இறைபக்திக்குரிய நான்கு மாதங்கள் என்றழைக்கப்படும் சாதுர் மாதங்களில் கடைசியானதும். சிறந்த மகிமைகள் பொருந்திய மாதம் தாமோதர மாதம் ஆகும். சாதுர் மாதங்களில் இதனை கார்த்திகை என்றழைப்பர். தமிழ் மாதங்களில் கார்த்திகையை போல் இந்த தாமோதர மாதத்தில் பகவானின் கோயிலையும், பூஜை அறையையும் நெய் தீபங்களால் அலங்கரிப்பது அவசியமானதாகும். இவ்வருடம் இந்த தாமோதர மாதம் அக்டோபர் 16ம் தேதி துவங்கி நவம்பர் 14ம் தேதி முடிவுறுகிறது.
தாமோதர மாதம் என்பதன் பொருள்?
தாமோதரர் என்றால் கிருஷ்ணரை குறிக்கும். தாம என்றால் கயிறு. உதர என்றால் வயிறு. குறிப்பாக பகவான் கிருஷ்ணரை. அன்னை யசோதா தேவி கயிற்றால் உரலில் கட்டிய நிகழ்ச்சியை நினைவுபடுத்தும் பொருட்டும். கிருஷ்ணரின் தூய பக்தையுமான ஸ்ரீமதி ராதாராணியை வழிபடும் பொருட்டு தாமோதரத் திருவிழா கொண்டாடப்படுகிறது.
பத்ம புராணம் இம்மாதம் கிருஷ்ணருக்கு மிகவும் பிரியமானதாகும். இம்மாதத்தில் கிருஷ்ணருக்கு சிறிதளவு பக்திசேவை செய்தால் கூட கிருஷ்ணர் தன் திவ்ய ஸ்தலத்தையே அப்பக்தனுக்கு வழங்குவார் என்று கூறுகிறது. அதே போல், புண்ணிய மாதங்கள் அனைத்திலும் அதி புண்ணிய மாதம் தாமோதர மாதம் என்று ஸ்கந்த புராணமும் இம்மாதத்தின் மகிமைகளை பலவாறு விவரிக்கிறது.
விழாக்கள் நிரம்பிய மாதம்: தீபாவளி தாமோதர லீலை, ஸ்ரீமதி லக்ஷ்மி பூஜை, பகுலாஷ்டமி - ராதா குண்டம் உருவான நாள். துளசி - சாளக்கிராம திருக்கல்யாணம், கோவர்த்தன கிரி பூஜை - மற்றும் பல முக்கியமான விழாக்கள் இந்த மாதத்தில் தான் நடைபெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
தாமோதர விரதம் கடைபிடிக்கும் முறை
1. ஹரே கிருஷ்ண மஹாமந்திர ஜபமும். 2. கிருஷ்ணருக்கு நெய் தீபம் காட்டுவதும், 3. உணவுக்கட்டுப்பாடும் தாமோதர மாத விரதத்தின் முக்கிய மூன்று சிறப்பம்சங்களாகும்.
மஹாமந்திர ஜபம்: ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே; ஹரே ராம ஹரே ராம; ராம ராம ஹரே ஹரே எனும் பதினாறு வார்த்தைகளடங்கிய இந்த மஹாமந்திரத்தை குறைந்த பட்சம் 108 தடவையும், அதிகபட்சம் எவ்வளவு முறை உச்சரிக்க முடியுமோ அவ்வளவு முறை உச்சரிக்கலாம். கிருஷ்ண சைதன்ய மஹாபிரபுவின் மிக நெருங்கிய சீடரான ஸ்ரீலஜீவ கோஸ்வாமி அவர்கள் விரதங்கள் பின்பற்றுவதில் மிக முக்கியமானது ஹரி நாமத்தை உச்சரிப்பதே ஆகும் என்று வலியுறுத்தியுள்ளார். ஏனெனில் ஹரே கிருஷ்ண மஹாமந்திரம், விரதத்தை கடைபிடிப்பதற்கான மனநிலை உட்பட அனைத்து நலன்களையும் தரும் என்பது குறிப்பிடத்தக்கது.