சந்தேகம் ஒரு கொடிய வியாதி. தேர்வுக்குச் செல்லும் மாணவனுக்கு, இந்தக் கேள்விக்குரிய பதில் இதுதானா அல்லது வேறு ஏதேனுமா என்று தோன்றி விட்டாலே போதும். அந்தப் பதில் தவறானதாக அமைந்து மதிப்பெண் பறிபோய் விடும். இப்படி,ஒரு மாணவனின் மதிப்பெண்ணை எப்படி சந்தேகம் அழித்து விடுமோ, அதுபோல் தான் ஆண்டவரை வணங்குவதிலும், அவரை நம்புவதிலும் ஏற்படும் சந்தேகமும் வாழ்க்கையை அழித்து விடும். “சந்தேகப்படுகிறவன் காற்றினால் அடிபட்டு அலைகிற கடலின் அலைக்கு ஒப்பானவன். அப்படிப்பட்ட மனுஷன், தான் கர்த்தரிடத்தில் எதையாகிலும் பெறலாமென்று நினையாதிருப்பானாக,” என்கிறது பைபிள். “எவனாகிலும் இந்த மலையைப் பார்த்து, நீ பெயர்ந்து, சமுத்திரத்திலே தள்ளுண்டு போ என்று சொல்லி, தான் சொன்னபடியே நடக்கும் என்று தன் இருதயத்தில் சந்தேகப்படாமல் விசுவாசித்தால், அவன் சொன்னபடியே ஆகும் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்கிறேன்,” என்கிறார் இயேசுகிறிஸ்து. ஆம்... எதையும் சந்தேகத்துடன் பார்க்கக்கூடாது. எனவே சந்தேகத்தைப் போக்குங்கள். அழிவைத் தடுத்து நிறுத்துங்கள்.