பெங்களூரை தாண்டியதும் பரபரப்புக்கு பஞ்சமில்லாத பசுமையும், அமைதியும் தவழும் ஒரு ஆன்மிக உலகம் உள்ளது. ஆம்... அது தான் பெங்களூரு ரூரல் எனப்படும் கிராமப்புற மாவட்டமாகும். இங்கு வெறும் விவசாய நிலங்களை மட்டுமல்ல, பல நுாற்றாண்டு பழமை வாய்ந்த கோவில்களும் உள்ளன. அப்படியுள்ள பல கோவில்களில் கட்டாயம் தரிசிக்க வேண்டிய மூன்று கோவில்களை இப்போது பார்ப்போம்.
வேணுகோபால சுவாமி தேவனஹள்ளியில் உள்ள கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்திற்கு மிக அருகிலேயே வேணுகோபால சுவாமி கோவில் உள்ளது. வேணுகோபால சுவாமி, தேவனஹள்ளி கோட்டைக்குள் வீற்றிருக்கிறார். கோவிலின் கட்டடக்கலை விஜயநகர் பேரரசை பிரதிபலிக்கிறது. கட்டடக்கலை பலரையும் வியப்பில் ஆழ்த்துகிறது. குறிப்பாக, கருவறையில் புல்லாங்குழலுடன் நிற்கும் கிருஷ்ணரின் திருவுருவம் அத்தனை அழகு. கோவிலின் வெளிச்சுவர்களில் செதுக்கப்பட்டுள்ள ராமாயண காட்சிகள் பிரமாதமாக இருக்கும்.
கதிரி நரசிம்மர் சுவாமி கோவில் இம்மாவட்டத்தின் முக்கிய நகரம் தொட்டபல்லாபூர். மலை அடிவாரத்தில், கதிரி நரசிம்மர் சுவாமி கோவில் அமைந்து உள்ளது. இது, மிகவும் பிரபலமான மற்றும் சக்தி வாய்ந்த கோவிலாகும். இக்கோவிலில் நரசிம்மர் உக்ர உருவத்தில் அருள் பாலிக்கிறார். கோவிலில் உள்ள புனிதக் குளத்தில் நீராடி இறைவனை வழிபட்டால், தீராத நோய்களும் தீரும் என்பது நம்பி க்கை.
அவத்தி நாடு ‘அவத்தி நாடு’ என்றழைக்கப்படும் பகுதியில் அமைந்துள்ள சிவன் கோவில்கள், பெரும்பாலும் 10ம் நுாற்றாண்டிற்கு முற்பட்டவை. இங்குள்ள மல்லிகார்ஜுன சுவாமி கோவில் மிகவும் தொன்மையானது. மலை மேல் இருக்கும் ஈசனைத் தரிசிக்க மலையேற்றம் செய்ய வேண்டியிருக்கும். இயற்கை எழில் சூழ்ந்த சூழலில், குளிர்ந்த காற்றை சுவாசித்தபடி இறைவனைத் தரிசிப்பது ஒரு தியான நிலைக்கு நம்மை இட்டுச் செல்லும்.