வணங்கும் முறை குறித்து ஞானநூல்கள் பலவாறு போதித்துள்ளன. அதாவது, இறைவனை வணங்கும்போது தலைக்கு மேலாக 12 அங்குலம் உயரத்தில் கரங்களைக் குவித்து வணங்க வேண்டும். தேவர்களை தலைக்குமேல் கரம் குவித்து வணங்க வேண்டும். குருவை நெற்றிக்கு இணையாக கரங்களைக் குவித்தும், சான்றோர்களை நெஞ்சுக்கு நேரம் கரம் குவித்து வணங்க வேண்டும். அன்னையை வயிற்றுக்கு நேர் கைகூப்பி தொழ வேண்டும் என்கின்றன ஞான நூல்கள். அதேபோல் சிவன்கோயிலில் அருளும் சண்டிகேஸ்வரரை வணங்குவதிலும் ஒரு நியதி உண்டு. அவர் எப்போதும் சிவ தியானத்தில் இருப்பவர் ஆதலால், அதை கலைக்காத விதம் மெள்ள கைதட்டி, ஸ்வாமி! சிவன்கோயில் வழிபாட்டின் பலன் கிடைக்கும்படி அருள் செய்யுங்கள் என்று மனதுக்குள் பிரார்த்தித்தபடி வணங்கி வழிபட வேண்டும்.