நாச்சியார்கோவிலில் கல்கருட சேவை: பக்தர்கள் குவிந்தனர்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26டிச 2017 11:12
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே நாச்சியார்கோவில் சீனிவாசபெருமாள் கோவிலில் முக்கோடி தெப்பத் திருவிழாவை முன்னிட்டு நேற்று மாலை கல்கருட சேவை நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
108 திவ்ய தேசங்களில் 20 வது தலமாகவும், பன்னிரு ஆழ்வார்களுல் ஒருவரான திருமங்கை ஆழ்வாருக்கு சீனிவாசபெருமாளே நேரில் ஆச்சாரியனாய் வந்து பஞ்சமஸ்காரம் செய்வித்த தலமாகவும் விளங்குவது நாச்சியார்கோவில் சீனிவாசபெருமாள் கோவிலாகும். இக்கோவிலில் ஆண்டுக்கு இருமுறை பங்குனி பெருவிழா மற்றும் முக்கோடி தெப்பத் திருவிழாவின் போது கல்கருட சேவை நடைபெறுவது வழக்கம்.அதன்படி தெப்பத்திருவிழாவை முன்னிட்டு கடந்த 22 ம் தேதி கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. தொடர்ந்து விழா நாட்களில் தினமும் காலை, மாலை பல்வேறு வாகனங்களில் பெருமாள், தாயார் வீதியுலா நடைபெறுகிறது.
இதில் நான்காம் நாள் விழாவான உலகபிரசித்திபெற்ற கருடசேவை நிகழ்ச்சி நேற்று மாலை நடைபெற்றது. மாலை 6 மணியளவில் கருடபகவான் சிறப்பு புஷ்ப அலங்காரத்தில் சன்னதியிலிருந்து முதலில் நான்குபேர், அடுத்து 8 பேர், 16 பேர், 32 பேர், 64 பேர் என கருடபகவானை சுமந்து வந்தனர்.கருடபகவான் மண்டபம் எழுந்தருளியோது ஏராளமான பக்தர்கள் குழுமியிருந்தனர். பக்தர்கள் வெள்ளத்தில் கருடபகவான் நீந்தி வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.இந்த கருடசேவையின்போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோயிலின் வெளிப்புறமும், உள்புறமும் காத்திருந்து தரிசனம் செய்தனர். இதையடுத்து 9ம் நாள் விழாவாக வருகிற 30ம் தேதி தெப்பத்திருவிழா நிகழ்ச்சி நடக்கிறது.