தேவிபட்டினம்: தேவிபட்டினம் நவபாஷாணத்தில் கடல் நீர்மட்டம் உயர்ந்து காணப்பட்டதால் பக்தர்கள் சிரமமடைந்தனர். தேவிபட்டினம் நவபாஷாணம் பிரசித்தி பெற்று வருவதால் உள்ளூர் மட்டுமின்றி வெளி மாநில பக்தர்களும் ஏராளமானோர் இங்கு வந்து செல்கின்றனர். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த இந்த நவபாஷாணம் பகுதியில் புயல் காரணமாக கடந்த ஒரு வாரமாக கடல் நீர்மட்டம் அவ்வப்போது உயர்ந்து காணப்படுகிறது. இந்நிலையில் நவபாஷாணம் அமைந்துள்ள வங்கக்கடல் பகுதியில் தற்போது அந்தமான் அருகே புதிய புயல் சின்னம் உருவாகியுள்ளதால் நேற்று அதிகளவில் கடல் கொந்தளிப்பாக காணப்பட்டது. இதனால் நவபாஷணத்தில் கடல் நீர்மட்டம் உயர்ந்து நவகிரகங்கள் கடல் நீரில் மூழ்கின. நவகிரகங்களை சுற்றிவந்து வழிபட முடியாத நிலையில் பக்தர்கள் சிரமமடைந்தனர். மேலும் கடல் நீர்மட்டம் உயர்ந்து காணப்பட்டதால் கடலுக்குள் இறங்கி பக்தர்கள் நவகிரகங்களை சுற்றிவர அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் பக்தர்கள் நவகிரகங்களை சுற்றி அமைக்கப்பட்டுள்ள நடை மேடை வழியாகவே சுற்றி வந்து நவகிரகங்களை வழிபாடு செய்தனர்.