த
பித்தனை, யெங்கள் பிரானை,
யணைவ தெளிதுகண்டீர்;
அத்தனை, ஞானசம் பந்தனைப்
பாதம் அடைந்தவர்க்கே.

தெளிவுரை : திருஞானசம்பந்தர் திருவடியை அடைந்தவர்கள் சிவ பெருமான் திருவடியைச் சேர்தல் எளிது என்க.

முத்தன்ன வெண்ணகையார் மயல் மாற்றி, முறை வழுவாது எத்தனை காலம் நின்று ஏத்துபவர்களைக் காட்டிலும், எலும்பு அணிந்த பித்தனாகிய எங்கள் சிவபெருமானை அணைவது எளிது. எங்ஙனமெனில் அத்தனாகிய ஞான சம்பந்தனது திருவடிகளை அடைந்தவர்களுக்கு இது எளிது எனக்கூட்டுக. ஞானசம்பந்தரை வழிபட்டால் சிவபெருமானை அடையலாம் என்கிறார்.

1288. அடைத்து மாமறைக் காடர்தம்
கோயிற்கதவினை அன்(று)
உடைத்தது பாணன்தன் யாழி
னொலியை; யுரகவிடம்
துடைத்து; தோணி புரத்துக்
கிறைவன் சுடரொளிவாய்
படைத்தது தண்மையை நள்ளாற்
றரசு பணித்திடவே.

தெளிவுரை : ஞானசம்பந்தர் திருமறைக் காட்டில் (வேதாரண்யத்தில்) திறந்து கிடந்த கோயிற் கதவைப் பதிகம் பாடி மூடினார். திருநீலகண்ட யாழ்ப்பாணரது யாழின் ஒலியை யாழ்முரி என்னும் பாடலால் உடைத்தார். வணிகனைத் தீண்டிய பாம்பின் விடத்தை இறக்கினார். சீகாழிக்கு இறைவன் சுடர் ஒளியை அளித்தார். திருநள்ளாற்று இறைவனுக்குத் தண்மையைப் படைத்தார்.

1289. பணிபடு நுண்ணிடை பாதம்
பொறாபல காதமென்று
தணிபடு மின்சொற்க ளால்தவிர்த்
தேற்குத் தழலுமிழ்கான்
மணிபடு பொற்கழல் ஞானடம்
பந்தன் மருவலர்போல்
துணிபடு வேலன்ன கண்ணியென்
னோவந்து தோன்றியதே.

தெளிவுரை : தலைவன் கூற்று: பணிவுள்ள நுண்ணிடை யாளாகிய தலைவியின் பாதம் பொறா பலகாதம் என்று குளிர்ந்த சொற்களைக் கூறித் தவிர்த்த எனக்கு, நெருப்பைக் கக்குகின்ற காட்டில் மணிகள் உண்டாகின்ற பொற்கழல்களை உடைய ஞானசம்பந்தரது பகைவர்களைப்போலத் துணிக்கும் தன்மை உள்ள வேல்போன்ற கண்களையுடைய தலைவி இங்கு எங்ஙனம் வந்து தோன்றினாள்?

1290. தோன்றல்தன் னோடுட னேகிய
சுந்தரப் பூண்முலையை
ஈன்றவ ரேயிந்த வேந்திழை
யார் இவ்வளவில்
வான்றவர் சூழுந் தமிழா
கரன்தன் வடவரையே
போன்றபொன் மாடக் கழுமல
நாடு பொருந்துவரே.

தெளிவுரை : செவிலிக்குக் கண்டோர் கூறுதல்.

தலைவனோடு உடன்சென்ற அழகிய தலைவியைப் பெற்றவரே ! இந்தத் தம்பதிகள் இந்நேரம் மேலான தவத்தை உடையவர் சூழும் தமிழாகரனாகிய ஞானசம்பந்தரின் வடவரையே போன்ற பொன் மாடங்களை உடைய சீகாழி நாடு சேர்ந்திருப்பர்.

1291. பொருந்திய ஞானத் தமிழா
கரன்பதி, பொற்புரிசை
திருந்திய தோணி புரத்துக்
கிறைவன் திருவருளால்
கருந்தடம் நீரெழு காலையிற்
காகூ கழுமலமென்(று)
இருந்திட வாமென்று வானவ
ராகி யியங்கியதே.

தெளிவுரை : பொருந்திடு திருஞானசம்பந்தர் பதி பொற் புரிசை திருந்திய சீகாழிக்கு இறைவன் திருவருளால் கருந்தடம் நீர் எழுகாலையில் காகூ கழுமலம் என்று இருந்திடவாம் என்று வானவராகி இயங்கியது.

பெரு ஊழிக்காலத்தில் சீகாழி மட்டும் நிலைத்திருந்தது என்கிறார்.

1292. இயலா தனபல சிந்தைய ராயிய
லுங்கொலென்று
முயலா தனவே முயன்றுவன்
மோகச் சுழியழுந்திச்
செயலார் வரைமதிற் காழியர்
கோன்திரு நாமங்களுக்(கு)
அயலா ரெனப்பல காலங்கள்
போக்குவ ராதர்களே.

தெளிவுரை : இயலாதன பல சிந்தையராய், இயலுங்கொல் என்று முயலாதனவே முயன்று வன்மோகச் சுழியழுந்தி, செயலார் வரை மதில்களை யுடைய சீகாழித் தலைவராகிய ஞானசம்பந்தர் என்னும் பெயரைப் போற்றாதவர்களாகிய அறிவற்றவர்கள் பலகாலம் வீணில் போக்குவர்.

1293. ஆதர வும்,பயப் பும்மிவ
ளெய்தின ளென்றபலார்
மாத ரவஞ்சொல்லி யென்னை
நகுவது! மாமறையின்
ஓதர வம்பொலி காழித்
தமிழா கரனொடன்றே
தீதர வம்பட வன்னையென்
னோபல செப்புவதே.

தெளிவுரை : தலைவி கூற்று: அன்பும் பசலையும் இவள் எய்தினள் என்று அயல்மாதர்கள் வீண் பழி மொழிகளைக் கூறி என்னைப் பார்த்து வேதங்களை ஒதுகின்ற முழக்கம் மிகுகின்ற சீகாழித் தமிழாகரனாகிய ஞானசம்பந்தரோடு சேர்த்துச் சிரிப்பதாகும். தீது ஆரவாரம் பட அன்னை பல சொல்வது ஏன்?

1294. செப்பிய வென்ன தவம்முயன்
ரேன்நல்ல செந்தமிழால்
ஒப்புடை மாலைத் தமிழா
கரனை, யுணர்வுடையோர்
கற்புடை வாய்மொழி யேத்தும்
படிதக றிட்டிவர
மற்படு தொல்லைக் கடல்புடை
சூழ்தரு மண்மிடையே.

தெளிவுரை : சிறப்பித்துச் சொல்லும்படியாக, தவம் செய்ய முயலவில்லை. செந்தமிழால் ஒப்புடை மாலைத் தமிழாகரனாகிய ஞானசம்பந்தரை உணர்வுடையோர் கல்வியறிவு உடையவர்களுடைய மொழிகளைக் கொண்டு துதிக்கும்படி கதறிட்டு வரமற்படு தொல்லைக் கடல் சூழ்ந்த இந்த உலகத்தில் வாழ்வது எங்ஙனம்?

1295. மண்ணில் திகழ்சண்பை நாதனை
வாதினில் வல்லமணைப்
பண்ணைக் கழுவின் நுதிவைத்தெம்
பந்த வினையறுக்கும்
கண்ணைக் கதியைத் தமிழா
கரனை,யெங் கற்பகத்தைத்
திண்ணற் றொடையற் கவுணியர்
தீபனைச் சேர்ந்தனமே.

தெளிவுரை : இந்த நிலஉலகத்தில் சிறந்து விளங்குகின்ற சீகாழி நாதனாகிய ஞானசம்பந்தர் வாதில் வல்ல சமணர்களை வென்று கழுவில் ஏறச் செய்தார். எம் பாசபந்த தொடக்கு அறும்படி செய்தார். எனக்கு அவரே புகலிடம். தமிழாகரனாகிய அந்தக் கற்பகத்தை, மாலையணிந்த கவுணியர் தீபனைச் சேர்ந்தனம்.

1296. சேரும் புகழ்த்திரு ஞானசம்
பந்தனை யானுரைத்த
பேருந் தமிழ்ப்பா வினவவல்
லவர்பெற்ற வின்புலகங்
காருந் திருமுடற் ராயரு
ளாயென்று கைதொழுவர்
நீரும் மலரும் கொளாநெடு
மாலும் பிரமனுமே.

தெளிவுரை : சேரும் புகழ்த்திரு ஞானசம்பந்தரை யான் உரைத்த பேரும் தமிழ்ப்பா இவை வல்லவர் பெற்ற இன்புலகம் நஞ்சினால் கருமை யடைந்த கண்டத்தை உடையவனே ! அருள் செய்வாயாக என்று நீரும் மலரும் கொண்டு திருமாலும் பிரமனும் கைதொழுவர்.

1297. பிரமா புரம்வெங் குரு,சண்பை,
தோணி, புகலி,கொச்சை
சிரமார் புரம்,நற் புறவந்,
தராய்,காழி, வேணுபுரம்
வரமார் பொழில்திரு ஞானசம்
பந்தன் பதிக்குமிக்க
பரமார் கழுமலர் பன்னிரு
நாமமிப் பாரகத்தே.

தெளிவுரை : இப்பாடலின்கண் சீகாழிப் பதியின் பன்னிரு திருப்பெயர்களும் உரைக்கப்பெற்றன. 1. பிரமாபுரம், 2. வெங்குரு, 3. சண்பை, 4. தோணிபுரம், 5. புகலி, 6. கொச்சைவயம், 7. சிரபுரம், 8. புறவம், 9. பூந்தராய், 10. சீகாழி, 11. வேணுபுரம், 12. கழுமலம் ஆகிய இவை திருஞானசம்பந்தரின் பதிக்கு இவ்வுலகத்தில் பன்னிரண்டு பெயர்கள் உள்ளன.

வெண்பா

1298. பராகலத் துன்பங் கடந்தமர ரால்பணியும்
ஏரகலம் பெற்றாலு மின்னாதால் - காரகிலின்
தூமங் கமழ்மாடத் தோணி புரத்தலைவன்
நாமஞ் செவிக்கிசையா நாள்.

தெளிவுரை : மிகுதியான துன்பங்களைக் கடந்து அமரரால் பணியும் சிறப்பு பெற்றாலும், கார் அகிலின் தூமம் கமழ் மாடங்களையுடைய தோணி புரத் தலைவனாகிய ஞானசம்பந்தரது நாமம் செவிக்கு இசையாநாள் இன்னாது என்று கூட்டுக. ஞானசம்பந்தரது நாமங்களை ஓதினால் நற்கதி பெறலாம் என்பதாம்.

திருச்சிற்றம்பலம்

35. ஆளுடையபிள்ளையார் திருச்சண்பை விருத்தம் (நம்பியாண்டார் நம்பிகள் அருளிச் செய்தது)

சண்பை என்பது சீகாழிக்குரிய பன்னிரண்டு பெயர்களுள் ஒன்று. ஆளுடையபிள்ளையார் தோன்றியருளிய சண்பை என்னும் சிவப்பதியினைக் கட்டளைக் கலித்துறையாகிய திருவிருத்தத்தால் போற்றுவது இந் நூலாதலின் ஆளுடையபிள்ளையார் திருச்சண்பை விருத்தம் என்று பெயர் பெறுவதாயிற்று.

திருஞானசம்பந்தர் இளம் பருவத்திலேயே உமாதேவியார் அளித்த ஞானப்பாலை உண்டு சிவஞானம் பெற்றதும், தன் கணவன் பாம்பு தீண்டி இறந்தமை கண்டு துன்புற்றழுத தோகை ஒருத்தியின் துன்பம் நீங்க நஞ்சு தீர்த்த திருப்பதிகத்தைப் பாடியருளியதும், பாலை நிலமாக உருத்திரிந்த திருநனிப்பள்ளியை நெய்தல் நிலமாக வளம் பொருந்தப் பாடியதும்,

உயிர்த் தொகைகள் பிறவித் துன்பம் நீங்கி, இன்புறுமாறு வினையினைப் போக்கும் இறைவன் அடிக்கே தமிழ்மாலைகளைப் புனைந்து போற்றியதும், திருமறைக்காட்டில் திருக்கதவு அடைக்கப் பாடியதும், வைகை ஆற்றில் ஏடு எதிரேறிச் செல்லுமாறு திருப்பதிகம் பாடி சமணர்களை வென்றதும், திருநல்லூர் பெருமணத்தில் வாழ்க்கைத் துணைவியொடு ஒளியில் கலந்து மறைந்ததுமாகிய செய்திகள் இந்நூலில் இயம்பப் பெற்றுள்ளன.

திருச்சிற்றம்பலம்

கட்டளைக் கலித்துறை

1299. பாலித் தெழில்தங்கு பாரகம்
உய்யப் பறிதலையோர்
மாலுற் றழுந்த அவதரித்
தோன்மணி நீர்க்கமலத்
தாலித் தலர்மிசை யன்னம்
நடப்ப, வணங்கிதென்னாச்
சாலித் தலைபணி சண்பையர்
காவலன் சம்பந்தனே.

தெளிவுரை : அருள் பெற்று அழகு தங்கியுள்ள இந்த நிலவுலகம் உய்யவும் சமணர்கள் திகைத்து அழுந்தவும் அவதரித்தவன் யார் எனின், தெளிந்த நீர் நிறைந்த கமல மலர் களித்து அதன்மீது அன்னம் நடப்ப தெய்வ மகள் என்று சொல்லுமாறு நெற்பயிர் தலை சாய்ந்து பணிகின்ற சீகாழிக் காவலனாகிய சம்பந்தனே.

1300. கொங்குதங் குங்குஞ்சி கூடாப்
பருவத்துக் குன்றவில்லி
பங்குதங் கும்மங்கை தன்னருள்
பெற்றவன், பைம்புணரிப்
பொங்குவங் கப்புனல் சேர்த
புதுமணப் புன்னையின்கீழ்ச்
சங்குதங் கும்வயற் சண்பையர்
காவலன் சம்பந்தனே.

தெளிவுரை : பூந்தாது தங்கிய தலை மயிர் நீண்டு வளர்வதற்கு முன்பே சிவபெருமானது இடப்பாகத்திலுள்ள உமா தேவியாரது அருள் பெற்றவன், பசுமையான அலைகள் வீசுகின்ற வங்கக்கடல் சேர்த்த புதுமணப் புன்னையின்கீழ் சங்கு தங்கும் வயல்களையுடைய சீகாழிக் காவலன் சம்பந்தனே.

1301. குவளைக் கருங்கண் கொடியிடை
துன்பந் தவிரவன்று
துவளத் தொடுவிடந் தீர்த்த
தமிழின் தொகைசெய்தவன்
திவளக் கொடிக்குன்ற மாளிகைச்
சென்னியின் வாய்த்
தவளப் பிறைதங்கு சண்பையர்
காவலன் சம்பந்தனே.

தெளிவுரை : குவளைக் கருங்கண்களையும் கொடி இடையையும் உடையவளது துன்பம் நீங்க, அன்று துவளத் தொடுவிடத்தை இறக்கியவனும் தேவாரப் பாடல்களைப் பாடியவனும் ஒளிவிடுகின்ற அந்தக் கொடிகளையுடைய மலைபோன்ற மாளிகைகளின் உச்சிப் பகுதியில் வெண்மையான பிறைத் திங்கள் தங்குகின்ற சீகாழிக் காவலன் சம்பந்தனே.

1302. கள்ளம் பொழில்நனி பள்ளித்
தடங்கட மாக்கியஃதே
வெள்ளம் பணிநெய்த லாக்கிய
வித்தகன், வெண்குருகு
புள்ளொண் தவளப் புரிசங்கொ
டலாக் கயலுகளத்
தள்ளந் தடம்புனல் சண்பையர்
காவலன் சம்பந்தனே.

தெளிவுரை : கள்ளையும் அழகையும் உடைய சோலைகளை உடைய நனிப்பள்ளியை பெரிய பாலை நிலம் ஆக்கி, அதையே உளம் பெருகும் நெய்தல் நிலம் ஆக்கிய வித்தகன், வெண் குருகுப் புள் ஒண்தவளப் புரிசங்கொடு ஆரவாரிக்க கயல்மீன்கள் புரள, தள்ளம் தடம் புனல் சீகாழிக் காவலன் சம்பந்தனே.

இந்த 11 பாடல்களிலும் சீகாழியின் நில வளம், நீர் வளம், செல்வவளம் ஆகியவற்றைப் புகழ்ந்து பாடுகின்றார்.

1303. ஆறதே றுஞ்சடை யானருள்
மேவ வவனியர்க்கு
வீறதே றுந்தமி ழால்வழி
கண்டவன், மென்கிளிமாந்
தேறல்கோ தித்துறு சண்பகந்
தாவிச் செழுங்கமுகின்
தாறதே றும்பொழிற் சண்பையர்
காவலன் சம்பந்தனே.

தெளிவுரை : கங்கையைச் சடையில் உடையவனாகிய சிவபெருமான் அருள் பெற்ற உலகத்தவர்க்கு வெற்றியுள்ள தேவாரப் பாடல்களால் வழிகண்டவன், மென்கிளி மாம்பூவில் உள்ள தேனைக் கோதித் தூறு சண்பகம் தாவி செழுங் கமுகின் குலையின்மீது தாவும் பொழில்களையுடைய சீகாழியின் காவலன் சம்பந்தனே.

1304. அந்தமுந் தும்பிற வித்துயர்
தீர வரனடிக்கே
பந்தமுந் துந்தமிழ் செய்த
பராபரன் பைந்தடத்தேன்
வந்துமுந் தும்நந்தம் முத்தங்
கொடுப்ப வயற்கயலே
சந்தமுந் தும்பொழிற் சண்பையர்
காவலன் சம்பந்தனே.

தெளிவுரை : பிறவித் துன்பங்கள் நீங்க, சிவபெருமானது திருவடிகளுக்கே தளை முந்தும் தமிழ் வேதம் செய்த பராபரனும் பைந்தடந்தேன் வந்து முந்தும் சங்குகள் முத்துக்களைக் கொழிக்கும் வயல்களுக்கு அருகே சந்தன மரங்களை உடைய சோலைகள் சூழ்ந்த சீகாழியின் காவலனுமாக உள்ளவன் சம்பந்தன்.

1305. புண்டலைக் குஞ்சரப் போர்வையர்
கோயிற் புதவடைக்கும்
ஒண்டலைத் தண்டமிழ்க் குண்டா
சனியும்பர் பம்பிமின்னுங்
கொண்டலைக் கண்டுவண்
டாடப் பெடையொடுங்
தண்டலைக் குண்டகழ்ச் சண்பையர்
காவலன் சம்பந்தனே.

தெளிவுரை : புண்தலை யானையுரியாகிய போர்வையை உடைய இறைவன் கோயில் கொண்டிருக்கும் திருமறைக்காட்டுக் கோயில் கதவு மூடுமாறு தேவாரம் பாடியவரும், சமணர்களுக்குப் பேரிடியாய் உள்ளவரும், வானத்தில் மேகங்கள் ஒன்று கூடி மின்னியதைக் கண்டு வண்டாட, பெடையொடு கொக்கு உறங்கும் சோலைகளையும் ஆழமான அகழியையும் உடைய சீகாழியின் காவலருமாக இருப்பவர் திருஞானசம்பந்தரே.

1306. எண்டலைக் குந்தலை வன்கழல்
சூடியெ னுள்ளம்வெள்ளங்
கண்டலைப் பத்தன் கழல்தந்த
வன்கதிர் முத்தநத்தம்
விண்டலைப் பத்தியி லோடும்
விரவி மிளிர்பவளம்
தண்டலைக் குங்கடற் சண்பையர்
காவலன் சம்பந்தனே.

தெளிவுரை : எட்டுத் திக்குகளுக்கும் தலைவராய் இருப்பவரும், அவரது பாதங்களைச் சூடி என் உள்ளம் வெள்ளம் கண்டு அலைப்பத் தன் பாதங்களைத் தந்தவரும் ஒளியுடைய சங்குகள் விண்டு அலைகளின் வரிசையில் ஓடும். விரவி மிளிர் பவளம் கொடிகளின் தாள்களை அலைக்கும் கடல்சூழ்ந்த சீகாழிப் பதிக்குக் காவலருமாய் இருப்பவர் திருஞானசம்பந்தரே.

1307. ஆறுமண் டப்பண்டு செஞ்சொல்
நடாத்தி யமண்முழுதும்
பாறுமண் டக்கண்டு சைவ
சிகாமணி பைந்தடத்த
சேறுமண் டச்சங்கு செங்கயல்
தேமாங் கனிசிதறிச்
சாறுமண் டும்வயல் சண்பையர்
காவலன் சம்பந்தனே.

தெளிவுரை : வைகை ஆற்றில் இவர் விட்ட ஏடுகள் எதிரேறிச் செல்லுமாறு செய்து, சமணர்கள் உடல்களைப் பருந்துகள் உண்ணுமாறு செய்த சைவ சிகாமணியாயும், (பசுமையான வயல்களில் சேறு நிறைந்திருந்தன. அவைகளில் சங்குகளும் செங்கயல்களும் இருந்தன. தேமாங்கனிகள் சிதறி அவைகளில் சாறு மண்டியிருந்தன.) அத்தகைய வயல்கள் சூழ்ந்த சீகாழிக்குக் காவலருமாய் இருப்பவர் திருஞான சம்பந்தரே.

1308. விடந்திளைக் கும்அர வல்குல்மென்
கூந்தல் பெருமணத்தின்
வடந்திளைத் குங்கொங்கை புல்கிய
மன்மதன் வண்கதலிக்
கடந்திளைத் துக்கழு நீர்புல்கி
யொல்கிக் கரும்புரிஞ்சித்
தடந்திளைக் கும்புனல் சண்பையர்
காவலன் சம்பந்தனே.

தெளிவுரை : நச்சுப் பொருந்திய பாம்பின் படத்தைப்போல விளங்கும் அல்குலையும் மென்கூந்தலையும் பெருமணத்தின் வடந்திளைக்கும் கொங்கைகளைத் தழுவிய மன்மதன்போன்று உள்ளவரும் வளமுள்ள வாழைக் காடு திளைத்து கழுநீர் புல்கி ஒல்கிக் கரும்பு உரிஞ்சி தடம் திளைக்கும் நீர்வளமுள்ள சீர்காழிக்குக் காவலராகவும் இருப்பவர் ஞானசம்பந்தரே.

1309. பாலித்த கொங்கு குவளைகள்
ளம்பொழில் கீழ்ப்பரந்து
ஆலிப்ப ஆறதே றுங்கழ
னிச்சண்பை அந்தமுந்து
மேலிட்ட புண்டலைக் குஞ்சரத்
தெண்டலைக் குந்தலைவன்
கோலிட்ட வாறு விடந்திளைக்
கும்அர வல்குலையே.

தெளிவுரை : நில வளம் நீர் வளமிக்க சோலைகள் சூழ்ந்த சண்பை என்னும் சீகாழியானது, ஊழிக்காலத்தில் யானையை அழித்த சிவபெருமான் பணித்தவாறு விடம் பொருந்திய அரவு போன்று அல்குலையுடைய உமாதேவியாரோடு காட்சியளித்த இடமாகும். அப் பதியின் காவலன் ஞானசம்பந்தரே என்பதாம்.

திருச்சிற்றம்பலம்

36. ஆளுடையபிள்ளையார் திருமும்மணிக்கோவை (நம்பியாண்டார் நம்பிகள் அருளிச் செய்தது)

திருஞானசம்பந்தர் என்னும் ஆளுடைய பிள்ளையாரின் பெருமையை எடுத்து ஓதுவதாகிய இந்நூல், அகவல், வெண்பா, கட்டளைக் கலித்துறை என்னும் மூவகைப் பாக்களால் அமைந்ததாகலின், மூவகை மணிகளால் ஆகிய அழகிய மணிமாலை போன்று மும்மணிக்கோவை என்னும் பெயருடையதாயிற்று.

இதன்கண் முப்பது பாடல்கள் அமைந்துள்ளன. திருஞானசம்பந்தருடைய வரலாற்று நிகழ்ச்சிகளைக் குறித்துப் போற்றும் பாடல்களும் அவர் திருவாய் மலர்ந்து அருளிய தேவாரப் பதிகங்களின் சிறப்பினை விரித்துரைக்கும் பாடல்களும், பிள்ளையாரைக் காதலித்த தலைமகளுடைய துன்பத்தை எடுத்துரைக்கும் அகத்துறைப் பாடல்களும் இம் மும்மணிக்கோவையில் இனிது அமைந்துள்ளன.

திருச்சிற்றம்பலம்

ஆசிரியப்பா

1310. திங்கட் கொழுந்தொடு பொங்கரவு திளைக்குங்
கங்கைப் பேரியாற்றுக் கடுவரற் கலுழியின்
இதழியின் மெம்பொ னிருகரை சிதறிப்
புதலெருக்கு மலர்த்தும் புரிபுன் சடையோன்
திருவருள் பெற்ற இருபிறப் பாளன்

தெளிவுரை : பிறைச் சந்திரனோடு, சினம் மிக்க பாம்பு தங்கியுள்ள கங்கையாகிய பெரிய நதியின் விரைவாக வரும் வெள்ளத்தில், கொன்றையின் செந்நிற மலர்கள் இருகரைகளிலும் சிதறி, புதராக உள்ள எருக்கு மலர்ந்தும், முறுக்கிய சடையை உடைய சிவபெருமான் திருவருள் பெற்ற இருபிறப்பாளனாகிய ஞானசம்பந்தர்

முத்தீ வேள்வு நான்மறை வளர
ஐவேள் வுயர்த்த அறுதொழி லாளன்
ஏழிசை யாழை யெண்டிசை யறியத்
துண்டப் படுத்த தண்டமிழ் விரகன்
காழி நாடன் கவுணியர் தலைவன்

தெளிவுரை : முத்தீ வேள்வியும் நான்கு மறைகளும் வளர ஐவகையான வேள்வியை உயர்த்த அறுதொழிலாளன், ஏழிசை யாழை, எண்டிசை அறிய துண்டாகச் செய்யுமாறு யாழ்முரி என்னும் பதிகத்தைப் பாடிய தண்டமிழ்விரகன், சீகாழிநாடன், கவுணியர் குல தலைவன்.

மாழை நோக்கி மலைமகள் புதல்வன்
திருந்திய பாடல் விரும்பினர்க் கல்லது
கடுந்துய ருட்புகக் கைவிளிக் கும்இந்
நெடும்பிற விக்கடல் நீந்துவ தரிதே.

தெளிவுரை : மாவடுப்போன்ற கண்களை உடைய உமாதேவியாரின் புதல்வனாகிய ஞானசம்பந்தர் தேவாரப் பாடல்களை விரும்பியவர்களுக்கு அல்லாமல் மற்றவர்கள் கடுந்துயர் உட்புகக் கைவிளிக்கும் இந்நெடும் பிறவிக்கடல் நீந்துவது அரிது. ஞானசம்பந்தரை வழிபடுவோர் பிறவிப் பெருங்கடலை நீந்துவர் என்கிறார்.

வெண்பா

1311. அரியோடு நான்முகத்தோ னாதிசுரர்க் கெல்லாந்
தெரியாமைச் செந்தழலாய் நின்ற வொருவன்சீர்
தன்தலையின் மேல்தரித்த சம்பந்தன் தாளிணைகள்
என்தலையின் மேலிருக்க வென்று.

தெளிவுரை : திருமால், பிரமன் முதலிய எல்லாத் தேவர்களும் உணர முடியாதபடி செந்தீயாய் நின்ற சிவபெருமானது சிறப்புக்களைத் தன் தலையின்மேல் தரித்த ஞான சம்பந்தரின் திருவடிகள் என் தலையின்மேல் இருக்க வேண்டுகிறேன்.

கட்டளைக் கலித்துறை

1312. என்று மடியவ ருள்ளத்
திருப்பன விவ்வுலகோர்
நன்று மலர்கொடு தூவித்
துதிப்பன நல்லசங்கத்
தொன்றும் புலவர்கள் யாப்புக்
குரியன வொண்கலியைப்
பொன்றுங் கவுணியன் சைவ
சிகாமணி பொன்னடியே.

தெளிவுரை : ஒண் கலியைப் பொன்றச் செய்யும் கவுணியர் குல திலகரும் சைவ சிகாமணியுமாகிய ஞான சம்பந்தரது பொன்னடிகள் என்றும் அடியவர் உள்ளத்து இருப்பன. இவ்வுலகோர் நன்று மலர்கொடு தூவித்துதிப்பன. நல்ல சங்கத்து ஒன்றும் புலவர்கள் பாடலுக்கு உரியன என்பதாம்.

ஆசிரியப்பா

1313. அடுசினக் கடகரி யதுபட உரித்த
படர்சடைக் கடவுள்தன் திருவரு ளதனால் பிறந்தது
கழுமலம் என்னும் கடிநக ரதுவே வளர்ந்தது
தேங்கமழ் வாவிச் சிலம்பரை யன்பெறு
பூங்குழல் மாதிடு போனகம் உண்டே பெற்றது

தெளிவுரை: கோபம் மிக்க மதம் பொருந்திய யானையைக் கொன்று அதன் தோலை உரித்த படர்ந்த சடையை உடைய சிவபெருமானது திருவருளினால் பிறந்தது, சீகாழி நகரில் வளர்ந்தது, குளக்கரையில் உமா தேவியார் அளித்த ஞானப்பாலை உணவாகப் பெற்றது.

குழகனைப் பாடிக் கோலக்காப்புக்
கழகுடைச் செம்பொன் தாளம் அவையேதீர்த்தது
தாதமர் மருகற் சடையனைப் பாடிப்
பேதுறு பெண்ணின் கணவனை விடமே

தெளிவுரை : அந்த ஞானசம்பந்தர் சிவ பெருமானைப் பாடி திருக்கோலக்காவிலே புகுந்து அழகுடைச் செம்பொன் தாளம் அவையே தீர்த்தது, தாதமர் திருமருகல் பெருமானைப் பாடி மிகுந்த கலக்கத்தை அடைந்த பெண்ணின் கணவனை விடமே அடைத்தது,

அடைத்த தரசோ டிசையா அணிமறைக் காட்டுக்
குரைசேர் குடுமிக் கொழுமணிக் கதவே
ஏறிற் றத்தியும் மாவும் தவிர அரத்துறை
முத்தின் சிவிகை முன்னாட் பெற்றே
பாடிற் றருமறை ஒத்தூர் ஆண்பனை யதனைப்
பெருநிறம் எய்தும் பெண்பனை யாகவே

தெளிவுரை : திருநாவுக்கரசரோடு இசைந்து திருமறைக்காட்டுக் கோயில் கதவை மூடும்படி செய்தது, யானையும் குதிரையும் தவிர திருஅரத் துறையில் முத்தின் சிவிகை பெற்றுப் பாடியது, திருவோத்தூரில் ஆண்பனையைப் பெண்பனை ஆக்கியது,

கொண்டது பூவிடு மதுவில் பொறிவண் டுழலும்
ஆவடு துறையிற் பொன்ஆ யிரமே கண்டது
உறியோடுவீலி யொருகையிற் கொள்ளும்
பறிதலைச் சமணைப் பலகழு மிசையே
நீத்த தவிழ்ச்சுவை யேஅறிந் தரனடி பரவும்

தெளிவுரை : பூவிடு மதுவில் பொறிவண்டு சுற்றும் திருவாவடுதுறையில் ஆயிரம் பொன் கண்டது, உறியோடு மயிற் பீலியை ஒரு கையிற் கொள்ளும் பறித்த தலையை உடைய சமணர்களைக் கழுவேற்றி சோற்றுச் சுவையை மட்டும் அறிந்து அரன் அடி பரவும்,

தமிழ்ச்சுவை யறியாத் தம்பங் களையே நினைந்த
தள்ளற் பழனக் கொள்ளம் பூதூர்
இக்கரை ஓடம் அக்கரைச் செலவே மிக்கவர்
ஊனசம் பந்தம் அறுத்துயக் கொளவல
ஞானசம் பந்தன்இந் நானிலத் திடையே.

தெளிவுரை : தமிழ்ச் சுவை அறியாத தூண்களையே நினைந்தது, சேறு நிறைந்த கழனிகளை உடைய கொள்ளம்பூதூர் இக்கரை ஓடம் அக்கரை செலவே மிக்கவர் உடல் சம்பந்தத்தை அறுத்து உயக்கொள வல்ல திருஞானசம்பந்தர் இஞ்ஞாலத்திடையே இவ்வாறு செய்தார் என்பதாம்.

வெண்பா

1314. நிலத்துக்கு மேலாறு நீடுலகத் துச்சித்
தலத்துக் மேலேதா னென்பர் சொலத்தக்க
சுத்தர்கள் சேர்காழிச் சுரன்ஞான சம்பந்தன்
பத்தர்கள்போய் வாழும் பதி.

தெளிவுரை : சிறப்பித்துச் சொல்லத்தக்க சுத்தர்கள் போய்ச் சேர்கின்ற சீர்காழித் தேவனாகிய திருஞான சம்பந்தனது பக்தர்கள் போய் வாழும் பதியானது நிலத்துக்கு மேல் ஆறு நீடு உலகத்து உச்சித் தலத்துக்கு மேலேதான் என்று சொல்வார்கள்.

கட்டளைக் கலித்துறை

1315. பதிகம் பலபாடி நீடிய
பிள்ளை பரசுதரற்கு
அதிக மணுக்க னமணர்க்குக்
காலன் அவதரித்த
மதியந் தவழ்மாட மாளிகைக்
காழியென் றால்வணங்கார்
ஒதியம் பணைபோல் விழுவரந்
தோசில வூமர்களே.

தெளிவுரை : பல பதிகங்களைப் பாடி நீடிய பிள்ளை, மழுப்படையைக் கையிலேந்திய சிவபெருமானுக்கு நெருக்கமானவன். சமணர்களுக்கு இயமன் போன்றவன். அவன் அவதரித்த சந்திரன் தவழ் உயர்ந்த மாட மாளிகைகளை உடைய சீகாழி என்றால், சில ஊமர்கள் வணங்கமாட்டார்கள். ஓதிய மரக் கிளைபோல் விழுவர். அந்தோ! அவர்கள் நிலை வருந்தத்தக்கது. (ஓதிய மரம் பருத்திருக்குமே தவிர எளிதில் ஒடிந்து போகக் கூடியது.)

ஆசிரியப்பா

தோழி அறத்தொடு நிற்றல் : அதாவது தலைவியின் காதலை நற்றாய்க்குத் தெரிவித்தல்.

1316. தவள மாளிகைத் திவளும் யானையின்
கவுள்தலைக் கும்பத்
தும்பர் பதணத் தம்புதந் திளைக்கும்
பெருவளம் தழீஇத் திருவளர் புகலி
விளங்கப் பிறந்த வளங்கொள் சம்பந்தன்

தெளிவுரை : கவள மாளிகைத் திவளும் யானையின் கவுள்தலைக் கும்பத்து உம்பர் மேடைகளில் மேகம் தவழ்கின்ற பெருவளம் திகழும் திருவளர் சீகாழி விளங்கப் பிறந்த வளங்கொள் திருஞானசம்பந்தர்.

கருதியஞ் செவ்விச் சுருதியஞ் சிலம்பில்
தேமரு தினைவளர் காமரு புனத்து
மும்மதஞ் சொரியும் வெம்முகக் கைம்மா
மூரி மருப்பின் சீரிய முத்துக்
கொடுஞ்சிலை வளைத்தே கொடுஞ்சரந் துரந்து

தெளிவுரை : கருதிஅஞ் செவ்விச் சுருதி அம் சிலம்பில் (மலையில்) தேமரு தினைவளர் அழகிய தினைப்புனத்தில் மும்மதம் சொரியும் கொடிய முகத்தையுடைய ஆண் யானையின் மூரி மருப்பின் சீரிய முத்துக் கொடுஞ்சிலை வளைத்து கொடும் சரம் துரந்து (செலுத்தி),

முற்பட வந்து முயன்றங் குதவிசெய்
வெற்பனுக் கல்லது
சுணங்கணி மென்முலைச் சுரிகுழல் மாதினை
மணஞ்செய மதிப்பது நமக்குவன் பழியே.

தெளிவுரை : முன்னால் வந்து முயன்று அங்கு உதவி செய்த வெற்பனுக்கு அல்லாமல் வேறு ஒருவருக்குத் தேமல் படர்ந்த தலைவியை மணஞ்செய நினைப்பது நமக்கு வன் பழியாகும். இது களிறு தரு புணர்ச்சியால் அறத்தொடு நின்றது.

வெண்பா

1317. பழியொன்றும் ஓராதே பாயிடுக்கி வாளா
கழியுஞ் சமண்கையர் தம்மை யழியத்
துரந்தரங்கச் செற்றான் சுரும்பரற்றும் பாதம்
நிரதந்தரம்போய் நெஞ்சே நினை.

தெளிவுரை : வர இருக்கும் பழியைக் கவனியாமல், பாயை இடுக்கி வைத்துக் கொண்டு வீணாகக் காலங்கழிக்கும் சமணர்களை வருந்தி அழியுமாறு செய்த ஞானசம்பந்தரது வண்டுகள் மொய்க்கின்ற பாதங்களை நெஞ்சே ! எப்போதும் போய் நினைப்பாயாக. அதுதான் உய்யும் வழி என்று உணர்த்துகின்றார்.

கட்டளைக் கலித்துறை

1318. நினையா தரவெய்தி மேகலை
நெக்கு வளைசரிவாள்
தனையாவ வென்றின் றருளுதி
யேதடஞ் சாலிவயல்
கனையா வருமேதி கன்றுக்
கிரங்கித்தன் காழ்வழிபால்
நனையா வருங்காழி மேவிய
சீர்ஞான சம்பந்தனே.

தெளிவுரை : இது தோழி கூற்று: பெரிய நெல் வயல்களில் கனைத்து வருகின்ற பெண் எருமை தன் கன்றுக்கு இரங்கி தன் கால் வழியே பால் நனைந்து வரும் சீகாழி மேவிய சீர் திருஞானசம்பந்தரே ! உன்னை நினைந்து, மிக வருந்தி, மேகலை நெகிழ, வளைகள் கழலுமாறு உள்ள இந்தத் தலைவியை அந்தோ ! ஏற்று அருள் செய்வீராக.

ஆசிரியப்பா

1319. தனமலி கமலத் திருவெனுஞ் செல்வி
விருப்பொடு திளைக்கும் வீயா வின்பத்
தாடக மாடம் நீடுதென் புகலிக்
காமரு கவினார் கவுணியர் தலைவ
பொற்பமர் தோள நற்றமிழ் விரக

தெளிவுரை : தனம் மலிந்த தாமரையில் வாசம் செய்கின்ற திருவெனும் செல்வி விருப்பொடு திளைக்கும் கெடாத இன்பத்தோடு கூடிய பொன் மாடங்கள் நிறைந்த சீகாழி விரும்பத்தக்க அழகு பொருந்திய கவுணியர் குலத் தலைவரே ! அழகிய தோள்களை உடையவரே ! நற்றமிழ் விரகரே !

மலைமகள் புதல்வ கலைபயில் நாவநினாது
பொங்கொளி மார்பில் தங்கிய திருநீ
றாதரித் திறைஞ்சிய பேதையர் கையில்
வெள்வளை வாங்கிச் செம்பொன் கொடுத்தலின்
பிள்ளை யாவது தெரிந்தது பிறர்க்கே.

தெளிவுரை : உமாதேவியின் புதல்வரே ! கலைபயில் நாவினை உடையவரே ! உமது அழகிய மார்பில் தங்கிய திருநீற்றை விரும்பி வழிபடும் பேதையர் கையில் வெள்வளைகளைப் பெற்றுக் கொண்டு பசலையைக் கொடுத்தலின், பிள்ளையாவது தெரிந்தது பிறர்க்கே.

வெண்பா

1320. பிறவியெனும் பொல்லாப் பெருங்கடலை நீந்தத்
துறிவியெனுந் தொஃறோணி கண்டீர் நிறையுலகில்
பொன்மாலை மார்பன் புனற்காழிச் சம்பந்தன்
தன்மாலை ஞானத் தமிழ்.

தெளிவுரை : பிறவி எனும் பொல்லாத பெருங்கடலை நீந்தத் துறவி என்று சொல்லத் தக்கவரும், நிறை உலகில் பொன்மாலை மார்பன் நீர் வளமிக்க சீகாழிச் சம்பந்தரது தேவராப் பாடல்களாகிய தோலால் ஆகிய படகைக் காண்பீராக. பிறவிக் கடலைக் கடக்க தேவாரமாகிய தோணி உள்ளது என்கிறார்.

கட்டளைக் கலித்துறை

1321. ஞானந் திரளையி லேயுண்
டனையென்று நாடறியச்
சோனந் தருகுழ லார்சொல்
லிடாமுன் சுரும்புகட்குப்
பானந் தருபங்க யத்தார்
கொடுபடைச் சால்வழியே
கூனந் துருள்வயல் சூழ்காழி
மேவிய கொற்றவனே.

தெளிவுரை : ஞானப் பாலை உண்டனை என்று, நாடறிய முகிலைப்போல் விளங்குகின்ற கூந்தலையுடையவர்கள் சொல்வதற்கு முன், வண்டுக் கூட்டங்களுக்கு நீருணவைத் தருபவர் தாமரைபோன்ற பாதங்களை உடைய ஞானசம்பந்தர் என்பதாம். படைச்சால் வழியே வளைவையுடைய சங்குகள் நிறைந்த வயல் சூழ்ந்த சீகாழி மேவிய ஞானசம்பந்தரே தருபவர் எனக் கூட்டுக.

ஆசிரியப்பா

1322. அவனிதலம் நெரிய வெதிரெதிர் மலைஇச்
சொரிமதக் கறிற்று மத்தகம் போழ்ந்து
செஞ்சே றாடிச் செல்வன அரியே எஞ்சாப்
படவர வுச்சிப் பருமணி பிதுங்கப்
பிடரிடைப் பாய்வன பேழ்வாய்ப் புலியே

தெளிவுரை : நிலவுலகம் நெரியும்படி மூங்கில்கள் ஒன்றுக்கொன்று உராய்ந்து, மதம் பொழிகின்ற ஆண் யானையின் மத்தகத்தைப் பிளந்து, இரத்தம் பெருகுமாறு சிங்கங்கள் செல்லும் படத்தையுடைய பாம்புகளின் பெயர் மாணிக்கங்கள் பிதுங்க, பிளந்த வாயையுடைய புலிகள் பிடரிடை பாயும் இடையில்,

இடையிடைச் செறியிரு ளுருவச் சேண்விசும் பதனில்
பொறியென விழுவன பொங்கொளி மின்னே
உறுசின வரையா லுந்திய கலுழிக்
கரையா றுழல்வன கரடியின் கணனே

தெளிவுரை : நிறைந்த இருள் விலகுமாறு ஆகாயத்தில் மின்னல்கள் மிக்க ஒளியோடு பாயும் மலையிலிருந்து பெருகி வரும் காட்டாற்று வெள்ளம் கரை புரள அங்குக் கரடியின் கூட்டங்கள் அலையும்.

நிரையார் பொருகட லுதைந்த சுரிமுகச் சங்கு
செங்கயல் கிழித்த பங்கய மலரின்
செம்மடல் நிறைய வெண்முத் துதிர்க்கும்

தெளிவுரை : வரிசையாக, பொருகடல் உதைந்த சுரிமுகச் சங்குகள் செங்கயல் கிழித்த பங்கய மலரின் செம்மடல் நிறைய வெண்முத்து உதிர்க்கும்.

பழனக் கழனிக் கழுமல நாடன்
வைகையி லமணரை வாதுசெய் தறுத்த
சைவ சிகாமணி சம்பந்தன் வெற்பிற்
சிறுகிடை யவள்தன் பெருமுலை புணர்வான்
நெறியினில் வரலொழி நீமலை யோனே.

தெளிவுரை : அத்தகைய வயல்களையுடைய கழுமலர் என்னும் சீகாழி நாடன் வைகை ஆற்றில் ஏடு எதிரேற விட்டு, சமணர்களை வாதில் வென்று அறுத்த சைவ சிகாமணி சம்பந்தரது மலையில், சிறிய இடையை உடைய தலைவியினது பெரிய முலைகளைப் புணர்வதற்காக இந்த ஆபத்தான வழியில் மலைநாட்டுத் தலைவனே நீ வரவேண்டா.

ஈற்றயலடியில் முரண் தொடை பயின்று வந்துள்ளது.

வெண்பா

1323. மலைத்தலங்கள் மீதேறி மாதவங்கள் செய்தும்
முலைத்தடங்கள் நீத்தாலும் மூப்பர் கலைத்தலைவன்
சம்பந்தற் காளாய்த் தடங்காழி கைகூப்பித்
தம்பந்தந் தீராதார் தாம்.

தெளிவுரை : கலைத் தலைவராகிய சம்பந்தருக்குத் தொண்டராய்ப் பெரிய சீகாழியைக் கைகூப்பி வணங்கி, தம்முடைய பாச பந்தம் தீராதார் மலைத்தலங்கள் மீதேறி, மாதவங்கள் செய்து, முலைத்தடங்கள் மூத்தாலும் வயதில் மூப்படைவர் என்பதாம். ஞான சம்பந்தரை வழிபட்டால் பிறவித் துன்பங்கள் போம் என்கிறார்.

கட்டளைக் கலித்துறை

1324. தாமரை மாதவி சேறிய
நான்முகன் தன்பதிபோல்
காமரு சீர்வளர் காழிநன்
னாடன் கவித்திறத்து
நாமரு வாதவர் போல்அழ
கீந்துநல் வில்லிபின்னே
நீர்மரு வாத சுரத் தெங்ங
னேகுமென் நேரிழையே.

தெளிவுரை : இது செவிலி இரங்கல் துறை.

தாமரையாகிய சிறந்த இருக்கையில் ஏறிய பிரம தேவனது பிரமலோகம்போல், அழகிய சிறப்புடைய காழி நன்னாடன் ஆகிய ஞானசம்பந்தரது தேவாரப் பாடல்களைப் பாடாதவர்போல் அழகீந்து நல் வில்லியின் பின்னே நீரற்ற பாலைவனத்தில் என் நேரிழை எப்படிச் செல்வாள்.

ஆசிரியப்பா

1325. இழைகெழு மென்முலை யிதழிமென் மலர்கொயத்
தழைவர வொசித்த தடம்பொழி லிதுவே காமர்
கனைகுடைந் தேறித் துகிலது புனையநின்
றெனையுங் கண்டு வெள்கிட மிதுவே தினைதொறும்

தெளிவுரை : அணிகலன்கள் பொருந்திய தலைவி கொன்றையின் மென்மலர் பறிக்க, கிளையைத் தாழ்த்திய பெரிய சோலை இதுவே. அழகிய சுனையில் நீராடி, கரையேறி ஆடையை உடுத்திய என்னையும் கண்டு வெட்கப்பட்ட இடமும் இதுவே.

பாய்கிளி யிரியப் பையவந் தேறி
ஆயவென் றிருக்கும் அணிப்பரண் இதுவே ஈதே
இன்புறு சிறுசொ லவைபல வியற்றி
அன்பு செய் தென்னை யாட்கொளு மிடமே பொன்புரை

தெளிவுரை : நினைக்கும்தோறும் பாய்கிளி அஞ்சியோட தலைவி ஏறி வந்த அழகிய பரண் இதுவே. இன்புறு சிறுசொல் பலபேசி அன்பு செய்து என்னை ஆட்கொண்ட இடமும் இதுவே.

தடமலர்க் கமலக் குடுமியி லிருந்து
நற்றொழில் புரியும் நான்முகன் நாட்டைப்
புற்கடை கழீஇப் பொங்கு சராவத்து
நெய்த்துடுப் பெடுத்த மூத்தீப் புகையால்
நாள்தொறும் மறைக்குஞ் சேடுறு காழி

தெளிவுரை : பொன்புரை தடமலர்க் கமலக் குடுமியிலிருந்து நற்றொழில் புரியும் பிரமனது நாட்டைத் தருப்பைக் கொண்டு கழுவிப் பொங்கு அகப்பையில் நெய்யை முகந்து வளர்த்த முத்தீப் புகையால் நாள்தொறும் மறைக்கும் பெருமை பொருந்திய சீகாழி.

எண்டிசை நிறைந்த தண்டமிழ் விரகன்
நலங்கலந் தோங்கும் விலங்கலின் மாட்டுப்
பூம்புன மதனிற் காம்பன தோளி
பஞ்சில் திருந்தடி நோவப் போய்எனை
வஞ்சித் திருந்த மணியறை யிதுவே.

தெளிவுரை : எண்டிசை நிறைத்த தண்தமிழ் விரகன் நலங்கலந்து ஓங்கும் மலையின்மீது தினைப்புனம். அதனில் மூங்கில்போன்ற தோல்களை உடைய தலைவி, பஞ்சு தோய்த்த திருந்திய பாதம் நோவப் போய் என்னை வஞ்சித்திருந்த மணியறை இதுவே.

வெண்பா

1326. வேழங்க ளெய்பவர்க்கு வில்லாவ திக்காலம்
ஆழங் கடல்முத்தம் வந்தலைக்கும் நீள்வயல்சூழ்
வாயந்ததிவண் மாட மதிற்காழிக் கோன்சிலம்பிற்
சாய்ந்தது வண்தழையோ தான்.

தெளிவுரை : தோழி தலைவனை நகுதல்: யானைகளை எய்பவருக்கு வில்லாவது இக்காலம். ஆழமான கடலில் முத்துக்கள் வந்தலைக்கும் நீண்ட வயல்கள் சூழ்ந்த மாடங்களும் மதில்களும் பொருந்திய சீகாழிக் கோனாகிய ஞானசம்பந்தரது மலையில் சாய்ந்தது வண்தழையோ?

கட்டளைக் கலித்துறை

1327. தழைக்கின்ற சீர்மிகு ஞானசம்
பந்தன் தடமலைவாய்
அழைக்கின்ற மஞ்சைக் கலர்ந்தன
கோடலம் பெய்திடுவான்
இழைக்கின்ற தந்தரத் திந்திர
சாபம்நின் னெண்ணமொன்றும்
பிழைக்கின்ற தில்லைநற் றேர்வந்து
தோன்றிற்றுப் பெய்வளையே.

தெளிவுரை : தோழி தலைவன் வரவுரைத்தல்: தழைக்கின்ற சிறப்பினை உடைய ஞானசம்பந்தனது பெரிய மலையின்கண் அழைக்கின்ற மயிலுக்குக் காந்தள்கள் மலர்ந்தன. மழை நீர் பெய்யும் பொருட்டு இழைக்கின்ற வானவில் உனது எண்ணம் ஒன்றும் பிழைப்பதில்லை என்று குறிப்பாய்த் தெரிவிக்கின்றது. தலைவியே ! தலைவனின் தேர் வந்து நிற்கிறது. கார்ப் பருவத்தில் வருவதாகச் சொன்ன தலைவர் அதன்படி வந்து விட்டார் என்கிறார். மேகத்தைக் கண்டு மயில்கள் கூவி ஆரவாரம் செய்யும்.

ஆசிரியப்பா

1328. வளைகால் மந்தி மாமரப் பொந்தில்
விளைதே னுண்டு வேணுவின் துணியால்
பாறை யில்துயில் பனைக்கை வேழத்தை
உந்தி யெழுப்பு மந்தண் சிலம்ப அஃதிங்கு

தெளிவுரை : வளைந்த காலையுடைய பெண் குரங்கு மாமரப் பொந்தில் விளைந்த தேனையுண்டு, மூங்கில் கொம்பினால், பாறையில் துயில்கின்ற பனைமரம் போன்ற கையையுடைய யானையை உந்தி எழுப்பும் குளிர்ந்த மலை நாட்டுத் தலைவனே !

என்னைய ரிங்கு வருவர் பலரே
அன்னை காணி லலர்தூற் றும்மே பொன்னார்
சிறுபரற் கரந்த விளிகுரற் கிங்கிணி
சேவடி புல்லிச் சில்குர லியற்றி
அமுதுண் செவ்வா யருவி தூங்கத்
தாளம் பிரியாத் தடக்கை யசைத்துச்

தெளிவுரை : இங்கு என் தமையன்மார் வருவர். என் அன்னை பார்த்தால் அலர் தூற்றுவாள். பொன்னால் செய்யப்பட்ட பரற் கற்களை உள்ளீடாக வைத்துள்ள ஒலி செய்கின்ற கிங்கிணி அணிந்துள்ள பாதங்களையும், சிறுகுரல் இயற்றி அமுதுண்ணும் செவ்வாய் அருவி அசைய, தாளம் பிறழாத தடக்கையை அசைத்து,

சிறுகூத் தியற்றிச் சிவனருள் பெற்ற
நற்றமிழ் விரகன் பற்றலர் போல
இடுங்கிய மனத்தொடு மொடுங்கிய சென்று
பருதியுங் குடகடல் பாய்ந்தனன்
கருதிநிற் பதுபிழை கங்குலிப் புனத்தே.

தெளிவுரை : சிறுகூத்தியற்றிச் சிவனருள் பெற்ற நற்றமிழ் விரகனுடைய பகைவர்களைப்போல, இடுங்கிய மனத்தோடு ஒடுங்கிச் சென்று சூரியனும் மேற்குக் கடலில் மறைந்தனன். இப்புனத்தில் இன்றிரவு நீ தங்கியிருக்க நினைப்பது தவறாகும். எனவே செல்வாயாக என்பது குறிப்பு.

வெண்பா

1329. தேம்புனமே யுன்னைத் திரிந்து தொழுகின்றேன்
வாம்புகழ்சேர் சம்பந்தன் மாற்றலர்போல் தேம்பி
அழுதகன்றா ளென்னா தணிமலையர் வந்தால்
தொழுதகன்றா ளென்றுநீ சொல்.

தெளிவுரை : இது தலைவி கூற்று: இனிய தினைப்புனமே ! உன்னை மீளவும் தொழுகின்றேன். மிக்க புகழுடைய ஞானசம்பந்தரது பகைவர்களைப்போலத் தேம்பி அழுதகன்றாள் என்று கருதாமல், மலர்மாலை அணிந்த தலைவர் வந்தால் தலைவி தொழுதகன்றாள் என்று நீ சொல்வாயாக !

கட்டளைக் கலித்துறை

1330. சொற்செறி நீள்கவி செய்தன்று
வைகையில் தொல்லமணர்
பற்செறி யாவண்ணங் காத்தசம்
பந்தன் பயில்சிலம்பில்
கற்செறி வார்சுனை நீர்குடைந்
தாடுங் கனங்குழையை
இற்செறி யாவண்ணம் காத்திலை
வாழி யிரும்புனமே.

தெளிவுரை : இது தலைவன் வறும்புனம் கண்டு இரங்குதல்.

தெய்வீகச் சொற்கள் செறிந்த தேவாரப் பாடலைச் செய்து அன்று வைகையில் தொல் அமணர் பற்செறியா வண்ணம் காத்த சம்பந்தர் பயில் மலையில் கற்செறிவார் சுனை நீர் குடைந்து ஆடும் கனத்த குண்டலத்தை அணிந்த தலைவியை வீட்டில் அடைக்காதவாறு, இரும்புனமே ! நீ காத்திலை, வாழ்வாயாக.

ஆசிரியப்பா

1331. புனலற வறந்த புன்முளி சுரத்துச்
சினமலி வேடர் செஞ்சர முரீஇப்
படுகலைக் குளம்பின் முடுகு நாற்றத்
தாடு மரவி னகடு தீயப்
பாடு தகையின் பஞ்சுரங் கேட்டுக்

தெளிவுரை : செவிலி புறவொடு கூறுதல்.

நீர் காய்ந்த இந்தப் பாலை நிலத்தில் கோபமிக்க வேடர்கள் அம்பு தொடுத்து மான் குளம்பின் முடுகு நாற்றத்து ஆடும் பாம்பின் வயிறு காயுமாறு பாடுதகையின் பஞ்சுரங் கேட்டு,

கள்ளியங் கவட்டிடைப் பள்ளி கொள்ளும்
பொறிவரிப் புறவே யுறவலை காண்நீ நறைகமழ்
தேம்புனல் வாவித் திருக்கழு மலத்துப்
பையர வசைத்ததெய்வ நாயகன்
தன்னருள் பெற்ற பொன்னணிக் குன்றம்

தெளிவுரை : கள்ளியங் கவட்டிடைப் பள்ளி கொள்ளும் பொறிவரிப்புறவே சுற்றமன்று. இதை நீ அறிவாயாக. மணம் கமழும் தேம்புனல் வாவியை உடைய சீகாழியில் படத்தையுடைய பாம்பைக் கட்டிய சிவபெருமான் தன்னருள் பெற்ற பொன்னணிக் குன்றம்.

மானசம் பந்தம் மண்மிசைத் துறந்த
ஞானசம் பந்தனை நயவார் கிளைபோல்
வினையே னிருக்கும் மனைபிரி யாத
வஞ்சி மருங்கு லஞ்சொற் கிள்ளை
ஏதிலன் பின்செல விலக்கா தொழிந்தனை
ஆதலின் புறவே யுறவறலை நீயே

தெளிவுரை : மனிதத் தொடர்பை உலகில் துறந்த ஞானசம்பந்தரை விரும்பாதவர்களின் சுற்றத்தைப்போல் வினையேனாகிய நான் இருக்கும் வீட்டைப் பிரியாத வஞ்சி மருங்குல் அஞ்சொற் கிள்ளை அயலான் பின்செல விலக்காமல் இருந்துவிட்டாய். ஆதலின், புறவே நீ எனக்குச் சுற்றமன்று. தலைவி, தலைவனுடன் சென்றபோது நீ ஏன் விலக்கவில்லை என்று புறவைக் கேட்டு வருந்துகிறாள் செவிலி.

வெண்பா

1332. அலைகடலின் மீதோடி யந்நுளையர் வீசும்
வலைகடலில் வந்தேறு சங்கம் அலர்கடலை
வெண்முத் தவிழ்வயல்சூழ் வீங்குபுனற் காழியே
ஒண்முத் தமிழ்பயந்தா னூர்.

தெளிவுரை : அலைகளை உடைய கடலின்மீது சென்று வலையர் வீசும் வலையில் சிக்கும் சங்குகள் மலர்களினிடத்து வெண்முத்துக்களை உடைய வயல்கள் சூழ்ந்த நீர் வளமிக்க சீகாழி, ஒளி பொருந்திய முத்தமிழ்ப் பாடல்களாகிய தேவாரங்களைப் பாடிய திருஞானசம்பந்தரின் ஊராகும்.

கட்டளைக் கலித்துறை

1333. ஊரும் பசும்புர வித்தே
ரொளித்த தொளிவிசும்பில்
கூரு மிருளொடு கோழிகண்
தூஞ்சா கொடுவினையேற்
காரு முணர்ந்திலர் ஞானசம்
பந்தனந் தாமரையின்
தாருந் தருகில னெங்ஙனம்
யான்சங்கு தாங்குவதே.

தெளிவுரை : இரவில் தலைவி இரங்குதல்: கதிரவன் ஏறிச் செல்லும் பசும் குதிரை பூட்டிய தேர் மேற்குக் கடலில் மறைந்தது. பிரகாசமான வானத்தில் செறிந்த இருளோடு கோழி, கண் உறங்காமல் இருக்கும் வினையுடைய எனக்கு யாரும் ஆறுதல் சொல்வாரில்லை. திருஞானசம்பந்தர் தனது அழகிய தாமரை மலர் மாலையும் தரவில்லை. யான் கையில் வளையல்களைத் தாங்கிக் கொண்டிருப்பது எங்ஙனம்?

ஆசிரியப்பா

1334. தேமலி கமலப் பூமலி படப்பைத்
தலைமுக டேறி யிளவெயிற் காயும்
கவடிச் சிறுகாற் கர்க்ட கத்தைச்
சுவடிச் சியங்கும் சூல்நரி முதுகைத்
துன்னி யெழுந்து செந்நெல் மோதுங்

தெளிவுரை : தேன்மிகுந்த பூக்கள் மலிந்த வயலின் வரப்பின்மேல் ஏறி, இளவெயில் காயும் பிளவுபட்ட சிறிய கால்களையுடைய நண்டைத் தின்பதற்காக இயங்கும் கருப்பமுற்றிருக்கிற நரியின் முதுகைத் துள்ளியெழுந்து செந்நெல் மோதுகின்ற,

காழி நாட்டுக் கவுணியர் குலத்தை
வாழத் தோன்றிய வண்டமிழ் விரகன்
தெண்டிரைக் கடல்வாய்க்
காண்தகு செவ்விக் களிறுக ளுகுத்த
முட்டைமுன் கவரும் பெட்டையங் குருகே

தெளிவுரை : சீகாழி நாட்டுக் கவுணியர் குலத்தை வாழச் செய்யத் தோன்றிய வண்தமிழ் விரகன் தெண் திரைக்கடல்வாய் காண்தரு செவ்விக் களிறுகள் உகுத்த முட்டை முன் கவரும் பெட்டையங்குருகே ! (நாரையே!)

வாடை யடிப்ப வைகறைப் போதில்
தனிநீ போந்து பனிநீர் ஒழுகக்
கூசிக் குளிர்ந்து பேசா திருந்து
மேனி வெளுத்த காரண முரையாய்
இங்குத் தணந்தெய்தி நுமரும்
இன்னம்வந் திலரோ சொல்லிளங் குருகே.

தெளிவுரை : வாடைக் காற்று வீச விடியற்காலையில் தனியாக நீ வந்து பனி நீர் ஒழுகக் கூசிக் குளிர்ந்து பேசாமல் இருந்து உடல் முழுதும் வெளுத்த காரணத்தைச் சொல்வாயாக. இங்கு நீ தனித்து வந்து காத்திருப்பது ஏன்? உன்னை விட்டுப் பிரிந்த காதலன் (ஆண் நாரை) இன்னும் வரவில்லையோ ! சொல்வாயாக.

வெண்பா

1335. குருகும் பணிலமுங் கூன்நந்துஞ் சேலும்
பெருகும் வயற்காழிப் பிள்ளை யருகந்தர்
முன்கலங்க நட்ட முடைகெழுமுமால் இன்னம்
புன்கலங்கள் வைகைப் புனல்.

தெளிவுரை : நாரையும் முத்தும் வளைந்த சங்கும் மீனும் பெருகும் வயல்சூழ்ந்த சீகாழியின் பிள்ளை சமணர்கள் முன்பு கலங்க நட்டமுடை கெழுமுமால் இன்னம் புன் கலங்கல் வைகைப் புனல். சமணர்கள் கழுவேறிய போது கெழுமிய துர்நாற்றத்தைக் கூறுகின்றார்.

கட்டளைக் கலித்துறை

1336. புனமா மயில் சாயல் கண்டுமுன்
போகா கிளிபிரியா
இனமான் விழியொக்கும் மென்றுவிட்
டேகா விருநிலத்துக்
கனமா மதிற்காழி ஞானசம்
பந்தன் கடல்மலைவாய்த்
தினைமா திவள்காக்க வெங்கே
விளையுஞ் செழுங்கதிரே.

தெளிவுரை : தலைவியின் சாயலுக்கு மயிலும், மொழிக்குக் கிளியும், பார்வைக்கு மானும் தமவாகக் கொண்டு பிரியாதிருத்தலின் தினை எவ்வாறு விளையும் என்கிறார்.

கனமான மதில்களை உடைய சீகாழி ஞானசம்பந்தன் கடமலைவாய்த் தினைப் புனத்தைத் தலைவி காத்தாலும், செழுங்கதிர் எங்கே விளையும் எனக் கூட்டுக. கதிர்களை இம்மூன்றும் தின்றுவிடும் என்பது கருத்து.

ஆசிரியப்பா

1337. கதிர்மதி நுழையும் படர்சடை மகுடத்
தொருத்தியைக் கரந்த விருத்தனைப் பாடி
முத்தின் சிவிகை முன்னாட் பெற்ற
அத்தன் காழி நாட்டுறை யணங்கோ மொய்த்தெழு
தாமரை யல்லித் தவிசிடை வளர்ந்த

தெளிவுரை : ஒளியுடைய சந்திரன் நுழையும் படர்சடை மகுடத்தில் கங்கையை ஒளித்து வைத்துள்ள சிவபெருமானைப் பாடி, முத்துச் சிவிகையை முன்பு பெற்ற ஞானசம்பந்தரது சீகாழி நாட்டில் வாழ்கின்ற அணங்கோ மொய்த்தெழு தாமரை அகஇதழ் தவிசு இடைவளர்ந்த

காமரு செல்வக் கனங்குழை யவளோ மீமருத்
தருவளர் விசும்பில் தவநெறி கலக்கும்
உருவளர் கொங்கை யுருப்பசி தானோ
வாருணக் கொம்போ மதனன் கொடியோ
ஆரணி யத்து ளருந்தெய்வ மதுவோ

தெளிவுரை : காமரு செல்வ கனங்குழையாளாகிய திருமகளோ மணந்தங்கிய கற்பகமரமோ ஆகாயத்தில் தவநெறி கலக்கும் உருவளர் கொங்கைகளையுடைய உருப்பசிதானோ, வாருணக் கொம்போ, மன்மதன் கொடியோ வனதேவதையோ,

வண்டமர் குழலும் கெண்டையங் கண்ணும்
வஞ்சி மருங்குங் கிஞ்சுக வாயும்
ஏந்திள முலையுங் காந்தளங் கையும்
ஒவியர் தங்க லொண்மதி காட்டும்
வட்டிகைப் பலகை வான்துகி லிகையால்
இயக்குதற் கரியதோர் உருவுகண் டென்னை
மயக்கவந் துதித்ததோர் வடிவிது தானே.

தெளிவுரை : வண்டமர் குழலும் கெண்டையங் கண்ணும் வஞ்சி மருங்கும் முள் முருங்கை போன்ற வாயும், ஏந்தின முலைகளும் காந்தள் போன்ற கைகளும் சித்திரம் எழுதுவோர் தங்கள் ஒண்மதி காட்டும் ஓவியம் எழுதும் பலகையோ சிறந்த எழுதுகோலால் எழுதுவதற்கு அரியதோர் உருவு கண்டு என்னை மயக்க வந்து உதித்ததோர் வடிவு இதுதானோ?

இது ஐயம் என்னும் துறை. தலைவன் தலைவியின் அழகைச் சித்திரிப்பது. எழுத முடியாத சந்தேக நிலையென்று தலைவியின் அழகை வருணிக்கின்றான்.

வெண்பா

1338. வடிக்கண்ணி யாளையிவ் வான்சுரத்தி னூடே
கடிக்கண்ணி யானோடும் கண்டோம் வடிக்கண்ணி
மாம்பொழில்சேர் வைகை யமண்மலைந்தான் வண்காழிப்
பூம்பொழிலே சேர்ந்திருப்பார் புக்கு.

தெளிவுரை : இடைசுரத்துக் கண்டோர் கூறுதல்: கூர்மையான கண்களை உடைய தலைவியை இந்தப் பாலை நிலத்தின் வழியாக மணந்தங்கிய மாலையை உடைய தலைவனுடன் கண்டோம். அவர்கள் இந்நேரம் மாலைபோல வடுக்களை உடைய மாமரச் சோலையைச் சேர்ந்த வைகையில் சமணர்களை வென்றான் ஆகிய ஞானசம்பந்தரது சீர்காழிப் பூஞ் சோலையைப் போய்ச் சேர்ந்திருப்பர்.

கட்டளைக் கலித்துறை

1339. குருந்தும் தரளமும் போல்வண்ண
வெண்ணகைக் கொய்மலராள்
பொருந்தும் திரள்புயத் தண்ணல்சம்
பந்தன்பொற் றாமரைக்கா
வருந்தும் திரள்கொங்கை மங்கையை
வாட்டினை வானகத்தே
திருந்துந் திரள்முகில் முந்திவந்
தேறுதிங் கட்கொழுந்தே.

தெளிவுரை : சந்திரோபாலம்பனம். திங்கட் கொழுந்தே ! குருத்தும் முத்தும்போல் நிறமுடைய வெண்ணகை கொய் மலராள் பொருந்தும் திரள்புயத்து அண்ணல் ஆகிய ஞானசம்பந்தரது பொற்றாமரையாகிய திருவடிகளுக்காக வருந்தும் திரண்ட கொங்கைகளை உடைய மங்கையைக் காட்டில் வருத்தினை. திருந்தும் திரள் மேகத்திற்கு முந்தி வந்து உயர்கின்றனை. இது சந்திரனைப் பழிக்கும் துறை. தனித்திருக்கும் தலைவி சந்திரனைக் கண்டால் வருந்துவாள்.

திருச்சிற்றம்பலம்

37. ஆளுடையபிள்ளையார் திருவுலாமாலை (நம்பியாண்டார் நம்பிகள் அருளிச் செய்தது)

இந்நூல் திருஞானசம்பந்தப் பிள்ளையார் சீகாழியில் திருவுலா போந்தருளிய இயல்பினை விரித்துரைத்துப் போற்றுவதாகலின் ஆளுடைய பிள்ளையார் திருவுலா மாலையென்று பெயருடையதாயிற்று.

உலா நூல் இயற்றப்பட வேண்டிய மரபுப்படி இவ்வுலாவும் கலிவெண்பாவினால் இயற்றப் பெற்றிருக் கின்றது. ஆளுடைய பிள்ளையார் திருவுலாமாலை என்னும் இந்நூலிற் பாட்டுடைத் தலைவராகிய திருஞானசம்பந்தப் பிள்ளையாருடைய இயல்பே பெரிதும் விரித்துரைக்கப் பெற்றுள்ளது.

பிள்ளையாரைக் காதலித்த எழுவகைப் பருவத்துப் பெண்களுடைய செய்திகளும் பொதுவகையாற் கூறப்பட்டுள்ளதே அன்றி, தனித்தனியே வகுத்துக் கூறப்படவில்லை. இந்நூல் 143 கண்ணிகளை உடையதாகும்.

திருச்சிற்றம்பலம்

1340. திருந்திய சீர்ச்செந்தா மரைத் தடத்துச் சென் றோர்
இருந் தண் இளமேதி பாயப் பொருந்திய

புள் இரியப் பொங்கு கயல்வெருவப் பூங்குவளைக்
கள் இரியச் செங்கழுநீர் கால்சிதையத் துள்ளிக்

குருகிரியக் கூன்இறவம் பாயக் கெளிறு
முருகுவிரி பொய்மையின்கண் மூழ்க வெருவுற்றக்

கோட்டகத்துப் பாய்வாளை கண்டலவன் கூசிப் போய்த்
தோட்டகத்த செந்நெல் துறைஅடையச் சேட்டகத்த

காவி முகம்மலரக் கார்நீலம் கண்படுப்ப
ஆவிக்கண் நெய்தல் அலமர மேவிய

தெளிவுரை : திருந்தியசீர்ச் செந்தாமரை குளத்திற்குச் சென்று ஓர் இருந்தண் இளஎரிமை பாய, அங்கிருந்த பறவை பறந்தோட, கயல் மீன்கள் அஞ்ச, பூங்குவளை மலர்களில் இருந்த தேன் ஒழுக, செங்கழுநீர் தண்டு ஒடிய, துள்ளிப் பறவையினம் அங்கிருந்து பறந்துசெல்ல, இறால் மீன்பாய, களிறு என்னும் ஒருவகைப் பெருமீன் மணம் வீசும் குளத்தில் மூழ்க, பயந்த வாளை மீனைக் கண்டு நண்டு நாணிச் சென்று தோட்டத்தில் உள்ள செந்நெல் வயலை அடைய, தூரத்திலிருந்த நீலோற்பல மலர்கள் மலர கார்நீலம் உறங்க குளத்தில் நெய்தல் வருந்த (நீர் வளத்தையும் நில வளத்தையும் வருணிக்கிறார்.)

அன்னம் துயில்இழப்ப அம்சிறைசேர் வண்டினங்கள்
துன்னும் துணைஇழப்பச் சூழ் கிடங்கின் மன்னிய

வள்ளை நகைகாட்ட வண்குமுதல் வாய்காட்ட
தெள்ளுபுனற் பங்கயங்கள் தேன்காட்ட மெள்ள

நிலவு மலணையினின்றிழிந்த சங்கம்
இலகுகதிர் நித்திலங்கள் ஈன உலவிய

மல்லைப் பழனத்து வார்பிரசம் மீதழிய
ஒல்லை வரம்பிடறி ஓடிப்போய்ப் புல்லிய

பாசடைய செந்நெற் படர் ஒளியால் பல்கதிரோன்
தேசடைய ஓங்கும் செறுவுகளும் மாசில்நீர்

தெளிவுரை : அன்னம் துயில் எழுப்ப அழகிய சிறகுகளையுடைய வண்டுக் கூட்டங்கள் தமது துணையை இழக்க, அந்த ஆழமான நீர்நிலையில் உள்ள வள்ளைக் கொடி சிரிக்க, வளப்பம் பொருந்திய குமுதம் சிரிக்க, அந்த நீர் நிலையிலுள்ள தாமரை மலர்கள் தேன் சொரிய, மெள்ள மலர்ப்படுக்கையில் இருந்து சங்குகள் முத்துக்களை அளிக்க, வயல்களில் தேன் வழிய வரம்பைக் கடந்து சென்று நெல் படர் ஒளியால் சூரியனும் ஒளி குறையுமாறு செய்யும் வயல்களும், (இதுவும் வருணனைத் தொடர்ச்சி)

நித்திலத்திற் சாயும் நிகழ்மரக தத் தோலும்
தொத்தொளி செம்பொன் தொழிற்பரிய மொய்த்த

பவளத்தின் செவ்வியும் பாங்கணைய ஓங்கித்
திவளக் கொடிமருங்கிற் சேர்த்தித் துவளாமைப்

பட்டாடை கொண்டுடுத்துப் பைந்தோ டிலங்குகுழை
இட்டமைந்த கண்ணார் இளங்கமுகும் விட்டொளிசேர்

கண்கள் அழல் சிதறிக் காய்சினத்த வாய்மதத்துத்
தண்டலையின் நீழல் தறிஅணைந்து கொண்ட

கொலைபுரியா நீர்மையவாய்க் கொம்புவளைத் தேந்தி
மலையும் மரவடிவும் கொண்டாங் கிலை நெருங்கு

தெளிவுரை : முத்தினுடைய ஒளியும் மரகதம் (பச்சைமணி) வீசும் ஒளியும் செம்பொன் நிறம் பெற பவளத்தின் செவ்வியும் கொடியின் மத்தியில் பட்டாடை உடுத்தி, தோடு இலங்கும், இளங் கமுகும் (பாக்கு மரமும்) கலந்த ஒலியுள்ள சோலையின் நீழலில் கொல்லும் எண்ணமுடைய கொம்பு வளைத்து ஏந்தி மலையும் மர வடிவம் கொண்டது போல, (வருணனை தொடர்கிறது)

சூதத் திரளும் கொகுகனிக ளான்நிவந்த
மேதகுசீர்த் தெங்கின் வியன்பொழிலும் போதுற்

றினம் ஒருங்கு செவ்வியவாய் இன்தேன் ததும்பும்
கனி நெருங்கு திண்கதலிக் காடும் நனிவிளங்கு

நாற்றத்தால் எண்டிசையும் வந்து நலம் சிறப்ப
ஊற்று மடுத்த உயர்பலவும் மாற்றமரு

மஞ்சள் எழில்வனமும் மாதுளையின் வார்பொழிலும்
இஞ்சி இளங்காவின் ஈட்டமும் எஞ்சாத

கூந்தற் கமுகும் குளிர்பாட லத் தெழிலும்
வாய்ந்தசீர்ச் சண்பகத்தின் வண்காடும் ஏந்தெழில்ஆர்

தெளிவுரை : இலை நெருங்கிய மாமரக் கூட்டம், நெருங்கிய கனிகளால் உயர்ந்த தென்னந் தோப்புக்களும், பழங்களோடு கூடிய வாழை மரக்காடும், மிகுதியான மணத்தால் சிறந்த உயர் பலா மரங்களும் மஞ்சள் எழில் வளமும் மாதுளையின் வார் பொழிலும் இஞ்சி விளையும் இளங்காவின் ஈட்டமும் கூந்தற் கமுகும் பாதிரி மரம் சண்பக மரங்களின் காடும், (வருணனை தொடர்கிறது)

மாதவியும் புன்னையும் மன்நும் மலர்க்குரவும்
கேதையும் எங்கும் கெழீஇப் போதின்

இளந்தென்றல் வந்தசைப்ப எண்டிசையும் வாசம்
வளந்துன்று வார்பொழிலின் மாடே கிளர்ந்தெங்கும்

ஆலை ஒலியும் அரிவார் குரல்ஒலியும்
சோலைக் கிளிமிழற்றும் சொல்லொலியும் ஆலும்

அறுபதங்கள் ஆர்ப்பொலியும் ஆன்றபொலி வெய்தி
உறுதிரைநீர் வேலை ஒலிப்ப வெறிகமழும்

நந்தா வனத்தியல்பும் நற்றவத் தோர் சார்விடமும்
அந்தமில் சீரார் அழகினால் முந்திப்

தெளிவுரை : மாதவி, புன்னை, குருக்கத்தி, தாழை இவை எங்கும் நிறைந்து, போதின் இளந்தென்றல் வந்தசைப்ப எண்டிசையும் மணம் வீசும் நீண்ட சோலையில் கிளர்ந்தெங்கும் கரும்பாலைகளும், கரும்பை அரிபவர்கள் செய்யும் ஒலியும் சோலைக் கிளிகள் மிழற்றும் சொல் ஒலியும், வண்டுகள் செய்யும் ஒலியும் கடல் அலைகளின் ஓசையும், மணங்கமழும் நந்தவனத்தொலியும் தவசிகள் ஆசிரமங்களின் அழகும் (வருணனை தொடர்கிறது)

புகழ்வாரும் தன்மையதாய்ப் பூதலத்துள் ஓங்கி
நிகழ்கிடங்கும் சூழ்கிடப்ப நேரே திகழ

முளைநிரைத்து மூரிச் சிறைவகுத்து மொய்த்த
புளகத்தின் பாம்புரிசூழ் போகி வளர

இரும்பதணம் சேர இருத்தி எழில் நாஞ்சில்
மருங்கணைய அட்டாலை யிட்டுப் பொருந்தியசீர்த்

தோமரமும் தொல்லைப் பொறிவீசி யந்திரமும்
காமரமும் ஏப்புழையும் கைகலந்து மீ மருவும்

வெங்கதிரோன் தேர்விலங்க மிக் குயர்ந்த மேருப் போன்று
அங்கனகத் திஞ்சி அணிபெற்றுப் பொங்கிகொளிசேர்

தெளிவுரை : புகழ்ந்து சொல்லும் தன்மையதாய் உலகில் சிறப்புற்றுத் திகழ்கின்ற அகழியும் சூழ்ந்திருக்கப் பெரிய மேடை, மதிலின் உறுப்பாகிய நாஞ்சியில் உள்ள மேற் பரணில் தோமரம் என்னும் ஆயுதமும், வீசி எறியும் இயந்திரமும் காமரமும் அம்பு விடுவதற்குரிய துளையும் பொருந்திச் சூரிய மண்டலம் வரை உயர்ந்துள்ள மேருமலை போன்ற உயர்ந்த மதிலையுடைய (சீகாழியின் மதிலையும் அகழியையும் புகழ்கிறார்)

மாளிகையும் மன்னியசீர் மண்டபமும் ஒண்தலத்த
சூளிகையும் துற்றெழுந்த தெற்றிகளும் வாளொளிய

நாடக சாலையும் நன்பொற் கபோதகம் சேர்
பீடமைத்த மாடத்தின் பெற்றியும் கேடில்

உருவு பெறவகுத்த அம்பலமும்ஓங்கு
தெருவும் வகுத்தசெய் குன்றும் மருவினிய

சித்திரக் காவும் செழும் பொழிலும் வாவிகளும்
நித்திலஞ்சேர் நீடு நிலைக்களமும் எத்திசையும்

துன்னி எழில்சிறப்பச் சோதி மலர்மடந்தை
மன்னி மகிழ்ந்துறையும் வாய்மைத்தாய்ப் பொன்னும்

தெளிவுரை : மாளிகையும், மண்டபமும், நிலா முற்றமும், திண்ணைகளும், நாடக சாலையும், விட்டங்கள் பொருத்தப்பட்ட மாடங்களும், அம்பலமும், (ஆடு அரங்கம்) நீண்டுயர்ந்த தெருக்களும், செய்குன்றும், உபவனமும், சோலையும், குளங்களும் முத்துக்களால் அலங்கரிக்கப்பட்ட நிலைக்கணமும், திருமகள் பொருந்தி உறையும் சிறப்புடையதாய், (நகரமைப்பு வருணனை)

மரகதமும் நித்திலமும் மாமணியும் பேணி
இரவலருக் கெப்போதும் ஈந்து கரவாது

கற்பகமும் காருமெனக் கற்றவர்க்கும் நற்றவர்க்கும்
தப்பாக் கொடைவளர்க்கும் சாயாத செப்பத்தால்

பொய்மை கடிந்து புகழ்புரிந்து பூதலத்து
மெய்ம்மை தலைசிறந்து மேதக்கும் உண்மை

மறைபயில்வார் மன்னும் வியாகரணக் கேள்வித்
துறைபயில்வார் தொன்னூல் பயில்வார் முறைமையால்

ஆகமங்கள் கேட்பார் அருங்கலைநூல் ஆதரித்துப்
போகம் ஒடுங்காப் பொருள்துய்ப்பார் சோகமின்றி

தெளிவுரை : மரகதமும் முத்தும் மாமணியும் விரும்பி யாசிப்பவர்களுக்கு எப்போதும் கொடுத்தும், ஒளிக்காமல் கற்பகமரமும் மேகமும் போன்று கற்றவர்க்கும் நற்றவர்க்கும் தப்பாமல் கொடை வளர்க்கும் கோணாத நன்மையினால், பொய்ம்மை கடிந்து, புகழ் புரிந்து இவ்வுலகில் மெய்ம்மை தலை தூக்கி, உண்மை வேதம் ஓதுபவர் பொருந்தியுள்ளதும் இலக்கண நூல் வேள்வித் துறை பயில்வார், தொன்னூல் பயில்வார், முறையாக ஆகமங்கள் (தரும நூல்கள்) கேட்பார், அருங்கலை நூல் ஆதரித்துப் போகம் ஒடுங்காப் பொருள் துய்ப்பார், (நகர மாந்தர் வருணனை)

நீதி நிலையுணர்வார் நீள் நிலத்துள் ஐம்புலனும்
காதல் விடுதவங்கள் காமுறு வார் ஆதி

அருங்கலைநூல் ஓதுவார் ஆதரித்து வென்றிக்
கருங்கலிநீங் கக்கனல்வ குப்பார் ஒருங்கிருந்து

காமநூல் கேட்பார் கலைஞானங் காதலிப்பார்
ஒமநூல் ஒதுவார்க் குத்தரிப்பார் பூமன்னும்

நான்முகனே அன்னசீர் நானூற் றுவர்மறையோர்
தாம்மன்னி வாவும் தகைமைத்தாய் நாமன்னும்

ஆரணங்கும் மற்றை அருந்ததியும் போல்மடவார்
ஏரணங்கு மாடத் தினிதிருந்து சீரணங்கு

தெளிவுரை : நீதி நிலையுணர்வார், இவ்வுலகில் ஐம்புலனும் காதல் விடு தவங்கள் காமுறுவார், ஆதி அருங்கலை நூல் ஓதுவார், தீவினைகள் நீங்க வேள்விக் காரியங்கள் செய்வார், ஒருங்கிருந்து காம நூல் கேட்பார், கலை ஞானம் காதலிப்பார், ஓமநூல் ஓதுவார், உத்தரிப்பார், பிரமனே என்று சொல்லுமாறு நானூற்றுவர் மறையோர் பொருந்தி மாதர்கள் சிறந்த மாடத்தில் இனிதிருந்து, (நகரமாந்தர் இயல்பு)

வீணை பயிற்றுவார் யாழ்பயில்வார் மேவியசீர்ப்
பாணம் பயில்வார் பயன்உறுவார் பேணியசீர்ப்

பூவைக்குப் பாட்டுரைப்பார் பொற்கிளிக்குச் சொற் பயில்வார்
பாவைக்குப் பொன்புனைந்து பண்புறுவா ராய் எங்கும்

மங்கையர்கள் கூட்டமும் மன்னு சிறார்குழுவும்
பொங்குலகம் எல்லாம் பொலிவடையத் தங்கிய

வேத ஒலியும் விழாவொலியும் மெல்லியலார்
கீத ஒலியும் கிளர்ந்தோங்கும் மாதரார்

பாவை ஒலியும் பறைஒலியும் பல்சனங்கள்
மேவும் ஒலியும் வியன்நகரங் காவலர்கள்

தெளிவுரை : (வீணை வேறு, யாழ் வேறு) வீணை பயில்பவரும், யாழ் பயில்பவரும், நாடகம் பயில்வாரும், பயனுறுவாரும், மைனாவுக்குப் பாட்டு உரைப்பாரும், பொற் கிளிக்குச் சொற் பயில்வாரும், பாவைக்குப் பொன் புனைந்து பண்புறுவாருமாய் எல்லா இடங்களிலும் மங்கையர்கள் கூட்டமும், மன்னு சிறுவர்கள் குழுவும், உலகம் உய்யுமாறு செய்யப்படும் வேத ஒலியும் விழா ஒலியும், மெய்யிலார் கீத ஒலியும் கிளர்ந்தோங்கும், (நகரில் உள்ளார் சிறப்பு).

பம்பைத் துடிஒலியும் பவ்வப் படைஒலியும்
கம்பக் களிற்றொலியும் கைகலந்து நம்பிய

கார்முழுக்கம் மற்றைக் கடல்முழுக்கம் போற்கலந்த
சீர் முழக்கம் எங்கும் செவிடுபடப் பார்விளங்கு

செல்வம் நிறைந்த ஊர் சீரில் திகழ்ந்தஊர்
மல்கு மலர்மடந்தை மன்னும் ஊர் சொல்லினிய

ஞாலத்து மிக்கஊர் நானூற் றுவர்களூர்
வேலொத்த கண்ணார் விளங்கும் ஊர் ஆலித்து

மன்னிருகால் வேளை வளர்வெள்ளத் தும்பரொடும்
பன்னிருகால் நீரில் மிதந்தஊர் மன்னும்

தெளிவுரை : பம்பை ஒலியும் உடுக்கை ஒலியும், கடல் போன்ற படை ஒலியும், அசைகின்ற யானைகளின் ஒலியும் ஒன்றுகூடி மேகத்தின் முழக்கமும் கடல் முழக்கமும் கலந்த சீர்முழக்கம் எங்கும் செவிடுபட உலகில் சிறந்து விளங்குகின்ற செல்வம் நிறைந்த ஊர், சீரில் சிறந்த ஓர் திருமகள் வாசம் செய்யும் ஊர், உலகில் உயர்ந்த ஊர், நானூற்றுவர் வாழும் ஊர், அழகிய மாதர்கள் வாழும் ஊர், இரண்டு முறை கடல் வெள்ளத்துத் தேவர்களோடு பன்னிரண்டு முறை நீரில் மிதந்த ஊர், (நகரின் மாண்பு)

பிரமன்ஊர் வேணுபுரம் பேரொலிநீர் சண்பை
அரன்மன்னு தண்காழி அம்பொற் சிரபுரம்

பூந்தராய் கொச்சைவயம் வெங்குருப் பொங்குபுனல்
வாய்ந்தநல் தோணிபுரம் மறையோர் ஏய்ந்த

புகலி கழுமலம் பூம்புறவம் என்றிப்
பகர்கின்ற பண்புற்ற தாகித் திகழ்கின்ற

மல்லைச் செழுநகரம் மன்னவும் வல்லமணர்
ஒல்லைக் கழுவில் உலக்கவும் எல்லையிலா

மாதவத்தோர் வாழவும் வையகத்தோர் உய்யவும்
மேதக்க வானோர் வியப்பவும் ஆதியாம்

தெளிவுரை : (சீகாழிக்குரிய பன்னிரண்டு பெயர்களையும் கூறுகிறார்). நிலைபெற்ற 1. பிரமனூர், 2. வேணுபுரம், 3. சண்பை, 4. காழி, 5. சிரபுரம், 6. பூந்தராய், 7. கொச்சைவயம், 8. வெங்குரு, 9. தோணிபுரம், 10. புகலி, 11. கழுமலம், 12. பூம்புறவம். இவ்வாறு சிறந்த பண்புடையதாய்த் திகழ்கின்ற மல்லைச் செழுநகரம் நிலை பெறவும் சமணர்களை விரைவில் கழுவேற்றவும், எல்லையில்லா மாதவத்தோர் வாழவும், உலகோர் உய்யவும் மேதக்க வானோர் வியக்கவும்,

வென்றிக் கலிகெடவும் வேதத் தொலிமிகவும்
ஒன்றிச் சிவனடியார் ஒங்கவும் துன்றிய

பன்னு தமிழ்ப்பதினா றாயிர நற்பனுவல்
மன்னு புவியவர்க்கு வாய்ப்பவும் முன்னிய

சிந்தனையால் சீரார் கவுணியர்க்கோர் சேய்என்ன
வந்தங் கவதரித்த வள்ளலை அந்தமில் சீர்

ஞானச் சுடர்விளக்கை நற்றவத்தோர் கற்பகத்தை
மான மறைஅவற்றின் வான்பொருளை - ஆனசீர்த்

தத்துவனை நித்தனைச் சைவத் தவர்அரசை
வித்தகத்தால் ஓங்கு விடலையை முத்தமிழின்

தெளிவுரை : வென்றிக் கலிகெடவும் வேதத்து ஒலி மிகவும், ஒன்றிச் சிவனடியார் ஓங்கவும், தேவாரப் பாடல்கள் பதினாறாயிரம் உலகோர்க்கு வாய்க்கவும் கவுணியர் குலத்திற்கு ஒப்பற்ற சேய் என்று சொல்லுமாறு, ஞானச் சுடர் விளக்கை, நற்றவத்தோர் கற்பகத்தை, வேதங்களின் வான் பொருளை விரித்துரைத்த தத்துவனை, நித்தனை, சைவர்களின் அரசை, வியக்கத்தக்க மெய்யறிவினால் ஓங்கு விடலையை,

செஞ்சொற் பொருள்பயந்த சிங்கத்தைத் தெவ்வருயிர்
அஞ்சத் திகழ்ந்த அடலுருமை எஞ்சாமை

ஆதிச் சிவனருளால் அம்பொன்செய் வட்டிலில்
கோதில் அமிர்தநுகர் குஞ்சரத்தைத் தீதறுசீர்க்

காலத் தொகுதியும் நான்மறையின் காரணமும்
மூலப் பொருளும் முழுதுணர்ந்த சீலத்

திருஞான சம்பந்தன் என்றுலகம் சேர்ந்த
ஒரு நாமத் தால்உயர்ந்த கோவை வருபெரு நீர்ப்

பொன்னிவள நாடனைப் பூம்புகலி நாயகனை
மன்னர் தொழுதிறைஞ்சும் மாமணியை முன்னே

தெளிவுரை : முத்தமிழன் செஞ்சொற் பொருள் பயந்த சிங்கத்தை, தெவ்வர் உயிர் அஞ்சத் திகழ்ந்த அடல் உருமை (இடியை), ஆதிச் சிவனருளால் அம்பொன்செய் வட்டிலில் கோதில் அமிர்தம் நுகர் குஞ்சரத்தை, காலத்தொகுதியும், நான்மறையின் காரணமும் மூலப் பொருளும் முழுதுணர்ந்த சீலத் திருஞானசம்பந்தன் என்று உலகம் சேர்ந்த ஒரு பெயரால் உயர்ந்த கோவை, பொன்னி வளவாடனை, பூம்புகலி நாயகனை, மன்னர் தொழுது இறைஞ்சும் மாமணியை, (ஞானசம்பந்தர் புகழைப் பாடுகிறார்.)

நிலவு முருகற்கும் நீலநக் கற்கும்
தொலைவில் புகழ்ச்சிறுத்தொண் டற்கும் குலவிய

தோழமையாய்த் தொல்லைப் பிறப்பறுத்த சுந்தரனை
மாழைஒண்கண் மாதர் மதனனைச் சூழொளிய

கோதைவேல் தென்னன்றன் கூடற் குலநகரில்
வாதில் அமணர் வலிதொலையக் காதலால்

புண்கெழுவு செம்புனல்ஆ றோடப் பொரு தவரை
வண்கழுவில் வைத்த மறையோனை ஒண்கெழுவு

ஞாலத் தினர்அறிய மன்னுநனி பள்ளியது
பாலை தனைநெய்த லாக்கியும் காலத்து

தெளிவுரை : முருக நாயனார்க்கும் திருநீல நக்கருக்கும் புகழமைந்த சிறுத்தொண்ட நாயனார்க்கும் குலவிய தோழனாய் அவர்களுடைய பழைய வினையைப் போக்கிய அழகனை, பெண்கள் விரும்பும் மன்மதனை, பாண்டியனுடைய மதுரை நகரில் வாதத்தில் சமணர்களை வென்று கழுவேற்றி இரத்தம் ஆறாக ஓட வைத்த மறையோனை, உலகோர் அறிய நனிப்பள்ளியில் பாலை நிலத்தை நெய்தல் நிலம் ஆக்கியும், (ஞானசம்பந்தரது அற்புதச் செயல்கள் விவரிக்கப்படுகின்றன.)

நீரெதிர்ந்து சென்று நெருப்பிற் குளிர்படைத்தும்
பாரெதிர்ந்த பலவிடங்கள் தீர்த்தும் முன் நேரெழுந்த

யாழை முரித்தும் இருங்கதவம் தான் அடைத்தும்
சூழ்புனலில் ஓடத் தொழில்புரிந்தும் தாழ்பொழில்சூழ்

கொங்கிற் பனிநோய் பரிசனத்தைத் தீர்ப்பித்தும்
துங்கப் புரிசை தொகுமிழலை அங்கதனில்

நித்தன் செழுங்காசு கொண்டுநிகழ் நெல்வாயில்
முத்தின் சிவிகை முதல் கொண்டு அத்தகுசீர்

மாயிரு ஞாலத்து மன்ஆ வடுதுறைபுக்
காயிரஞ் செம்பொ னதுகொண்டும் ஆய்வரிய

தெளிவுரை : தேவாரப் பதிகம் பாடி, ஏட்டை வைகையில், விட்டபோது அது நீரில் எதிர்த்து சென்றது. தீயில் இட்டபோது எரியாமல் குளிர்ந்திருந்தது. பல விஷயங்களைத் தீர்த்து வைத்தது. திருநீலகண்ட யாழ்ப்பாணரது யாழை முரிந்து போகச் செய்தது.

(வேதாரண்யத்தில் திருமறைக்காட்டில் மூடாமல் இருந்த கதவை மூட வைத்தது. நீரில் ஓடத் தொழில் புரிந்தது. பனி நோய் தீர்ந்தது; திருவீழி மிழலையில் பொற்காசு பெற்றுப் பஞ்சத்தைப் போக்கியது. நெல்வாயிலில் முத்துச் சிவிகைப் பெற வைத்தது. இவ்வளவு அற்புதங்களையும் செய்தது. திருவாவடுதுறையில் ஆயிரம் செம்பொன் கிடைக்கச் செய்தது, (தந்தையார் வேள்விக்குப் பொன் பெற்றது)

மாண்புதிகழ் எம்பெருமான் மன்னுதிரு ஓத்தூரில்
ஆண்பனைகள் பெண்பனைக ளாக்கியும் பாண்பரிசில்

கைப்பாணி ஒத்திக்கா ழிக்கோலக் காவிற்பொற்
சப்பாணி கொண்டும் தராதலத்துள் எப்பொழுதும்

நீக்கரிய இன்பத் திராகமிருக் குக்குறள்
நோக்கரிய பாசுரம் பல் பத்தோடு மாக்கரிய

யாழ்மூரி சக்கரமாற் றீரடி முக்காலும்
பாழிமையால் பாரகத்தோர் தாம்உய்ய ஊழி

உரைப்பமரும் பல்புகழால் ஓங்கஉமை கோனைத்
திருப்பதிகம் பாடவல்ல சேயை விருப்போடு

தெளிவுரை : திருவோத்தூரில் ஆண் பனைகளைப் பெண் பனைகளாக்கியது. திருவோலக்காவில் கைத்தாளம் போட்டு வந்ததற்குப் பதிலாகப் பொன்னாலாகிய தாளத்தைப் பெறவைத்தது. நீர் பாடிய தேவாரப் பாடல்கள் இவ்வுளவும் செய்தன. தேவாரப் பதிகங்கள் பலவற்றுள்ளும் யாழ்முரி, சக்கரம் மற்றும் ஈரடி, முக்காலும் பாழிமையால் பாரகத்தோர் தாம் உய்ய ஊழி உரைப்பமரும் பல் புகழால் ஓங்க சிவ பெருமானைத் தேவாரப் பாடல்களால் பாடவல்ல சேயை,

நண்ணு புகழ்மறையோர் நாற்பத்தெண் ணாயிரவர்
எண்ணின் முனிவரர் ஈட்டத்துப் பண்அமரும்

ஒலக்கத் துள்இருப்ப ஒண்கோயில் வாயிலின்கண்
கோலக் கடைகுறுகிக் கும்பிட் டாங் காலும்

புகலி வளநகருட் பூசுரர் புக் காங்
கிகல்இல் புகழ்பரவி ஏத்திப் புகலிசேர்

வீதி எழுந்தருள வேண்டும் என விண்ணப்பம்
ஆதரத்தால் செய்ய அவர்க்கருளி நீதியால்

கேதகையும் சண்பகமும் நேர்கிடத்திக் கீழ்த்தாழ்ந்த
மாதவியின் போதை மருங்கணைத்துக் கோதில்

தெளிவுரை : வேதியர் நாற்பத் தெண்ணாயிரவர், எண்ணற்ற முனிவர் கூட்டம், சபா மண்டபத்தில் இருக்க, கோயில் வாயிலின்கண் கோலக்கடை குறுகிக் கும்பிட்டதுபோல சீகாழி நகரினுள் அந்தணர்கள் புகுந்தது போன்று புகழ் பரவியேந்திச் சீகாழி வீதியில் எழுந்தருள வேண்டுமென விண்ணப்பிக்க அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்கி, நீதியால் தாழையும் சண்பகமும் நேர்கிடத்தி, கீழ்த்தாழ்ந்த மாதவி (குருக்கத்தி)யின் அரும்பை மருங்கணைத்து,

இருவேலி தன்னை இடையிருத்தி ஈண்டு
மருவோடு மல்லிகையை வைத் தாங் கருகே

கருமுகையைக் கைகலக்க வைத்துக் கழுநீர்ப்
பெருகு பிளவிடையே பெய்து முருகியலும்

புன்னாகந் தன்னைப் புணர இருவாச்சி
தன் அயலே முல்லை தலை எடுப்ப மன்னிய

வண் செருந்தி வாய்நெகிழ்ப்ப மௌவல் அலர் படைப்பத்
தண் குருந்தம் மாடே தலை இறக்க ஒண்கமலத்

தாதடுத்த கண்ணியால் தண்நறுங் குஞ்சிமேற்
போதடுத்த கோலம் புனைவித்துக் காதில்

தெளிவுரை : இருவேலி தன்னை இடையிருத்தி ஈண்டு மருவோடு மல்லிகையை வைத்தாங்கு, அருகே கருமுகையைக் கைகலக்க வைத்துக் கழுநீர்ப்பூவை இடையே பெய்து புன்னாகப் பூவைப் புணர, இருவாச்சி, முல்லை, வண் செருந்தி, மல்லிகை, குருந்தம் இவைகளைக் கலந்து தாமரை தலைமாலையாகத் தலைமயிரை அலங்கரித்து,

கனவயிர குண்டலங்கள் சேர்த்திக் கழுத்தில்
இனமணியின் ஆரம் இலகப் புனை கனகத்

தொத்தடுத்த பூஞ்சுரிகைச் சோதிசேர் தாளிம்பம்
வைத்து மணிக்கண் டிகைபூண்டு முத்தடுத்த

கேயூரம் தோள்மேல் கிடத்திக் கிளர்பொன்னின்
வாய்மை பெறுநூல் வலம்திகழ ஏயும்

தமனியத்தின் தாழ்வடமும் தண்தரளக் கோப்பும்
சிமய வரை மார்பிற் சேர்த்தி அமைவுற்ற

வெண்ணீற்றின் ஒண்களபம் மட்டித்து மேவுதொழில்
ஒண்ணூற் கலிங்கம் உடல்புனைந்து திண் நோக்கில்

தெளிவுரை : கனவயிர குண்டலங்கள் சேர்த்து, கழுத்தில் இன மணியின் ஆரம் இலங்க, பொன் சரிகை கலந்த நகை யணிந்து, மணிக்கண்டிகை பூண்டு முத்துத் தோள் வளையணிந்து பொன் பெறு நூல் வலந்திகழ பொன் தாழ்வடமும் தண் தரளக் கோப்பும் மலைபோன்ற மார்பில் சேர்த்து, திருநீறாகிய ஒண்களபம் மட்டித்து ஒள்ளிய நூலாற் செய்யப்பட்ட ஆடையை உடுத்தி,

காற்றுருமோ குன்றோ கடலோ அடல்உருமோ
கூற்றுருவோ என்னக் கொதித்தெழுந்து சீற்றத்

தழல்விழித்து நின்றெதிர்ந்து தாலவட்டம் வீசிப்
புழைத் தடக்கை கொண்டெறிந்து பொங்கி மழை மதத்தால்

பூத்த கடதடத்துப் போகம் மிகபொலிந்த
காத்திரத்த தாகிக் கலித்தெங்கும் கோத்த

கொடு நிகளம் போக்கி நிமிர் கொண்டெழுந்து கோபித்
திடுவண்டை இட்டுக் கலித்து முடுகி

நெடுநிலத்தைத் தான்உழக்கி நின்று நிகற் நீத்
திடிபெயரத் தாளத் திலுப்பி அடுசினத்தால்

தெளிவுரை : காற்றோ, இடியோ, குன்றோ, கடலோ, அடலுருமோ கூற்றுருமோ என்னும்படி கொதித்தெழுந்து கோபமாகப் பார்த்து நின்றெதிர்ந்து ஆலவட்டம் வீசி, துதிக்கை கொண்டெறிந்து பொங்கி மதங்கொண்ட யானை சங்கிலியை அறுத்துக் கோபித்து ஆரவாரித்து நிலத்தை உழக்கி நின்று ஒப்பில்லாதபடி செல்ல,

கன்ற முகம் பருகிக் கையெடுத் தாராய்ந்து
வென்றி மருப்புருவ வெய்துயிர்த் தொன்றிய

கூடம் அரண்அழித்துக் கோபுரங்க ளைக்குத்தி
நீடு பொழிலை நிகர் அழித் தோடிப்

பணப்பா கரைப் பரிந்து குத்திப் பறித்த
நிணப்பாகை நீள்விசும்பில் வீசி அணைப்பரிய

ஓடைக் கருங்களிற்றை ஒண்பரிக் காரர்கள்தாம்
மாடணையக் கொண்டு வருதலுமே கூடி

நயந்து குரல்கொடுத்து நட்பளித்துச் சென்று
வியந்தணுகி வேட்டம் தணித் தாங் குயர்ந்த

தெளிவுரை : கோபங்கொண்ட முகத்தோடு துதிக்கையை உயர்த்தித் தந்தங்கள் உருவ பெருமூச்சு விட்டு, கூடத்தின் அரணை அழித்து, கோபுரங்களைக் குத்திப் பெரிய சோலையை அழித்து, பாகரைப் பரிந்து குத்தி பறித்த நிணமாகிய பாகை ஆகாயத்தில் வீசி, அளப்பரிய முக படாத்தை உடைய கருங்களிற்றை (ஆண் யானையை) ஒண்பரிக்காரர்கள் பக்கத்தில் வர, கூடி நயந்து குரல் கொடுத்து, நட்பு உண்டாக்கி, அருகில் சென்று தணித்ததைப்போல,

உடல்தூய வாசிதனைப் பற்றிமேல் கொண்டாங்
கடற்கூடற் சந்தி அணுகி அடுத்த

பயிர்பலவும் பேசிப் படுபுரசை நீக்கி
அயர்வு கெடஅணைத்த தட்டி உயர்வுதரு

தண்டுபே ரோசையின்கண் தாள்கோத்துச் சீர்சிறுத்
தொண்டர் பிறகணையத் தோன்றுதலும் எண்டிசையும்

பல்சனமும் மாவும் படையும் புடைகிளர
ஒல்லொலியால் ஓங்கு கடல் கிளர மல்லற்

பரித்தூரம் கொட்டப் படுபணிலம் ஆர்ப்பக்
கருத்தோ டிசைகவிஞர் பாட விரித்த

தெளிவுரை : உயர்ந்த தூய குதிரையைப் பிடித்து அதன்மேல் ஏறியதைப்போல அடற்கூடற் சந்தியணுகி அடுத்த பயிற்றும் சொற்களைப் பேசி கட்டப்பட்ட கயிற்றை அவிழ்த்து அயர்வு கெடத் தட்டிக் கொடுத்து, தண்டு பேரோசையின்கண் பாதங்களைக் கோத்து சீர்ச் சிறுத்தொண்டர் பின்னால் வரவும், எட்டுத் திசையும் பலமக்களும் குதிரைகளும் படையும் பக்கங்களில் வரப் பேரோசை கடல்போல் ஒலிக்க, ஆரவாரம் பரித்தூரங்கொட்ட, சங்குகள் ஒலி செய்ய, கருத்தோடு இசைக் கவிஞர் பாடவும்,

குடைபலவும் சாமரையும் தொங்கல்களும் கூடிப்
புடைபரந்து பொக்கம் படைப்பக் கடைபடு

வீதி அணுகுதலும் மெல்வளையார் உள்மகிழ்ந்து
காதல் பெருகிக் கலந்தெங்கும் சோதிசேர்

ஆடரங்கின் மேலும் அணிமா ளிகைகளிலும்
சேடரங்கு நீள்மறுகும் தெற்றியிலும் பீடுடைய

பேரிளம்பெண் ஈறாகப் பேதை முதலாக
வாரிளங் கொங்கை மடநல்லார் சீர்விளங்கப்

பேணும் சிலம்பும் பிறங்கொளிசேர் ஆரமும்
பூணும் புலம்பப் புறப்பட்டுச் சேண் மறுகில்

தெளிவுரை : விரித்த குடைகள் பலவும், சாமரையும், மாலைகளும் பக்கங்களில் நிறைந்து, சிறப்புச்செய்ய கடைபடு வீதி அணுகுதலும், வெள்ளிய வளையல் அணிந்த மகளிர் உள் மகிழ்ந்து, காதல் பெருகி, கலந்து எங்கும், சோதிசேர் ஆடு அரங்கின் மேலும், மணி மாளிகைகளிலும், சேடரங்கும் நீள் மறுகும், தெற்றியிலும் (திண்ணையிலும்) பெருமையுள்ள பேதை முதலாகப் பேரிளம் பெண் ஈறாக வார் அணிந்த கொங்கைகளை உடைய பெண்கள் சீர் விளங்க விரும்பும் சிலம்பும், பிறங்கொளிசேர் ஆரமும், ஆபரணங்களும் ஒலி செய்யப் புறப்பட்டு,

காண்டகைய வென்றிக் கருவரைமேல் வெண்மதிபோல்
ஈண்டு குடையின் எழில்நிழற் கீழ்க் காண்டலுமே

கைதொழுவார் நின்று கலைசரிவார் மால் கொண்டு
மெய்தளர்வார் வெள்வளைகள் போய் வீழ்வார் -வெய்துயிர்த்துப்

பூம்பயலை கொள்வார் புணர்முலைகள் பொன்பயப்பார்
காம்பனைய மென்தோள் கவின்கழிவார் தாம் பயந்து

வென்றிவேற் சேய் என்ன வேனில் வேள் கோ என்ன
அன் றென்ன ஆம் என்ன ஐயுற்றுச் சென்றணுகிக்

காழிக் குலமதலை என்றுதம் கைசோர்ந்து
வாழி வளைசரிய நின்றயர்வார் பாழிமையால்

தெளிவுரை : தூரத்தில் உள்ள தெருவில் பார்த்தற்குரிய வெற்றி பொருந்திய கரிய யானையின் மீது, வெண்மையான சந்திரனைப்போல இங்கு குடை நிழலில் பார்த்ததும் கை தொழுவார்கள். நின்று ஆடை சோர, காதல் கொண்டு உடல் தளர்வார்கள். வெள்ளிய வளைகள் கழன்று விழும், பெருமூச்சு விட்டு மார்பில் பசலை உண்டாகும். மூங்கில் போன்ற மென்தோள் கவின் அழியும். தாம் பயந்து, முருகனோ மன்மதனோ என்றும் அல்லவென்றும் சந்தேகப்பட்டு, அருகில் சென்று சீகாழிச் செம்மலாகிய ஞான சம்பந்தரென்று, தம் கை சோர்ந்து, வளைகள் சரிய நின்று தளர்வார்கள்.

உள்ளம் நிலைதளர்ந்த ஒண்ணுதலார் வெல்களிற்றை
மெள்ள நட என்று வேண்டுவார் கள்ளலங்கல்

தாராமை யன்றியும் தையல்நல் லார்முகத்தைப்
பாராமை சாலப் பயன் என்பார் நேராக

என்னையே நோக்கினான் ஏந்திழையீர் இப்பொழுது
நன்மை நமக்குண் டெனநயப்பார் கைம்மையால்

ஒண்கலையும் நாணும் உடைத்துகிலும் தோற்றவர்கள்
வண்கமலத் தார்வலிந்து கோடும் எனப் பண்பின்

வடிக்கண் மலர்வாளி வார்புருவ வில்மேல்
தொடுத் ததரத் தொண்டை துடிப்பப் பொடித்தமுலைக்

தெளிவுரை : உள்ளம் நிலை தளர்ந்த ஒண்ணுதலார், யானையை மெதுவாக நடக்குமாறு வேண்டுவார்கள். தேன் பொருந்திய மாலையை தாராமையும் பெண் மக்களின் முகத்தைப் பாராமையும் மிகவும் நல்லதுதான் என்பார்கள். நேராக என்னையே நோக்கினான். ஏந்திழையீர் ! இப்போது நன்மை நமக்குண்டு என நயப்பர் (விரும்புவார்கள்). பேரன்பினால் ஆடையும் நாணும் துகிலும் தோற்றவர்கள் தாமரை அம்பைப் புருவ வில்மேல் தொடுத்து அதரமும் தொண்டையும் துடிப்ப,

காசைக் கருங்குழலார் காதற் கவுணியன்பால்
பூசற் கமைந்து புறப்படுவார் வாசச்

செழுமலர்த்தார் இன்றெனக்கு நல்காதே சீரார்
கழுமலத்தார் கோவே கழல்கள் தொழுவார்கள்

அங்கோல வளையிழக்கப் போவது நின்னுடைய
செங்கோன்மையோ என்று செப்புவார் நங்கையீர்

இன்றிவன் நலகுமே எண்பெருங் குன்றத்தின்
அன்றமணர் கூட்டத்தை ஆசழித்துப் பொன்ற

உரைகெழுவு செந்தமிழ்ப்பா ஒன்றினால் வென்றி
நிரை கழுமேல் உய்த்தானை நேர்ந்து விரைமலர்த்தார்

தெளிவுரை : பொடித்த முலைக்காசைக் கருங்குழலார் காதற் கவுணியனாகிய ஞானசம்பந்தர் பால் கோபங்கொள்ள நினைந்து புறப்படுவார்கள். வாசச் செழு மலர்த்தார் இன்று எனக்குத் தராமல், சிறப்பமைந்த சீகாழிக் கோவாகிய ஞானசம்பந்தரே ! என்று அவருடைய பாதங்களைத் தொழுவார்கள். வளைகளை இழக்கப் போவது உன்னுடைய செங்கோன்மையோ என்று சொல்வார்கள். நங்கைமீர் ! இன்று இவன் நல்குமேல் எண் பெருங் குன்றத்தில் அன்று சமணர்களின் பற்றுக் கோட்டைக் கெடுத்து, பொன்ற உரை கெழுவு செந்தமிழ்ப்பா ஒன்றினால் வென்றி நிரைகழுமேல் உய்த்தானை நேர்ந்து,

பெற்றிடலாம் என்றிருந்த நம்மினும் பேதையர்கள்
மற்றுளரோ என்று வகுத்துரைப்பார் மற்றிவனே

பெண் இரக்கம் அன்றே பிறைநுதலீர் மாசுணத்தின்
நண்ணு கடுவித்தால் நாட்சென்று விண்ணுற்ற

ஆரூயிரை மீட் டன்று றவளை அணிமருகல்
ஊரறிய வைத்த தென உரைப்பார் பேரிடரால்

ஏசுவார் தாம் உற்ற ஏசறவைத் தோழியர் முன்
பேசுவார் நின்று தம் பீடழிவார் ஆசையால்

நைவார் நலன்அழிவார் நாணோடு பூண் இழப்பார்
மெய்வாடு வார் வெகுள்வார் வெய்துயிர்ப்பார் தையலார்

தெளிவுரை : விரை மலர்த்தார் பெற்றிடலாம் என்றிருந்த நம்மிலும் பேதையர்கள் மற்றுளரோ என்று வகுத்துரைப்பார்கள். மற்று இவளே பெண் இரக்கம் அன்றே, பிறை நுதலீர் ! பெரும் பாம்பின் நண்ணுகடுவிடத்தால் நாட் சென்று விண்ணுற்ற ஆருயிரை மீட்டு அன்று அவளை அணி மருகல் ஊரறிய வைத்ததென உரைப்பார். பேரிடரால் ஏசுவார். தாமுற்ற நாணத்தைத் தோழியர்முன் பேசுவார். நின்றுதம் பெருமை கெடுவார்கள். ஆசையால் வருந்துவார்கள். நலன் அழிவார்கள். நாணத்தையும் ஆபரணத்தையும் இழப்பார்கள். மெய் வாடுவார்கள். கோபிப்பார்கள். பெருமூச்சு விடுவார்கள்,

பூந்துகிலைப் பூமாலை என்றணிவார் பூவினைமுன்
சாந்தம் என மெய்யில் தைவருவார் வாய்ந்த

கிளி என்று பாவைக்குச் சொற்பயில்வார் பந்தை
ஒளிமே கலை என் றுடுப்பார் அளிமேவு

பூங்குழலார் மையலாய்க் கைதொழமுன் போதந்தான்
ஒங்கொலிசேர் வீதி உலா.

தெளிவுரை : தையலார் பூந்துகிலைப் பூமாலை என்று அணிவார். பூவினை முன் சாந்தமென மெய்யில் தடவுவார். வாய்ந்த கிளியென்று பாவைக்கு (பொம்மைக்கு)ச் சொற் பயில்வார். பந்தை ஒளி மேகலை என்று உடுப்பார். வண்டுகள் மொய்க்கின்ற பூங்குழலார் மையலாய்க் கைதொழச் சென்றான் ஓங்கொலி சேர் வீதி உலா. திருஞானசம்பந்தர் வீதி உலா சென்றார்.

திருச்சிற்றம்பலம்

38. ஆளுடைய பிள்ளையார் திருக்கலம்பகம் (நம்பியாண்டார் நம்பிகள் அருளிச் செய்தது)

திருஞானசம்பந்தப் பிள்ளையாரைப் பாட்டுடைத் தலைவராகக் கொண்டு இயற்றப் பெற்றமையின் இஃது ஆளுடைய பிள்ளையார் திருக்கலம்பகம் என்னும் பெயருடையதாயிற்று. இந்நூலின்கண் ஒன்றுமுதல் நாற்பத்தொன்பது வரையுள்ள பாடல்களே இப்போது கிடைத்துள்ளன. இக்கலம்பகத்தில் பிள்ளையாருடைய பெருமை நன்கு விளக்கப்பட்டுள்ளது. இந்நூலில் உள்ள ஆசிரிய விருத்தங்கள் பல திருவெண்காட்டடிகள் பாடியருளிய கோயில் நான்மணி மாலையிலுள்ள சந்தப் பாடல்களை அடியொற்றியனவாக விளங்குகின்றன.

திருச்சிற்றம்பலம்

ஒருபோகு கொச்சகக் கலிப்பா

1341. நான்கடித் தாழிசை

அலையார்ந்த கடலுலகத் தருந்திசைதோ றங்கங்கே
நிலையார்ந்த பலபதிகம் நெறிமனிதர்க் கினிதியற்றி
ஈங்கருளி யெம்போல்வார்க் கிடர்கெடுத்தல் காரணமாய்
ஓங்குபுகழ்ச் சண்பையெனு மொண்பதியு ளுதித்தனையே

தெளிவுரை : (முன்னிலைப் பராவல்) அலைகளையுடைய கடலால் சூழப்பட்ட உலகத்தின் எல்லாத் திசைகளிலும் நிலைபெற்ற தேவாரப் பதிகங்களை நெறி மனிதர்க்கு இனிது இயற்றி இங்கு அருளி எம் போன்றவர்களுக்கு இருந்த இடரைத் தீர்த்த காரணமாய் ஓங்கு புகழ்ச் சண்பை யெனும் சீகாழிப்பதியில் உதித்தனை.

செஞ்சடைவெண் மதியணிந்த சிவனெந்தை திருவருளால்
வஞ்சியன நுண்ணிடையாள் மலையரையன் மடப்பாவை
நற்கண்ணி யளவிறந்த ஞானத்தை யமிர்தாக்கிப்
பொற்கிண்ணத் தருள்புரிந்த போனகமுன் நுகர்ந்தனையே

தெளிவுரை : செஞ்சடையில் வெண்மதியணிந்த சிவ பெருமானது திருவருளால் உமாதேவியார் அளவற்ற ஞானத்தை அமிர்தாக்கிப் பொற்கிண்ணத்தில் அருள் புரிந்த ஞானப்பாலாகிய உணவை முன்பு உண்டனை.

தோடணிகா தினனென்றுந் தொல்லமரர்க் கெஞ்ஞான்றும்
தேடரிய பராபரனைச் செழுமறையின் அரும்பொருள
அந்திச்செம் மேனியனை யடையாளம் பலசொல்லி
உந்தைக்குக் காணஅரனுவனாமென் றுரைத்தனையே

தெளிவுரை : தோடுடைய செவியன் என்றும் பழைமையான தேவர்களுக்கு எப்போதும் தேடுதற்கு அருமையான பராபரனை வேதங்களின் உட்பொருளை, செவ்வானம் போன்ற நிறமுடையவனை அடையாளம் காட்டி, உன் தந்தைக்கு ஆகாயத்தில் பார்த்தேன் என்று உரைத்தனை.

அராகம்

வளம்மலி தமிழிசை வடகலை மறைவல
முளரிநன் மலரணி தருதிரு முடியினை.

தெளிவுரை : வளம் மலிந்த தமிழிசையிலும் வடகலையிலுள்ள மறைகளிலும் வல்லவனே ! தாமரை மலரை அணிகின்ற திருமுடியினை உடையை.

கடல்படு விடமடை கறைமணி மிடறுடை
மடல்கரி யுரியனை யறிவுடை யளவினை.

தெளிவுரை : திருப்பாற்கடலிலிருந்து எழுந்த ஆலகால விஷத்தை அருந்தி நீலகண்டத்தைப் பெற்றவன் என்றும் வலிமை பொருந்திய யானையைக் கொன்று அதன் தோலைப் போர்த்தவன் என்றும் சிவ பெருமானைத் துதிக்கின்றார்.

இரண்டடி தாழிசை

கரும்பினுமிக் கினியபுகழ்க் கண்ணுதல்விண் ணவன்அடிமேல்
பரம்பவிரும் புவியவர்க்குப் பத்திமையை விளைத்தனையே.

தெளிவுரை : கரும்பினும் மிக்கு இனிய புகழ் சிவபெருமான் திருவடிகள் மீது இவ்வுலகத்தவர்க்குப் பத்தியை விளைவித்தனை.

பன்மறையோர் செய்தொழிலும் பரமசிவா கமவிதியும்
நன்மறையின் விதிமுழுதும் ஒழிவின்றி நவின்றனையே.

தெளிவுரை : வேதங்களைப் பயின்றோர் செய்தொழிலும் பரமசிவாகம விதியும் வேதங்களின் விதி முழுவதையும் ஓய்வில்லாமல் நவின்றனை.

நாற்சீர் ஓரடி அம்போதரங்கம்

அணிதவத் தவர்களுக் கதிகவித் தகனும்நீ
தணிமனத் தருளுடைத் தவநெறிக் கமிர்தம்நீ அமணரைக் கழுநுதிக் கணைவுறுத் தவனுநீ (3)தமிழ்நலத் தொகையினில் தகுசுவைப் பவனும்நீ

தெளிவுரை : அணித்தவர்களுக்கு அதிக வித்தகனும் நீ. தணி மனத்தருளுடைத் தவநெறிக்கு அமிர்தமும் நீ. சமணர்களைக் கழுவில் ஏற்றியவனும் நீ. தமிழ் நலத்தொகையினில் தகு சுவைப்பவனும் நீ.

மூச்சீர் ஓரடி அம்போதரங்கம்

மறையவர்க் கொருவன் நீ
மருவலர்க் குருமு நீ
நிறைகுணத் தொருவன் நீ
நிகரில்உத் தமனும் நீ

தெளிவுரை : வேதியர்களில் ஒப்பற்றவன் நீ. பகைவர்கட்கு இடி போன்றவன் நீ. நிறைகுணத்து ஒருவன் நீ. நிகரில்லாத உத்தமனும் நீ.

இருசீர் ஓரடி அம்போதரங்கம்

அரியை நீ எளியை நீ
அறவன் நீ துறவன் நீ
பெரியை நீ  உரியை நீ
பிள்ளை நீ வள்ளல் நீ

தெளிவுரை : அருமையாவன் நீ. எளிமையானவன் நீ. அறநெறியாளன் நீ. துறவற நெறியாளன் நீ. பெரியவன் நீ. உரிமையுடையவன் நீ. பிள்ளைப் பருவத்தினன் நீ. பாடல்களை வாரி வழங்கும் வள்ளல் நீ.

என வாங்கு (இது தனிச் சொல்)

சுரிதகம்

கருந்தமிழ் விரக நிற் பரசுதும் திருந்திய
நிரைச்செழு மாளிகை நிலைதொறும் நிலைதொறும்
உரைச்சதுர் மறையில் ஓங்கிய ஒலிசேர்
சீர்கெழு துழனித் திருமுகம் பொலிவுடைத்
தார்கெழு தண்டலை தண்பணை தழீஇ

தெளிவுரை : அருந்தமிழ் விரகனே ! உன்னைப் புகழ்கின்றோம். திருந்திய, வரிசையாக, வளமிக்க, மாளிகை தோறும் நிலைதொறும், உரைக்கப்படுகின்ற நான்கு வேதங்களின் ஓங்கிய ஒலி சேர்ந்ததும்,

சீர்கெழு ஒலிமிகுந்த திருமுகம் பொலிவுடைத் தார்கெழு சோலைகளும் குளிர்ந்த வயல்களும் சூழ்ந்ததும்,

கற்றொகு புரிசைக் காழியர் நாத
நற்றொகு சீர்த்தி ஞானசம் பந்த
நின்பெருங் கருணையை நீதியின்
அன்புடை அடியவர்க் கருளுவோய் எனவே.

தெளிவுரை : கல்லால் இயன்ற மதில்களை உடையதுமான சீகாழி நாத ! நற்றொகு கீர்த்தி ஞானசம்பந்த ! உன்னுடைய பெரிய கருணையை, நீதியின் அன்புடை அடியவர்களுக்கு அருளுவாய் என்று புகழ்கின்றோம்.

வெண்பா

1342. எனவே இடர் அகலும் இன்பமே எய்தும்
நனவே அரன் அருளை நாடும் புனல்மேய
செங்கமலத் தண்தார்த் திருஞான சம்பந்தன்
கொங்கமலத் தண்காழிக் கோ.

தெளிவுரை : கோ எனவே இடர் அகலும். இன்பமே எய்தும். நனவே அரன் அருளை நாடும். நீர் வளமிக்க செங்கமலத்தண்தார்த் திருஞானசம்பந்தன் தன்னைப் போற்றுவோர் ஆணவ மலத்தைப் போக்கியருள் செய்வார்.

கட்டளைக் கலித்துறை

1343. கோலப் புலமணிச் சுந்தர
மாளிகைக் குந்தள வார்
ஏலப் பொழிலணி சண்பையர்
கோனை இருங்கடல் சூழ்
ஞாலத் தணிபுகழ் ஞானசம்
பந்தன நற்றமிழே
போலப் பலபுன் கவிகொண்டு
சேவடி போற்றுவனே.

தெளிவுரை : அழகிய ஒளியுள்ள மணி. சுந்தர மாளிகைக்கு முல்லை மலர் மணம் வீசும் சோலைகள் சூழ்ந்த சீகாழிக்கு அரசாகிய திருஞானசம்பந்தரை, பெரிய கடலால் சூழப்பட்ட உலகப் புகழ் பெற்றவரை, நல்ல தமிழேபோலப் பல புன்கவி கொண்டு அவரது பாதங்களைப் போற்றுவன்.

ஆசிரியர் நம்பியாண்டார் நம்பிகள் தம்முடைய கவிகளைப் புன்கவி எனக் குறிப்பிட்டுத் தம்முடைய அடக்கமுடைமையைப் புலப்படுத்திக் கொள்ளுகிறார்.

எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

1344. போற்று வார்இடர் பாற்றிய புனிதன்
பொழில்சு லாவிய புகலியர் பெருமான்
ஏற்ற வார் புகழ் ஞானசம் பந்தன்
எம்பி ரான் இருஞ் சுருதியங் கிரிவாய்ச்
சேற்று வார்புனம் காவல் பிரிந்தென்
சிந்தை கொள்வ தும் செயச்தொழி லானால்
மாற்றம் நீர்எமக் கின் றுரை செய்தால்
வாசி யோ குற மாதுநல் லீரே.

தெளிவுரை : இது தலைவன் கூற்று.

குறமாது நலீரே ! இது தகுதியோ எனத் தலைவன் கேட்டான் என்க. போற்றுகின்றவர்களுடைய துன்பங்களை நீக்கிய புனிதன். சோலைகள் சூழ்ந்த சீகாழிப் பெருமான், ஏற்றவார் புகழ் ஞானசம்பந்தன். சிவபெருமானது கயிலாயமலையில் சேற்றுவார் புனம். காவல் புரிந்து என் சிந்தை கொள்வதும் செய்தொழில். ஆனால், நீர் எமக்கு இவ்வாறு பதில் அளித்தல் தகுதியோ என்று தலைவன் கூறினான்.

எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

1345. நலமலி தரும்புவனி நிறைசெய்புகழ் இன்பநனி
பனிமதி அணைந்த பொழில்சூழ்
பொலமதில் இரும்புகலி அதிபதி விதம்பெருகு
புனிதகுணன் எந்தம் இறைவன்
பலமலி தரும்தமிழின் வடகலை விடங்கன் மிகு
பரசமய வென்றி அரிதன்
சலமலி தரும்கமல சரண் நினைவன் என்றனது
தகுவினைகள் பொன்றும் வகையே.

தெளிவுரை : நலங்கள் மலிந்த உலகம் நிறைந்த வயல்களை உடைய புகழ் இன்பம் மிகுந்து குளிர்ந்த சந்திரன் அணைந்த சோலைகள் சூழ்ந்த அழகிய மதில்களை உடைய பெரிய சீகாழியின் அதிபதி. விதம் பெருகு புனித குணன்; எந்தம் இறைவன்; பலமலிருதம் தமிழன் வடகலை விடங்கன்; மிகு பரசமயக் கோளரி. தன் சலமலிதரும் தாமரை மலர் போன்ற திருவடி நினைவன் என்று சொல்வது வினைகள் அழியும் வகையாகும்.

பன்னிருசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

1346. வகைதகு முத்தமிழ் ஆகரன்
மறைபயில் திப்பிய வாசகன்
வலகலை வித்தகன் வானவில் மதிஅணை பொற்குவை மாளிகை
திகைதிகை மட்டலர் வார்பொழில் திகழ் புக லிக்கர சாகிய
திருவளர் விப்ர சிகாமணி செழுமல யத்தமிழ்க் கேசரி
மிகமத வெற்றிகொள் வாரணம் மிடைவரு டைக்குலம் யாளிகள்
விரவிரு ளில்தனி நீள்நெறி வினைதுயர் மொய்த்துள வே மணி
நகைஎழி லிற்குற மா துன தருமை நினைக்கிலள் நீ இவள்
நசையின் முழுப்பழி ஆதல்முன் நணுகல் இனிக்கிரி வாணனே.

தெளிவுரை : தோழி தலைவனை இரவு வரல் விலக்கல்.

வகைதகு முத்தமிழ் ஆகரன். வேதங்களைப் பயில்கின்ற மேலான மொழிகளை உடையவன். வன்மை மிகுந்த கலைகளிற் சிறந்தவன். வானவில்லும் சந்திரனும் அணைகின்ற பொற்குவை மாளிகை திக்குகள்தோறும் தேன் நிறைந்த சோலைகள் சூழ்ந்த சீகாழிக்கு அரசாகிய திருவளர் விப்ர சிகாமணி, செழுமலயத் தமிழ்ச் சங்கம், மிக மத வெற்றி கொள் வாரணம், இடையில் எண்கால் மலையாடு, யாளிகள் விரவி இருளில் தனியாக நீண்ட வழியில் துன்பங்கள் நிறைந்துள்ளன. மணிநகை எழிலிற் குறமாது உனது அருமை நினைக்கிலள். நீ இவள்மீது கொண்ட விருப்பினால் முழுப் பழியாதல்முன் நணுகல். (வராதே) மலைத்தலைவனே இனி நீ இந்த இருளில் வராதே என்றபடி.

1347. வாணில வும் புனலும் பயில் செஞ்சடை வண்கரு ணாகரனை
மலைமா துமையொடு மிவனா வானென முன்னாளுரை செய்தோன்
சேணில வும்புகழ் மாளிகை நீடிய தென்புக லிக்கரசைத்
திருவா ளனையெழி லருகா சனிதனை
மருவா தவர்கிளைபோல்
நாணில வும்பழி யோகரு தாதய லானொரு காளையுடன்
நசைதீர் நிலைகொலை புரிவே டுவர்பயில் தருகா னதர்வெயிலிற்
கேணில வுங்கிளி பாவையொ டாயமும் யாயெனை யும்மொழியக்
கிறியா லெனதொரு மகள்போ யுறுதுயர் கெடுவேனறிகிலேனே.

தெளிவுரை : மகட் போக்கிய செவிலி இரங்குதல்.

பிறைத் திங்களும் கங்கையும் பயிலுகின்ற செஞ்சடையை உடைய சிவபெருமானை உமையாளொடும் இவன்தான் என்று வானில் சுட்டிக் காட்டினான். வெகு தூரம் வரை புகழப்படும் மாளிகைகளை உடைய தென் சீகாழிக்கு அரசை, திருவாளனை, அருகர்க்கு இடியாகிய திருஞான சம்பந்தரை வணங்காதவர் கிளைபோல் நாள் நிலவும் பழியைக் கருதாமல் அயலானாகிய ஒரு காளையுடன் (தலைவனுடன்) நீரில்லாததும் கொலை வேடுவர் பயின்கின்றதுமான பாலைநில வழியில் வெயிலில், கேள் நிலவும் கிளியையும் பாவையொடு ஆயத்தையும் தாயையும் என்னையும் நீங்கி பொய்யால் எனதொரு மகள் போய் உறுதுயர் கெடுவேன் ஆகிய நான் அறிகிலேனே.

எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

1348. அறிவாகி யின்பஞ்செய் தமிழ்வாதில் வென்றந்த
அமணான வன்குண்டர் கழுவேற முன்கண்ட
செறிமாட வண்சண்பை நகராளி யென்தந்தை
திருஞான சம்பந்த னணிநீடு திண்குன்றில்
நெறியால மண்துன்றி முனைநாள்சி னங்கொண்டு
நிறைவார் புனந்தின்று மகள்மேல் வருந்துங்க
வெறியார் மதந்தங்கு கதவா ரணங்கொன்ற
வெகுளாத நஞ்சிந்தை விறலா னுளன்பண்டே.

தெளிவுரை : தோழி களிறுதரு புணர்ச்சியால் அறத்தொடு நின்றது.

அறிவாகி, இன்பம் செய் தமிழ் வாதில் வென்று, அந்தச் சமணர்கள் கழுவேற முன் நின்றவன், செறிந்த மாடங்களையுடைய வளப்பம் பொருந்திய சீகாழி நகராளி; என் தந்தை; திருஞானசம்பந்தன் அணி நீடு திண்குன்றில் நெறியால் அமண்துன்றி முனைநாள் சினங்கொண்டு நிறைவார் புனந்தின்று மகள்மேல் வரும் துங்க வெறியார் மதம் தங்கு சினமுடைய யானையைக் கொன்ற நம்மாட்டு அன்புள்ள தலைவன் முன்பே இவளுக்கு உண்டு. யானையைக் கொன்ற தலைவனே இவளுடைய காதலன் என்பதைத் தோழி கூறுகிறாள்.

பதின்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

1349. பண்டமுது செய்ததுமை நங்கையருள் மேவுசிவ ஞானம்
பைந்தரள நன்சிவிகை செம்பொனணி நீடுகிற தாளம்
கொண்டதர னும்பர்பர னெங்கள்பெரு மானருள் படைத்துக்
கொடுத்ததமி ழைத்தவகு லத்தவர்க ளுக்குலகி லின்பம்
கண்டதரு கந்தர்குல மொன்றிமுழு துங்ககழுவிலேறக்
கறுத்தது வினைப்பயன் மனத்திலிறை காதலது அன்றி
விண்டதுவும் வஞ்சகரை மஞ்சணவு கின்றமணி மாட
வேணுபுர நாதன்மிகு வேதியர்சி காமணி பிரானே.

தெளிவுரை : திருஞானசம்பந்தரது அருஞ்செயல்களைப் பாராட்டுகின்றார்.

இவர் முன்பு உமாதேவியார் அளித்த ஞானப் பாலால் சிவஞானம் பெற்றார். முத்துச் சிவிகையையும் பொன்தாளத்தையும் சிவபெருமானிடமிருந்து பெற்றார். தமிழை உலகத்தவருக்கு அளித்தார். சமணர்களைக் கழுவேற்றினார். உயர்ந்த மதில்களை உடைய சீகாழிப் பதியிலுள்ள வேதியர் சிகாமணியாகிய திருஞானசம்பந்தர் இவைகளைச் செய்தார் என்கிறார்.

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

1350. பிரானை மெய்த்திரு ஞானசம்
பந்தனை மறையவர் பெருமானைக்
குராம லர்ப்பொழிற் கொச்சையர்
நாதனைக் குரைகழ லிணைவாழ்த்தித்
தராத லத்தினி லவனருள்
நினைவொடு தளர்வுறு தமியேனுக்
கிராவி னைக்கொடு வந்ததிவ்
அந்திமற் றினி விடி வறியேனே.

தெளிவுரை : தலைவி பொழுது கண்டு இரங்குதல்.

பிரானை, மெய்த்திரு ஞானசம்பந்தனை, மறையவர் பெருமானை, குராமலர் சோலைகள் சூழ்ந்த சீகாழி நாதனை, ஒலி செய்கின்ற கழல் அணிந்த திருவடிகளை வாழ்த்தி, நிலவுலகில் அவன் அருள் நினைவோடு தளர்வுறும் தமியேனுக்கு இரவைக் கொண்டு வருகிற இந்த மாலைக் காலம் தருகின்ற துன்பத்திற்கு எப்போது விடிவு காலம் வருமோ அறியேனே.

பதினான்குசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

1351. ஏனமு கத்தவ புத்தரை யிந்திர சித்து மணம்புணர் வுற்றான்
ஈழவ னார்சொரி தொட்டி யினங்களை
வெட்டி யிசித்தனர் பட்டர்
தான மிரக்கிற சீதை மடுப்பது சாதி குடத்தொடு கண்டீர்
சக்கர வர்த்திகள் சிக்கர மட்டுவர் தத்துவம் இப்பரி சுண்டே
ஆன புகழ்ப்பயில் விப்ர சிகாமணி அத்தகு மைப்புரை யுங்கார்
ஆர்பொழில் நீடிய சண்பையர் காவலன்
வண்களி யேனெளி யேனோ
சோனக னுக்குமெ னக்குமெனத்தரை யம்மனை சூலது கொண்டாள்
தும்புரு வாலியை வென்று நிலத்திடை
நின்று துலக்குகிறாரே.

தெளிவுரை : கள்ளை உண்டவன் பொருள் தொடர்பில்லாதவற்றை கூறும் கூற்றாக அமைந்தது இது.

பன்றி முகத்தையுடைய புத்தரை, இந்திரசித்து மணந்து கொண்டான். ஈழ நாட்டவர் சொரிகின்ற தொட்டி இனங்களைப் பட்டர் வெட்டி இசித்தனர். தானம் இரக்கிற சீதை மடுப்பது சாதி குடத்தொடு காண்பீர்களாக. சக்கரவர்திகள் சிக்கிரம் அட்டுவர். தத்துவ முப்பரிசு உண்டு, ஆன புகழ்ப்பயில் அந்தணர்களிற் சிறந்தவன் அத்தகு கரிய மேகம் ஆர் பொழில் நீடிய சீகாழிக் காவலன் வண்களியேன் எளியேனோ? கோனகனுக்கும் எனக்கும் எனத் தரை யம்மனது சூலத்தைக் கொண்டவள் தும்புரு வாலியை வென்று, நிலத்திடை நின்று, ஆடுகிறார்களே.

ஒன்றுக்கொன்று சம்பந்தமில்லாத செய்திகள் இவை.

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

1352. ஆர்மலி புகலி நாத
னருளென இரவில் வந்தென்
வார்முலை பயலை தீர
மணந்தவர் தணந்து போன
தேரத ரழிய லும்மைச்
செய்பிழை யெம்ம தில்லை
கார்திரை கஞலி மோதிக்
கரைபொருங் கடலி னீரே.

தெளிவுரை : தலைவி கடலோடு கூறுதல்.

சீகாழி நாதனான திருஞானசம்பந்தரது அருள் என்னுமாறு விரைவில் வந்து என் கச்சிட்டு இறுக்கப்பட்ட முலைகளின்மேல் படர்ந்துள்ள பசலை (தேமல்) தீர மணந்தவராகிய தலைவர் நீங்கிச் சென்ற தேரின் அடிச்சுவட்டை அழிக்காதே. உம்மைச் செய்பிழை எம்மது இல்லை. அலைகள் மோதிக் கரையோடு சண்டையிடும் கடல் நீரே.

கலி விருத்தம்

1353. கடல்மேவு புவியேறு கவிநீரர் பெருமான்றன்
தடமாடு மிகுகாழி தகுபேதை யருளாமல்
திடமாகி லணிநீறு செழுமேனி முழுதாடி
மடலேறி யெழில்வீதி வருகாத லொழியானே.

தெளிவுரை : தலைவன் மடல் ஏறுவேன் என்றல்.

கடலால் சூழப்பட்ட இந்நிலவுலகில் சிங்க ஏறு போன்ற கவி வல்லவர் ஞானசம்பந்தர். இவரது சீகாழியில் வாழும் இந்தத் தலைவி அருள் செய்யாமல் திடமாக இருப்பாளாகில் உடல் முழுதும் திருநீறு பூசி, பனை மடற் குதிரையிலேறி எழில் வீதி வழியே வரும் எண்ணமுடையேன் என்றான் தலைவன்.

மடல் ஏறுதல் : தன் குறை தீரப் பெறாத தலைமகன் பனங்கருக்கால் குதிரையும், பனையிலுள்ள மற்றவற்றால் வண்டி முதலியனவும் செய்து, தன் உடம்பு முழுவதும் நீறு பூசிக்கொண்டு பூளைப் பூ, எலும்பு, எருக்கம் பூ ஆகிய இவற்றை மாலையாகக் கட்டித் தரித்துக்கொண்டு தலைவியின் படத்தைக் கையில் பிடித்துக் கொண்டு அக் குதிரையிலேறி, அதனைச் சிலர் ஈர்த்துச் செல்ல வீதியிற் செல்லுதல். இது பெருந்திணையின்பாற்படும்.

எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

1354. ஒழியா தின்புறு பொழில்சூழ் சண்பைமன்
உயர்பார் துன்றிய தகுஞா னன்புகழ்
எழிலா ருங்கவு ணியர் தீ பன்திகழ்
இணையார் செங்கரன் நிகழ்வான் விண்குயின்
பொழியா நின்றன துளிதார் கொன்றைகள்
புலமே துன்றின கலைமா னொன்றின
பழிமேல் கொண்டது நுமர்தே ரன்பொடும்
அருகே வந்தது அதுகாண் மங்கையே.

தெளிவுரை : தலைவன் வரவைத் தோழி தலைவிக்கு உரைத்தல்.

எப்போதும் இன்பம் செய்கின்ற சோலைகள் சூழ்ந்த சீகாழித் தலைவனாகிய ஞானசம்பந்தர் உலகம் புகழும் ஞானமுடையவன். கவுணியர் குல தீபன். அவனது இரண்டாகப் பொருந்திய செங்கரங்களைப் போன்று வானத்திலுள்ள மேகங்கள் மழை பொழிகின்றன. கொன்றை மரங்கள் பூத்துள்ளன. கலைமான்கள் ஒன்று சேர்ந்தன. கார்காலத்தில் வருவதாகச் சொன்ன தலைவர் சொன்ன சொல் தவறாமல் நேரில் வந்துள்ளார். தலைவியே ! அதோ பார் என்று தோழி தேர் வருவதைக் காட்டுகிறாள்.

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

1355. மங்கை யிடத்தர னைக்கவி
நீரெதி ரோட மதித்தருள்செய்
தங்கு புகழ்ச்சதுர் மாமறை
நாவளர் சைவசி காமணிதன்
துங்க மதிற்பிர மாபுரம் மேவிய
சூல்பொழில் நின்றொளிர்மென்
கொங்கை யுடைக்கொடி யேரிடை
யாள்குடி கொண்டன ளெம்மனமே.

தெளிவுரை : தலைவன் பாங்கனுக்கு உரைத்தல்.

திருஞானசம்பந்தர், உமாதேவியை இடப்பாகத்தில் கொண்ட சிவபெருமானைப் பற்றி ஏட்டில் எழுதி வைகை ஆற்றில் விட அது எதிர்ஏறிச் சென்றது. அத்தகைய நான்கு வேதங்களையும் உணர்ந்த நாவளர் சைவ சிகாமணி தன் உயர்ந்த மதில்களையுடைய சீகாழியில் பொருந்திய மென்றொளிர் மென் கொங்கைகளையும் கொடி போன்ற இடையினையும் உடைய தலைவியின்மீது என் மனம் குடிகொண்டது என்று தலைவன் பாங்கனிடம் கூறினான்.

எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

1356. மனங்கொண்டு நிறைகொண்டு கலையுங் கொண்டு
மணிநிறமு மிவள் செங்கை வளையுங் கொண்ட
தனங்கொண்ட பெருஞ்செல்வம் திகழுங் கீர்த்திச்
சண்பையர்கோன் திருஞான சம்பந் தற்கு
நனங்கொண்டு மெய்கொண்டு பயலை கொண்டே
நன்னுதலா ளயர்கின்றாள் நடுவே நின்றும்
இனங்கொண்டு நகைகொண்டு மடவீர் வாளா
என்செயநீ ரலர்தூற்றி எழுகின் றீரே.

தெளிவுரை : தோழி கூற்று: இவளுடைய மனத்தையும், கற்பையும், ஆடையையும் கவர்ந்து கொண்டு மணி நிறத்தையும் இவள் கையிலிருந்த வளைகளையும் செல்வமாகக் கொண்ட பெருஞ்செல்வம் திகழும் கீர்த்தியை உடைய சண்பையர் கோனாகிய திருஞான சம்பந்தருக்கு நினைவு கொண்டு உடம்பில் படர்ந்துள்ள பசலையாகிய தேமலைக் கொண்டே நன்னுதலாள் வருந்துகிறாள். அயலார் நடுவே நின்றும் கூட்டமாகக் கொண்டு, சிரித்து பழிச்சொல் கூறுகின்றார்கள். நீர் வாளா செல்வது நியாயமா? அவளுக்கு என்ன ஆறுதல் சொல்லப் போகிறீர் என்று தோழி கேட்கிறாள்.

சம்பிரதம்

1357. எழுகுல வெற்பிவை மிடறி லடக்குவன்
எறிகட லிற்புனல் குளறிவ யிற்றினில்
முழுது மொளித்திர வியையிந்நிலத்திடை
முடுகுவ னிப்பொழு திவையல விச்சைகள்
கழுமல நற்பதி யதிப தமிழ்க்கடல்
கவுணிய நற்குல திலக னிணைக்கழல்
தொழுது வழுத்திய பிறரொரு வர்க்குறு
துயர்வரு விப்பனி தரியதொர் விச்சையே.

தெளிவுரை : ஏழு குல மலைகளாகிய இவற்றை மிடற்றில் (கழுத்தில்) அடக்குவன். ஏழு கடல்களின் நீரைக் கலக்கி வயிற்றினில் முழுவதும் ஒளித்து, சூரியனை இந் நிலத்திடை முடுகுவன். இப்பொழுது இவையல வித்தைகள். சீகாழி நற்பதி அதிப ! தமிழ்க்கடல் கவுணிய ! நற்குல திலக ! நின் இணைக்கழல் தொழுது வழுத்தியவர்களுக்கு வரும் துன்பங்களை என் வித்தை தீர்த்துவிடும் என்பதாம்.

எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

1358. சயமி குத்தரு கரைமு ருக்கிய
தமிழ்பயிற்றிய நாவன்
வியலி யற்றிரு மருக லிற்கொடு விடம ழித்தருள் போதன்
கயலுடைப்புனல் வயல் வளத்தகு
கழுமலப்பதி நாதன்
இயலு டைக்கழல் தொழநி னைப்பவ
ரிருவி னைத்துயர் போமே.

தெளிவுரை : வெற்றி மிகுத்து அருகரை வென்ற தமிழ் பயிற்றிய நாவன். பரந்த வளமுள்ள திருமருகலில் கொடிய விஷத்தைப் போக்கிய போதன். கயல் மீன்களை உடைய நீர் வளமிக்க சீகாழிப்பதி நாதன் நல் இலக்கணம் பொருந்திய திருவடிகளைத் தொழ நினைப்பவர் வினைத் துயர்கள் போம் என்றவாறு.

எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

1359. மேதகுந் திகழ்பூக நாகசண் பகசூத
வேரிவண் டறைசோலை யாலைதுன் றியகாழி
நாதனந் தணர்கோனெ னானைவண் புகழாளி
ஞானசுந் தரன்மேவு தார்நினைந் தயர்வேனை
நீதியன்றன பேசும் யாயுமிந் துவும்வாசம்
நீடுதென் றலும்வீணை யோசையுங் கரைசேர
மோதுதெண் திரைசேவல் சேருமன் றிலும்வேயும்
மூடுதண் பனிவாடை கூடிவன் பகையாமே.

தெளிவுரை : தலைவி இரங்கல்: சிறந்த பாக்கு, சுரபுன்னை, சண்பகம், மா முதலிய மரங்களில் வண்டுகள் ஒலிக்கின்ற சோலைகளும் கரும்பு ஆலைகளும் நிறைந்த சீகாழி நாதன்; அந்தணர் கோன்; வண்புகழ் ஆளி; ஞானசுந்தரன் மேவும் மலர் மாலையை நினைந்து தளர்வேனாகிய என்னைப் பேசத் தகாத மொழிகள் பேசும் அன்னையும், திங்களும், மணமிக்க தென்றற் காற்றும், வீணை ஓசையும், கரை சேர மோதுகின்ற கடல் அலைகளும், சேவலை நினைந்து கூவும் அன்றிலும், புல்லாங்குழல் ஓசையும், வாடைக் காற்றும் கூடி எனக்குப் பகையாக உள்ளன.

1360. வன்பகை யாமக் குண்டரை வென்றோய்
மாமலர் வாளிப் பொருமத வேளைத்
தன்பகை யாகச் சிந்தையுள் நையும்
தையலை யுய்யக் கொண்டருள் செய்யாய்
நின்புகழ் பாடிக் கண்பனி சோரா
நின்றெழில் ஞானா என்றகம் நெக்கிட்
டன்பக லாமெய்ச் சிந்தைய ரின்பாம்
அம்பொழில் மாடச் சண்பையர் கோவே.

தெளிவுரை : தோழி கூற்று: வன்பகையாம் அந்தச் சமணரை வென்றோய் ! மலர் அம்புகளைக் கொண்டு போர் செய்யும் காமனைத் தன்னுடைய பகையாகச் சிந்தையுள் வருந்தும் தலைவியை நிலை கொள்ளுமாறு செய்வாயாக. உன்னுடைய புகழையே பாடி, கண்களில் நீர் சோர, நின்று எழில் ஞானா என்று அகம் நெக்குறுகி, அன்பு அகலா மெய்ச் சிந்தையரைப் போல, பொழில் சூழ்ந்த மாட சீகாழிக் கோவே என்று அழும் தலைவிக்கு அருள் செய்வாயாக.

மறம்

1361. கோவின்திரு முக மீதொடு வருதூதுவ ஈரக்
குளிர்பைம்பொழில் வள நாடெழில் நிதியம்பரி சம்மீ
மாவீரிய ரிவர் தங்கையென் மகுடன்திறம் அமண
மறவெங்குல மறிகின்றிலன் பழியச்சத வரசன்
பாவேறிய மதுரத்தமிழ் விரகன்புக லியர்மன்
பயில்வண்புக ழருகாசனி பணியன்றெனின் நமர்காள்
தூவேரியை மடுமின் துடி யடிமின்படை யெழுமின்
தொகுசேனையு மவனும்பட மலையும்பரி சினியே.

தெளிவுரை : அரசனுடைய ஓலையோடு வந்த தூதுவனே !

குளிர்ந்த சோலைகளை உடைய வளநாட்டு எழில் நிதியம் கொடுத்து வாங்கிய குதிரை வீரர் தங்கை என் மகுடன் திறம் அமண மறவெங்குலம் அறிகின்றிலன். பழி அச்சுத அரசன் பாவேறிய மதுரத் தமிழ் விரகன். சீகாழி மன்னன் பயில்வண் புகழ் அருகாசனி (அருகர்களுக்கு இடி போன்றவன்) எனின் நமர்காள் கள்ளைக் குடியுங்கள். உடுக்கையை அடியுங்கள். படை எழுமின். தொகு சேனையும் அவனும்பட பரிசினை மலையுங்கள் (போர் செய்யுங்கள்). மறம் என்பது வீரம். வீரர்களுடைய வீட்டுப் பெண்ணை மணந்து கொள்ள ஓலை கொண்டு வந்த தூதுவனைப் பார்த்து, நாங்கள் வீரம் மிக்கவர்கள். உங்கள் தலைவன் எங்களைவிட வீரத்தில் தாழ்ந்தவன் என்று கூறுவதுபோல் அமைந்த பாடல் இது. பாட்டின் ஓசையும் மிடுக்காய் இருப்பதைக் காண்க.

எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

1362. இனியின் றொழிமினிவ் வெறியும் மறியடு
தொழிலும் மிடுகுர வையுமெல்லாம்
நனிசிந் தையினிவள் மிகவன் புறுவதொர்
நசையுண் டதுநரை முதுபெண்டீர்
புனிதன் புகலியர் அதிபன் புனைதமிழ்
விரகன் புயமுறு மரவிந்தம்
பனிமென் குழலியை யணிமின் துயரொடு
மயலுங் கெடுவது சரதம்மே.

தெளிவுரை : தோழி அறத்தொடு நிற்றல்: வெறியாடுதலையும் ஆட்டைப் பலி கொடுக்கும் வேலையையும் குரவை ஆடுதலையும் இன்றோடு விட்டொழியுங்கள். நனி சிந்தையின் இவள் மிக அன்புறுவது ஒரு விருப்பம் உள்ளது. நரை முது பெண்டிரே ! புனிதன், புகலியர் அதிபன், புனை தமிழ் விரகன், தோள்கலை தலைவி விரும்புகின்றாள். இத் தலைவியை அழகுபடுத்துங்கள். துயரமும் மயக்கமும் கெடுவது உண்டு.

எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

1363. சரத மணமலி பரிசம் வருவன
தளர்வில் புகலிய ரதிபன் நதிதரு
வரத ணணி தமிழ் விரகன் மிகுபுகழ்
மருவு சுருதிநன் மலையி னமர்தரு
விரத முடையைநின் னிடையி னவள்மனம்
விரைசெய் குழலியை யணைவ தரிதென
இரதம் அழிதர வருதல் முனமினி
யெளிய தொருவகை கருது மலையனே.

தெளிவுரை : நொது மலர் வரை உணர்த்தித் தோழி வரைவு கடாதல். அயலார் பரிசத்தோடு வருவதற்குமுன் தலைவியை மணந்து கொள்வாயாக என்றபடி. மணத்தை முன்னிட்டு அயலார் பரிசத்தோடு வருவது உண்மை. தளர்வில்லாத புகலியர் அதிபன், நதி தரு வரதன், அணிதிகழ் விரகன், மிகுபுகழ் மருவும் சுருதி நன் மலையின் அமர்தரு விரதம் உடையை, உன்னை அடைந்தால் அவள் மனம், விரைசெய்குழலியை அணைவது அரிதென அவர்கள் வருவதற்குமுன், மலை நாட்டுத் தலைவனே ! விரைந்து ஆவன செய்வாயாக !

1364. அயன்நெடிய மாலுமவ ரறிவரிய தாணுவரன்
அருளினொடு நீடவனி யிடர்முழுது போயகல
வயலணிதென் வீழிமிழ லையின்நிலவு காசின்மலி மழைபொழியு மானகுண மதுரன்மதி தோய்கனக
செயநிலவு மாடம்மதில் புடை தழுவு வாசமலி
செறிபொழில்சு லாவிவளர் சிரபுரசு ரேசன்முதிர்
பயன்நிலவு ஞானதமிழ் விரகன்மறை ஞானமுணர்
பரமகுரு நாதன்மிகு பரசமய கோளரியே.

தெளிவுரை : பிரமன், திருமால் ஆகிய இருவராலும் அறிய முடியாத தாணுவாகிய சிவன் அருளோடு உலகத் துன்பம் முழுவதும் போயகல அயல் அணிதென் திருவீழிமிழலையில் காசு பெற்று, மழை பொழியவும் செய்த குணமதுரன். சந்திரன் தங்குகிற உயர் மாடங்களை உடையதும் சோலைகள் சூழ்ந்ததுமான சீகாழி தேவர்களுக்குத் தலைவன்; ஞானத் தமிழ் விரகன்; மறை ஞானமுணர் பரம குருநாதன் பரசமய கோளரியே ! பஞ்சத்தைப் போக்கியவன் ஞானசம்பந்தன் என்றபடி.

1365. அரியாருங் கிரிநெறியெங் ஙனம் நீர் வந்தீர்
அழகிதினிப் பயமில்லை யந்திக் கப்பால்
தெரியாபுன் சிறுநெறிக ளெந்தம் வாழ்விச்
சிறுகுடியின் றிரவிங்கே சிரமம் தீர்ந்திச்
சுரியார்மென் குழலியொடும் விடியச் சென்று
தொகுபுகழ்சேர் திருன சம்பந் தன்றன்
வரியாரும் பொழிலுமெழில் மதிலுந் தோற்றும்
வயற்புகலிப் பதியினிது மருவ லாமே.

தெளிவுரை : இடைச் சுரத்துக் கண்டோர் விலக்கல்.

சிங்கங்கள் நடமாடுகின்ற மலை வழியில் நீங்கள் எப்படி வந்தீர்கள்? உங்கள் செயல் நன்றாயிருக்கிறது. இனிப் பயமில்லை. மாலை நேரத்திற்குப் பிறகு நீங்கள் செல்லும் வழி துன்பமுடையது. நாங்கள் வாழும் இந்தச் சிறுகுடியில் இன்று இரவு தங்கி சிரமம் தீர்ந்து சுருண்ட கூந்தலையுடைய மென்குழலாளோடும் காலையில் சென்று புகழ்மிக்க திருஞானசம்பந்தரின் சோலைகள் சூழ்ந்ததும் பெரிய மதில்களை உடையதுமான சீகாழியை இனிது சென்று சேரலாம்.

ஈற்றடி மிக்குவந்த நான்கடிக் கலித்தாழிசை

1366. ஆமாண்பொன் கூட்டகத்த
வஞ்சொ லிளம் பைங்கிளியே
பாமாலை யாழ் முரியப்
பாணழியப் பண்டருள்செய்
மாமான கந்தரன்வண்
சம்பந்த மாமுனியெம்
கோமான்தன் புகழொருகா
லின்புறநீ கூறாயே
கொச்சையர்கோன் தன்புகழ்யா
னின்புறநீ கூறாயே.

தெளிவுரை : பொற் கூண்டிலுள்ள அழகிய சொல்லையுடைய இளம் பைங்கிளியே ! யாழ்முரி என்னும் பாடலைப் பாடி, திருநீலகண்ட யாழ்ப்பாணரது யாழை முரித்த திருஞானசம்பந்த மாமுனி எம் கோமான்தன் புகழ் ஒரு சமயம் இன்புற நீ கூறமாட்டாயா? சீகாழித் தலைவன் தன் புகழைக் கேட்டு நான் இன்புற நீ கூறமாட்டாயா?

எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

1367. கூற தாகமெய் யடிமை தானெனை
யுடைய கொச்சையார் அதிபதி
வீற தார்தமிழ் விரகன் மேதகு
புழி னானிவன் மிகுவனச்
சேற தார்தரு திரள்க ளைக்கன
செழுமு லைக்குரி யவர்சினத்
தேறு தானிது தழுவி னாரென
இடிகொள் மாமுர சதிருமே.

தெளிவுரை : ஏறு தழுவுதல்: ஏறு தழுவினார் இவளுக்குரியவர் என்று முரசு அதிரும்.

என்னை அடிமையாகக் கொண்ட சீகாழி அதிபதி பெருமை பொருந்திய தமிழ் விரகன், மேதகு புகழினான் இவன் மிகுவன சேறதார் தரு திரள்களைக் கனசெழு முலைகளுக்கு உரியவர். கோபங்கொண்ட காளையைத் தழுவினார் என இடி போன்ற மாமுரசு அதிரும்.

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

1368. சதுரன் புகலிய ரதிபன்கூர்
தவசுந் தரகவு ணியர்தஞ்சீர்
முதல்வன் புகலிய ரதிபன்தாள்
முறைவந் தடையலர் நகரம்போல்
எதிர்வந் தனர்விறல் கெடவெம்போர்
எரிவெங் கணைசொரி புரிமின்கார்
அதிர்கின் றனஇது பருவஞ்சே ரலர்தம்
பதிமதி லிடிமின்னே.

தெளிவுரை : பருவங்கண்டு தோழி கூறுதல் : மேம்பாட்டை உடையவன்; சீகாழி அதிபன்; கூர்தவ சுந்தர கவுணியர் தம் சீர் முதல்வன்; திருஞானசம்பந்தரது திருவடிகளை முறையாக வந்து அடையாதவர் நகரம்போல, எதிர் வந்தனர் வெற்றியழிய வெம்போர் எரி கொடிய அம்புகள் சொரிகின்ற மின்னலொடு பகைவர்களுடைய நகரில் முகில்கள் முழங்குகின்றன. கார்காலம் வந்துவிட்டது. தலைவரும் வருவார் என்று தோழி தலைவிக்கு ஆறுதல் கூறினாள்.

எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

1369. மின்னு மாகத் தெழிலி யுஞ்சேர்
மிகுபொன் மாடப் புகலி நாதன்
துன்னும் ஞானத் தெம்பி ரான்மெய்த்
தொகைசெய் பாடற் பதிக மன்னாள்
பொன்னும் மாநல் தரள முந்தன்
பொருக யற்கண் தனம்நி றைத்தாள்
இன்னு மேகிப் பொருள் படைப்பான்
எங்ங னேநா னெண்ணு மாறே.

தெளிவுரை : பொருள் வயின் பிரிய எண்ணிய நெஞ்சத்துக்குத் தலைவன் கூறியது.

மின்னும் விண்ணில் உள்ள மேகமும் சேர்மிகு பொன்மாட சீகாழி நாதன், துன்னு ஞானத்து எம்பிரான் மெய்த்தொகைசெய் தேவாரப் பதிகம் போன்றவள் மார்பில் பூத்துள்ள பொன்னிறம் போன்ற பசலையும் கண்களிலிருந்து வழியும் முத்துப் போன்ற கண்ணீரும் உடையவள். இவளிடம் பொன்னும் முத்தும் இருக்க இனி நான் எதற்காகப் பொருள் தேடப் போக வேண்டும்? என்று தலைவன் நெஞ்சத்துக்குக் கூறுகின்றான்.

பன்னிருசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

1370. மாறி லாத பொடிநீ
றேறு கோல வடிவும்
வம்புபம்பு குழலுந்
துங்க கொங்கை யிணையும்
ஊறி யேறு பதிகத்
தோசை நேச நுகர்வும்
ஒத்து கித்து நடையுஞ்
சித்த பத்தி மிகையும்
வீற தேறும் வயல்சூழ்
காழி ஞான பெருமான்
வென்றி துன்று கழலி
னொன்றி நின்ற பணியும்
தேறல் போலும் மொழியும்
சேல்கள் போலும் விழியும்
சிந்தை கொண்ட பரிசும்
நன்றி மங்கை தவமே.

தெளிவுரை : மாறிலாத திருநீறு அணிந்த மேனியும், நறுமணம் பரவிய கூந்தலும், இரண்டு முலைகளும், தேவாரப் பாடல்களின் ஓசையும், நேச நுகர்வும் ஒத்து கித்து நடையும், சித்த பத்தி மிகையும், வெற்றியமைந்த வயல்கள் சூழ்ந்த சீகாழி ஞானப் பெருமான் வெற்றியுடைய திருவடிகளைப் பணியும் தேன் போன்ற மொழியும் சேல்மீன்கள் போன்ற கண்களும் சிந்தை கொண்ட பரிசும் நன்றி மங்கை தவமே.

மங்கை செய்த தவத்தால் இவ்வளவு நலன்களையும் பெற்றாள் என்கிறார்.

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

1371. கைதவத்தா லென்னிடைக்கு
நீவந்த தரியேனோ கலதிப் பாணா
மெய்தவத்தா ருயிரனைய
மிகுசைவ சிகாமணியைக் வேணுக் கோனைச்
செய்தவத்தால் விதிவாய்ந்த
செழுமலையா ரவனுடைய செம்பொன் திண்டோள்
எய்தவத்தால் விளிவெனக்கென்
யாதுக்கு நீபலபொய் இசைக்கின் றாயே.

தெளிவுரை : தலைவி பாணனை இகழ்தல்.

இழிந்த பாணனே ! கபட நாடகம் ஆடும் நீ இங்கு வந்த காரியத்தை நான் அறியேனோ? மெய்தவத்தார் உயிரனைய மிகுசைவ சிகாமணியை, சீகாழி நாதனை செய்தவத்தால் விதி வாய்ந்த செழுமுலையார் (பரத்தையர்) தலைவனுடைய செம்பொன் திண்தோள் எய்தவத்தால் விளிவு எனக்கு யாதுக்கு நீ பல பொய் இசைக்கின்றாயே.

நீ பொய் பேசுபவன். என்னை ஏமாற்ற முடியாது என்கிறாள்.

மதங்கியார்

எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

1372. இசையை முகந்தெழு மிடறுமி திங்கிவன்
இடுகர ணங்களி னியல்பும் வளம்பொலி
திசைதிசை துன்றிய பொழில்சுல வுந்திகழ்
சிரபுர மன்றகு தமிழ்விர கன்பல
நசைமிகு வண்புகழ் பயிலும் மதங்கிதன்
நளிர்முலை செங்கயல் விழிநகை கண்டபின்
வசை,தகு மென்குல மவைமுழு துங்கொள
மதிவளர் சிந்தனை மயல்வரு கின்றதே.

தெளிவுரை : இசையை முகந்து எழு கண்டமும், இது இங்கு இவன் இடு கை முதலியவற்றால் செய்யும் அவி நயங்களின் இயல்பும், வளம் பொலிகின்ற திசை திசை துன்றிய சோலைகள் சூழ்ந்த சீகாழி மன், தகுதமிழ் விரகன், பல நசை மிகு வண் புகழ் பயிலும் மதங்கியினுடைய நளிர் முலைகளும் செங்கயல் விழி நகையும் கண்டபின், வசைதரு மென்குலம் அவை முழுதும் கொள மதிவளர் சிந்தனை மயல் வருகின்றதே.

இவளுடைய ஆடல் பாடல்களைக் கண்டு எவர்தாம் மயங்கார் ? என்கிறார்.

1373. வருகின் றனனென் றனதுள் ளமும்நின்
வசமே நிறுவிக் குறைகொண் டுதணித்
தருகும் புனல்வெஞ் சுரம்யா னமரும்
மதுநீ யிறையுன் னினையா தெனின்முன்
கருகும் புயல்சேர் மதில்வண் புகலிக்
கவிஞன் பயில்செந் தமிழா கரன்மெய்ப்
பெருகுந் திருவா ரருள்பே ணலர்போற்
பிழைசெய் தனைவந் ததர்பெண் கொடியே.

தெளிவுரை : தலைவன் கூற்று : வருகின்றனன் எனது உள்ளமும் நின் வசமே நிறுவி குறைகொண்டு தணித்து, தண்ணீர் வற்றிய பாலை நிலத்தில் நான் அமரும் அது நீ சிறிது நேரமும் நினையாது எனின் முன் கருகும் மேகம் வந்து தங்கும் உயர்ந்த மதில்களை உடைய சீகாழிக் கவிஞன், பயில் செந்தமிழ் ஆகரன் மெய் பெருகும் திருவார் அருள் பேணலர்போல் (பகைவர் போல்) பிழை செய்தனை. இந்தக் கொடிய வழியில் வந்த பெண் கொடியே ! என்று தலைவன் வருந்துகின்றான்.

1374. கொடிநீடு விடையுடைய பெருமானை யடிபரவு
குணமேதை கவுணியர்கள் குலதீப சுபசரிதன்
அடியேன திடர்முழுதும் அறவீசு தமிழ்விரகன்
அணியான புகலிநகர் அணையானகனை கடலின்
முடிநீடு பெருவலைகொ டலையூடு புகுவனுமர்
முறையேவு பணிபுரிவ னணிதோணி புனைவனவை
படியாரும் நிகரரிய வரியாரும் மதர்நயனி
பணைவார்மென் முலைநுளையர் மடமாதுன் அருள்பெறினே.

தெளிவுரை : தலைவன் கூற்று: விடைக் கொடியை உடைய சிவபெருமானைப் பணியும் குண மேதை, கவுணியர்களின் குலதீப, நல்ல வரலாற்றை உடையவன், அடியேனது இடர் முழுதும் அற வீசும் தமிழ் விரகன், அழகான சீகாழி அணையான கனை கடலின் முடிநீடு பெருவலைகளைக் கொண்டு அலையூடு புகுவன், உறவினர் முறை யேவு பணி புரிபவன், அணி தோணி புனைவன், அவை படியாரும் நிகர் அரிய அழகிய மதர்த்த கண்களையுடையவள் பெருத்த முலையினை உடைய வலையர் மடமாது அருள் பெறினே.

1375. பெறுபயன் மிகப்புவியு ளருளுவன பிற்றைமுறை
பெருநெறி யளிப்பனபல பிறவியை யொழிச்சுவன
உறுதுய ரழிப்பனமு னுமைதிரு வருட்பெருக
உடையன நதிப்புனலி னெதிர்பஃறி யுய்த்தனபுன்
நறுமுறு குறைச்சமணை நிரைகழு நிறுத்தியன
நனிகத வடைத்தனது னருவிட மகற்றியன
துறுபொழில் மதிற்புறவ முதுபதிம னொப்பரிய
தொழில்பல மிகுத்ததமிழ் விரகன கவித்தொகையே.

தெளிவுரை : பெறுபயன் மிகப் புவியுள் அருளுவன் மறுமையில், பெரு நெறியளிப்பன; பல் பிறவியை ஒழிப்பன; உறுதுயர் அழிப்பன; முன் உமாதேவியார் திருவருள் பெருக உடையன; நதிப்புனலின் எதிர் படகு உய்த்தன; புன்நறுமுறு (குறைகூறிய) சமணர்களைக் கழுவேற்றின; திருமறைக்காட்டில் கோயில் கதவுகளை மூட வைத்தன; கொடிய விஷம் நீங்கச் செய்தன; சோலைகள் சூழ்ந்த மதில்களையுடைய, சீகாழி பதிமன் ஒப்பரிய தொழில்பல மிகுந்த தமிழ் விரகன் செய்த தேவாரப் பாடல்களே.

பன்னிருசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

1376. தொகுவார் பொழில்சுற் றியவான்
மதிதோ யுமதிற் கனமார்
தொலையா ததிருப் பொழில்மா
ளிகைமா டநெருக்கியசீர்
மிகுகா ழியன்முத் தமிழா
கரன்மே தகுபொற் புனைதார்
விரையார் கமலக் கழலே
துணையா கநினைப் பவர்தாம்
மகரா கரநித் திலநீர்
நிலையார் புவியுத் தமராய்
வரலா றுபிழைப் பி(லர்,ஊழிதொ)
றூழி இலக்கிதமாய்த்
தகுவாழ்வு நிலைத் தொழில்சே
ரறமா னபயிற் றுவர்மா
சதுரால் வினைசெற் றதன்மே
லணுகார் பிறவிக்கடலே.

தெளிவுரை : சோலைகள் சூழ்ந்த உயர்ந்த மதில்களையுடைய, மாட மாளிகைகள் நெருங்கிய சீகாழியின் முத்தமிழாகரன், மேதகு பொற்புனைதார், விரையார் கமலக் கழலே துணையாக நினைப்பவர்தாம் முத்துக்கள் நிறைந்த கடலால் சூழப்பட்ட உலகமும் சுற்றமாய் ஊழிக் காலத்திலும் நிலைபெற்று நின்ற வாழ்வு நிலைத்து எழில் சேர் அறமான பயிற்றுவர் மாசதுரால் வினை செற்று அதன் மேல் பிறவிக்கடலை அணுகார்.

திருஞானசம்பந்தரது திருவடிகளை வணங்குபவர்களுக்குப் பிறவித் துன்பங்கள் இல்லை என்கிறார்.

பாணாற்றுப்படை

நேரிசை ஆசிரியப்பா

1377. கருமங் கேண்மதி கருமங் கேண்மதி
துருமதிப் பாண கருமங் கேண்மதி
நிரம்பிய பாடல் நின்கண் ணோடும்
அரும்பசி நலிய அலக்கணுற் றிளைத்துக்
காந்திய வுதரக் கனல்தழைத் தெழுதலின்

தெளிவுரை : பாணனே ! நான் ஒரு செய்தி சொல்லுகிறேன் கேள். பலவாகிய பாடல்களை, பசித் துன்பத்தோடு பல கஷ்டங்களை அடைந்து வயிற்றுப் பசியாகிய நெருப்பு எழுவதனால்,

தேய்ந்துடல் வற்றிச் சில்நரம் பெழுந்தே
இறுகுபு சுள்ளி இயற்றிய குரம்பை
உறுசெறுத் தனைய வுருவுகொண் டுள்வளைஇ
இன்னிசை நல்லி யாழ்சுமந் தன்னம்
மன்னிய வளநகர் மனைக்கடை தோறும்

தெளிவுரை : உடல் தேய்ந்து வற்றி, சின்னரம்பு எழுந்து இறுகவும், சிறுசிறு கழிகளைக் கொண்டு கட்டிய சிறுவீடுபோல உருவுகொண்டு உள் வளைந்து, இனிய இசையைக் கொண்ட நல்ல யாழைச் சுமந்து, அன்னங்கள் பொருந்திய வள நகராகிய சீகாழியில் வீடுகள் தோறும்.

சென்றுழிச் சென்றுழிச் சில்பலி பெறாது
நின்றுழி நிலாவு வன்துயர் போயொழிந்
தின்புற் றிருநிதி எய்தும் அதுநுன
துள்ளத் துள்ள தாயின் மதுமலர்
வண்டறை சோலை வளவயல் அகவ

தெளிவுரை : சென்று சென்று, பிச்சை கிடைக்காமல் நிற்கின்ற வன்துயர் ஒழிந்து இன்புற்றுப் பெருஞ்செல்வம் பெறும் எண்ணம் உனக்கு இருக்குமாயின், தேன் பொருந்திய மலர்ச் சோலைகளும் வயல்களும் ஒலி செய்ய (அகவ - பாண ! எனினுமாம்)

ஒண்திறற் கோள்மீன் உலாவு குண்டகம்
உயர்தரு வரையின் இயல்தரு பதணத்துக்
கடுநுதிக் கழுக்கடை மிடைதரு வேலிக்
கனகப் பருமுரண் கணையக் கபாட
விளையக் கோபுர விளங்கெழில் வாயில்

தெளிவுரை : ஒண்திறல் கோண்மீன் உலாவும் ஆழ்ந்த நீர் நிலையும் உயர்ந்த மதிலும், சூலம் நிரம்பிய வேலியும் கனகப் பருமுரண் கணையக் கபாடமும் (குறுக்கு மரமாகிய தாழ்ப்பாளோடு கூடிய) கதவும் கோபுரங்களை உடைய வாயில்,

நெகிழ்ச்சியின் வகுத்துத் திகழ்ச்சியின் ஓங்கும்
மஞ்சணை இஞ்சி வண்கொடி மிடைத்த
செஞ்சுடர்க் கனகத் திகழ்சிலம் பனைய
மாளிகை ஒளிச் சூளிகை வளாகத்து
அணியுடைப் பலபட மணிதுடைத் தழுத்திய

தெளிவுரை : நெகிழ்ச்சியில் வகுத்து திகழ்ச்சியில் ஓங்கும் மஞ்சனை இஞ்சி (மேகம் தவழ்கின்ற உயர்ந்த மதில்) வளப்பம் பொருந்திய கொடிகள் கட்டிய ஒளியுள்ள பொன்மலை என்ன மாளிகைகளை உடைய நிலா முற்றத்தோடு கூடிய மணிகள் பதிக்கப் பெற்ற,

நல்லொளி பரந்து நயந்திகழ் இந்திர
வில்லொளி பலபல விசும்பிடைக் காட்ட
மன்னிய செல்வத்துத் துன்னிய பெருமைச்
செம்மலர் மாது சேர்ந்திறை பிரியாக்
கழுமல நாதன் கவுணியர் குலபதி

தெளிவுரை : நல்லொளி பரந்து நயநிதி கழிந்து இரவு இலகொளி பலபல விசும்பிடை காட்ட மன்னிய செல்வத்துத் துன்னிய பெருமை திருமகள் நிலைத்திருக்கின்ற சீகாழியின் நாதன், கவுணியர் குலபதி,

தண்டமிழ் விரகன் சைவ சிகாமணி
பண்டிதர் இன்பன் பாசமய கோளரி
என்புனை தமிழ்கொண் டிரங்கிஎன் உள்ளத்
அன்பினை அருளிய ஆண்டகை தன்புகழ்
குறைவறுத் துள்கி நிறைகடை குறுகி

தெளிவுரை : தண்டமிழ் விரகன், சைவ சிகாமணி, பண்டிதர் இன்பன், பரசமய கோளரி, என்புனை தமிழ் கொண்டிரங்கி, என் உள்ளத்து அன்பினை அருளிய ஆண்டகையாகிய ஞான சம்பந்தரை அடைந்து, தன் புகழ் குறைவறுத்து உள்கி நிறைகடை குறுகி,

நாப்பொலி நல்லிசை பாட
மாப்பெருஞ் செல்வம் மன்னுதி நீயே.

தெளிவுரை : நாப்பொலி நல்லிசை பாட மாப்பெருஞ் செல்வம் மன்னுதி நீயே.

பாணனே ! நீ நேராகத் திருஞானசம்பந்தரிடம் சென்று அவரை வணங்கி, அவரைத் துதி செய்தால் நீ நிறைந்த செல்வத்தைப் பெறுவாய் என்பதாம்.

வஞ்சித் துறை

1378. நீதியின் நிறைபுகழ்
மேதகு புகலிமன்
மாதமிழ் விரகனை
ஓதுவ துறுதியே.

தெளிவுரை : நீதியின் நிறைபுகழ்; மேன்மை தங்கிய சீகாழி மன்னன்; மாதமிழ் விரகனை ஓதுவது உறுதியே. நான் நிச்சயமாகத் திருஞானசம்பந்தரை வணங்கித் துதிப்பேன்.

எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

1379. உறுதிமுலை தாழ எனையிகழும் நீதி
உனதுமனம் ஆர முழுவதும்அ தாக
அறுதிபெறும் மாதர் பெயர்தருதல் தானும்
அழகிதுஇனி யான்உன் அருள்புனைவ தாகப்
பெறுதிஇவை நீஎன் அடிபணிதல் மேவு
பெருமைகெட நீடு படி றொழி பொன் மாடம்
நறைகமழும் வாச வளர்பொழில் சுலாவும்
நனிபுகலி நாத தமிழ்விரக நீயே.

தெளிவுரை : நனி புகலி நாத ! தமிழ் விரக ! நீயே, உறுதி முலைதாழ, எனை இகழும் நீதி உனது மனமார, முழுவதுமதாக, அறுதி பெறு மாதர், பெயல் தருதல் தானும் அழகிது. இனி யான் உன் அருள் புனைவதாகப் பெறுதி; இவை நீ என் அடிபணிதல் மேவு பெருமை கெட நீடு பொய் ஒழி; பொன் மாட மணம் வீச சோலைகள் சூழ்ந்த சீகாழிப்பதி நாத எனக் கூட்டுக. மனம் புண்பட்ட தலைவி கூறுவதுபோல் அமைந்துள்ளது.

ஆசிரியத் துறை

1380. நீமதித் துன்னிநினை யேல்மட நெஞ்சமே
காமதிக் கார்பொழிற் காழி
நாமதிக் கும்புகழ் ஞானசம் பந்தனொடு
பூமதிக் கும்கழல் போற்றே. 

தெளிவுரை : மடநெஞ்சே ! நீ மதித்துச் சிந்தித்து நினைக்கவில்லை. சந்திரன் தவழும் உயர்ந்த சோலைகள் சூழ்ந்த சீகாழிப்புகழ் ஞான சம்பந்தனோடு, உலகிலுள்ளார் போற்றும் அவரது திருவடிகளைப் போற்றுவாயாக.

கட்டளைக் கலிப்பா

1381. போற்றி செய்தரன் பொற்கழல் பூண்டதே
புந்தி யான்உந்தம் பொற்கழல் பூண்டதே
மாற்றி யிட்டது வல்விட வாதையே
மன்னு குண்டரை வென்றது வாதையே
ஆற்றெ திர்ப்புனல் உற்றதம் தோணியே
ஆன தன்பதி யாவதம் தோணியே
நாற்றி சைக்கவி ஞானசம் பந்தனே
நல்ல நாமமும் ஞானசம் பந்தனே.

தெளிவுரை : போற்றி செய்து, அரனது பொற்கழல்களைப் பூண்டதே அறிவு. யானும் உன் பொற்கழல் பூண்டதே மாற்றியிட்டது. நஞ்சால் உண்டாகிய துன்பத்தையும், சமணர்களது வாதத்தை வென்றது. ஆற்று வெள்ளத்தில் எதிர்த்துச் சென்றது. அந்தப் படகே தன்பதியானது. எல்லாமும் படகே. தோணிபுரமாகிய சீகாழியே. நாற்றிசைக் கவி ஞான சம்பந்தனே ! நல்ல நாமமும் ஞானசம்பந்தனே. ஞானசம்பந்தரே கதியாவார் என்க.

கைக்கிளை மருட்பா

1382. அம்புந்து கண்இமைக்கும் ஆன நுதல்வியர்க்கும்
வம்புந்து கோதை மலர்வாடும் சம்பந்தன்
காமரு கழுமலம் அனையா
ளாம்இவள் அணங்கலள் அடிநிலத் தனவே.

தெளிவுரை : கைக்கிளை - ஒருதலைக் காமம். தலைவன் தலைவி என்னும் இருபாலரில் ஒருவர் மட்டும் மற்றொருவரைக் காதலிப்பது (கை - சிறுமையாகிய, கிளை- உறவு). அம்பு போன்ற கண் இமைக்கும். நெற்றி வியர்க்கும். மணம் வீசும் மலர்மாலை வாடும். திருஞானசம்பந்தரது, அழகிய சீகாழி போன்றவள் இவளேதான். தெய்வ மகள் அல்லள். அவளது பாதம் பூமியில் பதிந்துள்ளது.

இது தலை மகன் கூற்று. தேவர்களின் கண் இமைக்காது. அவர்கள் உடம்பு வியர்க்காது. அவர்கள் அணிந்துள்ள மலர்மாலை வாடாது. அவர்கள் பாதங்கள் பூமியில் படியா.

பன்னிரு சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

1383. தனமும் துகிலும் சாலிக்
குலையும் கோலக் கனமாடச்
சண்பைத் திகழ்மா மறையோர்
அதிபன் தவமெய்க் குலதீபன்

தெளிவுரை : செல்வமும் துகிற் கொடியும் நெற் குவியலும் அழகு கொலுவீற்றிருக்க சீகாழித் திகழ் மாமறையோன்; அதிபன் தவமெய்க் குலதீபன்.

கனவண் கொடைநீ டருகா
சனிதன் கமலக் கழல்பாடிக்
கண்டார் நிறையக் கொள்ளப்
பசியைக் கருதா தெம்பாண

தெளிவுரை : கனவன், கொடை நீடு அருகாசனி, தன் கமலக் கழல்பாடி, கண்டார் நிறையக் கொள்ள பசியைக் கருதாது எம் பாணனே !

புனைதண் தமிழின் இசைஆர்
புகலிக் கரசைப் புகழ்பாடிப்
புலையச் சேரிக் காளை
புகுந்தால் என்சொல் புதிதாக்கிச்

தெளிவுரை : புனைதண் தமிழின் இசையார் புகலியாகிய சீகாழிக் கரசைப் புகழ்பாடி, புலையச் சேரிக் காளை (தலைவன்) புகுந்தால் என் சொற் புதிதாக்கி,

சினவெங் கதமாக் கலிறொன்
றிந்தச் சேரிக் கொடுவந்தார்
சேரிக் குடிலும் இழந்தார்
இதனைச் செய்குவ தறியாரே.

தெளிவுரை : பாணனை நோக்கித் தலைவி கூறியது.

சினவெங் கதமாக் களிறு (பெரிய யானை) ஒன்று இந்தச் சேரி கொடுவந்தார் இதனை என்ன செய்வது என்று அறியார்.

திருஞானசம்பந்தரது புகழைப் பாடி வந்தால் நற்கதி பெறுவாய். பரத்தையரிடம் காலங்கழிக்கும் தலைவனைப் பற்றிய பொய்யான புகழ் உரைகளை இங்குச் சொல்லாதே என்கிறாள்.

இன்னிசை வெண்பா

1384. யாரேஎன் போல அருளுடையார் இன்கமலத்
தாரேயும் சென்னித் தமிழ்விரகன் சீரேயும்
கொச்சை வயன்றன் குரைகழற்கே மெச்சி
அடிமைசெயப் பெற்றேன் அறிந்து.

தெளிவுரை : எம்போல் யார் அருளுடையார். தாமரை மலர்மாலை அணியும் சென்னித் தமிழ் விரகன். சிறப்புப் பொருந்திய சீகாழி நாதன்தன் குரைகுழற்கே (திருவடிகளுக்கே) மெச்சி அடிமை செய்ய அறிந்து பெற்றேன். ஆகையால் நானே அருளுடையவன்.

பதின்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

1385. அறிதரு நுண்பொருள் சேர்பதி கம் அரன் கழல்மேல்
அணிதரு சுந்தர மார்தமிழ் விரகன் பிறைதோய்
செறிதரு பைம்பொழில் மாளிகை சுலவும் திகழ்சீர்த்
திருவளர் சண்பையின் மாடலை கடல்ஒண் கழிசேர்
எறிதிரை வந்தெழு மீன்இரை நுகர்கின் றிலைபோய்
இனமும் அடைந்திலை கூர்இடரோடிருந் தனையால்
உறுதியர் சிந்தையி னூடுத வினர்எம் தமர்போல்
உமரும் அகன்றன ரோஇது உரைவண் குருகே.

தெளிவுரை : காமமிக்க கழிபடர் கிளவி : வண் குருகே ! அறிதரு நுண் பொருள் சேர் தேவாரப் பதிகங்களைப் பாடிச் சிவபெருமான் திருவடிகளுக்கு அணியாகத் தந்துள்ள சுந்தரமார் தமிழ் விரகன். சந்திரன் படிகின்ற உயர்ந்த சோலைகள் சூழ்ந்த மாளிகைகள் நிறைந்த திகழ்சீர் திருவளர் சீகாழியில், அலைகளை உடைய கடற்கரையில் அலைகள் கொண்டு வரும் மீன்களை உண்ணுவதில்லை. உன் இனத்தாரிடமும் போய்ச் சேரவில்லை. நீயும் என்னைப்போல் காம நோயால் வருந்துகிறாயா? உன்னை விட்டு உன் காதலன் பிரிந்து சென்றுள்ளானோ? இதைச் சொல்வாயாக !

கலி விருத்தம்

1386. குருகணி மணிமுன் கைக்கொடி யும்நல் விறலவனும்
அருகணை குவர்அப் பால்அரி தினிவழி மீள்மின்
தருகெழு முகில்வண் கைத்தகு தமிழ்விர கன்றன்
கருகெழு பொழில்மா டக்கழு மலவள நாடே.

தெளிவுரை : இடைச் சுரத்துக் கண்டோர் கூறுதல்:

உடன் போக்கில் சென்ற தலைவனையும் தலைவியையும் தேடி வந்த செவிலித்தாய்க்கு இடைச் சுரத்தில் கண்டோர் கூறும் துறையாகும் இது.

வளையல்களை முன்கையில் அணிந்த கொடி போன்ற தலைவியும் வெற்றி வீரனாகிய தலைவனும் கொஞ்ச தூரம்தான் போயிருப்பார்கள். அதன் பிறகு நீ செல்வது அரிது. வந்த வழியே திரும்பிச் செல்வாயாக. மேகம் போல் கொடையளிக்கும் கைகளை உடைய தமிழ் விரகன்தன் சோலை சூழ்ந்த மாடங்களையுடைய சீகாழி வளநாட்டுக்குச் செல்வார்கள். நீ வருந்தாதே என்பதாம்.

1387. நாடே றும்புகழ் ஞானசம் பந்தன்வண்
சேடே றும்கொச்சை நேர்வளம் செய்துனை
மாடே றும்தையல் வாட மலர்ந்தனை
கேடே றும்கொடி யாய்கொல்லை முல்லையே.

தெளிவுரை : தோழி கூற்று: நாட்டில் மிகுதிப்படும் புகழ் ஞான சம்பந்தனது பெருமையே. சீகாழியின் நேர்வளம் செய்துணை மாடேறும் தையல் வாட மலர்ந்தனை. கொழு கொம்பு ஏறும் கொடியாய் ! கொல்லை முல்லையே ! தலைவி வாடியிருக்கும் போது, முல்லையே, நீ மலர்ந்திருப்பது நல்லதோ என்கிறார். கார் காலம் வந்துவிட்டது. தலைவரும் வருவார் என்பது குறிப்பு.

எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

1388. முல்லை நகைஉமைதன் மன்னு திருவருளை
முந்தி உறுபெரிய செந்தண் முனிவன் மிகு
நல்ல பொழில்சுலவு தொல்லை அணிபுகலி
நாதன் மறைமுதல்வன் வேத மலையதனில்
வில்லை யிலர் கணையும் இல்லை பகழிஉறு
வேழம் இரலைகலை கேழல் வினவுறுவர்
சொல்லை இலர்விரக ரல்லர் தழை கொணர்வர்
தோழி இவர்ஒருவர் ஆவ அழிதர்வரே.

தெளிவுரை : தோழி கூற்று: முல்லை மலர் போன்ற பற்களை உடைய உமாதேவியாரின் திருவருளை முன்பு பெற்ற பெரிய செந்தண் முனிவன். மிகுநல்ல சோலைகள் சூழ்ந்த பழைமையான அழகுடைய சீகாழிநாதன். மறை முதல்வன் வேத மலையில் (கைலாய மலையில்) வில்லை வைத்திருக்கவில்லை. அம்பும் இல்லை. பகழியொடு யானை, மான், பன்றி இவைகளைப் பார்த்தீர்களா என்று பொருள் பொதிந்த மொழிகளைப் பேசுகின்றார் இல்லை. காம நோக்கம் உடையவர் அல்லர். தழையைக் கையுறையாகக் கொண்டு வருவார். இவர்தான் தலைவராவார்.

வஞ்சித் துறை

1389. வழிதரு பிறவியின்உறு
தொழில் அமர்துயர் கெடும்மிகு
பொழிலணி தருபுகலிமன்
எழிலிணையடி இறைமினே.

தெளிவுரை : வழிதரு பிறவியின் உறு தொழில் அமர் துயர் கெடுமிகு. அதாவது தொடர்ந்து வருகின்ற பிறவித் துன்பத்தைப் போக்குகின்ற சோலைகள் சூழ்ந்த சீகாழி மன்னனது அழகிய இரண்டு திருவடிகளைத் துதிப்போமாக. ஞானசம்பந்தரது திருவடிகளைப் புகழ்ந்து போற்றுங்கள் என்று கூறி முடிக்கின்றார்.

திருச்சிற்றம்பலம்

39. ஆளுடைய பிள்ளையார் திருத்தொகை (நம்பியாண்டார் நம்பிகள் அருளிச் செய்தது)

இந்நூல் திருஞானசம்பந்தப் பிள்ளையாருடைய வரலாற்று நிகழ்ச்சிகளைத் தொகுத்துக் கூறுவதாகலின், ஆளுடைய பிள்ளையார் திருத்தொகை என்னும் பெயருடையதாயிற்று. திருஞானசம்பந்தப் பிள்ளையார் சிவபிரானுடைய திருவருளால் உமா தேவியார் அளித்தருளிய திருமுலைப் பாலைப் பருகித் தேவாரப் பாக்களைப் பாடத் தொடங்கியது முதல், திருநல்லூர்ப் பெருமணத்தில் திருவருட் பேரொளியில் கலந்தது வரை நிகழ்ந்த செய்திகளை எல்லாம் இச் சிறுநூல் தொகுத்து உரைக்கின்றது.

திருச்சிற்றம்பலம்

1390. தி பூவார் திருநுதல்மேல் பொற்சுட்டி இட்டொளிரக்
கோவாக் குதலை சிலம்பரற்ற ஒவா
தழுவான் பசித்தான் என் றாங் கிறைவன் காட்டத்
தொழுவான் துயர்தீர்க்கும் தோகை வழுவாமே
முப்பதத் திரண்டறமும் செய்தாள் முதிராத

தெளிவுரை : அழகிய நெற்றியில் பொற்சுட்டி பிரகாசிக்க, குதலை மொழியையுடைய குழந்தையின் கால்களில் சிலம்பு ஒலி செய்ய, இடைவிடாது அழுவதனால் பசித்திருக்கிறான் என்று இறைவன் காட்டவும், வழிபடுவோரின் துயரங்களை நீக்கும். மயில் போலும் சாயலை உடையவளும் குறை வில்லாமல் முப்பத்து இரண்டு அறங்களையும் செய்தவளுமாகிய உமா தேவியார்,

செப்பொத்த கொங்கைத் திருநுதலி அப்பன்
அருளாலே ஊட்டுதலும் அப்பொழுதே ஞானத்
திரளாகி முன்னின்ற செம்மல் இருள் தீர்ந்த
காழி முதல்வன் கவுணியர்தம் போர்ஏறு
ஊழி முதல்வன் உவன் என்று காட்ட வலான்

தெளிவுரை : முதிராத, செப்புப் போன்ற கொங்கைகளையும் திருநுதலையும் உடைய உமா தேவியார் இறைவனது கருணையினால் தன் முலைப் பாலைப் பொற்கிண்ணத்தில் ஊட்டவும் அப்பொழுதே ஞானத்திரளாகி முன்னின்ற திருஞான சம்பந்தர், மயக்கம் நீங்கிய சீகாழித் தலத்தின் முதல்வனும், ஊழி முதல்வனுமாகிய இறைவன் ஆகாயத்தில் உள்ளான் என்று காட்டவல்லான்,

வீழி மிழலைப் படிக்காசு கொண்டபிரான்
பாழி அமணைக் கழுவேற்றினான் பாணர்
யாழை முறித்தான் எரிவாய் இடும் பதிகம்
ஆழி உலகத் தழியாமற் காட்டினான்.
ஏழிசை வித்தகன் (வந்து) ஏனோரும் வானோரும்

தெளிவுரை : திருவீழிமிலையில் படிக்காசுப் பெற்ற பிரான்; பெருத்த அமணர் கூட்டத்தைக் கழுவேற்றினான். திருநீலகண்ட யாழ்ப்பாணரின் யாழை, யாழ்முரி என்னும் பாடலைப் பாடி முரித்தான். எரிவாயிடும் பதிக மூலம் கடலால் சூழப்பட்ட இந்த உலகத்தை அழியாமல் காப்பாற்றினான்; ஏழிசைகளிலும் வித்தகன்; மற்றவர்களும் தேவர்களும் வந்து வணங்கும்.

தாழும் சரணச் சதங்கைப் பருவத்தே
பாலையும் நெய்தலும் பாடவலான் சோலைத்
திருவா வடுது றையில் செம்பொற் கிழிஒன்
றருளாலே பெற்றருளும் ஐயன் தெருளாத
தென்னவன் நாடெல்லாம் திருநீறு பாலித்த

தெளிவுரை : காலில் சதங்கை அணியும் சிறு பருவத்திலேயே பாலை நிலத்தைப் பற்றியும் நெய்தல் நிலத்தைப் பற்றியும் பாடும் திறம் பெற்றிருந்தார். சோலைகள் சூழ்ந்த திருவாவடுதுறையில் செம்பொற் கிழியொன்று பெறும் அளவுக்கு அருள் பெற்றிருந்த ஐயன்; தெளியாத பாண்டிய நாட்டில் திருநீறு அளித்த மன்னன்.

மன்னன் மருகல் விடம் தீர்த்த பிரான்பின்னைத்தென்
கோலக்கா வில்தாளம் பெற்றுஇக் குவலயத்தில்
மாலக்கா லத்தே மாற்றினான் ஞாலத்து
முத்தின் சிவிகை அரன் கொடுப்ப முன்னின்று
தித்தித்த பாடல் செவிக்களித்தான் நித்திலங்கள்

தெளிவுரை : திருமருகலில் பாம்பு கடித்து இறந்த கணவனை உயிர் பெற்றெழச் செய்தவன்; திருவோலக்காவில் பொற்றாளம் பெற்று இக் குவலயத்தின் மயக்கத்தை மாற்றியவன்; சிவ பெருமான் முத்துச்சிவிகையைக் கொடுப்ப முன்னின்று தித்தித்த தேவாரப் பாடல்களைச் செவிக்கு விருந்தாக அளித்தவன்.

மாடத் தொளிரும் மறைக்காட் டிறை கதவைப்
பாடி அடைப்பித்த பண்புடையான் நீடும்
திருவோத்தூர் ஆண்பனையைப் பெண்பனைஆ கென்னும்
பெருவார்த்தை தான் உடைய பிள்ளை மருவினிய
கொள்ளம்பூ தூர்க்குழகன் நாவா யது கொடுப்ப

தெளிவுரை : முத்துக்கள் மாடங்களில் பிரகாசிக்கும் திருமறைக்காட்டில் (வேதாரண்யத்தில்) முடியாமல் இருந்த கோயில் கதவை, திருப்பதிகம் பாடி மூடும்படி செய்தான். நீண்ட புகழை உடைய திருவோத்தூரில் (இப்போது செய்யாறு என வழங்கப்படுகிறது) ஆண் பனையைப் பெண் பனை ஆகுமாறு செய்த அருளாளன்; மணமிகுந்த கொள்ளம்பூதூர் இறைவன் ஓடம் தர,

உள்ளமே கோலாக ஊன்றினான் வள்ளல்
மழவன் சிறு மதலை வான்பெருநோய் தீர்த்த
குழகன் குலமறையோர் கோமான் நிலவிய
வைகை ஆற் றே டிட்டு வான்நீர் எதிர்ஒட்டும்
செய்கையான் மிக்க செயலுடையான் வெய்யவிடம்

தெளிவுரை : உள்ளத்தையே துடுப்பாகக் கொண்டு படகைச் செலுத்தினான்; வள்ளல் மழவனுடைய குழந்தையினது பெருநோயினைத் தீர்த்த அழகன். கவுணியர் குலக் கோமான்; வைகை ஆற்றின் வெள்ளத்தில் ஏட்டை எதிர் ஓட்டும் செய்கையால் மிக்க செயலுடையான்,

மேவி இறந்த அயில் வேற்கண் மடமகளை
வாவென் றழைப்பித் திம் மண்ணுலகில் வாழ்வித்த
சீர்நின்ற செம்மைச் செயலுடையான் நேர்வந்த
புத்தன் தலையைப் புவிமேல் புரள்வித்த
வித்தகப் பாடல் விளம்பினான் மொய்த்தொளிசேர்

தெளிவுரை : மயிலாப்பூரில் கொடிய விஷத்தால் இறந்த வேல் போன்ற கண்களை உடைய பூங்கோதையை, வா என்று அழைத்து இம் மண்ணுலகில் வாழ்வித்த சீர்நின்ற செம்மைச் செயலுடையான்; எதிரிட்டு வந்த புத்த மதத்தைச் சேர்ந்தவனது தலையைப் புவிமேல் புரள்வித்த வித்தகப் பாடலைப் பாடியவன்,

கொச்சைச் சதுரன் தன் கோமானைத் தான் செய்த
பச்சைப் பதிகத் துடன்பதினா றாயிரம்பா
வித்துப் பொருளை விளைக்க வலபெருமான்
முத்திப் பகவ முதல்வன் திருவடியை
அத்திக்கும் பத்தர்எதிர்ஆணைநம தென்னவலான்

தெளிவுரை : ஒளி மிகுந்த கொச்சை எனப்படும் சீகாழிச் சதுரனாகிய இறைவன் மீது பாடிய பதிகத்துடன் பதினாறாயிரம் தேவாரப் பாடல்களைப் பாடவல்ல, முத்தி தரும் இறைவன் திருவடியை அடைய பக்தி மார்க்கத்தை நமதென்று சொல்ல வல்லவன்,

கத்தித் திரிபிறவிச் சாகரத்துள் ஆழாமே
பத்தித் தனித்தெப்பம் பார்வாழத் தந்தபிரான்
பத்திச் சிவம் என்று பாண்டிமா தேவியொடும்
கொற்றக் கதர்வேற் குலச்சிறையும் கொண்டாடும்
அற்றைப் பொழுதத் தமணர்இடும் வெந்தீயைப்

தெளிவுரை : ஓலமிட்டுத் திரிகிற பிறவியாகிய கடலில் ஆழ்ந்து போகாமல், பக்தியாகிய ஒப்பற்ற தெப்பத்தை உலகம் வாழத் தந்த பிரான்; பத்திச் சிவமென்று பாண்டிமா தேவியொடும் கொற்றக் கதிர் வேலையுடைய அமைச்சராகிய குலச்சிறையாரும் கொண்டாடும் அன்று சமணர்கள் இட்ட வெந்தீயை,

பற்றிச் சுடுகபோய்ப் பாண்டியனை என்னவல்லான்
வர்த்தமா னீசர் கழல்வணங்கி வாழ் முருகன்
பத்தியை ஈசன் பதிகத்தே காட்டினான்
அத்தன் திருநீல நக்கற்கும் அன்புடையான்
துத்த மொழிக்குதலைத் தூயவாய் நன்னுதலி

தெளிவுரை : பற்றிச் சுடுக போய்ப் பாண்டியனை என்ன வல்லான்; திருப்புகலூரில் வர்த்தமானீச்சரம் என்னும் கோயிலில் எழுந்தருளிய சிவபெருமான் பாதங்களைப் பணிந்து, வாழ் முருகன் பத்தியை ஈசன் பதிகத்தே காட்டினான். அத்தன் திருநீல நக்கற்கும் அன்புடையான். துத்தம் என்னும் இசை நரம்பை ஒழிக்கும் குழந்தை தூயவாய்,

நித்தில்லப்பூண் முலைக்கும் நீண்டதடங் கண்ணினுக்கும்
கொத்தார் கருங்குழற்கும் கோலச்செங் கைம்மலர்க்கும்
அத்தா மரை அடிக்கும் அம்மென் குறங்கினுக்கும்
சித்திரப்பொற் காஞ்சி சிறந்தபே ரல்குலுக்கும்
முத்தமிழ்நூல் எல்லாம் முழுதுணர்ந்த பிள்ளையார்க்கு

தெளிவுரை : (மனைவியின் சிறப்பைக் கூறுகின்றார்) நல்ல நெற்றியையுடைய முத்து அணிந்த முலைகளுக்கும், நீண்ட பெரிய கண்களுக்கும், கொத்தார் கரிய கூந்தலுக்கும், கோலச் செங்கைம் மலர்க்கும், அந்தாமரையடிக்கும் அழகிய மென்மையான தொடைகளுக்கும் சித்திரப் பொற் காஞ்சி செறிந்த பேர் அல்குலை உடையாளுக்கும் முத்தமிழ் நூல் எல்லாம் உணர்ந்த நம் திருஞான சம்பந்தர்க்கும்,

ஒத்த மணம் இது என் றோதித் தமர்களெல்லாம்
சித்தம் களிப்பத் திருமணம் செய் காவணத்தே
அற்றைப் பொழுதத்துக் கண் டுட னேநிற்க
பெற்றவர்க ளோடும் பெருமணம் போய்ப் புக்குத்தன்
அத்தன் அடியே அடைந்தான் அழகிதே.

தெளிவுரை : ஒத்த மணம் இது என்று ஓதி, சுற்றத்தார் எல்லாம் மனம் களிக்க திருமணம் செய்த பந்தலில், அன்றைய தினமே எல்லாரும் கண்டு மகிழ, பெற்றவர்களோடும் திருநல்லூர்ப் பெருமணம் என்னும் திருக்கோயிலுக்குச் சென்று, கோயிலினுள் புகுந்து தன் அத்தன் அடியே மகிழ்ந்து அடைந்தான். அப்போது எழுந்த பெருஞ்சோதியில் திருமணத்திற்கு வந்திருந்த அனைவரும் மூழ்கி முத்தி பெற்றனர்.

திருச்சிற்றம்பலம்

40. திருநாவுக்கரசு தேவர் திரு ஏகாதசமாலை (நம்பியாண்டார் நம்பிகள் அருளிச் செய்தது)

திருநாவுக்கரசருடைய பெருமையினை விரித்துரைப்பதாகிய இந்நூல், பதினொரு பாடல்களைக் கொண்டது. ஏகாதச என்பது பதினொன்றைக் குறிக்குமாதலின் இப்பெயர் எண்ணால் பெற்ற பெயராகும். இதன்கண் அமைந்த பாடல்கள் பதினொன்றே ஆயினும், திருநாவுக்கரசருடைய வரலாற்றில் அமைந்த சிறந்த உண்மைகளும் அப் பெரியாரை வழிபடுவதனால் உளவாம் பெரு நலங்களும், அவர் திருவாய் மலர்ந்தருளிய திருப்பதிகங்களின் சிறப்பும் இப் பாடல்களில் தெளிவாக அமைக்கப் பெற்றுள்ளன.

திருச்சிற்றம்பலம்

1391. புலனோ டாடித் திரிமனத்தவர்
பொறிசெய் காமத் துரிசடக்கிய
புனித நேசத் தொடுதமக்கையர்
புணர்வி னால்உற் றுரைசெயக்குடர்

தெளிவுரை : ஐம்புல நுகர்ச்சியினால் திரிகின்ற மனத்தை உடையவர், பொறிகள் செய்கின்ற காமமாகிய குற்றத்தை அடக்கிய தூய்மையான அன்போடு தமக்கையாகிய புனிதவதியாரிடம் வந்து சேர்ந்து அவர் சொன்ன நல்லுரைகளைக் கேட்டு வயிற்றுவலி (சூலை நோய்),
 
சுலவு சூலை பிணிகெ டுத் தொளிர்
சுடுவெ ணீறிட் டமண கற்றிய
துணிவி னான்முப் புரமெ ரித்தவர்
சுழலி லேபட் டிடுத வத்தினர்

தெளிவுரை : சூலை நோய் நீங்கப்பெற்று, பிரகாசமான திருவெண்ணீறிட்டு, சமணர்களை அகற்றிய துணிவை உடையவர். முப்புரங்களை எரித்த சிவபெருமானது ஆளுகைக்கு உட்பட்டு, (சைவராகி) தவத்தை உடையவர்.
 
உலகின் மாயப் பிறவி யைத்தரும்
உணர்வி லாவப் பெரும யக்கினை
ஒழிய வாய்மைக் கவிதை யிற்பல
உபரி யாகப் பொருள்ப ரப்பிய

தெளிவுரை : உலகில் மாயப் பிறவியைத் தரும் உணர்வில் ஈடுபடும் மயக்கினை ஒழிக்க, பல தேவாரப் பாடல்களையும் பாடி, சைவ நெறியைப் பரப்பிய,

அலகில் ஞானக் கடலி டைப்படும்
அமிர்த யோகச் சிவவொ ளிப்புக
அடி ரேமுக் கருளி னைச்செயும்
அரைய தேவத் திருவ டிக்களே.

தெளிவுரை : உலகில் ஞானக் கடல் இடைப்படும் அமிர்த யோகச் சைவ நெறியில் புக அடியார்களாகிய எங்களுக்கு அருளினைச் செய்யும் அரையத்தேவ சுவாமிகளே ! வணக்கம்.

1392. திருநாவுக் கரசடி யவர்நாடற் கதிநிதி
தெளிதேனொத் தினியசொல் மடவார்ஊர்ப் பசிமுதல்
வருவானத் தரிவையர் நடமாடிச் சிலசில
வசியாகச் சொலுமவை துகளாகக் கருதிமெய்
உருஞானத் திரள்மனம் உருகாநெக் கழுதுகண்
உழவாரப் படைகையில் உடையான்வைத் தனதமிழ்
குருவாகக் கொடுசிவ னடிசூடித் திரிபவர்
குறுகார்புக் கிடர்படு குடர்யோனிக் குழியிலே.

தெளிவுரை : திருநாவுக்கரசர், அடியவர்கள் நெருங்கிப் பழகுவதற்குப் பெருநிதி போன்றவர் (புகலிடம் எனினுமாம்). தெளிந்த தேனைப் போன்று இனிய சொல்லையுடையவர் (நாவுக்கு அரசர் எனினுமாம்). மாதர்களில் உருப்பசி முதலாக தெய்வப் பெண்கள் ஈறாக உள்ளவர் பலரும் வசியமாகச் சொல்லும் அவையனைத்தையும் தூசியாகக் கருதி, மெய் உரு ஞானத்திரள் மனமுருகி, நெகிழ்ந்து, அழுது, கண்ணீர் மல்கி, உழவாரப் படையைக் கையில் உடையான். அவர் பாடிய தேவாரப் பாடல்களைக் குருவாகக் கொண்டு, சிவனடி சூடத் திரிபவர், துன்பம் தருகின்ற பிறவிக் குழியைக் குறுகார் என்றவாறு.

திருநாவுக்கரசர் உழவாரப் படையைக் கொண்டு சிவத்தலங்களின் பிரகாரத்தைச் சுத்தம் செய்யும் பணியை மேற்கொண்டிருந்தார்.

1393. குழிந்து சுழிபெறுநா பியின்கண் மயிர்நிரையார்
குரும்பை முலையிடையே செலுந்த கைநன்மடவார்
அழிந்தபொசியதிலே கிடந்தி ரவுபகல்நீ
அலைந்த யருமதுநீ அறிந்தி லைகொல்மனமே
கழிந்த கழிகிடுநா ளிணங்கி தயநெகவே
கசிந்தி தயமெழுநூ றரும்ப திகநிதியே
பொழிந்த ருளுதிருநா வினெங்க ளரசினையே
புரிந்து நினையிதுவே மருந்து பிறிதிலையே.

தெளிவுரை : மனமே ! நீ குழிந்து சுழிபெறு நாபியின்கண் மயிர் நிரையார், குரும்பை முலையிடை செல்லும் நன்மடவார் அழிந்த பொசியதிலே கிடந்து இரவு பகல் நீ அளைந்து அயரும் தன்மையை நீ அறியவில்லை. போனது போகட்டும். நாள் இணங்கி, இதயம் நெகிழுமாறு கசிந்து இதயம் கனியுமாறு தேவாரப் பாடல்களைப் பாடுகின்ற செல்வமே ! திரு நாவினை உடைய எங்கள் அரசின் அருமையைப் புரிந்து நினைப்பாயாக. இது தவிர வேறு வழியில்லை. இதுவே நன்மருந்து என அறிக. பெண் இன்பத்தில் காலம் கழிக்காதே என மனத்திற்கு அறிவுரை கூறுகின்றார்.

1394. இலைமா டென்றிடர் பரியா ரிந்திர
னேயொத் துறுகுறை வற்றாலும்
நிலையா திச்செல்வம் எனவே கருதுவர்
நீள்சன் மக்கட லிடையிற்புக்
கலையார் சென்றரன் நெறியா குங்கரை
யண்ணப் பெறுவர்கள் வண்ணத்திண்
சிலைமா டந்திகழ் புகழா மூருறை
திருநா வுக்கர சென்போரே.

தெளிவுரை : செல்வம் இல்லையென்று துன்பம் அடையமாட்டார்கள். இந்திரனுக்குச் சமமாகச் செல்வம் படைத்திருந்தாலும் இச் செல்வம் நிலைத்திருக்காது. என்றே கருதுவர். நீண்ட பிறவிக் கடலில் மூழ்கி அலைய மாட்டார்கள். சென்று சிவபெருமானது சைவ நெறியாகிய கரையை அடையப் பெறுவார்கள். அவர்கள் யார் என்னில், அழகிய திண்ணிய கல் மாடங்கள் திகழ்கின்ற புகழ் பெற்ற திருவாய்மூரில் அவதரித்த திருநாவுக்கரசின் நாமத்தைப் போற்றுபவர்கள் என்பதாம். அவர் பாதங்களைப் பணிபவர்களுக்கு ஒரு குறையும் இல்லை என்கிறார்.

1395. என்பட்டிக் கட்டிய இந்தப்பைக் குரம்பையை
இங்கிட்டுச் சுட்டபின் எங்குத்தைக் குச்செலும்
முன்பிட்டுச் சுட்டிவ ருந்திக்(கு)எத் திக்கென
மொய்ம்புற்றுக் கற்றறி வின்றிக்கெட் டுச்சில
வன்பட்டிப் பிட்டர்கள் துன்புற்றுப் புத்தியை
வஞ்சிக் கத்திவி ழுந்(து)எச்சுத் தட்டுவர்
அன்பர்க்குப் பற்றிலர் சென்(று)அர்ச்சிக் கிற்றிலர்
அந்தக்குக் கிக்கிரை சிந்தித்த பித்தரே.

தெளிவுரை : எலும்பால் செய்யப்பட்ட இந்தச் சிறுகுடில் போன்ற உடலை இங்கு எரித்த பிறகு எவ்விடத்திற்குச் செல்லும். முன்பிட்டுச் சுட்டி வருந்தி எங்குச் செல்வதென்று அறியாமல் வலிமையுற்று, படிப்பில்லாமல் கெட்டு, மதத்திற்குப் புறம்பானவர்கள் சிலர் துன்புற்று, புத்தியை வஞ்சித்துத் துன்புறுவர். அன்பர்க்குப் பற்றிலர். சென்று அர்ச்சிக்க மாட்டார்கள். வயிற்றுக்கு உணவு தேடும் பித்தர்கள் என்றவாறு. சிவநெறியைக் கடைப்பிடியுங்கள் என்று அறிவுரை கூறுகின்றார்.

1396. பித்தரசு பதையாத கொத்தைநிலை உளதேவு
பெட்டியுரை செய்துசோறு கட்டியுழல் சமண்வாயர்
கைத்தரசு பதையாத சித்தமொடு சிவபூசை
கற்றமதி யினனோசை யிட்டரசு புகழ்ஞாலம்
முத்திபெறு திருவாள னெற்றுணையின் மிதவாமல்
கற்றுணையில் வரும்ஆதி
பத்தரசு வசைதீர வைத்தகன தமிழ்மாலை
பற்பலவு மவையோத நற்பதிக நிதிதானே.

தெளிவுரை : பித்தரசு பதையாத கொத்தை நிலை (அறிவில்லாத நிலை) உளதேவு பெட்டியுரை செய்து (வேறு தெய்வங்களைப் புகழ்ந்து பேசி) உணவே முக்கியமென்று கருதி உழலுகின்ற சமணர்கள் கையிலிருந்து விடுபட்டு, சிவபூசை செய்து ஞாலத்தார் புகழ்கின்ற முத்தி பெறு திருவாளனாகிய திருநாவுக்கரசர், வேறு எந்தத் துணையும் இல்லாமல் கல்லையே தெப்பமாகக் கொண்டு எல்லாராலும் போற்றப்படுகின்ற தேவாரப் பாடல்களே பெரும் செல்வமாகும். திருநாவுக்கரசை வணங்குவோம். அவர் பாடிய தேவாரப் பாடல்களைப் பாடி நற்கதி பெறுவோம் என்கிறார்.

1397. பதிகம் ஏழேழுநூறு பகருமா கவியோகி
பரசுநா வரசான பரமகா ரணவீசன்
அதிகைமா நகர்மேவி யருளினா லமண்மூடர்
அவர்செய்வா தைகள் தீருமனகன் வார்குழல்சூடின்
நிதியரா குவர்சீர்மை யுடையரா குவர்வாய்மை
நெறியரா குவர்பாவம் வெறியரா குவர்சால
மதியரா குவரீச னடியரா குவர்வானம்
உடையரா குவர்பாரில் மனிதரா னவர்தாமே.

தெளிவுரை : 10 அல்லது 11 பாடல்களைக் கொண்டது ஒரு பதிகம் என்று பெயர். இவர் பாடியதாகக் கூறுவது ஏழ் எழுநூறு. அதாவது 4900 பதிகங்கள் என்று ஆகின்றன. (இவ்வளவு பாடல்களும் இப்போது கிடைக்கவில்லை). இவ்வளவும் சிவபெருமானைப் பற்றிய தேவாரப் பாடல்கள். திருவதிகை வீரட்டானத்திலிருந்து பாடினார். சமணர்கள் செய்த துன்பங்களைப் போக்கும் அவர் தீவினையற்றவர். அவர் பாதங்களைப் போற்றினால் தீவினை இல்லாதவர்கள் ஆவர். நீதி, சீர்மை, வாய்மை இவைகள் வந்து சேரும். பாவங்கள் விலகும். பேரறிவாளர்கள் ஆவர். ஈசனுக்கு அடியார் ஆவர். முத்தி கிடைக்கும். இவ்வுலகில் இருக்கும் வரை போற்றப்படுவார்கள்.

1398. தாமரைநகு மகவிதழ் தகுவன
சாய்பெறுசிறு தளிரினை யனையன
சார்தருமடி யவரிடர் தடிவன
தாயினும் நலம் கருணையை யுடையன

தெளிவுரை : தாமரை சிரிக்கும் உள்ளிதழ் ஒப்பாவன. சாய்கின்ற சிறு தளிரினை ஒத்தன. சார்தரும் அடியவர் துன்பத்தை அழிப்பன. தாயைக் காட்டிலும் நல்ல கருணையை உடையன.

தூமதியினை யொருபது கொடுசெய்த
சோதியின்மிகு கதிரினை யுடையன
தூயனதவ முனிவர்கள் தொழுவன
தோமறுகுண நிலையின தலையின

தெளிவுரை : பரிசுத்தமான பத்துச் சந்திரன்களைக் கொண்டு செய்த பிரகாசத்தை உடையன. பரிசுத்தமானவை என்று தவ முனிவர்கள் தொழுவன. குற்றமற்ற குணங்கள் பொருந்தியன. தலைமைப் பதவியை வகிப்பன.

ஓமரசினை மறைகளின் முடிவுகள்
ஒலிடுபரி சொடுதொடர் வரியன
ஓவறுமுணர் வொடுசிவ வொளியன
ஊறியகசி வொடுகவி செய்த புகழ்

தெளிவுரை : ஓம் வடிவாகவுள்ள சிவ பெருமானைத் துதிக்கும் வேதங்களின் முடிவுகள் ஓலமிடும் தன்மையோடு அறிதற்கு அரியன. அன்போடு தோய்ந்து பாடிய தேவாரப் பாடல்களின் புகழ்,

ஆமரசுய ரகம்நெகு மவருளன்
ஆரரசதி கையினர னருளவன்
ஆமரசுகொ ளரசெனை வழிமுழு
தாளரசுத னடியிணை மலர்களே.

தெளிவுரை : திருவதிகை வீரட்டான ஈஸ்வரரின் அருள் பெற்றவர். அத்தகைய சிறப்புடைய திருநாவுக்கரசின் அடியிணை மலர்களை வழிபட்டு நற்கதி பெறுவோமாக என்கிறார்.

1399. அடிநாயைச் சிவிகைத் தவிசேறித் திரிவித்
தறியாவப் பசுதைச் சிறியோரிற் செறியுங்
கொடியேனுக் கருளைத் திருநாவுக் கரசைக்
குணமேருத் தனைவிட் டெனையாமொட் டகல்விற்
பிடியாரப் பெறுதற் கரிதாகச் சொலுமப்
பிணநூலைப் பெருகப் பொருளாகக் கருதும்
செடிகாயத் துறிகைச் சமண்மூடர்க் கிழவுற்
றதுதேவர்க் கரிதச் சிவலோகக் கதியே.

தெளிவுரை : அடிநாயைப் பல்லக்கிலேற்றி, வீதி வலம் வந்து, அறிவற்ற விலங்குத் தன்மையுடைய சிறியோரில் பொருந்தும் கொடியவனாகிய எனக்கு அருள் செய்யும் திருநாவுக்கரசை, குணமேரு போன்றவரை விட்டு, மற்றவர்கள் சொல்லும் அப் பிண நூலைப் பெரிய பொருளாகக் கருதும் துர்நாற்றம் வீசுகின்ற உடலை உடைய, உறியைக் கையிலேந்திய சமணர்க்காக, தேவர்க்கு அரிதாகிய சிவலோகக் கதியை மறந்தது பெரும் தவறாகும் என்கிறார்.

1400. சிவசம் பத்திடைத் தவஞ்செய்து
திரியும் பத்தியிற் சிறந்தவர்
திலகன் கற்றசிட் டன்வெந்தொளிர்
திகழும் பைம்பொடித் தவண்டணி

தெளிவுரை : சிவசம்பத்தின் (சைவ நெறி) மத்தியில் தவம் செய்து திரியும் பத்தியில் சிறந்தவர், திலகன், கல்வியிற் சிறந்தவன். திருநீற்றைக் கவசமாக அணிந்தவர்.

கவசம் புக்குவைத் தரன்கழல்
கருதுஞ் சித்தனிற் கவன்றியல்
கரணங் கட்டுதற் கடுத்துள
களகம் புக்கநற் கவந்தியன்

தெளிவுரை : சிவபெருமானது திருவடிகளைக் கருதும் சித்தணிற் கவன்றிய கரணங் கட்டுதற்கு அடுத்துள களகம் புக்க நற்கவந்தியன். திருநீறு ஆகிய போர்வையை உடையவன்.

அவசம் புத்தியிற் கசிந்து கொ
டழுகண் டசத்துவைத் தளித்தனன்
அனகன் குற்றமற் றபண்டிதன்
அரசெங் கட்கொர்பற் றுவந்தறு

தெளிவுரை : பரவச புத்தியில் கசிந்து கொடு அழுகண்டத்து வைத்து அளித்தவன். பாவமற்றவன். குற்றமற்ற பண்டிதன். திருநாவுக்கரசு; எங்கட்கு ஒரு பற்றக்கோடு.

பவசங் கைப்பதைப் பரஞ்சுடர்
படிறின் றித்தனைத் தொடர்ந்தவர்
பசுபந் தத்தினைப் பரிந்தடு
பரிசொன் றப்பணிக்கும் நன்றுமே.

தெளிவுரை : பிறவிப் பிணியைத் தீர்த்து வைக்கும் பரஞ்சுடர். குற்றமின்றி இத்தனைத் தொடர்ந்தவர். உயிர் பந்தத்தைப் பரிந்தடு பரிசு ஒன்று அப்பணிக்கு நன்றாகியது.

இவ்வளவையும் செய்யக்கூடியது திருநாவுக்கரசர் போற்றும் சைவ நெறி என்பதாம்.

1401. நன்றும் ஆதரம் நாவினுக் கரைசடி
நளினம்வைத் துயினல்லால்
ஒன்றும் ஆவது கண்டிலம் உபாயம்மற்
ருள்ளன வேண்டோமால்
என்றும் ஆதியும் அந்தமும் இல்லதோர்
இகபரத் திடைப்பட்டுப்
பொன்று வார்புகும் சூழலில் புகேம்புகில்
பொறியில்ஐம் புலனோடே.

தெளிவுரை : திருநாவுக்கரசரின் திருவடித் தாமரையை வைத்து உய்ந்தால் அல்லாமல் ஒன்றும் ஆவது கண்டிலம். வேறு உபாயங்கள் எதுவும் எமக்கு வேண்டா. ஆதியும் அந்தமும் இல்லதோர் இகபரத்து இடைப்பட்டு அழிவார் புகும் சூழலில் புகமாட்டோம். அப்படிப் புகின், பொறியில் ஐம்புலனோடே திருநாவுக்கரசரின் பாதம் பணிவோம். ஆதரவு தருவன திருவடிகளே.

பதினோராம் திருமுறை முற்றிற்று.

 
மேலும் பதினொன்றாம் திருமறை »
temple news
1. திரு ஆலவாய் உடையார், 2. காரைக்கால் அம்மையார், 3. ஐயடிகள் காடவர்கோன், 4. சேரமான் பெருமாள் நாயனார், 5. நக்கீர ... மேலும்
 
temple news
11ம் திருமுறையில் திருவாலவாய் உடையார்(ஈசன்), காரைக்கால் அம்மையார், ஐயடிகள் காடவர் கோன், சேரமான் பெருமான், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar