பதிவு செய்த நாள்
02
மார்
2018
01:03
சதுரங்கப்பட்டினம்: சதுரங்கப்பட்டினம், மலைமண்டல பெருமாள், கடலில் புனித நீராடி, மாசி மக தீர்த்தவாரி உற்சவம், கோலாகலமாக நடந்தது. கல்பாக்கம் அடுத்த, சதுரங்கப்பட்டினத்தில், வைணவ கோவிலாக, மலைமண்டல பெருமாள் கோவில் விளங்குகிறது. இங்கு வீற்றுள்ள உற்சவர் வரதராஜ பெருமாள் இறைவன், மாசி மக பவுர்ணமி நாளில், இப்பகுதி கடலில் புனித நீராடி, தீர்த்தவாரி உற்சவம் கண்டு, பக்தர்களுக்கு அருள்புரிவார். இந்நாளான நேற்று காலை, சுவாமி, தேவியருடன், சிறப்பு மலர் அலங்காரத்தில், கோவிலில் புறப்பட்டு, வேத பாராயண, மேளதாள முழக்கத்துடன், இப்பகுதி கடற்கரையை அடைந்தார். மெய்யூர், ஆதிகேசவ பெருமாள்; கல்பாக்கம் நகரியம், வெங்கடகிருஷ்ணர், ஸ்ரீனிவாசர், ஏகாம்பரேஸ்வரர்; விட்டிலாபுரம் பாண்டுரங்கர்; பெருமாள்சேரி ஆஞ்சநேயர்; ஈகை, முள்ளிகொளத்துார் லட்சுமி நாராயணர், சுற்றுப்புற சுவாமியர் அணி வகுத்து வந்தடைந்தனர். மீனவ பகுதிகளின், ஊத்துக்காடு அம்மன், பெரியபாளையத்தம்மன், செல்லியம்மன் உள்ளிட்ட சுவாமிகள், கடற்கரை வந்த சகோதர சுவாமிகளை வரவேற்று, அவர்களும் இணைந்தனர். மலைமண்டல பெருமாள் உள்ளிட்டோருக்கு, வழிபாடு நடத்தப்பட்டு, பெருமாள், சக்கரத்தாழ்வாராக, கடலில் புனித நீராடினார். பக்தர்கள் கோவிந்தா... கோவிந்தா... என முழங்கி, சுவாமியரை தரிசித்து வழிபட்டனர்; நீராடினர். தீர்த்த வாரியைத் தொடர்ந்து, வரதராஜர், ஆதிகேசவர் வீதியுலா சென்றனர்.