தீயில் சுட்டால் மட்டுமே தங்கம் சிவக்கும். அப்போது தான் ஆபரணம் செய்ய முடியும். அது போல துன்பத்தை பொறுத்துக் கொண்டால் மட்டுமே மனம் பக்குவம் பெறும். இதனால் பொறுமை, விட்டுக்கொடுத்தல் போன்ற நல்ல பண்புகள் உண்டாகும். இந்த உண்மையை நாயகத்தின் வாழ்வில் இருந்தே அறியலாம்.
தாய் ஆமீனாவின் வயிற்றில் இருக்கும் போதே தந்தையை இழந்தார் நாயகம். கணவரை இழந்த ஆமீனா கவலையில் ஆழ்ந்தார். இதனால் குழந்தை பிறந்ததும் ‘ஹலீமா’ என்ற செவிலித்தாயிடம் அவர் ஒப்படைக்கப்பட்டார். அந்த பெண்ணும் அவரது ஐந்து வயதில் இறந்தார். பின் பெற்ற தாயிடம் ஒப்படைக்கப்பட்டார். ஓராண்டிலேயே தாய் ஆமீனாவும் இறந்தார். இந்தக் கொடுமை யாருக்கும் வரக் கூடாது.
பெற்றோரை இழந்ததால் தாத்தா அப்துல் முத்தலிப்பிடம் வளர்ந்தார். எட்டு வயதில் அவரும் மறைந்தார். அதன் பிறகு சிறிய தந்தையான அபூதாலிப்பிடம் வளர்ந்தார். சிறுவயதில் கால்நடைகளை மேய்ப்பது அவரது வழக்கம். வியாபாரம் காரணமாக வெளிநாட்டிற்கு சென்றார். இயல்பிலேயே பணிவு, அடக்கம் கொண்டவரான நாயகம் எல்லோரையும் நேசித்தார்.