பதிவு செய்த நாள்
25
ஜூலை
2017
10:07
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில், ஆடிப்பூர விழாவில் நள்ளிரவு நடந்த ஐந்து கருடசேவையை, ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
இந்த விழாவையொட்டி இரவு 10:40 மணிக்கு கோயிலிலிருந்து பெரிய அன்னவாகனத்தில் ஆண்டாள், ரெங்கமன்னார், ஸ்ரீசுந்தரராஜப்பெருமாள், ஸ்ரீனிவாசப்பெருமாள், திருத்தங்கல் அப்பன் ஆகியோர் ஐந்து கருட வாகனங்களிலும், பெரியாழ்வார் சிறிய அன்னவாகனத்திலும் எழுந்தருளி மண்டபத்திற்கு வந்தனர்.பின்னர் தெற்கு மாடவீதி, வடக்கு மாடவீதி, கந்தாடைத்தெரு, ராஜகோபுரம் வழியாக ரதவீதி சென்றடைந்தனர். தொடர்ந்து நேற்று அதிகாலை கோயிலுக்கு வந்தடைந்தனர்.மணவாளமாமுனிகள் ஜீயர் சுவாமிகள், டி.ஜி.பி., ராஜேந்திரன், விருதுநகர் எஸ்.பி., ராஜராஜன், நீதிபதி வசந்தி, தக்கார் ரவிச்சந்திரன், செயல்அலுவலர் ராமராஜா, 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
இன்று சயனதிருக்கோலம் : ஆடிப்பூர விழாவின் 7ம் நாளான இன்று இரவு 7:00 மணிக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் கிருஷ்ணன் கோயிலில் ஆண்டாள் மடியில் ரெங்கமன்னார் சயனத்திருக்கோலம் நடக்கிறது.