பதிவு செய்த நாள்
16
ஜூன்
2017
11:06
ஆர்.கே.பேட்டை: இரண்டு நாட்கள் கோலாகலமாக நடந்த ஜாத்திரை விழா, நேற்று நிறைவடைந்தது. விழாவையொட்டி, கிராமமே விழாக்கோலம் பூண்டிருந்தது. ஆர்.கே.பேட்டை அடுத்த, அத்திமாஞ்சேரிப்பேட்டை, காந்தி நகரில் அமைந்துள்ளது கங்கையம்மன் கோவில். இந்த கோவிலின் ஜாத்திரை விழா, நேற்று முன்தினம் துவங்கியது. விழாவையொட்டி, காலை, மாலை என, பூங்கரம் கிராமத்து எல்லைகளுக்கு ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. கோவில் வளாகத்தில் பெண்கள் பொங்கல் வைத்து அம்மனுக்கு படையல் வைத்தனர். மாவிளக்கு ஏற்றி, சிறப்பு வழிபாடு நடத்தினர். மாலை 6:00 மணிக்கு, மலர் அலங்காரத்தில் உற்சவர் அம்மன் வீதியுலா எழுந்தருளினார். இரண்டாவது நாளாக, நேற்று காலை, கங்கையம்மனை நீர்நிலையில் கரைக்கும் நிகழ்ச்சி நடந்தது. விழாவை ஒட்டி, கிராமம் முழுவதும், மின்விளக்குகள் மற்றும் வேப்பிலை தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.