திண்டுக்கல் - மதுரை இடையில் குலசேகரன் கோட்டையில் அமைந்துள்ளது நவமாருதி கோயில். ஆஞ்சனேயருக்கு ஒன்பது வகை கல்யாண குணங்கள் உண்டு. அதன் அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ள இந்த ஆஞ்சனேயர்களிடம் ஒன்பது வகையான பிரார்த்தனைகளைச் செய்து பலன் பெறலாம். மூலவர் ஜெயவரத ஆஞ்சனேயரைச் சுற்றி தெற்கு நோக்கி மூன்று ஆஞ்சனேயர்களும், மேற்கு நோக்கி இருவரும் வடக்கு நோக்கி மூவரும் அருள்பாலிக்கின்றனர்.
ஜெயவரத ஆஞ்சனேயரை வழிபட, எல்லா செயல்களிலும் வெற்றி, சகல சவுபாக்கியங்களையும் பெறலாம். பக்த ஆஞ்சனேயரை வழிபட சனி தோஷம் நீங்கப் பெறலாம். பால ஆஞ்சனேயரை வழிபட புத்திர பாக்கியம் பெறலாம். பவ்ய ஆஞ்சனேயரை வழிபட தொழில், வியாபாரம், பணியில் லாபம் பெறலாம். யோக ஆஞ்சனேயரை வழிபட, அதிர்ஷ்ட வாய்ப்புகளைப் பெறலாம். தியான ஆஞ்சனேயரை வழிபட, மன அமைதி பெறலாம். வீர ஆஞ்சனேயரை வழிபட, பிரச்சனைகளைச் சந்திக்கும் மன தைரியம் பெறலாம். பஜன ஆஞ்சனேயரை வழிபட, கல்வி, கலைகளில் சிறந்து விளங்கலாம். தீர ஆஞ்சனேயரை வழிபட, மனோபலம் பெறலாம்.
இக்கோயிலைச் சுற்றி மாலை போல் ஒரு நீரோடை ஓடுகிறது. ஜெயவரத ஆஞ்சனேயர் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார். இவர் மீது சூரியக் கதிர்கள் தினமும் காலை ஏழு மணி முதல்7.20 மணி வரை படர்கிறது. கிழக்கு நோக்கி அமைந்துள்ள இக்கோயிலின் வாசலில் தெற்கு நோக்கி 23 அடி உயர ஆஞ்சனேயர் சுதை வடிவில் அருள்பாலிக்கிறார். அமாவாசையன்று இந்த ஆஞ்சனேயர்களை வழிபடுவது சிறப்பு. குறிப்பாக, தை, ஆடி அமாவாசைகள் இவரை வழிபட மிகவும் உகந்த நாட்கள்.